• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    புதன், 29 ஜூலை, 2020

    வாழ்க்கை என்பது வழுக்கையா?

     


     எனக்குள்ளே நான் பல கேள்விகள் கேட்கின்றேன். பல பக்கப் பார்வையில் என் சிந்தனைகள் விரிவுபடுகின்றன. இறுதியில் ஒரு தீர்மானம் எடுக்கின்றேன். அவை எவ்வாறு விரிவுபடுகின்றன என வாருங்கள் இணைந்தே சிந்திப்போம். நாம் பிறக்கும்போது தலை முழுவதும் தலைமயிரோடே பிறந்தோம். கூட வந்த மயிர்கள் ஒவ்வொன்றாகக் கழன்றன. புதிது புதிதாக மயிர்கள் முளைத்தன. தலையில் முளைத்தவையும் கூடவரவல்லை. பழைய மயிர்களும் எமது தலையில் இருப்பது இல்லை. கழுவினோம்; துடைத்தோம்; அலங்கரித்தோம்; இருந்தும் எம்மை விட்டே போனது. இறுதியில் வழுக்கையானது. எதுவுமே இல்லாத மண்டையில் அடர்த்தியாக இருந்த மயிர்களும் அலங்கரிப்பும் இருந்த இடம் தெரியாமல் போவது போலவேதான் வாழ்க்கையும் அமைந்திருக்கின்றது. 

    தனியாகப் பிறந்தோம்; தலை நிமிர்ந்து வாழ்ந்தோம்; தோளோடு சேர்ந்தோம்; தோல்விகளை வென்றோம்; சாதனைகள் புரிந்தோம்; சாதித்துக் காட்டினோம்; இறுதியில் தெரியாமல் போனோம். இதுவே வாழ்க்கை. போராடித் தொடர்கின்ற வாழ்க்கையில் இறுதியில் யாருடனும் போராடாது எமக்கு நாமே போராடித் தோற்றுப் போக வைப்பதே இயற்கை நியதி. அப்படியானால், இப்படித்தான் நடக்கப் போகின்றது என்பதை நாம் முன்னமே தெரிந்திருந்தும் எமது வாழ்க்கையில் ஏன் இந்தப் போராட்டம்? ஏன் இந்த மகிழ்ச்சி? ஏன் இந்த பாசப் பிணைப்பு? ஏன் இந்தப் பிரிவுத் துயர்? என்று சிந்தித்துப் பார்த்தோமென்றால், வாழ்க்கை என்பது வழுக்கை என்றே உணர்வோம். 

    வாழ்க்கையில் இறுதிவரை போராடித் தோற்றுப் போனவர்களும் இருக்கின்றார்கள். வாழ்க்கையின் வெற்றி உச்சத்தைத் தொட்டவர்களும் இருக்கின்றார்கள். ஆனால், இறுதியில் இரு தரத்தினரும் உலக வாழ்க்கையில் ஒன்றுமில்லாமல் போனவர்களே. மாட மாளிகைகள், கோடான கோடிக் கோபுரங்கள் கட்டி வாழ்ந்த மன்னர்கள் இன்று எங்கே? பாட்டாலே உலகத்தை வென்ற பாவேந்தர்கள் எங்கே? நாயன்மார்கள் எங்கே? ஆழ்வார்கள் எங்கே? உலகத்தையே தன் கைக்குள் அடக்கிவிடலாம் என்று போர் தொடுத்த ஹிட்லர் எங்கே? அண்டவெளி ஆராய்ச்சியாளர்கள் எங்கே? தொழில்நுட்ப ஆய்வாளர்கள் எங்கே? தம்முடைய பெயரை நிலை நிறுத்திப் போனவர்கள் கூட பெற்றது ஏதுமில்லை. அவர் பெயர் சொல்லிப் பெயர் பெறும் சொந்தங்களே அவர்கள் புகழுடன் தொடர்கின்றார்கள் என்பது உண்மையே. அதுகூட ஓரிரு சந்ததி கடந்து மறக்கப்பட்டு அப்படியென்றால், ஏனிந்த போராட்டம்! வாழ்க்கையை நன்றாக அனுபவித்துச் செல்ல மனம் தடைபோடுவதும் ஏன்? ! இறப்பு என்பது நிச்சயம். இறந்தவர்கள் திரும்பி வருவதில்லை. படைப்புக்கள் அத்தனையும் ஒருநாள் இல்லாமல்தான் போகின்றன. கண்டுபிடிப்புக்கள் எல்லாம் காணாமல்தான் போகின்றன. அன்று நாம் பயன்படுத்திய உபகரணங்களை நாம் பயன்படுத்துகின்றோமா?(Radio, Taperecorder சமையல் உபகரணங்கள்) இன்று பயன்படுத்துபவவை நாளை தொடருமா? இல்லவே இல்லை. தொழில்நுட்பங்கள் பழையவற்றை ஒன்றுமில்லாமல் பண்ணிவிடுகின்றன. சிந்திக்கச் சிந்திக்க புதியவை பிறப்பெடுக்கின்றன. பழையவை தேக்கம் கண்டுவிடுகின்றன. எனவே உயர்திணை அஃறிணை அத்தனையும் வாழ்க்கையில் வழுக்கையே.

