• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 21 ஜூன், 2014

    ஜெர்மன் தமிழ் கல்விச் சேவை 25 ஆவது ஆண்டுவிழாவில் என்னால் ஆற்றப்பட்ட உரை



    அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
    ஆல யம்பதி னாயிரம் நாட்டல்
    பின்னருள்ள தருமங்கள் யாவும்
    பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்
    அன்ன யாவினும் புண்ணியம் கோடி
    ஆங்கோர் ஏழைக்கெழுத்தறி வித்தல்

    என்ற மகாகவி பாரதியாரின் வரிகளை உங்கள் முன் சமர்ப்பித்து கல்விச் செல்வம் மகா செல்வம். அதில் தமிழ் இலக்கியச் செல்வம் தனிப்பெரும் செல்வம். அந்த சுவைமிக்க  எங்கள்  செல்வமாகிய தமிழ் இலக்கியத்தின் சுடராக விளங்கக் கூடிய சிறப்பு விருந்தினர் இலக்கியச் சுடர் இராமலிங்கம் அவர்களே, ஏழைக்கு எழுத்தறிவித்தல் புண்ணியம். ஆனால் தமிழ் மொழி இங்கு தேவை தானா என்று தளம்பிக்க் கொண்டிருக்கும் புலம்பெயர் மக்களிடையே  எதிர்காலத் தலைமுறைக்கு தமிழ் மொழியை வித்திடுதல் வித்திடுதல் மாபெரும் புண்ணியம் அதனை ஐரோப்பிய நாடுகளில் செய்து கொண்டிருக்கக் கூடிய ஜெர்மன் தமிழ் கல்விச் சேவை தலைவர் ஸ்ரீ ஜீவகன் அவர்களே, வலிமை உள்ளது வாழும் என்னும் கோட்பாட்டுக்கு இணங்க 25 ஆண்டு காலமாகச் சேவை ஆற்றிக்கொண்டிருக்கும் தமிழ் கல்விச் சேவையின் ஆண்டுவிழாவைச் சிறப்பிக்க வந்திருக்கும் மாணவர்களே, ஆசிரியர்களே, பெற்றோர்களே, மற்றோர்களே உங்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
                           
     முதலிலேயே சொல்லி விடுகின்றேன். பேசிக் கொல்லும் கொலையை நான் செய்யப்போவதில்லை. குறிக்கப்பட்ட  ஓரிரு விடயங்களை மாத்திரம் உங்களிடம் சேர்ப்பித்துவிட்டு விடை பெறுகின்றேன். கல்விச் சேவையின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மற்றைய தமிழ் விரும்பிகள் அனைவரும் இங்கு நிறைந்திருக்கின்றீர்கள். மாறுபட்ட கலாச்சாரத்தில், பன்மொழி பேசும் மக்களிடையே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இவ்வாறான நாட்டிலே பிறந்து வாழுகின்ற எம்முடைய எதிர்காலத் தலைமுறையினர். தமிழ் மொழியை ஆர்வமாகக் கற்பார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால் அவர்கள் விரும்பிக் கற்கக் கூடிய சூழ்நிலையை அவர்களுக்குக் கொடுத்தலே எமது கடனாக இருக்க வேண்டும். அதற்கு கற்பிக்கும் நடைமுறையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. சுதந்திரமான கற்றல் முறையேதான் கற்கும் ஆவலை தூண்டும். நாம் என்னசெய்கின்றோம். ஒரு பாடத் திட்டத்தை வைத்திருக்கின்றோம். அது அவசியமானது தான். ஆனால் அதற்குள்ளேயே எண்ணங்களைச் சுருக்க வேண்டும் என்று நாம் நினைப்பது அவசியமற்றது. மாணவர்கள் பேசும் சுதந்திரத்தை யார் கொடுக்கின்றார்கள். எதிர்த்து கேள்வி கேட்கும்போது, தெரியாவிட்டால் தெரியாது என்று சொல்வதற்கு யார் முன் வருகின்றார்கள். அறிந்து வந்து சொல்கின்றேன் என்று எத்தனை ஆசிரியர்கள் கூறுகின்றார்கள். அந்த விஷயத்தை விடு. இது இப்போது அவசியமா? நீ பெரிய மேதாவி. கேட்கிற கேள்வி. இப்படி ஏதாவது சொல்லி வாயை அடைத்து விடுகின்றார்கள். ஏனென்றால், நாமும் அவ்வாறான கலாச்சாரத்தில் இருந்து வந்தவர்கள் தானே. பூமியைப் பாயாய் சுருட்டினார் என்ற போது அதை நம்பியவர்கள் தானே. ஆனால் இக்கால மாணவர்கள் அப்படி இல்லை. எங்கிருந்து கொண்டு பாயைச் சுருட்டினார் என்று கேட்கக் கூடியவர்கள். இது இலக்கியச் சுடர் அவர்களுக்குத் தெரிந்ததே.  கடவுள் உலகத்தைப் படைத்தார் என்னும் போது எங்கிருந்து கொண்டு படைத்தார் என்று கேட்கின்ற மாணவர்கள் வாழுகின்ற சூழலில் கற்பிக்கும் தொழிலைக் கையில் எடுத்திருக்கின்றீர்கள். கற்பிக்கும் விடயம் இக்காலத்துக்குப் பொருந்தக்கூடிய முறையில் இருக்கின்றதா என்னும் அவதானம் ஆசிரியர்களுக்குத் தேவையானது. எத்தனை காலத்துக்கு மதி போல் முகம் என்று உவமை அணிக்குச் சொல்லப் போகின்றீர்கள். இப்போதுள்ள மாணவன் சொல்வான் குன்றும் குழியும் நிறைந்ததுதான் மதி என்று. heidi klum ஒட்டிய முகத்தைத்தான் model இற்கு எடுப்பார். அதனால் வட்டமுகம் போல் இருப்பதெல்லாம் இக்காலத்திற்கு ஆகாது. அதனால் விரும்பும் படியான உதாரணத்தை எடுத்துக் காட்டவேண்டும். உதாரணமாக முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ முகவரிக்கள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ இது வைரமுத்து பாடல் வரிகள் இதில் தற்குறிப்பேற்ற அணி இருக்கின்றது. இப்படி சினிமாவைப் பயன்படுத்துங்கள். அதனால் எந்த இடத்தில் எவ்வாறாக விடயத்தை கற்பிக்கின்றோம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
    இங்கு வள்ளுவர் பாடசாலையும் இருக்கின்றது. திருக்குறள் போட்டிகள் நடத்தப்படுகின்றது திருக்குறளை கற்பிக்கும் போது முதலில் உரையை சொல்லிக் கொடுக்க வேண்டும். அதன் பின் குரலுக்கு வரலாம். உதாரணத்திற்கு

