• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    திங்கள், 26 ஜூன், 2017

    சீர்கெட்ட வாழ்வு

                             


    நேரமோ 10. நித்திரையோ கண்ணைச் சுருட்டுகிறது. நாள் முழுவதும் வேலை செய்து வீடு வந்து ஓய்ந்து ஒரு பிடிச் சோற்றைக் கையால் குழைத்துச் சாப்பிட்டாலேயே மனம் நிம்மதியடைகிறது. என்னதான் இரண்டாவது வேலை ரெஸ்டோரன்டில் செய்தாலும் இந்த ஐரோப்பியர்களுடைய உணவு எந்தப் பிடிப்பும் இல்லாத அவர்களைப்போலவே காரம், புளிப்பு இல்லாமல் சப்பென்று இருக்கும். கட்டிக் குழம்பை சோற்றில் ஊற்றி கையால் பிசைத்து ருசித்துச் சாப்பிடும் சுவைக்கு எதுவும் ஒப்பில்லை. பசிக் களை நீக்கினால், பாய்ந்து வரும் உறக்கம். சிறிதுநேரம் இருந்துவிட்டு உறங்கவேண்டும் என்று புத்தி பலர் புகட்டினாலும் மூளையதைப் புரிந்து கொண்டு நடப்பதாகத் தெரியவில்லையே. முடியாத காரணத்தால் ஓசையிடும் தொலைக்காட்சியை நிறுத்திவிட்ட விசாகன் எழுந்தான். படுக்கையை நெருங்கினான்.

               அழைப்புமணி ஓசை நித்திரை மயக்கத்தை நீக்கியது. இந்த நேரத்தில் யாரது வாசல்மணியை அழுத்துவது! இப்போதெல்லாம் பாரிஸ், ஜேர்மனி பகுதியில் நிம்மதியாக வாழத்தான் முடிகிறதா. களவு, கொள்ளை, கற்பழிப்பு, கொலை, அச்சுறுத்தல் அப்பப்பா... நிம்மதியைத் தொலைத்துவிட்டு வாழவேண்டிய சூழ்நிலை. பரிதாபம் பார்த்துப் படுகுழியில் விழுந்த நிலை இந்த ஐரோப்பியர்களுக்கு வந்திருக்கின்றது. பொதுவாகவே ஐரோப்பிய நாடுகளில் வீடுகள் பாதுகாப்பு மதிலோ, சாளரக் கம்பிகளோ கொண்டிருப்பதில்லை. ஆனால், இன்றைய சூழ்நிலை இவற்றுக்கெல்லாம் அவசியத்தைக் காட்டிநிற்கின்றன. மெதுவாக சாளரத்தைத் திறந்து கீழ் நோக்கி இருட்டில் பார்வையைச் செலுத்திய விசாகனுக்கு ஆச்சரியம். என்ன .... தீபன்! இவன் என்ன இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ளாமல் வந்திருக்கிறான். ஓடிப்போய் கதவைத் திறந்தான். தள்ளாடித் தள்ளாடி வாசல் படியை வந்தவனிடம் இருந்து மதுவின் வாசைன விசாகனை வந்தடைந்தது.

    'தீபன் என்னடா இது. இந்தநேரத்தில்!'

    'என்ர மச்சான் எனக்கு ஏலாதுடா. என்னால ஏலாது. இதெல்லாம் ஒரு வாழ்க்கையா... இன்றைக்கு மட்டும் நான் இங்க படுக்கட்டா. ஏன்டா நான் ஐரோப்பிய நாட்டுக்கு வந்தனான்? ஓடிஓடி உழைச்சனான்? பிள்ளைகளப் பெத்தனான்? இப்ப ஒன்றுமில்ல. ஒன்றுமில்ல. இந்தப் போத்தல் மட்டும்தான் எனக்கிருக்கு. மனிசி, பிள்ளைளகள்..........‘‘  ஓ....... என்று சத்தமாக அழுதான். ஆண்கள் அழுதால், அது விசித்திரம். பொதுவாகவே மனதைக் கல்லாக்கி எதையும் தாங்கும் சக்தி அவர்களுக்கு உண்டு. அழுவதென்றால், அவர்கள் மதுவுக்கும் மாதுக்கும் அடிமையாக வேண்டும். அப்போதுதான் அழுகையும் அவர்களை வந்தடையும்.

    அவனைச் சமாதானப்படுத்திய விசாகன். அன்று தீபனைத் தன் வீட்டில் தங்க வைத்தான். இரவு படுத்தானோ, புரண்டானோ யாரறிவார். விசாகன் நாள் களைப்பில் நன்றாகவே உறங்கிவிட்டான். விடிந்த பொழுது காலை 5 மணி கடமைக்காக எழுந்திருந்த விசாகன். ஏற்கனவே பொழுது புலர்ந்துவிட்ட தீபனைக் கண்டான்.

    எப்படி நித்திரை? என்றவனிடம் சுத்தமாய் இல்லை‘‘ என்று பதிலளித்துவிட்டு தேநீருக்கும் காத்திருக்காமல் வீடு செல்ல ஆயத்தமானான். விசாகன் வேண்டுதலும் பதிலளிக்காததால், நடந்தது உரைக்க விருப்பில்லை என்று உணர்ந்து கொண்ட விசாகன்.

    ‘‘மச்சான் குடிச்சுக் குட்டிச் சுவராகாதே. எப்படி இருந்தனீ. இப்படி குடிச்சுத் தேயிறியே. மனிசி பிள்ளகள நினைச்சுப் பார்க்கக் கூடாதா? என்றபோது

    ‘‘என்னது? மனிசி பிள்ளைகளா? போடா.. டேய்... என்றபடி பதிலுக்குக் காத்திருக்காது. வெளியேறினான். சொந்தக்கதையை வெளிப்படுத்த அவன் விரும்பவில்லை என்பது அவன் சொல்லித் தெரிய வேண்டியதில்லையே.

                சொந்தவீட்டின் மேல்பகுதியில் தனியனாய் வசித்துவரும் தீபன் நிலையைப் பின் பிறர் கூறக் கேட்ட விசாகனும் மனம் மிக வருந்தினான். தாயாரிடம் சென்று உணவருந்தி வாழும் அவன் வாழ்க்கையின் சோகத்தை புரிந்து கொண்ட விசாகனும் இவன் குடிப்பது போதைக்கு அல்ல. அவன் இறப்பை அவனே தேடிக்கொள்ள என்னும் சூட்சுமம் அப்போதுதான்  விசாகனுக்குப் புரிந்தது.

                 வேலை வீடு என்று வாழ்ந்து வரும் விசாகனுக்கு பல நாள் தொடர்பில்லாத தீபன் பற்றி நினைத்துப் பார்க்க நேரம் கிடைக்கவில்லை. அன்றொருநாள் வேலைத்தளத்திலே விரைவாகப் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது ஒரு தொலைபேசி தொடர்ந்து அடித்துத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தது. வேலைத்தளத்திலே உத்தரவு பெற்று தொலைபேசியை அழுத்தினான். தீபனின் அம்மாவே மறுமுனையில்

    விசாகன் என்ர பிள்ள 2,3 நாளா சாப்பாட்டுக்கு வரல்ல. பிள்ளைக்கு என்னவோ, ஏதோ தெரியாது போய்ப் பார்க்கக் கூட எனக்கு அனுமதியில்ல. அவனை ஒருக்காப் போய்ப் பார்க்கிறியா மகன். எனக்கு மனம் திக்குத் திக்கென்று அடிக்குது‘‘ தாயின் தவிப்பை சொற்கள் தாராளமாகக் காட்டின.

    ஓமம்மா. வையுங்க. நான் மற்ற வேலைக்குப் போகமுதல் போய்ப் பார்க்கிறன். பார்த்திட்டு உங்களுக்குச் சொல்றன். நீங்கள் ஒன்றுக்கும் பயப்படாதீங்கள். அவனுக்கு ஒன்றும் நடந்திருக்காது‘‘ என்ற விசாகன் வேலை முடிந்து தீபன் வீட்டை அடைந்தான்.

           அழைப்புமணியை அழுத்தியபோது தீபன் மனைவியே கதவைத் திறந்தாள். தீபனைப் பற்றி விசாரித்தபோது மேலே இருக்கின்றார் என்ற பதிலுடன் மேலே போகும்படிச் சைகை காட்டினாள். மேலே சென்ற விசாகனுக்கு வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது. பலநாள் துப்பரவு செய்யப்படாத வீட்டினுள் கெட்ட வாடையுடன் சாளரங்கள் என்றுமே மூடப்பட்டு சாக்கடை போன்ற மணமும் அருவருப்பை அள்ளித் தந்தது. மூக்கை இறுகப் பொத்தியபடி உள்ளே நுழைந்தான். வெளிவரத் துடித்துக்கொண்டிருக்கும் வாந்தியை அடக்கியபடி கட்டிலில் சரிந்து கிடக்கும் தீபனைக் கண்டான். அருகே போய் அவனை எழுப்பியபோதே தெரிந்தது. ஐயகோ....... நெஞ்சை நிமிர்த்தி ஜாம்பவானாக விதவித ஆடையுடன் கம்பீரமாகத் திரிந்த தீபன் உயிரற்று மடிந்து கிடக்கும் நிலையது கண்டு துடித்துப் போய்விட்டான் விசாகன்.

