• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

    கண்ணுக்கு ஏன் கறுப்புக் கண்ணாடி?


     



    வாசல் கதவை விரைவாய்த் திறந்து ஓடி வந்த பவித்ரா, விசையாகத் தன் கைப்பையைச் சுழட்டி எறிந்தாள். கட்டிலில் சடாரென்று விழுந்தாள். வெம்மி நின்ற அழுகை வெடித்தது. அடக்கமுடியாத கண்ணீர் மடைவெள்ளம் திரண்டதுபோல் தாரைதாரையாகத் தலையணையை நனைத்தது. விரக்தியின் விளிம்பில் நின்று விசும்பினாள். 

          பவித்ரா அழகுப்பெண். திருமணநாளுக்காய் நாள்களை கணக்கிட்டுக் கொண்டிருக்கும் கனவுக் கன்னி. கௌரவமான குடும்பம், வெளிப்படையான போக்கு, பெற்றோர் பேச்சுக்கு மறுப்புக் கூறி அறியாத பண்பு. கல்லூரிப்படிப்பைக் கச்சிதமாய் முடித்தபோது பெற்றோர் முடிவுசெய்த திருமணத்திற்குத் தலைசாய்த்து நின்றாள். 

          அன்புமகள் விசும்பலில் கலவரம் அடைந்த தாய் பதட்டத்துடன் ஓடிவந்து மகளைத் தொட்டது தான் தாமதம், சடாரென்று எழுந்தாள் பவித்ரா தாயின் தோளில் முகம் புதைத்து விக்கி, விக்கி அழத் தொடங்கினாள். காரணம் புரியாத தாய், என்ன என்ன நடந்ததென ஆரவாரமாய் அவசரப்பட்டுக் கேட்டாள். கண்ணீரை இரு கைகளினாலும் துடைத்துவிட்டுத் தாயை விறைத்துப் பார்த்தாள். சுட்டெரித்தன கண்கள். சொற்களில் இயலாமை கலந்திருந்தது.  ||நான் ஏன் தமிழ்ப் பெண்ணாகப் பிறக்க வேண்டும். நீங்கள் ஏன் இங்கு வந்து வாழவேண்டும். ஏனிந்த நாட்டில் என்னைப் பெற்றெடுக்க வேண்டும் நான் வாழ்வதா? சாவதா? விளக்கம் புரியாத தாய் கண்களைச் சுருக்கினாள். பவித்ரா கைப்பையிலிருந்த கடிதத்தைத் தன் தாயிடம் நீட்டினாள். கடிதவரிகளில் தன் பார்வையைப் புதைத்தாள் தாய்,

    அன்புள்ள பவித்ராவிற்கு,

    நான் அதிகம் எழுதவில்லை. கோப்பிக்கடையில் 4,5 Boys உடன் இருந்து நீ கதைத்துக் கொண்டிருந்ததாக எங்கள் நாட்டவர் எங்கள் வீட்டாரிடம் கூறியிருக்கின்றார்கள். இதைவிட வேறும் கூறப்பட்டிருக்கின்றது போல் தெரிகின்றது. இன்றுடன் எங்கள் திருமணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாயிற்று. உன்னைப்போல் தானே நானும் பாசம் என்னும் வேலியினுள் அடைக்கப்பட்டவன். வேலியை மீறி வர என்னால் முடியாது. மன்னித்துவிடு. 

    அன்புடன்
    ரவி

    கடிதத்தை வாசித்து முடித்துவிட்டு நிமிர்ந்தாள் தாய். அவள் விரல்கள் மகளின் கண்ணீருக்குச் சமாதி கட்டியது. நான்கு கண்களும் நிலைக்குத்தி நின்றன. 'கண்ணீர் விட்டு அழும் கோழையையா என் வயிறு என் வயிறு சுமந்தது. உன்னில் நான் வைத்திருப்பது நம்பிக்கை. அடுத்தவர் பேச்சையெல்லாம் நம்பி அவற்றுக்கெல்லாம் ஆமாப்போடும் அழுக்குமனம் படைத்தவன் தாலிக்கு உன் தலை நீட்டப்படுவது அவமானம். மானம் காக்க மரக்கிளையையை வேண்டிநின்ற 
    காலப்பகுதியில் நாம் வாழவில்லை. கையைப்பிடித்தால் பிள்ளைபிறக்கும் என்னும் அறியாமை இருளில் உன்னை வளர்க்கவில்லை. சொந்த நாட்டைவிட்டு வந்த நாட்டிலும் நமது இனம் வக்கிரபுத்தியில் வாழ்வதைக் கண்டுகொள்ளாத அடிமட்டமானவர் அல்ல உன்தந்தை. நடந்தது நடந்து முடிந்ததாக இருக்கட்டும். இனி நடக்கப் போவது நல்லதாக அமையட்டும். உடைமாற்றிப் புறப்படு. சுத்தக்காற்றைச் சுவாசிக்க நிதானமாக நடப்போம்|| தைரியமான வார்த்தைகளை அள்ளித் தூவிவிட்டு அத்தனை சுமையையும் தன் மனதில் ஏற்றி எழுந்தாள் பவித்ராவின் யதார்த்தத் தாய். 