     ஆனால், தனக்காக வாழ்ந்து ஆடு, மாடுகள் போல் பசித்தால் புல்லைத் தின்று, உறக்கம் வந்தால் உறங்கி வாழ வேண்டுமா? மிருகங்கள் போல் தேடி வேட்டை ஆடி, பசி நீங்க காலாற நடந்து, உறக்கம் வர உறங்கிப் போகும் வாழ்க்கை சரியா? அவ்வாறு மனிதன் வாழ்ந்தால், இந்தப் பூமியில் மாற்றங்கள் தோன்றியிருக்குமா! இலை குழை உடுத்தே இன்றும் மனிதன் வாழ்ந்திருப்பான். அவ்வாழ்க்கை அழகென்று சொல்பவர்களும் உண்டு. ஆறறிவு படைத்த மனிதனின் படைப்புக்கள் மேம்பட உலகத்தை வசதி படைத்த உலகம் ஆக்குவோம் என்று சொல்பவர்களும் உண்டு. 

    "காயமே பொய்யடா காற்றடைத்த வெறும் பையடா
    மாயனார் குயவன் செய்த மண்பாண்டம் ஓடடா'' 

    என்று பாடிய சித்தர் உலகநிலையாமையை உரைத்தார். 

    "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே"

    என்ற பட்டினத்தார் இல்லாமல் போகும் உடலின் நிலையாமையை எடுத்துரைத்தார். 

    "ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன? 
    தேடிய செல்வம் என்ன? 
    திரண்டதோர் சுற்றம் என்ன? 
    கூடுவிட்டு ஆவி போனால் கூடவே வருவது என்ன? 

    என்று எதுவுமே எமக்குச் சொந்தம் இல்லை என்று கண்ணதாசன் பாடினார். இவ்வாறு அவரவர் நிலையாமை பற்றி எடுத்துரைக்க, அந்த உலக நிலையாமையை எடுத்துரைத்த திருமூலர் கூட தன்னை நன்றாகத் தமிழ் செய்ய என்னை நன்றாக இறைவன் படைத்தனன் என்று பாடித் தன் கடமையை திருமூலரே உணர்த்தியிருக்கின்றார். அதாவது உலக வாழ்க்கை வழுக்கை என்றாலும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் கடமை உள்ளது அல்லது கடமையை உள்ளதாக்கிக் கொள்ள வேண்டும் என்பது புலப்படுகின்றது. துறவியானவர் துறவறத்தில் இருந்த வண்ணம் சமூகத்திற்கு நல்லவற்றை உரைக்கவில்லையா? ஒன்றுமில்லாமல் போவோம் என்று தெரியாமலே பிறக்கின்றோம். வாழ்க்கையில் நாம் எதுவுமில்லாமலே போவோம் என்று தெரிந்தே வாழ்கின்றோம்; சாதிக்கத் துடிக்கின்றோம். ஆனால், மனிதன் மூளையில் ஒன்று குடைந்து கொண்டே இருக்கும். இந்த பூமியில் பிறந்து விட்டோம். எமக்கோ அல்லது எம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கோ ஒரு வெளிச்சத்தைக் காட்டிவிட்டு மறைவோம் என்று சில மனிதர்கள் வாழ்க்கையைக் கொண்டு செல்வார்கள் என்பது உண்மையே. இங்கு எதிர்கால சமூகம் பற்றிய அக்கறை தொனிக்கின்றது. சிலருக்கு பிறப்பிலேயே தொடர் ஊக்கம் தொழிற்படும். தன்னால் முடியாது என்றாலும் தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டு தம் இறுதிக்காலங்கள் வரையிலும் தம்முடைய எண்ணக்கருக்களை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். 

