நாம் எமது ஐம்புலன்களினால் பெறுகின்ற இன்பத்தைவிட இலக்கிய இன்பம் பெருமை பெற்றது. அதை அப்படியே ஏற்று சுவைத்து இன்புறுவோரும் உண்டு. வாழ்க்கைக்குத் தேவையான மெய்யுணர்வைக் கொண்டு ஆராய்ந்து பார்த்துப் பொருள் கொள்வோரும் உண்டு. இலக்கியத்தில் இன்பம் பெறுவோர் கம்பரைத் அறியாதிருக்க மாட்டார்கள். கம்பன் கற்றவர்க்கும்;;;, கற்பனை சுவை சுவைத்து இன்புறுவோர்க்கும் சுவாரஸ்யமானவர் மற்றவர்க்குச் சிதம்பரசக்கரம் போலாவார்.
இக்கம்பன் இலக்கியச்சுவை சில கண்டு இன்புற்று அவர் அகவாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றையும் எடுத்துக்காட்டி உலகுக்கு அறிவுரை பகரும் ஒரு கவிச்சக்கரவர்த்தி வாழ்வியலில் எவ்வாறு வேறுபட்டுள்ளார் என எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடையேயுள்ள வேறுபாடு பற்றியும் இக்காலப் பண்புகளுடன் இவை எப்படி ஒன்றுபடுகின்றன எனவும் சற்று சிந்தித்துப் பார்ப்போம்.
கம்பர் கவிச்சக்கரவர்த்தி என்று போற்றப்பட்டவர். நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளை அவர்கள் ''கம்பர் இலக்கியச்சுவை நுகரநுகர இன்பம் பயக்கும் உள்ளத்திலும் தேனூறும்'' என்று கூறுகின்றார். இக்கம்பர் தமிழ் இலக்கியவரலாற்றிலே சோழர்காலப்பகுதி என்று சொல்லப்படும் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு பிற்பகுதி முதல் பதினான்காம் நூற்றாண்டு வரையுள்ள காலப்பகுதியில் வாழ்ந்தவர். இக்காலப்பகுதியில் அரசியல் தழைத்தோங்கிய காலம், செல்வச்சிறப்பு மிக்க காலம். இக்கால வாழ்வியல் இலக்கியங்கள் போல் அக்காலத்தில் உலகியலைச் சிறப்பித்துக் கூறும் இலக்கியங்கள் தோன்றின. கம்பர் இயற்றிய காவியம் தன்னிகரில்லாத் தலைவனை எடுத்துரைப்பதாய் இருந்தமைக்கு இதுவே காரணமாய் இருந்திருக்க வேண்டும். ஒரு தலைவனுடைய வாழ்க்கைவரலாற்றை எடுத்துக் கூறுமுகத்தால் மக்களுடைய நல்வாழ்விற்குக்கு இன்றியமையாத அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருளையும் எடுத்துரைக்கும் இலக்கியம் காவியம் அல்லது காப்பியம் எனப்படுகின்றது. மக்களுடைய நல்வாழ்வுக்கு இன்றியமையாத அறிவுரைகளை இலக்கியச்சுவை சொட்டுச் சொட்ட இராம கதை மூலம் கம்பரால் கம்பராமாயணம் இயற்றப்பட்டது. சொல்நயம், ஓசைநயம், கற்பனைநயம் என பல நயங்கள் எல்லாம் தன்னகத்தே கொண்ட கம்பராமாயணம் ஒரு கடல். அதில் மூழ்கி எடுப்பவை எல்லாம் முத்துக்கள். பாக்களின் சுவைகள் பலாக்கனியின் தேன் சுவைகள். அதில் ஒரு அற்புத சொல்நயம் ஒன்றை ரசிப்போம்
சொல்நயம்:
அஞ்சு வணத்தின் ஆடையுடுத்தாள், அரவெல்லாம்
அஞ்சு வணத்தின் வேகமிகுத்தாள், அருளில்லாள்
அஞ்சு வணத்தின் உத்தரியத்தாள், அலையாரும்
அஞ்சு வணத்தின் முத்தொளிர்ஆரத் தணிகொண்டாள்.
