• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    செவ்வாய், 27 ஜூலை, 2021

    சுயம்

                                                 


    ஓடி வந்து தாயைக் கட்டிப் பிடித்து அழுகின்றாள் சத்யா. 😭😭😭விஜய் ரிவி சீரியலில் மூழ்கியிருந்த கலாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. “என்ன மகள்….. என்ன மகள்? என்ன நடந்தது. இஞ்ச வந்து பாருங்க. என்று கணவன் சிவத்தை அழைத்தபடி பதட்டத்துடன் மகளைப் பார்த்தாள், கலா. 😏

    புகையிரத நிலையத்தில் இருந்து ஓடியே வந்திருக்கின்றாள். அவள் வசிக்கும் பகுதியில் நாயோடு🐕 சிலர் நடப்பதைக் காணலாம். மற்றப்படி யாரும் வெளியே அநாவசியமாக திரிய மாட்டார்கள். பக்கத்து வீட்டுக்காரன் யார் என்று தெரியாதுதான் அவர்கள் வீதி மக்கள் வாழுகின்றார்கள். 

    வந்த சத்யாவின் கைகளில் இருந்து இரத்தம் 🩸வடிந்த வண்ணம் இருந்தது. என்ன இரத்தம் என்று பெரிதாகக் கத்தியபடி கைகளில் இருந்த இரத்தத்தைப் பார்க்கின்றாள். அந்த இரத்தம் சத்யாவின் கைகள் காயப்பட்டது போல் இருக்கவில்லை. 


    சத்தமாகக் கத்திய மகளைக் கலா ஒண்ணுமில்ல. ஒண்ணுமில்ல என்று அணைத்து கன்னங்களைத் துடைத்தபடி அமைதியடையச் செய்தாள். 
    ஓடி வந்த சிவமும் என்ன நடந்ததோ என்று பதட்டத்துடன் நின்றான். கண்களால் அவரை சத்தமில்லாமல் நிற்கச் செய்துவிட்டு மடியில் மகளைப் போட்டுத் தடவினாள் கலா. சத்யா ஒரு பெண்👩என்று செல்லமாக வளர்ந்தவள். 

    இரட்டைப் பின்னல் போட்டு வட்டமான கறுப்பு ஸ்ரிக்கர் பொட்டு வைத்த வட்ட பொலிவான முகமே அவளின் அடையாளம். கறுப்பும் இல்லை சிவப்பும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட பூசி மெழுகிவிட்டது போன்ற ஒரு பளபளப்பான உடல் நிறம். குறும்பான பார்வை. எதற்கும் கோபம் வராத சிரித்த முகம். பற்களால் உதட்டைக் கடித்து அவள் பார்க்கும் பார்வையிலே எத்தனை பெரிய பணக்காரனாக இருந்தாலும் காலடியிலே விழுந்து போவார்கள். 

    ஜெர்மனியில் வாழ்ந்தாலும் அடக்கமாகப் பிள்ளையை வளர்த்திருக்கின்றார்கள் என்ற பட்டத்தைத் தன் பெற்றோருக்கு வாங்கிக்  கொடுத்திருக்கின்றாள்.  பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பட்டத்திற்காகப் படித்துக் கொண்டு இருக்கின்றாள். பாடசாலைக் காலங்களில் கூட அந்தப் பின்னலும் நீண்ட காற்சட்டையும் கூடவே வரும். அலங்காரமில்லாத அழகான பெண்ணாக இருந்த அவளை அணைப்பதற்கு ஆண்வர்க்கம் போட்டி போடும். ஆனால், இந்த தனித்தன்மை மிக்க சத்யா வேறு ஒரு தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாள். எந்த இராஜகுமாரனை அவள் தேடுகின்றாள் என்பது யாருக்குத் தெரியும். 👫தாய் தந்தை சொற்களுக்கு மறு வார்த்தை கூறமாட்டாள். இந்த ஜெர்மனியில் இவ்வாறான  கலாசார பெட்டகத்தை யார் காணப் போகின்றார்கள் என்ற பெருமை பெற்றோருக்கு இருந்தது.  


    இந்த ஜெர்மனி மண்ணில் இப்படி ஒரு பெண்ணா என்று பார்க்கும் சில தமிழர்கள் வெட்கப்படுவதும் தாய் கலாவிடம் “என்ன கலா உன்ர பிள்ளைக்கு கொஞ்சம் நாகரிகம் சொல்லிக் கொடுக்கக் கூடாதா? நீயே பெரிய சினிமா அக்ரஸ் மாதிரி வேலைக்கு வாறாய். உன்ர மகள் என்ன நாட்டுப் புறமாய் இருக்கிறாள்” என்று நக்கல் அடிப்பவர்களிடம் மகளுக்குச் சாதகமாக கலா பேசினாலும் அவள் மனதுக்குள் கவலை எப்போதும் அப்பிக் கொண்டிருக்கும். சத்யாவிடம் வந்து “இஞ்ச பார் சத்யா. உன்னால எனக்கு எவ்வளவு வெட்கக் கேடு. இந்த ஜெர்மனியில உன்னப் போல யாரையாவது கண்டிருக்கிறீயா? பார்க்கிற சனமெல்லாம் கேலியாகக் கதைக்குதுகள்”😆 என்று கலா அடிக்கடி கேட்பதும். அதற்கு அவளென்ன உரிஞ்சு போட்டா ஆடுறாள். இந்த சனம் கதைக்கிறதக் கதைக்கட்டும். உனக்கு விசரென்றா அங்கால போ” என்று மகளுக்கு வக்காளத்து வாங்குவான் அப்பா சிவம். சத்யாவும் அம்மா இது என்ர ஸ்ரைல். விடுங்களேன். என்று சிலுப்பி விட்டுப் போய்விடுவாள். 

    அழுகை நின்றவுடன் ஆறதலாக கலா கேட்டாள் என்ன நடந்தது சத்யா? 

