• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்
    Ilakkiyaththil Valviyal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
    Ilakkiyaththil Valviyal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

    திங்கள், 26 ஜூன், 2017

    கல்லாய்க் காலம் கழித்த அகலிகை குற்றவாளியா?



                 
    கம்பராமாயணத்தில் பாலகாண்டத்தில் அகலிகை படலம் 25 பாடல்களில் கம்பரால் பாடப்பட்டது. அகலிகைமேல் ஆசை கொண்டு அவளை அநுபவிக்க விரும்பிய இந்திரன், அகலிகை கணவன் கௌதம முனிவர் காலைக்கடன் முடிக்க வெளியில் சென்ற நேரம் பார்த்து கௌதம முனிவர் போல் உருமாறி அகலிகை வீட்டினுள் நுழைந்தவிடுகின்றான். தன் இச்சையைத் தீர்க்க அகலிகையை அணைக்கின்றான். வந்தது கணவன் என்று நம்பிய அகலிகை அவனுக்கு இடம் தருகின்றாள். ஞான திருஷ்டியினால், நிலை உணர்ந்த கௌதமர் வீடு நோக்கி வரப் பூனையாக மாறிய இந்திரன் ஓடிமறைகின்றான். கௌதமரும் இந்திரனைச் சபித்து அகலிகை கல்லாக மாறச் சாபமிடுகின்றார். பிழை பொறுத்தல் பெரியோர் கடனே என வேண்டிக்கேட்ட அகலிகைக்கு ''இராமன் காற்துகள் பட்டு நீ மீண்டும் பெண்ணாகக் கடவது'' என சாபவிமோசனம் கொடுக்கின்றார். இதில் கம்பர் தன் வரிகளால் உணர்த்திய வரிகள் மேற்கொள் குறியிடப்பட்டு இக்கவிதையில் துணையாய் கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கு கௌதமர் செய்தது சரியோ தவறோ என ஆராயப் புகுந்தமை இக்கவிதையாய் விருந்தாகிறது.
    நேரே காணல் காட்சிப் பிரமாணம்
    தெரிந்தவை கொண்டு தெரியாதவை
    தெளிந்தே கூறுதல் அநுமானப்பிரமாணம்
    உயர்ந்தோர் கருத்தை ஏற்று
    ஒத்துக்கொள்ளல் ஆகமப்பிரமாணம்

    அநுமானப்பிரமாணம் அணைத்தே
    அழகின் தேவதைஅக லிகைவாழ்வில்
    அடைந்த நிலைமை ஆராயப்புகுந்தேன்.

    இராமாயணத்தில் இருபத்தெட்டுப் பாடலில்
    இணைந்துவந்த அகலிகைப் படலம்
    இதயத்தி லுறுத்திய இன்னலை
    இயம்ப விழையுமிக் கவிதை

    இந்திரன் ஓர் தேவன்
    இதயம்நிறை காமக் கள்வன்
    தந்திரமாய் அகலிகை வாழ்வை
    கல்லாகச் செய்தகயவ னென்பாருண்டு
    கயவன் இந்திரனோ கௌதமனோ!
    கலங்கு கிறதென்கவி யுள்ளம்

    கவின்மிகு அழகி அகலிகை
    காதல் கணவன் கௌதமன்
    கண்மூடி யிட்ட சாபத்தால்
    கடத்தினாள் கல்லாய்க் காலத்தை
    விதியென்று விட்டிட முடியுமா?
    சதியென்று சாடிவிட்டால் போதுமா?
    மதியிழந்த முனிவன் முனிவு
    கதியிழக்கக் காரணம் ஆகியது

    ஞானப் பார்வை கொண்டவராம்
    காலைக்கடன் முடிக்கச் சென்றாராம் - இந்திரன்
    வேளையுணர்ந்து நுழைந்த நிலை
    வேவு காணமுடியா ஞானமென்ன பெற்றார்?

    இந்திரன் இந்திரனாய் வந்திருந்தால்
    வந்திருப்பான் யாரென் றுணர்ந்து
    வஞ்சிக்கப் பட்டிடாள் வஞ்சியவள்.
    வந்தது இந்திரனாயன்று கணவனாயல்லவா!

    இம்மியளவு மிதையுணரா கௌதமன்
    இட்ட சாபமது பலிக்கலாமோ!
    முனிவையடக்க முடியா முனிவர்
    பெண்ணை அடக்கி யாண்டாரோ!

    'எல்லையில் நாணமெய்தி யாவர்க்கும் நகைவந்தெய்த
    புல்லிய பழியினோடும் புரந்தரன் போய்பின்றை
    மெல்லியலாளை நோக்கி ' விலைமகள் அனையநீயும்
    கல்லியல் ஆதி' என்றான் கருங்கலாய் மருங்கு வீழ்வாள்''

    விலைமகளென வாய் கூசாது விதந்துரைத்தல்
    பொறுத்திருக்க மாட்டார் உடலால் பிழைத்தார்.


