• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    புதன், 31 டிசம்பர், 2014

    புத்தாண்டு வாழ்த்துக்கள்


          
     முடிவென் றுலகில் ஏதும் இல்லை
    முடிந்ததாய் எதிலும் சரித்திரம் இல்லை
    விடிந்ததும் உலகம் இருள்வது நியதி
    இருண்டதும் உலகம் விடிவது உறுதி
    மாரியும் ஓர்நாள் கோடையாய் மாறும்
    கோடையும் ஓர்நாள் மாரியாய் திரும்பும்
    கடந்தது கடந்ததை  நினைப்பது வாழ்வு
    நடந்ததை நினைத்தே மாய்வது வீணே

    உலகின் பிறப்பில் பலவித மாற்றம்
    உணர்ந்தே வளர்தோம் உயர்வை அறிந்தோம்
    புதுமை காணவே உழைத்திடும் உலகில்
    பழைமை பேணியே புதுமை காண்போம்
    மறைந்த பதின் நான்கு பதின் ஐந்தை
    மகிழ்வுடன் தந்தே மகிழ்வுடன் பிரிந்தது
    கடந்த ஆண்டில் நடந்த நிகழ்வுகள்
    கற்றவை நினைத்தே திருந்தி வாழ்வோம்


    அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    புதன், 24 டிசம்பர், 2014

    கிறிஸ்மஸ் வாழ்த்து





    வானத்து விளக்கு வாழ்வின் ஒளி
    மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம்
    மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க
    மண்ணிலே உதித்தார் மனங்களை வென்றார்
    மனங்களை வெல்லும் மனிதங்கள் நிலைக்கும்
    காலங்கள் வென்று காலமெல்லாம் வாழும்.

    பாலகன் ஜேசு பாரினில் உதித்த
    பக்குவம் புரியும் மனங்கள் பண்பினில் உயரும். - அவர் 
    பாரினில் பட்டதுயர் பண்புடன் அறிந்தால் 
    பாருலகு ஏந்தும் உள்ளத்தால் போற்றியே மகிழும் - அவர்  
    பிறப்பின் மேன்மை உணர்த்திடும் உண்மை 
    ஏழ்மையும் ஓர்நாள் பாரினில் சிறக்கும் – உலகம்
    ஏந்தியே மகிழும் இன்னல்கள் தீர்க்கும்

    பிறர்க்காய் வாழும் மனிதர் உலகில் இறப்பதில்லை
    தனக்காய்  வாழும் மனிதர் உலகில் நிலைப்பதில்லை
    உடல் பொருள் ஆவி உலகுக்காய் தந்தால்
    இறை தூதரென உள்ளங்கள் ஏந்தும்


    அனைத்து உறவுகளுக்கும் கிறிமஸ் வாழ்த்துக்கள்








    சனி, 20 டிசம்பர், 2014

    சிந்திக்கச் சிலவரிகள்





    ஒருவர் செய்த ஒரு நன்மையை நினைத்து, தீமைகள் அனைத்தையும்         மறக்கும் பண்பே மனிதனை பிறர் மனதில் நிறுத்தும் உயரிய மந்திரம். 

    கவலைகளை துடைத்தெறிந்து வாழ்நாளெல்லாம் சிரித்திருக்கும் கலையை கற்கும் மனிதன் உலக இன்பத்தை பெறும் பாக்கியசாலி ஆவான்.

    அடுத்தவர் பழிப்பார் என்று எண்ணி மனதுக்குள் தோன்றும் உண்மைகளை மறைக்கத் தெரிந்த மனிதன் சமூகத்தை பின்நோக்கிய பாதைக்கு விட்டுச் செல்கின்றான். 

    சொந்தங்கள், சுற்றத்தினர் என்று குறுகிய வட்டத்துக்குள் வாழும் மனிதன் சுயநலவாதப் புழுவாகின்றான். சாதனை படைக்கத் துடிக்கும் மனிதன் சரித்திர நாயகனாகின்றான். 

    ஒரு மனிதன் சேர்க்கும் உயரிய சொத்து உறவுகளின் பாசம். 

    மனிதனின்  அற்புத உறுப்பு மூளை. அதைச் சரியான முறையில் பயன்படுத்தத் தெரியாதவன் அவ்வுறுப்பைப் பெற்றிருக்கும் மூடன்.

    எல்லோரையும் திருப்திப்படுத்தி எல்லோருக்கும் நல்லவராய் வாழ்வது என்பது முடியாத காரியம்.

    தன்னம்பிக்கையும், ஆசையும்  சரியான முறையில் அமையாது விட்டால், தீயவழிக்கே மனிதனைக் கொண்டு செல்லும்.

    எதுவுமே எமக்குச் சொந்தமாவதில்லை. உயிருடன் இருக்கும் வரை அநுபவிப்போம். இல்லாது போனால், சொந்தமில்லை என நினைத்திருப்போம்.