    ரெயினுக்குள் இருந்து நான் இறங்கும் போது ஒரு பெடியன் என்னை இறுக்கிக் கட்டிப் பிடிச்சான். நானும் விடச் சொல்லி மல்லுக் கட்டினன். என்ர தலையெல்லாம் இழுத்து சட்டையெல்லாம் இழுத்தான். பிடிச்சு தள்ளிப் போட்டு ஓடி வந்திட்டன் என்றாள். அப்ப கையில எப்படி இரத்தம் வந்தது. எனக்குத் தெரியா அம்மா என்றாள். “சரி சரி வேற யாரும் பார்க்க இல்லலையா. இல்லம்மா யாரும் இந்த ஸ்ரேசனில இறங்கல்ல”  என்றாள். “சரி மல்லுக்கட்டும் போது ஏதாவது கீறுப்பட்டிருக்கும். இனிமேல் தனிய வராத. அப்பா இல்லாட்டி நான் ஸ்ரேசனுக்கு ரெயின் வரும்போது வந்து நின்று கூட்டி வருவோம்” என்று சொல்லிவிட்டு எழுந்தாள். அன்றைய நாள் சத்யாவின் விசும்பலுடனும் கலாவின் என்ன நடக்கப் போகுதோ என்ற ஆராய்ச்சியுடனும், சிவத்தின் மகள் பற்றிய சிந்தனையுடனும் கழிந்தது. 

    ஒன்றும் பெதிதாக நடக்காதபடியால் அப்படியே நாட்கள் நகர்ந்தன. அன்று பல்கலைக்கழகம் போவதற்காக ஆயத்தமான சத்யாவின் கைப்பைக்குள் சாப்பாட்டுப் பெட்டியை வைப்பதற்காகக் கலா கைப்பையைத்  திறந்தாள். அதற்குள் ஒரு பொம்மை இருப்பதைக் கண்டாள். இது யாருடைய பொம்மையை வைத்திருக்கின்றாள் என்று சிந்தித்தபடி மகளிடம் 
    சத்யா இந்த பொம்மை யாருடையது? என்று கேட்ட போது “பொம்மையா? தெரியாதேம்மா. சிலவேளை இது மிசேலாட அக்காட மகளுடையதாக இருக்க வேண்டும் அம்மா. விளையாடுற நேரம் மறைத்து வைத்திருக்கிறேன் போல. அப்பிடியே கொண்டு வந்திட்டன் என்று நினைக்கின்றேன் என்றாள். 

    “நீ மறைச்சு வச்சது உனக்கே தெரியாது. நல்ல பிள்ள. இப்பிடி மறதி இருந்தால், நல்……லாப் படிப்பாய். சரி சரி அந்தப்பிள்ளையிட்டப் போய்க் கொடுத்திட்டு வா” என்றாள் கலா. 

    பல்கலைக் கழகத்தில் இருந்து மிசேலா வீட்டிற்குப் போய் வரும் எண்ணத்துடன் வீட்டை விட்டு போனாள். இன்று சிவம் வேலைக்கு விடுமுறை எடுத்திருந்த காரணத்தால் சத்யா இன்று பல்கழகத்திற்கு காரில் போனாள். மிசேலா வீட்டிற்கும் போய் வர வேண்டும் என்ற காரணத்தினால் நேரமாகும் என்று சத்யா பெற்றோரிடம் சொல்லிவிட்டுப் போனாள். சத்யாதான் வர தாமதமாகுமே எங்கேயாவது போவமா என்று கேட்டான் சிவம். ஓம் எங்கேயாவது நடந்து போட்டு வருவம் என்று கலாவும் சொல்ல. 

    இருவரும் அருகே இருந்த பென்ராத் அரண்மனைக்குப் போவோம் என்று முடிவெடுத்தார்கள். அதற்கு அருகாமையில் நடப்பதற்கு பச்சைப் பசேலென்ற மரங்களும், அடர்ந்த காடுகளும், புல்வெளியும், சுவாசிப்பதற்குச் சுத்தக் காற்றும் சுகமாக வீசும் ஒரு நடப்பதற்காக பகுதி(பார்க்) இருக்கின்றது. 

    வெயிலைக் கண்டால் பழமரம் தேடும் பறவைகள் போல சனக்கூட்டம் நிரம்பி வடியும். நண்பர்கள் கூட்டம், பிள்ளைகளும் பெற்றோரும் என்று அமளி துமளியாக இருக்கும். 

    இருவரும் தாமதமாக நடப்பதற்கேற்ற பாதணிகளை அணிந்து கொண்டு தயாராகிவிட்டார்கள். நேரம் 5 மணி ஒரு 2 மணித்தியாலங்களை அங்கு கழிக்கலாம். கோடைகாலத்தில் இருட்டுவதற்கு 10 மணியாகும். அதனால், இந்த நேரமே இதமான காலநிலையாக இருக்கும் என்று இருவரும் புறப்பட்டார்கள். 

    இருப்பது ஒரு பிள்ளை என்ற காரணத்தினால், அவர்கள் இருவருடைய எண்ணம் கவலை மகிழ்ச்சி எல்லாம் சத்யாவைச் சுற்றியே வரும். “26 வயதுக்கு வந்து விட்டாள். இனி ஒரு கல்யாணம் பேசி செய்ய வேண்டும். அவளாக ஒரு பெடியனைப் பார்த்தாலும் பரவாயில்லை. சனங்களும் எப்ப கல்யாணம் எப்ப கல்யாணம் என்று கேட்குதுகள் என்ன செய்வதன்று தெரியவில்லை. எங்களை நம்பி இருப்பவளுக்கு நாமாகத்தானே ஒரு மாப்பிள்ளை பார்க்க வேண்டும்” என்று கலாவே பேச்சைத் தொடங்கினாள். 

    “இந்தத் தமிழாக்கள் எங்க போனாலும் கல்யாணத்தை ஒரு பெரிய பிரச்சினையாகத் தான் எடுக்கிறார்கள். இங்க வந்தும் இந்தக் குணம் விட்டுப் போகுதில்ல. பிள்ளைகளுக்குப் பிடிச்சால் கட்டுங்கள் தானே. எதுக்குப் போட்டுக் கரைச்சல் கொடுப்பான். அதது நடக்க வேண்டிய நேரத்தில நடக்கும்” என்று அலுத்துக் கொண்டான் சிவம்.

