• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 26 ஜனவரி, 2014

    முடிவைச் சொல்லிவிடு (பாகம் 3)

    நன்றி google

    மருத்துவமனைப் படுக்கையில் லிசி, அருகே நின்றாள் சிந்து, அந்தரத்தில் பறந்தாள். மனதுக்குள் ஒரு அழகு நடனம் அரங்கேறிக் கொண்டிருந்தது. இதழோரம் புன்னகை பூரித்துநின்றது. வண்ணவிளக்குகள் வகைவகையாய் மூளைக்குள் மின்னிக் கொண்டிருந்தன. கற்பனைக்கு எத்தனை சக்தி. தாய்ப்பாசம் என்பது பிள்ளையைச் சுமந்து பெற்றாள் மாத்திரமே என்று யார் சொன்னது? இதைப் பெற்றவர்கள் மட்டுமே பிரசுரிக்கலாம். குழந்தை பிறக்காமலே தாய்ப்பாசம் தலைநிமிர்த்தும் என்று விளம்பரப்படுதியது சிந்துவின் மனம். 
                  
    விடைபெற்ற  மதனும் சிந்துவும் வீடு வந்தனர். நாட்களின் நகர்விலே காலியாய் இருந்த மேல்வீடு தற்போது லிசியின் வதிவிடமானது. சிரிக்கின்ற குழந்தையின் சித்திரங்கள் நிறைந்த வீட்டிலே அலங்காரங்கள் அமர்க்களம், இலகுவாகவாழும் வசதிகள் செலவு பாராமல் செய்யப்பட்டிருந்தன. வீடுவந்து சேர்ந்த லிசியின் வாழ்க்கையில் வசந்தம் குடிகொண்டது. நட்பின் பிடிப்பிலும் அன்புப் பராமரிப்பிலும் மகாராணியாய் வலம் வந்தாள். சுற்றுலாக்களில் மூவரும் இணைந்தே எடுக்கும் புகைப்படங்கள் இவர்கள் அன்பிற்கு அத்தாட்சியானது. லிசியின் வயிற்றைத் தடவித் தன் குழந்தையை அணைக்கும் இன்பத்தை கண்ணீர்மல்க  அநுபவிப்பாள் சிந்து. 
               
    அரசாங்கம் அளிக்கும் அன்பளிப்புகள் மட்டுமல்ல, மதனின் பணப்பையும் லிசியின் செலவுக்குத் திறந்தே இருந்தது. சிந்து தனக்காக எதுவும் கொள்வனவு செய்வதை மறந்தாள். தன் வாரிசுக்கே தன் ஆசைகளை இடம்மாற்றினாள். ஏழு மாதங்கள் இடைவெளி தெரியாமல் பறந்தன. இடைவெளியில் தங்கை மகளின் பூப்புனிதநீராட்டுவிழாவிற்குச் செல்லவேண்டிய அவசியம் சிந்துவிற்கு ஏற்பட்டது. மதனும் சிந்துவும் மூன்றுநாள் இடைவெளியில் இலண்டன் பயணமாயினர். 

    ''லிசி என் உயிரை இங்கே விட்டுப் போவது போன்ற ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகின்றது. எனது மகனை கவனமாகப் பார்த்துக்கொள். வெளியில் செல்லாதே.  விபரீதம் எதுவும் ஏற்படாது வீட்டிலே இரு. 3 நாட்களில் நாங்கள் வந்துவிடுவோம். பிளீஸ் லிசி. எங்கள் குழந்தையை எந்தப்பிழையும் இல்லாமல் எங்களிடம் ஒப்படைத்துவிடு. அதற்குப் பிறகு உன்னை நாங்கள் கட்டுப்படுத்தப் போவதில்லை''

     மண்டியிட்டாள் சிந்து. மனங்குழைந்தான் மதன். 

    ''என்ன சிந்து எனக்குத் தெரியாதா? எங்கள் ஒப்பந்தமும் அதுதானே. ஏதற்கும் பயப்படாமல்  போய் வாருங்கள். நான் இந்த மூன்று நாட்களில் வெளியிலேயே போகப் போவதில்லை. ஓகே...''