    வாழ்க்கையை நிலையானதான மாற்ற விஞ்ஞானிகளும் முயற்சி மேற்கொண்டுதான் இருக்கின்றார்கள். இது நடக்குமா என்று சந்தேகப்பட்ட எத்தனையோ விடயங்கள் இன்று நடத்திக்காட்டப்பட்டுள்ளன. உருவ மாற்றுச் சிகிச்சை என்பது பிறந்தது எப்படியான தோற்றமோ அத்தோற்றத்தை முழுவதுமாக மாற்றுகின்றார்கள்(Pடயளவமை ளரசபநசல) ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுகின்றார்கள், குளோனிங் முறையில் ஒரு மனிதனை மறுபடியும் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் முனைந்து கொண்டிருக்கின்றார்கள். குளோனிங் முறையில் கலவியில்லா குளோனிங், (Asexual Reproductionமரபணுக்களையும் DNA கூறுகளையும் பிரதி எடுக்கும் மரபணு குளோனிங் (Gene cloningஒரு மிருகத்தை அப்படியே பிரதி எடுக்கும் இனப்பெருக்க குளோனிங் (Reproductive Cloning) சிகிச்சை முறைகுளோனிங் (Therapeutic Cloningஎன குளோன்களை உருவாக்க மனிதன் முனைந்து கொண்டிருக்கின்றான். எம்மால் அறியப்பட்ட டாலி என்னும் செம்மறி ஆடு, டியூவி என்றழைக்கப்படும் மான், ஸ்நூபி என்றழைக்கப்படும் நாய் போன்றன குளோனிங்குக்கு அத்தாட்சிகளாகக் காணப்படுகின்றன. அண்டங்கள் தாண்டி ஆராய்ச்சிகளில் பிரபஞ்சத்தை நோக்கி பார்வையைக் கொண்டு செல்கின்றார்கள். இவையெல்லாம் வாழ்க்கையையும் பிறப்பையும் நியாயப்படுத்துவதற்கும் நிலைப்படுத்துவதற்கும் மனிதனின் முயற்சிகளாக இருக்கின்றன. விஞ்ஞானிகளின் வரிசையில் உலகின் தலைசிறந்த அறிவியலாளரான ஸ்ரீபன் வில்லியம் கார்க்கிங் (08.01.1942 – 14.03.2018) என்றுமே எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துபவராகக் காணப்படுகின்றார். வாழவே முடியாத ஒரு மனிதன். தசையூட்டமற்ற பக்க மரப்பு நோயால் (Amyotrophie lateral sclerosis – ALS) அதாவது இயக்க நரம்பணு நோயால் (Motor neuron disease) பாதிக்கப்பட்டார். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளை சொல்வதை தசை செய்யாது. உடல் அடங்கி ஒரு சக்கர நாற்காலிக்குள் ஐக்கியமாகிவிட்டது. இயக்கவியல் விஞ்ஞானியான இவர் ~~ஈக்வலைசர்|| என்ற கொம்பியூட்டர் புரோக்ராம் உதவியோடு கன்னத் தசைகள் மூலம் கொம்பியூட்டரில் பேசி வந்தார். இந்நோய் கண்டபோது இன்னும் 2 வருடங்களே ஸ்ரீபன் வில்லியம் ஹாக்கிங் வாழ்வார் என்று மருத்துவர்கள் இவருடைய இறப்புக்கு நாள் குறித்தனர். 23 வயதில் இவருக்கு இவ் அச்சுறுத்தல் கிடைத்தது ஆனால், உலகவாழ்க்கையை விட்டுப் பிரியப் போகின்றோம் என்று தெரிந்திருந்தும் காதலித்தார். திருமணம் செய்தார். பிரபஞ்சத்தை முழுவதுமாக அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவலும் முயற்சியும் அவரை 76 வருடங்கள் வரை வாழ வைத்தது. இறப்பு எந்த நிமிடமும் வரலாம் என்று சிந்தித்த ஸ்ரீபன் ஹாக்கிங் வாழும் வரை அசைய முடியாத நிலையிலும் தன்னுடைய மூளையைப் பயன்படுத்தி தன்னுடைய ஆராய்ச்சியில் ஈடுபடுத்திக் கொண்டே இருந்தார். இவ்வாறான மனிதர்களை சிந்தித்துப் பார்க்கின்ற போது வாழ்ககை என்பது வழுக்கை என்று நினைத்தாலும், எதற்காவது வாழ வேண்டும் என்ற நினைப்பானது மூளை சுறுசுறுப்பான மனிதர்களுக்கு தோன்றிக் கொண்டே இருக்கும். இது இயற்கையின் நியதி, கோட்பாடு என்றே கூறலாம்.

    புதன், 22 ஜூலை, 2020

    மூச்சு விட இடம் தேவை

    https://oss.neechalkaran.com/tamilfonts/7uni-amma/uniAmma-14.ttf');

     
    ஒத்த அன்பினராகிய ஒருவரும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்தில் பிறந்த பேரின்பம் காதல் எனப்படுகின்றது. சங்ககாலத்திலே காதல் என்பது பேரின்பமாகவே கருதப்பட்டது. இந்த காதலர் இருவர் கருத்தொருமித்து உடலாலும் உள்ளத்தாலும் இணைந்து தமக்குள் இன்பம் துய்த்து வாழ்தல் காதல் என்று நச்சினார்க்கினியர் அழகாக எடுத்துக் காட்டியுள்ளார். அக்காலத்திலே திருமணம் என்ற முறை இருக்கவில்லை. ~~

                    பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் 
                     ஐயர் யாத்தனர் கரணம் என்ப” 

    அதாவது கரணம் என்றால், சடங்குகள். இந்த திருமணச் சடங்குகள் வந்தமைக்குக் காரணம் களவில் கூடிய காதலன், களவு வெளிப்படும் காலத்தில் நான் அப்பெண்ணைக் கண்டதில்லை என்று கைவிட்டு விடும் நிலை மேலோங்கிக் காணப்பட திருமணச் சடங்கு முறைகள் வழக்கத்திற்கு வந்தன. இவ்வாறே மணவினை முடித்து இன்பம் துய்த்திருப்பது இயற்கை. எதுவாக இருந்தாலும் வேறு வேறு குடும்பச் சூழலில் இருந்து வெவ்வேறு குணாதிசயங்கள் உள்ள இருவர் இணைகின்ற போது சிற்சில விட்டுக் கொடுப்புக்களும், புரிந்துணர்வுகளும் ஏற்பட வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. விருப்பு வெறுப்புக்கள் ஆளுக்காள் மாறுபடலாம். அதனைப் புரிந்து நடந்து கொள்ளும் போதே மனக்கசப்புக்கள் குறைந்தளவில் ஏற்பட்டு மணவாழ்க்கை சுமுகமாக அமையும்.☺👭😁

