• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 26 அக்டோபர், 2013

    மறுபக்கப் பார்வையில் கடந்தகால இலக்கியங்கள்.




     சென்ற காலங்களில் இளமைப்பருவங்களில், கற்றவற்றை மீட்டிப்பார்க்கும் வேளையில், உள்ளத்தில் புதைந்து மீண்ட சில கற்றவை சிந்தனையைத் தட்டிவிட்டது. உள்ளத்தில் தாக்கத்தைத் தந்ததோ! மனதின் உள்ளத்தைத் தெளிவாக்கியதோ! பிறருக்கும் புரியவைக்கவேண்டும் என்று எண்ணியதோ! நீண்டநாட்களாய் நீங்காது எண்ணத்தில் சிக்கி வெளிவரத் தயங்கிய வார்த்தைக் கோர்வைகளை தவிக்கவிடாது இன்று தந்துவிடுகின்றேன்.

               கல் தோன்றி மண்தோன்றா காலத்திலே முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி. அவர் மொழி தமிழ்மொழி. அதில் ஆழ்ந்த நாட்டம் கொண்டதனால், தமிழைப்பட்டப் படிப்பில் மேற்கொண்டேன். மனம் ஒன்றிக் கற்றேன். தமிழன் என்று பெருமை கொண்டேன். கட்டடக்கலையில், கவிப்புலமையில், தமிழன் மேல்நோக்கி நின்ற மகத்துவத்தை எண்ணி எண்ணி வியந்தேன். தமிழ்ப் பெருமை பேச தமிழ் இலக்கியங்களைக் கற்கவேண்டும். ஏனெனில் அடுத்தது காட்டும் பளிங்குபோல் அக்காலத்தை இலக்கியங்கள் பிரதிபலித்துக் காட்டும் என்பது திண்ணமே. அதாவது தமிழ்மொழி, தமிழ் இனம் அவற்றின் உட்கிடக்கைகள் பற்றியும் வரலாற்றுப்பார்வைகள் பற்றியும் அறியவேண்டுமானால், இலக்கியப்பக்கங்களை ஊடுருவிச் செல்லவேண்டும். தற்கால இலக்கியங்களை எடுத்துநோக்கினால், அக்காலத்திலும் இலக்கியங்கள் இப்படித்தான் எழுதப்பட்டனவோ என்னும் எண்ணம் உச்சந்தலையில் உதைக்கின்றது.

              தமக்கென்று தலைவர்களைத் தாமே உருவாக்கி அவர்களுக்கு முடிசூட்டி மஞ்சத்தில் அமர்த்திவிடுகின்றனர். விரும்பியோ விரும்பாமலோ கட்டாயத்தின் பெயரில் தலைவர்களைத் தலைமேல் கொண்டாடவேண்டிய சூழலை மக்கள் கொள்கின்றனர். ஈவுஇரக்கமற்ற மனிதனை தெய்வமாய்ப் போற்றுகின்றனர். மனிதர்களைத் தெய்வமாக்கி பாலாபிஷேகம் செய்கின்றனர். கவிதைகளில் தாலாட்டுப் பாடுகின்றனர். அடுத்ததலைமுறை இவையெல்லாம் உண்மையென நாம் கற்றுவந்த இலக்கியக்கல்வி போல் எதிர்காலமும் கற்கவேண்டிய சூழ்நிலை மேற்கொள்ளுகின்றனர்.

              இலக்கியத்திற்கு வர்ணனைகள் இயல்பு, அணிகள் அவசியம், அலங்காரங்கள் விதந்திருக்கும். ஆனால், காலத்தின் தவறான கருத்துக்கள் பொய்யான தரவுகள் மெய்யாக்கப்படலாமா? இல்லாத ஒன்றை இருப்பதாகக் கூறலாமா? சாதாரண மனிதர்களை அவதாரங்களாக்கலாமா? இவ்வாறான முற்றிய பக்தியில் ஆன்மீகக் கடவுளர்கள் எல்லாம் இவ்வாறான அவதாரங்கள் தானோ! என்று எண்ணத்தோன்றுகின்றது.

             சங்ககாலம் அறியும் நோக்கில் சங்ககால இலக்கியங்களை உற்றுப் பார்க்கும்போது எல்லைமீறிய காதலர்கள், கொடூரமான போர்க்கோலங்கள், சித்திரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான அகோர போர்வெறி பிடித்த மன்னர்களா அக்காலத்துத் தமிழ் மன்னர்கள்! இவ்வாறாக மன்னர்கள் வீரத்தைப் பாடுவதாய் உண்மையைத்தான் பாடினார்களா! இல்லை பொன்னுக்கும் பொருளுக்கும் புகழ்ந்து பாடினார்களா! புகழ்ந்தே பாடியதானால், இவ்வாறான புகழை விரும்பிய  மன்னர்களா அக்காலத் தமிழ்மன்னர்கள். சோழர்காலத்துப் பாடப்பட்ட கலிங்கத்துப்பரணியிலே சயங்கொண்டார் ஊழிப்போரிலே பேய்கள் இறந்த எலும்புகள் விறகாகாவும், தசைகள், இரத்தங்கள் உணவாகவும் உண்டு ஊழிக்கூத்து ஆடியதாகப் பாடியிருக்கின்றார்.

             ஒளவையார் மன்னனைப் புகழ்ந்து பாடும்போது எதிரிகளை வெட்டிவெட்டி இரத்தக்கறை படிந்துபடிந்து கூர்மை இழந்த வாளையுடைய மன்னனே! என்று புகழ்ந்து பாடியிருக்கின்றார். இறந்து பிறந்த குழந்தையை மார்பில் வாளால் வெட்டிப் புதைத்ததாக இலக்கியம் காட்டுகிறது.