    தன் மகனைப் பிரிந்து செல்லும் வேதனை இருவரையும் வாட்டவே லண்டன் பயணமானார்கள். ஆனால், பாசஇழை பற்றி இழுக்கவே விரைவாய் திரும்பி வந்த இருவரும் பயணப்பைகளைப் போட்டுவிட்டு லிசி வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினர். நிசப்தம். வாசல் கதவு திறக்கவில்லை. அவளுக்காய்க் கொண்டுவந்த அன்பளிப்புப் பொருள் தரை நோக்கித் தளம் இறங்கியது. மீண்டும், மீண்டும் அழுத்தினர் நிசப்தம்...நிசப்தம். சிந்து ஓடிச்சென்று தம்மிடமுள்ள திறப்பை எடுத்துவந்து மின்னலெனக் கதவைத் திறந்தாள். வீட்டினுள் எங்குமே லிசியில்லை. இந்த இரவில் எங்கே சென்றிருப்பாள். பொறுத்திருந்து பார்ப்போம் என்ற போது சாப்பாட்டறை மேசையில் ஒரு கடிதம் பளீச்சிட்டது. 

    ஈர நெஞ்சங்களுக்கு இதயமில்லா லிசி எழுதிக்கொள்வது,
    என்னால் முடியவில்லை. எங்கள் மூவரின் தொடர்பில் எனக்குள் வளரும் உயிருக்கு என்னை மட்டுமே உரிமையாளியாக்க விரும்புகின்றேன். என் கருவறை வாடகை வீடு அல்ல. உயிருக்குள் உறைந்துவிட்ட உறைவிடம். என் உணர்வுகளின் நடமாடுகின்றது. இது என்றோ உருவாகிவிட்டது. எப்படி எடுது;துரைப்பது என்று அறியாது தத்தளித்தேன். அவனை விட்டுப் பிரியும் சோகம் எனக்கு வேண்டாம். அவனோடு வாழவேண்டும், அவனோடு விளையாட வேண்டும், அவனோடு பேசவேண்டும், அவனுக்காக என்னை இழக்கவேண்டும். அவன் எனக்கு மட்டுமே, எனக்கு மட்டுமே.....

    இப்படிக்கு 

    மன்னிக்கப்பட வேண்டிய

    லிசி

    இதயங்கள் சுக்குநூறாகுவது என்பதன் அர்த்தம் இன்றுதான் மதன் தம்பதியினருக்குப் புரிந்தது. அவள் விடுதலையானாள். இவர்கள் மனம் கல்லறையுள் அடக்கமானது. கையில் இருந்த கடதாசியை விட்டெறிந்தான் மதன்.

    ''இதுக்குத்தான் சொன்னேன். வேண்டாம். வேண்டாமென்று.... உன் ஆட்டம் இப்போது எப்படிப் போனது தெரிகிறதா? கண்ணுக்குள் வெண்ணெய் விட்டோமே. இன்று கண்ணையே தோண்டி எடுத்துவிட்டாள். இப்படி ஒரு நிலமை எமக்குத் தேவையா?''

    இடிவிழுந்து அமர்ந்த சிந்துவுக்கு மதனின் வார்த்தைகள் எங்கே நுழையப்போகின்றது


    தொடரும்....... எதிர்காலம்.  காத்திருங்கள்.






    ஞாயிறு, 19 ஜனவரி, 2014

    முடிவைச் சொல்லிவிடு (பாகம் இரண்டு)


    ''என்ன பேசாமல் இருந்தால் என்ன அர்த்தம். லீசியை வரச் சொல்லிட்டன். இப்ப அவ வந்திடுவா....''

    ''நீயே எல்லாம் செய்துவிட்டு பிறகு ஏன் என்னட்டக் கேட்கிறாய்.... நடக்கட்டும். பிறகு ஏதாவது பிரச்சினை என்றால் கண்ணைக்கசக்கிக் கொண்டு நிற்காதேயும்....''

    மதனின் சலிப்பான பதிலில் எதிர்கால வாழ்வின் பயம் இருந்தது. ஆனால், சிந்துவின் உடனடி முடிவில் ஆத்மதிருப்தி இருந்தது.

    கற்பப்பையின் பலவீனம் குழந்தைப் பாக்கியத்தை தடுத்துவிட்டது. இனியொரு வாரிசு இவளால் தாங்கமுடியாது என்னும் வேதனைப் பாரம் இதயத்தில் பெரும் பாறாங்கல்லைத் தூக்கி வைத்துவிட்டது. பாறாங்கல்லை இறக்க வேண்டுமானால், தன் கருமுட்டையை இறக்கவேண்டும். சிந்தித்ததில் செயல் ஒன்று சிறப்பாய் நடத்த முடிவு எடுத்தாள். லீசி என்ற ஒரு போலந்து நாட்டு நட்பொன்றின் உதவியை நாடினாள். லீசியின் கருப்பையில் சிந்துவின் கருமுட்டையும், மதனின் விந்தணுவும் ஒன்றாக இணைந்து வளர லீசியிடம் சம்மதம் வாங்கினாள். நீண்ட போராட்டத்தின் மத்தியில் மதனின் சம்மதம் கிடைத்தது.

