• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    செவ்வாய், 24 செப்டம்பர், 2019

    இந்த பிரபஞ்சத்தில் நாம் எங்கே இருக்கின்றோம்,





    இந்த பிரபஞ்சத்தில் நாம் எங்கே இருக்கின்றோம், எந்த அளவாக நாம் இருக்கின்றோம், எமது அறிவு பிற உயிர்களுடன் ஒப்பிடும் பொழுது எப்படியானது என்பன பற்றி ஆராய்வதே இக்கட்டுரை.

                  நாம் வாழும் பூமி சூரியக்குடும்பத்தைச் சேர்ந்தது. இச்சூரியக் குடும்பத்தில் ஒன்பது கிரகங்களும் அவை பிரயாணம் செய்கின்ற பாதைகளும் அமைந்த பரப்பு சிற்றண்டம் என்று அழைக்கப்படும். நாம் வாழுகின்ற பூமி தன்னைத் தானே சுற்றுவதுடன் சூரியனையும் சுற்றி வரும் பாதை இந்தச் சிற்றண்டத்திலேயே அடங்குகின்றது. 1008 சிற்றண்டங்கள் சேர்ந்த பரப்பு ஒரு பேரண்டமாகும். 1002 பேரண்டங்கள் சேர்ந்த பரப்பு ஒரு புவனம் ஆகும். 2214 புவனங்கள் சேர்ந்த பரப்பு சாகரம் எனப்படுகின்றது. 7 சாகரங்கள் சேர்ந்த பரப்பு பதம் எனப்படுகிறது. 814 பதங்கள் சேர்ந்ததே இந்தப் பிரபஞ்சம் என பிரபஞ்சப் படைப்புப் பற்றி தொன்மைத் தத்துவங்களும் அண்மை அறிவியலும் என்னும் நூலில் இருந்து அறியக் கூடியதாக இருக்கின்றது. நாம் வாழும் பூமி 51 கோடியே 66 ஆயிரம் கிலோ மீற்றர் கொண்டது. எனவே நாம் வாழுகின்ற பூமியில் நாம் வாழும் பகுதி எந்த அளவில் இருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தில் நாங்கள் எந்த அளவில் இருக்கின்றோம் என்பதை இப்போது எம்மால் அறியக் கூடியதாக இருக்கின்றது.

                     நாம் வாழும் பூமி 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. அதன் வயது 460 கோடி வருடங்கள் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். இத்தனை கோடி வருடங்களில் நிலம், நீர், காற்று போன்றவற்றில் சிறிய நுண்ணுயிர்கள, தாவரங்கள், பூச்சிகள், ஊர்வன,  விலங்குகள், மனிதன் என ஒரு பில்லியனுக்கும் அதிகமான வகையான உயிரினங்கள் வாழுகின்றன. அவற்றுள் ஒரு இனமே மனித இனம். இம்மனித இனத்திலே நாமே அறிவாளிகள். எம்மை மிஞ்ச ஆளும் இல்லை. எமக்கு நிகர் எவரும் இல்லை என மார்பு தட்டிக் கொள்ளும் நாம், இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பார்ப்போம்.



    இந்த பிரபஞ்சத்தில் பூமி தவிர்ந்த வேற்றுப் பிரபஞ்சப்பரப்பில் எம்மைப் போன்ற மனிதர்களோ வேறு விதமான உயிரினங்களோ வாழ்கின்றனவா என ஆராய்ச்சியாளர்கள் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். எழுத்தாளர்களும் கற்பனையில் உயிர்கள் இப்படி இருக்கலாம் என்று அப்படி இருக்கலாம் என்று வடிவங்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இது பற்றிய விதம் விதமான ஆங்கிலப்படங்கள் வெளிவந்துள்ளன. ஒரு அண்டத்தில் இருந்து பிற அண்டத்தை அடையவே மனிதனின் ஆயுள் காலம் முடிந்து விடும். இந்த அற்புதமான பிரபஞ்சப் படைப்பில் மனிதனும் அவன் போன்ற வேற்றுக் கிரகவாசிகளும் இம்முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள் என்பதே எனது கற்பனையாகின்றது.


              எமது 450 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தான் தாவரங்கள் தோன்றின என்றும், உலகில் மனிதனின் தொகை 700 கோடியாக அதிகரித்துள்ளது என்பதும் ஆய்வாளர்கள் கணிப்பீடு. இக்கணிப்பீடில் எமது ஆயுள் காலம் எத்தனை. நாம் வாழும் காலப்பகுதியில் திருவள்ளுவர், சுவாமி விபுலானந்த அடிகளார், தனிநாயகம் அடிகளார், விவேகானந்தர், கண்ணதாசன், சூரிய மையக் கோட்பாட்டை அறிவித்த Nicolaus Copernicus, மரபியலின் தந்தை Gregor Johann Mendel, தத்துவஞானி Socrates பரிமாணவளர்ச்சிக் கொள்கையாளர் Charles Robert Darwin போன்ற எத்தனையோ எழுத்தாளர்கள்சுவாமிகள், மேதாவிகள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகளைக் கண்டிருக்கின்றோம். கேள்விப்பட்டிருக்கின்றோம். தற்போது இணையம் அவர்களை அடையாளம் காட்டுகிறது. காலப்போக்கில் எம்முடைய வீடியோ நாடாக்கள், ஒலி நாடாக்கள் மறைந்து போனது போல் இணைய வடிவமும் மாறலாம். அப்போது இணையம் தொலைத்து ரொபோட்டோக்கள் தேடும் காலங்களில் இவர்கள் மறக்கப்படலாம். இவர்கள் நினைக்கப்பட்டாலும் அவர்கள் ஆயுள் காலத்தின் பின் இவர்கள் ஆற்றிய சேவைகளும் பணிகளும் அவர்கள் இறப்பின் பின் அவர்களுக்கு என்னவாகின்றது? அவர்கள் மத்தியில் நாம் எங்கே நிற்கின்றோம்? என்பதை ஓடிக் கொண்டே இருக்கும் நாம் சிந்தித்துப் பார்க்கும் நிலையில் இருக்கின்றோம். எமது சந்ததியை முன்னோக்கிப் பார்க்கின்ற போது எமது தந்தையின் தந்தையை அல்லது எமது தந்தையின் பாட்டனின் பெயர் எமக்குத் தெரிந்திருக்கின்றதா? இல்லை அவர்பற்றி அறிகின்றோமா? இங்கு எமது நிலை இப்பிரபஞ்ச வாழ்நாளில் எங்கே என்று இப்போது அறிந்து கொள்கின்றோம்.


