• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 26 ஜனவரி, 2018

    வாசிக்க மறக்கும் தலைமுறை





    ஆதிமனிதன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தத் தனது உடல் அங்கங்களைப் பயன்படுத்தினான். அதன் பின் மனித வளர்ச்சியில் மொழியின் தேவை உணரப்பட்டது. சத்தங்கள் வரிவடிவங்களாகி மொழி உருவானது. மொழி மனித வாழ்வின் தொடர்பாடலுக்கு முக்கிய அம்சமாகப்பட்டது. அடுத்தடுத்த வளர்ச்சியில் உண்பது உறங்குவது என்னும் நிலை மாறி அறிவுத்தேவை மூளை வளர்ச்சியில் முன்னேறிக்கொண்டு வந்தது. கற்றல், கற்பித்தல் என்பன அறிவுபட்ட சமுதாயத்துக்கு அடித்தளமிட்டது.

     ``விலங்கொடு மக்க ளனையர் இலங்கு நூல்
      கற்றாரோடு ஏனை யவர்

    கல்வியறிவுடையோரே மனிதரென்றும், அஃதிலாதோர் விலங்குகளெனவும் திருவள்ளுவர் எடுத்தியம்புகின்றார்.

    ``நீட்டோலை வாசியான் நின்றான் குறிப்பறிய மாட்டான் காட்டில் நன்மரம்” என்று சொன்னார் ஒளவைப்பிராட்டியார்.

    பரந்துபட்ட அக்கல்வியறிவை சிந்தையில் நிறுத்தி அறிவுச் செல்வத்தை சிரத்தையுடன் தேடும் போது மனிதவாழ்வு சிறப்படைகின்றது. அக்கல்வியின் ஆணிவேராக வாசித்தலே அமைகின்றது. இளமையிற் கல்வி சிலையில் எழுத்து என்பது முதுமொழி. மனவிசாரங்களும், மனவிகாரங்களுமற்ற இளமைப்பருவக்கல்வி சிந்தாது, சிதையாது, சிதறாது மனதில் நன்றாகப் பதியும். எனவே கல்விக்கு அடித்தளமான வாசிப்பு இளமையிலேயே அரும்பி வருதல் வேண்டும். வாசிப்பு என்பது மேலோட்டமாய் வாசித்தல், ஆழமாய் வாசித்தறிதல் என்று இரு வகைப்படுகின்றன. சஞ்சிகைகள் மேலோட்டமாய் வாசிக்கப்படுகின்றது. அதுகூட மூளையின் ஏதோ ஒரு மூலையில் பதியப்பட்டு அவ்வப்போது எமது தேவைக்கு வெளிக் கொண்டு வரப்படுகின்றது. ‘‘கற்க கசடற கற்க‘‘ என்பது போல சந்தேகம் நீங்க கற்கும் போது ஆழ்மனதில் கற்கும் விடயம் ஆழமாகப் பதியப்படுகின்றது.

                       ஆரம்பக் கல்வியைத் தொடங்குவதற்குப் பாடசாலைக்கு வரும் மாணவன் ஏறத்தாள 2700 க்கு மேற்பட்ட சொற்களைக் கற்றுக் கொண்டே வருகின்றான் என ஆய்வுகள் கூறுகின்றன. கற்கும் ஆவலுடன் வருகின்ற ஒரு சிறுவனின் மூளையானது வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் போது மேலும் மெருகேற்றப்படுகின்றது. புதிய சொற்களைக் கற்கும் ஆர்வம் தேடலின் உச்சத்திற்குக் கொண்டுவிட வாசித்தலின் பெறுமதி ஊக்குவிக்கப்படுகின்றது. மொழிப்பயன்பாடு அதிகரிக்கின்றது. கற்றலில் மொழிச் செல்வாக்கு அதிகரிக்கின்றது. வாசித்தலில் ஊக்கம் குறைந்த மாணவன் கற்றலும் பின் தங்கி இருப்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது.

