• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 27 மே, 2012

    சொல்லொணாத் துயரம் சோலிங்கனில்




    சொல்லொணாத் துயரம் சோலிங்கனில்             

    கல்லுக்கும் மண்ணுக்கும் இரும்புக்கும்
    சொல்லொணாத் துயரம் சோலிங்கனில்
    நல்லா இருந்த நகரத்தைப்
    பொல்லாத பாடு படுத்துகிறார்
    நல்லநல்ல மனிதவலு நாணிக்கிடக்கிறது
    வல்லேறு போல் வாகனச்சத்தம் 
    மெல்லிய காதைத் துளைக்கிறது. 

    பூமிப்படுக்கையிலோர் புதிய மாற்றத்தைப் 
    புரியாத பிரமனும் பூரித்து நிற்கின்றார்
    பூமாதேவிக்கோர் புதுவித உணர்வு 
    புழுப்போல் நெளிந்து பாம்பாய்தன்னுள்ளே
    புகுந்த விளையாடும் குழாயின்    
    புகலிட வரவின்நிலை குறித்து.

    மெஞ்ஞானம் மறந்த அஞ்ஞானப் புரட்சி
    விஞ்ஞான விளிம்பிலே வியத்தகு காட்சி 
    தன்ஞானம் மறந்த தடிகொண்ட ஆச்சி
    தரக்குறைவாய்ப் பேசும் சளிப்பான பேச்சு.

    அழகுக்கும் ஆடம்பரத்துக்கும் 
    அளவில்லாப் பெருமைக்கும்
    அரசாங்கப் பணமெல்லாம் 
    அநியாயமாய்த் தேய்கிறதே
    வரியாய்ப் பெற்ற பணமெல்லாம் 
    மண்தோண்ட விடலாமோ
    குறையாத விலையுயர்வு 
    கொள்கையை மறக்கலாமோ

    வியாழன், 17 மே, 2012

    மனதைக் கொன்று வாழ்வதா?


     


    தேடிவந்து அறிவு ஒட்டிக் கொள்வோருமுண்டு 
    தேடிச்சென்று அறிவு பெற்றுக் கொள்வோருமுண்டு
    கற்பூரமன்ன மூளை கொண்டோரும் உண்டு 
    கடைந்தெடுத்த நெய் யொப்ப அறிவு கொண்டோருமுண்டு 
    ஆற்றொழுக்கன்ன அறிவு பாய்ந்தோடுவோரும் உண்டு
    தேக்கிவைத்த கிணற்று நீரன்ன அறிவாளிகளுமுண்டு


    இவள் தேடிச்சென்று அறிவு சேர்த்தெடுக்கும் பெண். வலிந்து கற்று வாழத்துடிக்கும் ஒருத்தி. கல்வி மேல் கொண்ட காதலால் கல்யாண வலையில் சிக்காது கல்லூரி கண்டு பல்கலைக்கழகம் புகுந்தாள். கல்விக்காந்தம் தேடிச் செல்ல காதல் காந்தம் தேடி வந்தது. ஒறுப்பதும் மறுப்பதும் அவள் குணமாக தன்னை வருத்துவதும் வலுக்கட்டாயமாய்த் தன்னிடம் இழுப்பதும் அவன் குணமானது. விடியலில் வதிவிடத்தில் வருந்தி இறையிடம் வணங்குவாள். இன்று அவன் முகத்தைக் காணவே கூடாது. சற்றும் என் குடும்பத்திற்கும் மதத்திற்கும் இனத்திற்கும் பொருத்தமில்லாத அவன் என் குடும்பத்தில் இணைந்தால் குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பாவேன். தலைநிமிர்ந்த என் தந்தை போக்கிற்கு தலை குனிவை ஏற்படுத்திவிடுவேன். ஆனாலும் அவனைக் காணும் போதெல்லாம் மனம் தடுமாறுகின்றதே? என் மனதிற்கு உறுதியைத் தா இறைவா! எனக் கண் கலங்குவாள். வெளியே செல்வாள். 1 நிமிடம் பேச அநுமதி கேட்டு விரைந்து முன்னே வந்து இறைஞ்சி நிற்பான். ஆண்டவனிடம் கேட்ட 30 நிமிட வேண்டுதல் விடைபெறும். எங்கே இந்தக் கடவுள். தவிர்ப்பதற்கான தன் பக்க நியாயங்களை எடுத்துரைப்பாள். தன் கையைக் கீறி இரத்தம் காட்டுவதும், புதிதாகச் சிகரெட் புகைத்து இழுப்பதுவும் அவன் செயல்களாகின. இவ்வாறான செய்கைகளின் போது அவள் மனதில் அவன் மேல் வெறுப்பு அதிகமாகியது. நடித்தாள், அவனைக் காணும் போதெல்லாம் காதலிப்பதாய் நடித்தாள். கல்விக்காலம் முடியும் வரை இரட்டை வேடம் போட்டாள். கற்கைக் காலம் முடிந்தது அவன் தொடர்பை அறுத்தாள். வேறு திருமணம் ஏற்றாள். இனிதாய் வாழுகின்றாள். இது சம்பவம். ஆராயத் தொடங்கியது இப்படைப்பு.

