• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

    சொல்வாக்கும் செல்வாக்கும்

     Septemper vettimany பத்திரிகையில் வெளிவர இருக்கும் கட்டுரை 




    அறிவும் சொல்லும் ஆற்றலும் உள்ள ஒருவருக்கு அதை வெளியே கொண்டுவர ஏதோ ஒரு உதவி தேவைப்படுகிறது. தனித்து வாழவோ தனியோ ஒரு உற்பத்தியை வெளியிடவோ முடியாது என்னும் போது ஒரு ஊடகத்தின் அவசியம் தேவைப்படுகின்றது. உலகப்படைப்பும் அப்படியேதான் அமைந்திருக்கின்றது. அண்டவெளியிலே சுற்றிவரும் கிரகங்கள் ஒன்றையொன்று சார்ந்தே வாழுகின்றன.

     எமது உடல், மண், நீர், நெருப்பு, ஆகாசம், காற்று, மனது, ஆகியவை ஒன்றோடு ஒன்று சேர்ந்துதான் உற்பத்தியாகின்றன என்று புத்தர் கூறியுள்ளார்.  தனித்து நிற்கும் மரம் கூட வளர்வதற்கு நீரை வேண்டி நிற்கின்றது. தற்போது ஐரோப்பிய ஒன்றியமும் அப்படித்தான். பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு என்று கண்ணதாசன் சொன்னாலும் வாசிக்கப் புத்தகம் கொடுத்த எழுத்தாளன் அம்மேதைக்கு உதவியுள்ளான். ஒரு தனிமனிதனாகப் பிறக்கும் போது தாயின் இரத்தத்தைப் பாலாகக் குடித்தே வளருகின்றான். வளரும்வரை பெற்றோரின் துணையுடனேயே வளருகின்றான். அதன்பின் தன்னுயை வளர்ச்சிக்குரிய ஒரு உதவியை நாடுகின்றான். எனவே ஒருவர் வாழ்வில் பிரகாசித்து நிற்கின்றார் என்றால், அங்கு யாரோ சிலர் பின்னின்று வெளிச்சமிட்டிருக்கின்றார்கள் என்பதை மறுக்கமுடியாது. அதேவேளை அந்த வெளிச்சத்தைக் காண்பதற்கே செல்வாக்கு தேவைப்படுகின்றது என்பது ஒரு வருந்தத்தக்க உண்மையாகும்.

           தன்னை வெளிப்படுத்துவதற்கும் தனது திறமையை விளம்பரப்படுத்துவதற்கும் முனைந்து நிற்கும் மனிதர்கள் எப்படியாவது தமது நிறைவான திறமையையோ, சிறிதளவான திறமையையோ பெரிதாகப் பிரமாண்டமாகக் காட்டப் பிற உதவியை நாடி நிற்கின்றார்கள். அது மனிதனாகவும் இருக்கலாம், இலத்திரனியலாகவும் இருக்கலாம். இதன் மூலம் செல்வாக்கு பெருகுகின்றது. ஆனால், செல்வாக்கு நிறைந்த பிரபலங்கள் தங்கள் சொல்வாக்கை இழக்கும் போதுதான் தமது பெருமையை இழக்கின்றார்கள். சொல்வாக்கு நேர்மையாகவும், சுத்தமாகவும் இருந்தாலேயே செல்வாக்குப் பெருகுகின்றது. செல்வாக்குப் பெருக வேண்டும் என்பதற்காகவும் தமது புகழை மேலே இழுக்க வேண்டும் என்பதற்காகவும் தம் சொல்லில் செயலில் இழுக்கு ஏற்படும் படியாக நடந்து கொள்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

               செல்வாக்கு பணச்செல்வாக்கு, அரசியல் செல்வாக்கு, இலக்கியச் செல்வாக்கு, சமயச்செல்வாக்கு, சொற்களின் செல்வாக்கு என்பதுபோல்  செல்வாக்குகளை வகைப்படுத்தலாம். இதில் சொற்களின் செல்வாக்கே சொல்வாக்காக அமைகின்றது. இவையெல்லாம் மக்கள் செல்வாக்குகளே. எச்செல்வாக்காக இருந்தாலும் சொல் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியமாகின்றது. அரசியல்வாதி சொல்வதைச் செய்ய வெண்டும். இலக்கியவாதி எழுதியவாறு நடக்க வேண்டும். பணம் படைத்தவன் நடத்தையில் சொல்லில் சுத்தம் வைத்திருக்க வேண்டும். இச்சுத்தத்திலிருந்து தவறுகின்ற போது தன் செல்வாக்கை இழக்கின்றான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