          இத்தேடல் என்பது மனிதனில் மட்டும்தான் இருக்கின்றதா இல்லை வேறு உயிரினங்களிலும் இருக்கின்றனவா? என்பன கேள்விக்குறிகள். பூமியில் கோடிக்கணக்கான உயிரினங்கள் உள்ளன. அவற்றை தொல்காப்பியர் 

    ''ஒன்ற றிவதுவே உற்ற றிவதுவே
    இரண்டறிவதுவே அதனொடு நாவே
    மூன்றறிவதுவெ அவற்றொடு மூக்கே
    நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
    ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
    ஆறறிவதுவெ அவற்றொடு மனனே
    நேரிதி உயர்ந்தோர் நெறிப்படுத்தினரே''

    என ஓரறிவு, ஈரறிவென வகைப்படுத்தினார். ஆனால் இவ்வகைப்படுத்தலை விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. லின்னேயஸ் என்னும் பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி 1707 ஆம் ஆண்டிலே உயிர்களின் உடலமைப்பு, தன்மை, இயல்புகளை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தினார். உயிரினங்கள் முதலில் தாவரங்கள், பிராணிகள் என்று வேறுபடுத்தினார். பிராணிகளில் முதுகெலும்பு உள்ளவை, முதுகெலும்பு இல்லாதவை என்று இரு உபபிரிவுகள் உள்ளன. முதுகெலும்பு உள்ளவை மீன், தவளை, ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என்று 5 பிரிவுகள் உள்ளன. முதுகெலும்பு இல்லாதவை அமீபா, கடற்பஞ்சி, மண்புழு, பூச்சி, சிப்பி, நட்சத்திரமீன் ஆகியன அடங்கும்.


    தாவரங்களில் இரு பெரும் பிரிவுகள் உண்டு. பூ உள்ளவை, பூ இல்லாதவை. பூவுள்ள தாவரங்களில் மூடிய விதையுள்ளவை, மூடாத விதை உள்ளவை என இருவகைப்படுகின்றன. ஆல்கா, காளான், பாசி, பிரணி ஆகியவை பூக்காத தாவரங்களாகின்றன. பாலூட்டிகள் குட்டி போட்டு பால் தருபவை. ஆடும், மாடும் ஒரே குடும்பம் . பூனையும், புலியும் ஒரு குடும்பம் . கழுதையும், குதிரையும் ஒரே குடும்பம். இவற்றில் சைவமும் அசைவமும் உள்ளன. ஊர்வனவற்றுள்ள பாலூட்டிகள் உஷ்ண ரத்தம் உடையவை. நுரையீரல்களால் சுவாசிப்பவை. பறவைகளும் நுரையீரலால் சுவாசிக்கின்றன. ஆனால் அவை முட்டையிட்டு குஞ்சு பொரிப்பவை. ஒவ்வொரு பிரிவிலும் வௌ;வேறு லட்சணங்களும், பாகுபாடுகளும் இருக்கின்றன. இவ்வாறு லின்னேயஸ் அவர்களுடைய ஆராய்ச்சி செல்கின்றது.

                  இவற்றுடன் மனிதனின் திறமையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது நாம் எம்மை நாமே மெச்சிக் கொள்வது போலியாகவே படுகின்றது. பிறருக்காக எம்மை நாம் இழக்கின்றோம் சமூகசேவை செய்கின்றோம் என்று சொல்லும்போது முதலையின் பல் இடுக்கிலே இறைச்சி பொறுத்துவிட்டால், ஆ என்றபடி வாயை விரித்தபடி நீரினுள் முதலை படுத்திருக்கும். அப்போது குகிமா என்னும் குருவி வாயினுள் இருந்தபடி அதன் பற்களை துப்பரவு செய்துவிட்டுப் பறந்துவிடும். காகம் வீதியில் கொட்டிக்கிடக்கும் குப்பைகளை துப்பரவு செய்து செல்வதுடன் உணவுகளைக் கண்டால் கா...கா.. எனக் கத்தி தன் இனத்திற்கும் உணவுகளைப் பகிர்ந்தளிக்கும். இதுவும் ஒரு சமூக சேவையே.