    சென்ற ஆறு மாதங்களில் திருமண பந்தத்தை அறுப்பதற்காக பதிவு செய்துள்ளோர்களின் புள்ளிவிபரம் அதிகரித்துக் காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இதற்குக் காரணம் யாது? மனக்கசப்பும் மனச்சோர்வுமே இதற்குக் காரணங்களாக அமைகின்றன. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஜப்பான் குறைந்த வாடகையில் தங்கும் விடுதிகளை அமைத்து ஒருநாளுக்கு 36 ஒயிரோக்களை சம்பாதிக்கின்றனர். இளந்தம்பதிகளுக்குத் தம்முடைய தாம்பத்ய வாழ்வை சரியான முறையில் நடத்தத் தெரியவில்லை, விட்டுக் கொடுப்புக்கள் இல்லை, புரிந்துணர்வு இல்லை, சகிப்புத் தன்மை இல்லை. எத்தனை பேரைத்தான் தெரிவு செய்து வாழ்வார்கள்? பிடிக்கவில்லை, பிரிகின்றோம் என்று இவர்களுக்கு எத்தனை பேரைப் பிடிக்காமல் போகும்? என்று பலவாறாகப் பேசும் பெரியவர்களே இக்காலங்களில் என்னையும் அவளையும் வெட்டி விடுங்கள் கடைசிக் காலத்தில் நிம்மதி வேண்டும் என்று விவாகரத்துக்குப் பதிவு செய்கின்றார்கள். இல்லையென்றால், இவ்வாறான விடுதிகள் தேடிப் போகின்றார்கள். இதிலிருந்து என்ன தெரிகின்றது என்றால், மனம் என்பது ஆளுக்காள் மாறுபட்டுத்தான் உருவாக்கப்படுகின்றது. மனப்பதிவுகளும் அவருக்கு ஏற்றாற்போலவே பதியப்படுகின்றன. மூலத்தை மாற்ற முடியாது என்றே கருதுகின்றேன். மாற்றத் தொடங்கினால், மனஅழுத்தம் ஆரம்பமாகும். முதுமையென்ன, இளமையென்ன உணர்வு என்பது ஒன்றே. 

    கொரொனாக்கு 1.5 மீற்றர் இடைவெளி தேவை போல் கணவன் மனைவிக்கு இடையிலும் இவ் இடைவெளி தேவைப்படுகின்றது போலும். கணவன் வீட்டில் இருக்கின்ற போது தம்முடைய சுதந்திரம் பறி போவதாகவும், தம்முடைய நாளாந்த வேலைகள் அதிகமாக இருப்பதாகவும் பெண்கள் கருதுகின்றார்கள். அதிகமான நேரம் ஒன்றாக இருக்கும்போதும், நெருக்கம் அதிகமாகும் போதும் வாக்கு வாதங்கள் அதிகரிப்பதாகவும் தம்முடைய சகல விடயங்களிலும் ஒருவருக்கொருவர் தலையிட்டு பிரச்சினைகளை அதிகரிப்பதாகவும் இருவரும் கருதுகின்றார்கள். வீட்டில் இருக்கும் ஆணுக்குத் தேவையான சுகங்களைப் பெண் கொடுக்காத பட்சத்தில் கருத்து வேறுபாடுகளும் மன உழைச்சல்களும் ஏற்படுவதற்கு சந்தர்ப்பம் இருப்பது நிஜமே. கோபம் வந்தால், அதனைத் தவிர்ப்பதற்கு வெளியே போகின்ற நிலை கடந்த மாதங்களில் சாத்தியப்படவில்லை. ஆளுக்காள் பேச்சு வளருகின்ற போது மனக்கசப்புக்கள் ஏற்படுவது இயல்பே. 

    எனவே ஒருவருக்கொருவர் சுமையாக இல்லாமல் சுகமாக இருக்கும் பட்சத்தில் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கிப் பிரவாகிக்கும். யாராக இருந்தாலும் சிறிதளவு மூச்சுவிட இடம் தேவை. 💖

    ஞாயிறு, 5 ஜூலை, 2020

    ஜேர்மனிய மண்ணில் தமிழர்களின் குடியேற்றமும் தற்கால வாழ்க்கை முறையும்




    எழுத்துரு மாற்றத்திற்கு உதவிய வலைச் சித்தர் தனபாலன் அவர்களுக்கு மிக்க நன்றி. பெயருக்கு ஏற்றது போல் பொறுமையாக விளக்கம் தந்த அவருக்கு மேலும் பாராட்டுக்களும் நன்றியும் 

    இலங்கை மண்ணில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் மக்கள் மத்தியில் பெரும் அழிவை ஏற்படுத்தி இருந்தாலும், ஜேர்மனிய மண்ணில் தமிழர்களின் குடியேற்றம் ஒரு வகையில் மக்களின் வளர்ச்சிப் போக்கிற்கு வழி வகுத்திருக்கின்றது, மனங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கின்றது, ஏற்றத்தாழ்வுகளை மாற்றியும் அமைத்திருக்கின்றது, கல்வியறிவில் பாரிய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றது. இவற்றைவிட கலாசார மாற்றங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றது. அத்துடன் போரின் தாக்கம் பாதிக்கப்பட்ட மனங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதனால் பின்விளைவுகள் பலவற்றை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.