              நாம் சொல்லுகின்ற சொற்களில் சில செல்வாக்குப் பெறுகின்றன. அல்லது பெற வைக்கின்றோம் உதாரணமாக நான் கூறிய சொல்லும் செயலும் ஒன்றானால் இவ்வுலகம் சொல்லும் உன் செயல் என்னும் என் வார்த்தைகளின் வழியே நான் நடப்பேனேயானால், அச்சொற்கள் எனக்குச் செல்வாக்கை ஏற்படுத்தும். அன்பும் இரக்கமுமே வாழ்க்கையின் அடிப்படை. உண்மையைச் சொல். அது உன் வார்த்தைகளைப் பாதுகாக்கும் என்று வள்ளலார் கூறிய சொல்வாக்கும், புத்தர் கூறிய பல வாக்குகளும் அவருக்குச் செல்வாக்காக அமைகின்றன. நாளும் பலர் மனங்களின் தூய்மைக்குத் துணையாக நிற்கின்றன.

              அறிஞர்கள் கூறுகின்ற வாக்குகளை நாம் தாரகமந்திரமாக ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவ்வாக்குகள், நாம் தவறுகின்ற போது எம்மனதைத் தட்டித் திருத்தும். உதாரணமாகத் திருக்குறள் கற்று வளர்ந்த எமக்கு ''எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு'' என்னும் வள்ளுவர் சொல்வாக்கு எம்மை தட்டி வழிநடத்துகின்றது அல்லவா! ''யார் சொன்னார் எவர் சொன்னார் என்றிருக்க வேண்டாம். எவர் சொன்ன சொல்லையும் உனது சொந்த அறிவால் எண்ணிப் பார்'' என்று சாக்ரடீஸ் சொல்வாக்கு எம்மைச் சிந்திக்க வைக்கிறது அல்லவா! எமக்கென்று தரமான ஒரு வாக்கை நாம் கொண்டிருக்கும் போது அவ்வாக்கை மீறுகின்ற மனப்பக்குவம் எமக்கு ஏற்படாது என்று நான் நினைக்கின்றேன்.

                ஆனால், நம்மைத் தேடிவரும் செல்வாக்கைக் காத்திருக்காது மனிதன் செல்வாக்கைத் தேடிப் போகின்ற போதுதான் வாழ்க்கையில் தன் நெறி பிறழ்வை அவன் காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. அவனுடைய விசுவாசம் சற்று தள்ளிநிற்கின்றது.

                இலக்கியச்செல்வாக்கை எடுத்துப் நோக்கும்போது ஒரு இலக்கியவாதி எத்தனை திறமை இருந்தும் செல்வாக்கிற்குக் கைகட்டி அவன் சேவகம் பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. சரியான ஒரு இடத்தைப் பிடிப்பதற்கு அந்த ஊடகத்தின் அல்லது செல்வாக்குள்ள ஒரு மனிதனைத் தேடவேண்டிய அவசியம் தேவைப்படுகின்றது. உதாரணமாக சிறந்த ஒரு கவிஞன் தன் கவிதைகளை எத்தனையோ பத்திரிகைகளுக்கு அனுப்பியும் அவனது கவிதை நிராகரிக்கப்பட்டது. கவலையுற்ற அவ் இளைஞன், கண்ணதாசனிடம் தனது கவிதை ஒன்றைக் கொடுக்க அக்கவிதையை மேடையில் கண்ணதாசன் தனது கவிதை என்னும் பாங்கில் வாசித்தபோது அனைவரும் கைதட்டி ஆரவாரித்தார்களாம். அப்போது கண்ணதாசன் ''இக்கவிதையை நான் எழுதவில்லை. இந்த இளைஞனே எழுதினான்'' என்று அவ் இளைஞனை அடையாளம் காட்டினாராம். நல்ல ஒரு படைப்பாளி தன் திறமையைக் காட்ட செல்வாக்குள்ளோரை நாட வேண்டியுள்ளது. அப்படி அந்தச் செல்வாக்கைப் பெற்றுவிட்டால் தன் சொல்வாக்கில் அவன் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கின்றது.