    உடலால் கற்பிழந்தாள்
    உணர்வாள் கற்பிழந்தாளன்று
    பஞ்சகன்னியர் வரிசையில்
    நின்று நிலைப்பவள் அகலிகை
    நெஞ்சம் உணராது சாபமிட்ட
    வஞ்சகன் கௌதமன் குற்றமே!

    'புக்கு, அவளோடும், காமப்புதுமணமதுவின் தேறல்
    ஓக்க உண்டிருத்தலோடும், உணர்ந்தனள்;; உணர்ந்தபின்னும்,
    தக்கது அன்று' என்னஓராள்; தாழ்ந்தனள் இருப்ப, தாழா
    முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும், முடுகி வந்தான்.''

    அணைந்தபின் உணர்ந்தனள்
    உணர்ந்தபின் ஓராளென
    குற்றமுணர்த்திய அகலிகையுள்ளம்
    உணராநிலை யென்னென்பேன்
    உணர்வன்றி உறுதியில்லை
    உறுதியாய் உணர்ந்திருந்தாள்
    உதறித் தள்ளியிருப்பாள்.
    உண்மைக் கணவனேயாகில்
    விபரீதமாகிடும் எனத்
    தாழ்ந்ததன் தவறென்ன
    மனதால் தயங்கி
    முனிவர் வருகைக்காய்
    தாமதித்த அகலிகை குற்றவாளியா?

    முனிவ ரென்றால், ஒறுத்தல் குற்றம்
    முனிவரன்றன்றி முனிவர் காப்பரென
    முடிவுகொண்ட அகலிகை பாவியானாள்
    பழி சுமந்தாள் கல்லாய் சமைந்தாள்

    பாதிப்பும் பெண்ணுக்கே
    பழியும் பெண்ணுக்கே
    பக்கத்துணையே நம்பா
    துணையும் ஒரு துணையா?
    பாவி அகலிகையா?
    பழி தந்து தப்பிய இந்திரனா?
    சாபம் தந்த கௌதமனா?




               

    வெள்ளி, 28 அக்டோபர், 2011

    கம்பரும் அவர் வாழ்வியலும்



                     
    நாம் எமது ஐம்புலன்களினால் பெறுகின்ற இன்பத்தைவிட இலக்கிய இன்பம் பெருமை பெற்றது. அதை அப்படியே ஏற்று சுவைத்து இன்புறுவோரும் உண்டு. வாழ்க்கைக்குத் தேவையான மெய்யுணர்வைக் கொண்டு ஆராய்ந்து பார்த்துப் பொருள் கொள்வோரும் உண்டு. இலக்கியத்தில் இன்பம் பெறுவோர் கம்பரைத் அறியாதிருக்க மாட்டார்கள். கம்பன் கற்றவர்க்கும்;;;, கற்பனை சுவை சுவைத்து இன்புறுவோர்க்கும் சுவாரஸ்யமானவர் மற்றவர்க்குச் சிதம்பரசக்கரம் போலாவார்.  
       
                      இக்கம்பன் இலக்கியச்சுவை சில கண்டு இன்புற்று அவர் அகவாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றையும் எடுத்துக்காட்டி உலகுக்கு அறிவுரை பகரும் ஒரு கவிச்சக்கரவர்த்தி வாழ்வியலில் எவ்வாறு வேறுபட்டுள்ளார் என எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடையேயுள்ள வேறுபாடு பற்றியும் இக்காலப் பண்புகளுடன் இவை எப்படி ஒன்றுபடுகின்றன எனவும் சற்று சிந்தித்துப் பார்ப்போம். 
            
                     கம்பர் கவிச்சக்கரவர்த்தி என்று போற்றப்பட்டவர். நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளை அவர்கள் ''கம்பர் இலக்கியச்சுவை நுகரநுகர இன்பம் பயக்கும் உள்ளத்திலும் தேனூறும்'' என்று கூறுகின்றார். இக்கம்பர் தமிழ் இலக்கியவரலாற்றிலே சோழர்காலப்பகுதி என்று சொல்லப்படும் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு பிற்பகுதி முதல் பதினான்காம் நூற்றாண்டு வரையுள்ள காலப்பகுதியில் வாழ்ந்தவர். இக்காலப்பகுதியில் அரசியல் தழைத்தோங்கிய காலம், செல்வச்சிறப்பு மிக்க காலம். இக்கால வாழ்வியல் இலக்கியங்கள் போல் அக்காலத்தில் உலகியலைச் சிறப்பித்துக் கூறும் இலக்கியங்கள் தோன்றின. கம்பர் இயற்றிய காவியம் தன்னிகரில்லாத் தலைவனை எடுத்துரைப்பதாய் இருந்தமைக்கு இதுவே காரணமாய் இருந்திருக்க வேண்டும். ஒரு தலைவனுடைய வாழ்க்கைவரலாற்றை எடுத்துக் கூறுமுகத்தால் மக்களுடைய நல்வாழ்விற்குக்கு இன்றியமையாத அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருளையும் எடுத்துரைக்கும் இலக்கியம் காவியம் அல்லது காப்பியம் எனப்படுகின்றது. மக்களுடைய நல்வாழ்வுக்கு இன்றியமையாத அறிவுரைகளை இலக்கியச்சுவை சொட்டுச் சொட்ட இராம கதை மூலம் கம்பரால் கம்பராமாயணம் இயற்றப்பட்டது. சொல்நயம், ஓசைநயம், கற்பனைநயம் என பல நயங்கள் எல்லாம் தன்னகத்தே கொண்ட கம்பராமாயணம் ஒரு கடல். அதில் மூழ்கி எடுப்பவை எல்லாம் முத்துக்கள். பாக்களின் சுவைகள் பலாக்கனியின் தேன் சுவைகள். அதில் ஒரு அற்புத சொல்நயம் ஒன்றை ரசிப்போம்