    பொள்என ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
    உள்வேர்ப்பர் ஒள்ளி யாவர்”

    என்னும் குறளைக் கற்பிக்கும் போது, அதன் பொருள் புரியாத மாணவன் குழம்பிப் போவான். ஏனென்றால் வள்ளுவர் காலத்தில் அவன் வாழவில்லை. அவர் காலத்து சொற்கள் இப்போது பயன்படுத்தப்படுவதில்லை. அவர் கூட இப்போது வாழ்ந்திருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டார். எனவே அறிவுடையவர்கள் பகைவர் தீங்கு செய்தவுடன் வெளிப்படையாக கோபம் கொள்ளாமல் அவர்களை வெல்வதற்கு உரிய காலம் வரும் வரை மனதுக்குள்ளே சினத்தை வைத்துக் காத்திருப்பார்கள்  என்னும் போது. achso அப்பிடிச் சொல்றதானே. நேரே விஷயத்துக்கு வருவீங்களா.... என்று கூறி speed ஆகப் போய்க் கொண்டே இருப்பார்கள். எனவே உரையை கற்பிக்க வேண்டும். உரைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன்பின் தான்  குறளை அறிமுகப்படுத்த வேண்டும்.  தொடர்ச்சியாக குறள் கற்பிக்கும் போது இந்த மனிசன் வேலைக்கும் போகாமல் வீட்டிலேயே குந்திக் கொண்டிருந்து எழுதிக் கொண்டிருந்தாரென்றால், நாமா இதற்குப் பழி?. அந்த மனிஷி வாசுகியிடம்  கேட்டுப் பார்க்க வேண்டும் குடும்ப நிலைமையை. இங்கு போல் அப்போதும் மன்னர்மார் sozial hilfe கொடுத்துக் கொண்டிருந்தார்களோ என்ரெல்லாம் எண்ணத் தொடக்கி விடுவார்கள். அதனால் சந்தர்ப்பத்திற்கேற்ப குறள் கற்பிக்கும் போதே ஆவல் தூண்டப்படும். உரைமூலம் குறள் கற்பித்து விட்டோம். இப்போது உரை இக்காலத்துக்குப் பொருந்துகின்றதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

                
    வள்ளுவர் கருதியது என்ன? நல்ல சமுதாயம் உருவாக வேண்டும் என்பதே. அதனால் 

    அவர் எடுத்துக்காட்டிய விடயங்கள் பிள்ளைகளை சென்றடைய வேண்டுமென்றால் அவர் 

    குறளுக்கு கூறிய உரை இக்காலத்துக்குப் பொருந்துகிறதா என்று அறியவேண்டும். 

    இப்போதுதான் திருக்குறளுக்குப் பல உரைகள் வந்துவிட்டன. ஏனென்றால், வள்ளுவர் 

    என்ன எண்ணினார் என்பது முழுவதுமாக எம்மால் புரிந்து கொள்ள முடியாது.
                      