    இன்பமும் துன்பமும் சந்தர்ப்பம் சூழ்நிலைக்கேற்ப அமைகின்றன. சந்தர்ப்பம் வந்து அமைவது சந்திக்கும் மனிதர்களையும் சம்பவங்களையும் பொறுத்தது.

    • வாழும்போது யாருடைய நற்குணங்களையும் பிறர் புரிந்து கொள்வதில்லை. இறப்பின் பின்னே நினைத்துத் துன்புறுவர்.

    • சுடரின் வீழ்ச்சியும், பகலின் மறைவும், உறக்கத்தின் நிகழ்வும், இடையிடை துன்பமும் கவலையும் உலகின் நிலையாமையை உணர்த்தும்.

                                                                 ---- கௌசி -------




    ஞாயிறு, 30 நவம்பர், 2014

    கண்ணீர் அஞ்சலி

                         
            மண்ணில்                                 விண்ணில்                                                   15.12.1940                                          17.11.2014                                 
                           திரு. தங்கத்துரை கணேசலிங்கம் 

      இருபது வருட என் ஜேர்மனிய வாழ்விலும் முப்பது வருட என் கணவன் வாழ்விலும் பதினெட்டு வருட என் மகளின் வாழ்விலும் மனநிறைவாய் மகிழ்ந்தே நிறைந்திருந்து எமது சுகத்திலும் துக்கத்திலும் துணை நின்று தோளோடு தோள் சேர்த்து அன்பாயும் ஆதரவாயும் வாழ்ந்த திரு. கணேசலிங்கம் என்னும் ஓருயிர் உலக வாழ்க்கையை மனதாலோ மனமின்றியோ துறந்து இன்று சாம்பலாய் புட்டிக்குள்ளே புகுந்துவிட்டது. இவ்வுலக வாழ்க்கையை என்றுமே இலகுவாய் எடுப்பதுடன் தன்னைச் சுற்றியுள்ளோரை சிரிக்க வைத்துத் தானும் சிரித்து, தனக்குள் கவலை இருந்தாலும் தன்னைச் சுற்றியுள்ளோருக்கு சிறிதளவும் காட்டாது சுதந்திரமாய் வாழ்ந்த அந்த உள்ளம் இன்று பலரை கலங்க வைத்து கண்ணினுள் மட்டும் இடம்பிடித்து தோற்றம் இழந்து விட்டது.



    உறவெல்லாம் கூடி ஓர் ஊராய்க் குழுமி நின்று
    கதறி அழுதழுதும் எம் துயரம் தீராது தீராது
    ஆறுதலும் அரவணைப்பும் யார் தருவார் உமைப்போல்
    கூடிக்கும்மாளமிட்டோம் குடும்பங்களாய் குதூகலித்தோம் - இன்று
    மீளாத்துயில் கொண்ட செய்தி கேட்டு
    நெஞ்சமெல்லாம் வெந்து துடிக்கின்றோம்
    இல்லையென்ற வார்த்தை உங்கள் இதயத்தில் இல்லை
    உதவி என்னும் சொல் உங்கள் உதிரத்தின் சொத்து
    உறக்கமது போதும் எழுந்துதான் வாருங்கள் - எங்கள்
    கலக்கமது தீர்க்க கண்களைத்தான் திறந்திடுங்கள்
    கம்பீரத் தோற்றமது கட்டிலிலே கிடக்குதையோ
    ஓயாது பேசும் வாய் பேச்சிழந்து போனதையோ
    கணேசலிங்கண்ணன்!! எமை விட்டுத்தான் போனீரோ!
    உள்ளே நோய் வளர்த்து உறவுகளைச் சிரிக்க வைத்து
    காலனுக்கு விருந்து வைக்க விரைந்துதான் போனீரோ!
    காலனுந்தான் கயவனோ எம் கலகலப்பை
    கவர்ந்து சென்று விட்டான் ஐயகோ!
    எங்கள் உறவுப் பாலத்தை அறுத்துவிட்டான்
    உயிர்மூச்சைப் பறித்துவிட்டான் ஐயகோ!
    உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்து
    கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கையாக்குகின்றோம்

    ஆறாத்துயரில் தவிக்கும் குடும்பத்தார்க்கும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அநுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

                  
                          இப்பதிவு மூலம் நான் அறிந்தவை கேட்டவற்றை அலசிப் பார்க்க விரும்புகின்றேன். செலவு என்று கூறி அவர் விரும்பிய உணவெல்லாம் அவர் போல் உருச் செய்த பொம்மை முன்  படைத்து உருத்தாளர் மாத்திரமே படைப்புக்களை உண்டு. அவர் உண்டார் என்று மனத்தால் நினைத்து நீருள் எறிந்து விடுகின்றனர். நிகழ்வில் கலந்து கொண்டோர் அவ்வீட்டில் உணவுண்டு கழித்து, விடை பெற்றனர். ஆனால் அவ்வீட்டுணவு தம் வீட்டிற்கு எடுத்துச் செல்ல துடக்கென்று ஒதிக்கினர். துடக்குணவு உண்பது தவறில்லை எடுத்துச் செல்வது மட்டுமே துடக்கென்றால் கூடவே கேட்டுக் கொண்டிருக்கும் என் மூளை சும்மா இருக்குமா? எழுதிக் கொண்டே இருக்கும் என் விரல்கள் பொறுத்திருக்குமா? தன்னோடு வாழும் வரை உறவு, இறந்துவிட்டால் பேய். கேட்பதற்கே நாக் கூசுகின்றது 