    ''அவளின் செலவுகளுக்கு என்ன செய்யப்போகின்றாய். ஆரோக்கியமான குழந்தைக்கு அவசியமான சத்துணவுகளை நாமல்லவா கொடுக்கவேண்டும்....''

    ''ஓமப்பா.... நான் எல்லாம் கதைத்துப்போட்டன். எங்களுடைய மேல்வீடு இன்னும் வாடகைக்கு விடாமல்தானே கிடக்குது. அதில லீசியை குடிவரச் சொன்னேன். நாங்க பார்த்துக் கொள்ளலாம்தானே. பிள்ளைக்கு வேண்டிய சத்துணவெல்லாம் கொடுக்கலாம். அது எங்கட பிள்ள தானே... எங்கட பிள்ளப்பா... ''

      இரண்டு கைளையும் மேலேஉயர்த்தி ஆரவாரம் செய்தாள்.

    ''ஓஹோ ... இவ்வளவும் கதைச்சநீ பிறகு எதுக்கு என்னிடம் இதைச் சொல்றாய். அதையும் நீயே பார். உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு. உன்னால முடியாது என்றால் ஒரு பிள்ளையை தத்தெடுப்போம். நல்லா வளர்ப்போம். அத விட்டுப்போட்டு யாரோ போலந்துக்காரியிட்ட எங்களை தொடர்பு படுத்தி.... இதெல்லாம் சரிவரும் என்று எனக்குப்படல்ல....''

    ''எதுக்குத்தான் நீங்க ஒத்துவர்றீங்க..... அது எங்கட பிள்ள. தத்தெடுக்கும்பிள்ள எங்கடதில்ல....'' கண்ணைக்கசக்கினாள். பொலபொலவென்று குழாய்நீராய் கண்ணீர் வடிந்தது. சிந்திய மூக்கில் மதனின் கல் நெஞ்சம் கரைந்தது.

    ''சரிசரி.... அவள் வரட்டும்''

    இருவரின் உறவுக்கும் இணைப்பாகப் போலந்து உறவொன்று புகுந்து கொண்டது. ஐரோப்பியர்களுக்கு பாசம் குறைவென்றுதானே நாமெல்லாம் கருதுகின்றோம். அவ்வாறுதான் மதன் சுதா தம்பதிகளும் கருதி தமிழ்ப்பெண்ணைவிட்டு போலந்துப் பெண்ணிடம் தஞ்சம் அடைந்தனர்.
    அழைப்புமணி அதிர்ஸ்டமணியாய் அலறியது. 1000 வார்ட் மின்சாரம் சிந்து முகத்தில் பிரகாசித்தது. பூசிவைத்த சில்வர் பாத்திரம் போன்ற முகப்பொலிவுடன் முன்னே வந்த லீசியை வரவேற்ற இருவரும் வரவேற்பறையில் அமர்ந்தனர்.

    முதலில் மதன் தொடங்கினான்.

    ''லீசி பிள்ளை வளரும் காப்பகம் உன் கருப்பை. பிள்ளை எங்களுடையது. உயிர் நாங்கள் உறை நீ. நீ சுகதேகியானாலேயே எங்கள் பிள்ளை சுகமாகப் பிறக்கும். நீ மகிழ்ச்சியாய் இருந்தாலேயே எங்கள் பிள்ளை மகிழ்ச்சியான பிள்ளையாய் பிறக்கும். உயிரொன்று உன் உடலுள் வளர்கின்ற போது உயிரைக் கொல்லும் எந்த போதைவஸ்துக்களையும் உன் அருகே கொண்டுவராதே. உன் தேவைகளை நாங்கள் பார்க்கின்றோம். பிள்ளையின் தேகத்திற்கு இடையூறு ஏற்படுத்தாது நீ பார்த்துக்கொள். எங்கள் எதிர்காலத்தை நீ சுமக்கப்போகின்றாய் வாழ்நாள் முழுவதும் உன்னைத் தாங்குவோம். இந்தச் சேவைக்கு எந்தச் சேவையும் இணையாகாது. உன்னில் நாம் வைத்திருக்கும் நம்பிக்கை எவ்வேளையும் குறைந்து கொள்ளாமல் பாதுகாக்க வேண்டியது உன் பொறுப்பு. இப்போது டாக்டரிடம் போவோம்''

    லீசியின் சம்மதம் இருவருக்கும் சர்க்கரையைக் கரைத்துப் பருகக் கொடுத்தது. அந்தரத்தில் பறக்கும் ஆனந்தத்தை அள்ளிக் கொடுத்தது.