    அவள் பக்கப் பார்வையில் அவள் செய்தது நியாயம். அவன் பக்கப்பார்வையில் அவள் செய்தது துரோகம். அவள் இன்று கேட்கும் கேள்வியானது. இந்த இறைவன் ஏன் என் வேண்டுதலுக்கு செவி சாய்க்கவில்லை. இதுதான் நடக்கும் என்பது விதியானால், இந்த வேண்டாத இடையூறுகள் வில்லங்கமாய் இடைச்செருகலாய் வாழ்க்கையில் நுழைகின்றன. இது அவள் வாழ்க்கையில் ஒரு சம்பவம். சரித்திரமல்ல.

    காதலென்று தன் மனதிற்கு அவள் துரோகம் செய்ய விரும்பவில்லை. காதல் பறவைக்கும் வரும். விலங்குகளுக்கும் வரும். உயிரினங்கள் அனைத்திற்கும் வரும். தன் இன்பத்திற்காகத் தன்னைப் பெற்றவர்கள் மனம் புண்பட அவள் இடம் தரவில்லை. பாசம், அன்பு என்பவை எல்லாம் உடலுள் ஊறிக் கொண்டிருக்கும் ஓமோன்களின் தொழிற்பாடே அவ்வக் காலங்களில் தோன்றுகின்ற உடலுள் மனதுள் ஏற்படும் மாற்றங்களைக் கட்டுப்படுத்திவிட்டால், உலகம் சிறக்க வாழலாம் என்னும் உண்மையை உணர்ந்தவள். பறவையும் தன் பிள்ளைக்கு தேடி உணவூட்டும். சிறகு முளைக்க தன்னிச்சையாய் வாழத் தகுதியுண்டென்று அநுமதி தந்துவிடும். குரங்கு தன் குட்டியை தூக்கி வளக்கும். கொப்பிழக்கப் பாயும் போது தன் கைவிட்டு விட்டால் தனியே வாழ அநுமதி தந்துவிடும். இழந்த கன்றுகளைத் தேடிப் பசுவும் கண்ணீர் விடும். படைக்கப்பட்ட அனைத்து உயிர்களிடமும் பாசம் உண்டு. காதல் உண்டு. கடலுக்குள் கணக்கிடமுடியாத உயிரினங்கள் அற்புதமான உடல் வனப்புக்கள் தொழிற்பாடுகள் உண்டு. அவை சிலவற்றிற்கு உயிருண்டு குடல் இல்லை. அவையும் உயிர் வாழ்கின்றன. நண்டு, சிப்பி, வேய், கதலி நாசமுறும் காலம் கொண்ட கருவழிக்கும். உலகுக்குப் பிள்ளையை ஈன்றுவிட்டுத் தம் உயிர் இழக்கும். இவற்றின் பாசத்திற்கு ஈடாக எதைச் சொல்வது. இப்பாசம் பற்றி எண்ணிப் பார்ப்பார் யாருண்டு. 