                    கீழே ஓடிவந்து காவல்துறைக்கு தொலைபேசி அழைப்பு விட்டவுடன் காவல் துறையும் விரைவு வாகனமும் விரைந்து வந்தது. பரிசோதித்த வைத்தியர் உயிர் பிரிந்து ஒரு நாளுக்கு மேலாகிவிட்டது என்று கூறியபடி உடலை உடன் கொண்டு சென்றனர். சொந்தவீட்டிலே, அநாதைப் பிணமாக ஒருநாள் முழுவதுமாகக் கிடந்த மனிதனை ஏறெடுத்தும் பார்க்காத மனிதர்களும் வாழுகின்ற புலம்பெயர் வாழ்க்கையானது தொடரும் நாட்களில் இன்னும் மோசமான நிலைக்குத் தான் போகப்போகின்றதா என்பது பற்றி நினைக்க நினைக்க வேதனையாக இருக்கின்றது. யாரும் எப்படியும் வாழலாம் என்னும் மனங்களெல்லாம் கொடூர வஞ்சனைப் பிண்டங்களாகிப் போய்விட்டன. அன்பு, பாசம், விட்டுக்கொடுப்புக்கள், மரியாதை, சமூகபயம், எதுவுமே இன்றி சுயநலப்பிசாசுகள் வாழுகின்ற பூமியில் நாமும் வாழுகின்றோம் என்னும்போது பயமாக இருக்கின்றது.  தீபன் ஒரு தடவையாவது தனது நிலையைச் சொல்லியிருக்கலாம்.  ஆறுதலாக அதற்குரிய பரிகாரத்தை வேறுவழியில் வேறுயாரிடமாவது அறிவுரை மூலம் பெற்றிருக்கலாம். ஆனால், தமக்குள்ளேளே போட்டு மறைத்து அநியாயமாக சின்ன வயசிலே வாழாமல் மடிந்துவிட்டானே. இப்படி எத்தனை ஆண்வர்க்கம், தமது குடும்பப் பிரச்சினைகளைத் தமக்குள்ளே போட்டு மறைத்து மாண்டுபோகின்றார்கள்.  சொல்லி அழ நாதியற்று குடிக்கு அடிமையாகித் தமது விதியைத் தாமே தேடிக்கொள்ளுகின்றார்கள் என்று எண்ணிபடி வீடுநோக்கிப் புறப்பட்டான் விசாகன்.

    கௌசி

    ஜேர்மனி 

    காலம் வரக்கூடிவரும்


    கோடைகாலப் பூரிப்பில் அகன்று விரிந்து கிளைகள் பரப்பி பச்சைப் பசேலென பொன் போன்று மின்னுகின்ற இலைகள் தொங்கவிடப்பட்டுரூபவ் நகரத்தின் நடுவே பலருக்குப் பலன் தரும் மிடுக்குடன் தலைநிமிர்ந்து நின்றதுரூபவ் அந்த விருட்சம்.  அம்மரத்தில் ஓர் பறவைரூபவ் நாள் தவறாது வந்தமர்ந்து நட்புடன் தன் இன்பதுன்பங்களைப் பேசி மகிழும்.  அம்மரத்தின்  அடியில் இரண்டு இருக்கைகள்ரூபவ் வருவோர் போவோர் இளைப்பாற அமர்ந்திருப்பதும்ரூபவ் இணையுடன் சல்லாபித்திருப்பதும்ரூபவ் சிலர் சோகச் சுமைகளைச் சுமந்த வண்ணம் வெறித்து பார்வையுடன் பெருமூச்சு விட்டபடி அதனுடைய சுகமான காற்றைச் சுவாசித்திக் கொண்டிருப்பதுமாக இருப்பார்கள். அதனருகே அழகாக வரிசையாக நடப்பட்டிருந்த மலர்ச் செடிகள்ரூபவ் பூத்துக் குலுங்கிப் புதுப் பெணகள்; போல் பொலிவுடன் காணப்பட்டன. பக்கம் வரும் மனிதர்கள் அதனைப் பார்த்து மகிழத்தான் முடியும். புறிக்க முடியாது. அவர்களைப் போலவே அந்த விருட்சமும் சிலநாட்களே வாழும் அந்த மலர்களின் அழகில் காதல் கொண்டு அதன் கவர்ச்சியில் தன்னை இழந்துரூபவ் இதன் இறப்புப் பிறப்பு  இரண்டையும் கண்டு கவலையுடன் தன் சிநேகிதப் பறவையுடன் துயரைத் தேற்றிக் கொள்ளும்.
                       காற்றுடன் இணைந்து கரகாட்டம் ஆடும் அந்த மரத்தின் சிலுசிலுப்பையும்ரூபவ் சிங்காரச் சிரிப்பொலியையும்ரூபவ் பறவைகள் கூட்டமாக அதில் வந்தமர்ந்து காதல் மொழி பேசுவதையும்ரூபவ் சண்டையிடுவதையும் சல்லாபித்திருப்பதையும் கடைக்கண்ணால் பார்த்து புன்னகை புரிந்திருக்கும்ரூபவ் அம்மலர்கள். அம்மலர்களில் தேனெடுக்க வட்டமிடும் வண்ணாத்திப் பூச்சிகளின் இரம்மியமான அழகை இரசித்த வண்ணம் ஆசையால்ரூபவ் ஆறுதல் இல்லாது அவாப்பிடித்து அலையும் மனிதர்களைப் பார்த்து சிரித்தபடிரூபவ் அந்த கோடைகாலத்தின் குதூகலத்துடன்  களித்திருந்ததுரூபவ் அவ்விருட்சம்.
                       காலதேவன் கரைந்தான். இலையுதிர் காலத்தின் ஆரம்பம் நெஞ்சுக்குள் ஓர் ஏக்கம் பற்றத் தொடங்கியது. அப்போதும் மஞ்சள்ரூபவ் செம்மஞ்சள்ரூபவ் மண்ணிறம் என நிறவேடிக்கை காட்டிக் கொண்டிருக்கும் அவ் விருட்சத்தின் தோற்றத்தை ஆசையுடன் கண்வெட்டாது வியப்புடன் நோக்குமரூபவ்; அம்மலர்கள். நாட்கள் நகர்ந்தன. தன்னுடைய உடைகள் ஒவ்வொன்றாகக் கழட்டத் தொடங்கியதுரூபவ் அவ்விருட்சம். சில்லெனக் குளிர் மெல்ல மெல்ல உடலை வருடத் தொடங்கியது. தன்னுடன் உறவாடிக் களித்திருந்த காற்றும் பித்துப் பிடித்தவன் போல் பேயாட்டம் ஆடத் தொடங்கியது. அதன் ஆவேஷத்திற்கு சிலநாட்கள் போராட்டத்தின் பின் ஆடைகள் எல்லாம் பொலபொலவென களைந்து அம்மணமாகியதுரூபவ் இவ்விருட்ஷம். மகிழ்ச்சிரூபவ் குதூகலம்ரூபவ் கொண்டாட்டம்ரூபவ் அனைத்தும் அடங்கி வெட்கத்தில் தலைகுனிந்து நின்ற அம்மரத்தில் அதன் உயிர் நண்பன் ஒன்று மட்டும் பறந்து வந்து அமர்ந்தது. நிசப்தமாய் நின்ற அம்மரத்துடன் உரையாடத் தொடங்கியதுரூபவ் அப்பறவை. கவலை வேண்டாம் நண்பா! எந்தப் பிரச்சினைக்கும் ஓர் தீர்வு இருக்கிறது. பொறுத்துக் கொள். மீண்டும் நீ உயிர்த்தெழுவாய். அவ் இடைக்காலத்தில்ரூபவ் உன்னோடு உறவாட புதிய ஒரு வெண்பஞ்சுக் கூட்டம் வந்து விடும். மனிதர்கள் வெளியிடும் கரியமில வாயுவை உள்ளெடுத்துரூபவ் அவர்களுக்கான பிராணவாயுவை வெளியகற்றி அவர்களுக்குப் பிராணனை வழங்கும்ரூபவ் உன்னை வாழ்த்தி வானகம் உனக்குத் தூவும் மாசுமறுவற்ற வெள்ளைப் பூக்கள். உன்னுடலில் தாங்கிக் கொள். மீண்டும் அந்தக் கோடைவெயிலில் நீ குளிக்கும் வரை புதுவித உணர்வு உனக்குள் ஏற்படும். இப்படித் தான் இம்மனிதர்களும். ஆழமான வேதனை பிரச்சினை என்று அல்லாடிக் கொண்டிருப்பார்கள். ஆனால்ரூபவ் எங்கோ ஒரு மூலையில் அப்பிரச்சினைக்குத் தீர்வு இருந்து காலம் வரக் கூடிவரும். கலங்காதே களித்திரு. என்று கூறி காற்று வெளியில் தன் இறக்கைகளை விரித்த வண்ணம் உலகின் அனைத்து விடயங்களையும் உள்வாங்கி வான் வெளியில் இன்பமாய்ப் பறந்து சென்றதுரூபவ் அப்பறவை.

    ஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு

                                      

              


    சூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான உலகாய் உருவெடுத்தது. இயற்கை மனிதனுக்குக் கிடைத்த அழகான கொடை ஆகும். இத்தனையும் இயற்கையிலிருந்து பெற்றுக் கொண்ட மனிதன், தன் முயற்சியைப் பயன்படுத்தி அழகான நவீன பூமியாக மாற்றியமைக்கின்றான். இப்பூமியைச் சிலர் ஆக்க நினைக்காது கொடிய ஆயுதங்கள் கொண்டு அழிக்க நினைக்கின்றார்கள். புதுமைகள் புதிய கண்டுபிடிப்புக்கள் உருவாக வேண்டுமானால், சிறப்பான கல்வியை இளைய தலைமுறையினர் காணவேண்டும். உலகம் அழிவை நோக்கிப் போகாமல் இருக்கவேண்டுமானால், ஒழுங்கான முறையில் பிள்ளைகள் வளர்க்கப்படல் வேண்டும். இதற்கு அடிப்படைக்கல்வி சிறப்பாக இருக்க வேண்டும். இன்றைய சிறுவர்கள் நாளைய பெரியவர்கள், மாதா, பிதா, குரு, தெய்வம், இவை நான்கும் ஒரு பிள்ளைக்கு அவசியம். பிள்ளை பிறந்தவுடன் அம்மாவைக் காண்கிறது. அம்மா சொல்லி அப்பாவைக் காண்கிறது. அப்பா, அம்மா பிள்ளைக்குக்குக் குருவைக் காட்டுகின்றார்கள். ஆசிரியர் கடவுளை வழிபட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றார்கள். எனவே ஒரு பிள்ளையை உருவாக்கும் பொறுப்பு முதலில் பெற்றோருக்கு இருக்கின்றது. அதன்பின் ஆசிரியர் கையிலே தான் தங்கியிருக்கிறது. தெய்வத்தைவிட முன்னிலையில் வைத்துப் பாராட்ட வேண்டியவர்கள் ஆசிரியர்களே. ''தாரமும் குருவும் தலைவிதிப்படி'' என்பார்கள். ஒரு பிள்ளைக்குக் கிடைக்கும்  ஆசிரியரைப் பொறுத்துத்தான் கல்வியில் அப்பிள்ளை காட்டும் ஆர்வமும் முன்னேற்றமும் வளர்ச்சியும் தங்கியிருக்கும். ஆசிரியர் கற்பித்தவை மாணவர்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்திருத்தல் வேண்டும். குரு நிந்தை செய்வோர், குரு நிறைவாய்க் கிடைக்காதவர்களாகத்தான் இருக்க வேண்டும். மாணவர் வகையை ''அன்னம், ஆவே, மண்ணொடு கிளியே, இல்லிக்குடம், ஆடு, எருமை, நெய்யெரி'' என தலை, இடை, கடை மாணாக்கராய்ப் பிரித்தல் போல நல்லாசிரியர்களுக்கும் இலக்கணம் கூறப்படுகின்றது. ''நிலம், மலை, நிறைகோல், மலர் நிகர் மாட்சியும்
                 உலகியல் அறிவோடு உயர் குணம் இயையவும்
                 அமைவன நூலுரை ஆசிரியர்'' எனப்படுகிறது.
    தன்மேலே இருக்கும் சுமையால் கலங்காது, தோண்டினாலும் துன்புறாது நிலம். அதேபோல் விவாதங்கள் செய்து வருத்துபவர்களைக் கண்டு கலங்காது பொறுமை காப்பவர் ஆசிரியர். பொருள்களின் அளவைச் சந்தேகம் இல்லாமல் காட்டும் தராசு போல, சந்தேகம் தீருவதற்காக கேட்கப்பட்ட வினாவின் பொருளை விளக்குவதாலும், நடுநிலைமை மாறாது நிற்பதனாலும் தராசு ஆசிரியர்களுக்கு உவமையாக்கப்பட்டது. எல்லோராலும் விரும்பப்படுகின்ற மலர் போல் எல்லோராலும் விரும்பப்படுபவராகவும் சரியான நேரத்திலே பூ மலர்வது போலே கற்பிக்கும் நேரத்திலே முக மலர்ச்சியுடன் கற்பிப்பவரே ஆசிரியர். ஆனால் கழற்குடம், மடற்பனை, பருத்திக்குண்டிகை, முடத்தெங்கு போன்ற ஆசிரியர்களும் இருக்கவே செய்கின்றனர். ஆயினும் ஒரு மாணவன் வளர்ச்சிக்கு பெற்றோரை ஊக்கப்படுத்தி அதற்கான அறிவுரை வழங்கி அம் மாணவனை நல்நிலைக்குக் கொண்டு வருவதற்கு ஆசிரியர் ஒத்துழைப்பு அவசியமாகின்றது.

              வீட்டுச்சூழல் தவிர்ந்து மற்றைய பொழுதுகளில் தமது பள்ளிப்பருவத்தில் கூடுதலான நேரத்தை பாடசாலையிலேயே ஒரு பிள்ளை கழிக்கின்றது. அந்நேரத்தில் அப்பிள்ளையைக் கண்காணிக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடமே ஒப்படைக்கப்படுகின்றது. குழந்தைகள் உலகத்திற்கு அவசியம். இவர்களே எதிர்கால உலகத்தை ஆளப் போகின்றவர்கள். எதிர்கால உலகை ஆளப் போகின்றவர்களை ஒழுங்கான முறையில் வழிநடத்த வேண்டிய பாரிய பொறுப்பு ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. தவறு செய்யாத மனிதன் உலகத்தில் இல்லை. அந்தத் தவறை அறிந்து அவன் திருந்தி நடக்கும் போது அவன் வாழ்க்கை சிறப்புப் பெறுகின்றது. அனைத்தும் அறிந்த பெரிய மனிதர்களே தவறுகள் செய்கின்ற போது சிறிய பிள்ளைகள் எப்படித் தவறு செய்யாமல் இருப்பார்கள். பிள்ளைகள் களிமண் போன்றவர்கள். அவர்களை எப்படியும் நாம் வடிவமைக்கலாம். முறையானவர்கள் கைகளில் வளர்க்கப்படும் பிள்ளைகள் முறையாக வாளர்வார்கள். தவறானவர்கள் கைகளில் வளர்க்கப்படும் பிள்ளைகள் முறைகேடாக வளர்வார்கள். பிள்ளைகளில் மட்டும் தவறை நாம் காணமுடியாது. ஏனெனில் அவர்கள் பூமியில் பிறப்பெடுக்கும் போது வெற்றுப் பத்திரிகைளாகவே வந்து பிறந்தார்கள். பெற்றோரும் சூழலுமே அவர்களில் பதிவுகளை ஏற்படுத்தக் காரணங்களாகின்றன.

                          ஆசிரியர் தொழில் மற்றைய தொழில்களைவிடப் பொறுப்பான தொழில். ஒரு சமூகத்தை உருவாக்கும் தொழில். பிள்ளைகளில் அவதானமும் அவர்களுக்குப் பாதுகாப்பும் கொடுக்க வேண்டிய பொறுப்பிலுள்ள தொழில். இத்தொழிலுள்ள ஆசிரியர்கள் தமது தொழிலை ஒரு சேவை மனப்பாங்குடன் செய்தல் வேண்டும். பொறுப்பில்லாது பிள்ளைகளுக்குக் கல்வி கற்பித்தலே எமது கடமை. அவர்கள் ஒழுக்க நடத்தைகளுக்கு நாம் காரணம் இல்லை. என்று ஒரு ஆசிரியர் சொல்ல முடியாது. ஒரு கடமையில் ஒருவர் ஈடுபடும்போது அக்கடமையில் முழுக்கவனமும் எடுத்தல் வேண்டும். அக்கடமையில் வருகின்ற நன்மை தீமைகளுக்கு அவர்களே காரணங்களாகும். ஒரு மாணவனுக்குக் கல்வி கற்பிக்கும் போது அம்மாணவனைப் பற்றிய பூரண அறிவு அவனைக் கற்பிக்கும் ஆசிரியருக்கு இருக்க வேணடும். அரசாங்கப் பணத்தில் வாழ்ந்து கொண்டு தாமும் சோம்பேறிகளாக இருந்து கொண்டு தமது பிள்ளைகளையும் சோம்பேறிகளாக வளர்க்கும் பெற்றோர்களால் சீரற்ற பழக்கவழக்கங்களுள்ள பிள்ளைகள் உருவாகுவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தாமும் தொழிலுக்குப் போகாமல், மதுபானங்களுக்கு அடிமையாகி வீட்டிலே அடைந்து கிடக்கும் பெற்றோர்களின் பிள்ளைகள் போதைப்பொருளுக்கு அடிமைகளாவதாகவும் அப்பிள்ளைகளின் பழக்கவழக்கங்கள் மோசமான நிலையில் இருப்பதாகவும் இவையெல்லாம் எம்மால் அவதானித்துக் கொண்டிருக்க முடியாது என்றும் சலிப்படைகின்ற எத்தனையோ ஆசிரியர்கள் நம் மத்தியில் வாழ்கின்றாhகள். பொறுப்பான பதவி வகுத்துக் கொண்டு பொறுப்பில்லாத வார்த்தைகளை நாக்கூசாது சொல்பவர்களாக இவர்கள் காணப்படுகின்றார்கள். மருத்துவர் ஒரு உயிருக்கு எப்படி உத்தரவாதமோ அதேபோல் ஒரு ஆசிரியர் ஒரு உயிரின் வாழ்வியலுக்கு அவசியமானவர். பணம் ஒன்றே குறிக்கோளாகப் பதவி வகிப்பவர்கள், இந்த நாட்டிற்குப் பாவம் செய்பவர்களாகக் கருதப்படுவார்கள். ஏனென்றால், ஒழுக்கம் மீறிய ஒரு பிள்ளை வளர்ந்து பெரியவனாக வரும்போது அப்பிள்ளை அந்நாட்டைச் சீரழிக்கும் ஒரு குடிமகனாக உருவெடுப்பான். இப்படி ஒவ்வொரு பிள்ளைகளும் வளருகின்ற போது, அந்நாட்டில் குற்றம் செய்பவர்களும், சட்டத்தை மதிக்காதவர்களும், ஒழுக்க நடவடிக்கைகளை மீறுபவர்களும் போதைவஸ்துகளுக்கு அடிமைகளாபவர்களும் அதிகரித்துக் காணப்படுவார்கள். அதன்பின் அந்நாட்டின் வீழ்ச்சி நினைத்துப்   பார்க்க   முடியாத அளவிற்குப் பாரதூரமானதாக இருக்கும். ''ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது'' ''இளமையில் கல்வி சிலையில் எழுத்து'' என்றெல்லாம் பழமொழிகள் உண்டு. பள்ளிப்பருவத்தில் கண்ணும் கருத்துமாக வளர்க்கப்படும் பிள்ளை எதிர்காலத்தில் சிறந்த ஒரு பிரஜையாக உருவெடுக்கும் என்பது திண்ணம்.
                       எனவே ஒரு நாட்டின் உயர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் ஒரு ஆசிரியரின் பங்கு ஒரு முக்கிய இடத்தைப் பெறுகின்றது. அதனால், ஆசிரியர்கள் பல்வேறு கலாசாரம் மத்தியில் தமது பணியை மேற்கொள்ளும் போது பொறுப்புள்ளவர்களாக நடந்து தாம் வாழும் நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டியது அவர்கள் கடமையாகின்றது.

