• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

    காதல் சொல்ல வந்தாள்



    கனவுகளும் காட்சிகளும் தியான் உருவத்தைச் சுற்றி வலம் வர, சிக்கித் தவிக்கும் அவள் உணர்வுகளுக்குத் தாய் தினமும் கூறும் வார்த்தைகள் தடைவிதித்துக் கொண்டு இருந்தன. வாசுகி கட்டுப்பாடான பெண்தான் ஆனாலும், காதலுக்குக் கண் இல்லை என்பார்களே. எல்லோருக்கும் எல்லோரையும் பிடிக்காது. சிலருக்குச் சிலரைப் பிடிக்கும். அதுவே நிச்சயமாகும் போது இணைவதும் சில சமயங்களில் இணைய முடியாமல் போவதும் இயற்கை.

    தியான் என்னைக் காண்பான். என்னிடம் ஒரு வார்த்தை பேசுவான் என மனதுக்குள் ஒரு ஆசைக் கோட்டையையே கட்டி வைத்திருந்தாள். அவனைக் காணும் போதெல்லாம் என் காதலைச் சொல்லிவிடலாமா! இல்லை இது பெண்மைக்கு இழுக்கா? என் காதல் என் தாயின் வேண்டுகோளுக்கு அவமதிப்பாகி விடுமா? மனதுக்குள் பெரிய போராட்டமே நடத்திக் கொண்டிருந்தாள், வாசுகி.

    அன்று திங்கள் மெல்லிய பனி மூட்டம் ஒருவரை ஒருவர் மறைக்கும் வண்ணம் தென்பட்டது. இருள் விலகிக் கொண்டிருக்கும் காலைப்பொழுது பஸ் தரிப்பில் பல்கலைக்கழகம் செல்வதற்காக வாசுகி காத்துக் கொண்டிருந்தாள். அருகே அழகான கம்பீரமான ஒரு ஆண்மகன். தன்னைக் கேட்காமல் தன் கண்கள் விலகி அவனை நோட்டமிட்டது.
     
    "வாசுகி!  அவன் அழைத்தான். திரும்பிப் பார்த்தாள்.

    “என்ன தெரியாதது போல் நிற்கிறாய்….”

     “ஓ அரவிந்த். எப்படி இருக்கிறீங்க? யாரோ Handsome Boy நிற்கிறார் என்று நினைத்துக்   கவனிக்கவில்லை"

    “Handsome  என்று சொன்னால் சரியா? அப்படி முழுமையாக நினைப்பது போல் தெரியவில்லையே. உன்னிடம் எத்தனை தடவை என் மனதிலுள்ளதை எடுத்துச்   சொல்லிவிட்டேன். நீதான் என்னை அலட்சியம் செய்கின்றாய். எனக்குப் பிடித்த உன்னுடைய பதிலுக்காக நான் காத்திருக்கின்றேன்”

    “பஸ் வந்திட்டு அரவிந்த். நான் பிறகு பேசுகிறேன். என் பதிலில் எந்தவித மாற்றமுமில்லை. என்னைக் கொன்று விட்டு எப்படி நான் உன்னோடு வாழ்வது. கற்பு என்பது மனதோடு சம்பந்தப்பட்டது என்று நான் பல தடவை உனக்குச் சொல்லியிருக்கிறேன். நீ எனக்கு நல்ல நண்பண்டா. காதலனாக என் மனம் வேறு ஒருவனுடன்தான் சல்லாபிக்கின்றது. பிறகு பேசுவோம்” என்றபடி பஸ்ஸுக்குள் வாசுகி ஏறினாள்.

    அரவிந்த் பல வருடங்களாக வாசுகிதான் தன் மனைவியாக வரவேண்டும் என்று அவள் பதிலுக்காக ஏங்கி நிற்கும் ஒருவன். வாசுகி குடும்பமும் அரவிந்த் குடும்பமும் நல்ல நண்பர்கள். அரவிந்த் மனதில் ஏதோ வகையில் வாசுகி புகுந்துவிட்டாள் என்பதா, புகுத்தி  விட்டான் என்பதா! தன் உள்ளக் காதலின் உருவத்தை எத்தனையோ முறை வாசுகியிடம் படம் போட்டுக் காட்டிவிட்டான்.