              பல்லவர் காலத்தின் வரவில் என் பார்வை திரும்புகிறது. சமணம், சைவம், வைணவம் என்று மதச்சண்டை கொண்டு ஒருவரை ஒருவர் தீர்த்துக்கட்டப் பொல்லாத உத்திகளைக் கையாண்டிருக்கின்றார்கள்.  சமணர்களை அழிக்க கழுவேற்றல் என்னும் மிருகத்தனமான தண்டனை வழங்கப்பட்டிருப்பதை படித்தபோது நெஞ்சமே புண்ணாகியது. நினைவுகள் நிலைத்து அழுதுபுலம்பியது. உயிரின் மகத்துவம் புரிந்தும் மனிதர்கள் உயிர்களைக் குடித்த வேதனை புலம்பியது. இதுபோன்ற ஒருகாட்சி தசாவதாரம் என்னும் திரைப்படத்தில் காட்டப்பட்டிருந்தது.  இதனைப் பார்க்கும் போது ஆண்டபரம்பரை மீண்டுமொரு முறை ஆளநினைப்பது எப்படி என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழர்கள் என்று தலைநிமிர முடிகின்றதா?

             மனிதர்கள் நாகரிக வளர்ச்சியில் புதுமைகள் காண்பதா? பழைமையைக் கூறிக்கூறிக் காலத்தைக் கழிப்பதா? இன்றைய இலக்கியங்கள் அன்றைய இலக்கியங்களில் சந்தேகத்தைக் கொண்டுவரலாமா? எல்லாம் புனைகதைகள் என்று விரக்தி நாம் கொள்ளலாமா? காலத்தைக் காட்டலாமா? இல்லைக் காலத்ததின் பொய்புனைவுகளைக் காட்டலாமா? மண்டைகுழம்பி எல்லோரையும் நான் குழப்பவில்லை. வழிவிடுவோம். இன்றைய தலைமுறை புதுயுகம் காண நாம் பின்னே நின்று சிந்திக்கத் தெரியாதவர்களாக அவர்களைத் திசை திருப்பாது இருப்போம். இதுவே புலம்பெயர்ந்ததன் புண்ணியமாக இருக்கட்டும்.

             கடந்து வந்த பாதையில் கறைபடிந்த நிகழ்வுகளை மீட்டிப் பார்த்தபோது எமக்குள்ளும் இவ்வாறான அழுக்குகள் இருக்கின்றன என் எண்ணத் தோன்றியது. அடுத்தவரைச் சுட்டிக் காட்டும்போது எம்மை நோக்கி மூன்று விரல்கள் திருப்பப்படுகின்றதை நினைத்துப் பார்த்தேன். அதற்காக நான் இனத்தை நேசிக்காதவளாகிவிட முடியாது. இனப்பற்று இல்லாதவளாகிவிட முடியாது. மொழியை மதிக்காதவளாகிவிட முடியாது. மறுபக்கப் பார்வையே பகுத்தறிவின் மூலம்.

       

    ஞாயிறு, 20 அக்டோபர், 2013

    எதிர்நீச்சல்


     உயிரைக் குடித்திடும் உடனிருந்தே கொல்லும் நோக்காடு
    இடியாய் வரும் துன்பமும் ஓர்நாள் மழையாய் மறுதலிக்கும்
    இன்பமும் துன்பமும் இணைவதுதான் இல்வாழ்க்கை
    இழந்துவிட்ட இன்பமது  இணைகள் சேர ஒன்றிடும்
    பகிர்ந்துரைக்கும் துன்பம் படிதாண்டி ஓடிவிடும்
    எண்ணிஎண்ணி மாய்வதல்ல இவ்வாழ்க்கை
    எதிர்நீச்சல் போட்டுவிடு எண்ணமதைச் செயல்படுத்து
    எள்ளிநகையாடி உதறிவிட இதுவல்லோ நேரம்
    எடுத்துவைக்கும் காலடிகள் ஏற்றத்தைக் காட்டிவிடும்
    பனிகாலம் உறங்கும் மரம் கோடையில் குதூகலிக்கும்
    கரை வந்த அலை கடல்நோக்கித் திரும்பிவிடும்
    கன்னத்துக் கரம் கடுதியாய்விலகட்டும்
    எண்ணத்துத் திடம் சுடராய் மிளிரட்டும்.

    வெள்ளி, 11 அக்டோபர், 2013

    பகுத்தறிவு

                   

    ஏன் என்று கேட்காதுவிட்டால், மடையர் நாம் என்று காட்டிவிடும் அறிவு. நாம் ஆறறிவு மனிதர்களா? இல்லையெனில் 5 அறிவு மிருகங்களா? என்று புரியாது போய்விடும். மிருகங்கள், பறவைகள் பலவற்றின் குணநலங்களை எடுத்தாராயும்போது அவையே தம் வாழ்வுக்குத் தேவையான அறிவு கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. தலையாட்டித் தொடரும் ஆட்டு மந்தைகள் போல் வழிவழியாகத் தொடரும் பழக்கவழக்கம் என்றோ, ஊரோடு ஒத்தோடாவிட்டால், சமூகம் எம்மை ஒதுக்கிவிடும் என்றோ, ஆச்சரியமானதாக இருக்கின்றது என்றோ, எல்லோரும் ஏற்றுக் கொள்ளுகின்றார்களே! அதில் ஏதோ உண்மை இருக்கும் என்றோ எதையும் நம்பிவிடக்கூடாது.

             அன்றே உலகப்பொதுமறை தந்து முக்காலத்தையும் ஒன்றே முக்கால் வரிகளால் அளந்த வள்ளுவர் பகுத்தறிவு காடடிவிட்டார்.
    ''எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு''

    எவர் சொன்னாலும் அதன்  உண்மைப்பொருளைக் காணவேண்டும் அதுவே அறிவு.
    ''எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
     மெய்ப்பொருள் காண்பது அறிவு''

    எந்தப்பொருள் எந்த இயல்பினதாகத் தோன்றினாலும் அந்தப்பொருளின் உண்மையான இயல்பை அறிவது அறிவு.