    இத் திருக்குறளை எடுத்துப் பார்த்தால் பரிமேழலகர் உரை சொல்கின்றது. வேறு தெய்வங்களை வழிபடாது. தன் கணவனை தொழுது துயில் எழும் பெண், பெய் என்று சொல்ல மழை பெய்யும் என்று. அதேவேளை கோ. பார்த்தசாரதி அவர்களுடைய உரை சொல்கின்றது தன் கணவனைத் தொழுது துயில் எழும் பெண், வேண்டிய போது பெய்யும் மழைக்கு ஒப்பாவாள் என்று சொல்கின்றது. எனவே காலத்துக்கு ஏற்ப கருத்தையும் நாம் மாற்றிவிட வேண்டும். இல்லை.  
                ``பாலெல்லாம் நல் ஆவின் பாலாமா பாரிலுள்ள
                 நூலெல்லாம் வள்ளுவன் செய் நூலாமோ – நூலிற்
                 பரித்த உரையெல்லாம் பரி மேலழகன்
                 தெரித்த உரையாமோ தெளி

    என்று கூறி இக்காலத்துக்குப் பொருந்துகின்றதோ இல்லையோ அதைப் போட்டுப் பிள்ளைகளுக்குப் புகுத்துவதனால் என்ன இலாபத்தைக் காணப்போகின்றோம். அதேவேளை திருக்குறளில் நாம் கை வைக்க உரிமை கிடையாது. ஆனால் கருத்து அது முக்கியம்.
     .
    . கணக்குப் பாடத்தைக் கற்கின்ற மாணவன் அதைக் கற்கும் போது எந்தவித உணர்ச்சியும் அடைவதில்லை. அதில் தன் மூளையை ஈடுபடுத்துவான். ஒருவேளை தன்னை மறந்து கணக்கில் ஈடுபடுவான். ஆனால் இலக்கியம் கற்கும் மாணவன் அப்படி இல்லை. அதில் தன்னை இழந்து விடுகின்றான். எனவே நாம் கற்பிக்கின்ற சூழல், காலம்  கருத்தில் கொண்டே  கற்பிக்கின்றபோது கற்பிக்கும் பலனைப் பெற முடியும்.
                
       பெற்றோர்களே உங்களிடம் தாழ்மையாக வேண்டிக் கேட்கின்றேன்.உங்கள் அறியாமையை உங்கள் பிள்ளைகளிடம் விட்டுச் செல்லாதீர்கள். சொர்க்கமோ நரகமோ அது இங்கு தான் உண்டு. நன்மையோ தீமையோ அதுவும் உங்களிடம்தான் உண்டு. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று பூங்குன்றனார் பாடியுள்ளார். எது தேவையோ அதுதான் நிலைக்கும், மனிதனின் வால் அப்படித்தான் இல்லாமல் போனது. பகுத்தறியும் பண்பை உங்கள் பிள்ளைகளுக்குப் பழக்குங்கள். அது கூடாது,இது கூடாது, அது ஆகாது, இது மங்கலம் அது அமங்கலம் என்றெல்லாம் மடமையைப் புகுத்தாதீர்கள்.தேவை அற்ற திணிப்புக்கள் கட்டுப்பாடுக்கள் வேண்டாமே. பூமிவயத்தில் எமது வயது ஒரு அணு அளவு கூட இல்லை. அதனால் எமக்கு எந்த உரிமைகளும் இவ்வுலகில் இல்லை. வாழுகின்ற போதே மகிழ்ச்சியுடன் நாமும் வாழ்ந்து எமது பிள்ளைகளையும் மகிழ்ச்சியுடன் வாழவைப்போம். ப்ளீஸ்  update பண்ணுங்க..        