                உயிரே போயிற்றாம், உடலுள் இயந்திரங்கள் எல்லாம் எரிந்திட்டாம், வாயில்லை கையில்லை ருசியறிய நாவில்லை வெறும் காற்றாகிப் போன உயிருக்கு, உணவுண்டு வாழும் பாக்கியமும் தேவையும் இனியில்லை. இவ்வாறிருக்க உணவு படைத்தலின் காரணம் தான் என்ன? என்னால் புரிந்து கொள்ளும் ஓருணர்வு உணவை ஆக்கினோம், அவர் வாழ்ந்த காலங்களில் அவருக்காய் உவந்தளித்தோம். இன்றோ இனி மேலோ எம்மால் அவருக்காய் உணவு சமைத்து வழங்க முடியாது என்னும் அந்த ஆற்றாமையை நீக்க ஓர் நாள் அவர் விரும்பிய உணவுகளைப் படிக்கின்றோம். இது ஒரு குழந்தைத்தனமே என்பதில் தவறில்லை ஆனாலும் மனத் திருப்திக்காகப் படிக்கின்றோம். பலரை அழைத்து உணவை வழங்குகின்றோம் என்றால் அதுகூட அவர் வாழ்ந்த போது பலரை அழைத்து உணவு வழங்கினார். அந்த நினைவை இன்றைய நாளில் செய்கின்றோம் என்று மனம் சாந்தி கொள்கின்றோம்.

                         அதனை விடுத்து அவர் வந்து உணவு அருந்துவார். அவரவர் வீட்டிற்கு வயிற்றில் கொண்டு போம் உணவும் கையில் கொண்டு சென்றால் பறித்துண்ண கூடவே வந்து  வீட்டில் குடியிருந்து கொள்வார் என்பதெல்லாம் மூடத்தனமாகப் படுகின்றது.

                         உயிரின் தோற்றம் இறப்பில் முடிந்துவிடுகின்றது. மிருகங்கள் பறவைகள் போன்றே மனித உயிரும் இறப்புடன் முடிந்துவிடுகின்றது. அது ஆவியாக வருகின்றது என்பதெல்லாம் சுத்தப்பொய்யான பேச்சு. படைக்கப்பட்ட பொருட்கள் போலவே உடலும் வடிவமைக்கப்பட்டு நோய்கண்டோ, விபத்து ஏற்பட்டோ அழிந்துவிடுகின்றது. அழிவின் பின் வாழ்வென்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இறந்தவர்களுடன் பேசுதல் என்பதெல்லாம் ஏற்ருக்க்கொல்லக் கூடியதா! பேச்சு என்பது மூளை, நாக்கு, காற்று அனைத்தும் சம்பந்தப்பட்டது. இது எதுவுமே இல்லாத ஆவி எப்படிப் பேசும்?

    ஆரம்பத்தில் ஒரு செல்லேயான உயிர் பற்பலவாய் விரிவடைந்து உலகெங்கும் உயிர் மயமாய் ஆனது. மனிதனாய் உருவான பின்தான் இந்த மூட நம்பிக்கைகளும் தொடங்கியது. தன் சிறப்பே அறியாத மனிதன் தனக்கு மீறிய சக்தி பற்றிச் சிந்திக்கத் தொடங்கி விட்டதுவே. ஆவிகளின் நடமாட்டமாகிப் போய்விட்டது.

                        பிறந்தவர் இறப்பது உலக இயற்கை. இதனையே  

    “காயமே பொய்யடா, வெறும் காற்றடைத்த வெறும் பையடா”
    “ஊரெல்லாம் கூடி அழுதிட்டுப்
    பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு
    சூரை யங் காட்டிடைக் கொண்டு எரித்திட்டு
    நீரினுள் மூழ்கி நினைப் பொழிந்தனர”

    விட்டுவிடப் போகிறது உயிர்
    உடலைச் சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார்”

    என்னும் சித்தர் பாடல்கள் சிந்தைக்குள்ளே வந்து வந்து உணர்த்துகின்றன. மன்னாதி மன்னனும் இறுதியில் பிடி சாம்பலாவார். உலகில் எதுவுமே நிலை இல்லை. இது தெரிந்திருந்தும் மனிதன் நிலையான வாழ்வென்று ஆசையில் வீழ்ந்து அழுந்துகின்றான். உயிர் உள்ளவரையே அனைத்தும் உயிர் போன பின் வெறும் சூன்யம். எதுவுமே இல்லை. எனவே வாழும் வாழ்க்கையை இரசிக்கத் தொடங்குவோம் 


    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...