     "ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
     மெய்யுணர்வு  இல்லாதவர்க்கு"

    உண்மையைக் கண்டறிந்து ஆராய்ந்து தெளிவடையாதவர்கள், தம் ஐம்புலன்களையும் அடக்கி எத்தகைய துறவு வாழ்க்கையில் வெற்றி கண்டிருந்தாலும் அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. எனப் பகுத்தறிவைப் போதித்துப் போனார். 
                 
     ''யார் சொன்னார், எவர் சொன்னார் என்பதை விட்டுவிட்டு எவர் சொன்ன சொல்லையும் உனது சொந்த அறிவால் எண்ணிப்பார்'' என்று சாக்ரடீஸ் சொல்லியிருக்கின்றார்.

    இவ்வாறு உண்மைத் தன்மையை அறிவது மட்டுமல்ல எமது கடமை. அதை அறியாதவர்களுக்கு அறியச்செய்வது ஒவ்வொருவரதும் கடமையாகின்றது.

    ''கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
    சொல்லா நலத்தது சால்பு''

    தவம் என்று சொல்லப்படுவது கொல்லாத நலத்தை அடிப்படையாகக் கொண்டது. சால்பு எனப்படுவது பிறரது குற்றங்களை எடுத்துச் சொல்லாத நலத்தை அடிப்படையாகக் கொண்டது சால்பு என்று வள்ளுவர் கூறிவிட்டார் என்பதற்காக அவர் கூறிய "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்'' என்னும் குறளை நாம் மறந்துவிடக்கூடாது. தீமை கண்டு குற்றங்களையாது எடுத்துச் சொல்லித் திருத்தாது. போனால்போகட்டும் என்று நாம் வாழ்ந்தோமேயானால், வாழிடச் சாக்கடையுள் நாமும் புரண்டே எழவேண்டியவர்கள் ஆகிவிடுவோம்.

      வால்மீகியின் ராமாயணத்திலும்  உலகாயுதக் கொள்கை பற்றிக் கூறப்பட்டுள்ளது.  அக்காலத்திலேயே கடவுள் மறுப்புக் கொள்கை இருந்திருக்கின்றது.  பார்ப்பனருக்குரிய எவ்வித சடங்குகளும் கடைப்பிடிக்காத ஜாபாலி என்னும் அந்தணர் தசரதர் அவையில் இருந்திருக்கின்றார். வசிட்டர் நல்ல நாள் குறித்துக் கொடுத்தும் அந்நாளில் முடி சூட்டு விழா நடைபெறாது. ராமன் காடு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டத்தை ராமனுக்கு எடுத்துரைத்து, நல்லநாள், கேட்ட நாள் என்பதெல்லாம் இல்லை என்று பகுத்தறிவு போதித்துள்ளார்.

           பகுத்தறிவு என்பது பொருட்கள், நிகழ்வுகளின், கருத்துக்களின் கூறுகளை அவதானித்து ஆய்ந்து அவற்றின் இயல்புகளில் இருந்து ஆதாரபூர்வமாக புறவய நோக்கில் நிரூபிக்கக்கூடிய முடிவுகளை முன்வைக்கும் வழிமுறையையும், அதை ஏதுவாக்கும் மனித அறிவு ஆற்றலையும் குறிக்கின்றது. மெய்ப்பொருளை அல்லது உண்மையைக் கண்டறிவது என பகுத்தறிவு பற்றி விக்கிப்பீடியா எடுத்துரைக்கின்றது. பெரியார் அறிவு எனப்படுவதே பகுத்தறிவுதான்  என்கிறார்.

                 சைவசமயத்தில் சந்தேகம் தோன்றியபோதே சைவசித்தாந்தம் தோன்றியது. இவ்வாறு சந்தேகங்கள் தோன்றும் போதே அவற்றுக்கான தெளிவும் ஏற்படுகின்றது.

               2500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய புத்தர் "கடவுளாவது ஆத்மாவாவது இவையெல்லாம் சுத்தப்புரட்டு. எதையும்அறிவு கொண்டு சிந்தித்துப் பார்த்து புத்திக்கு எது சரியென்று படுகின்றதோ அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமேயொழிய கடவுள் சொன்னார் முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காக ஏற்றுக் கொள்ளாதே. வெகுகாலத்திற்கு முன் சொல்லப்பட்ட கருத்தாயிற்றே. வெகுகாலமாகப் பின்பற்றிவந்த கருத்தாயிற்றே என்பதற்காக ஏற்றுக்கொள்ளாதே.அறிவு கொண்டு அலசிப்பார் எது உன்புத்திக்குச் சரியென்று படுகிறதோ அதனை ஏற்றுக்கொள்'' என்று அறிவைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தைக் கூறியுள்ளார்.

                பகுத்தறிவுக் கொள்கை அக்காலப் புலவர்களின் பாடல்களில் காணப்படுவதைப்பார்க்கின்றபோது

    18ஆம் நூற்றாண்டிலே வாழ்ந்த சீர்காழி அருணாசலக்கவிராயர் நடகத்தமிழுக்கு உயிரளித்தவர். இவர் சிந்திக்கப்பல பாடல்களை யாத்துள்ளார்
     
        ''மிகப்பட்ட வெம்பசியால் வெம்பருந்தின் வாயில்
         அகப்பட்ட கோழிப்பார்ப் பானேன் - நகப்பட்ட
         கல்லையோ கைதொழுதேன் காகமணு காமலையில்
         இல்லையோ ரத்னகிரியே''
        
    அளவுகடந்த பசியால் மிகக் கொடிய பருந்தின் வாயில் கிடைத்த கோழிக்குஞ்சு போலானேன். யான் கல்லையா கடவுள் என்று கும்பிட்டேன். இல்லையே காகமும் அணுகாத இரத்னகிரி மலையை அல்லவா நானும் வணங்கினேன். அந்த ரத்னகிரி போன்ற சிவன் இப்போது இல்லையோ என்று கேட்கின்றார். இலங்கை முள்ளிவாய்க்காலிலே மொத்தமாய் உயிர்கள் பறிக்கப்பட்ட போதும் இதேபோன்ற கேள்வியே பலர் மனதுள் கேட்கப்பட்ட கேள்வியானது. இல்லையோ என்னும் அச்சம் தோன்றும் போதே இருக்கிறதா என்ற கேள்வியும் எம்மத்தியில எழுகின்றது.