    பரீட்சையும் திறமையும்

                        
            

    தைரியம் மிக்க தாமரைக்கு நடந்தது தான் என்ன? பரதம் ஆடும், அவள் கால்கள் பதட்டம் கண்டதும் ஏன்? பட்டென்று விடையளிக்கும் அவள் மூளை பரீட்சையில் பங்கம் விளைவித்ததும் ஏன்? அடுக்கடுக்காய் வினாக்கள் கோர்வைபோல் அவள் ஆசிரியர் மூளைக்குப் படையெடுத்தன. அவள் மாணவர்கள் மனநிலையைக் கற்றுத்தான் இத்தொழிலைக் கையேற்றாள். அருகே தாமரையை அன்பாய் அழைத்தாள்: '   தாமரை உமக்கு என்ன நடந்தது. பரீட்சையே வாழ்க்கை என்று நம்புகின்றாயா? இல்லை, அது ஒரு சூதாட்டம். வெற்றியும் தோல்வியும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை மனம் ஏற்கப் பழக வேண்டும். அறிவுக்கிடங்கிற்குள் அமிழ்ந்து கிடப்பவள் அல்லவா நீ. நீ அள்ளிப் பருகியவை அளப்பரியன. பதட்டம் ஏன் ஏற்படுகின்றது? பரீட்சையில் வெற்றியடைய வேண்டும் என்னும் அதிகூடிய வெறியே இதற்கெல்லாம் காரணம். பரீட்சை மண்டப வாயிலை அடைந்தவுடன் உனது இதயம் பட்பட்டென்று உன்னை எதிர்த்து நின்று துடிக்கின்றதா? உடலில் திடீரென்று வெப்பம் அதிகரித்து வியர்வை வெளிவர எத்தனிக்கின்றதா? தொண்டையில் நீர் வற்றி நாவறண்டு வார்த்தைகள் வெளிவரத் தயங்குகின்றனவா?'' அத்தனை வினாக்களுக்கும் ஆம் என்ற விடையே தாமரையிடமிருந்து வெளிவந்தது. அழகாகச் சிரித்த ஆசிரியர், 'அது அப்பொழுது மாத்திரம் உன்னோடு உறவாட இணைந்த ஒரு உணர்வு. அதி வேகமாக உனக்குள் பெருக்கெடுக்கும் உணர்வு. அது முற்றுமுழுதான பதட்டமுமன்று. முற்று முழுதான பயமுமன்று. உனக்குள்ளே உனது ஆளுமையைப் புதைப்பதற்காய்ப் புறப்பட்ட ஒரு தற்காலிக எதிரி. வீட்டிலிருந்து புறப்படும் முன் பரீட்சை என்னும் ஒன்று இருப்பதையே மறந்து விடு. முதல் நாள் மண்டை வீங்கப் படிக்காதே. பரீட்சை அன்று மூக்குமுட்ட உணவருந்தாதே. நேரத்துக்குப் படுத்து நேரத்துக்கு விழித்தெழு. பரீட்சைக்குப் போகும் போது படமாளிகைக்குப் போகும் உணர்வுடன், பதட்டும் தரும் பெற்றோரையும், பரீட்சைப் பேச்செடுக்கும் நண்பர்களையும் அதட்டி அடக்கு. இயற்கையை அநுபவித்துக் கொண்டே பயணமாகு. படிக்க வேண்டியவை அனைத்தும் படித்து விட்டேன். இனி எது வரினும் துணிந்து செயற்படுவேன். பலன் எதனையும் ஏற்றுக் கொள்வேன் என்னும் பக்குவத்தை மனதில் வரவழைத்துக் கொள்.
         போட்டிக்களத்தினுள் நுழைந்து விட்டாயா! அடக்கத்துடன் முதலில் சுத்தக்காற்று உள் நுழைய அநுமதி வழங்கும்படி ஆசிரியரிடம் பயமின்றிக் கேள். இல்லையேல், அநுமதி பெற்று சாளரத்தை நீயாகவே திறந்து சுத்தக்காற்றை அழைத்தெடு. கையில் வினாப்பத்திரம் வந்து அமர்ந்து விட்டதா? இல்லை, உன் திறமையை வெளிப்படுத்தும் உனது நேரம் வந்து விட்டதா? ஆழமாகக் காற்றை உள்ளே இழுத்து இரண்டு நிமிடம் வைத்திருந்து பின் வெளியகற்று. சிறிது குளிர்ந்த நீர் அருந்து. எல்லாம் அறிந்தவள் நீ என்னும் ஒரு கர்வத்தை வலுக்கட்டாயமாக ஏற்படுத்திக் கொள். உனக்கு முன்னே அமர்ந்திருக்கும் மேற்பார்வையாளர் உடையேதும் அணியவில்லை. அல்லது கோமாளிபோல் உடையணிந்துள்ளார், என்று மனதிற்குள் நினைத்துப் பார். உன்னையறியாமலே உனக்குச் சிரிப்பு வந்து உன் எண்ணத்தைத் திசை திருப்பும்.
                         இத்தனையும் நினைத்தப் பார். நானும் உன் வயது கடந்தவள் தான். எத்தனையோ பரீட்சைகளில் அமர்ந்து சித்தியும் பெற்றுள்ளேன். தென்துருவத்தை அடைந்த முதல்ச் சிறுவன் நான் தான் என்று நாளை சரித்திரம் குறிக்கும். என்று 12 வயதிலே நம்பியவர் அமுட்சேன் என்பவர். நம்பிக்கைதான் வாழ்க்கையின் அச்சாணி. வெற்றி என் கையில் கிடைக்கும் என்று நம்பு. பரீட்சை உன் திறமையைத் தீர்மானிப்பதில்லை. பட்டங்கள் உன் திறமைக்கு விலாசப்பலகை அல்ல. உன் செயலே நாளை கல்வெட்டில் உன் திறமைக்குக் கட்டியம் கூறும்'' என்று தைரிய நீர் பாய்ச்சப்பட்ட தாமரை மனதால் மலர்ந்தாள். ஆசிரியைக்கு நன்றி கூறி அவ்விடத்தை விட்டு மெல்லத் தெளிவுடன் நடந்தாள்.
           இது தாமரைக்கு மட்டுமல்ல தாமரை போல் இருக்கின்ற அத்தனை பரீட்சார்த்திகளுக்கும் அன்பு வார்த்தைகள்.

    கல்யாண தேதி குறித்தாச்சி



    கல்யாணத் தேதி குறித்தாச்சு, 
    கச்சேரி மேளம் பிடித்தாச்சு 
    பத்திரிகை அடிக்க விட்டாச்சு, 
    ஊரெல்லாம் சேதி பறந்தாச்சு
    கல்யாணக் கோலம் காணக் 
    கிலுகிலுப்பு மனசுக்குள்ளே
                                                                   (கல்யாணத்......)
    மலையடிவாரக் காற்றுக்கெல்லாம் 
    வரவேற்புக் கொடுக்க வேண்டும்
    நான் மடிசாய்ந்த மரநிழலில் 
    மணவறைதான் போட வேண்டும்
    சோலைக்குயில்களெல்லாம் கூட்டி வந்து 
    கச்சேரி வைக்க வேண்டும்
    ஆற்றங்கரை நாணல்களை 
    ஆடச் சொல்லிக் கேட்க வேண்டும் 
                                                                     ( கல்யாணத்.....)
    எங்கள் உறவுக்குத் துணை வந்த
    உல்லாச வான் நிலவு விளக்கெரிக்க
    தாரகைகள் சரவிளக்காய் 
    தனிப் பொலிவு காட்டி நிற்க
    சக்கரையில் தேன் கலந்து
    சொக்கும் உந்தன் சொல்லாலே
    நித்தமும் நான் கலந்திருக்க            
                                                                  (கல்யாணத்....)

    உலகின் முகவரியை இழந்த விடாதீர்கள்


                                                      


    வாரிய தலைமயிர்கள் சுற்றப்பட்டிருந்த சீப்பை, ஒருமுறை நோட்டமிட்டாள், ரூபா. இரண்டு வெள்ளிக் கம்பிகள் மயிர்களிடையே சிரித்தன. 'திக்...'என்றது மனம். என்ன வாழ்க்கை. வாழும் வரைதான் வசந்தம். வயது கடந்துவிட்டால், இறுதிப்பயணத்திற்கு ஆயத்தமாக வேண்டியதுதான். எனத் தனக்கே உரிய பாணியில் சலிப்பாக 
         
       

      'சொந்தங்கள் பந்தங்கள் இணைந்தே சோக இசைபாடி
       சொந்தப் பெயர் மாற்றிச் பிரேதமெனப் பெயரிட்ட
       சிங்கார உடலை சிவந்த தீயிலிட்டு
       சிலகாலம் நினைவிருத்தி தம் கடமை புரிந்திடுவார்''
    என உடல் நிலையாமை, வாழ்க்கை நிலையாமை பற்றிச் சிந்தித்த வண்ணம் வீதிக்கு விரைந்தாள், ரூபா. - 2 டிக்ரி சென்ரி கிரேட் காலநிலை உடலைச் சில்லிட வைத்தது. பனித்தூறலில் பாதையைப் பார்த்துப் பக்குவமாய் நடக்க ஆரம்பித்தாள். கதிரவன் தன் கதிர்வீச்சை நொடிக்கு ஒன்றுக்கு 18,000 மைல் வீதம் பூமியை நோக்கிச் செலுத்துவதற்காக மேகத்திரையைத் தன் கதிர்க்கரங்களால் விலத்த ஆயத்தமாகின்றான். விடியலில் வேலைக்காய் விரைகின்ற ஓரிருவரைத் தவிர அமைதியான காலைப்பொழுது மௌனமாய் விழித்திருந்தது. இரண்டு வயோதிப ஜேர்மனியத் தம்பதியினர், ஒருவர் கையை ஒருவர் பிடித்தவண்ணம், நடைபயிலும் குழந்தை தத்தித் தத்தி வருவது போல் வீதியில் தென்பட்டனர். சுருக்கம் விழுந்த கன்னங்களில் முகப்பூச்சு, உருக்குலைந்த விரல்களில் நகப்பூச்சின் பளபளப்பு, பொய்யான பற்களை மறைத்திருக்கும் உதடுகளில் சிவந்த உதட்டுச் சாயம், நேர்த்தியான ஆடை, அந்நியோன்னியமான இளங்காதலர்கள் போல் பேரூந்துத் தரிப்பில் ரூபாவுடன் நின்றிருந்தார்கள். பேரூந்தும் வந்தது. அதனுள் ஏறிய ரூபா ஒரு இருக்கையில் அமர்ந்தாள். தாமதமாய் ஏறிய அவர்கள் இருக்கத் தன் இருக்கையைத் தியாகம் செய்ய எழுந்தாள். அவர்களை இருக்கும்படிக் கூறிய அவளை எரித்தன, அவர்கள் கண்கள். 'எங்களை வயது போனவர்கள் என்று நினைத்துவிட்டாயா? எங்களால் நின்று வரக்கூடிய தைரிய் இருக்கின்றது.' என்னும் அர்த்தங்களை உணர்த்தியது, அப்பார்வை. மீண்டும் அமர்ந்து விட்டாள்.