                               இதேபோல் மாணவர்களும் அவதானிக்க வேண்டியது. கேள்வி கேட்கின்ற போதுதான் அறியாமை விலகும் ஆற்றல் பெருகும். சைவ சமயத்தில் சந்தேகம் வந்த போதுதான் சைவ சித்தாந்தம் தோன்றின. உங்கள் வாழ்க்கையை மாற்றக் கூடிய சிந்தனை உங்கள் சந்தேகங்கள். வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போம். அதேபோல் வாய் விட்டு கேள்விகள் கேட்டால் சந்தேக நோய் விட்டுப் போம். ஆனால் அதை தீர்க்கக் கூடியவர்களிடமே கேட்க வேண்டும். அது நல் ஆசானால் மட்டுமே முடியும் என்று நினைக்க வேண்டாம். உங்கள் பெற்றோராலும் முடியும். இப்போதுதான் கையுக்குள் உலகத்தைக் கொண்டு செல்கின்றார்களே. தமிழ் மொழி உலக மொழிகளில் மூன்றாவது இடத்தில் கணணி உலகில் இடம் பிடித்திருக்கின்றது. முதலாவது ஆங்கிலம், அடுத்து ஹீப்ரு மொழியை மெருகேற்றி  இட்டீஸ் மொழியாகப் உயிர்ப்பித்து இஸ்ரேலியர்கள் இன்று இரண்டாவது இடத்தில் கணணி உலகில் பிரவேசிக்கின்றார்கள். மூன்றாவது இடத்தில் இருக்கும் தமிழ் மொழியை முதலாவது இடத்திற்குக் கொண்டு வருவதற்காக கணணி உலகு தமிழர்கள் எமது தமிழ் பொக்கிஷங்களை எல்லாம் புகுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அதனால் எல்லோராலும் எல்லாவற்றையும் அறிய முடியும். மாணவர்களே உங்கள் பணி சிந்திப்பதுதான்.   சிந்தியுங்கள் சிறப்பான வினாக்களைத் தொடுங்கள். அதன் மூலம் அறிவைப் பெருக்குங்கள். நீங்கள் வாழுகின்ற நாட்டவர்களிடையே உங்கள் திறமை வெளிவரட்டும். தமிழின் சிறப்பு புலப்படட்டும், உலகின் முதல் இனம் என்று எமக்குள்ளே பழங்கதைகள் பேசிப்பேசிக் கொண்டிருத்தலை விட்டுவிட்டு அந்நிய நாட்டில் சகல கல்வி வசதிகளும் பெற்றுக் கொள்ளக்கூடிய தமிழன் என்று தலைநிமிர்ந்து சொல்லக்கூடிய திறமையைக் காட்டுங்கள் என்று கூறி. தமிழ் கல்விச் சேவையை மனமாரப் பாராட்டி, அற்புதமாக நிகழ்ச்சிகளை செய்து கொண்டிருக்கின்ற மாணவர்களை வாழ்த்தி, இசையால் எம்மை வசமாக்கிய இசை ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்து வாய்ப்புக்கும் நன்றி கூறி விடை பெறுகின்றேன். நன்றி வணக்கம்

    விழாவில் இடம்பெற்ற காட்சிகள் சில  


             சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட 
    இலக்கியச் சுடர் இராமலிங்கம் அவர்களின் உரை 


                                            
                                     ஜெர்மன் தமிழ் கல்விச் சேவையில் நீண்ட காலம் பணியாற்றிய 
                                                 உறுப்பினர்களுக்கு பாராட்டு 




    கல்விச் சேவையின் கீழ் இயங்கும் பாடசாலை ஆசிரியர்களுக்கு பாராட்டு 



                   ஜெர்மன் தமிழ் கல்விச் சேவை தலைவர் ஸ்ரீ ஜீவகன் அவர்களுக்கு 
        தமிழ் எழுத்தாளர் சங்கத்தினரால் செந்தமிழ் ஊர்தி  என்னும்
    பட்டமளித்து பாராட்டப்பட்டது 


    சிறப்பு விருந்தினர் கௌரவிப்பு 





    ஞாயிறு, 15 ஜூன், 2014

    தமிழ்மொழியின் சிறப்பும் புலம்பெயர் எதிர்காலத் தலைமுறையினரும்



    மனித இனமானது தனது தோற்றத்தில் இருந்து இன்றுவரை பல இயற்கை அழிவுகள், இயற்கை மாற்றங்கள், படையெடுப்புக்கள், மொழிக்கலப்புக்கள், விபத்துக்கள், புதிய கண்டுபிடிப்புக்கள் போன்ற பல மாற்றங்களைக் கண்டிருக்கின்றது. உடல் வளர்ச்சியடைவதற்காக பசிக்கும் போது உண்டல், களைப்பின் போது உறங்குதல் தவிர விலங்கு போன்று வேறு எதுவுமே ஆதி மனிதனுக்குத் தேவைப்படவில்லை. உண்பதற்கு மட்டுமே உணவு தேடிய மனிதன், மிருக வேட்டைக்கு ஆயுதங்களை உருவாக்கும் கலையை முதலில் கற்றான். கல்லைப் பயன்படுத்தி நெருப்பை உருவாக்க முடியும் என்னும் முதல் கண்டுபிடிப்பைச் செய்தான். தனியாய் வாழ்ந்து, குழுக்களாகி அங்க அசைவுகளின் மூலமும் ஒலி அலைகளை எழுப்புவதன் மூலமும்  எண்ணக் கருத்துக்களை வெளிபடுத்தி  வெற்றி கண்டான். முகக்குறி, கைக்குறி, படக்குறி என புலப்படுத்தி காலப்போக்கில் மொழிப்பயன்பாட்டின் முக்கியத்துவத்தினை உணர்ந்து மொழியை உருவாக்கினான். 
                    