    சொல்நயம்:

    அஞ்சு வணத்தின் ஆடையுடுத்தாள், அரவெல்லாம்
    அஞ்சு வணத்தின் வேகமிகுத்தாள், அருளில்லாள்
    அஞ்சு வணத்தின் உத்தரியத்தாள், அலையாரும்
    அஞ்சு வணத்தின் முத்தொளிர்ஆரத் தணிகொண்டாள்.

    இப்பாடலில் அஞ்சுவணம் என்னும் ஒரு சொல் வேறுவேறு பொருள் கொடுத்து நயம் காட்டுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. முதலாவதில் ஐந்து நிறங்கள், என்றும், அடுத்து அஞ்சும் உவணம் அதாவது அஞ்சுகின்ற கருடன் என்றும் பொருள் தந்தது. அடுத்து அம்சுவர்ணம் என அழகிய பொன் எனப் பொருள் கொண்டது. அடுத்து அம்சுவள் நத்தின் எனப் பிரிந்து அழகிய பெரிய சங்கு எனப் பொருள் கொள்ளப்பட்டது. இதன் பொருளை எடுத்துநோக்கினால், ஐந்து நிறங்களில் ஆடையுடுத்தாள், பாம்புகள் எல்லாம் கண்டு நடுங்கும் கருடனின் வேகத்தைக் கொண்டவள், அழகிய பொன் கொண்டு செய்யப்பட்ட மேலாடையை அணிந்தவள், கடல்நீரில் தோன்றிய அழகிய பெரிய சங்கிலுண்டான முத்துக்களினால் செய்யப்பட்ட ஒளி பொருந்திய மாலையை ஆபரணமாக அணிந்தவள் என இலங்காதேவியைக் கம்பன் சொல்நயம் மிக்க பாடல் மூலம் வர்ணிக்கின்றார். 

                   இதேபோல் இவர் காவியத்தில் வருகின்ற ஒரு பாடலில் படிக்கும் போதே ஓசைநயம் மிக்கு  இருக்கின்ற ஒரு பாடலை எடுத்துநொக்குவோம்.

    ஓசைநயம்:

    உறங்கு கின்ற கும்பகன்ன
      உங்கள் மாய வாழ்வெலாம்
    இறங்கு கின்ற தின்றுகாணெ
      ழுந்தி ராயெழுந் திராய்
    கறங்கு போல விற்பிடித்த
      கால தூதர் கையிலே
    உறங்கு வாயு றங்குவாயி
      னிக்கி டந்து றங்குவாய்

    கும்பகர்ணனை யுத்தத்திற்கு அழைக்கும் பாடலை ஒரு தடவை உச்சரித்துப் பாருங்கள். அதன் ஓசைநயம் நன்கு புரியும்.

    இவ்வாறு சுவைகள் எல்லாம் கொட்டிக்கிடக்கும் கம்பராமாயணத்தை இக்காலப்பகுதியிலும் கம்பன் கழகம் வைத்துப் பலவாறாகப் போற்றிப் பாடுகின்றார்கள். பலவாறாக ஆராய்ந்து இன்புறுகின்றார்கள். 

                இக்கம்பராமாயணம் தந்த கம்பர் சற்றுத் தலைக்கனம் மிக்கவர் என்று அறியப்படுகின்றார். சிலம்பி என்னும் ஒரு விலைமகள் கம்பனிடம் ஒரு கவி புனைந்து தரும்படிக் கேட்டாளாம். ஆயிரம் பொன் தருவாயா என்று கம்பர் அவளைக் கேட்டிருக்கின்றார். என்னிடம் ஆயிரம் பொன் இல்லை ஐந்நூறு பொன்னே இருக்கின்றது என்று சிலம்பி கூறியிருக்கின்றாள். அதை வாங்கிய கம்பர்

    தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே
    மண்ணாவ துஞ்சோழ மண்டலமே 

             என ஒரு வெண்பாவை அரைவாசியாகப் பாடிவிட்டு அதனை முடிக்காமல் சென்றுவிட்டார். இப்பரத்தை அப்பாடலைக் கொண்டு அடுத்தநாள் ஒளவையாரை கண்டபோது இப்பாடலை முடித்துத் தாருங்கள் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டாள். ஒளவையும்

    ...........................................................பெண்ணாவாள்
    அம்பொற் சிலம்பி யரவிந்தத் தாளணியும்
    செம்பொற் சிலம்பே சிலம்பு.