                 முதுமைக்கு மனமே முதற்காரணம். எனவே தான் 80 வயதுக் கிழவி மனதால் 18 வயதுப் பருவமங்கை ஆகின்றாள். பேரூந்தின் போராட்டத்திலும் நிலையாக நின்றது வயோதிபர் எலும்பு. மனித உறவுகளில் அதிக ஈடுபாடு இல்லாமை, தனிமையில் ஆனந்தம், தங்கள் உடல்நலம் பற்றிய கவலை, பயம், பதட்டம், வாழ்வில் மிகக்குறைந்த ஆர்வம், ஆகியவையே முதுமைக் காலத்தில் மனநோயால் பாதிக்கப்படுவதற்கான காரணங்களாகும். ஆழ்மனம் வலுவடைய உடல் வலுவடையும். இளமைக்கு இட்டுச் செல்லும். புரியாத உலகை உரிமையாய் எண்ணி வா¬ழுகின்ற வாழ்வின் சுகந்தங்களை சுவைக்க மாட்டாது, வாழும் மனிதர் எத்தனை பேர் எம்மவரிடையே உள்ளனர்.

                 புத்தாண்டு பிறக்க வான் நோக்கிப் புறப்பட்ட மத்தாப்புக்கள் போல் வான் பரப்பெங்கும் பரந்திருக்கும் மத்தாப்புக்களான நட்சந்திரங்களைக் காணும் இன்பம் பெற்றதல்லவா, இவ்வாழ்க்கை. மணிக்கு 1000 மைல் வேகத்தில் தன்னைச் சுற்றியும், அதேவேளை மணிக்கு 72,000 மைல் வேகத்தில் சூரியனையும் சுற்றிக் கொண்டு அண்டவெளியில் அழகான இராட்டினம் போல் சுழன்று கொண்டிருக்கும் பூமியின் மேற்பரப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் அற்புதமான வாழ்க்கையை இரசிக்க வேண்டியதல்லவா இவ்வாழ்க்கை. நின்ற இடத்தில் நின்று கொண்டே பத்தாவது மாடியைச் சென்றடையும் சுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், முதுமையைப் பற்றி ஏன் எண்ண வேண்டும்? வாழ்க்கை வாழ்வதற்கே. வாழ்வை எண்ணிஎண்ணி ஏங்குவதற்கல்ல. முதுமையை எண்ணி உலகில் முகவரியை விரைவில் இழந்து விடாதீர்கள். இனிமையான வாழ்வை வாழும்வரை சுவாரஸ்யமாக வாழ எத்தனியுங்கள். அப்போது ஆயுள்காலம் அதிகரிக்கும். உள்ளுறுப்புக்கள் சோபை கொள்ளும்.

    கல்லாய்க் காலம் கழித்த அகலிகை குற்றவாளியா?



                 
    கம்பராமாயணத்தில் பாலகாண்டத்தில் அகலிகை படலம் 25 பாடல்களில் கம்பரால் பாடப்பட்டது. அகலிகைமேல் ஆசை கொண்டு அவளை அநுபவிக்க விரும்பிய இந்திரன், அகலிகை கணவன் கௌதம முனிவர் காலைக்கடன் முடிக்க வெளியில் சென்ற நேரம் பார்த்து கௌதம முனிவர் போல் உருமாறி அகலிகை வீட்டினுள் நுழைந்தவிடுகின்றான். தன் இச்சையைத் தீர்க்க அகலிகையை அணைக்கின்றான். வந்தது கணவன் என்று நம்பிய அகலிகை அவனுக்கு இடம் தருகின்றாள். ஞான திருஷ்டியினால், நிலை உணர்ந்த கௌதமர் வீடு நோக்கி வரப் பூனையாக மாறிய இந்திரன் ஓடிமறைகின்றான். கௌதமரும் இந்திரனைச் சபித்து அகலிகை கல்லாக மாறச் சாபமிடுகின்றார். பிழை பொறுத்தல் பெரியோர் கடனே என வேண்டிக்கேட்ட அகலிகைக்கு ''இராமன் காற்துகள் பட்டு நீ மீண்டும் பெண்ணாகக் கடவது'' என சாபவிமோசனம் கொடுக்கின்றார். இதில் கம்பர் தன் வரிகளால் உணர்த்திய வரிகள் மேற்கொள் குறியிடப்பட்டு இக்கவிதையில் துணையாய் கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கு கௌதமர் செய்தது சரியோ தவறோ என ஆராயப் புகுந்தமை இக்கவிதையாய் விருந்தாகிறது.
    நேரே காணல் காட்சிப் பிரமாணம்
    தெரிந்தவை கொண்டு தெரியாதவை
    தெளிந்தே கூறுதல் அநுமானப்பிரமாணம்
    உயர்ந்தோர் கருத்தை ஏற்று
    ஒத்துக்கொள்ளல் ஆகமப்பிரமாணம்

    அநுமானப்பிரமாணம் அணைத்தே
    அழகின் தேவதைஅக லிகைவாழ்வில்
    அடைந்த நிலைமை ஆராயப்புகுந்தேன்.

    இராமாயணத்தில் இருபத்தெட்டுப் பாடலில்
    இணைந்துவந்த அகலிகைப் படலம்
    இதயத்தி லுறுத்திய இன்னலை
    இயம்ப விழையுமிக் கவிதை

    இந்திரன் ஓர் தேவன்
    இதயம்நிறை காமக் கள்வன்
    தந்திரமாய் அகலிகை வாழ்வை
    கல்லாகச் செய்தகயவ னென்பாருண்டு
    கயவன் இந்திரனோ கௌதமனோ!
    கலங்கு கிறதென்கவி யுள்ளம்

    கவின்மிகு அழகி அகலிகை
    காதல் கணவன் கௌதமன்
    கண்மூடி யிட்ட சாபத்தால்
    கடத்தினாள் கல்லாய்க் காலத்தை
    விதியென்று விட்டிட முடியுமா?
    சதியென்று சாடிவிட்டால் போதுமா?
    மதியிழந்த முனிவன் முனிவு
    கதியிழக்கக் காரணம் ஆகியது

    ஞானப் பார்வை கொண்டவராம்
    காலைக்கடன் முடிக்கச் சென்றாராம் - இந்திரன்
    வேளையுணர்ந்து நுழைந்த நிலை
    வேவு காணமுடியா ஞானமென்ன பெற்றார்?

    இந்திரன் இந்திரனாய் வந்திருந்தால்
    வந்திருப்பான் யாரென் றுணர்ந்து
    வஞ்சிக்கப் பட்டிடாள் வஞ்சியவள்.
    வந்தது இந்திரனாயன்று கணவனாயல்லவா!

    இம்மியளவு மிதையுணரா கௌதமன்
    இட்ட சாபமது பலிக்கலாமோ!
    முனிவையடக்க முடியா முனிவர்
    பெண்ணை அடக்கி யாண்டாரோ!

    'எல்லையில் நாணமெய்தி யாவர்க்கும் நகைவந்தெய்த
    புல்லிய பழியினோடும் புரந்தரன் போய்பின்றை
    மெல்லியலாளை நோக்கி ' விலைமகள் அனையநீயும்
    கல்லியல் ஆதி' என்றான் கருங்கலாய் மருங்கு வீழ்வாள்''

    விலைமகளென வாய் கூசாது விதந்துரைத்தல்
    பொறுத்திருக்க மாட்டார் உடலால் பிழைத்தார்.


    உடலால் கற்பிழந்தாள்
    உணர்வாள் கற்பிழந்தாளன்று
    பஞ்சகன்னியர் வரிசையில்
    நின்று நிலைப்பவள் அகலிகை
    நெஞ்சம் உணராது சாபமிட்ட
    வஞ்சகன் கௌதமன் குற்றமே!

    'புக்கு, அவளோடும், காமப்புதுமணமதுவின் தேறல்
    ஓக்க உண்டிருத்தலோடும், உணர்ந்தனள்;; உணர்ந்தபின்னும்,
    தக்கது அன்று' என்னஓராள்; தாழ்ந்தனள் இருப்ப, தாழா
    முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும், முடுகி வந்தான்.''

    அணைந்தபின் உணர்ந்தனள்
    உணர்ந்தபின் ஓராளென
    குற்றமுணர்த்திய அகலிகையுள்ளம்
    உணராநிலை யென்னென்பேன்
    உணர்வன்றி உறுதியில்லை
    உறுதியாய் உணர்ந்திருந்தாள்
    உதறித் தள்ளியிருப்பாள்.
    உண்மைக் கணவனேயாகில்
    விபரீதமாகிடும் எனத்
    தாழ்ந்ததன் தவறென்ன
    மனதால் தயங்கி
    முனிவர் வருகைக்காய்
    தாமதித்த அகலிகை குற்றவாளியா?

    முனிவ ரென்றால், ஒறுத்தல் குற்றம்
    முனிவரன்றன்றி முனிவர் காப்பரென
    முடிவுகொண்ட அகலிகை பாவியானாள்
    பழி சுமந்தாள் கல்லாய் சமைந்தாள்

    பாதிப்பும் பெண்ணுக்கே
    பழியும் பெண்ணுக்கே
    பக்கத்துணையே நம்பா
    துணையும் ஒரு துணையா?
    பாவி அகலிகையா?
    பழி தந்து தப்பிய இந்திரனா?
    சாபம் தந்த கௌதமனா?