    சிந்துவின் வாய்களிலிருந்து எந்த வார்த்தைகளும் வெளிவரவில்லை. கண்ணீர் மட்டுமே கன்னங்களில் வரிகள் போட்டுக்கொண்டிருந்தது. இறுதியாக லீசியின் கைகள் இரண்டையும் தன் கைகளினுள் புதைத்தாள் தன் உள்ளம் முழுவதும் அவளிடம் மண்டியிட்டு நன்றி கூறியது. அவளை அணைத்தெடுத்தாள். ஆயிரம் வார்த்தைகள் அவ் அணைப்பில் இருந்தது.
         

            தோள்மீது மகவொன்று தூங்கும் இன்பம்
             தொல்லைகளை தூரவீசும் நிலையான இன்பம்
             இல்லமதில் இணையவரும் நாள் பார்த்து
             இமைதூங்கா காத்திருக்கும் காவலர்கள் இவர்கள்

    மீண்டும் வருவேன் மீட்டும் அடுத்த அங்கத்தில்
            

    சனி, 18 ஜனவரி, 2014

    முடிவைச் சொல்லிவிடு (பாகம் 1)

                           

          
    பிறப்பின் பெருமை சந்ததி வளர்ச்சியில் சம்பந்தப்பட்டிருக்கின்றது. என்னோடு நான் வாழ்ந்த வாழ்க்கையின் தடயம் மறைந்து போகின்றது. தம்பதிகளாய் வாழ்ந்த தொடர்பு அறுந்து போகின்றது.  மனையின் மகிழ்ச்சி மழலையில்தான் மண்டிக்கிடக்கின்றது. அம்மா என்ற வார்த்தையே ஒரு பெண்ணின் காதுகளுக்குத் இன்னிசைப்பாட்டை இசைக்கமுடியும்.
         
    புழுவாய் நெழிந்தாள். முழங்காலை முகம்வரை இழுத்து பின் நீட்டி புரண்டு புரண்டு படுக்கையைக் கரடுமுரடாய் கண்டாள். அருகே படுத்திருந்த கணவனை ஒருமுறை பார்த்தாள். சலனமின்றி நித்திரையில் நிம்மதிதந்த மூளையின் தயவில் கட்டிலில் கிடந்த கணவனின் மார்புக்குள் நுழைந்தாள் சிந்து. அவள் நெருக்கத்தில் உறக்கம்  துலைந்த மதனும்

    "என்னம்மா....... நித்திரை வரல்லையா? அன்பொழுகக் கேட்டான்.

    "ம்....''

    "காலையில் வேலைக்குப் போகவேணுமல்லவா.....''

    "உழைச்சு உழைச்சுத்தான் என்னத்தக் கண்டோம்''

    "இதென்ன இந்த நேரத்தில் பேசும் பேச்சா. பேசாமப்படு நாளைக்குக் கதைப்பம். கண்டதையும் நித்திரையில் போட்டுக் குழப்பாதையும். இப்படித்தான் என்றால், இப்படித்தான். அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வரவேணும்....``

    இவருக்கெங்கே புரியப்போகிறது. என் மனம் படும்பாடு. சிந்தனை மனதுக்குள் புகுந்துவிட்டால். மூளை அதுபற்றித்தானே வேலை செய்யும். நித்திரை கொள்ள சம்மதிக்குமா. என்னை நான் மறந்தாலேயே என் மூளை களைத்துக் கண்ணை மூடச்செய்யும். அதுதான் முடியாது முனகுகின்றேனே. நேரத்தைப் பார்த்தாள் சிந்து அதுவோ ஓடுவதாக இல்லை. ஒரு செக்கனுக்கு ஒரு மணி நேரம் தேவைப்படும்போல் இருந்தது. ``சீ......´´என்றபடி எழுந்தமர்ந்தாள். அறைக்கதவை சாத்திவிட்டு சமையலறையினுள் எதிர் கொள்ளும்; நாளுக்கு எந்திரமானாள்.
             
            உடலுக்கு உரமேற்றும் உணவுகள் உதவிட உத்தரவுகேட்டு சமையலறை மேசையில் தயாராக இருந்தன. விடிகாலைப்பொழுது தன் கடமைக்காய்த் தயாரானது. அலாரச்சத்தத்துடன் இணைந்தே மதனின் குரலும் ஓங்கி ஒலித்தது.