                          எனப்பாடி முடித்துப் பழங்கஞ்சி வாங்கிக் குடித்துவி;ட்டுச் சென்றாராம். இச்சம்பவத்தின் பின் என் சஞ்சலம் விரிகிறது. ஒரு இலக்கிய கர்த்தா தமிழின் மேல் கொண்டுள்ள பற்று பணத்திற்கு விற்கப்பட்டதா? பொன்னையும் பொருளையும் மன்னர்கள் அள்ளி வழங்குவதற்காக, அவர்கள் புகழை மிகைப்படுத்திப் புலவர்கள் பாடியிருப்பது யாவரும் அறிந்ததே. இந்நிகழ்வு கம்பரில் வைத்திருந்த எண்ணத்திற்குப் பங்கம் விழைவிக்கின்றது. 

                   ஒரு இடத்தில் இரட்டையர்கள் பாடுகின்றார்கள்

    குன்றுங் குழியுங் குறுகி வழிநடந்து
    சென்று திரிவதென்றுந் தீராதோ – ஒன்றுங் 
    கொடாதானைக் கோவென்றுங் காவென்றுங் கூறின்
    இடாதோ நமக்கிவ் விடர்.

                பரிசில்கள் யாதொன்றும் வழங்காத மன்னனை யாம் புகழ்ந்து பாடியதனாலேயே இவ்வாறான நிலைமை எமக்கு ஏற்பட்டது. அப்படியானால் பரிசில்கள் பெறுவதற்காக மன்னர்களைப் பலவாறாகப் புகழ்ந்து பாடிப் பொன்னையும் பொருளையும் பெற்றுக் கொண்டு சென்ற புலவர்கள் பாடிய பாடல்கள் அக்காலச் சூழலை எடுத்துக் காட்டும் கண்ணாடி என எப்படி நாம் எடுத்துரைப்பது. 

                       ஒளவை ஒரு பாடலிலே மன்னன் அதியமானைப் புகழ்ந்து பாடும்போது மாற்றரசனை வெட்டிவெட்டி மழுங்கேறிய கத்தியையுடைய மன்னனே என்று பாடுகின்றார், அவ் அரசனின் கண்கள்  தன்பிள்ளையைப் பார்த்தபோதும் சிவப்பாகவே இருந்தனவவாகப் பாடுகின்றார். அதாவது செறுவரை நோக்கிய கண் தன் சிறுவனை நோக்கியும் சிவப்பனவே  இவை போன்ற பாடலின் மூலம் போர் வெறியைத் தூண்டும் பாடலைப் பாடிப் பாடி வீர உணர்ச்சியை ஊட்டிப் பல உயிர்களைச் சூறையாடச் செய்து பரிசில்களைப் புலவர்கள் பெற்றுச் சென்ற செயலானது அப்புலவர்கள் பின் நீதிநூல்களைப் பாடியிருந்தும் அதன் பயன்தான் என்ன இருக்கின்றது என எண்ணத் தோன்றுகின்றது அல்லவா! அவ்வாறே இக்காலத்திலும் தமக்கு ஒரு சலுகை, புகழ், ஆதாயம் வரும் என நம்பிப் பலர் உணர்வு மிக்க வரிகளைப் பயன்படுத்திப் பாடல்கள் பாடுவதும், கவிதைகள் வடிப்பதும் நோக்கமாக்க கொண்டிருக்கின்றார்கள். 
      
                      அக்காலத்திலும் புலவர்களிடையே போட்டியும் பொறாமையும் இழையோடிக் காணப்பட்டன. ஒளவையும் கம்பரும், ஒட்டக்கூத்தரும் புகழேந்தியும் ஒருவருக்கொருவர் போட்டியாக வாழ்ந்துள்ளார்கள் என ஆதாரம் காட்டக்கூடியதாக இருக்கின்றது. அவ்வாறே இக்காலத்திலும் எழுத்தாளர்களிடையே போட்டியும் பொறாமையும், எழுத்துக்களிடையே காணப்படும் தவறுகளைச் சுட்டிக்காட்டமாட்டாமல், புகழ்வதும், தமிழின் இலக்கண மரபுகளுக்கு பங்கம் ஏற்படும் எழுத்துக்களைக் கண்டுகொள்ளாமல் தமிழாராய்வாளர் வாய் மூடியிருப்பதுவும் தமது பாராட்டுக்களுக்குப் பங்கம் வந்துவிடும் என்னும் சுயநலமே ஆகும். இச்செயலும் அக்காலப் புலவர்கள் பொன்னுக்கும் பொருளுக்கும் தூற்றிப் பாட வேண்டிய இடங்களில் போற்றிப் பாடிய செயலுக்கு ஒப்பாக அமைகின்றன. தவறுகளைச் சுட்டிக்காட்டும் தைரியம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும். அப்போதுதான் எழுத்துக்களில் தூய்மையைக் கொண்டுவர முடியும். செயலிலே நல்ல உணர்வுகள் விதைக்கப்படும். சுட்டிக்காட்டும் தவறுகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் மக்களிடம் ஏற்பட வேண்டும். மெய்மைக்கு இடமளிக்க நாமும் மெய்யாய் வாழவேண்டும். 