               

    கட்டுப்பாடும் சுதந்திரமும்







    உந்தியில் தங்கியபோது
    உந்தியே வரம்பு



    உருண்டதும் உதைத்ததும்
    கருவறையுள் கட்டுப்பாடு
    உதித்ததும் பூமியில் சுதந்திரம்
    உருவாகும் உயர் வாழ்வுக்கு
    மனக் கட்டுப்பாடு
    சந்ததி காத்திடும் தாய்மடி கட்டுப்பாடு
    சரித்திரம் புகழ்ந்திட கட்டாய நிலைப்பாடு
    சிந்துகள் பாடும் சிட்டுக்குருவி வாழ்வில்
    மிஞ்சிடா துலகில் வஞ்சியாய் வாழ்ந்திட
    வாழ்வின் கறை சுமக்க வழி விடாத
    பெற்றோர் கட்டுப்பாடு

    விலங்குகள் சுதந்திரம் காட்டினுள்ளே- அவை
    வீதிக்கு வந்தால் இழப்பது வாழ்வு
    மீன்களின் சுதந்திரம் நீரினுள்ளே- அவை
    நீரைத் தாண்டினால்இ நிலைக்கா துலகில்

    சொற்சுதந்திரமென நாவடக்க மறந்தால்
    சொல்லுக்கேது சுதந்திரம்
    புலனடக்கம் புரியாதுலகில் தறுதலையாய் வாழ்ந்தால்
    குலநடுக்கம் குலத்தையே அழிக்கும்
    கட்டவிழ்ந்த மந்தைகளாய் மேய்ப்பாரிழந்தால்
    கெட்டழியும் வாழ்வு கெடுத்து விடும் சுதந்திரம்
    வாழ்வை உயர்த்த வழிகாட்டும் சுதந்திரம்
    வானம்பாடியாய் வாழ்வை வளமாக்க வேண்டும்
    சீரழியாது வாழ்வைச் சிறப்பாக்க
    பேணிட வேண்டும் சீரான கட்டுப்பாடு

    நன்றி மறந்தோர் தம்மை மறந்தோராவார்


         நன்றி மறந்தோர் தம்மை மறந்தோராவார்



         












     
    நன்றி மறந்தோர் தம்மை மறந்தோராவார்
               
    கதவைத் திறந்து காற்றுப் போல் உள்நுழைந்து தன் கைப்பையை விசுக்கி எறிந்து சோபாவில் தொப்பென்று விழுந்த கார்த்திகாவைப் பார்த்துச் சிரித்த அவர் கணவர், 'இன்று வேலைத் தளத்தில் கால்கள் ஓரிடத்தில் நிற்கவில்லையோ நகரும் படிகள்போல் நடமாடியபடியேதான் இருந்தனவோ!'' அப்படியொன்றுமில்லை என்று அலுத்துக் கொண்டாள், கார்த்திகா. ' அப்படியென்றால், அம்மாவுக்கென்ன கோபம் 90 பாகை காட்டுகிறது.'' என்று மெல்லச் சீண்டிவிட்டு வேடிக்கை பார்த்த கணவரிடம் ' இந்த நந்தா குடும்பம் இந்த ஜேர்மனி மண்ணில் கால் பதித்த போது வெற்றுக் கடதாசியாய் கண்ணும் கையும் தய வும்  நெin  உம் துணைபோக பேந்தப்பேந்த முழித்து அப்பாவிகளாய் எங்களிடம் எப்படித் தஞ்சம் புகுந்தார்கள். உடலும் உள்ளமும் வருந்த நேரமும் பொழுதும் போர் புரிய அனைத்தையும் எதிர்த்துக் கட்டுப்படுத்தி அவர்கள் உள்ளத்தில் நாட்டையும் மொழியையும் வாழ்முறையையும் எழுதி வைத்தது யார்? இன்று கண்பார்க்கிறது. மனம்  விரும்பியும் விரும்பாமலும் சிரிக்கிறது. கால்கள் நின்று பேச நேரமில்லாது நடந்து கொண்டே இருக்கிறது. என்ன நன்றி கெட்ட ஜென்மங்கள். ஓடிவந்து கட்டித் தழுவி கார்த்திகா, கார்த்திகா என்று வாயெல்லாம் பல்லாய்ச் சிரித்து உரிமை கொண்டாடியவர்கள் இன்று பார்க்கும் இடங்களிலெல்லாம் கண்டு கொள்ளாமல் போவதைப் பார்க்க இந்த மனிதர்கள் எல்லாம் இப்படி இதயத்தில் இரண்டு வேறுபட்ட அறைகள் வைத்து நன்றி மறந்தவர்களாய் எப்படி வாழுகின்றார்கள்'' என்று வெறுப்பாய்க் கூறிய கார்த்திகாவிடம்,' இதுதான் வாழ்க்கை கார்த்திகா. நாம் ஏணியாக இருக்க மேலே ஏறிக் கொண்டே போவார்கள். அந்த ஏணியை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. கீழே வரும்போதுதான் அதன் துணைதேவை. இப்போது அவர்களைச் சுற்றி ஒரு கூட்டம். அனைவரும் தங்கள் தரத்துக்குக் கீழே. அவர்கள் தரம் உயர்வதை இவர்கள் விரும்புவதுமில்லை. தமது தரத்துக்கு மேலே இருப்பவர்களுடன் பழகுவதற்கும் இவர்கள் விரும்புவதுமில்லை. மனிதப்பண்புகள் மாறுபட்டவை. தன்னைத்தானே பெருமைப்படுத்தி வாழ்வோர். தனக்கு மேல் ஒருவர் வாழ்வதை விரும்ப மாட்டார். அவர்களுடன் ஒட்டிக் கொள்ளவும் விரும்பமாட்டார். ஏனெனில் தற்பெருமை பேசத் தன் தகுதிக்குக் குறைவான தகுதியுள்ளார் மாத்திரமே தேவை. அவர்களை விட ஒருபடி உயர்ந்தவரிடம் உள்ள நற்பண்புகள் சேகரிக்கும் அறிவுக்களஞ்சியம் இவர்களிடம் இல்லை. நாம் மலையில் பெருக்கெடுக்கும் நதியாக இருப்போம். செல்கின்ற வழியெல்லாம் செழிப்பை ஏற்படுத்துவோம். வழிதோறும் தொட்டுக்கொள்ளும் மூலிகைகளின் சிறந்த பண்புகள் எல்லாம் ஏற்றுப் புனித நதியாதல் போல் சிறந்த பண்புகளைப் பெற்றுய்வோம். குட்டையாய் நின்று எருமைகள் குழப்பிய நீராய் இருப்பாரைப் பாhத்து அநுதாபப்படுவதை விட யாதொன்றும் செய்தல் முடியாது. எழுந்திடு! உனக்காய்ப்பல கருமங்கள் காத்திருக்கின்றன. அற்ப விடயங்களுக்கு உணர்ச்சிவசப்படுதல் அற்பபுத்தி'' என்று ஆறுதலுடன் அரிய பிரசங்கம் செய்த கணவனின் பேச்சுக்குத் தலைசாய்த்துத் தன் பணி தொடர்ந்தாள், கார்த்திகா.
             

    திறந்தே இருக்கும் இதயக்கதவினுள் புகுந்தவர் பலர். அதில் பதிந்தவர் சிலர். புகுந்து விரைந்து பறந்தவர் ஒரு சிலர். புகுந்து இருந்து புண்படுத்துவோரும் சிலர். புகுந்து பிரிந்து புண்புடுத்துவோரும் உளர். அதில் இதுவும் ஒரு வகை. இதயம் சொல்லும் கதை.

    ஞாயிறு, 25 ஜூன், 2017

    என்னையே நான் அறியேன் நூல் விமர்சனம்



    என்னால் எழுதி வெளியிடப்பட்ட என்னையே நானறியேன் என்னும் நூலுக்காக வந்த விமர்சனங்களில் சில இப்பதிவில் இடம் பெறுகின்றது. நூலை முழுவதுமாக வாசித்து தங்கள் 



    அன்புச் சகோதரி திருமதி கெளசி அவர்களுக்கு, வணக்கம்.

    தங்களது நூலான 'என்னையே நானறியேன்' கதையினை நேற்றிரவுதான் படித்தேன். ஒரு தேர்ந்த எழுத்தாளர் நீங்கள் என்பதற்குச் சான்றாக இக்கதை அமைந்துள்ளது. கணவன் மனைவிக்கிடையே அன்பு உன்னதமானதாக, உண்மையாக இருந்தால் எப்படியிருக்கும் என்பதையும், அதுவே முரண்பட்டுவிட்டால் என்ன ஆகும் எeன்பதையும் இதைவிட அழகாக சொல்லிவிடமுடியாது. கரன் போன்று, போலித்தனமான கணவன் அமைந்துவிட்டால் மனைவி எவ்வளவு துயருறுவாள் என்பதற்கு உதாரணமாக வரதேவியின் படைப்பு அமைந்திருக்கிறது. திருந்திவிட்டதாகக் கணவன் சொன்னாலும், மனத்தில் வெறுப்பு நிறைந்துவிட்டால் அங்கு மீண்டும் உறவு பூப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பதனை அழகாக நிறுவியுள்ளீர்கள். கரன், வரதேவி இருவரைவிட, குழந்தை வரன் மீதே நமக்குக் கூடுதலாக இரக்கம் பிறக்கிறது. எலியும் பூனையுமாக இருக்கும் பெற்றோர், உடல் நலம் கெட்ட நிலையிலும் இணையாமல் இருந்தால், இடையில் சிக்கித் தவிக்கும் குழந்தையின் மனநிலை எவ்வளவு கொடுமையானதாக இருக்கும்....? அழகான படைப்பு சகோதரி! இன்னும் பல நல்ல படைப்புக்களை நமது தமிழ்ச் சமுதாயத்துக்கு நீங்கள் தரவேண்டும் என்பது எனது விருப்பம்.

    அன்புடன், த.இராமலிங்கம், சென்னை, இந்தியா.


    அன்புடையீர்,

    வணக்கம்.

    என்னையே நானறிவேன் எனப் பெயரிய அருமையான நாவல்
    இலக்கிய நூல் நேற்றுத்தான் கிடைத்தது. ஒரே அமர்வில் நூல் முழுவதையும் படித்து மகிழ்ச்சியடைந்தேன். புலம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களின் வாழ்வியல் சிக்கல்களை யதார்த்தமாகப் பேசும் நூல் என்ற முறையில் இந்நூல் தமிழ் கூறும் நல்லுலகிற்குக் கிடைத்துள்ள அருமையான கலைப்பெட்டகம் என்பேன். உயரிய, ஆனால் இயல்பான, விழுமிய செஞ்சொற்கவி இன்பம் உங்கள் உணர்ச்சியோட்டம் மிக்க உரைநடையில் பொங்கித் ததும்பி வழிகின்றது என்பதை நான் குறிப்பிட்டாக வேண்டும். மொழியைத் திறம்படக் கையாள்வதில் தான் ஒரு எழுத்தாளனின் முழு வெற்றியும் அடங்கிக் கிடக்கின்றது என்று நான் நம்புகிறேன். உங்கள் உயரிய,
    உணர்ச்சி ததும்பும், எளிய உரைநடையும், பொருத்தமான சொற்கள் பொருத்தமான இடத்தில் அமர்ந்து உரைநடை ஆற்றொழுக்காகப் பாய்வதும் என்னை மிகவும் கவர்ந்தன.