    ஆனால், வாசுகியோ ஒருவனைத் தன் மனம் பச்சை குத்திவிட்டது. அதை கிழித்தெடுத்து வேறு ஒருவனைப் பதித்து வைக்க எப்படி முடியும் என்று மறுப்புத் தெரிவித்துக் கொண்டாள்.
     
    மனதில் நிறைந்திருப்பவனிடம் தன் காதலைச் சொல்லும் தைரியமும் அவளிடம் இல்லை.

    மனதில் ஒருவன் இருக்க மற்றவனைக் கைப்பிடிக்கும் வேடதாரியும் அவள் இல்லை.

    இரு மனங்கள் காதலுக்காக ஏங்குகின்றன. ஆனால், யாருக்கு யாரென்று எழுதி வைப்பது ஏதோ ஒரு சக்தி என்பதை உணராதவர்கள் இல்லை அவர்கள்.

    அடிக்கடி சந்திப்புக்களும் பேச்சுக்களும் தொடர்ந்தாலும் ஆணித்தரமான உள்ளத்து வேட்கை மாறியதாக இல்லை.

    காலத்தின் போக்கில் வயது காத்திருக்காது அல்லவா. பெற்றோருக்கு எப்போதும் பெண்பிள்ளைகள் பாரமே. அது எந்த நாடாக இருந்தாலும் பிள்ளைகளைத்தாமே தாங்கி நிற்பதுபோல் தமக்குள்ளேயே ஒரு மனக்கோட்டை கட்டி வைத்துக் கொள்வார்கள். அவ்வாறே வாசுகி பெற்றோரும் அவளுக்கு வரன் பார்க்கத் தொடங்கினார்கள்.

    ஐரோப்பிய வாழ்வில் தானாகவே தன் துணையைத் தேடும் சுதந்திரம் இருந்தும் பெற்றோர் ஆச்சார, அநுஸ்டானங்களுக்குக் கட்டுப்பட்டு மனதின் போக்கைக் கூடக் கட்டுப்படுத்தி வாழ்பவள் அல்லவா வாசுகி.

    பெற்றோர் திருமணத்திற்காக அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டனர். ஆனால், வாசுகிக்கோ சிறுவயதிலிருந்து பெற்றோர் ஊட்டி வளர்த்த கற்பென்னும் தியரி மனதுக்குள் ஆட்டம் போட்டுக் கொண்டே இருந்தது.

    மனதால் ஒரு பெண் ஒரு ஆணை நினைத்துவிட்டால், அன்றிலிருந்து அவன் அவளுக்குக் கணவனாகின்றாள். இதுவே அவள் சிறுவயதிலிருந்து மனதுக்குள் போட்டு வைத்திருக்கும் விரதம். இந்த விரதத்திலிருந்து அவளால் மீளமுடியவில்லை. ஆழமான உள்ளப் பதிவு என்றுமே அழியப் போவதில்லை அல்லவா.

    என்ன செய்வது? பெற்றோரை எதிர்க்க அவளால் முடியவில்லை. அதேவேளை முன்பின் தெரியாத ஒருவனுடன் வாழவும் முடியவில்லை. தன்னைப் பற்றி துளியளவும் சிந்திக்காத தன் மனதுக்குள் மாயமாய் மறைந்திருக்கும் வேணுவையும் நிச்சயிக்க வாசுகியால் முடியவில்லை.