                வாசித்தலுக்கு மனம், கண், நா, காது, மூக்கு, குரல் அனைத்தும் ஒத்துழைக்க வேண்டும். அத்துடன் வாசித்தலுக்கு மன ஒருமைப்பாடு அத்தியாவசியமாகின்றது. வாய்விட்டு வாசிக்கும் போது ஏற்படுத்தப்படுகின்ற உச்சரிப்பானது வாய் மூடி மனதால் வாசிக்கின்ற போதும் எமது மனதினுள் ஒலிக்கும். எனவே கற்பிக்கின்றபோது உச்சரிப்பு சரியான முறையில் கற்பிக்கப்பட வேண்டும். வெறுமனே வாசித்துச் செல்லும்போது அதில் பயன் ஏதும் கிடைப்பதில்லை. பொருளுணர்ந்து மனதுள் ஆழப்பதிக்கும் போதே வாசிப்பு முழுமையுறுகின்றது. அபிவிருத்தியடைந்த நாடுகளில் வாசிப்புப் பழக்கமானது பண்பாட்டு விழுமியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

                       கல்வியைப் பெறுவதற்கு காட்சி, அனுபவம், கேள்வி முதலிய பலவழிகள் உளவேனும், அவற்றுள் தலைசிறந்தது காட்சிப்படுத்தல் மூலம் கிடைக்கும் வாசித்தலே. செய்தித்தாளிலே, ஆசிரியர் குறிப்பு, உலகச்செய்திகள், விளையாட்டுத்துறை, பொதுஅறிவு, இலக்கியம், குறுக்கெழுத்துப் போட்டி போன்ற பலவிடயங்கள் அடங்கிக் காணப்படுவதனால், ஒவ்வொருத்தரும் தாம் தமக்கு விருப்பமான துறையைத் தெரிவுசெய்து வாசிக்கக்கூடியதாக இருக்கின்றது. செய்தி, கட்டுரை, விமர்சனம், அறிக்கை போன்றவை செய்தித்தாளில் இடம்பெறுவதால் இவை ஒவ்வொன்றின் வேறுபாடுகளையும் அறிந்து கொள்ளக்கூடியதாகவும் இருக்கின்றது. 
                   
                     இன்று கணனித்துறை உலகமெல்லாம் மிகச்சிறந்த துறையாகக் கருதப்படுகின்றது. வாசித்தலுக்கு இலகுவானதாகவும் உலகம் முழுவதும் இருக்கும் விடயங்களைத் தேடி வீட்டினுள்ளே இருந்தபடி தேடிப் பெற முடியாத பல புத்தகங்களை விரல் தட்டலின் மூலம் கண் முன்னே கொண்டுவந்துவிட முடிகின்றது. இப்போது கைக்கடக்கமான மின்சாரப்புத்தகம் (E Book) பலர் கைகளில் தவழுகின்றது. தேவையான புத்தகத்தைக் கணனியிலிருந்து பதிவிறக்கும் செய்து போகும் இடங்களுக்கெல்லாம் கொண்டு சென்று வாசிக்கக் கூடியநிலை ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறு வாசித்தல் மனிதர்களிடையே மேலும் மேலும் வளர்க்கப்படுகின்றது.  சஞ்சிகையிலே வருகின்ற தொடர்கதையானது மக்களிடையே தொடர்ந்து வாசிக்கும் பழக்கத்தைத் தூண்டுவதாக இருக்கின்றது. சிரிப்பதனால் நோய் தீரும். நகைச்சுவை துணுக்குக்கள்  வாசகரைச் சிரிக்கவைத்து அவர்கள் மனதிலே மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது. மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய ஓமோன்கள் சுரக்கப்பட வாசித்தலும் ஒரு காரணமாக அமைகின்றது.

