• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    புதன், 30 டிசம்பர், 2020

     


    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து நிற்க முடியுமா? கண்ணுக்குத் தெரியாது எங்கோ ஒரு மூலையில் இருந்து எம்மை அறியாமலும் அறிந்தும் பலரின் பங்களிப்புக்கள் எம்முடைய உயர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கின்றன. எண்ணம் எம்முடையதாக இருந்தாலும் எம்மைத் தூக்கி நிறுத்த ஒருவர் துணைவருவார் என்பது உண்மையே. தற்போது பல நிறுவனங்கள், வியாபார ஸ்தாபனங்கள், விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளர்கள் என அனைவரின் வளர்ச்சிக்குப் பின்னே பலரின் உழைப்பும் உதவியும் தியாகங்களும் அடங்கியிருக்கும். 

    கோடீஸ்வரன் பில்கேட்ஜ் உயர்வுக்கு அடிப்படையில் அவர் நண்பன் Paul allem இருந்திருக்கின்றார். விஞ்ஞானி ஸ்ரீபன் ஹார்க்கின்  ஆராய்ச்சிக்கும் ஆற்றலுக்கும் பின்னே டிக்ரான் தஹ்ரா (Dikran Tahta) என்னும் கணித ஆசிரியர் இருந்திருக்கின்றார். கற்பித்தலில் மட்டுமன்றி அவரை சக்கர நாற்காலியில் தள்ளிக் கொண்டு செல்வது வரை அவரின் பங்களிப்பு இருந்திருக்கின்றது. நோய்வாய்ப்பட்டு தற்கொலைக்கு முயற்சியில் இருந்த போதும் அவரைக் காப்பாற்றி  தன்னுடைய முயற்சியினால் ஹார்க்கிங் ஐ முன்னுக்கு கொண்டுவர கூடவே இருந்து காதலையும் அன்பையும் பகிர்ந்து கொண்டு ஒரு காதலியாக மனைவியாக தாதியாக கூடவே பயணித்தவர் ஜேன் ஹார்க்கிங் (Jane Hawhing) ஆவார்.  இவர்களின் ஒத்துழைப்பும் உதவியும் இல்லாது விட்டால் வெறும் முகத்தசைகளின் அசைவை மட்டும் வைத்துக் கொண்டு வானத்தை நோக்கி ஸ்ரீபன் ஹார்க்கிங் ஆராய்ச்சிகள் நிகழ்த்தியிருக்க முடியுமா? வாடிக்கையாளர்களை நம்பியே உற்பத்தியாளன். அவனை ஊக்கிவிக்கும் வங்கிகள் என உயர்ச்சிக்குப் பின் பல கைகள் மறைந்திருக்கும் என்பது உண்மையே. நாம் காணும் உலகத்தை விட்டு இந்த பிரபஞ்சமும் இப்படித்தான் இயங்குகின்றது. 

