வாகனத்திறப்பை மறந்ததனால் வீட்டினுள் அவசரத்தில் ஓடிவரும் கணவன், வீட்டினுள் அழகுக்காய் வைக்கப்பட்டிருந்த பூச்சாடியைத் தட்டி விழுத்தி விடுகின்றார். அது உடைந்து சிதறுகின்றது. '' ஏய்' நடைபாதையில் தான் உன் அலங்காரங்களோ? எங்கே எதை வைப்பதென்று தெரியாதா? எருமை. என்று மனைவியைத் திட்டுகின்றார். தொடர்ந்த மனைவியும் '' நீங்கள் எப்போது நிலத்தைப் பார்த்து நடந்திருக்கி;ன்றீர்கள். நிதானத்தை மூளையில் வைத்தால் தானே' என்று கத்தத் தொடங்குகின்றாள். இவ்விடயத்தையே ''ஐயோ அவசரத்தில் வரும் வேகத்தில் இதைத் தட்டிவிட்டேனே.' ஏன்று கணவனும். ''நடைபாதையில் பூச்சட்டியை வைத்தது எனது பிழை தான்' என்று மனைவியும் அவரவர் தத்தமது பிழைகளைத் தாமே உணாந்தது எந்த வீட்டில் எப்போது நடந்திருக்கின்றது? வாழ்க்கைப் பயணத்தில் பழிபாவம் படராது பண்புள்ளவராய் ஒருவர் வாழ தன்னைத் தானே பரிசீலனை செய்தல் அவசியம்.
அடுத்தவரில் குற்றம் கூறியே பழக்கப்பட்ட நாம், எம்மைப்பற்றி ஒருகணம் எண்ணிப்பார்க்கின்றோமா? இல்லை அடுத்தவர் நிலையில் நாம் நின்று அவரைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கின்றோமா? தன் மனைவி சிலம்பில் உள்ளது முத்துப் பரல்களா? மாணிக்கப் பரல்களா? என்று பரிசீலனை செய்து பார்க்காது தீர்ப்பு வழங்கிய பாண்டிய மன்னன் மதுரை எரியக் காரணமாகினான். துரியோதனன் குணமறியாது நட்புப் பூண்ட கர்ணன், கண்ணன் சூழ்ச்சிக்கு ஆளாகினான். அனைத்திற்கும் நாம் தானே காரணம். முதலில் நாம் பரிசீலனை செய்யவேண்டியது எம்மை.
''சுட்டும் விரலால் எதிரியைக் காட்டிக் குற்றம் கூறுகையில்
மற்றும் மூன்று விரல்கள் உந்தன் மார்பினைக் காட்டுதடா' இப்பாடல் வரிகளில் சைகை மூலம் நாமே எம்மை அறியாது நமது குற்றத்தைப் பரிசீலனை செய்யப் பணிக்கப்படுகின்றோம்.
வளமாக வாழ்தற்குரிய கல்வியைக் கற்பித்து, வாழ்க்கைப்பாடம் போதிக்கும் அறநூல்கள் தன் மகளுக்குக் கற்பிக்காது விட்ட தாயார், புது வாழ்க்கை தொடங்கி சிறப்பாக வாழத் தனது மகளை மருமகனுடன் அனுப்பி விட்டு நிம்மதியாக வாழ நினைத்த அடுத்த வருடமே வாழ்க்கைத்துணை, என் வாழ்வுக்குப் பொருத்தம் இல்லாதவன் என அவனை உதறித் தள்ளி விட்டு வரும் மகளை நினைத்து வேதனைப்படுவதில் என்ன பலன் இருக்கின்றது. கணனியூடாகக் காதல் வலையில் அகப்பட்டுப் பின் கதிகலங்கும் பெண்ணானவள், காயப்படுத்தியவனை கரிந்து கொட்டுவது முறையோ? தான் விட்ட பிழையை நினைத்து தன்னைத் திருத்துக் கொள்வது தான் தருமம்.
அடுத்தவர் தவறைப் பற்றி ஆழமாக விமர்சனம் செய்யும் நாம் முதலில் அவராக மாறுவோமா? அவர் மனநிலையில் நின்று தவறைப் பரிசீலனை செய்வோமா? எம்மைப் பற்றி ஒரு நிமிடம் சிந்திப்போமா? வாழ்க்கைப் பாதையில் பண்புள்ளவராய் தொடர்வோமா?