                     சொற்கள் கோர்வைகள் ஆக்கப்பட்டு வாக்கியங்களாகி மொழிகள் உருவாயின. மொழிக்கு வரிகள் கொடுப்பதே எழுத்துக்களாகின்றன. இன்று நாட்டுக்கு நாடு மொழிகள் வேறுபட்டு ஏறக்குறைய (6800) ஆறாயிரத்து எண்ணூறுக்கு மேற்பட்ட மொழிகள் வழக்கில் இருக்கின்றன. இவற்றில் (2300) இரண்டாயிரத்து முன்னூறு மொழிகள் மட்டுமே எழுத்துருவில் இருக்கின்றன. அதிகமான மக்களால் தாய் மொழியாகக் கருதப்பட்டு பேசப்பட்டும் எழுதப்பட்டும் கொண்டிருக்கும் மொழிகள் ஆங்கிலம், இந்தி, சீனம், தமிழ். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அன்றும் இன்றும் செழுமையுடன் இருக்கக்கூடிய மொழி தமிழ்மொழி.

                  எமது தாய் மொழியாகிய இத்தமிழ் மொழி பற்றிய வரலாறு அறிவு ஆசிரியர்களிடம் இல்லையானால் அம் மொழியின் முக்கியத்துவம் ஐரோப்பிய வாழ் எதிர்காலத் தலைமுறையினருக்கு அறிவிக்க இயலாது போய்விடும். அதுபோல் தமிழ் மொழி கற்கும் ஆர்வமும் அவர்களிடம் இல்லாது போய்விடும். 
                   
                       தமிழனின் பிறப்பிடமும் தமிழ்மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம்தான். இதுவே முதல் மனிதன் தோன்றிய இடமாகிய இலெமூரியாக் கண்டம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இலெமூர் என்னும் குரங்கு இனம் வாழ்ந்ததனால் இலெமூரியா என வழங்கப்பட்டது என்பதனைவிட. குமரி என்பது ஒரு மூலிகைச் செடி. இதுவே எம்மவரால் சோற்றுக் கற்றாழை (ALOVERA) என அழைக்கப்படுகின்றது. இந்த குமரிச் செடி அதிகமாக வளர்ந்திருந்த காரணத்தினால் குமரிக்கண்டம் என இலெமூரியாக்கண்டம் வழங்கப்பட்டது. இலை10மூலிகைஸ்ரீ இலை மூலிகை. இதன் கடை எழுத்து நீங்கி இலைமூலியாகி இலைமூலி இலைமூரியாவாகி அது பின் இலெமூரியாக என வழங்கப்பட்டது என்னும் கருத்தை தேவநேயப்பாவாணர் அவர்கள் கூறுகின்றார். இது ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே உள்ளது. முதல் மனிதன் தோன்றிய இடமே முதல் மொழி தோன்றிய இடமாகவும் இருக்க வேண்டும். அவன் பேசிய மொழியே முதன்மொழியாக இருக்க வேண்டும். அதுவே நாம் பேசும் தமிழ் மொழியாகும். ஹரப்பா நாகரிகத்தை ஆராய்வு செய்த ஹெரஸ் பாதிரியார் சரித்திரம் ஆரம்பிப்பதற்கு வெகுகாலத்திற்கு முன்பே இலெமூரியா நாடு தமிழ்நாடாய் இருந்தது என்று கூறியிருக்கின்றார்.
               
     இயல்பாகத் தோன்றிய மொழிக்கு பதினாறு பண்புகள் இருக்க வேண்டும் 
       
       ''தொ ன்மை இயன்மை தூய்மை தாய்மை 
        முன்மை வியன்மை வளமை மறைமை
        எண்மை இளமை இனிமை தனிமை 
        ஒண்மை இறைமை அம்மை செம்மை 
        எனும்பதி னாறும் இன்றமிழ் இயல்பெனப் 
        பன்னுவர் மொழிவலர் பாவாணர் தாமே''

    எனவே தமிழ் மொழி இயல்பாகத் தோன்றிய மொழியாகின்றது. உலகின் தொன்மை மொழிகளாக ஆறு மொழிகள் உள்ளன. அவை தமிழ், சமஷ்கிருதம், சீனம், இலத்தீன், கிரேக்கம், இப்ரூ ஆகியனவாகும். இவற்றில் சமஷ்கிருதம் பேச்சு மொழி அல்ல. இலத்தீன், இப்ரூ மொழிகள் வழக்கொழிந்து விட்டன. ஆனால் தேவநேயப்பாவாணர் கூறியது போல் இன்றும் இலக்கியச் செம்மை, இலக்கண வரம்பு, பழைமை, நிறைந்த சொல்வளம் மிக்கு என்றும் கன்னியாக விளங்குவது தமிழ் மொழியே. 
     