              பாசமோ, நேசமோ, காதலோ காலங்கடந்திட துன்பம் மறைந்திட நினைவுகள் மாத்திரம் திரையாக அவ்வப்போது வந்துபோகும். அவை கூட நீண்ட இடைவெளியின் பின் மறைந்து போகும். தன் மனம் அன்று எது சரியென்று எண்ணுகின்றதோ அதைச் சரியாகச் செய்ய வேண்டியதுதான் சிறப்பு. உயிருள்ள தாவரங்களையும் மிருகங்களையும் கறியாக்கி விடுகின்றோம். மனிதர்களுக்கு மட்டும் ஈமக்கிரிகைகள் செய்கின்றோம். அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்பதனாலேயோ மற்றைய உயிரினங்களைவிடத் தமக்கு அன்பின் வலிமை அதிகம் என்று மனிதர்கள் கருதுகின்றார்களோ. மனிதர்களே தாவரங்கள், மிருகங்கள் அனைத்தின் கலங்களையும் தம்முள் அடக்கிய உருவமாகத்தான் காணப்படுகின்றார்கள். ஜேர்மனியிலே ஒரு பன்றி ஒரு இறைச்சிக்கடையினுள் புகுந்து கண்ணாடிகளை உடைத்து பெரிய அட்டகாசம் பண்ணியிருக்கின்றது. அதன் உணர்வுப் பிரபாகத்தை எண்ணி ஜேர்மனியர்கள் வியந்திருக்கின்றார்கள். அப்பன்றியானது தன் இனம் கொல்லப்படுவதைக் கண்டு துடித்திருக்கின்றது. நாய் பன்றிக்குப் பாலூட்டியதும். தான் வளர்த்த ஆட்டுக்குட்டிக்குத் தன் முலைப்பாலை ஒரு பெண் ஊட்டியதும் பாசத்திற்கு எடுத்துக்காட்டுக்களே. உணர்வுகள் உள்ளங்களில் வெளிப்படுதல் உறுதியே. அதே உள்ளங்கள் உணர்வுகளை தேவை நிமித்தம் உள்ளடக்கலும் தேவையே. மனதைக் கொன்று வாழ்தலை விட மனதுக்கும், எம்மைச் சார்ந்து நிற்போர் ஆசாபாசங்களுக்கும், சூழல் சுற்றங்கள் விருப்புகளுக்கும் ஏற்ப ஆசைகளை கட்டுப்படுத்தும்போது எதிர்கால வாழ்க்கையில் இன்பத்தை அநுபவிக்கலாம். மனதைக் கொன்று வாழ்வதா? மனதுக்கேற்ப வாழ்வதா?.....

    ஞாயிறு, 13 மே, 2012

    அன்னையர் தினம்





    அன்னையர் தினம்

    பிறக்கும் போது அழுகின்றோம். எம் தாயையும் அழ வைக்கின்றோம். வருகின்ற காலங்களில் என்னால் நீங்கள் அழப்போவதற்கு ஆயத்தமாகுங்கள் என்பது   போல் வருகையின் வலி தாய்க்கு வந்துவிடும். ஒரு மனிதன் 45 அலகுகளே நோவைத் தாங்குவான். ஆனால் ஒரு தாய் பிரசவத்தின் போது 57 அலகுகள் நோவைத் தாங்குகின்றாள். 21 எலும்புகள் ஒன்றாக உடையும்போது ஏற்படும் வலி அப்போது ஏற்படுகின்றது. இவ் அளவுகளை முகநூலில் வசித்தறிந்தேன். வலியின் தாக்கத்தைத் தாயாய் உணர்ந்திருக்கின்றேன். வயிற்றினுள் இருக்கும் போது தன் வாய்க்குக் கட்டுப் போட்டாள். வளர்ந்து பெரியவனாகும்போது தன் வார்த்தைக்குக் கட்டுப்போட்டாள். வளருகின்ற போது தன் தாய்ப்பால் சுத்தமாக தன் ஆசைகளை அடக்கினாள். பூமிக்கு ஒப்பாக பொறுமைக்கு இலக்கணமாக வாழ்ந்து நல்மனிதர்களை உருவாக்க நாளும் பகலும் உழைக்கும் ஒரு தாய் தனது பிள்ளை கெட்டவனாக வரவேண்டும் என்று ஒருக்காலும் நினைக்க மாhட்டாள். அதேபோல் தன் பிள்ளை கால் கை இழந்திருந்தாலும் பேசமுடியாதவனாக இருந்தாலும் பார்க்க முடியாது இருந்தாலும் ஏன் வலது குறைந்து உருவமே மாறுபட்டு வாயிலிருந்து நீர் வடிய உலகத்தையே புரியாதவனாக இருந்தாலும் முகத்தைச் சுளிக்காது முழு அன்புடன் அவனைப் பராமரிக்க ஒரு தாயாலே மட்டுமே முடியும். வளர்ந்து தன் மகன் பெரியவனாக காட்சியளித்தாலும் அவன் தாய் கண்களுக்கு அவன் சிறுபிள்ளையாகவே காட்சியளிப்பான். 
          