               சதையும், குருதியும், உயிரோட்டமும் பெற்ற கதைத் தலைவியின் பாத்திரப் படைப்பு மிகவும் அருமை. பிறந்த இடத்தின் அகப்புறச் சூழல்கள் பிற நாடுகளுக்கும் செல்லும்படி பிடரியைப் பிடித்துத் தள்ள, புகுந்த இடத்தின் புறச்சூழல்கள் பூலோக சுவர்க்கமாக அமைய, குடும்ப வாழ்க்கை வெடித்துச் சிந்திச் சிதறுவதும் மீண்டும் புதுவாழ்வை புனரமைக்க முயலும்போது பேரிழப்பு ஏற்படுவதும் மிகப்பெரிய மானுட அவலமாகவே பரந்து பரவுகின்றது.

               புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியல் குறித்த மேலும் பல இலக்கியங்களை நீங்கள் படைக்க வேண்டும் என்பது எனது அவா. மொரிசியசு நாட்டில் புலம்பெயர்ந்த தமிழர்கள் குறித்த அனைத்துலக மாநாடு வரும்
    ஜூலை 23, 24, 25 - 2014 ஆகிய நாட்களில் நடைபெறுவது பற்றி அறிந்திருப்பீர்கள். அம்மாநாட்டில் பங்கேற்று புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியல் குறித்த இலக்கியங்கள் என்ற தலைப்பில் தாங்கள் ஆய்வுரை வழங்கலாம். ஜெர்மன் நாட்டின் பிரதிநிதியாக இருந்து அங்கு வாழும் தமிழர்களையும் இணைத்து இம்மாநாட்டின் வெற்றிக்கு உதவலாம். புலம்பெயர்ந்த தமிழர்களின் ஒருங்கிணைப்புப் பணிக்கு தாங்களால் இயன்ற அனைத்துப் பணிகளையும் நல்கலாம்.

    மிக்க நன்றி,
    மிக்க அன்புடன்,

    முனைவர் ஜி. ஜான்சாமுவேல்
    இயக்குநர், ஆசியவியல் நிறுவனம்.

    பெறுநர்
    திருமதி. சந்திரகௌரி,
    ஜெர்மனி





    என்னையே நானறிவேன்....
    நாவலுக்கான விமர்சனம்
    ***********************************

    நாவல் என்றால்......
    இப்படியும் இருக்குமோ??
    ****************************************
    பல்வேறு அனுபவங்களோடு
    பல்வேறுபட்ட  செய்திகள் காணப்பட வேண்டும்.

    வாழ்வை முழுமையாகவோ அல்லது அதன்
    ஒரு பகுதி வாழ்க்கையையோ விளக்கமாத் தரவேண்டும்.

    பல்வேறு பாத்திரங்களின் பண்புகளையும்
    வாழ்க்கை முறைகளையும் அவற்றிற்கிடையே நடைபெறும்
    நிகழ்ச்சிகளையும் ஒழுங்குபடுத்திக் கதையாகத் தொகுத்துத்
    தரவேண்டும்.

    நீண்டதொரு கதையாக ஐம்பதாயிரம் சொற்களுக்கு
    மேலாகவும் இருக்கலாம்.

    நாவல் என்பது வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நிலைக்
    கண்ணாடி எனலாம்.

    நாவல் எழுப்பும் கலையார்வம் நீண்ட நேரம் நீடித்து நிற்க வேண்டும்.
    பாத்திரங்களை உருவாக்குவதிலும், அவற்றை வழிநடத்திச் செல்வதிலும்தான் ஒரு நாவலின் வெற்றியும் தங்கி இருக்கிறது.
    உயிருள்ள பாத்திரங்களை உருவாக்கி அவற்றை உலாவ விடுவதன் மூலம் ஆசிரியரின் திறமை வெளிப்படும்.

    கதையின் நிகழ்வுகளையும் கால அளவுகளையும் பொறுத்து பாத்திரங்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.

    பாத்திரங்களின் பண்புகளை அவற்றிக்கு இடப்படும் பெயர்களைக் கொண்டும் ஊகிக்க முடியும்.

    பாத்திரங்களை ஆசிரியரோ அல்லது இன்னொரு பாத்திரத்தின் மூலமாகவோ அறிமுகம் செய்து வைக்கலாம.

    பாத்திரங்களின்  வளர்ச்சியில்தான் நாவலும் வளர்கின்றது.

    அவற்றின்  செயல்பாடுகள், சமூகத்தோடு பாத்திரம் கொண்டுள்ள உறவு, பிறரோடு உரையாடும் உரையாடல்கள் போன்றவை பாத்திரத்தின் வளர்ச்சிக்குத் துணை நிற்கின்றன.

    ஆசிரியரின் முழு ஆளுமையும் இங்கேதான் தீர்மானிக்கப்படும்.

    உச்சக் கட்டமும் கதை முடிப்பும்
    எந்த ஒரு இலக்கியப் படைப்பும் ஒரு உச்சக் கட்டத்தை
    நோக்கியே நகரும். நகர வேண்டும்.

    இதற்கு நாவல் இலக்கியமும் விதி விலக்கானதல்ல.

    பாத்திரப் படைப்பாக்க உத்தியில் பாத்திர முடிப்பும் ஓர் இன்றியமையாததாகும்.

    பாத்திரங்களுக்கு ஏற்படும் முடிவைக் கொண்டுதான்
    பாத்திரங்கள் வாசகர்களின் மனத்தில் இடம் பெறுவர்.

    திருமணம் அல்லது ஒரு குறிக்கோள் நிறைவேறுதல் போன்ற இன்ப முடிவாக இருக்கலாம்.

    இல்லையேல் மரணம் அல்லது ஒரு குறிக்கோளை நிறைவேற்றுவதில் ஏற்படும்  தோல்வி போன்ற
    துன்பமுடிவாகவும் இருக்கலாம்.

    எந்த முடிவாக இருந்தாலும் அம்முடிவு பாத்திரத்திற்கு, இயற்கையாக ஏற்பட்ட முடிவாக இருத்தல் வேண்டும்.

    நடையும் கதை சொல்லும் பாங்கும்
    கதையை நெறிப்படுத்திச் செல்லும்போது பாத்திரங்களின் பண்புகளை ஆசிரியர் தம் கூற்றாகவே கூறிச்செல்வது
    ஒருமுறை யாகும்.
    அல்லது பாத்திரங்களின் செயல்கள் மூலம் வாசகனே உணர்ந்து கொள்ளுமாறு அமைப்பது இன்னொரு முறையாகும்.
    சொல்லாட்சியில் மிகவும் கவனம் செலுத்தப் படவேண்டும்.
    பாத்திரங்களின் உரையாடல்களின் போது வட்டாரச் சொற்கள், அல்லது பிறமொழிச்சொற்கள் கலந்து வரலாம்.
    ஆனால் ஆசிரியர் கூற்றுக்களின் போது எழுத்து வழக்கு இருக்கவேண்டும்.
    எல்லாவற்றிலும் மேலாக இந்த நாவலின் மூலம் ஆசிரியர் வாசகனுக்கு என்ன செய்தியைத் தந்து செல்லுகிறார் என்பதும் கவனிக்கப்படும்.
    இவற்றை அளவு கோல்களாகக் கொண்டு இந்த நாவலை உரசிப்பார்ப்போம்!
    குறை காணவேண்டும் என்பதுவோ
    அல்லது முகத்துதி செய்யவேண்டும் என்பதுவோ
    எமது நோக்கமல்ல.

    தராசுமுனையின் தாக்குதலுக்கு
    இவர் தாக்குப் பிடிக்கின்றாரா என்று பார்ப்போம்!

    XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

    இந்த பூமிப்பந்தின் ஒரு புலர் காலைப் பொழுதோடு
    புலத்தைக் களமாகக் கொண்டு கதை விரிகின்றது!
    அற்புதம்!!

    மனித நேயத்தையும்... மண்வாசனையையும்...
    பாத்திரங்கள் வாயிலாக பதிவு செய்து செல்லுகிறார்.

    ஒரு பெண்ணுக்கு வேலி தாலி என்னும் மரபோடு
    இவர் பாதம் பதிப்பதிலிருந்தே இவர் பெண்ணினத்தின்பால்
    பக்கச் சார்பானவர் என்பதை முன்கூட்டியே
    அறியத் தருகின்றார்.

    இவர் இங்கே அள்ளித் தெளிக்கும் அனுபவங்கள்...
    முதுமொழிகள் மூலம் இவரை ஒரு சாதாரண படைப்பாளியல்ல
    இவரை ஆழமாக வாசிக்கவேண்டும் என்ற எண்ணம் வருகிறது.

    இருநூறு பக்கங்களுக்கு மேலுள்ள ஒரு நாவலை
    ஒரு வாசகனை ஓரிடத்தில் இழுத்து வைத்து.....
    இருத்திவைத்து வாசிக்க வைக்க முடியும்
    என்பது அவ்வளவு சுலபமானதல்ல.

    வாசகன் மிகவும் புத்திசாலி!
    பக்கங்களைத் தட்டிவிட்டுக் கொண்டே
    பத்து நிமிடங்களில் வாசித்து முடித்துவிட்டேன் என்று
    எழுந்தோடிவிடுவான்.

    ஆச்சரியம் என்னவென்றால்.....
    இந்த நாவலின் முதல் பக்கத்தைப் பிரிக்கும் எவரும்
    இதன் இறுதிப்பக்கம் வரும்வரைக்கு கீழே வைக்க விடாமல் ஆசிரியர் இழுத்துச் செல்லுகிறார்.....

    அத்தகைய ஒரு உத்தியை இந்த நாவலாசிரியர்
    கையாண்டிருப்பது வியக்கத் தக்கது!
    எம்மை விழியுயயர்த்த வைக்கின்றது!