    ``சிந்து..... சிந்து.....´´

    ``என்னப்பா.... ´´

    ``இந்த அலாரத்தை நீ மாற்றல்லையா? அதனுடைய கடமை உணர்ச்சிக்கு அளவேயில்ல. சொல்லிட்டம் என்ரதுக்காக விடாது அடித்துக்கொண்டே இருக்குது. நாங்க இன்றைக்கு வேலைக்கு லீவெல்லோ எடுத்தோம். டொக்டர்ட்ட Termin  இருக்கல்லவா...´´

    ``சரிசரி எழும்புங்க. நான் மறந்திட்டன். டொக்டரிட்டப் போகமுன் உங்களோட கொஞ்சம் கதைக்க வேண்டியிருக்கு´´

    நீண்ட பெருமூச்சுடன் சூடு பறக்கும் தேநீர் மெல்லமெல்ல உற்சாகம் ஏற்ற சிந்து வார்த்தைகளை மதன் மனம் மென்று கொண்டிருந்தது.

    திங்கள், 13 ஜனவரி, 2014

    சூரியவழிபாடும் பொங்கல்விழாவும்


    உவகை பொங்க
    உண்மை பொங்க
    உறவுகள் பொங்க
    திறமைகள் பொங்க
    நேர்மைகள் பொங்க
    நன்மைகள் பொங்க
    புதுமைகள் பொங்க
    நிஜங்கள் பொங்க
    பொங்கட்டும் பொங்கலே 

                               வாழ்க்கை பொங்க வசந்தம் பெருக உள்ளமெல்லாம் பொங்கித் ததும்ப நன்றியை மனமுவந்து நாம் வாழ்வதற்கு ஆதாரமான ஆண்டவன் சூரியபகவானுக்காக நன்றி செலுத்துகின்ற நாளே இந்த பொங்கல் பண்டிகை என்பது யாவரும் அறிந்ததே. பகலவன் இன்றி உயிர்கள் ஏது?  உலகுதான் ஏது? பாரபட்சம் பார்த்து பகலன் கதிர்களைத் தருவதில்லை. அதனால் நன்றி சொல்லும் மகத்தான பண்புக்கு அடையாளமே இப்பொங்கலின் திருநாளாகும். இதனையே ஜேர்மனியர் நசவெந னயமெந கநளவ என்று தோட்டங்களில் விளையும் உருளைக்கிழங்கு, பூசணி போன்ற மரக்கறி வகைகளை படைத்துக் கொண்டாடுகின்றார்கள்.
                   

                       ஐரோப்பிய நாடுகளில் நாம் இன்றைய தினம் மாத்திரமே சூரியனுக்கு படையல்கள் படைத்துக் கொண்டாடிவிட்டு வருடம் முழுவதும் சூரியனின் கதிர்கள் எம்மீது விழவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். ஆனால், பத்தாயிரம் ஆண்டுகள் பழமையான அஸிரிய, அகேடிய, பாபிலோனிய நகரங்களின் முக்கிய வழிபாட்டுக்கடவுள் சூரியனே. இவர்கள் சூரியனை ஷாமேஷ் என்று அழைக்கின்றார்கள்.
                    

                                 புத்தி, ஆரோக்கியத்தை அளிக்கும் கடவுளாகக் கருதி எகிப்திய மக்கள் அமான் என்றும் கிராஸ் என்றும் சூரியனையே வழிபடுகின்றனர். வீரம் தரும் கடவுளாக பெரு, மெக்சிக்கோ நாட்டவர்கள் சூரியனை வழிபடுகின்றனர். பெருநாட்டிலுள்ள இன்கா என்னும் பழங்குடியினர் தாங்கள் சூரியனிலிருந்தே வந்தவர்கள் என்று கூறுகின்றனர். ஜப்பானிலும், சீனாவிலும் சூரியன் பெண்கடவுளாக வணங்கப்படுகின்றது.
                
                   தைமாதம் பிறக்கும்போது சூரியன் மகரராசியில் பிரவேசிக்கின்றார். இக்காலப்பகுதியில் தட்பமும் வெப்பமும் மிதமாக இருக்கும். இதனால் பயிர்கள் நன்றாக விளைந்து நற்பலனைத் தருகின்றன. அதனால் அப்பலனைத் தரும் சூரியனுக்குப் பொங்கல் படைத்து பொங்கலோ பொங்கல் என்று தமிழரும், ஹங்கரோ, ஹங்கர் என்று ஜப்பானியரும் பொங்கல் விழாக் கொண்டாடுகின்றனர். ஜப்பானியரும் சீனநாட்டவர்களும் சூரியனைப் பெண்தெய்வமாகவே வழிபடுகின்றனர். எமக்கு மாட்டுப் பொங்கல் போல் ஜப்பானியர்களுக்கு குதிரைப்பொங்கல் அமைகின்றது.  குதிரைகளை நன்றாகக் கழுவி அலங்கரித்து மாலை போட்டு இனிப்புவகை கொடுத்துக் கொண்டாடுவார்கள். இதேபோல் பர்மாவிலும் இந்நாளில் புத்தாடை அணிந்து கால்நடைகளுக்குப பூஜை செய்வதுவழக்கத்தில்இருக்கின்றது. 
                  