    அந்தத் தாய்மையைப் போற்றி ஒரு தினம், அதுவே அன்னையர் தினம் ஜேர்மனியில் இன்றையநாள் 13.05 கொண்டாடப்படுகின்றது. மலர்க் கொத்துகளை தம்முடைய தாயாருக்கு அன்பளிப்பாக வழங்கி தம்முடைய அன்பை வெளிக்காட்டி பரிசுப் பொருள்களை பிள்ளைகள் தாய்மாருக்குக் கொடுப்பதும் அவர்கள் விரும்பியபடி நடப்பதும் வழக்கமாக இருக்கின்றது. என்றுமே தமது பிள்ளைகளை மலர்களாகக் காணும் தாய்க்கு மலர்க்கொத்துக்களை வழங்குவது இயல்பே. அமெரிக்கா மேற்கு விர்ஜினிய மாநிலத்தைச் சேர்ந்த பெண்மணி Ann Maria Reevas Jaris  அவர்களால் 1865 ல் இத்தினம் பற்றிய தீர்மானம் முன் வைக்கப்பட்டது. பின் அவர் மகள் Ann Marie Jarvis அவர்கள் 12.05. 1907 அன்று தனது தாய் இறந்து இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை தனது தாய் ஞாபகார்த்த தினத்தை மெதடிஸ் ஆலயத்தில் நடத்தினார். மற்றைய தாய்மார்களுக்கு முன்பாக தனது தாயை நினைத்து 500 கார்னேஷன் மலர்களை வைத்தார். இவரே அதிகாரபூர்வமான அன்னையர் தினத்தைக்கோரி தனது முழு நேரத்தையும் அர்ப்பணித்து அரசியல்வாதிகள், பாதிரிமார் தொழில் அதிபர்கள் மகளிர் சங்கங்கள் போன்றோர்க்கு கடிதங்கள் எழுதி அதிகாரபூர்வமான விடுமுறை தினத்தைக் கோரினார். இவ்வாறிருக்க இந்நிலைமை வேகமாக வளர்ந்து 1909 ல் அமெரிக்காவில் 45 மாநிலங்களில் அன்னையர் தினம் கெண்டாடப்பட்டது. 1914 ஆம் ஆண்டு மே மாதம் 8ம் திகதி அமெரிக்க ஜனாதிபதி உட்ரோவ் வில்சன் அவர்கள் அன்னையர் தினத்தை அறிவிக்கும் உத்தியோகபூர்வமான கூட்டறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டார். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் மேமாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர்தினம் கொண்டாடுவது உறுதிசெய்யப்பட்டது. 

    இந்நாள் மனிதர்கள் ஒவ்வொருவரும் கொண்டாட வேண்டிய நன்னாள். கருவில் தாங்கிய தாயை காலமெல்லாம் காக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு. அவர் காலில் விழுந்து வணங்குதல் மூலம் நல்லாசிகளைப் பெறல் பிள்ளைகள் கடமையாகின்றது. 