    பலதும் பத்தும் கணவனும் மனைவியும் பேசுவதற்கு ஏற்ற நேரம் இந்த நடைப்பயிற்சியே. இயற்கை அழகு இரசிக்கப்படும், மக்களின் விமர்சனங்கள் உரைக்கப்படும், மெல்ல மெல்ல கையில் கொண்டு செல்லும் ஐஸ் உம் உதட்டை முத்தமிட்டு வாய்க்குள் கரைந்து போகும். 

    திடீரென்று கலாவின் பார்வை இரண்டு பெண் பிள்ளைகளில் மொய்த்தது. சிவத்தின் கையை இறுகப் பிடித்தாள் கலா. “இஞ்சப்பா அங்க இருக்கிற அந்த இரண்டு பிள்ளைகளையும் பாருங்கள். நம்மட சத்யா போல இருக்குதெல்லா”

    கண்களைச் சுருக்கிச் சந்தேகத்துடன் பார்த்தான் சிவம். ஓம் ஓம் சத்யாதான். என்ன அது அந்தப் பெட்டையைக் கட்டிப் பிடிச்சுக் கொண்டு இருக்கிறாள். மனம் படபடவென்று இருவருக்கும் தாண்டவமாடியது. விழித்த விழி நிறுத்தியது. 

    அருகே போவோமா? இல்லையா? சிந்தித்த இரு மனங்களும் போவோம் என்று முடிவெடுத்தன. அருகே இருவரும் வந்தார்கள். சத்யா பெற்றோரைக் கவனிக்கவில்லை. அவர்கள் கண்களை அவர்களால் நம்பவே முடியவில்லை. 

    அப்படி ஒரு கம்பீரத் தோற்றம். காலுக்கு மேல் கால்களைப் போட்டு இலேசாக மேல்காலை ஆடடிக் கொண்டிருந்தாள். கையிலே சிகரெட் புகையை இழுத்து உறிஞ்சியபடி புகையை தள்ளிக் கொண்டிருந்தாள். நேர் கொண்ட பார்வை. இடையிடையே தன் அருகே இருந்த பெண்ணுக்கு சில்மிசங்களைச் செய்தபடி சிரிக்க வைத்துக் கொண்டிருந்தாள். அவளும் சத்யா மடியில் விழுவதும் சத்யாவைக் கட்டிப் பிடிப்பதும் கொஞ்சலாகப் பேசுவதுமாக இருவரும் சுகமான மகிழ்வான ஒரு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்.  

    ஆடிப்போனார்கள் கலாவும் சிவமும். தம்முடைய கண்களை அவர்களால் நம்பவே முடியவில்லை. மிக வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள். அவசர அவசரமாக வீட்டுக்கு வந்தார்கள் 

    ஆச்சார அனுஸ்டானங்களைக் கடைப்பிடித்து, அடக்கவொடுக்கமாக, எங்களுக்கு அடிபணிந்து செல்லமாக வாழும் சத்யாவையா நாம் கண்டது?
    “ஏனப்பா… ஒருமுறை போய் கதைச்சுப் பார்த்திருக்கலாம். ஒருவரைப் போல 7 பேர் இருப்பார்களாமே. அதனால், சிலவேளை அது வேற பிள்ளையாக இருக்கும்” என்று தன்னுடைய மனதைச் சாந்திப்படுத்த கலா நினைத்தாள்.

    “சீச்சி அது நம்மட சத்தியாதான். இத எப்படி அவளிட்டக் கேட்பது? இது இருவருடைய மனப் போராட்டம். மௌனமாக நேரம் நகர்கிறது. வீட்டுக்குள் வருகிறாள் சத்யா. வரும்போதே அம்மா பசிக்குது. என்ன சாப்பாடு? என்று கேட்டபடி உள்ளே நுழைகின்றாள். குளியலறைக்குள் சென்று தன்னை சுத்தீகரித்தவளாய் சமையலறைக்குள் நுழைகின்றாள். 

    புட்டை தட்டிலே போட்டபடி “மிசேலா வீட்டிற்குப் போனாயா? என்று கலா கேட்டாள். 

    இல்லம்மா அவளை பென்ராத் பார்க்கில் சந்திச்சேன். பொம்மையைக் கொடுக்க நினைச்சன். அதை மறந்து போனன். உனக்கு எங்க அந்த எண்ணம்  இருக்கப் போகிறது என்று நினைத்த கலா. 

    ஆட்டிறைச்சிக்கறியை தட்டிலே போட்டபடி “நாங்கள் வந்தாமே. எங்களைக் கண்டியா? என்றாள். இல்லையே எங்கே பென்ராத்துக்கா? நான் காணல்ல. என்று சாதாரணமாகப் பதிலிறுத்தவளாய் அமைதியாகச் சாப்பிட்டு விட்டு அம்மா நீங்கள் பாத்திரங்களை வையுங்கள் நான் கழுவி வைக்கிறன். நீங்கள் நடக்கப் போனதால களைப்பாக இருக்கும் ரிவி பாருங்கள். நான் கிச்சனை துப்பரவாக்கிவிட்டு வருகிறேன் என்றாள்.

    குழம்பிய மனதுக்குள் எப்படித்தான் சமாதான நீர் பாய்ச்ச முடியும். நம்பிக்கை சிதறடிக்கப்பட்ட  வேதனையை என்ன சொல்லித் தீர்க்க முடியும். வெடிக்கப் போகும் கவலையை அடக்கி வைத்த கலா சமயலறையை விட்டு நகர்ந்தாள். 

    சிவத்தால் எதையும் கட்டுப்படுத்த முடியவில்லை. சத்யா உன்னட்ட ஒன்று சொல்ல வேணும். அம்மா சொன்னவவா?

    “என்னப்பா”
    உனக்கு ஒரு பெடியனை பார்த்திருக்கிறம். எங்கட குடும்பத்திற்கு ஏற்ற பிள்ளை. நீ சொல்லும் தராதரம் எல்லாம் இருக்கிறது. அவர்களுக்கு என்ன சொல்ல. 