             மனிதர்களில் சிறந்த கட்டிடக் கலை விற்பனர்களுக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கின்றோம் கண்களே இல்லாத கறையான்கள் சிறந்த கட்டிடக்கலை நிபுணர்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டியதே. இவர்களில் அரசன், அரசி, தொழிலாளர்கள், படைவீரர்கள், போன்ற பல பிரிவுகள் இருக்கின்றன. தொழிலாளர் கறையான்கள் செம்மண்ணை உண்ணும் அச்செம்மண் வயிற்றினுள் சென்று அமிலங்களுடன் சேர்ந்து ஒருவகை பதார்த்தமாகும். இதனை வாயினால் வெளியெடுத்தே தன் கட்டிடப்பணியைத் தொழிலாளர் கறையான்கள் மேற்கொள்ளும். இக்கட்டிடத்தில் ஏதாவது பழுது ஏற்பட்டுவிட்டால், டிக்டிக் என்று மற்றைய கறையான்கள் தட்டும்போது தொழிலாளர் கறையான்கள் வந்து திருத்த வேலைகளைச் செய்வார்கள். இக்கட்டிடத்தில் பலவகையான அறைகள் இருக்கின்றன. உலாவும் அறையும் உண்டு. தொனேசியாவிலுள்ள ஒரு கறையான் புற்று 15,000 தொன் எடையுள்ளது. இது 150 ஆண்டுகள் பழைமையானது. சோழர்காலக் கட்டிடடம், பல்லவர்காலக் கட்டிடம் என நாமும் பெருமை பேசிக் கொள்ளுகின்றோம். ஆபிரிக்கக் காட்டிலுள்ள கறையான் புற்றுக்களை  யானைகளால்கூட உடைக்க முடியாது. இந்ந புற்றுக்களை 21 பாகை சென்ரிகிறேட்டிலிருந்து 36 பாகை சென்ரிகிறேட் வரை வெப்பநிலையில் வைத்திருப்பார்கள். தொழிலாளர்கள் கட்டிடம் கட்ட பாதுகாப்புப் பணியைப் படைவீரர்கள் செய்கின்றார்கள். படைவீரர்கள் மெழுகுபோல் ஒரு எச்சிலை அக்கட்டிடத்தில் உமிழ்ந்துவிட அம்மணத்தில் பூச்சிகள் நெருங்காது. மீறி நெருங்கும் பூச்சிகளை படைவீரர்கள் கொன்றுவிடுவார்கள். இப்போது நினைத்துப் பாருங்கள் நாம் மட்டுமா நாட்டையும் வீட்டையும் காக்கின்றோம்? இப்படிப் பல பணிகளைப் பிரித்து ஒவ்வொருவருக்கும் கொடுத்து ஒரு இராச்சியமே நடத்தும் கறையான்களைப் பற்றி எம்முடைய ஒளவைப்பாட்டி என்ன சொல்ல வருகின்றார் என்று பார்ப்போம்.



    வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
    தேன்சிலம்பி யாவருக்குஞ் செய்யரிதால் யாம்பெரிதும்
    வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
    எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது

    தூக்கணாங்குருவிக் கூடு, தேன்கூடு, கறையான் புற்று இவை யாருக்கும் செய்வது அரிது. எனவே யாம் கெட்டிக்காரர் என்று வலிமை சொல்ல வேண்டாம் என்று உறைக்கச் சொல்லுகின்றார்.

          கடலில் ஆயிரக் கணக்கான உயிரினங்கள், தாவரங்கள் வாழுகின்றன. இவற்றில் சில தாவரங்கள் மீன்களைப் பிடித்து இழுத்து உண்ணுகின்றன. சிலவகை மீன்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வாயினால் ஒரு வகை வாயுவைக் கக்கித் தம்மைப் பாதுகாக்கும் சிலவகை மீன்கள் தலை,வால் பகுதியில் மின் விளக்குகள் போன்ற ஒளியை உருவாக்கி மீன்களை மயக்கி இழுத்து இரையாக்கிக் கொள்ளுகின்றன. இது தம்மைத்தாம் பிரபல்யப்படுத்துவதற்கு ஓடித்திரிகின்ற மனிதர்களைப் போலவே தமக்கு வெளிச்சம் போட்டுத் திரிவதைக் காணக்கூடியதாக இருக்கின்றன. இதைவிட விலாங்கு மீனின் தலைப்பகுதி பாம்பைப் போன்றிருக்கும் வால்பகுதி மீனைப் போன்றிருக்கும். அது மீனுக்கு வாலைக் காட்டி மீனினம் என்று தப்பிக் கொள்ளும் பாம்புக்கு தலையைக் காட்டி பாம்பு இனம் என்று தப்பிக் கொள்ளும். இவ்வாறான விலாங்குமீன் போன்ற மனிதர்களை நாம் வாழும் காலத்தில் கண்டிருக்கின்றோம். எனவே கடல் வாழ் உயிரினங்களுடன் ஒப்பிடும் போது நம் பெருமையை நாம் சொல்ல வழியில்லாமல் போகின்றது அல்லவா.

    கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
    அவையல்ல நல்ல மரங்கள் - சபைநடுவே
    நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
    மாட்டா தவனன் மரம்

    என்று தரப்படுகின்ற எழுதப்பட்ட செய்தியை ஒரு சபையிலே வாசிக்கத் தெரியாதவனை மரம் என்று இகழ்ந்தார் ஒளவைப்பிராட்டி. ஆனால்,

    'மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்
    மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்'

    எனக் கவிதை பாடிய கவிப்பேரரசு வைரமுத்து மரங்களின் அத்தனை மகிமையையும் எடுத்துக் காட்டி மரங்களைப் பெருமைப்படுத்தினார்.

    வேர்களால் உண்ட நீரை தலையாலே எமக்குத் திருப்பித் தருகின்ற தென்னையை எமது உபகாரத்திற்கு ஒப்பிடுவோமா. தன்னுடைய அங்கங்கள் அனைத்தையும் எமக்குப் பயன்படத் தருகின்ற பனையை எமது உபகாரத்திற்கு எடுத்துரைப்போமா?
    நோய்களுக்கு மருந்தாக வாய்க்குச் சுவையாக வாழ்க்கைக்கு உதவியாகப் பயன்படுகின்ற மரங்களுக்குள் ஆச்சரியப்பட வைக்கும் பண்புகள் இருக்கின்றன.

            இவ்வாறு உலகப்படைப்பின் அனைத்தும் அற்புதமே. அனைத்துடனும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது நாம் .......?


























    வியாழன், 12 செப்டம்பர், 2019

    முருகன் படைப்புத் தொழிலில் ஈடுபட்டாராம்





    கதவைத் திறந்து உள்ளே நுழைந்த சுதா,

    'என்ன கன்றாவியோ. கட்டிப்பிடிப்பதும், ஆக்களுக்கு முன்னால் கொஞ்சுவதும். சீ மானங்கெட்ட பொழப்பு. இதைவிட நாண்டுகிட்டு சாகலாம். இஞ்சப்பா இந்தச் சீலையிலே குத்தியிருக்கிற ஊசியைக் கழட்டி விடுங்கள். முதலில இந்த சீலையைக் கழட்ட வேண்டும். எல்லாப்பக்கமும் இறுக்கிக் கொண்டு கிடக்குது'

    'இப்ப ஏன் இந்தச் சாமத்தில கத்துறாய்? திரும்பு கழட்டி விடுறேன். அவள் என்ன உன்ர பிள்ளையா? அதுகளுக்குச் சந்தோசம். அதனால சந்தோசமா கல்யாணத்தை நடத்துறாங்கள். கல்யாணத்துக்குப் போனோமா, மொய் எழுதினோமா, வாழ்த்தினோமா என்றிருந்தால் உனக்கு நல்லது. ஏனென்றால், நாங்களும் ஒரு பிள்ளையை வைத்திருக்கிறோம். புரிஞ்சு நடந்து கொள்' மனைவி சுதாவின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் ரவி.