                  எதிர்காலம் எங்கள் கையில் அதனால், சொல்வாக்கைச் சுத்தமாக்குவோம் செல்வாக்கு எம்மைத் தேடிவரும்.

            



    திங்கள், 27 ஆகஸ்ட், 2018

    வயோதிபம் வாழ்வில் வராமல் போகுமா!



    அழகு எதில் இருக்கின்றது என்றால், அது பார்ப்பவர் கண்களில் இருக்கின்றது. இளமையும் அழகுதான் முகத்தில் ரேகை படர்ந்த முதுமையும் அழகுதான். வாழ்வது அவசியமென்றால், முதுமையையை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வதும், ஆதரிப்பதும் அவசியமே.  முதுமை அருகே இருப்பது இளமைக்கு தொந்தரவு என்று நினைப்பதும், முதுமையைப் பாதுகாக்க இளமைக்கு காலம் கைகொடுக்கவில்லை என்று இளையவர்கள் கலங்குவதும், பிள்ளைகள் மகிழ்ச்சிக்கு இடையூறு எம்மால் வந்துவிடக்கூடாது என்றும், அமைதியாக யார் தொந்தரவும் இன்றி வாழவேண்டும் என்றும், இல்லை கடைசி காலத்தில் கலகலப்பாக பேரப்பிள்ளைகளைக் கொஞ்சி விளையாடி நான் வாழவேண்டும் என்று முதுமை நினைப்பதும் அவரவர் மனநிலையையும் வாழ்ந்த சூழலையும் பொறுத்தது.

                 வயதானவர்கள் என்னும் போது தமது வேலைகளைத் தாமே செய்து கொண்டு தமது பிள்ளைகளுக்கு தம்மாலான உதவிகளைச் செய்து கொண்டிருக்கின்ற வயதானவர்கள் என்றும், தம்மால் தமது வேலைகளைச் செய்யமுடியாது, சுயமாக நடந்து திரியமுடியாது, தமது உணவுகளைத் தாமே எடுத்து உண்ணமுடியாது, தமது நினைவுகளை இழந்து காணப்படுகின்ற முதியவர்கள் என்றும் இரண்டுவிதமாக வேறுபிரித்துப் பார்க்கலாம்.
                
                  வயதானவர்களை இளையவர்கள் தம்மோடு வைத்திருந்தால், அவர்கள் தொழில் ரீதியான வளர்ச்சிக்கும் பிள்ளைகளின் உடல் அறிவு வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் என்பது உண்மை. அதுகூட பிள்ளைகளின் சொந்த பிரச்சினைகளுக்குள் தலையிடாத வரையிலேயே சாத்தியமாகும். பிள்ளைகள் திருமண பந்தத்துள் இணைந்து தமக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கியபின் பெற்றோர்கள் உண்மையில் அவர்கள் வாழ்க்கையில் இரண்டாம் பட்சம் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டியது ஒவ்வொரு பெற்றோருக்கும் கடமையாக இருக்கின்றது. இவ்வாறான வயதானவர்களில் சிலர், தமக்கென்று ஒரு பொழுதுபோக்கை வைத்திருக்கும் பட்சத்தில் அவர்கள் பேரப்பிள்ளைகளே தமக்குப்பாரமாகக் கருதுகின்ற மனநிலை அவர்களுக்கு ஏற்படுகின்றது. ஒரு குழந்தை ஒரு இடத்தில் நீண்ட நேரம் விளையாடாதது போலவும், ஒரு கதையைத் திருப்பித் திருப்பிக் கதைப்பது போலவும் வயதானவர்கள் எவ்வளவு நேரம்தான் பிள்ளைகளுடன் விளையாடுவது, அவர்களின் வேலைகளைச் செய்வது எமக்கென்றும் ஓய்வுதேவை என்று கூறுகின்ற வயதானவர்கள் இருக்கவே செய்கின்றார்கள்.