    தாய்நாட்டில் வாழ்ந்த மக்கள் போரின் காரணத்தினால், உடைமைகளை இழந்து வெறும் கையுடன் புலம்பெயர்ந்த நாட்டுக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர்களிடம் இருந்த சொத்து மதிப்பு 10 விரல்களும், நம்பிக்கை என்னும் உயரிய ஆயதமும் மட்டுமே. அவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் கற்றவர்கள் மட்டுமன்றி சகல தரப்பினரும் கொழும்பு விமானநிலையத்தை முதல் தடவையாகப் பார்த்தவர்களும், வீட்டை விட்டு வெளியே போகாமல் குடும்பம், பிள்ளை என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் தம்மை அடக்கிக் கொண்டு வாழந்த எத்தனையோ தாய்மார்களும் இவர்களுக்குள் அடங்குகின்றார்கள்

    . எம்முடைய தமிழர்கள் தம்முடைய வீட்டை விற்று, தாலிக்கொடியை விற்று, வளவை விற்று, கடன்கள் பெற்று, தரகர்களிடம் பணத்தை அள்ளிக் கொடுத்துத் தம் உறவுகளை விட்டு தம்முடைய உயிரைப் பாதுகாக்க என்று அந்நியநாடுகளுக்குள் புகுந்தார்கள். அவர்கள் எவ்வாறு எல்லாம் புலம் பெயர்ந்தார்கள் என்று எத்தனையோ எழுத்தாளர்கள் கதையாகக், கவிதையாகக், கட்டுரையாக விளக்கியுள்ளார்கள். ஆனால், இன்று தமிழ் மக்கள் போர் நிமித்தம் புலம்பெயர்ந்து சுமார் 35 வருடங்கள் கடந்துவிட்டன. தற்பொழுது 50.000 இலங்கைத்தமிழர்கள் ஜேர்மனியில் வாழுகின்றார்கள். இப்போது புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வாழும் மக்கள் நிலைமைகள் எவ்வாறு இருக்கின்றன என்பது பற்றிச் சிறிது சிந்திப்பதே இக்கட்டுரை.

    உலகம் முழுவதும் சிதறிப் பரந்த தமிழ் இனம். ஜேர்மனி மண்ணையும் தொட்டது. ஒரு இடத்தில் நட்ட மரத்தை இன்னும் ஒரு இடத்தில் பிடுங்கி நட்டால், அம்மரம் தளர்ச்சி கண்டு மீண்டும் துளிர்க்கும் இல்லையேல் பட்டுப்போகும். அது போலவே இலங்கை மண்ணில் வாழ்ந்த மக்கள், புரியாத கலாசாரம், புரியாத காலநிலை, புரியாத மொழி, புரியாத மக்கள் என்று சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்த்தது போல் ஜேர்மனி நாட்டைப் பார்த்தார்கள். வலிமையுள்ளது வாழும் என்ற கூர்ப்புக் கோட்பாட்டின்படி இம்மண்ணிலும் தமிழ் இனம் தலைத்தோங்கியது. தமிழ் மொழி அறிவுடனும் சிறிதளவு ஆங்கில அறிவுடனும் ஜேர்மனிய நாட்டுக்குள் தமிழர்கள் புகுந்த போது அகதி அந்தஸ்தைத் தம்முடைய முதல் அடையாளமாகப் பெற்றுக் கொண்டனர்.

    ஒரு இனம் வாழ வேண்டுமானால், அவ் இனத்தின் மொழி வாழ வேண்டும். தம்மை அடையாளப்படுத்துவதற்கு முதலில் மொழியை இறுக்கமாகப் பற்றிக் கொண்டனர். ஜேர்மனிய மொழி பாடசாலைக்குச் சென்று கற்கக் கூடிய வசதி வாய்ப்புக்கள் தமிழர்களுக்கு அவர்கள் புலம்பெயர்ந்த காலப்பகுதிகளில் கிடைக்கவில்லை. தம்முடைய இருப்புக்களை உறுதியாக ஊன்றிக்கொள்ள கிடைத்த வேலைகளை கிடைத்த போதெல்லாம் செய்யத் தொடங்கினர். தம்முடைய வளங்களைப் பெருக்கினர். ஜேர்மனிய இனமே மெச்சத்தக்க வகையில் வாழ்ந்து காட்டினர்.

    “கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு
    மாடுஅல்ல மற்றை யவை”

    கொடுத்தாலும் குறைவுபடாத மேன்மையான செல்வம் கல்வியே. ஆகவே பிற செல்வங்கள் உயர்ந்த செல்வங்களாக மதிக்கப்படுவதில்லை என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க ஜேர்மனிய அரசின் உதவியுடன் தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியறிவைப் பெற்றோர்கள் ஊட்டி வளர்த்தனர் என்றால், அது மிகையில்லை. பெற்றோர்கள் போட்டி போட்டுப் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்காக முயற்சி மேற்கொண்டனர். ஜிம்னாசியம் என்று அழைக்கப்படும் உயர்தர பாடசாலைக்குத் தம்முடைய பிள்ளைகளை அனுப்புவதற்காகத் தம்முடைய முழுமுயற்சிளையும் எடுத்தனர். இந்தப் போட்டியும், பொறாமையும் வேடிக்கையாக இருந்தாலும் இன்று ஜேர்மனிய மண்ணிலே சிறந்த தமிழ் கல்வியாளர்களை, பொறியியலாளர்களை, வைத்தியர்களை, கணக்காளர்களை, சிறந்த உத்தியோகத்தர்களை ஜேர்மனியர்களுக்கு இணையாகக் காண்பதற்கு இந்தப் போட்டியும், பொறாமையுமே காரணமாக இருந்திருக்கின்றது.