    'என்ன சொன்னீங்கள்? நாங்களும் ஒரு பிள்ளையை வைத்திருக்கிறோமா? என்னுடைய பிள்ளையை ஏன் இப்ப இழுக்கிறீங்கள். அவளை நான் நல்லாத்தான் வளர்த்திருக்கிறேன். அதுக்குத்தானே ஒரு முடிவு கட்டிப் போட்டம். இந்தக் கதை உங்களுக்குத் தேவையில்லை. அடுத்த கிழமை வந்திறங்கிறான் என்னுடைய மருமகன் விசாகன். அவனுடைய தலையிலே அவளைக் கட்டிப் போட்டிருவேன். அதற்குப் பிறகு அவனாச்சு, அவனுடைய மச்சாளாச்சு. மணி 12 ஆச்சு. என்ன கல்யாணம் நடத்துகிறார்களோ. சாமம் வரை ஆட்டம். போய்ப் படுங்கள்.'

    ஜேர்மனிய ஆணுக்கும் தமிழ் பெண்ணுக்கும் நடந்த ஒரு திருமண வீட்டிற்குச் சென்று வந்த அனுபவத் தெறிப்பே இந்த சுதாவின் மனதைப்போட்டு ஆட்டி வைக்கிறது. 

    என்னதான் இலங்கையை விட்டு ஜேர்மனிய நாட்டுக்கு வாழ வந்தாலும் சுதாவுடைய தமிழ் கலாசாரம் விட்டுப் போகவில்லை. ஒரே மகள் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறாள். பலவித இனங்கள், பல்வேறுபட்ட கலாசாரங்கள், பல்வேறுபட்ட வாழ்க்கை முறைகள் இணைந்திருக்கின்ற ஜேர்மனிய நாட்டிலேயே சுதாவும் வாழுகின்றாள். அவள் மகள் ஸ்வாதியும் வாழுகின்றாள். 

    ஜேர்மனிய அரசு ரவி குடும்பத்தை பணம் கொடுத்து பராமரித்த போது ஜேர்மனிய மக்கள் போல மனிதநேயம் உள்ள மக்கள் எங்கேயும் இல்லை என்று புகழ்ந்து பேசுவாள். அவர்கள் உழைப்பில் வாழ்ந்த போது ஜேர்மனிய மக்களுக்கு நாம் நன்றிக் கடன்பட்டிருக்கின்றோம் என்று வாய் கிழியப் பேசுவாள்.

    ஜேர்மனியப் பெண்கள் சேலை உடுக்கும் போது சந்தோசப்படுவாள். அவர்கள் எங்கள் கலாசாரத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள் என்று பெருமிதப்படுவாள். 

    ஸ்வாதியை பெற்றெடுத்த போது மருத்துவமனைத் தாதிகள் தன்னைப் பராமரித்த பக்குவத்தைச் சொல்லிச் சொல்லி, அவர்கள் தெய்வங்கள் என்று வாயாரப் புகழ்ந்து தள்ளுவாள். 

    ஆனால், குடும்பத்துக்குள் அவர்களை கொண்டு வந்து சேர்க்கும் கலாசார கலப்பை  அவளுடைய மனதால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

    உடைகள் மாற்றி உறங்கியவள். மறுநாள் காலை மகளை பல்கலைக்கழகம் போவதற்காக எழுப்புவதற்கு அவள் அறைக்குச் செல்கிறாள். அவளோ எழுந்திருக்கவில்லை. 

    'ஸ்வாதி! 7 மணியாச்சு. யுனிவேர்சிட்டிக்குப் போகல்லையா? 

    'இல்லம்மா. உடம்பு சரியில்லை. தலையிடிக்குது. நான் இன்றைக்குப் போகவில்லை'

    'ஏன். என்னாச்சு. எழும்பு ஒரு இஞ்சித் தேத்தண்ணீர் போட்டுத் தாறன். எல்லாம் சரியாயிடும். என்ன பிள்ளையோ. கல்யாண வயசாச்சு. இன்னும் குழந்தைப் பிள்ளையைப் போல....'

    'அம்மா.... என்னக் கொஞ்சம் படுக்க விடுங்க'

    'இரவிரவா ஹென்டியோட(Mobile) இருக்கிறது. பிறகு தலையிடி அது இது என்று யுனிவேர்சிட்டிக்குப் போறதில்ல. நீ எப்ப படிச்சு முடிக்கிறது. அவனும் வந்து உனக்காகக் காத்திட்டு இருக்க வேண்டும்'

    'அம்மா கத்தாதீங்க. என்னக் கொஞ்சம் படுக்க விடுங்கள்'

    'ஓ... நான் கதைக்கிறது உனக்குக் கத்திற மாதிரித்தானே இருக்கும். என்னுடைய தலைவிதி....' என்றபடி சமயலறைக்குள் சென்று காலைச் சாப்பாட்டைத் தயார் பண்ணிக் கொண்டு நின்றாள்.

    தடார் என்று ஒரு சத்தம் கேட்க ஸ்வாதி அறைக்குள் ஓடி வந்தாள். நிலத்திலே ஸ்வாதி அசைவின்றிக் கிடந்தாள். 

    'ஐயோ .... என்று அலறியபடி அவளுக்குத் தண்ணீர் தெளித்து அசைத்துப் பார்த்தாள். ஸ்வாதியிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. மூச்சுப் பேச்சற்று நீட்டி நிமிர்ந்து ஸ்வாதி நிலத்தில் கிடந்தாள். உடல் விறைத்தது போல் இருந்தது.