       ''வெண்ணெயுற்று நெய்தேட வேண்டுமா தீபமுற்று
        நண்ணு கனறேட னன்றாமோ – என்மனத்தை
        நாடிச் சிவனிருக்க நாடாமனூர்தோறும்
        தேடித் திரிவதென்ன செப்பு?

    ஏ, உள்ளமே உனக்கென்ன பேதைமை? வெண்ணெய் கையிலிருக்கும் போது நெய்யைத் தேட வேண்டிய அவசியமென்ன? விளக்கு இருக்கும்போது அனலைத் தேடிப்பிடிக் முனைவது சரியா? என்மனதை நாடிச் சிவன் இருக்கும்போது அவனை அகத்துள் பார்க்காமல் ஊரூராய்ச் சென்று கோயிலுக்குள் சென்று பார்ப்பதும் ஏன்? அதற்குக் காரணம் கூறு எனத் தன் பாடலில் சிந்திப்பதாய் வரிகள் தந்திருக்கின்றார்.  ஷஷஉள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்|| எனத்  திருமூலர் கூறிய வரிகள் இங்கு தென்படுகின்றன.
    சிலேடைப்பாடல்களும், நகைச்சுவைப்பாடல்களும் பாடுவதில் சிறப்புப் பெற்ற காளமேகப்புலவர்

     ''இம்மென்னு முன்னே யெழுநூறு மெண்ணூறும்
      அம்மென்றா லாயிரம்பாட் டாகாதோ – சும்மா
      இருந்தா லிருந்தே னெழுந்தேனே யாயின்
      பெருங்காள மேகம் பிள்ளாய்''

    என்று தன் பெருமையை அதிமதுரக்கவிராயிடம் கூறியுள்ளார். அவரது பாடல்களிலே பகுத்தறிவுப் பாடல்கள் பல காணப்படுகின்றன.

    பாடல்களில் ஒன்று
            
              ''தாதிதூ தோதீதூ தத்தைதூ தோதாதூ
               தூதிதூ தொத்தித்த தூததே – தாதொத்த
               துத்தித்த தாதே துதித்துத்தேத் தொத்தீது
               தித்தித்த தோதித் திதி''

                   தோழியின் தூதோ தீதானது. கிளி தூதுபோய்க் கூறாது. பாங்கியின் தூதானது நாட்களைக் கடத்தி வைக்கப்படும் தூதாகும். இறைவனைத் தொழுது தொடர்ந்தால், நல்ல பயனளிக்காமல் வீணாகப் போகும். பூந்தாதையொத்த தேமல் என் மீது விரைவாகப் பாய்ந்து மேலும் அதிகமாகாமல் சுவையான காதலனுடைய பெயரைக் கூறி என்னைக் காப்பாற்றி வைப்பாயாக. என ஓசைச்சுவைமிக்க பாடலிலே சொல்லை ஆட்சி செய்திருக்கும் பாங்கு மெச்சத்தக்கது. அதிலே இக்கால பகுத்தறிவுக் கொள்கையினையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

                     தேதுதித்து தொத்து தீதி என இறைவனைத் தொழுது தொடர்ந்தால், நல்ல பயனளிக்காமல் வீணாகப் போகும். எனப் பாடியிருப்பதை மனம் பதிக்கக் கூடியதாக இருக்கின்றது.

               எலி வாகனத்திலே வருகின்ற பிள்ளையாரைப் பார்வையுற்ற காளமேகப்புலவர்,

            ''முப்பான் மழுவும், முராரிநிருச் சக்கரமும்
             பார்ப்பான் கதையும், பறிபோச்சோ – மாப்பார்
             வளமிகுந்த மும்மதத்து வாரணத்தை ஐயோ!
             எலியிழுத்துப் போகிறதென்ன?

    என பருத்த உடலும், மிகுந்த வலிமையும், மும்மதமும் பொழிகின்ற களிற்றினைப் போன்ற முகப்பையுமுடைய விநாயகனை எலி கொண்டு போகிறதே ஏன்? இந்தப் பிள்ளையைப் பெற்றதாகச் சொல்லப்படுகின்ற சிவபெருமானின் மழுவாயுதமும், திருமாலின்சக்கரமும், பிரமனுடைய தண்டாயுதமும், எங்கேனும்பறிபோயிற்றோ?  என்று நகைச்சுவையாகப் பாடியிருக்கின்றார்.

             
              ''அப்ப னிரந்துண்ணி யாத்தாள் மலைநீலி
              ஒப்பரிய மாம னுறிதிருடி – சப்பைக்கால்
              அண்ணன் பெருவயிற னாறுமுகத் தானுக்கிங்
              கெண்ணும் பெருமை இவை''

    ஆறுமுகனைப் பார்க்கும் போது காளமேகம் அறிவு ஆறாய் ஒழுகுகிறது. தந்தையோ பிச்சை எடுத்து பிழைப்பவர், தாயோ மலையரசன் மகள், மாமனோ வெண்ணெய் திருடித் தின்பவன், அண்ணனோ சப்பைக்கால் உடையவன், இவையெல்லாமே  உனக்குப் பெருமையாக உள்ளன. என புராணங்களின் கதையை ஏளனம் செய்வதாய் இப்பாடலிலே காட்டியுள்ளார்.