                கணிதம், விஞ்ஞானம், மொழி முதலிய பாடங்களைக் கற்கும் மாணவன் ஒரு விவேகியாக இருந்தாலும் பொது அறிவு இலனாயின் அவனுடைய விவேகத்தால் முழுப்பயன் பெறமுடியாமல் போய்விடும். பாடநூல்களோடு பற்பல உலகச்செய்திகள் அறியும் போதே பரந்துபட்ட உலக அறிவு பெற்று உலகுக்கேற்ப வாழப்பழகிக் கொள்வான். பல்வேறுபட்ட கலாச்சார விழுமியங்களை வாசிப்பின் மூலம் அறிந்து கொள்வதுடன் நல்லன தீயன எவையெனப் பகுத்துணரும் பண்பைப் பெறும் அவனுள்ளம், விரிவடைகின்றது. எதிர்கால வாழ்வுக்குத் தம்மை ஆயத்தஞ் செய்து கொள்ளும் உன்னதநிலை உண்டாகின்றது.  வாசித்தலைப் பொழுதுபோக்காகக் கொண்டிருக்கும் ஒரு மனிதன் வேறு தேவையற்ற எண்ணங்களுக்குள் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாதவனாகக் காணப்படுவான்.

          எதிர்காலச் சிற்பிகள் அறிவாளிகளாகவும் உள்ளத்தால் உயர்ந்தவர்களாகவும் வளர வேண்டுமானால், கண்டது கற்கப் பண்டிதனாவான் என்பதற்கிணங்க, ஒவ்வொருவரும் நல்லனவென கண்டவற்றை வாசித்துக் கற்றுக் கொள்ளுதல் வேண்டும். அதுவே அவனை வாழ்வின்  உச்சிக்கு இட்டுச் செல்லும். ஆய்வுக்கு வழிவகுக்கும், புதிய கண்டுபிடிப்புக்களுக்கு ஊக்கமளிக்கும், புதுமை விரும்பியாக மாற்றும், சிறந்த சிந்தனைவாதிகளாகத் திகழ வைக்கும்.
           
    கண்டது கற்கப் பண்டிதன் ஆவான் என்னும் முதுமொழிக்கிணங்க நாலுங்கற்று உலகின் நாயகர்களாய்த் திகழ்வோம்.

    சனி, 13 ஜனவரி, 2018

    தை தாங்கிவரும் தைப்பொங்கல்

                               

                               வாழ்க்கை பொங்க வசந்தம் பெருக உள்ளமெல்லாம் பொங்கித் ததும்ப நன்றியை மனமுவந்து, நாம் வாழ்வதற்கு ஆதாரமான ஆண்டவன் சூரியபகவானுக்கு நன்றி செலுத்துகின்ற நாளே இப் பொங்கல் பண்டிகை என்பது யாவரும் அறிந்ததே. பகலவன் இன்றி உயிர்கள் ஏதுஉலகுதான் ஏது? பாரபட்சம் பார்த்து பகலவன் தன் கதிர்களைப் பூமிக்குத்  தருவதில்லை. அதனால் நன்றி சொல்லும் மகத்தான பண்புக்கு அடையாளமே இப்பொங்கலின் திருநாளாகும். இதனையே ஜேர்மனியர் Erntedankfest என்று தோட்டங்களில் விளையும் உருளைக்கிழங்கு, பூசணி போன்ற மரக்கறி வகைகளை படைத்துக் கொண்டாடுகின்றார்கள்.
                   
                             நாம் இன்றைய தினம் மாத்திரமே சூரியனுக்கு படையல்கள் படைத்துக் கொண்டாடிவிட்டு வருடம் முழுவதும் சூரியனின் கதிர்கள் எம்மீது விழவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். ஆனால், பத்தாயிரம் ஆண்டுகள் பழமையான அஸிரிய, அகேடிய, பாபிலோனிய நகரங்களின் முக்கிய வழிபாட்டுக் கடவுளே சூரியன்.  இவர்கள் சூரியனை ஷாமேஷ் என்று அழைக்கின்றார்கள்.
                    
                                 புத்தி, ஆரோக்கியத்தை அளிக்கும் கடவுளாகக் கருதி எகிப்திய மக்கள் அமான் என்றும் கிராஸ் என்றும் சூரியனையே வழிபடுகின்றனர். வீரம் தரும் கடவுளாக பெரு, மெக்சிக்கோ நாட்டவர்கள் சூரியனை வழிபடுகின்றனர். பெருநாட்டிலுள்ள இன்கா என்னும் பழங்குடியினர் தாங்கள் சூரியனிலிருந்தே வந்தவர்கள் என்று கூறுகின்றனர். ஜப்பானிலும், சீனாவிலும் சூரியன் பெண்கடவுளாக வணங்கப்படுகின்றது.
                