    சமுதாயமே!
      
             எங்கள் பிள்ளைகளை வாழவிடுங்கள். கண்ணுக்கு கறுப்புவிழி இறைவன் படைத்தாயிற்று. மேலும் கறுப்புக்கண்ணாடி கொண்டு உலகைப் பார்க்காதீர்கள். அடுத்தவன் வாழ்க்கைக்கு வேட்டு வைத்து அழகு பார்க்காதீர்கள். 'தமிழர்களைக் காண நாங்கள் அஞ்சுகிறோம். தமிழர்களைப் பிடிக்கவில்லை. எங்களை ஊடறுத்துப் பார்க்கின்றார்கள். பெற்றோர்களின் அடுத்தவர்கள் என்ன கூறுவார்கள் என எண்ணி எமக்குப் போடும் கட்டுப்பாடுகளைப் பொறுக்கமுடியாதே தொலைவிலுள்ள பல்கலைக்கழகங்களை நாங்கள் தெரிந்தெடுக்கின்றோம் என்று மனஅழுத்தங்களை வெளிப்படுத்திய எத்தனையோ இளையவர்கள் வார்த்தைகளைக் காதில் போட்டோம். பண்பாடு, கலாசாரம், என்று கூறிக்கொண்டு காலநிலை, பௌதீக சூழ்நிலை Nபுhன்றவற்றால் மாறுபட்ட ஒரு நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நீங்களும் இந்த வயதைக் கடந்து வந்தவர்கள் தானே. வாழ்க்கை இனிமையானது. பாவம் அவர்கள் பல்வேறுபட்ட கலாசாரங்களுக்கு நடுவே பல்வேறு தோணியில் கால் வைத்துக் கொண்டிருக்கும் அப்பாவிகள். முதலில் உங்கள் பிள்ளைகளிடம் நீங்கள் நம்பிக்கை வையுங்கள். அவர்கள் கருத்துக்களுக்கு இடங்கொடுங்கள். நண்பர்களாய் ஆலோசனை வழங்குங்கள். எதையுமே எதேச்சையாக முடிவெடுக்காதீர்கள். ஆழமாகச் சிந்தியுங்கள் அவசரம் இன்றி வெளியிடுங்கள். சமுதாயத்தை விளித்துக் கேட்கிறேன். பவித்ராவிற்கு, அவள் தாய் கூறிய தீர்ப்புச் சரியானதா?

    சனி, 25 ஆகஸ்ட், 2012

    உயிருக்கு உறவானாள்




    பக்கம் பக்கமாய் பகரும் பெருமைகளை
     பத்து வரிகளுக்குள் பதிக்கின்றாள் இப்பாவி
    பட்டு மேனியை பவளத்தால் பதிக்கவில்லை
     பாட்டு வரியெடுத்துப் பட்டதைப் பாடுகின்றாள்

    சொத்து சுகமாகச் சொன்ன புத்திமதிகள்
     நெத்தி அடிபோல் நிலைத்து நிற்கின்றது
    சத்தமின்றி சாந்திதான் தேடிச் சென்றாலும்
     சித்தத்தில் என்றும் சிலையாய் நிற்கின்றாள்

    கவிதைகள் எழுதினேன் பாடல்கள் பாடினேன்
     அற்புத வரிகளால் அகிலத்தில் மெச்சினேன்
    சொற்கள் கண்ட அந்தச் சுந்தர வடிவம்
     கண்களில் காணாது கதிகலங்கி நிற்கின்றேன்

    உயிருக்கு உறவானாள், உதிரத்தால் உரமிட்டாள்
     பயிருக்கு நீர்போலே உயர்வுக்கு ஊக்கமிட்டாள் 
    பனியாய் உருகியென் ஆருயிராய் நின்றாள்
     கனிவாய் அணைத்த கையால் தீயை அணைத்துச் சென்றாள் 

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...