இப்பாடலில் அஞ்சுவணம் என்னும் ஒரு சொல் வேறுவேறு பொருள் கொடுத்து நயம் காட்டுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. முதலாவதில் ஐந்து நிறங்கள், என்றும், அடுத்து அஞ்சும் உவணம் அதாவது அஞ்சுகின்ற கருடன் என்றும் பொருள் தந்தது. அடுத்து அம்சுவர்ணம் என அழகிய பொன் எனப் பொருள் கொண்டது. அடுத்து அம்சுவள் நத்தின் எனப் பிரிந்து அழகிய பெரிய சங்கு எனப் பொருள் கொள்ளப்பட்டது. இதன் பொருளை எடுத்துநோக்கினால், ஐந்து நிறங்களில் ஆடையுடுத்தாள், பாம்புகள் எல்லாம் கண்டு நடுங்கும் கருடனின் வேகத்தைக் கொண்டவள், அழகிய பொன் கொண்டு செய்யப்பட்ட மேலாடையை அணிந்தவள், கடல்நீரில் தோன்றிய அழகிய பெரிய சங்கிலுண்டான முத்துக்களினால் செய்யப்பட்ட ஒளி பொருந்திய மாலையை ஆபரணமாக அணிந்தவள் என இலங்காதேவியைக் கம்பன் சொல்நயம் மிக்க பாடல் மூலம் வர்ணிக்கின்றார்.
இதேபோல் இவர் காவியத்தில் வருகின்ற ஒரு பாடலில் படிக்கும் போதே ஓசைநயம் மிக்கு இருக்கின்ற ஒரு பாடலை எடுத்துநொக்குவோம்.
ஓசைநயம்:
உறங்கு கின்ற கும்பகன்ன
உங்கள் மாய வாழ்வெலாம்
இறங்கு கின்ற தின்றுகாணெ
ழுந்தி ராயெழுந் திராய்
கறங்கு போல விற்பிடித்த
கால தூதர் கையிலே
உறங்கு வாயு றங்குவாயி
னிக்கி டந்து றங்குவாய்
கும்பகர்ணனை யுத்தத்திற்கு அழைக்கும் பாடலை ஒரு தடவை உச்சரித்துப் பாருங்கள். அதன் ஓசைநயம் நன்கு புரியும்.
இவ்வாறு சுவைகள் எல்லாம் கொட்டிக்கிடக்கும் கம்பராமாயணத்தை இக்காலப்பகுதியிலும் கம்பன் கழகம் வைத்துப் பலவாறாகப் போற்றிப் பாடுகின்றார்கள். பலவாறாக ஆராய்ந்து இன்புறுகின்றார்கள்.
இக்கம்பராமாயணம் தந்த கம்பர் சற்றுத் தலைக்கனம் மிக்கவர் என்று அறியப்படுகின்றார். சிலம்பி என்னும் ஒரு விலைமகள் கம்பனிடம் ஒரு கவி புனைந்து தரும்படிக் கேட்டாளாம். ஆயிரம் பொன் தருவாயா என்று கம்பர் அவளைக் கேட்டிருக்கின்றார். என்னிடம் ஆயிரம் பொன் இல்லை ஐந்நூறு பொன்னே இருக்கின்றது என்று சிலம்பி கூறியிருக்கின்றாள். அதை வாங்கிய கம்பர்
தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவ துஞ்சோழ மண்டலமே
என ஒரு வெண்பாவை அரைவாசியாகப் பாடிவிட்டு அதனை முடிக்காமல் சென்றுவிட்டார். இப்பரத்தை அப்பாடலைக் கொண்டு அடுத்தநாள் ஒளவையாரை கண்டபோது இப்பாடலை முடித்துத் தாருங்கள் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டாள். ஒளவையும்
...........................................................பெண்ணாவாள்
அம்பொற் சிலம்பி யரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு.
எனப்பாடி முடித்துப் பழங்கஞ்சி வாங்கிக் குடித்துவி;ட்டுச் சென்றாராம். இச்சம்பவத்தின் பின் என் சஞ்சலம் விரிகிறது. ஒரு இலக்கிய கர்த்தா தமிழின் மேல் கொண்டுள்ள பற்று பணத்திற்கு விற்கப்பட்டதா? பொன்னையும் பொருளையும் மன்னர்கள் அள்ளி வழங்குவதற்காக, அவர்கள் புகழை மிகைப்படுத்திப் புலவர்கள் பாடியிருப்பது யாவரும் அறிந்ததே. இந்நிகழ்வு கம்பரில் வைத்திருந்த எண்ணத்திற்குப் பங்கம் விழைவிக்கின்றது.
ஒரு இடத்தில் இரட்டையர்கள் பாடுகின்றார்கள்
குன்றுங் குழியுங் குறுகி வழிநடந்து
சென்று திரிவதென்றுந் தீராதோ – ஒன்றுங்
கொடாதானைக் கோவென்றுங் காவென்றுங் கூறின்
இடாதோ நமக்கிவ் விடர்.
பரிசில்கள் யாதொன்றும் வழங்காத மன்னனை யாம் புகழ்ந்து பாடியதனாலேயே இவ்வாறான நிலைமை எமக்கு ஏற்பட்டது. அப்படியானால் பரிசில்கள் பெறுவதற்காக மன்னர்களைப் பலவாறாகப் புகழ்ந்து பாடிப் பொன்னையும் பொருளையும் பெற்றுக் கொண்டு சென்ற புலவர்கள் பாடிய பாடல்கள் அக்காலச் சூழலை எடுத்துக் காட்டும் கண்ணாடி என எப்படி நாம் எடுத்துரைப்பது.