               இவ்வாறு பெரியார் அவர்களும் கடவுள் பற்றி எண்ணற்ற வினாக்கணைகள் தொடுத்துச் சென்றுள்ளார். விஞ்ஞானிகளும் விண்முட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கின்றனர். இயற்கையின் பலபக்கப் பரிமாணங்களை ஆராய்ச்சிகளில் தெளிவுபடுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர்.

                ஆனால், பகுத்தறிவாளர்கள் எனக் கருதப்படுவோர் பலர் தனியே கடவுள் இல்லை என்று வாதிடுவது மட்டுமே பகுத்தறிவு என்று கருதிக் கொண்டிருப்பது ஆச்சரியத்துக்குரிய விடயமாகின்றது. நம் அறிவுக்குப் புலப்படாத விடயம் எதுவாக இருந்தாலும் அதை அறிந்து கொள்ளத் தேட முற்படுவதும், நடந்து கொண்டிருக்கும் சில விடயங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளாது அதற்குரிய உண்மை காரணத்தைத் தேடிக் கொள்ள முனைவதும் அவசியமல்லவா? எதிரியாக எம் கண்ணுக்குப் புலப்படுபவன் வேறு பலர் கண்களுக்கு நல்லவனாகத் தெரிவதும், நல்லவன் என்று நாம் ஏற்றுக் கொள்பவன் பலர் கண்களுக்குத் துரோகியாகப் புலப்படுவதும் நோக்கி அதுபற்றி ஏன் என்ற கேள்வியை முன்வைத்து ஆராய்ந்து பார்ப்பதும் ஒரு பகுத்தறிவின் பாற்படுகின்றது.

               ஒருவன் பார்க்கும் பார்வையில் உண்மைத் தன்மையைத் தேடும்போது சமூகத்திடையே அவன் பற்றிய நோக்கு பலர் பார்வைக்குக் கேள்விக்குரியாகத் தென்படும். ஆனால், மனதுக்கு ஒவ்வாமல், இருக்குமோ இல்லையோ, சரியோ தவறோ என்னும் ஆராய்ச்சியில் ஈடுபடாது, எதுவாகவாவது இருக்கட்டும் எல்லோரும் ஏற்றுக் கொள்கின்றார்களே! அப்படி ஏற்றுக் கொண்டாலேயே பலர் பார்வைக்கு நாம் நல்லவர்களாகத் தெரிவோம். பேரும் புகழும் எமக்குக் கிட்டும் என தப்பான ஒருவிடயத்திற்குத் துணைப்போவது மனிதனாக ஆறறிவு படைத்தமைக்குத் துரோகம் செய்வதாக முடியும். எதிர்காலச் சந்ததியினரையும் தப்பான வழிக்கு இட்டுச் செல்வதாக அமையும். மூடநம்பிக்கைகள் மலிவடைந்து மனிதநேயப்பண்புகளும் மழுங்கடிக்கப்படும்.

                    எனவே பகுத்தறிவு என்பது தனியே கடவுட்கோட்பாட்டை முறியடிப்பதல்ல. மனிதன்வாழும் பண்புகளின் நடத்தைகளின் தன்மை பற்றியும் ஆராய்வது என்பதில் மனம்பதிக்கவேண்டும்.
     













    வியாழன், 3 அக்டோபர், 2013

    ஸ்ரீஜீவகன் அவர்களுடன் பேட்டி



    ஜேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் தலைவர், டோட்முண்ட் வள்ளுவர் தமிழ் பாடசாலை அதிபர் பொன்னுத்துரை ஸ்ரீஜீவகன் அவர்களுடைய தமிழ்ச் சேவை பற்றியும் திருக்குறள் மனனப் போட்டி சம்பந்தமானதுமான ஒரு பேட்டிப் பதிவு
     


    1.    வணக்கம் ஸ்ரீஜீவகன் அவர்களே!
          வணக்கம் சகோதரி கௌசி அவர்களே!

    2.    16.11.2013 அன்று டோட்முண்ட் நகரத்தில் நடைபெற இருக்கின்ற திருக்குறள் மனனப் போட்டி சம்பந்தமாக உங்களுடன் சிறிது பேசலாம் என்று இருக்கின்றேன்.  அத்துடன் ஜேர்மனியில் வளருகின்ற எதிர்காலத் தமிழ் சிறுவர்களுக்காக நீங்கள் ஆற்றி வரும் சேவைகள் பற்றியும் அறிந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். எத்தனையாம் ஆண்டு நீங்கள் புலம்பெயர்ந்து ஜேர்மனியை வந்தடைந்தீர்கள்?

    திருக்குறள் போட்டி விடயமாகவும், தமிழ்ச் சிறுவர்களுக்கான தமிழ்வளர்ச்சிச் சேவைகள் பற்றியும் அறியமுனையும் தங்களைப் பாராட்டி வரவேற்றுக் கொள்கின்றேன். உங்களின் அறியமுனையும் கேள்விகளுக்கான பதில்களைத் தருகின்றேன்.
    1985ஆம் ஆண்டு பங்குனி மாதம் 24ஆம் திகதி ஜேர்மன் நாட்டிற்கு வந்து சேர்ந்தேன்.


    3.    இவ்வாறு பாடசாலை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி உங்கள் மனதில் தோன்றியது? எத்தனையாம் ஆண்டு முதற் பாடசாலை உங்களால் தோற்றுவிக்கப்பட்டது?