    ஓடி வந்து 112 என்னும் இலக்கத்துக்கு அழைப்பு விடுத்தாள். 

    Meine Tochter ist bewusstlos. Bitte schicken Sie mir eine Ambulanz……” 

    என்னுடைய மகள் உணர்வற்றுக் கிடக்கிறாள் உடனடியாக ஒரு அம்புலன்ஸ் அனுப்பி வையுங்கள். என்னுடைய விலாசம் குறோனன்பேர்க் தெரு. நம்பர் 25. டோட்முண்ட். 

    இப்போது உடனடியாக உதவப் போவது ஜேர்மன்காரனே. ஜேர்மனியில் உயிருக்கு ஆபத்து என்றால் தொலைபேசி அழைப்புக் கேட்டு அடுத்த நிமிடமே டாண்.... என்று வந்து நிற்கும் அவசர அழைப்பு வாகனம் (யுஅடிரடயnஉந). மருத்துவமனையில் உயிரைக் காப்பாற்றிய பின்புதான் பண விடயங்கள் பற்றிய பார்வையைத் திருப்புவார்கள். அதனாலேயே ஜேர்மனியை மருத்துவ வசதி கூடிய நாடு என்று எல்லோரும் கூறுவார்கள்.

    வீடு வந்த மருத்துவர் ஸ்வாதிக்கு வந்திருப்பது எப்பிலெப்சி ( நுpடைநிளநை யகெயடட ) என்னும் நோய். அதனால் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று அம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றினார்கள். வேலைக்குச் சென்ற ரவிக்கு தொலைபேசியில் விடயத்தைச் சொல்லிவிட்டு சுதாவும் அம்புலன்ஸ் வண்டிக்குள்; ஏறினாள்.

    அம்புலன்ஸ் வாகனம் டோட்முன்ட் வைத்தியசாலையை நோக்கிப் பறந்தது. வழியில் செல்லும் வாகனங்கள் அம்புலன்ஸின் சைகை கண்டும், கேட்டும் அதற்காக  விலத்தி வழிவிட்டன. மின்னல் வேகத்தில் பறந்து மருத்துவமனையை அம்புலன்ஸ் அடைந்தது. உத்தரவு கேட்காது வைத்தியர்கள் முதுலுதவியில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். 

    வீராப்பும் வாய்வெட்டும் எமக்கு ஏதாவது நடக்கும் வரைதான். எது நடந்தாலும் பறவாயில்லை. பிள்ளை உயிரோடு இருந்தால் மட்டும் போதும் என்ற நிலைக்கு சுதா வந்துவிட்டாள். வைத்தியர்கள் தான் தெய்வங்கள் என்ற நிலைக்கு வந்து விட்டாள். 

    கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வடிந்து கொண்டு இருந்தது. வாயிலோ வார்த்தைகள் இல்லை. ரவி வரவுக்காகச் சுதா காத்திருந்தாள். வேலை இடத்திலிருந்து விடுப்பு எடுத்துத்தானே ரவி வரவேண்டும். அவனிடம் அடக்கி வைத்திருக்கும் அழுகையைக் கொட்டித் தீர்க்க வேண்டும். எப்படித்தான் தனிமையில் வாழ்வோம் என்று வீராப்புப் பேசினாலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு அணைப்பை மனம் நாடுவது இயற்கை. இப்போது தன் கவலைக்கு ரவியின் அணைப்பு சுதாவுக்குத் தேவைப்பட்டிருக்கின்றது. ரவியும் அவசரமாக மகளைப் பார்க்க ஓடி வந்தான். 

    ரவியும் வந்துவிட்டான். அவனைக் கண்டதும் அவனைக் கட்டியணைத்து அழத் தொடங்கிவிட்டாள்.

    'இப்போது என்ன நடந்துவிட்டது. அதுதானே ஹொஸ்பிட்டலுக்குக் கொண்டு வந்து சேர்த்துவிட்டோம். அவர்கள் பார்த்துக் கொள்ளுவார்கள். பயப்படத் தேவையில்லை. அழாதே. கண்ணைத் தொடச்சுக்கோ' என்று ஆறுதல் கூறினான். 

    'பிள்ளை எப்படிக் கிடந்தாள். அந்தக் காட்சிதான் எனக்குத் திரும்பத் திரும்ப வருகிறது' 

    'அதுதான் சொன்னேனே. கொஞ்சம் பொறு டொக்டர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்' என்று ரவி சொல்லும் போது மருத்துவரும் பெமிலி ரவி என்று அழைக்கும் சத்தம் கேட்டது. 

    உடனடியாக இருவரும் மருத்துவர் அறைக்குள் செல்கின்றார்கள். 

    'உங்கள் மகளுக்கு நுரையீரலுக்குள் தண்ணீர் சென்றிருக்கின்றது. அடுத்து உங்கள் மகள் கர்ப்பிணியாக இருக்கின்றாள். அவவுக்கு இரண்டு கர்பப்பைகள் இருக்கின்றன. இப்போது சத்திரசிகிச்சை செய்து பிள்ளையையும் எடுக்க வேண்டும். நுரையீரலில் தங்கியிருக்கும் நீரையும் வெளியேற்ற வேண்டும். இல்லையென்றால் இருவருக்கும் ஆபத்து. அதனால், ஒப்பரேஸனுக்கு சம்மதம் தெரிவித்து இப்படிவத்தில் கையெழுத்துப் போடுங்கள்' 

    என்று ஜேர்மன் மொழியில் மருத்துவர் இருவரிடமும் விளக்கிக் கூறினார். இருவரும் ஆடிப் போய்விட்டனர். முதலில் மகளின் உயிர் தான் முக்கியம். ரவி கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விட்டான். 