                                    காலைச்சூரிய வழிபாடு மனிதனுக்குச் சாலச்சிறந்தது என்பது யோகாக் கலையில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. இது இன்று நேற்றல்ல ஆதி மனிதன் கூட சூரியனை வழிபட்டுத் தன் நன்றியைத் தெரிவித்திருக்கின்றான். காயத்திரி, உஷ்ணிக், அனுஷ்டப், பிரஹதி, பங்கதீ, திருஷ்டுப், ஜகதி என்ற பெயர்களையுடைய குதிரைகள் சூரியபகவானை இழுத்து வருவதாக நம்பப்படுகின்றது. சூரியனுக்குரியவையாக தாமிர உலோகம், கோதுமைப்பண்டம், செந்தாமரை, செம்பட்டு, கபிலைப்பசு, மாணிக்கம், எருக்கங்குச்சி, காரப்பொருள்கள் போன்றவை கொள்ளப்படுகின்றன. மகரசங்கராந்தி நாளன்று இத்தைப்பொங்கல் கொண்டாடப்படுவதனால், மேற்கு வங்காளத்திலுள்ள சாகர்தீவு ஸ்நான கட்டடத்தில் புனிதநீராடி பிதிர்க்கடன் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்துவருகின்றது.
               

                                              நாட்டுக்கு நாடு இத்தினம் கொண்டாடப்படும் விதம் வேறுபடுகின்றது. பொதுவாக காதரிசி எனப்படும் வெல்லம் கலந்த பச்சரிசியை ஊறவைத்து அதில் சீனி, ஏலக்காய், பிசைந்த வாழைப்பழம் ஆகியவற்றைக் கலந்து செய்வதுதான் இக்காதரிசி. முதன்முதலாகக் காதுகுத்தும் பிள்ளைகளுக்குக் கொடுப்பதனால் இப்பெயர் வழங்கப்பட்டது. இதனைப் பொங்கல் அன்று படைப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், தற்பொழுது அவரவர் வசதிக்கேற்ப பொங்கல் பண்டிகையைக் கொண்டாடப்படுகின்றது. குளிர் கூடிய ஐரோப்பியநாடுகளில் மின்னடுப்பில் பானை வைத்து வசதிக்கேற்ப சூரியன் வெளிவரும் நேரம் பார்த்து பொங்கல் படைத்து வழிபடுவர். சிலவேளைகளில் அன்றைய பொழுது சூரியன் மேகக்கூட்டங்களுக்குள் மறைந்தே இருப்பார். ஆயினும் காணாத போதும் கண்டதாகக் கருத்தில் கொண்டு பொங்கல் படைத்துத் தம் கலாச்சாரத்தைப் பேணுகின்றனர். 
              

                                       சூரியன் பற்றிய அற்புத நிகழ்வு ஒன்று கர்நாடக மாநிலத்திலுள்ள வித்யாசங்கர் கோவிலில் நிகழ்கின்றது. இக்கோவிலிலே கிழக்குப் பார்த்த மண்டபம் ஒன்று உள்ளது. இம்மண்டபம் 12தூண்களினால் தாங்கி நிற்கின்றது. இந்தத் தூண்களின் காலடியில் காலைச்சூரியனின் கதிர்கள் விழுகின்றன. ஒவ்வொரு தமிழ்மாதமும் ஒவ்வொரு தூணாக ஒவ்வொரு தூணின் காலடியில் சூரியக்கதிர்கள் விழுவதுபோல் தூண்களை அக்கால கட்டக்கலைஞர்கள் வடிவமைத்துள்ளனர். வானியல் தெரிந்த இவ்வல்லுனர்கள் பூமி சுழற்சியின் தன்மையை அழகாக இக்கட்டிடக்கலையின் மூலம் கொண்டுவந்திருக்கன்றனர். 
            

                                                 இயற்கையின் வனப்பிலே வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம் இயற்கைக்கு நன்றி சொல்லத் தயங்கினால் நன்றிகெட்ட மனிதகளாவோம். அதனால், இது தமிழருக்கு மட்டுமே உரித்தான நாள் என்று கருதாது ஒவ்வொரு மனிதர்களும் கொண்டாடவேண்டிய திருநாள் என்பதை மனம்பதிக்கவென இப்பதிவு தந்துள்ளேன். இப்பதிவுக்கு பெண்மணி சஞ்சிகையின் உதவியும் எனக்குக் கிடைத்தது.

    அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
             


    புதன், 1 ஜனவரி, 2014

    புத்தாண்டில் உதிதெழுந்த நினைவுகள்





    வண்ண வண்ண வேடிக்கைகள், வகைவகையாய் வாழ்த்தொலிகள், எண்ணமெல்லாம் நல்லுணர்வு, ஏற்றம் பெறவே முன்னெடுப்பு. வருடா வருடம் வந்துதிக்கும் இந்நாளில் மாறாத வரவேற்பு,

                   பூலோகம் சுழல்கிறது புதுவருடம் காண்கிறது. பிறந்தநாள் கொண்டாட்டமென தன் சேவையதை பூமியும்தான் மறப்பதில்லை. தன் போக்கையுமே மாற்றுவதில்லை. யுகம் யுகமாய் கடந்து செல்லும் தன் வாழ்நாளில்  தனக்கு மேலும் தனக்குக்குள்ளும் நடப்பது எதுவும் அறிந்ததுவும் சுழன்றதில்லை. மூளை இழந்த மனிதனாய் அது வாழ்தலினாலோ முன்வைக்கும் காலை பின்வைக்காது பிறர் நற்பேச்சுக்கு இடம் தராது. வாழ்வென்பது நிலை இல்லை என்று கூட உணராது தன் போக்கில் செல்கிறது.

           இருநூறு கோடி ஆண்டுகள் தோன்றி வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியிலே முதல் உயிர் கிட்டத்தட்ட ஐந்து கோடி ஆண்டுகளே தோன்றியதாக விஞ்ஞானம் சொல்கிறது. இடைப்பட்ட ஆண்டுகளில் வெறுமையாகக் கிடந்த கிடந்த பூமியிலே எதுவுமே இருந்ததில்லை. கிட்டத்தட்ட முப்பத்தைந்து இலட்சம் ஆண்டுகளே மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான். வளைந்த முள்ளந்தண்டை  நிமிர்த்தினான், இணைந்தே வளர்ந்த வாலை இழந்தான். இன்று பூமியை தன் தேவைக்காய் முயன்று முயன்று தனக்காய் பயன்படுத்துகின்றான். மனிதனை நிறுத்தச் சொன்னால், நிறுத்தப் போவது இல்லை. நிறுத்தினாலும் அவன் மனிதன் இல்லை. மனிதன் தோன்றியதாலேயே பூமியும் பெருமை அடைகின்றது. பூமியின் வயதுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மனிதன் வாழ்காலம் சிறிதே. அவன் சேவைகளோ அளப்பெரிதே. புதுமைகள் காணும் மனிதனை வாழ்த்தி, மனிதன் மற்றவர் மனம் போல் வாழும் வழியையும் ஒருமுறை சிந்திக்கத் துணிந்தேன்.

    குழந்தை:

    வெற்றுக் கடதாசி, பக்கம் இருந்து கிறுக்குபவர்கள் கீறல்களே பதியும் கடதாசி. அக்கீறல்களே அதன் எதிர்காலம். அதனால் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் பேசத்தெரியாத வாழத்தெரியாத அவ் எதிர்கால மாமனிதனுக்காய் அவதானம் எடுங்கள்.

    பெற்றோர், கணவன் மனைவி:

    தங்கள் வாழ்க்கைக்காக வந்து பிறந்த உங்கள் மகிழ்ச்சியானது தம் சொந்த மகிழ்ச்சியை கொண்டாட வழிவிட்டு, வழிக்காட்டி,  வழிநோக்குங்கள். அவர்தம் மனவிருட்சம் மகிழ் விருட்ஷமாய் இவ்வாண்டு சிறக்கட்டும்.

                  ஆண்களே! உங்களை நம்பி தங்கள் சொந்த விருப்புகள் விட்டு, என் குடும்பம் என் கணவன் என் பிள்ளை என வாழவந்த மனைவியின் மனம் அறிந்து வாழப் பழகிக் கொள்ளுங்கள்.  அவள் எதிர்பார்ப்புக்களை முடிந்தவரை முடித்து வைக்க முயற்சி எடுங்கள். திருமணத்தின் முன் அவள் இருந்த நிலை மறக்க திருமணத்தின் பின் அவள் இருக்கும் நிலையை மாற்றி அமையுங்கள். கணவன் ஆக நீங்கள்  நடந்து கொள்ளும் முறையிலேயே மனைவி எண்ணப்போக்கு மாற்றம் காணும்.  