    “ஒரு நாட்டிற்கு நிரந்தர செல்வத்தைத் தேடித் தருபவர்கள் ஆசிரியர்கள்” என்று அறிஞர் அண்ணா கூறியிருக்கின்றார். ஓய்வு நேரங்களில் தம்முடைய தாய் மொழியைத் தம்முடைய பிள்ளைகளுக்குக் கற்பிக்கத் தொடங்கினார்கள். இதற்குக் கற்றறிந்த பெற்றோர்கள் எவ்வித வேதனத்தையும் எதிர்பார்க்காது சேவை மனப்பாங்குடன் பிள்ளைகளுக்குத் தமிழ்க் கல்வி போதித்தார்கள். தாம் தங்கியிருந்த அகதி முகாமிலேயே ஒரு சிறு அறையில் தமிழ் கற்பிக்கத் தொடங்கினார்கள். அது வளர்ந்து தமிழாலயம், தமிழ் கல்விச்சேவை, தமிழ் கல்விக்கழகம் போன்ற பல பெயர்களில் விரிவடைந்தன.  எதிர்காலத் தலைமுறையினருக்கு தாய்மொழியாம் தமிழ் மொழியை ஊட்டி வளர்த்தனர்.

    “வேறுவேறு பாஷைகள் கற்பாய் வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ"  “தேன்மதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்படிச் செய்ய வேண்டும்" என்று பாரதி கேட்டுக் கொண்டது போல் வாழ்ந்து காட்டினார்கள். உலகின் முதன்மொழி தமிழ் மொழி என்பதை உலக இனங்கள் எல்லாம் அறியும் வண்ணம் எடுத்துக்காட்டுகளை எம்முடைய இளங்தலைமுறையினரே இனங்காட்டுகின்றனர். மேடைகளில் தமிழ் முழக்கம் செய்தனர். அது மட்டுமன்றி பெற்றோரின் அயராத உழைப்பிற்கும் ஊக்குவிப்புக்களுக்கும் ஏற்ப இன்று எமது தமிழ் இளந்தலைமுறையினர் ஜேர்மனிய மொழி கற்று ஜேர்மனிய நாட்டு அரசாங்கத் திணைக்களங்களிலும், மருத்துவ மனைகளிலும், பிரபல நிறுவனங்களிலும் முக்கிய பதவிகளை வகிப்பதுடன் தமிழர்களின் திறமையை இனம் காட்டுகின்றனர்.

    கூறுபடும் மொழிகளைப் போல் புதையவில்லை்கொஞ்சிப் பேசும் வழக்கற்றுக் குமையவில்லை சாறுபட்ட மரங்களைப் போல் சாயவில்லை தரங்கெட்ட மனிதர்களைப் போல் தாழவில்லை

    என்ற பெருஞ்சித்திரனார் பாடலுக்கமைய ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம், பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் சங்கம் போன்ற அமைப்புக்களை அமைத்துப் பல எழுத்தாளர்களின் நூல்களை வெளியீடு செய்வதுடன் பல எழுத்தாளர்களை இனங்காட்டி, வெளிக் கொண்டு வருகின்றனர். இதற்குப் பல அமைப்புக்களும், ஊடகங்களும் கூடப் பணிபுரிகின்றன.

    தமிழ்மொழியிலே என் அறிவுக்கு எட்டிய வரையில் வெற்றிமணி, ஐ.பி.சி, அகரம், தமிழ்ரைம்ஸ் போன்ற பத்திரிகைகள் வெளிவருகின்றன. சிவத்தமிழ், மண் போன்ற சஞ்சிகைகள் வெளிவருகின்றன. எம்.ரி.வி, எஸ்.ரி.எஸ் போன்ற தொலைக்காட்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. நுவுசு என்ற வானொலி ஒலிபரப்பப்படுகின்றது. இவ்வாறு தமிழ் பரப்பை விரிவுபடுத்துவதற்குப் பல அர்ப்பணிப்புக்களைச் செய்கின்ற மக்கள் ஜேர்மனி மண்ணில் வாழ்ந்து வருகின்றார்கள்.