    ஜேர்மனியில் காமன் நகரத்தில் 1985ஆம் ஆண்டு ஏழாம் மாதத்திலிருந்து திரு.சிவஞானகுரு அவர்களின் மூன்று பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பாடத்தை அவர்களது வீட்டில் படிப்பிக்கத் தொடங்கினேன். பின்பு காமன் நகரத்தில் வசித்த பிள்ளைகளின் நன்மை கருதி, பத்தாம் மாதம் சரஸ்வதி பூசை நாளில், தனியாக ஆண்கள் குடியிருந்த வீட்டின் முன்அறையில் பாரதி தமிழ்ப் பாடசாலை ஒன்றினை ஆரம்பித்துக் கொண்டேன். இதற்கு உதவியாக காமன் நகரத்தில் இருந்த எல்லோருடைய ஒத்துழைப்புடன், காமன் தமிழர் நலன்புரிச் சங்கமும் மிகுந்த ஒத்துழைப்பை வழங்கியது. இது தொடர்ந்து கரிதாஸ் நிறுவனத்தின் உதவியுடன் பல பொது நிறுவனங்களின் கட்டிடங்களில் நடைபெற்றது. அயல் கிராமங்களில் குடியிருந்தவர்களின் பிள்ளைகளும் சேர்ந்து படித்தார்கள். இவ்வாறு பாடசாலை தொடங்குவதற்கான எண்ணங்கள் ஆரம்ப காலங்களில் இருந்தே, என்கடன் கல்விப்பணி என என்னுடன் ஆரம்பித்துக் கொண்டுள்ளது. அது பற்றிய சிறு விளக்கத்தினைத் தரலாம் என நினைக்கின்றேன்.
      
    நான் இலங்கையில் படித்துக் கொண்டிருக்கும் காலத்தில், அதாவது 1973ஆம் ஆண்டில், வீட்டில் ஓர் பாடசாலையை ஆரம்பித்து எனது கிராமப் பிள்ளைகளுக்குத் தமிழ், சமயம், கணக்கு பாடங்களை நடாத்தி வந்தேன். அதனைத் தொடர்ந்து நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் உயர்தர வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது, அப்பாடசாலையில் ஆசிரியர்கள் இல்லாத நேரங்களில் ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான தமிழ்மொழிப் பாடத்தையும், கணக்கியற் பாடத்தையும் படிப்பிக்க அதிபரால் கேட்கப்பட்டு படிப்பிக்கத் தொடங்கினேன். இவ்வாறாகத் தொடங்கிய ஆசிரியர் பணி மனதிற்கு சந்தோசத்தையும், நான் படித்ததை மற்றவர்களுக்கு கொடுப்பதற்கான மனமகிழ்வையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பல தனியார் பாடசாலைகளில் கணக்கியல், பொருளியல் பாடங்களை படிப்பித்தேன். இதுவே இன்றுவரை என்னை ஆட்கொண்டு கல்விப் பணியைத் தொடரச் செய்கின்றது. இது போதும் என நினைக்கின்றேன்.

    4.    நல்லது. அறிவு புகட்டல் என்பது இலங்கையில் சிறுபிராயத்தில்      
           இருக்கும்போதே உங்களுக்கு முளையிட்டுவிட்டது என்பது              
           புரியகிறது. நீங்கள் எத்தனை பாடசாலைகள் ஜேர்மனியில்   நடத்திக்     
           கொண்டிருக்கின்றீர்கள்?
    ஜேர்மனியில் 52 பாடசாலைகள் இணைந்திருந்து செயற்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால் பல்வேறு நிலைமைகளினால் இன்று 23  பாடசாலைகளே ஜேர்மன் தமிழ்க் கல்விச் சேவையுடன் தொடர்ந்து இணைந்து செயற்படுகின்றன.

    5.    வெளி இடங்களிலும் பல பாடசாலைகள் நடத்துவதாக அறிகின்றேன்.  
            அது பற்றிச் சிறிது விளக்குவீர்களா?
    சுவிஸ், பிரான்ஸ், நெதர்லாண்ட் ஆகிய நாடுகளில் தொடர்ந்து பாடசாலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் டென்மார்க் நாட்டில் இரண்டு வருடங்களும், இலண்டனில் ஒரு வருடமாகவும் பரீட்சைகள் நடைபெற்றன. நோர்வே நாட்டில் உதவிகள் செய்து அவர்களையே பாடசாலைகளை நடாத்தும்படி கூறி உள்ளோம்.