    இன்று நாம் போற்றும் இரண்டு இதிகாசங்களான மகாபாரதம், இராமாயணம் என்னும் இரண்டையும் எடுத்து நோக்கினால். இவை வெளிவருவதற்கும் காரணகர்த்தாக்கள் இல்லாமல் இல்லை. கம்பர் கம்பராமாயணத்தை எழுதிவிட்டு இதனை அரங்கேற்றுவதற்கு உதவி நாடி சடையப்ப வள்ளலிடம் செல்கின்றார். அவரோ சோழ மன்னனிடம் கம்பரை அனுப்புகின்றார். மன்னனோ தன்னுடைய அரசிலே உள்ள சிக்கல்களைக் காரணம் காட்டி திருவரங்க ஆச்சார்யார்களுக்கு திருவோலை அனுப்புகின்றான். ஆனால் அவர்களோ தில்லைவாழ் அந்தணர்களின் ஒப்பிதல் பெற்றுவரும்படி அனுப்புகிறார்கள். அப்போது பாம்பு தீண்டி இறந்த ஒருவனை நாகபாசத்துப் பாடல்கள் பாடி வியாசர் உயிர்ப்பித்தாராம். அதன் பின்புதான் அவருடைய காவியம் சிறப்பு என்று தீட்சிதர்கள் ஒப்பிதல் கொடுத்தார்களாம். இவ்வாறு அலைந்து திரிந்து இறுதியில் திருவரங்கம் சென்று அரங்கேற்றம் தொடங்கும் போது நஞ்சடகோபனைப் பாடினாயா? என்று ஒருவர் தடுத்தார். பின் சடகோபரந்தாதி பாடினார். அதன் பின் அரங்கேற்றம் தொடங்க பல எதிர்ப்புகள் வைணவர்களிடமிருந்தெல்லாம் தோன்றியது. இறுதியில் ஸ்ரீமன்நாத முனிகள் இரணியவதைப் படலம் ஒன்றே போதும் கம்பரின் காப்பியம் தெய்வீக காப்பியம் தான் என்பதற்கு ஐயம் இல்லை. இது காப்பியத்தில் இடம்பெறலாம் என்றாராம். ஒரு நூல் அரங்கேற எத்தனை சோதனைகளைத் தாண்ட வேண்டும் என்பது தற்காலத்திலிருப்போர்க்குப் புரியாது. ஆனால், ஒரு நூல் வெளிவர பலரின் உதவிகள் இருந்திருக்கின்றன என்பதை அறியக் கூடியதாக இருக்கின்றது. 

    இதேபோல் மகாபாரதத்தை வியாசர் சொல்லச் சொல்ல பிள்ளையார் எழுதியதாகவும் நிறுத்தாமல் வேகமாகப் பாடவேண்டும் என்று பிள்ளையார் நிபந்தனையிடப் பாடலைப் புரிந்து கொண்டு எழுத வேண்டும் என்று வியாசர் கட்டளையிட்டார். சம்மதித்த பிள்ளையார் வேதவியாசர் சொல்லச் சொல்ல எழுதிய வேகத்தில் பிள்ளையாரின் எழுத்தாணி உடைந்தது. உடனே தன்னுடைய தும்பிக்கையின் தந்தத்தை உடைத்து பிள்ளையார் எழுதினார் என வரலாறு கூறுகின்றது. இவ்வாறு மாபாரதத்தின் தோற்றத்தில் பிள்ளையாரின் பங்கு இருந்திருக்கின்றது. 

    சங்க இலக்கியங்களிலே அகத்திணைப் பாடல்களில் வெகுவாகப் பேசப்படுபவர் தோழி. காதலன் காதலியிடையே காதல் மலர்வதற்கும் இரவுக்குறி பகற்குறி என்று சந்திப்பு நிகழ்வதற்கும் தோழியின் அர்ப்பணிப்பும் ஆலோசனைகளும் மிகுந்து இருந்திருக்கின்றன. 

    “அந்தணர் பெரியோய்! அவலமின்றி இருமின்

    கோதாவரியின் குளிர்பூஞ்சாரலில் 

    அச்சம் ஊட்டிய ஞமலியை இன்று 

    கதமிகு சீயம் கடித்துக் கொன்றதே||

    இப்பாடலின் சந்தர்ப்பம் காதலர் சந்திப்புக்கு தோழியின் உதவியை அழகாக எடுத்துக் காட்டுகின்றது. கோதாவரிக் கரையிலே ஒரு பூஞ்சோலையில் காதலர் இருவரும் சந்திக்க எண்ணினர். ஆனால், அதற்கு முன்னமே அந்த இடத்தில்  ஒரு அந்தணர் உலாவிக் கொண்டிருக்கின்றார். அவரை எப்படி அந்த இடத்தில் இருந்து அனுப்பலாம் என்று எண்ணிய தோழியானவள் அந்த அந்தணர் நாய்க்கு அஞ்சுபவர் என அறிந்து வைத்திருக்கின்றாள். எனவே அவரிடம் சென்ற தோழி “நீ அஞ்சாதே அந்த நாயை ஒரு சிங்கம் கொன்று விட்டது என்கின்றாள். நாய்க்கு அஞ்சுபவர் சிங்கம் என்றால் அந்த இடத்தில் நிற்பாரா? இவ்வாறு காதலுக்கு உதவிய தோழியர் அர்ப்பணிப்புகள் பற்றி சங்கப் பாடல்கள் பல எடுத்துக்காட்டுகின்றன.