    அனைத்து அன்னையர்க்கும் அன்னையர்தின வாழ்த்துகள் 

    orkut scrap




    சனி, 5 மே, 2012

    இதயத்து இமையத்தை இணையத்தில் இணைக்கின்றேன்




    ரோஜா, நந்தியாவட்டை, செவ்வந்தி, ஓக்கிட்ஸ், அந்தூரியம் என்னும் வகைவகையான மலர்கள் நிறைந்த வீட்டுப் பூங்காவின் நடுவே காலைச்சூரியன் கரங்கள் மண்ணில் முத்தமிடும் பொழுது மஞ்சள் முகத்தின் நடுவே மங்கலக்குங்குமப் பொட்டிட்டு பின் தூங்கி முன் எழும் மலராய் திருமதி பரமேஸ்வரி என்னும் மலர், காலைவேளை கண்முழிப்பது நந்தவனத்தினுள். கரங்களால் அம்மலர்களை ஒரு தடவை ஸ்பரிசம் செய்தபின்புதான் தன் கடமைகளை மேற்கொள்வார்.
                
    சித்திராபௌர்ணமி என்னும் இன்றைய நாளிலே என்னை உலகுக்களித்த தெய்வத்தை வரிகளால் வந்தனை செய்ய ஆவல் கொண்டேன். இயற்கை எழில் கொஞ்சும் இலங்கை மண்ணின் கிழக்குப் பகுதியின் ஏர்ஊரில் முத்திரை பதித்த வேலுப்பிள்ளை பரமேஸ்வரி காதல் தம்பதியினர், இல்லறம் இனிதே நடைபெறுவதற்கு உறுதுணை புரிந்தது, இல்லாளின் நல்லறமே. ஏறுபோல் பீடு நடை கணவன் கொள்ள மனையாள் மாட்சியே காரணம். வீடுவசதியற்;றியிருந்த மக்களை, இலங்கையில் வடமுனை, புனாணை போன்ற நகரங்களில் குடியேற்றம் செய்து குடியமர்த்தவும், தாம் வாழும் ஊர்மக்கள் கல்வி வசதி வேண்டி கல்விக்கூடம் அமைக்கவும், ஆலயங்கள் சிறந்த முறையில் நடைபெறவும், வேலையின்றி வாடும் மக்களுக்கு வேலைவசதி செய்து கொடுக்கவும் என வாழும் ஊர்மக்கள் வசதிக்காய் தன்னை அர்ப்பணித்த என் தந்தை, வீடு வரும் போதெல்லாம் இன்முகத்துடன் வரவேற்று வலக்கரமாய் வாழ்ந்திறந்த அந்தக் குலவிளக்கை இலக்கியப்பரப்பில் குறிப்பிடாது செல்ல என் மனம் இடம் தரவில்லை. முத்தான செல்வங்களை உலகுக்கீன்று, முறையாய் வளர்த்துத் தன் கடமையனைத்தும் முடித்துக் கடன் தீர்க்க வழிவிடாது கடைத்தேறிய எனது தாய், ஆங்கிலத்தில் குழந்தையை அழைக்கும் அற்புதமான சொல்லால் இறக்கும் வரை ஆயிரம் தடவை என்னை அழைக்கும் ஒலி என் செவிகளில் இன்றும் கேட்கும். அற்புதமாய் சமைத்தாலும் அழகான உணவகத்தில் உண்டாலும் அவர் சமையல் கைப்பக்குவம் எனக்கும் வரவில்லை நான் எங்குமே கண்டதும் இல்லை. அச்சுவையைப் பெறுவதற்கு நாளும்தான் ஏங்குகிறேன் என்றுமே திரும்பக் கிடைக்காது என்று என் உள் மனம் அலுத்துச் சொல்கின்றது. இறுதி நொடியில் அவர் ஊட்டிய சோயாக்கறியின் அமுதச்சுவை எனக்கு எதிலுமே கிடைத்ததில்லை. அவர் அழகைக் காண்பதற்கு அனைவரிடமும் எத்தனிக்கின்றேன். ஆனால், அத்தனையும் பொய்மையாகிப் போகின்றன. அவர் ஆர்வமும் ஆற்றல்களும் எண்ணிலடங்காதவை. முடியாது என்பதை எள்ளளவும் புரியாத என் தாய், இயமனை வெல்ல முடியாது என்பதை இறுதியில்தான் புரிந்திருப்பார். 