                       இனி விட்ட இடத்திற்குத் தொடருகின்றேன். உலகுக்கு நீதி சொல்லிய கம்பர் ஆயிரம் பொன்னுக்குத் தன் பாடலைப் பேரம் பேசி; அரைவாசி பணம் கிடைத்தமையால் அரைவாசிப் பாடல் பாடிச் சென்றிருக்கும் சம்பவம்; இலக்கிய கர்த்தாக்களுக்கு எவ்வாறு உணரப்படுகின்றது. சொல்லும் செயலும் ஒன்றானால் உலகம் சொல்லும் உன் பெயர் என்னும் ஒரு வாக்கை நான் எழுதியிருந்தேன். ஏனெனில் உலகுக்கு ஒரு செய்தியை நாம் சொல்லும் முன் நாம் அதுபோல் நடக்க வேண்டும். இதனையே பரிசுத்தம் என்பார்கள். இங்கு கம்பர் செயல் என்னைக் கலங்க வைக்கின்றது. இது பற்றி அறிந்த இலக்கியவாதிகள் உங்கள் கருத்துக்களை இதில் பதிவிடுங்கள்.

    திங்கள், 20 ஜூன், 2011

    அன்னைக்குப் பெருமை



                       

                                        சொந்தமென பந்தமென நானிருந்தேன்
                                        சொல்லாமல் பிரிந்து சென்ற மாயமென்ன
                                        கள்ளமென காதலது கலந்துவிட்டதால்
                                        கன்னியென போட்டுவைத்த கட்டுக்காவல்
                                        கடந்து சென்று கலங்கவைத்தாள் கன்னியவள்

    என் மனதிற்குள் பூட்டிவைத்த அழகுக் கல் ஒன்று, அன்பு என்னும் உப்புநீர் பட்டு கரையும், தாயன்பைப் புரிந்து கொண்டு பந்தத்தைத் தங்க வைக்கும் என்றெல்லாம் மனக்கணக்குப் போட்டுவைத்திருந்தேன். ஆனால், தன் மனக்கோட்டையினுள் சிற்பமாய்ச் செதுக்கி வைக்கவென மருமகன் என்று நான், அழைக்க வேண்டிய மன்மதன் கவர்ந்து சென்றுவிட்டான். எங்கே சென்றார்? என்ற எண்ணம் மட்டுமன்றி, எப்படி வாழ்கின்றார்? என்ற எண்ணமும் மேலோங்க ஆராயத் தொடங்கினேன். அடிக்கடி வந்து போகும் என் மகள் செல்லச் சிரிப்பும் செல்வாக்கு வாழ்வும் நிலைகுலைந்து தடுமாறி விடுமோ என்று தாயன்பு தவித்தது. என தோழி;யை வேவு பார்க்க அனுப்பினேன். சென்றவள் திரும்பி வரும் நாளை, எந்தன் மனமும் கண்களும் தேடி ஏங்கித் தவித்திருந்தன. 
                                     தோழியும் வந்தாள், என் காதில் தேனள்ளிச் சொரிந்தாள். படகுக் காரில் பறந்து வந்த என்மகள், பளிங்கு வீட்டினுள் நுழைந்தாளாம். விலையுயர்ந்த ஆடையை வீட்டாடையாய் உடுத்தினாளாம். அதிநவீன சமையலறையினுள் புழுவடிவாய் நழுவிவிழும் நூடில்ஸ்ஸை ஆயிரம் தடவை உருசி பார்த்து சமைத்தாளாம். உள்நுழைந்த கணவனை அன்பாய் அழைத்து அக்கறையாய்ப் பரிமாறினாளாம். அவனும் ஆஹா.... அபாரச்சுவை என்று கூறித் தித்திப்பாய் ஒரு முத்தமும் தந்தானாம் என மறைவினின்று பார்த்த என் தோழி மகிழ்வாய் என் காதில் தீஞ்சுவை தந்தளித்தாள். 
              
     விலையுயர்ந்த ஆடை, அதிநவீன சமையலறை, படகுக்கார், பளிங்குவீடு அத்தனையும் அவள் சீர் சிறப்புமிக்க வாழ்வைப் படம் பிடித்துக் காட்டியது. தன் கையாலே உணவைச் சமைத்து பரிமாறும் பக்குவத்தில் அவள் பொறுப்புணர்ச்சியும், அன்பும் ஆழமாய்த் தெரிந்தது. உணவின் சுவையை இரசித்த என் மருமகன் வெளிப்பாட்டின் தன்மையில் மனங்கோணாது என் மகளை என் மருமகன், தன் மனச்சிறையில் வைத்திருக்கும் மாண்பை எண்ணி மனமகிழ்ந்தேன். இதைவிட சீர்பெற்ற வாழ்வை எங்கே யான் என் மகளுக்குப் பெற்றுக் கொடுக்கப் போகின்றேன் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டு மனதார அவள் வாழ வாழ்த்துகளை வழங்கினேன்.
        இக்காட்சி ‚
                ''முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்
                  கழுவுறு கலிங்கம், கழாது, உடீஇ,
                  குவளை உண்கண் குய்ப்புகை கழுமத் 
                  தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
                  'இனிது' என் கணவன் உண்டலின்
                  நுண்ணுதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே''

    எனச் செவிலித்தாய் நற்றாய்க்குப் பகர்ந்ததாயான குறுந்தொகைப் பாடலை என் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியது.
               