              வாழ்க்கையின் பூரணத்துவம் நாம் பெற்ற பிள்ளைகளுடன் முடிவதில்லை. தமது பிள்ளைகளைக் கொஞ்சி விளையாடிய சுகம் திரும்பவும் பேரப்பிள்ளைகளைக் கொஞ்சுவிளையாடுவதற்கு இயற்கை கொடுக்கும் வரம் என்பதை உணரவேண்டும்.  இந்த சுகம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அந்தக் கன்னங்களின் அழகு, பஞ்சு உடலின் ஸ்பரிசம், அக்குழந்தைகளின் சுட்டித்தனம், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அரவணைப்போடு கொடுக்கும் பதில்கள் இவையெல்லாம் நாம் வாழ்ந்த வாழ்வின் பூரணத்துவம் என்பதுடன் சொர்க்கம் என்பதையும் வயதானவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். சுகம் என்று நினைத்தால் சுகம். தொல்லை என்று மனம் நினைத்தால், அது தொல்லை.

                    இதேவேளை இளையவர்களை நோக்கும்போது, தாம் வளர்வதற்கும் தாம் கற்பதற்கும் தமது உடல்நிலை உறுதியாவதற்கும் தமக்கென ஒரு சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கும் பெற்றோரைப் பயன்படுத்தும் பிள்ளைகள் தமக்கென ஒரு வாழ்க்கை அமைந்தபின் தேவைப்படாத பொருளை தூக்கி எறிவதுபோல் எறிந்துவிடுவது அல்லது சுமையாக எண்ணுவது வழமையாகப்படுகின்றது. காலச்சுழற்சியில் என்றோ ஒருநாள் எல்லோரும் மறையத்தான் போகின்றார்கள். இளையவர்கள் பிரிந்தபின் கலங்குவதைவிட வாழப்போகும் சிறிதுகாலமாவது அவர்களைச் சகித்துக் கொள்வோம் என்று நினைக்க வேண்டியது அவசியம். எதிர்காலத்தில் தமது நிலை என்ன என்று சிந்தித்துப் பார்த்தாலே பெற்றோரைத் தவிக்கவிடும் பிள்ளைகள் திருந்திவிடுவார்கள்.

              திருமணம் செய்து ஒன்றோ இரண்டோ வருடங்களில் பிள்ளைகளைப் பெற்று அதன்பின் பிள்ளைகளுக்காக வாழ்ந்து அதன்பின் பிள்ளைகளைத் திருமணம் செய்து கொடுத்தபின் நிம்மதியாகக் கணவனுடன் ஒருவருக்கொருவர் துணையுடன் வாழ நினைக்கும் தம்பதிகள் தமது பிள்ளைகளுக்காக தமது துணையைத் தவிக்கவிட்டுவிட்டு தமது பிள்ளைகளின் பிள்ளைகளைப் பராமரிக்கும் பொறுப்பை தலைமேல் கொண்டு அவர்களுடன் சென்று விடுகின்றனர். மீண்டும் அந்த ஆண் தன் பாலிய வயதுத் தனிமைக்குத் திரும்புகின்றான். இதுவும் சுகமே என்று சொல்லும் கணவன்மார்களுக்கும் ஒரு கையை இழந்த துயரம் இருக்கவே செய்யும்.

             ஒரு வயதானவர் இறந்தால் ஒரு நூலகம் அழிகின்றது என்பது உண்மை. அனுபவம் கற்றுத்தரும் பாடம் எந்த ஆசானும் கற்றுத் தருவதில்லை. அதனாலேயே பேரப்பிள்ளைகளைத் தமது பெற்றோரிடம் வளர்க்கப் பிள்ளைகள்  கொடுக்கின்றார்கள் என்று சொன்னால், அது நிச்சயமாக இல்லை. இப்போதும் பிள்ளைகள் பெற்றோரைப் பயன்படுத்துகின்றார்கள் என்பதுவே உண்மை. ஆனாலும், தாய் மனமோ தந்தை மனமோ வலிகளைத் தாங்கி வரங்களைக் கொடுக்கின்றார்கள் என்பதுவே உண்மை.