    “பிரச்சினை இல்லப்பா. அடுத்த இரண்டு மாதத்தில் படிப்பு முடிகிறது தானே. உங்களுக்குப் பிடித்தால் எனக்கு சந்தோஷம். என்ன இந்த நாட்டு உருப்படாத கலாசாரத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பவர் என்றாலேயே கொஞ்சம் கஸ்டம்” என்றாள் சத்யா. 

    ஆச்சரியத்தின் உச்சிக்குப் போன சிவம், எதுவுமே பேசாமல் தலையாட்டிவிட்டு கலாவை ஓரக் கண்ணால் பார்த்தான். 

    கலாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஓங்கி அறைய வேண்டும் போல் இருந்தது. என்ன மாதிரிப் பேசுறாள். உள்ளம் வேதனையால் நிறைந்தது. இப்படி ஏமாற்றி எந்த இடத்தில் எங்களை மரியாதை கெடுக்கப் போகின்றாளோ! மகளிடம் கொண்டிருந்த நம்பிக்கை ஒரு நொடியில் சுக்குநூறாகிப் போனது. அவளைப் பார்க்கவே வெறுப்பாக இருந்தது. பொத்திப் பொத்தி வளர்த்து பொல்லாத குணங்களைப் பதிய வைத்து விட்டோமோ! சிதைந்து போயிருக்கும் தனது மனது என்ன தீர்வை எடுக்கலாம் என்று தெரியாது குழம்பியது. 

    சமையலறையைத் துப்பரவு செய்து விட்டு அம்மாவின் அணைப்பைத் தேடி நெருங்கினாள் சத்யா. கலாவின் கையைப் பிசைந்தபடி அவளை ஒட்டிக் கொண்டு கலாவின் கையை எடுத்து தன்னுடைய தோளின் மேலாக எடுத்துத் தன்னைக் கட்டிப் பிடிக்க வைத்தாள். சத்யா கை படும்போது கலாவுக்கு அருவருப்பாகவும் வெறுப்பாகவும் இருந்தது. அம்மா யூரியூப்பில் வடிவேல் பகிடி பார்ப்போமா என்றாள்.அம்மாவும் மகளும் வடிவேல் பகிடி பார்த்து சிரித்து மகிழ்வது வழக்கம். இன்றைய களைப்பை சிரிப்பால் துடைத்தெறியலாம் எ;னபது சத்தியாவின் நியாயம்.

    “எனக்கு எதுவுமே வேணாம். நான் படுக்கப் போறன்” என்றபடி அவள் கையை விலக்கிவிட்டு படுக்கைக்குப் போய்விட்டாள்.

    இந்த அம்மாக்கு என்ன நடந்தது! எப்பவும் இப்படி இருக்க மாட்டாவே! சத்யாக்கு ஆச்சரியம். தானே தனியாகத் தொலைக்காட்சியில் உறைந்தாள்.
    அடுத்தநாள் சிவம் வேலையில் இருந்து வந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தான். அழைப்பு மணி ஒலித்தது. கதவைத் திறந்மத போது ஜெர்மனிய பொலிஸ் வாசற்கதவடியில் வந்து நின்றது. உள்ளே வரலாமா? உங்களுடைய மகளுடைய ஒரு விடயம் பற்றிப் பேச வேண்டும் என்றார்கள். கலக்கத்துடன் உள்ளே வர சிவம் அனுமதி அளித்தான். கலாவும் அந்த இடத்திற்கு ஓடி வந்தாள்.  

    ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஜெர்மனிய பொலிஸ் ஒரு மாபெரும் கட்டுடலுடனும் உயரமான தோற்றத்துடனும் காணப்படுவார்கள். ஆசிய நாட்டு ஆடவர்கள் அவர்களின் நெஞ்சுப் பகுதியைத் தாண்ட மாட்டார்கள். பின்பக்கப் பாக்கெட்டுக்குள்  துப்பாக்கி சொருகப்பட்டிருக்கும். நிமிர்ந்த கட்டுடல். அவர்களைப் பார்க்க பயத்தைவிட பற்றே அதிமாக இருக்கும். பண்பாகப் பழகும் விதம் எல்லோருக்கும் பிடிக்கும் 

    துப்பாக்கி தூக்கிவரும் போராளிகளைக் கண்டு பாடசாலை மாணவர்கள் எல்லாம் படிப்பும் வேண்டாம். ஒன்றும் வேண்டாம் என்று அவர்கள் பின் பயிற்சி எடுப்பதற்காக ஓடினார்களே. அந்த இலங்கைப் போராளிகளைப் பார்த்தே இத்தனை ஆசைப்பட்டார்கள் என்றால், இந்த ஜெர்மனிப் பொலிஸ்காரரின் தோற்றத்தைக் கண்டால் எப்படி இருக்கும். உத்தரவில்லாமல் வீட்டுக் கதவை உடைத்தல், உள்ளே வரல் அவர்களுக்கு அனுமதி இல்லை. 

    உங்களுடைய மகளுடன் பேச வேண்டும் என்றாள். அவள் பல்கலைக்கழகம் போய்விட்டாள் என்று சிவம் கூறினான். ஈரக்குலை நடுங்குவது என்று சொல்வார்களே அந்த அனுபவத்தை அப்போது தான் கலா அனுபவித்தாள். 

    “உங்கள் மகள் ஒரு பையனைப் போட்டு அடித்திருக்கிறாள். விழுந்த ஒவ்வொரு அடியும் அவனை மரணத்திற்குக் கொண்டு போய் இருக்கும். நல்ல வேளை தப்பிக் கொண்டான். இன்று தான் கண்விழித்தான். உங்கள் விலாசத்தைப் பல்கலைக்கழகத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொண்டோம்.” என்றார்கள் 

    கலாவும் சிவமும் சத்தியாவின் நல்ல குணங்களை எல்லாம் எடுத்துச் சொன்ன போது எதுவுமே பேசாமல் சிரிப்பை மட்டும் உதிர்த்து விட்டு அவ வந்தவுடன் ஸ்டேசனுக்குக் கூட்டிக் கொண்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டுப் போனார்கள். 