                   தைமாதம் பிறக்கும்போது சூரியன் மகரராசியில் பிரவேசிக்கின்றார். இக்காலப்பகுதியில் தட்பமும் வெப்பமும் மிதமாக இருக்கும். இதனால் பயிர்கள் நன்றாக விளைந்து நற்பலனைத் தருகின்றன. அதனால் அப்பலனைத் தரும் சூரியனுக்குப் பொங்கல் படைத்து பொங்கலோ பொங்கல் என்று தமிழரும், ஹங்கரோ, ஹங்கர் என்று ஜப்பானியரும் பொங்கல் விழாக் கொண்டாடுகின்றனர். ஜப்பானியரும் சீனநாட்டவர்களும் சூரியனைப் பெண்தெய்வமாகவே வழிபடுகின்றனர். எமக்கு மாட்டுப் பொங்கல் போல் ஜப்பானியர்களுக்கு குதிரைப்பொங்கல் அமைகின்றது.  குதிரைகளை நன்றாகக் கழுவி அலங்கரித்து மாலை போட்டு இனிப்புவகை கொடுத்துக் கொண்டாடுவார்கள். இதேபோல் பர்மாவிலும் இந்நாளில் புத்தாடை அணிந்து கால்நடைகளுக்குப் பூஜை செய்வது வழக்கத்தில் இருக்கின்றது. 
                  
                                    காலைச் சூரிய வழிபாடு மனிதனுக்குச் சாலச்சிறந்தது என்பது யோகக் கலையில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. இது இன்று நேற்றல்ல ஆதி மனிதன் கூட சூரியனை வழிபட்டுத் தன் நன்றியைத் தெரிவித்திருக்கின்றான். காயத்திரி, உஷ்ணிக், அனுஷ்டப், பிரஹதி, பங்கதீ, திருஷ்டுப், ஜகதி என்ற பெயர்களையுடைய குதிரைகள் சூரியபகவானை இழுத்து வருவதாக நம்பப்படுகின்றது. சூரியனுக்குரியவையாக தாமிர உலோகம், கோதுமைப்பண்டம், செந்தாமரை, செம்பட்டு, கபிலைப்பசு, மாணிக்கம், எருக்கங்குச்சி, காரப்பொருள்கள் போன்றவை கொள்ளப்படுகின்றன. மகரசங்கராந்தி நாளன்று இத்தைப்பொங்கல் கொண்டாடப்படுவதனால், மேற்கு வங்காளத்திலுள்ள சாகர்தீவு ஸ்நான கட்டடத்தில் புனிதநீராடி பிதிர்க்கடன் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்து வருகின்றது.
               
                                             
                   அறுவடை காலத்தில் அறுவடை சிறப்பாக அமைய சங்ககாலத்திலே பெண்கள் விரதம் இருந்து தைமாதம் முதல் நாளில் விரதத்தை முடித்து பயிர் சிறக்க உதவிய பூமி, கால்நடைகள், சூரியன் போன்றவைக்கு பொங்கல் படைத்து வழிபட்டார்கள். இலக்கிய காலத்திலேயே இந்திர விழா என்ற பெயரில் காவிரிப்பூம்பட்டினத்தில் கொண்டாடப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. மதுரை மாவட்டத்தில் மாட்டுப் பொங்கலில் உழவுக்கு  உதவிய மாட்டுக்கு பொங்கல் படைத்து ``பொங்கலோ பொங்கல் மாட்டுப் பொங்கல், பொங்கல் படி பெருக, பானை போங்க, நோவும் பிணியும் தெருவோடு போக” என்று கூறி மாடு தின்ற எச்சில் தண்ணீரை மாட்டுத்தொழுவத்திலே தெளிப்பார்கள்.
                  பொங்கல் கொண்டாட்டம் போகிப்பொங்கல், பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்கள் கொண்டாடப்படுகின்றன. போகிப்பொங்கல் என்பது தாம் பயன்படுத்திய, வீட்டிலே பாவனையற்று தேங்கிக் கிடக்கும் பழைய பொருட்களை அகற்றும் தினமாகக் கருதப்பட்டது. இத்தினம் மனங்களில் தேக்கி வைத்திருக்கும் குப்பைகளையும் தெரிந்தெடுத்து அகற்றும் தினமாகும். இது மார்கழி மாதக் கடைசி தினத்தில் கொண்டாடப்படுகின்றது. பொங்கல் தினத்திலே உழவுத்தொழிலுக்கு உதவிய சூரியனுக்கும், மாட்டுப்பொங்கலிலே  உழவுத்தொழிலுக்கு உதவிய கால்நடைகளுக்கும், நான்காம் நாள் கொண்டாடப்படும் காணும் பொங்கலில் தொழிலில் முழுமூச்சாக ஈடுபட்டு அறுவடை முடித்தவர்கள். இன்றைய நாளில் தங்களுடைய உறவினர்கள் நண்பர்களைச் சந்தித்து பொங்கலை வழங்கி அன்பைப் பகிர்ந்து கொள்வார்கள்.  
              