    தமிழர்கள் ஒரு கிறிஸ்தவ நாட்டில் வாழ்ந்தாலும் பாரம்பரியமாக எம்முடைய பரம்பரை பண்பாட்டுக் கூறுகளை, உணவு உடை பழக்கவழக்கங்களை, சமய நம்பிக்கைகளை சிறிதளவும் மறந்ததில்லை. தம்முடைய அகதி முகாமிலேயே ஒரு சிறிய அறையில் சுவாமிப் படங்களை வைத்து இந்து ஆலயமாக வழிபடத் தொடங்கினார்கள். அது விரிவடைந்து பல பரப்பில் கட்டப்பட்ட கோபுரங்களுடன் கூடிய கோயில்களாக மாறியுள்ளன. இவ்வருடம் 2019 இல் கிட்டத்தட்ட 14.000 மக்கள் ஹம் என்னும் நகரத்தில் அமைந்திருக்கின்ற காமாட்சி அம்மன் ஆலய உற்சவத்திற்கு வந்திருந்ததாக கணிப்பீடுகள் எடுத்துக்காட்டுகின்றன. இதேபோல் ஸ்வெற்றா, ஹற்றிங்கன், டோட்முன்ட், ஸ்ருட்காட் என்று ஜேர்மனியில் தமிழ் மக்கள் பரவலாக வாழுகின்ற நகரங்களில் எல்லாம் பல ஆலயங்கள் அமைக்கப்பட்டு சிறப்புப் பெற்று திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.

    மொழியும், மதமும் போற்றிப் பாதுகாக்கப்படுவதுபோல் கலைகளையும் தம்முடைய பிள்ளைகளுக்குக் கற்பிக்க பெற்றோர் தயங்கியதில்லை. கர்நாடக சங்கீதம், வயலின், பரதநாட்டியம், வீணை, மிருதங்கம், தவில் போன்ற கலைகளும் மேற்கத்தைய நடனங்களையும், இசைக்கருவிகளையும் கூட தம்முடைய பிள்ளைகளுக்குக் கற்பித்துப் பேரும் புகழும் அடைந்துள்ளார்கள்.

    தாம் வாழும் மண் தமக்களித்த வசதி வாய்ப்புக்களை வைத்துத் தாம் பிறந்த மண்ணை மறக்காத தமிழர்கள் அதிகமானவர்கள் நம் மத்தியில் வாழுகின்றார்கள். இலங்கையிலுள்ள அநாதை விடுதிகளுக்கும், வாழ்வாதாரங்களை இழந்தவர்களுக்கும் ஜேர்மனியில் இருந்தவண்ணம் பண உதவிகளையும் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கான உதவிகளையும் செய்து கொண்டு வருகின்றார்கள்.

    இவ்வாறு ஜேர்மனியில் தமிழ் இனம் வளர்ச்சி கண்டு சொந்தமாக வீடு, வியாபார ஸ்தாபனங்கள், உற்பத்தி நிறுவனங்கள், வாகன வசதிகள் போன்ற சகல சைளகரியங்களுடனும் ஜேர்மனிய மக்களுக்கு நிகராக வாழ்ந்து வருகின்றார்கள். இவ்வாறு எமது தமிழ் மக்கள் ஜேர்மனிய மண்ணில் வாழ்ந்து வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஜேர்மனிய மக்களின் மனிதாபிமானப் பண்புகளும், விட்டுக்கொடுப்புக்களும், எல்லோரையும் சமமாக மதிக்கும் உயரிய பண்புமே என்பதில் சிறிதளவும் சந்தேகமில்ல.

    ஜேர்மனி நாட்டில் தமிழர்கள் மூன்றாவது தலைமுறையினரைக் கண்டுவிட்டார்கள். இப்போது விரும்பியோ விரும்பாமலே பெற்றோர் தம்முடைய பிள்ளைகளின் கலாசார கலப்புக்கு தம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள். பன்மொழிக்கலாசாரததி;ல் வாழும் பிள்ளைகளின் இயற்கை விருப்பிற்கு ஏற்ப இந்த மண்ணில் வாழுகின்ற ஜேர்மனி, போலந்து, துருக்கி, மொறக்கோ, கிறிஸ்லாந்து, போன்ற பல நாட்டு பிள்ளைகளின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களைத் தம்முடைய வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டு வாழ்கின்றார்கள். ஆயினும் சில பெற்றோர்கள் வெள்ளை இன மக்களைத் திருமணம் செய்தாலும் பறவாயில்லை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், சாதி குறைந்தவர்களை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று பிடிவாதமாக இருப்பதனால், பெற்றோரைப் பிரிந்து வாழுகின்ற பல இளந்தலைமுறையினர் ஜேர்மனியில் இப்போதும் காணப்படுகின்றார்கள். ஆனால், மக்களை சாதி வழமையால் பிரிப்பது அருவருக்கத்தக்கது என்று இளந்தலைமுறையினர் கூறுவதை நாம் அறியக்கூடியதாக இருக்கின்றது. இம்மனப்போக்கு எதிர்காலத் தலைமுறையினருடன் எம்முடைய பெற்றோரின் பிடிவாதப் பண்பு உடைத்தெறியப்படும் என்பது நிச்சயமான உண்மையாக கருதப்படுகின்றது.