    இது என்ன புதிய பிரச்சினை. ஒன்றே ஒன்றைப் பெற்றோம். அதுவும் இப்படிப் பிரச்சினையைத் தரும் பிள்ளையாகப் போய்விட்டதே. ஆண்டவா எங்களுக்கு ஏனிந்த சோதனை? இவளுக்கு என்ன குறை வச்சம். இப்படி எங்களை மாறி மாறி மரியாதை கெடுக்கிறாளே. இப்பிடி நோஞ்சான் மாதிரி வீட்டுக்குள்ளே இருப்பவளுக்குள் இத்தனை வீரமா? ஏதோ தவறு நடக்கிறது என்று சிவமும் கலாவும் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். 

    வீட்டுக்குள் நுழைகிறாள் சத்யா. கெதியாக பேக்கை வச்சிட்டு வா. பொலிசுக்குப் போக வேணும்.

    ஏனப்பா என்ன விசயம்? 

    அங்க வா அவங்க சொல்லுவாங்க. ஒன்றும் தெரியாத சின்னக் குழந்தையா நடிக்காத. ஆரொ ஒருவனைப் போட்டு அடிச்சிருக்கிறா என்றான் சிவம். 
    நானா…. விழுந்து விழுந்து சிரித்தாள். உங்களுக்கென்ன பைத்தியமா…..
    ஓம் எங்களுக்குப் பைத்தியம்தான். அங்க வந்து சொல்லு. கொஞ்ச நாளா உன்ர நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டுதான் வர்றம் என்றாள் கலா.
    அங்க என்ன கதை. கதையை வளர்க்கிறத விட்டுப் போட்டு இங்க வந்திருக்கிறார்கள். 

    சரி யாரைத் தேடுறதென்று நீ வந்து சொல்லு ….. வா…. என்ற படி கலா வெளியே வந்தாள்.

    கதவைப் பூட்டியபடி பின் தொடர்ந்தாள் சத்யா.

    பொலிஸ் நிலையத்தில் அதிகாரியின் முன் மூவரும் இருக்கின்றார்கள். விளக்கம் எடுக்கின்றார் அதிகாரி. ஆனால், எதுவுமே தனக்குத் தெரியாது என்று சொல்லிவிடுகின்றாள் சத்யா.

    ஆனால், கையில் காயத்துடன் சத்யா வந்த சம்பவம் கலாவின் மனதுக்குள்ளும் சிவத்தின் மனதுக்குள்ளும் சமாதியாகிறது. பிடிவாதமாகத் தனக்குத் தெரியாது என்றே முடிவெடுத்த சத்யாவைப் பொலிசார் தனியே விசாரிக்கப் பெற்றோரிடம் அனுமதி கேட்கின்றார்கள். 

    சில நிமிடங்களின் பின்
    உங்கள் மகளை நாளை ஒரு மனநல வைத்தியர் வீட்டிற்கு வந்து பார்ப்பார் என்று சொல்லி அனுப்பிவிடுகின்றார்கள்.

    திரும்பத் திரும்பத் சத்யாவை கேள்வி மேல் கேள்வி கேட்டு சிவமும் கலாவும் துளைத்தெடுத்தார்கள். அவளும் தெரியாது என்றே பதிலளித்தாள். 
    அடுத்தநாள் வந்த மனநல டாக்டர் தனியே நீண்ட நேரம் பேசுகின்றார். நாளை மீண்டும் வருவதாகச் சொல்லிவிட்டுப் போகின்றார். ஒருவாரத் தொடர் கவனிப்பின் இறுதியில் சிவத்தையும் கலாவையும் தனியே தன்னுடைய அலுவலகம் வரும்படி டாக்டர் அழைப்பு விடுகின்றார். 

    இருவரும் டாக்டரிடம் செல்கின்றனர். டாக்டர் தனக்கு முன்னே இருக்கும் இருக்கையைக் காட்டுகின்றார். இருவரும் அமருகின்றனர். தொடர்ந்து டாக்டர் கூறிய விடயங்கள் இருவருக்கும் தூக்கி வாரிப் போட்டது. கலாவின் கண்ணீரை அடக்குவதற்கு அவளால் முடியவில்லை. 

    பல்கலைக்கழக வளாகத்தில் சத்யா தனியாக ஒரு பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருப்பது வழக்கும். தன்னுடைய நண்பர்கள் யாருடனும் பேச மாட்டாள். தனியே ஒரு சிறு குழந்தையாக மாறித் தன் கற்பனையில் உருவாக்கிய சிறு பெண்பிள்ளையுடன் இணைந்து விளையாடுவதாக பாவனை பண்ணி விளையாடிக் கொண்டிருப்பாள். அவளுக்குச் சிறுவயதில் இருந்தே சேர்ந்து விளையாடுவதற்கு ஒரு சகோதரர் இல்லாத காரணத்தினால் அவளுக்குள்ளே இருந்த குழந்தை மனம் அவளைக் குழந்தையாகவே மாற்றிவிடுகிறது. அவளுக்கு முன்னே யாரோ ஒரு குழந்தை கற்பனையில் இருக்கும். அக்குழந்தை எப்போதும் அவளுடன் பேசுவதும் விளையாடுவதும் வழக்கம்.

    ஆனால், அவள் பல்கலைக்கழக வகுப்புகளுக்கு ஒழுங்கு தவறுவதில்லை. படிப்பில் எந்தவித குழப்பமும் செய்ததில்லை. இவளுடைய இந்தப் பழக்கம் ஏனைய மாணவர்களுக்கு சந்தேகமாக இருந்தாலும் அவர்கள் அதைப் பெரிது படுத்துவதில்லை. பல்கலைக்கழகம் வருவதும் பொவதுமாக இருப்பதனால், பெரிய நட்பு வட்டம் அவளுக்கு இருந்ததில்லை. வகுப்பு முடிந்தவுடன் வீட்டுக்கு வந்து விடுவாள்.