    இவ்வாறு ஒருவரின் மகிழ்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் வெற்றிக்கும் பலரின் தியாகங்களும் ஒத்துழைப்புக்களும் உதவிகளும் நிச்சயம் அமைந்திருக்கும் என்பது உண்மையே. 




    செவ்வாய், 1 டிசம்பர், 2020

    சித்திரக்கவி


    மனதுக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்துவன இலக்கியங்கள். எனவே மனிதர்களால் ஏற்படுத்தப்படும் அனைத்துக் கலைவடிவங்களையும் இலக்கியங்கள் என்று கூறலாம். சொல்லை கவிதையாக்கினால் மகிழ்ச்சி. அக்கவிதையைப் பாடலாக்கினால் மகிழ்ச்சி. அப்பாடலை நடனமாக்கினால் மகிழ்ச்சி. அப்பாடலை நடித்தால் மகிழ்ச்சி இவ்வாறு சொற்கள் பல வடிவங்களை எடுத்துக் கொள்ளுகின்றன. இவ்வாறு சொல்லே எழுத்தோவியமானால் அதுவே சித்திரக்கவி. ஓவியம் மனதுக்குள் ஒரு கதை சொல்லும். காட்சிப்படிவத்தை ஏற்படுத்தும். உலகப் புகழ் பெற்ற ஓவியர் லியானாடோர் டாவின்சியின் ஓவியம் பற்றி அறிந்திருப்பீர்கள். அவை பல மர்மங்களை எதிர்காலத் தலைமுறைக்கு சொல்லிச் சென்றதை அறிந்திருப்பீர்கள். இவருடைய லாஸ்ற் சப்பர் (டுயளவ ளரிpநச) என்னும் ஓவியம் பல மர்மங்களை மறைந்திருந்தது. அதில் ஒன்று அப்படத்தில் காணப்பட்ட ரொட்டித் துண்டுகளை இணைத்துப் பார்த்த போது அது இசைக் குறிப்புக்களைக் காட்டியது. அக்குறிப்புக்களை இசைத்துப் பார்த்த போது  பிரபஞ்சத்தின் ஓசை எழுந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு ஓவியத்திற்குள் கருத்துக்கள் அடங்கிக் காணப்படும். இலக்கியத்தில் இவர்கள் என்னும் இப்பகுதியில் இவை பற்றி நோக்குவோம.; 


    முதலில் தமிழில் காணப்படும் இலக்கிய வகையிலே ஒன்றான சித்திரக்கவியை எடுத்துநொக்கினால்,  திருமங்கையாழ்வார், அருணகிரிநாதர், இராமச்சந்திர கவிராயர், பரிதிமாற்கலைஞர் போன்றோர் சித்திரக்கவி பாடுவதில் வல்லவர்களாகக் காணப்பட்டார்கள். அட்டநாக பந்தனம், எழுத்துவர்த்தனம், மாலை மாற்று என்னும் வகைகள் இதில் இருக்கின்றன. 


    அட்டநாக பந்தனம் என்பது எட்டு நாகபாம்புகள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்திருப்பது போன்று படம் வரைந்து கவிதை ஒன்றை எழுதி அக்கவிதை அந்தப் பிணைப்புக்குள்ளே நுழைந்து அந்தக்கவிதை பொருந்திவருமாறு ஓவியமும் கவிதையும் அமைந்திருப்பதே அட்டநாகபந்தம் என்னும் சித்திரக்கவி. இது பாம்பின் தலையில் தொடங்கி பாம்பின் வாலில் முடிக்க வேண்டும். உதாரணமாக இச்சித்திரத்திலே 