    உயிருள்ள ஒரு சில பாத்திரங்களை
    எம் கண்முன்னே உலாவ விடுகின்றார்.

    சாதாரண மனித உறவுச் சிக்கல்கள்...
    உணர்வுச்சிக்கல்களில் இந்தப் பாத்திரங்களைச் சிக்கவைத்து
    கதையை நடத்திச் செல்லும் பாங்கு அற்புதமானது!!

    ஆசிரியரின் தற்கூற்றாகவும் பாத்திரங்கள் வாயிலாகவும்
    கதை வளர்ந்து செல்கிறது.

    எளிமையான சொல்லாட்சி கொண்டு
    பல இனிமையான கருத்துக்களை
    பொன்மொழிகளை நாவல் முழுவதும்
    தூவிச் செல்லுகிறார்.

    இவர் தானொரு கைத்தேர்ந்த எழுத்தாளர்தான்
    என்பதனை நிறுவிக் காட்டுகிறார்!

    தவிர தானொரு கவிதாயினி என்பதனையும்
    வெளிப்படுத்தும் நோக்கில் பலவிடங்களில்
    சான்றுகள் தருகின்றார்!


    தானொரு பெண் எழுத்தாளர் என்பதனை
    இவர் அடிக்கடி மறந்து போகின்றார்.

    இவர் தெளித்துச் செல்லும் தத்துவப் பொன்மொழிகள்....
    இவரை ஒரு தத்துவஞானி என்ற நிலைக்கும்
    உயர்த்திச் செல்கிறது.

    இது ஒரு கற்பனைக்கதையே....
    என்று இவரே தன் வாயால் சொல்லாமல் சொன்னாலும்
    வாசகன் ஏற்கமாட்டான்... அடம் பிடிப்பான்!

    அவ்வளவு ஆழமாக... அவ்வளவு நுட்பமாக..
    மிகவும் கைதேர்ந்த எழுத்துச் சிற்பியால்
    இந்த சிற்பம்  செதுக்கப்பட்டிருக்கின்றது!!

    இவர் தன்வாக்கு மூலத்தினை இவ்வாறு பதிவு செய்கின்றார்...

    வரிகளால் பாலம் போட்டு நான், உங்கள் நெஞ்சங்களை இந்நூலின் மூலம் வந்தடைகின்றேன். மூளைவீங்கி வெளியான என் எண்ணங்கள் கோர்க்கப்பட்ட முதல்நூல் என்னையே நானறியேன். இப்புதிய அகம் என்னை யார் என்று உலகுக்கு உணர்த்தும் என்று நம்புகின்றேன். இதனுள் புகுந்து வரும் வாசகர்கள் பெற்றுவரும் அநுபவங்கள் அவர்களுக்குப் பாடமாக அமையும் என்றும் கருதுகின்றேன். என் அநுபவங்கள் சொல் ஆடை கட்டிச் சுதந்திரமாய் இந்நூலில் நடைபயின்றிருக்கின்றன

    இலக்கியம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு
    இந்தக் கவிதாயினி... (மன்னிக்கவும்) கதாசிரியர் இலக்கணம் எழுதுகிறார்...

    பாட்டுடைத் தலைவனையுடைத்தாய் பாடுபொருள் கொண்டு ஏட்டிலே வடிப்பது இலக்கியமானால், பாட்டுடைத் தலைவன் தெய்வீகத் திருமகனாய் திகழ்வது மட்டுமே திறமன்று. நம்மோடு வாழ்ந்து நாமறியாச் செய்தி பல தந்து, ஊரோடு நாம் வாழ உன்னத அறிவுரைகள் காட்டி நிற்கும் குடிமகளின் வாழ்வும் ஒரு இலக்கியமாய் இடம் பிடிப்பது திறம் அல்லவா?

    ஒரு பாத்திரத்தின் ஒரு நிமிட உணர்வுகளை இந்த ஆசிரியர் தன்கூற்றாகக் கூறும் சொல்லாட்சியைப் பாருங்கள்....

    குளியலறைவிட்டு வெளியே வந்தாள். வீடு, வீட்டிலுள்ள பொருள்கள் அனைத்தும் தன்னைத் துரத்துவது போல் அவள் கண்களுக்குத் தெரிந்தன. கைகளால் விரட்டினாள். மனதுக்குள் குரூரமொன்று தாண்டவமாடியது. பறிபோன பாடசாலை மூளைக்குள் மாறாட்டத்தை ஏற்படுத்தியது. விட்டுப்போன கணவன் சில்லறையாய் செய்துபோன செயல்கள் ஒவ்வொன்றும் ஆடை களைந்து நிற்பதுபோல் அவமானத்தைத் தந்தது. தனிமை அரக்கன் பக்கத்திலே நின்று பயமுறுத்துவதுபோல் இருந்தது. அமைதியான சூழல் மயானஅமைதியைத் தந்தது. சுற்றும் முற்றுமும் தலையை அசைத்து அசைத்துப் பார்த்தாள். அவள் கண்கள் இரண்டும் அளவுக்கதிகமாக விரிந்தன. சுவரின் ஒரு புள்ளியை வெறித்துப் பார்த்தாள். அவள்  உள்ளே இருந்து ஒரு பெண் எழுந்து வந்தாள்.

    ஒரு வானொலியில் ஒரு உணர்வு பூர்வமான கவிதையொன்று ஒலிபரப்பாகிறது.

    அந்தக் கவிதையையும் அதன் தாக்கத்தையும் பதிவு செய்யும்
    இந்த கந்தகக் கவிதாயினியைப் பாருங்கள்...


    கவிதை என்னும் வரிகளால் காந்தமாய் வரதேவி இதயத்தை இழுத்தெடுத்தது. ஆன்மாவின் உன்னத ராகங்களைத் தட்டி எழுப்பியது. அக்கணமே அடங்கிக் கிடந்த அவள் அறிவு விழித்துக் கொண்டது. சிந்தனை தூண்டப்பட்டது. சோர்வுகள் அகற்றப்பட்டன. சுதந்திர உணர்வு பெருக்கெடுத்தது

    எழுந்திடு பெண்ணே! எழுந்திடு!
           உன் இமைக் கதவுகளை இழுத்து மூடாதே
           உன் இதயமது இருண்டுவிடும்
           உன் பஞ்சுமெத்தையிலே முட்கள் பரந்து கிடக்கட்டும்
           உன் இருக்கையிலே இரும்பு ஆணிகள் நிமிர்ந்து நிற்கட்டும்
           தூங்கிவிடாதே தூரிகை கொண்டு உன் வாழ்வோவியம் தீட்டு
           பாதையிலே ரோஜாக்கள் மட்டும் விரிந்து கிடப்பதில்லை
           கல்லும் மண்ணும் விதந்து கிடக்கும் பூமியிலே
           வீரத்துடன் எழுந்து நடந்து செல்
           உன் இரத்தச்சுவடுகள் இரத்த சரித்திரம் பேசட்டும்
           பூமியைச் சுருட்டி எடுத்து உருட்டி விளையாடு
           நச்சுப்பாம்புகள் அதில் நசுக்கப்படட்டும்
           மறைந்த உண்மைகள் விஸ்வரூபம் எடுக்கட்டும்
           பெண்ணே! உன் மனிடப்பிறப்பு மாய்ந்துவிடுவதற்காகவல்ல
           காலத்தை வென்று காவியம் படைக்க
           காலத்தை வென்று காவியம் படைக்க!

    நாவல் அதன் உச்சக் கட்டம் எல்லாம் தாண்டி
    முடிவுக்கு வருகிறது...

    துன்பமோ... இன்பமோ... அதனை நான் இங்கு கூறிவிடப் போவதில்லை...  அது இலக்கிய தர்மமும் அன்று!!

    ஆசிரியரின் கைத்திறனை மட்டும் பாருங்கள்..
    தொலைபேசி அழைப்புமணி ஒலித்தது. ஓடிச்சென்று வரன் தொலைபேசியை எடுத்தான். காதினுள் நுழைந்த செய்தி கேட்டு அப்படியே தரையில் அமர்ந்தான். தொண்டை அடைத்தது. தலையைப் பின்புறம் நோக்கிச் சரித்தான்.
     “……” என்று கத்தினான். அவன் அழுகைச்சத்தம் கேட்டு ஓடி வந்தாள் வரதேவி.....
    பெரும்பாலும்
    கவிதை நூல்களுக்கே கம்பளம்
    விரிக்கும் சுபாவம் கொண்டவன் நான்...

    இங்கே ஒரு நாவலுக்கே
    நட்சத்திரப் பந்தல் போடுகின்றேன்!
    தீபங்கள் ஏற்றி...
    தோரணங்கள் தொங்க விடுகின்றேன்!

    காரணம்....
    இங்கே முத்துக்களும்... பவளங்களும்
    எங்கும் விரவிக் கிடக்கின்றன.
    பொன்மொழிகளும்... தத்துவமணிகளும்...
    நிறைந்து பொதிந்து கிடக்கின்றன!

    இதனை நான் வாசித்து முடித்தபோது...
    எழுந்து நடக்க அதிக நேரமாயிற்று!

    அற்புதமான அழகுத் தமிழை
    அள்ளியிறைத்த இந்த ஆசிரியைக்கு  
    நான் மனதார மலர்கள் தூவுகிறேன்!

    வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!!
    வாழ்க நின் திருப்பணி!!
    வளரட்டும் உன் தமிழ்த்தொண்டு!



    **************************************
    சிறீ சிறீஸ்கந்தராஜா
    15/11/2014









    சிவக்கும் சிலிர்க்கும் கவிதைள் நானும் சிவந்தேன் ...சிலிர்த்தேன் .தமிழ் இன்னும் அழகு உங்கள் நடையில் .....வண்ண வண்ண விண் மீன்களாய் சொற்கள் ....அவை கற் கண்டாய் .....முள் முகமாய் ....ஒரு ஓவியம்போல விரியும் வர்ண ஜாலங்களில் நிஜம் நிமிர்ந்து ஒளிர்கிறது
    பெண்களின் கண்ணீரை ...அவர்கள் விடுதலையை உங்கள் நடையில் தனித்துவமாக சொல்லியது அருமை ......கருவும் களமும் பழசு என்றாலும் நீங்கள் சொல்லும் விதம் அழகு புதுசு

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...