    இது என்ன புதுக் குழப்பம் என்ற படி மனதால் தளர்ந்து போனார்கள் சிவம் தம்பதியினர். எத்தனை விந்துக்களை விரயம் செய்திருக்கிறேன். எங்களுடைய சுகத்திற்காக சத்யாவைத் தனியாக வாழவிட்டு நோயாளியாக்கியிருக்கின்றோம் என்று சிவத்தின் இதயம் குற்ற உணர்ச்சியால் துடியாய்த் துடித்தது. கலாவோ கற்பனை பண்ணிப் பார்க்க முடியாத கவலையில் உறைந்து போயிருந்தாள்.

    நா தளதளக்க “ இந்தப் புதிய பிரச்சிளை என்ன டாக்கடர்” என்றார் சிவம். 
    உங்கள் மகளுக்கு வந்திருப்பது பல ஆளுமைக்கோளாறு என்று சொல்லப்படும் மல்ரிபில் பேர்சனலிற்றி டிசோர்டர் personality disorder என்னும் நோய். அவளைத் தனியே வளர்த்திருக்கிறீர்கள். உறவுகளோ சொந்தங்களோ இல்லாத இடம். சுற்றவுள்ள குடியிருப்பாளர்களோடு தொடர்பில்லை. நண்பர்களுடன் பழகுவதற்கு விடவில்லை. இந்த நிலையில் அவள் ஆணாகத் தன்னைக் கற்பனை பண்ணிக் கொள்ளுகின்றாள். அந்த சமயத்தில்  ஆணுக்குரிய அத்தனை வலுவும் அவளிடம் வந்து சேரும். தனக்கு ஏற்ற ஒரு பெண் துணையாக  மிசேலாவுடன் பழகுகின்றாள். மிசேலா அவளுடைய காதலி. என்று சொன்னவுடன் ஸ்தம்பித்துப் போகின்றார்கள் இருவரும். 

    கலா உதடுகளைக் கடித்தபடி தலையை மேற்புறம் நோக்கிப் பார்க்கின்றாள். வடிகின்ற கண்ணீருக்கு அடைகட்ட எத்தனிக்கின்றாள். கண்ணீரோ மடைதிறந்து தாரைதாரையாக வடிகின்றது. எப்படியெல்லாம் என் மகளைத் தவறாக நினைத்திருக்கின்றேனே. என்று மனத்தின் ரணம் வலியை மிதமாக்குகின்றது. 

    “காதலியைக் காப்பாற்றுவதற்காகவே அந்தப் பையனைப் போட்டு புரட்டி எடுத்திருக்கின்றாள். அவனும் சத்யாவின் அழகுக்கு அடிமையாகி, அவளை அடையவதற்கு மிசேலா மூலம் முயற்சி செய்திருக்கின்றான். மிசேலா சத்யாவைக் காதலிப்பதை அறிந்து மிசேலாவைக் கோபத்தில் தாக்கிய போதே அவனைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியிருக்கின்றாள். சத்யாவை அவன் அணைக்க முற்படும்போது நிலைமை பாரதூரமாக மாறியிருக்கின்றது. சத்யாவினுள் இருந்த ஆண்மை மிக வேகமாகத் தொழிற்பட்டதனால், அவன் காயப்பட்டு உணர்விழந்து போயிருக்கின்றான். நிலமைக்குத் திரும்பிய சத்யா ஓடி உங்களிடம் வந்திருக்கின்றாள்.

    நானும் பொலிஸாரும் செய்த தீவிர ஆராய்ச்சிகளின் பின் தான் உண்மைகளைக் கண்டுபிடித்தோம். உண்மையில் சத்யாக்குத் தன்னுடைய நிலைமை பற்றித் தெரியாது. 3 விதமான மனிதர்களாக வாழுகின்ற சத்யா தான் வாழுகின்ற வாழ்க்கைக்கு உண்மையாகவே வாழுகின்றாள். ஆணாக வாழுகின்ற போது ஆணாகவே மாறுகின்றாள். பெண்ணாக வாழும்போது அடக்கமான பெண்ணாகவே வாழுகின்றாள்.  ஒரு வாழ்க்கைக்குள் ஒரு வாழ்க்கை அவளுக்குக் குறுக்கிடுவது இல்லை. 

    மனம் தான் எல்லாவற்றிற்கும் காரணம். அது தனக்கேற்றது போல் உருவம் எடுக்கும்தன்மை உள்ளது.

    அப்பாவி சத்யாவின் இந்த நோய்க்கு ஒரு விதத்தில் நீங்களும் குற்றவாளிகளே” என்று கூறிய டாக்டர்.

    “என்னுடைய பயிற்சிக்குத் தவறாது சத்யாவை அனுப்புங்கள். அவளைக் கவனமாகக் கையாள வேண்டியது உங்கள் பொறுப்பு” என்று கூறி கைகுலுக்கி டாக்டர் இருவரையும் வீட்டிற்கு அனுப்புகின்றார். 

    இப்போதுதான் இருவரும் சத்யா வாழ்க்கைப் பாதையின் படிகளை உன்னிப்பாக நினைத்துப் பார்க்கின்றனர். உண்மைகள் புலப்படுகின்றன. 


     

    வெள்ளி, 23 ஜூலை, 2021

    நாட்டரியல்

     


    தமிழ் வான் அவை மாதம் தோறும் நடத்துகின்ற இணைய வழி பன்னாட்டு இலக்கியச் சந்திப்பு இம்மாதம் 25.07.2021 அன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை இந்திய நேரம் 17.30 க்கும் ஐரோப்பிய நேரம் 14.00 மணிக்கும் நாட்டரியலில் நம்பிக்கைகள் பற்றிப் பேசப்பட இருக்கின்றது. 

    இந்நிகழ்வில் நாட்டுப்புற நம்பிக்கைகள் என்ற தலைப்பில் பேராசிரியர் இரா.காமராசு அவர்களும் சங்க இலக்கியத்தில் நம்பிக்கைகள் என்ற தலைப்பில் முனைவர் சக்தி ஜோதி அவர்களும் உரையாற்ற இருக்கின்றார்கள். 