                         எம் முன்னோர் முதல், இடை, கடை என்று  மூன்று சங்கங்கள் தொடர்ச்சியாக வைத்து தமிழ் வளர்த்தனர். அவர்களால் இயற்றப்பட்ட பல  நற்றமிழ் இலக்கியங்களை கடல்கோள் போன்ற இயற்கை அழிவுகளினால் அழிந்து  போயின. எம்மால் அறியப்படுகின்ற பழந்தமிழ் முதல் இலக்கண நூல் தொல்காப்பியமாகின்றது.  இது தோன்றிய காலம் கி.மு.3 ஆம் நூற்றாண்டிற்கும் கி.மு.5 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலமாகின்றது. இதனை இயற்றியவர் தொல்காப்பியர். இவர் அகத்தியரின் 12 மாணாக்கரில் ஒருவர். ''முந்து நூல்கண்டு முறைப்பட எண்ணி'' என்னும் பாயிரத்தொடர் மூலம்  இவர் இந்நூல் யாப்பதற்கு முன்பே சிறந்த பல இலக்கண இலக்கிய நூல்கள் இருந்திருக்கின்றன என்பது அறியக்கிடக்கின்றது.

                       பயன்பாட்டில் உள்ளவை நிலைக்கும் பயன்பாட்டை இழப்பவை அழியும் அந்த வகையில் மொழியும் நிலைக்க வேண்டுமானால் பயன்பாடு அதிகரிக்க வேண்டும். பயன்பாடு அதிகரிக்க வேண்டுமானால் தமிழன் வாழுகின்ற இடங்களில் எல்லாம் தமிழ் மொழி பேசப்பட வேண்டும். இன்று இலத்தின் மொழி எழுதப்படும் மொழியாக மாத்திரமே உள்ளது. இந்நிலை போல்  அன்றி எழுதப்படும் மொழியாக மாத்திரமன்றி பேசப்படும் மொழியாக தமிழ்மொழி என்றும் தொடர வேண்டுமானால் அந்நிய நாடுகளிலும் அதன் பயன்பாடு அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் தமிழ் மொழியின் மகத்துவம் அதிகரிக்க  வேண்டும்.        
                       
                              ஒரு இத்தாலி நாட்டவராகிய பெஸ்கி பாதிரியார்  மதம் பரப்பும் நோக்கிலே தமிழகம் வந்தார். இவர் தமிழ் மொழியைக் கற்று தமிழுக்குச் சேவை ஆற்றியது மட்டுமன்றி. தன் பெயரையும் வீரமாமுனிவர் என்று மாற்றினார். அவர் 'என் கல்லறையிலே  நான் ஒரு தமிழன் என்று எழுதுங்கள்' என்று கூறியதன்  மூலம் தமிழ் மீது அவர் கொண்டுள்ள பற்றை எடுத்துக் காட்டியுள்ளார்.  முதல் தமிழ் அகராதி. கோடு போட்டு எழுதும் மெய் எழுத்துக்களை குற்று வைத்து எழுதவைத்தத்துடன், ர சேர்த்து எழுதும் நெட்டெழுத்துக்களை நீட்டி எழுதும் ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஔ போன்ற நெட்டெழுத்துக்களாக மாற்றியமைத்தமை போன்று தமிழுக்கு பல அளப்பரிய சேவைகள் ஆற்றியுள்ளார். இவ்வாறு வேற்று நாட்டவர் தமிழ் மீது காதல் கொண்டு  தமிழுக்கு சேவை ஆற்றியிருக்கும் போது தமிழ்ச் சிறார்கள் தமிழ்கல்வியைப் புலம்பெயர்வில் கற்று அதன் சிறப்பைப் போற்றுவதில் சிறுமை இருக்கப் போவதில்லை. திருக்குறளின் பெருமை உணரப்பட்டு, அது இன்று பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் போது அந்நூலை புலம்பெயர் தமிழ் சிறார்கள் கற்பதில் நேரம் விரயம் ஆக்கப்படப் போவதில்லை. 

                  இலத்தீன் சட்டத்தின் மொழியாகவும், பிரெஞ்ச் காதல் மொழியாகவும் ஆங்கிலம் வணிக மொழியாகவும், சமஸ்கிருதம் தெய்வீக மொழியாகவும் காணப்பட  தமிழ் மொழி பண்பாட்டு மொழியாகக் காணப்படுகின்றது. நாம் தமிழ் பண்பாட்டைப் போற்றும் ஒரு பரம்பரையை உருவாக்க வேண்டுமானால் மொழிக்கல்வியை வளரும் சமுதாயத்தினரிடம் கொண்டு சேர்க்க வேண்டியது அவசியமாகின்றது.
                     
                      மொழி மனிதனை மனிதன் புரிந்து கொள்ள ஒரு சிறந்த ஊடகமாகத் தொழிற்படுகின்றது. தமிழ்மொழிபேசும் பெற்றோர் வாழுகின்ற புலம்பெயர்வில், பெற்றோரை அவர் தம் பிள்ளைகள் சரியான முறையில் புரிந்துகொள்வதற்கு தமது தாய்மொழியைப் பேசக் கற்றல் அவசியமாகின்றது. எதிர்காலத் தலைமுறையினர் தமிழ் மொழியைப் புறக்கணிக்கின்ற போது எமது பரம்பரைப் பாரம்பரியங்கள் அழிந்துபோகின்றன. பண்பாடு மறைந்து போகின்றது. ஒவ்வொரு இனத்தவரும் தமது பண்பாட்டு அம்சங்களை இன்றும் தாம் வாழுகின்ற பகுதியில் நிலைநிறுத்திக்கொண்டே வருகின்றார்கள் என்பதை பல மொழி பேசுகின்ற மக்களிடையே வாழுகின்ற எமது புலம்பெயர் தமிழ் இளந்தலைமுறையினர் நன்கு  அறிவார்கள். 

