• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    புதன், 30 ஜூலை, 2014

    ஆடிஅமாவாசை பற்றிய புதிய கண்ணோட்டம்

     

    தந்தையே உனை எண்ணி நான் வந்தனை செய்கின்றேன்
    சிந்தனை செய்து நான் இத்தினம் சிறப்பாகப் பெற்றேன்
    எந்தனுள் மனதில் உங்கள் எண்ணம் என்றுமே இருந்தாலும்
    இந்தநாள் உங்களுக்காய் என் உணவு துறக்க எண்ணினேன்.


    உயிரோடு மட்டுமல்ல உயிரைவிட்டுப் பிரிந்த பின்னும் தந்தைக்காக உலகெங்கும் தந்தையர் தினம் கொண்டாடப்படும். இது தந்தையரை மனதில் எங்கும் கொண்டிருப்பார்க்கு ஏற்ற தினமாகும். இங்கு மந்திரங்கள் இல்லை. பூசைகள் இல்லை, புரோகிதர் இல்லை. ஜேர்மனியர் பரம்பரைப்பெயரையே தமது கடைசிப்பெயராகக் கொண்டிருப்பார்கள். இதுவும் தந்தையருக்குத் தரும் மரியாதையாக இருக்கிறது. நாம் எமது பரம்பரைப் பெயரை ஒன்று அல்லது இரண்டு தலைமுறையுடன் மறந்து போகின்றோம். பெற்றோர் தெரிவிப்பதும் இல்லை நாம் தெரிந்து கொள்ளும் ஆர்வம் கொள்வதும் இல்லை. உங்கள் எத்தனை பேருக்கு முப்பாட்டன் பெயர் ஞாபகத்தில் இருக்கின்றது. நினைத்துப்பாருங்கள். ஆனால், வருடம் ஒருமுறை ஆடிஅமாவாசைக்கு மாத்திரம் பிதிர்க்கடன் செய்கின்றோம்.

      ஆடிஅமாவாசை தினத்தில் தந்தையை இறந்த இந்துமதத்தவர்கள் ஒவ்வொருவரும் விரதம் அனுஷ்டிக்கின்ற நாள். இன்றையநாள் இந்துக்கள் புனிதநீராடி இறந்த தந்தையரை நினைத்துப் பிதிர்க்கடன் செலுத்தி அவர்களுக்கு மோஷ்டம் கிடைக்கவேண்டுமென்று விரதம் அனுஷ்டிக்கின்றனர். அத்துடன் இறந்த எமது தந்தையருடன் நாம் நேரடித்தொடர்பு கொள்ளமுடியாது. அதனால் பிதிர்களைத் திருப்திப்படுத்தினால் அவர்கள் மகிழ்வடைந்து எமது தந்தையர்க்கு நன்மை செய்வார்கள் என்று நம்பப்படுகின்றது. அதன் மூலம் அவர்கள் சந்ததி புகழோடும் செல்வத்தோடும் நிறைந்த ஆயுளோடும் வாழும் என்றும் பிதிர்க்கடன் செலுத்தாவிட்டால், சாபத்திற்கு உள்ளாகி வம்சம் விருத்தியடையாது என்றும் சொல்லப்படுகின்றது. எள்ளும், தர்ப்பையும் கொண்டு பிதுர் தர்ப்பணம் செய்யவேண்டும் என்றால் எள்ளும் நீரும் கொண்டு பிதுர்களைத் திருப்திப்படுத்த வேண்டும் எனப்படுகின்றது. எள்ளும் தர்ப்பைப்புல்லும் விஷ்ணுவின் உடம்பிலிருந்து தோன்றியது. எனவே எள்ளைக் கொண்டு தர்ப்பணம் செய்கின்ற போது விஷ்ணு துர்த்தேவதைகளுக்குப் பரம எதிரி ஆனதால் எள்ளைப்பயன்படுத்துவதன் மூலம் துர்த்தேவதைகளிடமிருந்து பிதிர்களைக் காக்கமுடியும் என்று சொல்லப்படுகின்றது. 

    ஏதோ  ஒரு நம்பிக்கையுடனேயே எல்லாம் செய்துவிடுகின்றோம். அதைவிட பயம் உண்டாக்கிய மனப்படிவே காரணமாகிவிடுகின்றது. பிதிர்க்கடன் செய்யாவிட்டால் சந்ததி சாபத்துக்கு உள்ளாகிவிடும் என்னும்போது இந்துமதத்தவர்கள் அல்லாத மக்கள் எல்லோரும் சாபத்துடன்தான் வாழ்கின்றார்களா? என்ற கேள்வி எழுகின்றது. 