    இதைவிட தத்தம் பகுதிகளில் காணப்படுகின்ற நம்பிக்கைகள் பற்றி பலர் உரையாற்ற இருக்கின்றார்கள். இந்த நம்பிக்கைகள் சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனவா, மூட நம்பிக்கைகளை ஏற்படுத்துகின்றனவா என்று ஆராய இருக்கின்றோம் 

    அனைவரும் கீழே தரப்பட்டுள்ள இணைப்பை அழுத்தி Zoom ஊடாக இணைந்து கொள்ளுங்கள். அனைவரையும் தமிழ் வான் அவை அன்புடன் அழைக்கின்றது 

    நன்றி 


    Zoom-Meeting beitreten

    https://us02web.zoom.us/j/2509770769?pwd=M0kyckx0aHdVL0xNeGR4MnRzYkVGdz09


    Meeting-ID: 250 977 0769

    Kenncode: 246810



    திங்கள், 19 ஜூலை, 2021

    மனம்



    வீட்டில் ஒரு தூசி கூட கண்ணில் தெரியக்கூடாது. அவள் வந்தால் திட்டித் தீர்த்துவிடுவாள். அழகாக வைத்து அவளுடைய கட்டிமுத்தம் ஒன்று வாங்கிவிட வேண்டும். அவளுக்கு வீடு அழகாக இல்லாவிட்டால் தாம்தோம் என்று குதிக்கத் தொடங்கிவிடுவாள் என்று தனக்குள்ளாகவே பேசிக் கொண்டு வீட்டைத் துப்பரவு செய்கின்றான் இராகுலன். அலங்கோலமான கட்டில், தொலைக்காட்சிப் பெட்டி முன்னேயுள்ள மேசையில் சிப்ஸ், நட்ஸ் என்று நொறுக்குத் தீனிகள், பூமரங்கள் தண்ணீரின்றி வறண்டு போய்க் கிடக்கின்றன. சமையலறைப் பாத்திரங்கள் கழுவாமல் போட்டது போட்டபடி கிடக்கின்றன. கழுவும் மெஷினினுள் இருக்கும் பாத்திரங்களை வெளியே எடுத்துவிட்டு மற்றைய பாத்திரங்களை உள்ளே வைப்பதற்குப் பொறுமையின்றி பாத்திரங்கள் நிரம்பிக் கிடக்கின்றன. 


    சுவேதா தன்னுடைய பிறக்கப் போகும் பிள்ளைக்காக ஒரு அறையை அழகுபடுத்தி இருந்தாள். அந்த சொர்க்கபுரிக்குள் இராகுலனை வரவிடமாட்டாள். ஏனென்றால், பிள்ளை பிறந்தபின்தான் அதனை அவன் பார்க்க வேண்டும் என்பது அவளுடைய அன்புக் கட்டளை. அதனால், அந்த அறையைத் துப்பரவு செய்ய அவன் விரும்பவில்லை. ஏனென்றால், அதனை அவள் வந்து பார்த்துக் கொள்வாள் நான் கால் வைத்தால்தானே அது அழுக்காகும். நான் தான் அதைப் பார்த்ததே இல்லையே என்று நினைத்தான். 


    பொதுவாகவே படுத்த படுக்கையைக் கூட மடித்து வைக்க நேரம் இல்லாமல் இராகுலன் ஓடிக் கொண்டிருப்பான். இன்று சுவேதா வரவிற்கான மகிழ்ச்சியில் வேலைக்கு விடுப்பு எடுத்து பரபரப்பாக துப்பரவு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.


    அனைத்தையும் பார்த்துப் பார்த்து தூசி தட்டுவதும். பூ மரங்களுக்கு வேளாவேளைக்கு நீர் ஊற்றுவதும். இராகுலனுக்கு வேளை தவறாமல் அவனுக்குப் பிடித்தவைகளையெல்லாம் சமைத்துப் போடுவதும், பணிவிடைகள் எல்லாம் முடிப்பதும் என்று எல்லாவற்றையும் தன் தலைமேல் போட்டுச் செய்வாள் சுவேதா. பெண்கள் தம்மில் கணவர் தங்கி இருக்க வேண்டும் என்று நினைப்பது காலம் காலமாக நடைபெற்று வரும் ஒரு வழக்கமாக இருக்கிறது. இது பெண்களின் ஒரு சாமார்த்தியம் என்றே சொல்லலாம். 


    காதலித்துத் தான் திருமணம் செய்து கொண்டார்கள். ஆஹன் பல்கலைக்கழகத்தில் கட்டிடப் பொருளியலாளராக இராகுலனும் மின் பொருளியலாளராக சுவேதாவும் கற்றுக் கொண்டிருக்கின்ற போது காதல் மலர்ந்தது. அங்கங்கள் எப்படி இருந்தால் அழகு என்று நினைக்கின்றோமோ அப்படியே அத்தனை அழகையும் அள்ளிக் கொண்டு வலம் வந்த சுவேதாவை இராகுலன் கண்கள் கட்டிப் போட்டன. 


    முதன் முதலாக இரயிலிலேதான் அவளைச் சந்தித்தான். நேரெதிரான இருக்கைகளில் அமர்ந்திருந்தார்கள். முன்சனில் இருந்து வந்த இரயிலில் அவள் தன்னுடைய மடிக்கணனியில் ஏதோ எழுதுவது சிந்திப்பதுமாக இருந்தாள். இடையில் மன்ஹைம் இரயில் நிலையத்தில் இருந்து இராகுலன் இரயிலுக்குள் ஏறினான். அவளுக்கு அவனென்று நிச்சயப்படுத்தி இருந்ததனாலோ என்னமோ சந்தர்ப்பம் வசமாக அவளுக்கு எதிரான இருப்பிடம் இராகுலனுக்குக் கிடைத்தது. 


    இவனும் அன்றைய வகுப்புப் பாடத்தை இரைமீட்டத் தொடங்கினான். நீண்ட பயணம் இரயில் தரிப்பிடத்தின் போது கதவு திறக்கப்பட குளிர் காற்று முட்டி மோதிக் கொண்டு உள்ளே நுழைகின்றது. 