    யாரென்று அறியாது என்றுமே பழகிப் பார்க்காத பெற்றோர் பேசும் பையனுக்குத் தன்னைத் தாரை வார்க்க வாசுகி மனம் ஒப்பவில்லை. சிந்தனையில் அவள் இடது பக்க மூளை தொழிற்படத் தொடங்கியது. முடிவுகளை எடுக்கவோ தீர்மானிக்கவோ ஆண்டவனை விட தன் மூளையைத்தானே அவள் நம்பியிருக்கின்றாள்.

    தெரியாத ஒருவனுக்குத் தலையை நீட்டிவிட்டு அவன் எப்படி என்று தெரிந்து கொள்ள வருடக்கணக்கில் முயன்று, முடிவில் தனக்கேற்றவன் அவனே என்று முடிவாகும் போது காலம் கடந்துவிடும், இல்லை அவனுடன் வாழமுடியாது என்னும் போது விவாகரத்தில் வந்து முடியும். அந்த வேளையிலும் பாதிப்பு என்னவோ பெண்ணுக்குத்தானே. சரியான நேரத்தில் சரியாக சிந்தித்து எடுக்கும் முடிவுதான் நிலைக்கும்.

    நீ நேசிக்கும் ஒருவனைவிட உன்னை நேசிக்கும் ஒருவனே உனக்குத் தேவையானவன் என்னும் முடிவை அவளுடைய மூளை கொடுத்தது. தீர்மானித்து விட்டாள் வாசுகி. தன் எதிர்காலத்தைச் சிறப்பான முறையில் கொண்டு செல்வதற்குத் தனக்கு ஏற்றவன் அரவிந்த் தான் என்று மனம் இட்ட கட்டளையை தலைமேற் கொண்டாள். தலைசீவிச் சிங்காரித்துக் கொண்டாள். அரவிந்த எப்போதும் தன்னிடம் சொல்லும் அந்த மஞ்சள் கலர் புடவையை உடம்பில் சுற்றிக் கொண்டாள். நேர் வகிடு எடுத்து நெற்றியில் அழகான ஸ்ரிக்கர் பொட்டு வைத்தாள். தான் வாசம் செய்யவிருக்கும் கோயிலுக்குப் போவதற்குத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டாள். தாயிடம் அரவிந்த் வீட்டிற்குப் போவதாகச் சொன்னாள்.

    “இன்றைக்கு ஆட்கள் வருகின்றார்கள். நேரத்திற்கு வந்துவிடு“ என்று சொல்லிய தாயின் பேச்சுக்கள் அவள் காதில் விழவில்லை. இன்று தீர்க்கமாக அவளுடைய மனம் முடிவை எடுத்திருந்தது. இன்று எப்படியும் அரவிந்த் உடன் பேசிவிட வேண்டும். அவனுடைய பலநாள் கேள்விக்கு இன்று அவனுடைய நிறைவான பதிலைச் சொல்ல வேண்டும். இருவரும் இணைந்து பறக்கப் போகும் திருமண மஞ்சத்தை அவனிடம் சொல்லி மகிழவேண்டும் என மகிழ்ச்சி வெள்ளத்தில் மனம் சிறகடித்தது. அரவிந்த வீட்டை அடைந்தாள். வாசல் அழைப்புமணியை அழுத்தினாள்.

    உள்ளே பலருடைய பேச்சுச் சத்தம் கேட்டது, யாரோ விருந்தினர்கள் வந்திருக்கின்றார்கள். என்று நினைத்தபடி நின்றிருந்தாள். அரவிந்த் இனுடைய தங்கையே கதவைத் திறந்தாள். நேரே இருந்த ஹோலில் தட்டம் மாற்றப்படுகின்றது. ஏதோ சுபகாரியம் என்பதை நடைமுறைகள் காட்டிக் கொடுத்தன. அரவிந்த்  தங்கை ராணி வாசுகியைக் கண்டாள்.

    “வாசுகி What a Surprise  சரியான நேரத்துக்கு வந்திருக்கிறாய். அண்ணனுக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது. நீ இல்லாமல் எப்படி? கடவுளே உன்னை இங்கே அனுப்பியிருக்கிறார். வா… வா…. . 