     காதல் என்பதும், காதலனுடன் களவொழுக்கம் மேற்கொள்ளலும், உடன்போக்கும் எக்காலத்தும் நடைபெறும் நிகழ்வே. தக்க காதலனுடன் தன் மகள் மணாளனின் மணமென்னும் அரியணையில் சிறப்பாய் வீற்றிருந்தாள், சிந்தையில் சஞ்சலம் கொள்ளாது வாழ்த்துதலே அன்னைக்குப் பெருமை.




    பொருள் விளக்கம் அறிய விரும்பிய வாசகருக்காக:

    இப்பாடல் கூடலூர்கிழாரினால், குறுந்தொகையில் பாடப்பட்ட 167 ஆவது பாடல்


    விலைமதிப்பற்ற பட்டாடையை அணிந்த தலைவி, காந்தல் போன்ற மெல்லிய விரல்களால், தயிரைப் பிசைகின்றாள். புளிக்குழம்பு அடுப்பிலே வைக்கப்பட்டிருக்கின்றது. தன்னுடைய கைகளைக் கழுவாது தான் அணிந்திருக்கும் பட்டாடையில் கைகளைத் துடைத்தபடி தாளிதம் செய்கின்றாள். அடுப்பிலே வைக்கப்பட்ட குழம்பிலிருந்து வரும் புகை கண்களில் கண்ணீரை வரச் செய்கின்றது. இவ்வாறு செய்து பரிமாறப்பட்ட உணவை உண்ட கணவன் இனிது என்று தலைவியைப் பாராட்டுகின்றான். இதுவே பாடலின் பொருள். தனித்தனிச் சொல்லாக பொருள் கூறமுடியாது. ஏனெனில், அதற்குரிய நூல் என் கைவசம் இல்லை. நாம் கூட பொருள் அற்ற பாடப்புத்தகத்திலேயே விரிவுரையாளரின் கருத்தைக் கேட்டுப் படித்தோம். நான் கற்றதை நினைவுறுத்தி பொருள் விளங்காத சிலரின் வேண்டுகோளுக்கு இணங்க இணைத்திருக்கின்றேன்.


    வியாழன், 16 ஜூன், 2011

    கல்லாய்க் காலம் கழித்த அகலிகை குற்றவாளியா?


    கம்பராமாயணத்தில் பாலகாண்டத்தில் அகலிகை படலம் 25 பாடல்களில் கம்பரால் பாடப்பட்டது. அகலிகைமேல் ஆசை கொண்டு அவளை அநுபவிக்க விரும்பிய இந்திரன், அகலிகை கணவன் கௌதம முனிவர் காலைக்கடன் முடிக்க வெளியில் சென்ற நேரம் பார்த்து கௌதம முனிவர் போல் உருமாறி அகலிகை வீட்டினுள் நுழைந்தவிடுகின்றான். தன் இச்சையைத் தீர்க்க அகலிகையை அணைக்கின்றான். வந்தது கணவன் என்று நம்பிய அகலிகை அவனுக்கு இடம் தருகின்றாள். ஞான திருஷ்டியினால், நிலை உணர்ந்த கௌதமர் வீடு நோக்கி வரப் பூனையாக மாறிய இந்திரன் ஓடிமறைகின்றான். கௌதமரும் இந்திரனைச் சபித்து அகலிகை கல்லாக மாறச் சாபமிடுகின்றார். பிழை பொறுத்தல் பெரியோர் கடனே என வேண்டிக்கேட்ட அகலிகைக்கு ''இராமன் காற்துகள் பட்டு நீ மீண்டும் பெண்ணாகக் கடவது'' என சாபவிமோசனம் கொடுக்கின்றார். இதில் கம்பர் தன் வரிகளால் உணர்த்திய வரிகள் மேற்கொள் குறியிடப்பட்டு இக்கவிதையில் துணையாய் கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கு கௌதமர் செய்தது சரியோ தவறோ என ஆராயப் புகுந்தமை இக்கவிதையாய் விருந்தாகிறது.


    நேரே காணல் காட்சிப் பிரமாணம்
    தெரிந்தவை கொண்டு தெரியாதவை 
    தெளிந்தே கூறுதல் அநுமானப்பிரமாணம்
    உயர்ந்தோர் கருத்தை ஏற்று
    ஒத்துக்கொள்ளல் ஆகமப்பிரமாணம்

    அநுமானப்பிரமாணம் அணைத்தே
    அழகின் தேவதைஅக லிகைவாழ்வில்
    அடைந்த நிலைமை ஆராயப்புகுந்தேன்.