    அந்த ஒரு எள் உருண்டையுடன் பிதிர்கள் திருப்திப்பட்டுவிடுவார்கள். அதன்மூலமே நல்லது செய்வார்கள். அப்படியென்றால் எல்லாமே கொடுத்துவாங்கும் வியாபாரவழக்கம் தானா? எம்மிடம் நிலவுகின்றது. இவை கேலிக்கான கேள்விகள் இல்லை. என்னுள்ளே தோன்றுகின்ற வினாக்கள். அத்துடன் அதுபற்றி வேறு ஒரு பதிவிலும் குறிப்பிட்டுள்ளேன். பெற்றோரல்லாத மற்றைய உறவுமுறையினர் இறக்கும்பட்சத்தில் அவர்களுக்கு எந்தவித பூசைகளும் செய்வதில்லையாதலால் அவர்களுக்கு மோட்சமே கிடைப்பதில்லையா? அவை பாவப்பட்ட ஆத்மாக்கள்தானா? 

    அத்துடன் 20,30 வருடங்கள் தாண்டியும் மோட்ச அர்ச்சனைகள் செய்யும் போது (தர்ப்பை போட்டுச் செய்யும் அர்ச்சனைக்கு ஒரு கூலி, தர்ப்பை அற்ற அர்ச்சனைக்கு ஒரு கூலி) அந்த ஆத்மா மோடசம் செல்வதே கிடையாதா? பிள்ளையும் இறந்துவிட்டால், பேரப்பிள்ளைகள் அதைச் செய்வார்களா? இல்லையென்பதால், பிதிர் நிலைதான் என்ன? இல்லை இறந்தவுடன் வேறு மறுபிறப்பு எடுத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையின் படி மறுபிறப்பு எடுத்திருந்தால், உயிரோடு இருக்கும் ஆத்மாக்கு மோட்சஅர்ச்சனை செய்வதா?

    இறந்தவுடன் உடலை எரித்துவிடுகின்றோம். ஆத்மா வாழும் என்றால், அது வெறும் காற்று அதற்கு எதுவுமே தேவையில்லை. மனிதன் உடல் உறுப்புக்களும் அதனுள் உள்ள மின்னலைத்தாக்கங்களும், ஓமோன்களின் சுரப்புக்களும் அவற்றின் ஒன்றிணைந்த தொழிற்பாடும், சூழலுமே மனிதனின் வாழ்வு. அவர்களுக்குத்தான் தேவைகள் இருக்கின்றது. இது எதுவுமே அற்று காற்றுக்குத் தேவைதான் என்ன? 

    எம்மை வாழவைத்த தெய்வங்களான எமது பெற்றோர்கள் உயிரைவிட்டுப் பிரிந்தார்கள் என்றாலும் வாழும் வரை அவர்களை நினைத்திருப்போம். அந்நாளில் ஆதரவற்ற அநாதைகளுக்கு பெற்றோர் நினைவாக உதவிக்கரங்கள் நீட்டுவோம் என்பது மனிதாபிமானம். அதைவிட்டு இவ்வாறான மூடநம்பிக்கையில் நாம் வாழ்ந்து நமது பிள்ளைகளையும் அவ்வழியில் வாழவைத்தல் எவ்வகையில் நியாயமாகப்படுகின்றது. 


                    

    பெண்கள் விரதம் இருந்தால் மாங்கல்யபலம் பெற்று வாழ்வார்கள்.