    வாசுகி அறையை நோக்கி நடக்கிறாள். தவிடு பொடியாகிச் சிதைந்து கிடக்கும் தன் நம்பிக்கையை மனதுக்குள் அஸ்தமனமாக்கி விட்டாள். ஏதோ சொல்ல வந்த வாசுகி. அரவிந்தன் எதிர்கால வாழ்க்கைக்கு தன் வாயால் மட்டும் வாழ்த்துச் சொல்லுகிறாள்.


    திங்கள், 18 பிப்ரவரி, 2019

    முக்கோண முக்குளிப்பு மின்னூல்

    எனது மின்னூல்.

    2016 ஆம் ஆண்டு ஜேர்மனி எழுத்தாளர் சங்கத்தால் வெளியீடு செய்யப்பட்ட என்னுடைய இந்நூலில்  மூன்று வகையான பிரிவுகளில் கட்டுரைகளை எழுதியுள்ளேன்.  நூல் வடிவில் என்னிடமுள்ள பதிவுகளை  வாசகர்கள்  அனைவரும் வாசித்துப் பயன்பட வேண்டும் என்னும் நோக்கத்துடன் மின்னூலாக வெளியீடு செய்கின்றேன். வாசித்து உங்கள் பின்னூட்டங்களைத் தாருங்கள் என்று கேட்டுக் கொள்ளுகின்றேன். இந்நூல் நீங்கள் பக்கம் பக்கமாக பிரித்துப் படிக்கக் கூடியதாக இருக்கிறது

    http://online.fliphtml5.com/djvlz/euiq/#p=5


    எனது மின்னூலைப் பிறிதொரு பக்கத்தில் பார்க்க
    http://online.fliphtml5.com/djvlz/euiq/

    சனி, 2 பிப்ரவரி, 2019

    காதல்


    காதலர் தினம் பெப்ரவரி 14ம் திகதி கொண்டாடப்படுவதன் காரணம் பற்றி சென்ற ஆண்டு கட்டுரையில் நான் விளக்கியிருக்கின்றேன். ஆனால், இந்த காதலர் தினம் கொண்டாடப்படுதல் அவசியமா? என்ற கேள்வியுடன் பல நாடுகள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றார்கள். வியாபார நோக்கத்துடன் காதலர் தினத்தை விலையுயர்ந்த ஒரு விழாவாக மாற்றிவிடுகின்றார்கள் என்றும் இவ்விழா கலாசாரத்தை சீர்குலைக்கின்றது என்றும் பலவாறான எதிர்ப்புகள் நிலவுகின்றன. இந்நிலையில் காதலர் தினத்தின் முக்கியத்துவம் பற்றி சிறிது மனம் பதிப்போம்.
     
             காதல் என்பது உலகத்து உயிர்கள் அத்தனையையும் தன் பிடிக்குள் அடக்கியுள்ளது. உடற்பசி, உள்ளப்பசி, உயிர்ப்பசி, பிறவிப்பசியே காதல் என்பர். அஃறிணைக்காதல் கல்லாக்காமம், இயற்கையின்வீறு. மனிதர்களிடத்தில் தோன்றும் காதல் நினைவில் இனித்து, அறிவில் விளங்கி, கல்வியில் வளர்வது என்று வ.சு.ப. மாணிக்கனார் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். சங்கநூல்கள் எட்டுத்தொகை பத்துப்பாட்டு மொத்தம் 2381 பாடல்கள். இதில் 1862 பாடல்கள் அகத்திணையையே குறிக்கின்றன. இவ் அகத்திணை வயப்பட்ட காதலை தொல்காப்பியர் களவியல், கற்பியல் என அகத்திணை பற்றிய செய்திகளை இரண்டாகப் பிரிக்கின்றார்.
     