             தமது எண்ணங்களைத் துலைத்து, நடக்கத்துணை, இருக்கத்துணை, உணவு உண்ணத்துணை என்று துணையில்லாமல் வாழமுடியாத வயதானவர்களை வீட்டில் வைத்திருக்க முடியுமா? இது இன்றைய கேள்வி. முடியும் என்று மனதால் நினைப்போர் அதற்கான வழிகளைத் தேட வேண்டியது அவசியம். ஜேர்மனியைப் பொறுத்தவரையில் பணம் இருந்தால் பல நிறுவனங்கள் கைகொடுக்கின்றன. மருத்துவக் காப்புறுதி நிறுவனத்தின் பங்களிப்புடன் பெற்றோருக்காகச் சிறு தொகையை பிள்ளைகள் வழங்கினால், வீட்டிற்கு வந்து வயதானவர்களுக்குப் பல துறைகளில் உதவி வழங்க இந்நிறுவனங்கள் கைகொடுக்கின்றன. உடற்பயிற்சி, மூளைத் தொழிற்படுவதற்கான பயிற்சி, நடைப்பயிற்சி, உணவு தயாரித்துக் கொடுத்தல், சரியான நேரத்திற்கு மருந்து மாத்திரைகளைக் கொடுத்தல், காற்று வாங்கக் கூட்டிக்கொண்டு போதல், அவர்களுக்கு விருப்பமானவற்றை வாசித்து விளக்கம் கொடுத்தல், நினைவுகளைத் திரும்பக் கொண்டுவருவதற்கான பயிற்சிகளைக் கொடுத்தல், மருத்துவரிடம் கூட்டிக் கொண்டு போதல், ஆலயம் அழைத்துச் செல்லுதல் போன்ற உதவிகளைத் தமது கண்காணிப்பிலே செய்யக் கூடிய வசதி வாய்ப்புக்களைப் பிள்ளைகள் பெற்றுக் கொள்ளலாம்.

               இல்லை எங்கள் வீட்டில் எங்கள் பெற்றோருக்கு இடமில்லை என்று நினைப்பவர்கள் வேறு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொடுத்து இவ்வாறான வசதிகளைச் செய்து கொடுக்கலாம். தேவையேற்படும் போது மட்டும் பெற்றோரைப் போய்ப் பார்க்கலாம். அதுவும் இல்லையென்றால், வயோதிபர் மடங்களில் சேர்த்துவிடலாம். தாயைப் பார்ப்பதுபோல் தெய்வங்களாகப் பவனி வரும் எத்தனையோ தாதிகள் இவ்விடங்களில் பணிபுரிகின்றார்கள். அங்கும் தமது பொறுமையைச் சோதிக்கும் வயதானவர்களை சரியான முறையில் பார்க்காத தாதிகள் உண்டு என்று பிறர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். ஆனாலும், ஆதரவற்று பிள்ளைகளின் நச்சரிப்பில் மனவலியுடன் வாழ்வதைவிட பணம் கொடுத்து சரியான நேரத்தில் தொழிலாகத் தமது கடமையைச் செய்கின்ற தாதிகள் மேலானவர்கள் அல்லவா!
            



    சனி, 11 ஆகஸ்ட், 2018

    இன்னும் வாழுகின்றார்.

              

    சிதைக்குள் விழுந்தீர்களா? உடலைச் சிதைத்து விட்டார்களா?
    கணக்கும் வழக்கும் சரியாய் காலன் கணக்கிட்டு விட்டானா?
    உனக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று – என்
    நினைப்பின் பதிவு தந்தே நிம்மதியாய் உலகு துறந்தீர்களோ?
    இவ்வுலகில் என்னை விதைத்து விட்டு எவ்வுலகு சென்றீர்கள்?
    தனக்காய் வாழாது தரம் கெட்ட உலகை தவிர்த்துவிட்டீர்களா?
    வாழ்வின் கனவைத் தொலைத்து விட்டீர்களோ? தொலைந்து விட்டீர்களோ?
    நினைத்து வாழ பலவும் கண்டேன் நிம்மதியை தொலைத்தேன்
    மறந்து வாழ எதுவும் காணேன் மறைந்த வாழ்வை
    நிறைந்த நினைவாய் நினைவில் கொண்டே உலகில் உலாவுகிறேன்
    உறக்கக் கனவில் உயிராய் தோன்றும் இன்பம் கண்டேன்
    சிறக்க உலகில் சிந்தனை தந்த சிற்பியும் நீங்கள்
    மறக்க உலகில் சிந்தனை தராத சிற்பியும் நீங்களே



             இன்னும் வாழுகின்றார் தொடர்கதை ஆரம்பமாகிறது……

    அருகே யாரோ அழைப்பதுபோல் உணர்ந்தேன். என் சாயலில் யாரோ ஒருவர் என்னைத் தட்டி


     "மகள்"

     என்று அழைத்ததை உணர்ந்தேன். துடித்து எழுந்தேன். 