                   இன்று ஏறக்குறைய 77 மில்லியன் தமிழர்கள் உலக நாடுகள் எல்லாவற்றியும் புலம் பெயர்ந்து வாழுகின்றார்கள். தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் எல்லாம் தமிழின்  பெருமை போற்றிப் பாதுகாக்கப்படுகின்ற போதுதான்இ தொன்மை பெற்ற எம் செம்மொழியின் சிறப்பானது,  தமிழர் புலம்பெயர்ந்து வாழுகின்ற நாட்டவர்களுக்கு அறியக்கூடியதாக இருக்கும். அதற்கு இளந்தலைமுறையினர் தமிழ் மொழியைக் கற்க வேண்டியிருப்பதுடன் அவ் இலக்கண இலக்கியங்களை  அவர்கள் வாழுகின்ற நாட்டு மொழிமூலம். மொழிபெயர்க்க முடியும். அத்துடன் அதன் பெருமையை அந்நாட்டவர்களுக்கு தெரியப்படுத்த முடியும். தான் 

                    புலம்பெயர் இளந்தலைமுறையினர் தமிழ் மொழியில் நாட்டம் கொள்ளவும், கற்கவும் அவர்தம் பெற்றோரும், ஆசிரியர்களுமே முதலில் அக்கறை கொள்ளுதல் அவசியமாகின்றது. பெற்றோர் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளும்போதுதான் பிள்ளைகளுக்கு மொழிக்கல்வியைக் கொடுப்பதற்கு முன்வரமுடியும். பிரெஞ்ச், இத்தாலி, இலத்தீன், ஜெர்மன், ஸ்பெயின், ஆங்கிலம், போன்ற மொழிகளை இரண்டாவது மொழியாகக் கற்கின்ற தமிழ் மாணவர்கள் தமிழ் மொழியைக் கற்பது கடினம் அல்ல. பெற்றோர் கலைக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவம் மொழிக்குக் கொடுப்பதில்லை என்பது ஆசிரியர்களின் முக்கிய குற்றச் சாட்டாக அமைகின்றது. வீட்டிலிருந்து பிள்ளை தமிழ் பாடசாலைக்கு அனுப்பப்படும் போதுதான் ஆசிரியர்கள் அக்கல்வியைப் பிள்ளைகளுக்கு வழங்க முடியும். எனவே எதிர்காலத் தலைமுறையினர் தமிழ்கல்விக்கு முதல் பெற்றோர் பங்கு அவசியமாகின்றது. 

                      இன்று புலம்பெயர்விலே தன்னலமற்ற பல தமிழ்ப்பாடசாலைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அவற்றிலே பணிபுரிகின்ற ஆசிரியர்கள் சேவை மனப்பாங்கிலே தமது பணியை ஆற்றிக்கொண்டிருக்கின்றார்கள். தமிழ்கல்வி எதிர்காலத் தலைமுறையினருக்குச் சென்றடைய வேண்டும் என்னும் நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் புலம்பெயர்ந்து வளர்கின்ற எதிர்காலத் தலைமுறையினர் தாய்மொழியைக் கற்பதில் நாட்டம் குறைந்தவர்களாகவே காணப்படுகின்றனர். தமது கல்வி மொழிக்கு எந்தவகையிலும் தமிழ்மொழி பயனளிக்காது என்றே கருதுகின்றனர். தமக்கு வருமானத்தை ஈட்டித்தராது என்னும் கருத்தையும் கொண்டிருக்கின்றனர். 