    என்னை விட்டு வெகுதூரம் சென்று 17 வருடங்கள் பறந்துவிட்டன. என் திருமணத்தின் 23 நாள்களின் பின் ஒரு நாள் சந்தோஷவானில் என் வீட்டார். அமோகமாக விழாவை அற்புதமாய் நடத்திவிட்ட ஆனந்தக் களைப்பில் இருந்தனர். அன்றே என் தாயும் 58 வயதிலேயே தன் கடமை முடிந்ததாய் கருதிவிட்டாரோ. நோயில் படுக்கவில்லை. நொந்து அழுததில்லை. வேதனைப்பட்டதில்லை. விடுதலையாவதை இம்மியளவும் தெரியப்படுத்தவில்லை. வழமை போல் ஒரு கைப்பிடி உணவை என் வாயினுள் திணித்த போது தொலைபேசிஅழைப்பு. என் கணவர் திரும்பவும் நாடு வந்தடைந்த செய்தியை அறிய தொலைபேசியை நான் நாடினேன். திடீரென மூளையினுள் ஒரு மெல்லிய இரத்த ஓட்டம். தெரிந்ததை தெரியப்படுத்தினார். சிறிது திக்கு முக்காடினார். வைத்தியரை வரவழைத்தோம். இரத்தஅழுத்தத்தின் அதிகரிப்பை அறியச்செய்து வைத்தியசாலை அனுப்பிவைத்தார். வாகனத்தினுள் வார்த்தைகள் அடங்கிவிட்டன. வைத்தியசாலையினுள் உயிரும் அடங்கிவிட்டது. அவர் இழப்பு வாழ்க்கையின் அர்த்தம் போதித்துவிட்டது.என் வாழ்வுக்கு நான் போட்டது, பிள்ளையார் சுழி. அவர் வாழ்வுக்கு அவர் போட்டது முற்றுப்புள்ளி. அவர் போட்ட அர்ச்சதையில் நான் வாழ்கின்றேன். ஆனால், அவர் விட்ட வெற்றிடத்தை நிரப்ப ஆளின்றி கலங்குகின்றேன். அமைதியான அம்மாவின் இழப்பு. ஈடுசெய்யவொண்ணா பேரிழப்பு. உறவுகள் வரலாம் போகலாம். பெற்றோர் என்னும் உறவு என்றுமே இமயத்தில் வைத்துப் போற்றப்படவேண்டிய உறவு.

             அலைகளின் மெய்மையை அடித்து நிரூபிப்பவள் யான். அந்த அலைகளில் நம்பிக்கை கொண்டவளாய், வானிருந்து என்னை வாழவைக்கும் அவர் செவிகளுக்கு வாய் அலை மூலம் என் வரிகளை அர்ப்பணம் செய்கின்றேன். என் மனக்கடலுள் மூழ்கியிருந்து நித்தம் நித்தம் ஆறுதல் தந்துதவும் ஆற்றலின் அற்புதத்தை வியக்கின்றேன். என் செயல்களில் அவர் மரபணுக்களின் மகிமை கண்டு மகிழ்ச்சி கொள்கின்றேன். என் இரத்த ஓட்டம் நிற்கும்வரை தினமும் அவர் நினைவிலேயே வாழுவேன்.


     உலகெங்கும் அன்னையர் மயம் - அதில்
    உருவாகும் அன்பெனும் பாடம்
    கருவாகி உருவான பின்னும்
    கருவறை போல் காக்கும் பாசம்
    கடமை முடித்து கடைத்தேறினால்
    கலங்கி நிற்கும் கண்மணிகளில்
    கலக்கம் தீர்க்க நிழற்படமாய்
    கண்சிமிட்டி ஆறுதல் தரும்.
    விதியென்றே விளக்கிவிட முடியாது - இறைவன்
    சதியென்று சாடிவிட முடியவில்லை.
    எதுவென்ற புரியாத நிலையில்
    எதிலும் அவர் முகம்
    பூக்களில் காண்கின்றேன்
    ஆடைஅலங்காரங்களில் காண்கின்றேன்.
    சுவையுள்ள உணவுகளில் காண்கின்றேன்.
    சுகாதாரமான வீட்டில் காண்கின்றேன்.
    அறிவுரையில் காண்கின்றேன்.
    ஆராய்ச்சியில் காண்கின்றேன்.
    எதிலுமே காண்பதனால்
    என்னால் முடியவில்லை 
    என்னிலிருந்து அவரைமீட்க.





    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...