• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 22 ஏப்ரல், 2011

    வாழ்ந்து ஓய்ந்தோர் இல்லம்


          பெற்றோர் முதிர்ந்த அழகு வடிவம் காணக் காத்திருக்கும் எத்தனையோ அவர் இரத்தங்களிடையே நானும் ஒருத்தி. தங்கள் கடமை முடிய கடைத்தேறிய பெற்றோர்களிடையே உலக வாழ்க்கை அத்தனையும் அநுபவித்துப் பூரண வாழ்வு கண்ட பெருமையுடன், தன் வாரிசுகள் வாழ்வின் மகிழ்வுக்கு வழிவிட்டு, ''வாழ்ந்து ஓய்ந்தோர் இல்லம்' அதில் ஓர் தாய். வாழ்வின் கணக்கைத் தெரியப்படுத்தும் அநுபவ வரிகள் முகத்தில். எடுத்த உணவில் அரைப்பகுதி வாயினுள் மீதி தரையில். தள்ளாடும் பாதங்கள் குழந்தைத் தளிர்நடைப் பருவத்தை நினைவுபடுத்தும். மழலைமொழியாய் அறளை மொழி. குழந்தைச் சிரிப்பு. வாழ்க்கை வட்டத்தில் மீண்டும் மழலையாய். தொடர்கின்றாள் வாழ்வை. 
                                      
                                               குடும்பச்சுமை சுமக்கும் மருமகளின் தொழிலுக்குத் தன் பாரம் இடையூறாய் இருத்தல் தவறு. படுத்த படுக்கையை நனைத்து விட்டால் மெத்தையைச் சுத்தம் செய்யத்தான் முடியுமா? நாள் குறித்து நகரசபை வாகனத்திற்கு ஒப்படைக்கும் வரை வீட்டினுள் துர்நாற்றத்தைச் சுவாசிக்க வேண்டுமல்லவா? தான் தாங்கிய பிள்ளை தன்னைத் தாங்கி முகம் சுளிக்க வழிவிடாது, தனக்காய்த் தன் உழைப்பில் ஒருபகுதியை மனநிறைவுடன் முதியோர் இல்லத்திற்குச் செலுத்தி தன் சுத்தம் பேணிச் சுகம் நாடி, அழகு முதியவளாக்கி, தன்னை அடிக்கடி வந்து பார்த்து, தன் விருப்பும் தன் மகன் விருப்பும் இணைந்த நாளில் மகன் மனையில் மகிழ்வுடன் சுவாரஸ்யம் அநுபவிக்கும்  அந்தத் தாய், மெச்சுகிறாள், தன் மகனை. பாலர் பாடசாலைகளில் இருந்து அழைத்துவரப்படும், சுட்டிப் பயல்கள் சுதந்திரத்திற்கு தடையின்றி. அவர்களின் குறும்புகளை அடிக்கடி இரசிக்கின்றாள். முதியோர் இல்லத்தாதிமாரின் முகம் சுளிக்காத பணிவிடையில் அமைதியும் சாந்தமும் காண்கின்றாள். அடிக்கடி மகன் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு பேரப்பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாடுகின்றாள். முறையாய் வளர்த்த தன் மகனின் சிறப்பான வாழ்வு கண்டு தேவையின்றி அவர் குடும்ப வாழ்வில் தனது தலையை நுழைக்காது பூரித்து நிற்கின்றாள். பிள்ளைகளைப் பிரியவில்லை.  பிரிவுத் துயரும் அவளுக்கில்லை. செல்வாக்குக்கும் குறைவில்லை. தன்னைக் கண்டு முகம் சுளிக்கவும் யாருமில்லை. தாய் வேண்டுமென்று ஓடிவரும் தன் பிள்ளைகளைத் தழுவுகின்றாள். நேரமில்லாது  ஓடித்திரிந்து ஓயாது உழைக்கும் தன் மகன் குடும்பத்திற்கு, தடையாய் அவள் முதுமை வாழ்வு முகம் சுளிக்கவில்லை.  அநுபவித்து முடித்த வாழ்வின் அமைதியான காலப்பகுதியை துயரின்றித் தொடரும் அத் தாய் போல் வாழும் பாக்கியம் எதிர்காலத்தில் கிடைக்குமா என்ற ஏக்கத்துடன்.........

    2 கருத்துகள்:

    1. முதியோரின் உள்ளக்கிடக்கையை சொல்லும் படைப்பு

      பதிலளிநீக்கு
    2. Sakthi Sakthithasan கூறியது

      அருமையான் பகிர்வு. உணர்வுபூர்வமான வரிகள். உண்மையான தாய்மையின் ஏக்கம். தாய்மைக்கு ஓய்வு கொடுத்து விடும் ஒரு சமுதாயச் சூழலில் வாழும் நிலையை அழகாய்ப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள்

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...