    நான் கேட்டேன் நிச்சயமாகக் கேட்டேன். 

    இக்குரல் என்னுள் ஒலித்துக் கொண்டு இருக்கின்றது. அந்த மூச்சுக் காற்றை மறப்பேனா? என் அருகே கட்டி அணைத்துப் படுத்த அந்த ஸ்பரிசத்தை மறப்பேனா?

     மெல்லிய ஆடைபோல் என் அரைக்கண்ணுக்குத் தெரிகிறது. உருவம் ஒரு மங்கலாக உணருகின்றேன். 

    ஆனால், முகம்  தெரியவில்லை. குரல் மட்டும் கேட்கிறது. 

    "என்ன படுத்திருக்கிறாய்" என்னும் தொனியில்தான் அக்குரல் அமைந்திருந்தது. துடித்து எழுகிறேன். 

    என் கால்கள் தடுமாறுகின்றன. 

    அரைத்தூக்கத்தில் மூளை தன் சுயதொழிலை நிலைக்குக் கொண்டுவர தயாராகவில்லை என்று நினைக்கிறேன். 

    அம்மா அம்மாதான் அழைத்தார். 

    அப்படி என்றால், இறந்து, உருவம் எரிந்து, எரித்த சாம்பல் கூட கரைந்து எல்லாவற்றையும் நாம் தொலைத்த போதும் அந்தக் குரல்  மட்டும் எமக்குள் கேட்கிறது என்றால், ஒலி அலைகள் இன்னும் அந்தக் குரல் அலைகளைத் தாங்கிக் கொண்டு இருக்க வேண்டும். 

    அல்லது எனது மூளையில் குரலைப் பதிவு செய்து இருக்கும் பகுதி இக்குரலை அழித்துவிடாது பொக்கிசப்படுத்தி வைத்திருக்க வேண்டும்.

              மூளையில் பளிச்சிட்டது எனக்கு ஒரு சிந்தனை. என்னோடு வாழும், எனக்குள்ளும் பல முற்போக்குச் சிந்தனைகளை, சமூக சிந்தனைகளை விதைத்தும் இருக்கின்ற என் தந்தை நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இப்போது இருக்கின்றார். 


    இச்செய்தி மனதுக்குள் பெரும் போராட்டத்தைச் செய்கிறது. நோய் கண்ட இடமோ நுரையீரல். ஆனால்….. ஆனால் அவருடைய மூளை நன்றாகத்தானே இருக்கிறது. 

    அப்போது நினைத்துப் பார்க்கிறேன். கைகளும் கால்களும் வழமைபோல் எனக்குத் தொழிற்படத் தொடங்குகின்றன. 

    வெளிநாட்டில் நாம் உழைக்கும் பணம் எதற்கெல்லாமோ செலவு செய்யப் படுகின்றது. என்னுடைய தந்தையின் சிந்தனைகள் தொலைந்து போகாமல் பாதுகாக்க அப்பணம் பயன்படுத்தப்படலாம்  அல்லவா. 

    ஒரு மனிதன் இறந்தால் ஒரு சில நிமிடங்கள் அம்மனிதனுடைய மூளை உயிர்வாழும் என்பதை நன்றாகவே அறிந்து வைத்துள்ள எனக்கு, எனது தந்தையின் மூளைப்பதிவுகளைப் பாதுகாக்க வேண்டும் என்னும் விடயத்தை இதுவரை நினைத்துப் பார்க்கவில்லையே துடியாய்த் துடிக்கிறேன். 

    எப்படியும் நிருபாவைச் சந்தித்துவிட வேண்டும்.

    கணனியைக் கரைத்துக் குடித்தவள் அல்லவா! ஆராய்ச்சித் துறையை தன் உயிராக மேற்கொள்பவள் அல்லவா! தொலைபேசியை அவளை நாடி அழுத்துகிறேன். 

    வரிசையாக எண்கள் பெயருடன் வந்து விழுந்தாலும் அடிக்கடி அழுத்தும் எண்கள் முன்பக்கம் வந்து விழுகின்றன. நிருபாவின் இலக்கம்தான். விரல்கள் அழுத்தத்தைக் கொடுக்கின்றன.

    "ஹலோ…… அன்ரி. எப்படி இருக்கின்றீர்கள்?

    தொடரும்……………..

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...