             புலவனுக்கு மதம் எனப்படுவது ஆண் பெண் காதலே. அக்காதல் இலக்கியத்தின் வற்றாத ஊற்றிடங்களுள் ஒன்று. கவிதை எண்ணத்தை உருவாக்கும் சார்புகளுள் ஒன்று. இயற்கை இன்பத்தின்பால் உலகை ஆட்டிப்படைக்கும் காதல் இன்பத்தைக் களிப்பான நாளாகக் கொண்டு விழா எடுப்பதில் தவறில்லை என்றே நினைக்கின்றேன்.
     
              ஆண் பெண் இருபாலாரிடையே வெளிப்படும் காமத்தோடு கூடிய காதல் சங்கம் தொட்டு இன்று வரை பாடல்களின் மூலம் அழகாக எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றது. காமம் கடந்த காதல், காமத்தோடு கூடிய காதல் என்னும் போது இயற்கையைக் காதலித்தல், செய்யும் தொழிலைக் காதலித்தல், கற்கும் கல்வியைக் காதலித்தல், தன்னைத்தான் காதலித்தல், வயதான தம்பதியினரின் உச்சம்தொட்ட அன்பின் வெளிப்பாடு என காமம் கடந்த காதல் வெளிப்படுகின்றது. தெய்வீகக் காதல் ஆண்டாள் பாடல்களில் அழகாக எடுத்துக்காட்டப்பட்டு இருக்கின்றது. ஆயினும் அவற்றிலும் கூட காமம் வெளிப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
     

    ''குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
    மெத்தென்ற பஞ்ச  சயனத்தின்  மேலேறி 

    கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் 
    வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய்திறவாய்!''

    என்று திருமாலை நினைத்து ஆண்டாள் பாடுவதாக இப்பாடல் திருப்பாவையில் வந்திருக்கின்றது. திருமணத்தை மறுக்கப்பட்ட பெண்களின் குறியீடாகவே பெரியாழ்வாரின் கற்பனைப் பாத்திரப் படைப்பே ஆண்டாளாக இருக்கலாம் என்பது ஆராய்வுக்குறிப்பு. ஆயினும் ஆண்டாள் பாடல்கள் தெய்வீகக் காதலைப் புலப்படுத்தியிருப்பது காணக்கூடியதாக இருக்கின்றது. காதல் அடைதல் இயற்கை. அது கட்டில் அகப்படும் தன்மையதோ என்று பாரதிதாசன் எடுத்துரைக்க, காமம் என்ற சொல் காதலுக்கு பயன்படுத்தப்படுவது அறியக்கிடக்கின்றது.

    “காமங் காம மென்ப காமம்
     அணங்கும் பிணியு மன்றே நினைப்பின்
     முதைச்சுவற் கலித்த முற்றா விளம்புல்
     மூதா தைவந் தாங்கு
     விருந்தே காமம் பெருந்தோ ளோயே”

    அக்காமம் என்பது, வருத்தமும் நோயும் அன்று. மேட்டு நிலத்தில் தழைத்த, முதிராத இளைய புல்லை,  முதிய பசு, நாவால் தடவி இன்புற்றாற்போல நினைக்குங் காலத்தில் அக்காமம் புதிய இன்பத்தை யுடையதாகும் எனக் காமமாவது எமது அறிவு நிலைக்கு உட்பட்டது என குறுந்தொகையில் கூறப்பட்டுள்ளது.
     
      வெகுளிப்பெண் படத்தில் கண்ணதாசன் ''காதலாலே போதை வந்தது, காதலால் கவிதை வந்தது, ஆதலாலே காதல் செய்வது, ஆணும் பெண்ணும் ஆசை கொள்வது'' என்று எழுதியிருக்கின்றார். வைரமுத்து ''உலகமெல்லாம் ஒரு சொல். ஒரு சொல்லில் உலகம். காதல் கற்காலம் தொடங்கி இன்ரநெற் வரையில் அன்றும் இன்றும் என்றென்று காதல், காதலித்துப் பார் உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும், வயிற்றுக்கும் தொண்டைக்குமாய் உருவமில்லா உருண்டையொன்று உருளக் காண்பாய்... காதலின் திரைச்சீலையைக் காமம் கிழிக்கும்... செத்துக் கொண்டே வாழவும் முடியுமே... அதற்காக வேணும்... காதலித்துப் பார்! என்றார்.