    இராமாயணத்தில் இருபத்தெட்டுப் பாடலில்
    இணைந்துவந்த அகலிகைப் படலம்
    இதயத்தி லுறுத்திய இன்னலை
    இயம்ப விழையுமிக் கவிதை

    இந்திரன் ஓர் தேவன்
    இதயம்நிறை காமக் கள்வன்
    தந்திரமாய் அகலிகை வாழ்வை
    கல்லாகச் செய்தகயவ னென்பாருண்டு
    கயவன் இந்திரனோ கௌதமனோ!
    கலங்கு கிறதென்கவி யுள்ளம்

    கவின்மிகு அழகி அகலிகை
    காதல் கணவன் கௌதமன்
    கண்மூடி யிட்ட சாபத்தால்
    கடத்தினாள் கல்லாய்க் காலத்தை
    விதியென்று விட்டிட முடியுமா?
    சதியென்று சாடிவிட்டால் போதுமா?
    மதியிழந்த முனிவன் முனிவு
    கதியிழக்கக் காரணம் ஆகியது

    ஞானப் பார்வை கொண்டவராம்
    காலைக்கடன் முடிக்கச் சென்றாராம் - இந்திரன்
    வேளையுணர்ந்து நுழைந்த நிலை
    வேவு காணமுடியா ஞானமென்ன பெற்றார்?

    இந்திரன் இந்திரனாய் வந்திருந்தால்
    வந்திருப்பான் யாரென் றுணர்ந்து
    வஞ்சிக்கப் பட்டிடாள் வஞ்சியவள்.
    வந்தது இந்திரனாயன்று கணவனாயல்லவா!

    இம்மியளவு மிதையுணரா கௌதமன்
    இட்ட சாபமது பலிக்கலாமோ!
    முனிவையடக்க முடியா முனிவர்
    பெண்ணை அடக்கி யாண்டாரோ!

    ''எல்லையில் நாணமெய்தி யாவர்க்கும் நகைவந்தெய்த
    புல்லிய பழியினோடும் புரந்தரன் போய்பின்றை
    மெல்லியலாளை நோக்கி ' விலைமகள் அனையநீயும்
    கல்லியல் ஆதி' என்றான் கருங்கலாய் மருங்கு வீழ்வாள்''

    விலைமகளென வாய் கூசாது விதந்துரைத்தல்
    பொறுத்திருக்க மாட்டார் உடலால் பிழைத்தார்.


    உடலால் கற்பிழந்தாள்
    உணர்வாள் கற்பிழந்தாளன்று
    பஞ்சகன்னியர் வரிசையில்
    நின்று நிலைப்பவள் அகலிகை
    நெஞ்சம் உணராது சாபமிட்ட
    வஞ்சகன் கௌதமன் குற்றமே!


    ''புக்கு, அவளோடும், காமப்புதுமணமதுவின் தேறல்
    ஓக்க உண்டிருத்தலோடும், உணர்ந்தனள்; உணர்ந்தபின்னும்,
    தக்கது அன்று' என்னஓராள்; தாழ்ந்தனள் இருப்ப, தாழா
    முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும், முடுகி வந்தான்.''

    அணைந்தபின் உணர்ந்தனள் 
    உணர்ந்தபின் ஓராளென
    குற்றமுணர்த்திய அகலிகையுள்ளம் 
    உணராநிலை யென்னென்பேன்
    உணர்வன்றி உறுதியில்லை
    உறுதியாய் உணர்ந்திருந்தாள் 
    உதறித் தள்ளியிருப்பாள்.
    உண்மைக் கணவனேயாகில்
    விபரீதமாகிடும் எனத்
    தாழ்ந்ததன் தவறென்ன
    மனதால் தயங்கி
    முனிவர் வருகைக்காய்
    தாமதித்த அகலிகை குற்றவாளியா?

    முனிவ ரென்றால், ஒறுத்தல் குற்றம்
    முனிவரன்றன்றி முனிவர் காப்பரென
    முடிவுகொண்ட அகலிகை பாவியானாள்
    பழி சுமந்தாள் கல்லாய் சமைந்தாள்


    பாதிப்பும் பெண்ணுக்கே 
    பழியும் பெண்ணுக்கே
    பக்கத்துணையே நம்பா
    துணையும் ஒரு துணையா?
    பாவி அகலிகையா?
    பழி தந்து தப்பிய இந்திரனா?
    சாபம் தந்த கௌதமனா?


                           

               

    சனி, 12 பிப்ரவரி, 2011

    மாண்டாள் மண்டோதரி



    கம்பனால் பலமாகப் பேசப்படாத பக்கம் மண்டோதரியாயினும், அந்தப் பெண்ணுக்கு விழைந்த பங்கமது போல் ஆண்மகன்களால் பல பெண்களுக்கு ஏற்படுகின்றன. மண்டோதரி என் செய்தால் தன் வாழ்விழக்க? கணவன் மறைந்த அக்கணமே தன் வாழ்வது இழந்தாள். அவள் என் குற்றம் செய்தாள்? அவள் வாழ்வில் என் குறை கண்டான் இராவணன்? இராவணனின் கற்பு மனையாளாய் வாழ்ந்தது குற்றமா? சூர்ப்பனகை மச்சாளாய் வாழப் புகுந்தது குற்றமா?