                      பொதுவாக காதரிசி எனப்படும் வெல்லம் கலந்த பச்சரிசியை ஊறவைத்து அதில் சீனி, ஏலக்காய், பிசைந்த வாழைப்பழம் ஆகியவற்றைக் கலந்து செய்வதுதான் இக்காதரிசி. முதன்முதலாகக் காது குத்தும் பிள்ளைகளுக்குக் கொடுப்பதனால் இப்பெயர் வழங்கப்பட்டது. இதனைப் பொங்கல் அன்று படைப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், தற்பொழுது அவரவர் வசதிக்கேற்ப பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். குளிர் கூடிய ஐரோப்பியநாடுகளில் மின்னடுப்பில் பானை வைத்து வசதிக்கேற்ப சூரியன் வெளிவரும் நேரம் பார்த்து பொங்கல் படைத்து வழிபடுவர். சிலவேளைகளில் அன்றைய பொழுது சூரியன் மேகக்கூட்டங்களுக்குள் மறைந்தே இருப்பார். ஆயினும் காணாத போதும் கண்டதாகக் கருத்தில் கொண்டு பொங்கல் படைத்துத் தம் கலாச்சாரத்தைப் பேணுகின்றனர். 
                                       சூரியன் பற்றிய அற்புத நிகழ்வு ஒன்று கர்நாடக மாநிலத்திலுள்ள வித்யாசங்கர் கோவிலில் நிகழ்கின்றது. இக்கோவிலிலே கிழக்குப் பார்த்த மண்டபம் ஒன்று உள்ளது. இம்மண்டபமானது 12 தூண்களினால் தாங்கி நிற்கின்றது. இந்தத் தூண்களின் காலடியில் காலைச்சூரியனின் கதிர்கள் விழுகின்றன. ஒவ்வொரு தமிழ் மாதமும் ஒவ்வொரு தூணாக ஒவ்வொரு தூணின் காலடியில் சூரியக்கதிர்கள் விழுவதுபோல் தூண்களை அக்கால கட்டக்கலைஞர்கள் வடிவமைத்துள்ளனர். வானியல் தெரிந்த இவ்வல்லுனர்கள் பூமி சுழற்சியின் தன்மையை அழகாக இக்கட்டிடக்கலையின் மூலம் கொண்டு வந்திருக்கின்றனர். 
            
                                                 இயற்கையின் வனப்பிலே வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம் இயற்கைக்கு நன்றி சொல்லத் தயங்கினால் நன்றிகெட்ட மனிதர்களாவோம். அதனால், இது தமிழருக்கு மட்டுமே உரித்தான நாள் என்று கருதாது ஒவ்வொரு மனிதர்களும் கொண்டாடவேண்டிய திருநாள் என்பதை மனம் பதிக்கவென இக்கட்டுரை  தந்துள்ளேன்.


    அனைவருக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
    இக்கட்டுரை தை மாத வெற்றிமணி பத்திரிகைக்காக எழுதினேன்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...