                 அதைவிட எமது தமிழ் பாடசாலைகள் மாணவர்களுக்கு மொழியில்  சரியான ஈர்ப்பை கொண்டுவராதது குறைபாடாகவே காணப்படுகின்றது. ஒரு பிள்ளை தாய் மொழியில் சிறப்புப் பெற்றிருக்கும்போது கல்விமொழியிலும் மிக்க சிறப்பை அடைய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றார்கள். எனவே தாய்மொழியில்  இலகுத்தன்மையை ஏற்படுத்தும் போது  அது மாணவர்கள் கற்றலுக்கு ஈடுபாட்டை ஏற்படுத்தும். எனவே பாடத்திட்டம் இலகுவான முறையில் அமையுமாறு தயாரித்தல் கல்வியாளர் கடமையாகின்றது. கற்றலும் கற்பித்தலும் இலகுவாக அமையும் பட்சத்தில் மாணவர்களுக்கு கற்கும் ஆர்வம் தூண்டப்படும். வேற்றுமொழியைக் கல்வி மொழியாகக் கொண்டிருக்கும் மாணவர்கள் கடினமான வழக்கொழிந்த சொற்களைக் கற்கும் போதும், கடினமான முறையில் இலக்கணத்தைக் கற்பிக்கும் போதும் மொழி கற்பதில் சலிப்படைகின்றனர். தமிழ் கற்பிக்கும் பாடசாலைகளில் சில விரும்பத்தகாத அரசியல் விடயங்கள், அத்துடன் கற்பிக்கும் ஆசிரியர்களின் கவர்ச்சியற்ற கற்பித்தல் நடைமுறைகளும் வகுப்பறைக்கு கற்பிக்கும் ஆயத்தமில்லாது வருதலும், கற்பிக்கும் விடயத்தில் சந்தேகம் தீராமலே கற்பிக்க முன்வருதலும், யதார்த்தத்திற்கும் சூழலுக்கும் ஏற்புடையதாகக் கல்விப்பாடத்திட்டம் அமையாமையும், கல்வி மொழிப் பாடசாலைகளில் ஒரு பாடமாக தமிழ்மொழி இல்லாமையும், அதன் மூலம் தமக்கு எவ்வித பெறுபேறுகளும் கிடைக்காது என்று தமிழ் மாணவர்கள் கருதுவதும், புலம்பெயர் மாணவர்களிடையே தமிழ்மொழியில் நாட்டம் குறைவதற்குக் காரணமாகின்றன.  

                         எனவே குறைகள் எங்கே,  எப்படி உள்ளதோ அதைப் புரிந்து கொண்டு சீரமைப்பதன் மூலம் புலம்பெயர்வில் எமது தாய்மொழியின் சிறப்பை எதிர்காலத் தலைமுறையினருக்கும் கொண்டுசேர்க்க முடியும். 



    ஜெர்மன் தமிழ் கல்விச்சேவை 25 ஆவது ஆண்டுவிழா மலருக்காக என்னால் வழங்கப்பட்ட கட்டுரை 

    இக் காணொளியைப் பாருங்கள். நன்றி ராஜா தமிழன்  













    வெள்ளி, 6 ஜூன், 2014

    வணக்கம் செலுத்துதல்



    சந்திக்கும் இருவரும், நம் இருவர் மனங்களும் சந்திக்கட்டும் என்னும் கருத்துடன் இரண்டு கரங்களையும் நெஞ்சின் முன் வைத்து வணங்குகின்றனர். ஐரோப்பியர்கள் இருவர் கரங்களையும் ஒன்றிணைத்துக் குலுக்கி வணக்கத்தைத் தெரிவிப்பார்கள். இஸ்லாமியர்கள் இருவரும் அணைத்து இரு இதயங்களையும் தொட்டுத் தொட்டு வணக்கம் செலுத்துவார்கள். இவ்வாறு ஒவ்வொரு இனத்தவரும் ஒவ்வொரு விதமாக வணக்கத்தைச் செலுத்துவார்கள்.

    தமிழர்கள் வணக்கம் செலுத்தும் முறைக்குப் பல விளக்கங்கள் கற்பிக்கப்படுகின்றது. தலை தாழ்த்தி வணங்கும்போது அகங்காரம் குறையும், அன்பும் பணிவும் கலந்த நட்பை நளினமாக நேர்த்தியாகக் கூற முடியும். காணும் மனிதர்களிடம் காணும் தெய்வீகத் தன்மையை உணர்த்தும் கொள்கையை கண்மூடி வணங்குதல் குறிக்கும். தமிழர்கள் பெற்றோர்கள், பெரியோர்கள், ஆசிரியர்கள் போன்றோரைக் காலில் விழுந்து வணங்குதல் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். பெரியோர்களின் வயது, விவேகம், பெருந்தன்மை, தெய்வீகத்தன்மை, ஆகியவற்றை நாம் மதிக்கின்றோம் என்பதை பாதங்களில் விழுந்து வணங்குவது உணர்த்துகின்றது. 

    இரு கரங்களையும் குவித்து தலைக்கு மேலே உயர்த்தி கடவுளை வணங்க வேண்டும்.

    தந்தையை உதடுகளுக்கு முன்னே கைகளைக் குவித்து வணங்குகின்றோம்.

    வயிற்றுக்கு நேரே கை வைத்து வயிற்றை அணைத்தவாறு தாயை வணங்குகின்றோம் 

    எம்மை விட வயதில் குறைந்த சிறியவர்களை இதயத்தில் கை வைத்து வணங்குகின்றோம். 

    மார்புக்கு நேரே கை வைத்து அறிவால் உயர்ந்த ஆன்றோர்களை வணங்க வேண்டும். 

    நெற்றிக்கு நேரே கைவைத்து ஆசிரியர்களை வணங்க வேண்டும். 

    என வணக்கமுறைகளை எம் முன்னோர் வகுத்து வைத்திருக்கின்றனர். 



                   

           

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...