    அழகாபுரிநாட்டு மன்னன் அழகேசன் வாரிசு இல்லாது தீர்;த்த யாத்திரை சென்றபோது புத்திரபாக்கியம் பெற்றான். அவன் மகிழ்ச்சியோடு இருந்த சமயத்தில் அவன் இளமைப்பருவத்தில் இறப்பான் என்று அசரீரி கேட்டது. அதன் பின் மனம் வருந்திய மன்னன் கோயில்கோயிலாகச் சென்று ஆலயதரிசனங்கள் செய்தபோது  உன் மகன் இறந்தபின் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்தால், மாங்கல்யபலத்தினால் உயிர்பெறுவான் என்று ஒரு குரல் கேட்டது. அதுபோல் அவன் இறந்ததும் பெற்றோரை இழந்த ஒரு பெண்ணை ஏமாற்றித் திருமணம் செய்து வைத்து ஒரு காட்டிற்குள் இறந்த உடலுடன் அவளைக் கொண்டுவிட்டுவிட்டனர். அப்பெண்ணும் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடிந்ததும் உண்மை தெரிந்து அழுதுபுலம்பி தெய்வங்களை எல்லாம் வேண்டினாள். அதன்படி அவனும் உயிர்த்தெழுந்தால், இது ஆடிஅமாவாசை தினத்தில் நடந்தது. எனவே இத்தினத்தில் விரதம் இருக்கும் பெண்களுக்கு ஒளி கிடைக்கும். மாங்கல்யபலம் கிடைக்கும் என்று சொல்லப்படுகின்றது. 

    இக்கதை வேடிக்கையாக இருக்கின்றது அல்லவா? பச்சைக் குழந்தைக்குச் சொல்லும் கட்டுக்கதையாக இருக்கின்றதல்லவா? முன்னோர் சொன்னார்கள் என்பதற்காக முழுவதும் நம்பிவிடல் நியாயமா? 

    இறந்த உடலுக்குத் திருமணம் செய்து வைத்ததே குற்றம். இவ்வாறு நடப்பது எந்தவகையில் சாத்தியமாகும். 

    கதை ஒருபுறம் இருக்க திருமணமான பெண்கள் இவ்விரதம் அநுஷ்டித்தல் ஆகாது. ஏனென்றால், தந்தைக்குத் தந்தையாகக் கணவன் இருக்கும் போது இவ்விரதம் அநுஷ்டித்தல் குற்றம் என்றும் சொல்லப்படுகின்றது. அப்படியானால், இக்கதை கற்பிக்கும் பாடம்தான் என்ன? தந்தையும் கணவனும் ஒன்றா? 

    தந்தை உயிரோடு இருக்கும் பிள்ளைகள் அன்றைய தினம் தலைமுழுகுவதற்குத் தடை செய்கின்றார்கள். ஏனென்றால், அது தந்தையின் உயிருக்குப் பாதிப்பாகும். 

    இவ்வாறெல்லாம் எம்மவர் மத்தியில் நம்பிக்கைகள் இருக்கின்றன. இதுபற்றிச் சிறிது சிந்தித்தாலே போதும். இவ்வாறான நாட்களில் சிறப்பான காரியங்களில் ஈடுபட்டு உயிரோடு வாழும் உன்னத உயிர்களுக்கு உதவிகள் செய்யலாம். அவ்வாறான நம்பிக்கைகளை எம்மவரிடம் ஊட்டுவோம். வாழ்வின் அர்த்தங்களைப் புரியவைப்போம்.

    நன்றி

    வியாழன், 10 ஜூலை, 2014

    இங்கிலாந்து பயண அனுபவங்கள்

    கப்பலில் ஏறினோம் காலேசைக் (cales) கடந்தோம் 
    இல்லமாம் கப்பலினுள் இருந்தே டோவர்(Dover) நகரை அடைந்தோம் 
    வழக்கமாய்ச் செல்லும்  பயணமே ஆயினும் 
    வழமைக்கு மாறான தகவல்கள் தந்த பயணமிது 
    விருந்தை நாடவில்லை விடயங்கள் நாடிய விடுமுறைப் பயணம் 

    கப்பலினுள் ஒரு காட்சி 

                                       
     இலங்கையின் நினைவில் பிரான்ஸ் நகரம்
     மின்சார கம்பிகள் வெளியே மின்னிய  காட்சி


    இங்கிலாந்தின் மிகப் பிரபலமான இயற்கை அடையாளங்களில் ஒன்று டோவர் வெள்ளைப் பாறை. சுண்ணாம்புக் கற்களாலான வெண்மைப் பாறை அழகுமிகு தோற்றப் கொண்டு அற்புதமாய்க் காணப்படும். 7௦ தொடக்கம் 1௦௦   மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட இப்பாறை பிரான்சையும் இங்கிலாந்தையும் பிரிக்கின்றது. மில்லியன் ஆண்டுகளுக்கு முற்ப்பட்ட மிருகங்களின் உருவங்களே படிவுகளாகி இப்பாறை வெண்மையாக உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. 


    calais க்கும் dover க்கும் இடையில் உள்ள தூரம் 22 மைல்கள். இங்கிருந்தபடியே தொலைநோக்குக் கண்ணாடியினூடாக பிரான்ஸைப பார்க்கலாம். 