ஒளவை ஒரு பாடலிலே மன்னன் அதியமானைப் புகழ்ந்து பாடும்போது மாற்றரசனை வெட்டிவெட்டி மழுங்கேறிய கத்தியையுடைய மன்னனே என்று பாடுகின்றார், அவ் அரசனின் கண்கள் தன்பிள்ளையைப் பார்த்தபோதும் சிவப்பாகவே இருந்தனவவாகப் பாடுகின்றார். அதாவது செறுவரை நோக்கிய கண் தன் சிறுவனை நோக்கியும் சிவப்பனவே இவை போன்ற பாடலின் மூலம் போர் வெறியைத் தூண்டும் பாடலைப் பாடிப் பாடி வீர உணர்ச்சியை ஊட்டிப் பல உயிர்களைச் சூறையாடச் செய்து பரிசில்களைப் புலவர்கள் பெற்றுச் சென்ற செயலானது அப்புலவர்கள் பின் நீதிநூல்களைப் பாடியிருந்தும் அதன் பயன்தான் என்ன இருக்கின்றது என எண்ணத் தோன்றுகின்றது அல்லவா! அவ்வாறே இக்காலத்திலும் தமக்கு ஒரு சலுகை, புகழ், ஆதாயம் வரும் என நம்பிப் பலர் உணர்வு மிக்க வரிகளைப் பயன்படுத்திப் பாடல்கள் பாடுவதும், கவிதைகள் வடிப்பதும் நோக்கமாக்க கொண்டிருக்கின்றார்கள்.
அக்காலத்திலும் புலவர்களிடையே போட்டியும் பொறாமையும் இழையோடிக் காணப்பட்டன. ஒளவையும் கம்பரும், ஒட்டக்கூத்தரும் புகழேந்தியும் ஒருவருக்கொருவர் போட்டியாக வாழ்ந்துள்ளார்கள் என ஆதாரம் காட்டக்கூடியதாக இருக்கின்றது. அவ்வாறே இக்காலத்திலும் எழுத்தாளர்களிடையே போட்டியும் பொறாமையும், எழுத்துக்களிடையே காணப்படும் தவறுகளைச் சுட்டிக்காட்டமாட்டாமல், புகழ்வதும், தமிழின் இலக்கண மரபுகளுக்கு பங்கம் ஏற்படும் எழுத்துக்களைக் கண்டுகொள்ளாமல் தமிழாராய்வாளர் வாய் மூடியிருப்பதுவும் தமது பாராட்டுக்களுக்குப் பங்கம் வந்துவிடும் என்னும் சுயநலமே ஆகும். இச்செயலும் அக்காலப் புலவர்கள் பொன்னுக்கும் பொருளுக்கும் தூற்றிப் பாட வேண்டிய இடங்களில் போற்றிப் பாடிய செயலுக்கு ஒப்பாக அமைகின்றன. தவறுகளைச் சுட்டிக்காட்டும் தைரியம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும். அப்போதுதான் எழுத்துக்களில் தூய்மையைக் கொண்டுவர முடியும். செயலிலே நல்ல உணர்வுகள் விதைக்கப்படும். சுட்டிக்காட்டும் தவறுகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் மக்களிடம் ஏற்பட வேண்டும். மெய்மைக்கு இடமளிக்க நாமும் மெய்யாய் வாழவேண்டும்.
இனி விட்ட இடத்திற்குத் தொடருகின்றேன். உலகுக்கு நீதி சொல்லிய கம்பர் ஆயிரம் பொன்னுக்குத் தன் பாடலைப் பேரம் பேசி; அரைவாசி பணம் கிடைத்தமையால் அரைவாசிப் பாடல் பாடிச் சென்றிருக்கும் சம்பவம்; இலக்கிய கர்த்தாக்களுக்கு எவ்வாறு உணரப்படுகின்றது. சொல்லும் செயலும் ஒன்றானால் உலகம் சொல்லும் உன் பெயர் என்னும் ஒரு வாக்கை நான் எழுதியிருந்தேன். ஏனெனில் உலகுக்கு ஒரு செய்தியை நாம் சொல்லும் முன் நாம் அதுபோல் நடக்க வேண்டும். இதனையே பரிசுத்தம் என்பார்கள். இங்கு கம்பர் செயல் என்னைக் கலங்க வைக்கின்றது. இது பற்றி அறிந்த இலக்கியவாதிகள் உங்கள் கருத்துக்களை இதில் பதிவிடுங்கள்.