    சத்திரசிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிரமனைச் சிறையில் அடைத்து வைத்தபோது முருகன் படைப்புத் தொழிலில் ஈடுபட்டாராம். அப்போது படைப்புத் தப்புத் தப்பாக நடைபெற்றதாக புராணம் சொல்கிறது. அந்த படைப்பின் தொடர்ச்சிதான் ஸ்வாதி உடலுக்குள் இரண்டு கருவறை இருக்கும் மாயமும் என்று எண்ணத் தோன்றுகிறது. 

    ஒரு கருவறை பிள்ளையைச் சுமக்க, மறு கருவறை மாதமொரு மாதவிடாய் வரச் செய்திருக்கின்றது. பின்புறம் முள்ளந்தண்டை ஒட்டிய பகுதியில் இருந்த கருவறையில் பிள்ளை வளர்ந்த காரணத்தினால், வயிறு பெருத்திருந்த அடையாளம் தெரியவில்லை. முன்புற வயிறு பெருத்துக் காணப்படவில்லை. எல்லாமே திட்டமிட்டு நடப்பது போல் நடந்திருப்பதை வைத்தியர் மூலம் ரவியும் சுதாவும் அறிந்திருந்தனர். 

    19 வயதில் ஒரு பிள்ளையை மகள் சுமந்திருக்கின்றாள். இதற்குரிய எந்த அடையாளமும் இவர்களுக்குத் தெரியவில்லை. மாதமொருமுறை வருகின்ற மாதவிடாய் தவறாது ஸ்வாதிக்கு வந்திருக்கின்றது. அதுகூட ஸ்வாதி கரு சுமக்கின்றாள் என்று காட்டிக் கொடுக்கவில்லை. அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு 
    ரவி, சுதாவுக்கு நீண்ட நேரமாகியது. 

    அவமானத்திலும் அதிர்ச்சியிலும் கூனிக் குறுகி நின்றார்கள். எதுவுமே புரியவில்லை. எப்படி என்று கண்களைச் சுருக்கி வார்த்தைகள் இழந்து நின்றார்கள். முதலில் ரவிதான் பேசினான்.

    'என்ன சுதா! நல்லாப் பிள்ளை வளர்த்திருக்கிறாய். பிள்ளை நல்லா வளர்ந்து பிறக்கிற பருவம் வரைக்கும், ஒரு அம்மாவாக இருந்த உனக்கு தெரியல்ல. நீயெல்லாம் மற்றக் குடும்பங்களைப் பற்றி நாக்கு வழிக்கிறாய். பிள்ளை அறையைப் பூட்டிற்று இருக்கிறாளே. என்ன நடக்குது என்று கண்காணிக்க முடியாத அளவுக்கு நீயென்ன எங்கள் வீட்டில வெட்டிக் கிழிக்கிறாய்' வார்த்தைகள் சரமாரியாக விழுந்தன. 

    'போதும் நீங்கள் பேசியது. முதலில் பிள்ளை பிழைச்சு வரட்டும். நல்லாத்தான் புத்தி சொல்லி நான் வளர்த்தேன். இப்படிச் செய்வாள் என்று கண்டேனா? என்றபடி மௌனமானாள்.

    சில மணிநேரம் கழிந்த பின் தாதி வந்து தாயும் மகளும் சுகம். ஸ்வாதி இன்னும் கண் விழிக்கவில்லை. விழித்த பின் அறைக்குக் கொண்டு வருகின்றோம். என்று கூறிச் சுதா கையில் பிள்ளையைக் கொடுத்து விட்டுச் சென்றாள். 

    கையில் கிடந்த தன் பேத்தியைப் பார்த்தாள் சுதா. ஏங்கிப் போனாள். நீலக் கண்கள், பழுப்பு நிற மயிர்கள், ஐரோப்பிய வாரிசு என்று பறைசாற்றும் மேனி நிறம். சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லாத ஜேர்மனியத் தந்தைக்குப் பிறந்த பிள்ளை என்று அடையாளம் காட்டிச் சிரித்தது சுதாவின் பேத்தி. 

    'இப்படிச் செய்து போட்டாளே. இவளை மலை போல நம்பினேனே. எப்படி பிறருடைய முகத்தில் நான் முழிப்பது. இதைவிட செத்துப் போகலாம். ஏன் என்னை இப்படிக் கடவுள் தண்டித்திருக்கிறார்'

    என்று சுதா புலம்பத் தொடங்கினாள். ஆனால், அக்குழந்தையோ அழகான இந்த உலகத்திற்கு நான் பிரசவமாகியிருக்கின்றேன். வெளியுலகில் என் முதல்நாள் அனுபவம் இந்த முகம்தான் என்று சொல்லி தன் தேடல் பார்வையை அவள் முகத்தில் பதித்தது. 

    ரவி குனிந்து குழந்தையைப் பார்த்தான். 

    'சரி சரி புலம்பாத.... கண்ட கண்ட சாதிக்காரனுக்குப் பிள்ளையப் பெறாமல் வெள்ளைக் காரனுக்குப் பிள்ளையப் பெத்திருக்கிறாள் என்று சந்தோசப்படு' 

    என்றான். 

    திங்கள், 2 செப்டம்பர், 2019

    நாமும் உங்களில் ஒருவரா?

    உங்கள் சிந்தனைக்கு 



    பூமிப்பந்தில் பிறந்த நாம் அனைவரும் பூமியில் அனைத்திற்கும், எப்படியும் கடமைப்பட்டிருக்கின்றோம். ஆனால், பூமியில் எமக்கென்று எதுவுமே சொந்தமில்லை என்பதே உண்மை. இதுபற்றி பகவத்கீதையிலே அழகாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. 

    "நாம் எதைக் கொண்டு வந்தோம். எதை  இழப்பதற்கு, இன்று எமக்குச் சொந்தமானது. நாளை வேறு ஒருவருக்குச் சொந்தமாகும். எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை நீ கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ, அது நாளை வேறு ஒருவருடையதாகிறது'' 

    வேறு ஒருவருக்குச் சொந்தமாகும் போது அதனை மற்றவர்க்குப் பொருத்தமானதாக விட்டுச் செல்ல வேண்டிய கடமை ஒவ்வொரு மனிதர்களுக்கும் இருக்கின்றது. எமக்காகவே வாழ வந்த நாம் சூழல், சுற்றம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு ஒரு தனியிடத்தைப் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அந்தச் சூழல் சுற்றத்தை எப்படி நாம் அமைத்துக் கொள்ளுகின்றோம். அந்தச் சூழலை எவ்வாறு மாற்றியமைக்கின்றோம் என்பதும் சிந்திக்க வைக்கும் விடயமாகவே கொள்ளவேண்டும். 