    இதன் அருகாமையால் நடந்து செல்வது இன்பமாக இருக்கும் 


    பிரான்சுக்கும் dover க்கும் இடையில் மலையைக் குடைந்து புகையிரதபாதை அமைத்து இருக்கின்றார்கள். நீருக்கடியில் செல்கின்ற புகையிரத பாதை போக்குவரத்துக்கு இலகுவாக இருக்கின்றது 



    இப்பாதை அமைப்பதற்காக மலையைக் குடைந்த போது   எடுக்கப்பட்ட கற்களைக் கொண்டு கடற்கரை அமைக்கப்பட்டுள்ளது.

    Folkstone நகரத்தில் ஒரு கடற்கரை



    இரண்டாவது உலக யுத்தத்தில் தமது உயிரை மாய்த்த  வானப்படை வீரர்களின் பெயர்கள் அடங்கிய ஞாபகார்த்த நடுகல். 



    Tudor ஆட்சியின் போது  13 க்கும்  15 ம் நூற்றாண்டிற்கும்  இடைப்பட்ட காலப்பகுதியில்   கட்டப்பட்ட ஒரு வீடு. margate நகர்த்தில் அமைந்திருந்தது. இவர்கள் உயரத்தில் குறைந்தவர்கள் என்பதை அவ்வீட்டினுள் நுழைந்த போது அறியக்கூடியதாக இருந்தது.


    புதன், 2 ஜூலை, 2014

    பிள்ளைகளால் காதில் பூச்சூடப்படும் பெற்றோர்


    முக்காடிற்ற ஓர் பெண்ணின் மடியில் முகம் புதைத்துப் படுத்திருக்கும் தன் முதற் பிள்ளை நிலை கண்டு முள்ளென நெஞ்சில் ஓர் உணர்வு குத்தி வலித்தது. நடந்தே வைத்தியசாலை அண்மித்த அவள் நெஞ்சும் கால்களும் பாய்ந்தே அவன் படுக்கையை அண்மித்தது. ' Raus....|| மருத்துவமனை திடுக்கிடும்படிக் கூச்சலிட்டாள். ஆத்திரத்திலும் அவலத்திலும் அவசரத்திலும் வலியிலும் தாய்ப்பாஷைதான் நாவிலிருந்து தெறிக்கும். ஆனால், சுதன் தாய் ராதாவிற்கு ஜேர்மன் மொழியே வெளிப்பட்டது. ஏனென்றால், மகன் உறங்கிய மடி மொறொக்கோத் தாய் பெற்று வளர்த்த பெண்ணவள் பஞ்சுமடியல்லவா! தமிழில் கத்திப் பயனென்ன காணப்போகின்றாள். குதித்தெழுந்த ஹில்டா ஜக்கெட்டுக்குள் புகுந்து பாதத்தைச் சிறகாக்கி அவ்விடம்  விட்டுப் பறந்து போனாள். 

                மகனிடம் வந்தாள் ராதா. 

    'என்ன இது? யாரது? மகனிடம் வார்த்தைத் தீயை ராதா  கக்கினாள்.

    'என்னுடைய ப்ரெண்ட்|| 

    பெற்றோரின் காதில் பூச்சூடும் பிள்ளைகளே கூசாமல் பொய் சொல்வதில் திறமைசாலிகள். ஒரு மனிதனுக்கு நம்பிக்கைத்துரோகம் செய்யும் கடுமையான எதிரி பிள்ளைகளே. இது புரியமலே பெற்றோர்கள் பிள்ளைகளில் நம்பிக்கை வைக்கின்றனர். 

    'போதும்டா...... உன்னுடைய பொய். நான் என்ன விசரி என்று நினைத்து நடக்கின்றாயா? ....|| இது தாயின் புலம்பலானது. 