    6.    ஐரோப்பியப்பரப்பில் தமிழுக்கும் எதிர்காலத்              
           தலைமுறைகளுக்கும்       நீங்கள் செய்யும் சேவை  
           பாராட்டப்படவேண்டியது. புலம்பெயர்வின் வாழ்க்கைச் சிக்கல்கள் 
           மத்தியில் இவ்வாறு நீங்கள் தொழிற்படுவது மிகவும் கடினம் என்று   
           நான் அறிவேன். இருப்பினும் இப்படிப் பரவலாகப் பாடசாலைகள் 
           அமைத்துப் பிள்ளைகளை ஊக்குவிப்பது என்பது இலகுவான காரியம் 
           அல்ல. இவற்றை எப்படிக் கொண்டு நடத்துகின்றீர்கள்?  
           உங்களுக்கு  வேறு யாருடையதும் உதவிகள் கிடைக்கின்றனவா?
    ஆரம்பத்தில், பாடசாலைகள் அமைத்துத் தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தாய்மொழியாம் தமிழ் படிப்பிக்க வேண்டும் என்ற பெருநோக்கில் பல நகரங்களுக்கும், ஊர்களுக்கும் சென்று பெற்றோர்களுடன் கலந்தாலோ சனைகள் செய்தும், அதன் முக்கியம் பற்றி எடுத்துக் கூறியும், ஆசிரியர்களைத் தேடித்தெரிந்தும், அதிலும் சேவை மனப்பான்மையுடன் படிப்பிக்கக் கூடியவர்களைக் கண்டும், பாடசாலைகளை அமைக்கப் பல சிரமப்பட்டுக் கொண்டேன். 1985ஆம் ஆண்டு காமன் நகரத்தில் 'பாரதி தமிழ்ப் பாடசாலையும்', 1987ஆம் ஆண்டு கம் நகரத்தில் 'கம் தமிழ் பாடசாலையும்', அந்தந்த நகரப் பெற்றோர்களின் உதவியுடன் அமைத்துக் கொண்டோம். இதனைத் தொடர்ந்து 1989ஆம் ஆண்டு டோட்முண்ட் நகரத்தில் நடந்த இலக்கியச் சந்திப்பின் மூலம் பல சமூக ஆர்வலர்களின், ஆசிரியர்களின் தொடர்புகள் கிடைக்கப் பெற்று ஜேர்மன் தமிழ்க் கல்விச் சேவையை அவர்களுடன் சேர்ந்து உருவாக்கிக் கொண்டோம். அக்கல்விச் சேவையின் செயற்பாட்டில் மும்முரமாகச் செயற்பட்டு 12 பாடசாலைகளை உருவாக்கிச் செயற்பட்டோம். இதன் வளர்ச்சிப் போக்கில் பல இடையூறுகள் ஏற்பட்டன. இதன்போது நேரடியாக எனக்கு பல அச்சுறுத்தல்களும், தாக்கங்களும் ஏற்படலாயின. இதனை அறிந்த பலர் எதுவித அறிவித்தல்கள் ஏதுமின்றி தாங்களாகவே விலகிச் சென்றுவிட்டனர். இது 1991ஆம் ஆண்டளவில் ஏற்படவே தனியாகச் செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இருந்தும் சிலர் எனது செயற்பாட்டுக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து செயற்பட்டனர். (அவர்களின் பெயர்களை அவர்கள் நன்மை கருதித் தவிர்க்க வேண்டியுள்ளன) தொடர்ந்து தனித்துவமாக 1993ஆம் ஆண்டு வரை செயற்பட்டு, 1993ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் பலரை அழைத்து நிர்வாக அமைப்பு முறையை ஏற்படுத்தி செயற்படத் தொடங்கினோம். அன்று தொட்டு இன்று வரை நிர்வாக அமைப்பு முறையில் கல்விப்பணிக்கான சேவை, ஜேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் மூலம் நடைபெற்று வருகின்றது.       

    7.    எம்மவர் மத்தியில் போட்டியும் பொறாமையும் கேட்பதற்கு ஒன்றும்  
           புதியதல்ல. ஆயினும் தடைகள் தாண்டி தொடர்ந்து ஊக்கத்துடன் 
          தொழிற்படும் உங்களைப் பாராட்டியே தீரவேண்டும். 
          பாடசாலைகளுக்கான பாடத்திட்டம் எவ்வாறு தயாரிக்கின்றீர்கள்?

    எமது கல்விச் சேவையின் பாடத்திட்டம், ஆரம்பத்தில் இருந்தே இலங்கைப் பாடத்திட்டத்திற்கு அமைவானது என ஆக்கிக் கொண்டோம். இதில் இலங்கையில் நடைமுறையிலிருக்கும் பாடப் புத்தகங்களை எடுத்து அதில், இங்கு படிப்பிப்பதற்கு ஏற்ற முறையில் ஆசிரியர்களின் ஆலோசனைகளைப் பெற்றுப் பாட அளவுகளைத் தயாரித்துப் பாடத்திட்டத்தை ஆக்கிக் கொள்கின்றோம். பாடத்திட்டத்தின் இறுதித் தயாரிப்பு பரீட்சைக் குழுவினால் திட்டமிடப்படுகின்றது.

    8.    பாடசாலையில் பரீட்சைகள் நடத்தப்படும்போது வினாத்தாள்கள் 
           உங்கள் பாடசாலை ஆசிரியர்களால் தயாரிக்கப்படுகின்றனவா? 
           அல்லது இலங்கையிலிருந்து வரவழைக்கப்படுகின்றனவா?

    வருடாந்தம் நாம் நடாத்துகின்ற தமிழ்மொழிப் பொதுப் பரீட்சைக்கு ஒவ்வொரு பாடசாலையில் இருந்து கிடைக்கும் கேள்விகளிலிருந்தும், இலங்கைக் கேள்வித்தாள்களின் கேள்விகளின் அமைப்பைக் கவனித்தும், எமது கல்விச் சேவையின் பரீட்சைக்குழுவின் ஆலோசனையுடன் கேள்விகள் தயாரிக்கப்பட்டு இறுதி வினாத்தாள்களைத் தயாரித்துக் கொள்வோம்.

    9.    ஒரு பாடசாலை நடத்துவது என்றாலே பணம் அதிகம் தேவைப்படும். 
           ஆனால், நீங்கள் இத்தனை பாடசாலைகள் நடத்துகின்றீர்கள்.       
           அதற்கான பணவசதிகளை எங்கிருந்து பெற்றுக்கொள்ளுகின்றீர்கள்?

    ஒவ்வொரு பாடசாலைகளும் அந்தந்தப் பகுதியின் பெற்றோர்களினதும், ஆசிரியர்களினதும்,  சமூகநிறுவனங்களினதும் உதவியுடன் நடைபெறு கின்றன. சில பாடசாலைகள் ஆசிரியர்களாலும், சில பாடசாலைகள் பெற்றோர்களினாலும் நிர்வகிக்கப்படுகின்றன. இதற்கான செலவுகளை பெற்றோர்களும், சில இடங்களில் சமூகசேவை நிறுவனங்களும் பங்கீடு செய்து கொள்கின்றன. நாம் எல்லாப் பாடசாலைகளையும் அவர்கள் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி தேவையான உதவிகளையும், ஆலோசனை களையும் வழங்கி பாடசாலைகளை நடாத்த உதவுகின்றோம். எமக்கு பல செலவுகள் ஏற்படுகின்றன. இவற்றை நாம் ஈடுசெய்வதற்காக பரீட்சையின் போது பெற்றுக்கொள்ளும் சிறுதொகைப் பரீட்சைக் கட்டணத்தையும், சில பாடசாலைகள் தரும் சிறு அன்பளிப்புக்களையும் பயன்படுத்திக் கொள்கின்றோம். 