    காதல் பற்றி மகாகாவி பாரதியார் சொல்கின்றபோது தனது குயில்பாட்டிலே
     
    “காதல் காதல் காதல்
    காதல் காதல்போயிற் காதல்போயிற்
    சாதல் சாதல் சாதல்” என்றார்.

    இவ்வாறான காதல் ஆண்பெண் இருபாலாரிடையே தோன்றும் போது செம்மண்ணில் மழைநீர் சேர்கின்றபோது, அந்நீரும் செந்நீராவது போல் இரண்டறக்கலக்கும் எனக் குறுந்தொகையில்
     
     “யாயும் ஞாயும் யாராகியரோ
     எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
     நீயும் யானும் எவ்வழி அறிதும்
     செம்புலப் பெயல் நீர்போல
     அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே”

    செம்புலப்பெயல் நீரார் பாடியிருக்கின்றார்.
    இதனையே பாரதியும் கண்ணம்மா என் காதலியில்
     
       “அன்னிய மாகநம்முள் எண்ணுவதில்லை - இரண்
        டாவியுமொன் றாகுமெனக் கொண்டதில்லையோ?  என்கிறார்.

    வேட்கை, ஒருதலை உள்ளுதல், மெலிதல், ஆக்கம், செப்பல்(தனக்குள் பேசிக்கொள்ளல்) நாணு வரை இறத்தல்(வெட்கம் இல்லாமல் போதல்) நோக்குவ எல்லாம் அவையே போறல், மறத்தல், மயக்கம், சாக்காடு (காதல் கைகூடாவிடத்து சாக நினைத்தல்) என தொல்காப்பியர் பொருளதிகாரத்திலே களவொழுக்கம் பற்றி அழகாக எடுத்துக்காட்டுகின்றார்.
     
              இவ்வாறான பண்புகளைக் கொண்ட காதலானது பெண்களிடத்து மென்மையானது, ஆண்களின் காதல் பாதுகாப்பானது. பெண்களின் காதல் அப்படியில்லை. எந்த நேரத்திலும் அழிந்து போகலாம் என்பதற்கு அத்தாட்சியாக குறிஞ்சிநிலத்துத் தோழி தன் வாயிலாக தலைவனுக்குப் புலப்படுத்துகின்றாள். 
     
    “வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
     சாரல் நாட செவ்வியை ஆகுமதி
     யாரஃ தறிந்திசி னோரே சாரல்
     சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
     உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே”
     
    அதாவது, வேரிலே பழுக்கின்ற பலாப்பழங்களையுடைய மலைச்சாரலையுடைய மன்னனே. இங்கே பெரிய பலாமரமொன்றின் சிறிய கொம்பில் சிறிய காம்பில் பெரிய பழம் தொங்குவதுபோல் தலைவியின் காமம் என்கிறாள்.
    இதனையே வள்ளுவரும், 
    ''மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
     செவ்வி தலைப்படு வார்''

    எல்லாவற்றிலும் மெல்லியதாகிய பூவைவிட காமம் மெல்லியது. அதன் உண்மையை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே எனக் கூறும் வள்ளுவரை நிலைநிறுத்தி, ஒருவனுக்கும் ஒருத்திக்கும் இடையே எழும் காதல் நிலத்தை விடப் பெரியது,  வானத்தை விட உயர்ந்தது, நீரை விட அளவற்றது எனக்கூறி இக்கட்டுரையை நிறைவு செய்கின்றேன்.
    இம்மாத வெற்றிமணியில் காதலர் தினத்துக்காக எழுதப்பட்டு வெளிவந்துள்ளது.


    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...