    பண பலம் மிக்க தமிழ் தனவந்தர்கள் தம்முடைய பணபலத்தைப் பலருக்கும் காட்டுவதற்கு விழாக்களைக் கோலாகலமாக நடத்துகின்றனர். அதனைப் பார்த்து பண பலமற்றவர்கள் கூட கடன் பெற்று திருமண வைபவங்களையும், பூப்புனித நீராட்டு விழாக்களையும், பிறந்தநாள் வைபவங்களையும் நடத்தி கடன்காரர்களாக வாழ்வதைத் தற்போது காணக்கூடியதாக இருக்கின்றது. ஓயாத உழைப்பும், கடன் தொல்லையும் பல ஆண்களை இருதய நோயாளியாக்கி மரணத்தைத் தழுவச் செய்திருக்கின்றது. 18 ஆவது பிறந்தநாள் விழாவில் தம்முடைய பிள்ளைகளுக்கு அதிக விலை மதிப்புள்ள வாகனங்களைப் பெற்றோர் பரிசளிப்பதும். அதன் பெறுமதி உணராது வயதுக் கோளாறினால், பிள்ளைகள் விபத்துக்களைச் சந்திப்பதும், ஹெலிகொப்டர்களில் மாப்பிள்ளை, பெண் அழைப்பு, தேரில் பவனி, போன்ற ஆடம்பரான விழாக்களும் தற்போது நடக்கின்றன. கடினமான தொழில்களைச் செய்து சம்பாதிக்கின்ற பணத்தை, இவ்வாறான அர்த்தமற்ற செலவுகளைச் செய்வதன் மூலம் பணத்தின் பெறுமதியைப் பிள்ளைகள் உணர்ந்து கொள்வதில்லை.

    போர்க் காலங்களில் தம்முடைய உடைமைகளையும், உறவுகளையும் பறி கொடுத்த தாக்கம் மனிதர்கள் மனநிலையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. தம்முடைய நினவுகளை மறப்பதற்காக குடிக்கு அடிமையான பலர் புலம்பெயர்வில் இளவயதிலேயே உயிரை இழக்கின்றார்கள். மனநிலை பாதிக்கப்பட்ட பல கணவன்மார்கள் மனைவிமாரைத் துன்புறுத்தி பல இன்னல்களை அனுபவிக்கின்றார்கள். இவ்வாறான சூழ்நிலையிலும் விவாகரத்து ஜேர்மனிய மண்ணிலே தமிழர்களிடையே அதிகரித்துள்ளதை நாம் அறியக் கூடியதாக இருக்கின்றது. பணத்தைக் கொட்டித் திருமணவிழாவை நடத்தி அடுத்த இரு மாதங்களின் பின் விவாகரத்துக் கேட்டு பெற்றோரிடம் திரும்பும் எத்தனையோ இளைய தலைமுறையினரை தற்காலத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது. அளவுக்கு மிஞ்சிய பெண் சுதந்திரமும் விவாகரத்துக்களை அதிகரிக்கச் செய்துள்ளது. இது தற்போது சர்வசாதாரணமாகப்படுகின்றது. இதனால் பல பெற்றோர்கள் மனஉழைச்சலுக்கு உள்ளாகியுள்ளார்கள்.

    சில பெற்றோர்களின் தவறான வழிகாட்டலில் வாழுகின்ற பிள்ளைகள் தம்முடைய சுயபண்புகளை இழந்து காணப்படுகின்றார்கள். தாம் வாழுகின்ற நாடு எமக்கு வசதி வாய்ப்புக்களைத் தந்திருக்கின்றது. பொது உடைமைகளை சீரழிக்கக் கூடாது. கிடைக்கின்ற பயன்களைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர். அரசாங்கப் பணத்தில் வாழ்வதும். அப்பணத்தை முறையற்ற வழியில் செலவு செய்வதும் சில தரமற்ற பிள்ளைகளிடையே காணப்படுகின்றது. இவ்வாறான பிள்ளைகளுக்குச் சூழலும் கைகொடுக்கின்றது. பல மொழி கலாசாரத்தில் வாழுகின்ற போது இவற்றை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது.

    இவ்வாறான தவறுகள் சிலவற்றைக் காலம் மறக்கச் செய்யும் என்றே கருதுகின்றேன். இந்த மண்ணில் கால் வைத்தபோது நாம் எவ்வாறு இருந்தோம் என்பதை எமது மக்கள் பலர் மறந்து விட்டனர். ஆயினும் காலம் ஒவ்வொன்றையும் ஒவ்வொருவருக்கும் கற்றுத் தருகின்றது என்பதே உண்மை.

    ஆனால், இனிவரும் காலங்களில் எமது மொழி, கலாசார பண்புகள் எதிர்வரும் தலைமுறையினருக்கு எவ்வாறு கடத்தப்படும், போற்றிப் பாதுகாக்கப்படும் என்பது பெற்றோர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. கலப்புத் திருமணமானது மொழி, கலாசாரத்தை எதிர்காலத்தில் எந்த அளவில் பாதுகாக்கும்? வேற்றுமொழியில் கல்வி, தொழில் புரிகின்ற எமது இளஞ்சமுதாயம் எமக்குப் பின் தமிழ் மொழியை எந்த அளவிற்குக் கொண்டு செல்வார்கள்? என்ற சந்தேகங்களுடனேயே இங்குள்ள தமிழ் கல்வி நிறுவனங்களும், இலக்கிய சங்கங்களும், தமிழ் ஊடகங்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. எமக்குப் பின் இவற்றையெல்லாம் யார் தொடர்ந்து கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கையற்ற மனங்களுடனேயே புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...