    இந்த வாழ்க்கையில் நாம் வாழுகின்ற சமூகத்திற்கு எதனை விட்டுச் செல்கின்றோம். எதனை வழங்குகின்றோம் என்பதுவே நாம் அலச வேண்டிய முக்கிய விடயமாகும். 

    நான் என்பதைச் சுற்றியேதான் அனைத்தும் அடங்கியிருக்கின்றன. நான் என்னுடைய குடும்பம், என்னுடைய நண்பர்கள், அயலவர்கள் என என்னைச் சுற்றி அமைகின்ற வாழ்க்கை பிறருக்குப் பயன்படும், பயன்படுத்தும் பட்சத்தில் சமூக நோக்கு புலப்படுகின்றது. யாரால் அதிக உதவிகள் கிடைக்கின்றதோ. அவர்களிடம் அக்கறையும், பிணைப்பும் இருக்கும் அல்லவா! கிடைக்கின்ற உதவிகளுக்கு ஏற்பக் கொடுக்கும் போதே சமூகஅக்கறை வெளிப்படும். உதாரணமாக  ஒரு நாட்டிடம் இருந்து உதவிகள் பெறுகின்ற நாம், நாம் வாழுகின்ற நாட்டிற்கு எந்தவித உதவிகளும் செய்யாது, ஏனோதானோ என்னும் போக்கில் இருப்பது எந்தவிதத்தில் நியாயம்? அது நாம் வாழும் எமது சமூக சிந்தனையாக முடியுமா என்பது கேள்விக்குறி. 

    "நாடென்ன செய்தது உனக்கு என்று கேள்விகள் கேட்பது எதற்கு? நீ என்ன செய்தாய் அதற்கு என்று நினைத்தால் நன்மை உனக்கு'' 

    என்று கண்ணதாசன் வரிகளில் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் பாடியிருக்கின்றார். வாழுகின்ற வாழ்க்கையில் வளங்களை நாம் பெறுவதை பெற்ற இடத்திலேயே வழங்குவதே நியாயம். உதவி செய்வது என்றால், பணம் கொடுப்பது மட்டுமல்ல. உபத்திரவம் செய்யாமல் இருப்பதும் உதவியேதான். 

    வீதியைச் சுத்தம் செய்யும் கடமை அரசாங்கத்திற்குரியது என்றால் அதனை அசுத்தமாக்காது வைத்திருக்கும் கடமை வாழுகின்ற பிரஜைகளுக்கு உரியது. பிரயாணம் செய்கின்ற வாகனத்தில் கீறுவது, சப்பாத்துக் காலைத் தூக்கி முன் இருக்கையில் நீட்டி வைத்துக் கொண்டு அமர்வது வீதிக்கு வீதி குப்பைத் தொட்டிகளைக் கண்டு அதற்குள் குப்பைகளைப் போடாது, அருகே நிலத்தில் போட்டுவிட்டுப் போவது போன்ற காரியங்களைச் செய்யும் பலரைப் பார்த்திருக்கின்றேன். இவ்வாறான சின்னச்சின்னக் காரியங்களை நாம் அசட்டையீனமாகச் செய்வதும் நாம் வாழும் நாட்டிற்கு செய்கின்ற தீமையாகவே அமைகின்றன. 

    சுயநலவாதியாய் இருப்பது தவறல்ல. ஆயினும் சுயநலத்தில் ஒரு தவறைச் செய்யும் போது அது மனதை உறுத்திக் கொண்டே  இருக்கும். என்னுடைய சுயநலத்திற்காக சுற்றியுள்ள மனிதர்களை எந்த அளவிற்குப் பாதிக்கிறேன் என்பதைக் கவனிக்காது விடல் பெரிய தவறாக அமைகின்றது. எங்கள் சுயநலத்திற்காகச் எங்களைச் சுற்றியுள்ளவர்களைப் பழிக்காடாக பணத்திற்காக மட்டுமல்ல புகழுக்காகக் கூட மாற்றுவது பெரிய தவறாக அமைகின்றது இவை தவிர்க்கப்பட்டால் சுயநலவாதியாக இருப்பதற்குக் கவலைப்படத் தேவையில்லை.

    வள்ளுவரே சொல்லியிருக்கின்றார். 

    "தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
     துன்னற்க தீவினைப் பால்''

    ஒருவன் தன்னை நேசிப்பானேயாயில், அவன் செய்கின்ற தீங்கு திரும்பவும் அவனுக்குத் திரும்பக் கிடைக்கும் என்று தெரிந்து பிறருக்குத் தீங்கு செய்ய மாட்டான். எனவே  

    "முற்பகல் செய்யிற் பிற்பகல் விழையும்''

    என்னும் பழமொழி இதற்குப் பொருத்தமானதே. 

    எனவே சுயநலவாதியாக இருக்கும் மனிதர்கள், இலாபம் கருதியும் அவ் இலாபம் பிறருக்குத் தீங்கை விளைவிக்காமலும் செயற்பட வேண்டியது அவசியம். இலாபம் என்பது பணத்தால் மட்டும் இருக்க வேண்டியது அவசியமில்லை. பேச்சால், அன்பால், பரிவால் கூட இலாபம் கிடைக்கலாம். 