                  அதேபோல் தனக்காக ஒரு பாரிய பொறுப்பு இருக்கின்றது என ஒவ்வொரு பெண்ணும் உணர்ந்து நடந்து கொள்ள சந்தர்ப்பம் அமைவது திருமணத்தின் பின்புதான். எதிர்கால சமுதாயத்தின் ஒரு துளி என் கையிலும் இருக்கின்றது என்னும் எண்ணம் கொண்டு அவதானத்துடன் பொறுமையைத்  துணைக்கொண்டு இல்லத்தின் ஒவ்வொரு அங்கத்தவர்களுக்கும் அச்சாணியாய் நடமாட வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு திறமையும் ஒவ்வொரு பலவீனமும் இருக்கின்றது. அனைத்து ஆண்களின் திறமையும் என் கணவனிடம் இருக்க வேண்டும். அனைத்து ஆண்களின் பலவீனத்தில் ஒன்று கூட என் கணவனிடம் இருக்கக் கூடாது என்று நினைத்தல் கூடாது. விட்டுக்கொடுத்தல் என்னும் பண்புடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் . கணவன் குறையை மற்றவர்களிடம் பறைசாற்றக் கூடாது. சின்னச் சின்ன அன்பளிப்புக்கள் அன்புக்குத் துணை ஆகின்றது. கணவனுக்கு நிகரான இடம் பிடிக்க பெண்களே நீங்கள் நடந்துகொள்ளும் முறையைப் பொறுத்தே அமைகின்றது. இவ்வருடம் குடும்பங்களில் அமைதியும் அன்பும் நிறைந் திருக்கட்டும். அதன் மூலம் அகிலம் சிறக்கட்டும். 

    சகோதரர்கள்:

    ஒரு வயிற்றில் பூத்த மலர்கள் ஒருவருக்கு ஒருவர் துணையாக கணனித் துணை இன்றி வீட்டில் கலந்துரையாடுங்கள். உங்கள் பெற்றோர் ஏங்கும் எதிர்பார்க்கும் அன்பைத்தாருங்கள். உங்கள் வீட்டில் இருந்து உலகு வியக்கும் சாதனை ஒன்றை உருவாக முயற்சி எடுங்கள் அதன் மூலம் இவ் ஆண்டு நல்லாண்டாய் அமையட்டும்.

    நண்பர்கள் :

    உன்னத உறவென்பார், உதவிடும் துணை என்பார் உலகமே மெச்சிடும் தொடர்பாடல் மனிதப்பிறவி என்பார். ஆனால், நீதான் என் நண்பேன்டா என்று சொல்லி மறுமுனையில் நண்பன் சிறப்பை மனதுள் புதைத்துப் புழுங்குவது, அவன் உயர்வை சகிக்க முடியாது போட்டி போடுவது, போன்ற எண்ணங்கள் இன்றி ஒற்றுமையாய் வாழப் பழகிக்கொண்டால் நீங்கள் இணைந்த முயற்சிகள் உலகின் கண்ணைத் திறக்கும் உயர் திறமை இவ்வருடத்தில் புலப்படும்.

    எழுத்தாளர்கள்:

    எழுத்தென்னும் ஆயுதத்தைத் தாங்கி உலகென்னும் உயர் சிற்பம் உருவாக்கிடும் கலைஞன். தனக்காக வாழாது தன் சமூகத்திற்காக எழுத்தைப் பயன்படுத்துபவன். எழுத்தாளர்களே ! நடந்ததைத் திரும்பிப்பாருங்கள். நன்றி கூறுங்கள்.

    பிரபல்யம் வேண்டி உங்களை விளங்கச் செய்ய மனட்சாட்சியை இழக்க வேண்டாம். மனதில் ஒன்றை நினைத்து புகழுக்காக வேறொன்று பேச வேண்டாம். வாழும் வாழ்க்கை ஒன்றாகவும் எழுதும் வாக்கு ஒன்றாகவும் இருக்க வேண்டாம். புரிந்ததைக் கொண்டு புரியும் வகையில் பிறருக்குப் புரியச் சொல்லுங்கள். எழுத்தில் வடிப்பது எதுவோ அது அனைத்துப் பக்கமும் ஆழ்ந்து பார்த்த  வரிகளாய் இருக்கட்டும். கற்பனைக்கு இடம் கொடுங்கள் காட்சியை நிஜமாக்குங்கள். மனதார வாழ்த்துங்கள். மறைவாக இகழாதீர்கள். உங்கள் எழுத்தை மதிப்பவர் தமக்கு, நீங்களும் மதிப்பை அளியுங்கள். வாழ்த்துங்கள் வாழ்த்தப்படுவீர்கள். இவ்வருடம் உலகு நன்மைக்காய் உங்கள் படைப்புக்கள் விரியட்டும். உலகம் உய்யட்டும்,

    அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்





    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...