    விறுவிறென்று அறையை விட்டு அகன்றாள் தாய் என்னும் பாவப்பட்ட நெஞ்சம். வழியெல்லாம் கோயில் திருவிழாக்களில் தோளில் விக்கிரகம் சுமந்து சென்ற தன் மகன் காட்சியே நிழலாடியது. ஏன் இப்படிச் செய்தான். மீண்டும் மீண்டும் எழும் வினாவிற்கு விடைகாண முடியாத ஏக்கம் அவள் இதயத்தைப் பிழிந்தெடுத்தது. அவளால் ஜீரணிக்க முடியாத ஒரு தாக்கம் அக்காட்சியில் அடங்கிக் கிடந்தது. எப்படியும் வீட்டிற்கு வரத்தானே போகின்றான். அப்போது பார்ப்போமென கங்கணம் கட்டியது மனது. 

    தமிழர்கள் மத்தியில் பெரும் குறையாகக் காணப்படுவது. கௌரவப்பிரச்சினை. தமது பிள்ளைகளைப் பற்றி உயர்வாகப் பேசுவதை பெரிதாக எண்ணும் மனம், குறைகளை வெளிப்படுத்த விரும்புவதில்லை. முற்போக்கு சிந்தனை பற்றி பலர் மத்தியில் முன்னெடுத்துப் பேசினாலும் தனது வாழ்க்கையில் முற்போக்குச் சிந்தனைக்கு இடமளிப்பது இல்லை. உண்மைகள் மனதினுள் உறங்கிக் கிடக்க பொய்மையை பாலம் போட்டு அதன் மேல் நடந்து கொண்டே உண்மைக்கு மாறான பொய்யைப் புடம்போட்டு வெளிக் கொண்டுவரும் கெட்டித்தனம் மிக்கவர்கள். உண்மைக்கு முகம் கொடுக்க மாட்டாது. அதிலிருந்து மீளவும் முடியாது தள்ளாடித் தள்ளாடி மனநோயாளியாகி மாள்கின்றனர். 

    மருத்துவமனை விடுப்புப் பெற்று வீடு வந்த மகனிடம் எதுவுமே பேசாது சிலநாட்களை ராதா ஓடவிட்டாள். மனம் திறந்து மகன் ஏதாவது கக்குவான் என காத்திருந்தாள். அவனோ மௌமாகவே மனதை வெளிப்படுத்தாது காலம் கடத்தினான். பொறுமையை இழந்த ராதாவும் வாய் திறந்தாள். 

    'யாரவள்.....?

    மீண்டும் அதேபதில். தன்னுடன் கல்வி கற்கும் சிறந்த நண்பி.

    'அவள் மடி உனக்கு பஞ்சு மெத்தையா?||

    'இதிலென்ன இருக்கிறது. இன்னும் நீங்கள் இலங்கையில்தான் இருக்கிறீர்கள். சும்மா எல்லாவற்றிற்கும் சந்தேகம் பட்டுக்கொண்டு...... நாங்கள் அப்படித்தான் பழகுகின்றோம். சும்மா ஊர் பஞ்சாயம் எல்லாம் இங்கே கொண்டு வருகின்றீர்கள். நாங்கள் அப்படியெல்லாம் பழகுவதில்லை. இப்படி ஒருநாளும் நினைக்காதீர்கள்||

    பாவப்பட்ட தாய் மனது தனக்குள்ளேயே சாந்தியடைந்தது. பூசை புனக்காரம் விரதம் திருவிழாக்கள் என்று வாழ்நாளை ஓட்டிக்கொண்டிருக்கும் ராதாவிற்கு அவன் வார்த்தை தென்றலாய் மனதைத் தீண்டியது. இந்துமத காரியங்களில் மனம் ஈடுபட்டதனால், மாற்றுமத சிந்தனை பற்றி அறியாத மனம் எதையும் ஆழமாகச் சிந்திக்கத் தயங்கியது. 

    கால ஓட்டத்தில் மகன் வார்த்தைகளில் இஸ்லாமிய சிந்தனைகள் பிரதிபலிப்பதை ராதா உணர்ந்தாள். காதலின் வேகம்தான் மகன் கவனத்தை இஸ்லாம் பக்கம் திருப்பியதோ என்னும் எண்ணப்போக்கு ராதாவிற்கு மாறியது. சொற்களின் கோர்வை சொல்லும் விடயங்கள், உலகத்திலேயே சிறந்த மதம் இஸ்லாம். இறுதியில் தோன்றினாலும் இணையில்லாப் பெருமைகளைக் கொண்டு நின்று நிலைக்கும் உண்மை மதமும் அதுவே. இந்து மதம் என்றும் கேள்விக்குறியாக இருக்கும் மதம். உருவவழிபாட்டுத் தத்துவங்கள் அனைத்தும் பொய். இவ்வாறு அடிக்கடி அவன் வாயிலிருந்து தோன்றும் வார்த்தைகள் ராதாவிற்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. 