    நெருங்கிப் பழகுபவர்களுடனும், அதிகமாகப் பழகுபவர்களுடனும்  எமக்கு அக்கறை அதிகமாக இருக்கும். ஆனால், நாம் வாழும் பூமி, அதில் வாழும் உயிர்கள் என்னும் பொது சிந்தனையுடன் பழகும் போது பரந்துபட்ட மனப்பாங்கு எம்மிடம் ஏற்படுகின்றது. இச்சிந்தனை உள்ளவர்களே, விஞ்ஞானிகள், புதிய கண்டுபிடிப்பாளர்கள், அறிவியலாளர்கள், தத்துவ ஞானிகள், ஏன்? எழுத்தாளர்கள் கூட பொதுநலவாதிகளாகவே அமைகின்றார்கள். இது சமூகம் பற்றிய பார்வையை விரிவுபடுத்துகின்றது. 

    சமூகத்தில் மாற்றம் உண்டாக்க நினைப்பவர்களே சிறந்த எழுத்தாளர்கள் என்று நான் நினைக்கிறேன். எல்லாவற்றிற்கும் தலையாட்டி எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு நடப்பதற்கு எமது மண்டையில் மூளையைப் படைத்திருக்கத் தேவையில்லை. நடக்கின்ற காரியங்களுக்கு அர்த்தம் என்ன எனக் கேட்டுத் தெளிவுறாத வாழ்க்கை பண்பட்ட வாழ்க்கையாகாது. அறிவும் அனுபவமும் சேர்ந்து கொள்ள அதை வைத்துக் கொண்டு தீர்மானங்களை எடுக்க முடியாது பயத்திற்கு அடிமையாகும் மனிதன் பக்குவப்படாத மனிதனாவான். 

    யார் சொன்னார் எவர் சொன்னார் என்பதை விட்டுவிட்டு எவர் சொன்ன சொல்லையும் எமது சொந்த அறிவால் எண்ணிப் பார்க்கச் சொன்ன சொக்கிரட்டீஸ் வார்த்தைகள் போல் வாழ்ந்ததனாலேயே விஞ்ஞானிகளின் வியத்தகு சாதனைகள் வெளிப்பட்டது. பெண்ணடிமையைப் புரிய வைக்க பாரதிக்கு ஒரு நிவேதிதா அம்மையார் தேவைப்பட்டது. கடவுள் தான் உயிரினங்களைப் படைத்தார் என்ற கோட்பாடு டார்வின் பரிணாமக் கோட்பாட்டினால் உடைக்கப்பட்டது. பூமியை மற்றைய கோள்கள் சுற்றுகின்றன என்ற பூமி மையக்கோட்பாடு கலிலியோ மூலம் சூரியனையே மற்றைய கோள்கள் சுற்றுகின்றன என்னும் சூரிய மையக்கோட்பாட்டின் மூலம் மறுக்கப்பட்து. இவ்வாறு சமூகத்தில் மாற்றம் கொண்டு வந்தவர்கள் கூட சமூகப் பற்றாளர்களே.

    வாழ்க்கையின்; வசதிகள் பெருகுவதற்குக் கண்டுபிடிப்புக்கள் காரணமாகின்றன. அறிவியல் மனிதர்களைச் சிந்திக்க செய்து மூடக் கொள்கையில் இருந்து அவர்களை முழுமனிதர்களாக மாற்றுகின்றன. தத்துவங்கள் மனதார மனிதன் சிந்தித்துச் செயல்படுவதற்கான உந்துதலை ஏற்படுத்துகின்றன. திருவள்ளுவரின் சமூக அக்கறையே திருக்குறளை எழுதத் தூண்டியது, சுவாமி விபுலானந்த அடிகளார், சுவமி விவேகானந்தர்  போன்றோரின் சமூக அக்கறையே அனைத்து மக்களுக்காகவும் அவர்களை வாழத் தூண்டியது, 

    முல்லைக்குத் தேர் தந்த பாரி,
    தன்னுடைய குறும்பொறை நாடு முழுவதையும் பாணருக்கு வழங்கிய ஓரி   
     மயிலுக்குப் போர்வை தந்த பேகன்,
     நீலநாகம் தந்த கலிங்கத்தை குற்றாலநாதருக்கு வழங்கிய ஆய்
    அதிகநாள்கள் வாழும் நெல்லிக்கனியை அவ்வைக்கு வழங்கிய அதியமான்
    நண்பர்கள் வாழ்க்கை நடத்துவதற்காக வசதிகள் அனைத்தையும் வழங்கிய  
     நள்ளி 
     ஈர நன்மொழி கூறிய தேர் வழங்கும் பெருவள்ளல் காரி

    இவ்வாறு கடையெழு வள்ளல்கள் கொடை தந்து குலம் காத்தார்கள். பாரி நினைத்திருந்தால், அரண்மனை சென்று முல்லைக்கு பந்தல் போட ஆவன செய்திருக்கலாம். ஆனால், செய்ய நினைப்பதை நினைத்த மாத்திரத்தில் செய்வதே சிறப்பு. நாளை என்று நினைத்தால், 

    "ஆறிய கஞ்சு பழங்கஞ்சு''என்னும் பழமொழி போலவே அமையும்.

    சமூக மாற்றத்திற்கு பத்திரிகையின் பங்கும் பத்திரிகை சுதந்திரமும் அவசியம்.
    நடந்த உண்மை விடயங்கள் எமது வரலாற்றுக்கு பங்கம் விளைவிக்கும் என்று மறைக்கப்படுமானால் உண்மைச் சரித்திரம் உறங்கிப் போகும் வரலாற்றுப் பாடம் புகழாரப் பாடமாகவே முடியும். எழுதுவது ஒன்று செய்வது ஒன்றாக அமையுமானால், எதிர்காலச் சமூகத்திற்கு பொய்மையே தரவாகக் கிடைக்கும். எழுதுவதும் செய்கையும் வேறானால்,

    "அன்புடைமை அதிகாரத்தை 
     ஆசிரியர் கற்பிக்கின்றார்
     கையில் பிரம்புடன்''

    என்னும் கழனியூரான் கவிதையைப் போன்றே எழுத்து சுதந்திரம் அமையும். 

    எனவே நாம் ஒவ்வொருவரும் சமூகத்தை மனதில் கொண்டு வாழ்க்கைப் பாதையைக் கொண்டு செல்லல் அவசியம். 



    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...