    10.    ஐரோப்பிய மண்ணிலே தமிழை தொடர்ந்து நிலைநாட்டுவதற்கு 
            எமது பெற்றோர்கள் முனைந்து நிற்பதனாலேயே இதுபோன்ற 
            சேவையை உங்களால் செய்யமுடிகின்றது. எனவே அவர்களுக்கு 
            நன்றி சொல்லத் தமிழர்களாகிய நாம் கடமைப்பட்டிருக்கின்றோம். 
            இப்போது அடுத்த விடயத்திற்கு வருகின்றேன். 16.11.2013 அன்று 
            ஜேர்மன் ரீதியில் நீங்கள் திருக்குறள் மனனப்போட்டி நடத்த 
            உள்ளதாக அறிகின்றேன். முன்னமே நீங்கள் வயதுப் பிரிவின்படி 
            விண்ணப்பப் படிவம் அனைவருக்கும் அனுப்பியுள்ளீர்கள். என்ன 
            நோக்கத்திற்காக இப்போட்டி நிகழ்வுகளை நடத்துகின்றீர்கள் என்று 
            விளக்கமாகச் சொல்லமுடியுமா?
    திருக்குறள் தமிழ்மக்களின் வாழ்வியலை எடுத்துக் காட்டும் ஒரு இலக்கண நூல். மக்களை மக்களாக வாழ்வதற்கு வழிகாட்டும் ஒரு அற்புதமான அறநூல். இதனை தமிழ்மக்களும், உலகமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இவ்வரிய பொக்கிசமான தமிழ்மக்களின் வாழ்வியல் நூலை, எல்லாத் தமிழ்ப் பிள்ளைகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற பெரிய ஆவலும், வள்ளுவர் வழியை அறிந்து அதன்படி வாழவழி அமைப்பதற்கும் திருக்குறள் போட்டி பயன்படும் என்ற எண்ணமும், இதன் மூலம் பிள்ளைகளின் தமிழாற்றலை வளர்ப்பதோடு, அவர்களின் தமிழ்மொழிப் பேச்சாற்றலையும் வளர்க்கலாம் என்ற நோக்கமும், எனது திருக்குறள் பற்றும் திருக்குறள் போட்டியைத் தொடர்ந்து நடாத்தி வருகின்றமைக்கு மூலகாரணமாகும்.

    11.    இப்பேட்டியின் நோக்கமே இதனை வெளி உலகம் அறியவேண்டும் 
            என்பதுதான். அதனை உங்கள் பதிலில் இருந்து அனைவரும் 
            புரிந்திருப்பார்கள். எத்தனை வருடங்களாக இத்திருக்குறள் 
            போட்டிகளை நடத்தி வருகின்றீர்கள்?

    பல்வேறு பாடசாலைகளுக்கு தெரியப்படுத்தி ஆங்காங்கு திருக்குறள் போட்டிகள் நடந்து வருகின்றன. ஆனால் டோட்முண்ட் நகரத்தில் கடந்த ஏழு வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்று, இம்முறை எட்டாவது வருடமாக நடைபெறவுள்ளது.

    12.    11 வயதுவரையுள்ள பிள்ளைகளுக்கான போட்டியில் அவர்கள் 
             திருக்குறள்களை மனனம் செய்து கூறுதல் வேண்டும் என்று 
             கேட்டிருக்கின்றீர்கள். இதனால், பிள்ளைகள் என்ன பலன்  
             பெறுகின்றார்கள் என்று கருதுகின்றீர்கள்?

    திருக்குறளைத் தெரிந்திருக்கிறார்கள், திருவள்ளுவரைத் தெரிந்திருக் கிறார்கள், தமிழ்நூல் என்பதைத் புரிந்திருக்கின்றார்கள். தமிழ் சொற்களைத் தெரிந்து, பழகி சிறந்த முறையில் உச்சரித்துப் பேசக் கற்றுக் கொண்டுள்ளார்கள். எதிர்காலத்தில் அறிந்தும், புரிந்தும், விளங்கிக் கொண்டும் தேடல் செய்வார்கள் எனக் கருதுகின்றேன்.

    13.    இத்தனை வருடங்கள் இப்போட்டிகளை நடத்தியதற்கு நீங்கள் கண்ட 
             பலனை வெளிப்படையாகக் கூறுங்கள்.
    முதற் கேள்விக்குக் கூறிய பதிலுடன், மேலும் பிள்ளைகள் மேடைக் கூச்சத்தை விரட்டியிருக்கின்றார்கள். அவர்களில் பலர் தொடர்ந்து திருக்குறள் போட்டிக்கு முகம்கொடுக்க விரும்புகின்றார்கள். பெற்றோர் களின் மனம் மகிழ்ந்திருக்கின்றது. அவர்களும் திருக்குறளைப் பழக்கப்படுத்திக் கொள்கின்றார்கள். ஒவ்வொருவர் வீட்டிலும் திருக்குறள் புத்தகத்தைப் பாதுகாத்துக் கொள்கின்றார்கள். இதுவே பெரும் பயனாகக் கருதுகின்றேன். 

    14.    நன்றி ஸ்ரீஜீவகன் அவர்களே. சிறப்பான விடைகளை அளித்தீர்கள். 
             உங்கள் குறிக்கோள்கள் நிறைவேறிப் புலம்பெயர்வில் நல்ல 
             சிறப்பான சமுதாயம் உருவாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்  
             கொள்ளுகின்றேன்.
    நன்றி சகோதரி. பலமுனைப்பட்ட கேள்விகள் மூலம், திருக்குறள் போட்டி பற்றியும், கல்விச் சேவை பற்றியும் வெளிக்கொணர வேண்டும் என்ற தங்களின் ஆவலைப் பாராட்டி வாழ்த்துகின்றேன்.


    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...