    இரகசிய உளவுத் தொழிலை மேற்கொண்டு மகன் யாருமறியாவண்ணம் இஸ்லாம் மதத்தைக் கைக்கொள்ளும் விடயத்தை  அறிந்துகொண்டு கோபக்கனல் கக்கினாள். தனக்குக் கீழேயுள்ள சகோதரிகள் நிலைமையைச் சற்றும் எண்ணாது தன் சுயநலத்தை மட்டும் கருதி மதம் மாறிய மகனில் வெறுப்பைக் கக்கினாள் ராதா. மகனுக்குப் புத்திபுகட்டும்படி நண்பர்கள், மதகுருக்கள் அனைவரின் உதவியையும் நாடினாள். 

    ஆனால்;;;, சுதன்

    'நானென்ன கொலை செய்தேனா? களவு செய்தேனா? மது அருந்தினேனா? பிறர் குடியைக் கெடுத்தேனா? எனக்குப் பிடித்த மதத்தில் மாறினேன். அதற்குக் கூட எனக்குச் சுதந்திரம் இல்லையா? என மதத்தில் மதம் பிடித்து தன் செய்கைக்கு விளக்கும் போதித்தான். 

    காதலில் விழுந்ததாலேயே மதம் மாறவேண்டிய சூழ்நிலை உனக்கு ஏற்பட்டிருக்கின்றதா? என கேட்ட கேள்விக்கு. யாரையும் காதலிக்கவில்லை என அடித்துச் சொன்னான். அதனால், சிறது ஆறதலடைந்த தாயும் காலமும் தன் கடவுள் பக்தியும் தன் மகனை மாற்றும் என்ற நம்பிக்கையில் ஷஷஅடிமேல் அடி அடித்தாள் அம்மியும் நகரும்|| மகனின் மனம் தான் நகராதோ என்று எண்ணி வார்த்தை அடிகளால்  வழமையாக நாளும் அடிக்கத் தொடங்கினாள். 

    ஆனால், இடியே விழுந்தாலும் நான் நானாகவே இருப்பேன் என்று இதயம் நெகிழாத சுதனும் வாசல்படி தாண்டினான். அவன் மனதுள் அடைத்து வைத்திருந்த உண்மை வழியில்லாது நாளாக வெளிப்பட்டது. நச்சுப்பாம்பு நஞ்சைக் கக்கியதுபோல் நாடகமாடிய பொய்நடிப்பு வெளிப்பட்டது. ஹில்டாவை திருமணம் செய்த உண்மையை வெளியிட்டான். 
    கொதித்தெழுந்த ராதாவாள், குளிர்வடைய முடியவில்லை. 

    'போடா! வெளியே....... என் கண்ணிலும் முழிக்காதே....... இனி நான் உனக்கு தாய் இல்லை...... இவ்வளவு நாட்களும் நாடகமாடி என்னை ஏமாற்றிக் கொண்டு இந்தவீட்டினுள் நடமாடியிருக்கின்றாயே! என்ன மனஅழுத்தக்காரன் நீ. உனக்குப் பின்னே இருக்கும் உன் சகோதரிகளை நினைத்துப் பார்த்தாயா? சுயநலக்காரன். உன் தேவைகள் எல்லாம் எம்மிடமிருந்து நிறைவேற்றிவிட்டு உன் பொறுப்புக்கள் ஏற்கும் காலத்தில் எல்லாவற்றையும் நினைத்துக் கூடப் பார்க்காமல் உனது விருப்பத்தை நிறைவேற்றிவிட்டாயா? உனக்கென்ன ஒரு குடும்பமாகும் வயதா? படிக்கின்ற பாலகன் நீ......||

    'இப்ப என்ன பிரச்சினை. நான் கல்யாணம் செய்தேன் என்றேன். அதற்காக என் தங்கச்சிமாரைப் பார்க்கமாட்டேன் என்றேனா? 

    'இப்படியான குடும்பம் என்று யார் இவர்களைத் தீண்டப் போகின்றார்கள்|| என வெறுப்புடன் பகர்ந்தாள் ராதா. 