    அசுரத் தச்சன் அற்புதமாய்ச் செதுக்கிய
    அழகுச் சிற்பம் மண்டோதரி
    அன்பில் பண்பில் பாசத்தில் கற்பில் காதலில் 
    அளவிடமுடியா அறிவின் நுட்பமவள் 
    மணிவாசகரால் அழகமர் மண்டோதரியென
    மகிழ்ந்து பாடப்பட்டவள் 
    கற்புக்கரசி சீதைக் கொப்ப 
    கவின் அழகுப் பெண்ணரசி
    இந்திரனை வென்ற இந்திரசித்தை ஈன்றவள்.
    தவழ்கின்ற பருவமதில் கோள் அரியிரண்டு 
    பற்றிக் கொணர்ந்து பகைமூட்டி விளையாடிய 
    அசுரக் குமரனைப் பெற்றவள் – அவள் 
    அழகிலென் குறை கண்டான் இராவணன்
    அன்புச் சகோதரியில் கொண்ட 
    பாசத்தின் மோசத்தால் பாதை தடுமாறினான்
    பங்கம் விழைத்தான், மண்டோதரி வாழ்விழந்தாள்.


    சரம்பெய் தூணிபோல் தளிரடி
    கயல் மகிழ் கண்
    புயல் மகிழ் புரிகுழல்
    கருங்குழல் கற்றைப் பாரம்
    அகல் அல்குல் அன்றிச் சற்று 
    மருங்கலும் உண்டுண்டு – என்றே
    மங்காக் கவி புனைந்துரத்த மண்டோதரி 
    அழகிலென் மறுக் கண்டான் - தங்கை
    பாசத்தின் நேசத்தால் பங்கம் கொண்டான் - இராவணன்
    சீதை வாழ்வை சீர்குலைத்தான் 
    சீற்றம் கொண்டான் மண்டோதரி வாழ்விழந்தாள்


    மண்டோதரி அறிவின் புலம்பல் கம்பன்
    வண்ணச் சொல்லில் வடிவமைக்கையில்
    வெள் எருக்கஞ் சடை முடியான் வெற்பு எடுத்த
    திருமேனி, மேலும்கீழும்
    எள் இருக்கும் இடம் இன்றி, உயிர் இருக்கும் 
    இடம் நாடி, இழைத்தவாறோ?
    கள் இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை
    மனச் சிறையில் கரந்த காதல்
    உள் இருக்கும் எனக் கருதி, உடல் புகுந்து
    தடவியதோ ஒருவன் வாளி – என்று
    தெள்ளிய சொல்லால் கம்பன் வடிவமைத்தான்
       மண்டோதரி
    அறிவின் பெருமை எம் 
    அகக்கண்ணால் காணமுடிகிறதல்லவா! 
    கணவன் தன்மேற் கொண்ட காதலன்றி
    இராமன் வாளி ஏதும் கண்டறியாது 
    இராவணன் உயிருக்குத் தானே 
    உலை வைத்தென்றவள் கலங்கியதன்
    கருத்தொன்றி யாம் கண்டு கொண்டோமன்றோ!


    நினைத்ததும் மறந்ததும் இலா நெஞ்சினாளென
    நினைவிலென்று நிறுத்தி வைத்த கற்புநெறி
    நினைத்துநாம் பார்க்கையிலே நிந்தித்த இராவணனின்
    நிந்தனையால் நிலைகுலைந்த தவளன்றோ!


    அழகுநலம், அறிவுநலம், பண்புநலம்
    கற்புநலம் கொண்ட மண்டோதரி வாழ்வில்
    சூர்ப்பனகை மூட்டிய தீ 
    கொழுந்துவிட்டுப் பற்றியது – தங்கை
    பாசத்தின் நேசத்தால் பலர் வாழ்வில்
    பங்கம் விழைந்தது.


    பாசமது நேசத்தால் பலர் வாழ்வில் 
    நாசமது நெருங்குமெனில் - மனிதர்
    பாசமதை பரிசீலனை பண்ணவேண்டுமென
    பாரெல்லாம் முழங்க வேண்டும்.
    பாதகியர் பலரிருக்க அப்பாவிகள் பழியாவதை
    பாருக்கெல்லாம் உணர்த்த வேண்டும்.

    ஆணும் ஆணும் குழந்தை பெற விஞ்ஞானம் சாத்தியமாக்குமா?

      ஆண் பெண் என்னும் இரு பால் பிரிவினர் உயிரினங்களிடையே காணப்படுகின்றன . இவை பால் கவர்ச்சியின் மூலமும் இயற்கை அமைப்பின் மூலமும் ஒன்றோடு ஒன...