    பாரதிக் கெல்லை 

    பாருக்குள்ளே இல்லை என்னும் சித்திரக்கவி பாடப்பட்டுள்ளது

    எழுத்து வர்த்தனம் என்பது பாடலுக்குள்ளே எழுத்து வளரும். உதாரணமாக 

    மாத்திரை ஓரெழுத்துச் சொல்லும், மற்றொன்று 

    நிரப்பிட நீரிற்பூ ஒன்றாம் - நிரப்பிய 

    வேறோர் எழுத்துய்க்க வீரராசேந்திரன் நாட்டு

    ஆறாம் - காவிரி

    மாத்திரை ஓரெழுத்துச் சொல்லும் - கா

    மற்றொன்று நிரப்பிட நீரிற்பூ ஒன்றாம் - காவி

    வேறோர் எழுத்துய்க்க வீரராசேந்திரன் நாட்டு

    ஆறாம் - காவிரி


    மாலை மாற்று என்பது

    பின்புறம் படிக்கும் போது முன்புறம் படிப்பது போன்ற பொருள் தரும். 


    தேருவருதே மோரு வருமோ

    மோருவருமோ தேரு வருதே

    அதாவது தேர் வரும் போது நீர் மோர் வருமோ? மோர் வருகிறது. ஓ தேரும் வருகிறது.


    இவ்வாறு சித்திரக்கவி கடினமாக இருந்தாலும் கவிஞர்கள் மனதுக்குள் மகிழ்ச்சியைக் கொண்டுவருகின்றது. இவ்விலக்கிய வகையில் எமக்குள்ளும் பலர் ஓவியக்கலையின் மூலம் இலக்கியம் சொல்பவர்களாக மகிழ்ச்சியை ஏற்படுத்துபவர்களாக இருக்கின்றார்கள். எடுத்துக்காட்டாக வெற்றிமணி பத்திரிகையின் ஆசிரியர் மு.க.சிவகுமாரன் அவர்கள் ஓவியக்கலைஞர் சிற்பக் கலைஞர் என்று அறிந்திருக்கின்றோம். ஓவியம் எவ்வாறு இலக்கியம் சொல்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இப்படத்தை எடுத்துநோக்குவோம். 

    மேலே தரப்பட்டுள்ள படத்தைப் பார்த்தீர்களானால், அங்கு அழகான பின்னணி வர்ணத்தோடு இரண்டு உதடுகள் இருக்கின்றன. ஒரு உதடு வரைய 3 கோடுகள் வேண்டும். இரண்டு உதடுகள் இருக்கின்றன. மேலே உள்ளது ஆணுடையது. கீழேயுள்ளது பெண்ணுடையது. பெண்ணுடைய உதட்டில் மேல் வரியை எடுத்து ஆணுடைய உதட்டிற்கு மேலே மீசையாகப் போட்டிருக்கின்றார். அதாவது ஆணினுடைய கௌரவம் பெருமை என்பன அவனோடு வாழும் பெண்ணைக் குறித்தே இருக்கின்றன. பெண்ணே அவனுடைய தகுதியை உயர்வுக்குக் கொண்டு வந்து வைத்திருக்;கின்றாள். அரசனுக்கு மந்திரிபோல் மிகுந்த நுட்பமான அறிவுடன் தொழிற்பட்டு குடும்பத்தின் பெருமைக்கு காரணமாகின்றாள். அதனை எடுத்துக்காட்டுவதற்காக அந்த கௌரவமான மீசையை பெண்ணின் மேல் உதட்டில் இருந்து எடுத்திருக்கின்றார். அதேபோன்று ஆணினுடைய உதட்டு நடு வரியை எடுத்து பெண்ணினுடைய உதட்டிலே போட்டிருக்கின்றார். அதாவது நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்பது போல. அதாவது பெண்ணுக்குரிய பேச்சின் சுதந்திரத்தை ஆண் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கும் போதுதான் அவனுக்கு அந்த மீசையே உருவாகும். இவ்வாறான உயர்ந்த தத்துவத்தை எழுத்தில் மட்டுமல்ல ஓவியத்திலும் கொண்டு வரலாம் என்பதை இக்கலைஞன் எடுத்துக்காடடியுள்ளார். 

    ஓவியம் கதை கூறும் கலையை இலக்கியமாக்கும் வல்லவர்கள் இலக்கிய காலத்தில் மட்டுமல்ல. இயந்திர உலகத்திலும் வாழுகின்றார்கள் என்பது உண்மையே. 


    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...