    'இது என்ன பெரிய பிரச்சினை அம்மா. எனக்குப் பிடித்தவளை நான் கல்யாணம் செய்ததுபோல். அவர்களுக்குப் பிடித்தவர்களை அவர்கள் செய்வார்கள். திருமணம் என்பது அவரவர் தீர்மானிப்பது. இதை ஒரு பிரச்சினையாக நீங்கள் ஏன் எடுக்கவேண்டும். எனக்கு இந்த மதம் பிடித்திருக்கின்றது. அதைப்பற்றிக் கதைப்பதற்கு வேறுயாருக்கும் சுதந்திரம் இல்லையே. இது எனது வாழ்க்கை நான்தான் வாழப் போகின்றேன். அதில் தலையிடுவதற்கும் புத்தி சொல்வதற்கும் யாருக்கும் உரிமையில்லை|| தன் பக்க நியாயம் பேசினான். 

    தமது வாழ்வுக்குப் பொருந்தாத மகனைத் தூக்கி எறிந்தாள் தாய். அவனைத் திரும்பவும் தன்னுடன் இணைத்துக்கொள்ளத் தற்போது அந்தத் தாய்மனம் இடம் கொடுக்கவில்லை. காலம்தான் இக்குடும்பநிலைமைக்கு வழிசொல்லும். 

    தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்த தமிழர் பலர், தம்மைப்பாதுகாத்துக் கொள்ளவும், வருமானத்தைப் பெருக்கவும், வசதிவாய்ப்பபுக்களுடன் வாழவும் விரும்புவதுபோல் பரம்பரைப்பழக்கவழக்கங்களை விட்டெறிய விரும்புவதில்லை. பேச்சுக்கு வாழ நினைத்தாலும் அவர்களால், வாழமுடிவதில்லை. அண்மைய காலங்களில் மதமாற்றம் கட்டுக்கடங்காது போவது யாவரும் அறிந்ததே. பெற்றோர் தாம் கடைப்பிடித்து வந்த மதத்தை தமது பிள்ளைகளும் தொடர வேண்டும் என்று நினைக்கின்றார்கள். ஆனால், பிள்ளைகளோ தமது நண்பர்கள் மத்தியில் கடைப்பிடிக்கப்படும் மதமே சிறந்த மதமென்று கருதி பெற்றோர் விருப்புக்கு வில்லங்கத்தை ஏற்படுத்துகின்றனர்.  

    இவ்வேளையில் மதங்கள் ஒன்றிணைவது மட்டுமல்ல, நாடுகளும் ஐரோப்பிய மக்களிடையே ஒன்றிணைகின்றன. பல நாட்டு மக்களுடன் ஒன்றிணைந்து வாழ வேண்டிய சூழ்நிலை புலம்பெயர் வாழ்விலே ஏற்படுகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் கலாச்சாரம் பண்பாடு என்று கட்டிக்காக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மத்தியில், உலகஇனங்கள் பல ஒன்றிணையும் கல்விச்சாலையில் கல்வி பயிலும் மாணவர்களிடையே ஏற்படும் மன ஈர்ப்பைக் கட்டுப்படுத்த முடியாது போகின்றது. எதிர்காலம் இனமத பேதமற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கும் என்பது அறியக்கூடியதாக இருக்கின்றது. ஆனால், இன்றும் மதப்பற்றுக் கொண்டவர்களிடையே இத்தன்மையை ஏற்றுக்கொள்ள முடியாது போகின்றது. அதேவேளை ஒருங்கிணைந்த மதசமுதாயத்தினரிடையே வாழும் பிள்ளைகளுக்கும் இதை ஏற்றுக் கொள்ளமுடியாது போகின்றது. இதனால், பெற்றோரும் ஒருவகையில் பாதிக்கப்படுகின்றனர். பிள்ளைகளும் ஒருவகையில்  அவமானப்படுகின்றனர். 

    கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்போது விட்டுக்கொடுப்புக்கள் இருசாராரிடமும் இடம்பெறும்போது இவ்வாறான மனக்கிலேசங்கள் இடம்பெற வாய்ப்புக்கள் குறையும் என்று கருதுகின்றேன். எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பது எம்மால் பார்க்கமுடியாது போகும் என்பது நியதி. அதனால், அது எதிர்கால தலைமுறையினரின் கையில்தான் தங்கியிருக்கின்றது. 

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...