    தொங்கவிடப்பட்டிருந்த தன்னுடைய ஜெக்கட்டை எடுக்க முயலுகின்றாள் சுவேதா. அந்த நேரத்திலே மடிக்கணனி மடியை விட்டு நிலம் நோக்கித் தாவுகிறது. திடீரென இராகுலன் கைகள் மடிக்கணனியைத் தாங்கி தன் ஆயுளை முடித்துக் கொள்ள இருந்த மடிக்கணனிக்கு வாழ்வளிக்கின்றான். பூரித்துப் போனாள் சுவேதா. எத்தனை பொக்கிசங்களை அதற்குள் போற்றிப் பாதுகாத்து வைத்திருக்கின்றாள். தன்னுடைய உயிரையே அவன் காப்பாற்றியது போன்ற உணர்வு ஏற்பட்டது.


    எப்போதும் யாருடனும் அளவுக்கு அதிகமாகப் பேசாத சுவேதா


    “டங்க, டங்க சூன் (நன்றி, மிக்க நன்றி) என்றாள்”


    “கைன் புரொபிலம்( பறவாயில்லை). நீங்கள் ஆஹன் யூனிவர்சிட்டியா? என்று பேச்சைத் தொடங்குகின்றான். 


    “ஆமாம். எப்படி அறிந்து கொண்டீர்கள்”


    “எல்லாம் ஒரு ஞானம் தான்”


    “ஓஹோ. உங்களுக்கு ஞானம் இருக்கிறதா?


    “நீங்களும் ஆஹன் யூனிவர்சிட்டியா? 


    “ஓ உங்களுக்கும் ஞானம் இருக்கிறது போல்”


    “இதற்கொன்றும் ஞானம் தேவையில்லை. முகத்திலேயே எழுதி ஒட்டியிருக்கிறது” என்று புன்முறவலுடன் கூறினாள்.


    இவ்வாறு தொடர்ந்த உரையாடல் இரயில் பயணத்தைச் சுவாரஸ்யமா மாற்றியது. காலப்போக்கில் பலவித தொலைபேசி தொடர்புகளிலும் சந்திப்பிலும் இருவரின் நட்பும் காதலாக மலர்ந்தது. சுவேதாவினுடைய இரசனைகளும் இராகுலனுடைய இரசனைகளும் ஒன்றாக இருக்கும் போது அவர்களுக்கிடையில் அறிவும் அன்பும் காதலும் பெருகிக் கொண்டே போனது. அது திருமணத்தில் முடிந்தது. சொந்தமாக ஒரு வீடு வாங்கி அதில் ஆடம்பரமாகவும் அன்பாகவும் வாழ்ந்தார்கள்.


    வீட்டுக்கு வந்தால் வேலை விடயங்கள் பேசக்கூடாதென்பது இருவரினதும் எழுதப்படாத சட்டம். சாதாரண குடும்ப நிகழ்வுகளே பரிமாறப்படும். அணைப்பும் கலகலப்பான பேச்சுக்களும் வீட்டுச் சுவர்களிலே பட்டுத் தெறிக்கும். இரண்டு வருடத் திருமண வாழ்க்கையில் வேலை நேரம் தவிர இருவரும் பிரிந்து வாழ்ந்ததே இல்லை. 


    தம்முடைய திட்டங்களில் ஒன்றான விடுமுறைக்கு துபாய், தாய்லாந்து என்று சுற்றித் திரிந்தார்கள். எல்லாம் முடிந்து அடுத்த திட்டமான குழந்தை பெறுவதிலும் வெற்றி கண்டு சுவேதா 6 மாதங்களாக இராகுலனின் கருவைச் சுமக்கின்றாள். இந்த சூழ்நிலையில் இராகுலனின் மகிழ்ச்சி எப்படி என்று சொல்ல முடியாத அளவிற்கு ஆர்ப்பாட்டமாக இருந்தது.


    அன்று ஒருநாள் 


    ~~சிநேகிதனே சிநேகிதனே. ரகசிய சிநேகிதனே சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவிகொடு சிநேகிதனே|| இந்தப் பாடலை தனது தொலைபேசியில் ஒலிக்கவிட்டாள் பிரேமா. தொலைக்காட்சியின் முன்தான் அமர்ந்திருந்தாள்.  பக்கத்தில் இருந்த சோபாவில் தீனா அமர்ந்திருந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான். கடைக்கண்ணால் அவளைப் பார்த்தான். தன்னை அழைப்பதற்குத்தான் இப்படி சமிக்ஞையை சுவேதா அனுப்புகின்றாள்  என்று உணர்ந்து மெல்லிய புன்னகையை உதிர்த்தபடி அவளுக்கு அருகே வந்தான். அவன் தன்னருகே வந்து அமர்ந்தவுடன் தன்னுடைய போர்வையை எடுத்து அவனையும் சேர்த்துச் சுவேதா போர்த்தினாள். இறுக்கமாக அவளை அணைத்தான் இராகுலன்.


    “ஐயோ உங்கள் மகன் என்னை இடிக்கிறான். தள்ளி இருங்கள்” என்று செல்லமாகக் கடிந்து கொண்டாள். 


    “அப்ப என்னத்துக்கு இந்த அம்மா எனக்கு சமிக்ஞை கொடுத்தாவாக்கும்”


    “இராகுலன் நாளைக்கு ஹில்டாக்கு வெடிங். என்ன டெர்ஸ் போடுறதென்று தெரியல்ல. போய் செலக்ட் பண்ணி வச்சிடுங்களேன். அதுக்கு பொருத்தமா உங்களுக்கும் எடுத்து வையுங்க. பிறகு அது சரியில்ல இது சரியில்ல என்று என்னைத் தொல்லை கொடுக்க வேண்டாம். வாகனத்திற்கு ரின்கள் கட்ட வேண்டும் இல்லையா அதையும் பிற்றர்(தயவுசெய்து) எடுத்து வையுங்க செல்லம்” என்று சொல்லிக் கண்ணடித்தாள்.


    “பிள்ளை வயிற்றில வந்ததும் வந்தது. என்னை நல்லா வேலை வாங்கிறா. பார்ப்பம் பார்ப்பம்” என்று சொல்லி எழுந்து சென்றான் இராகுலன். 


    திருமணவீட்டுக்குப் போகின்றவர்களின் வாகனத்திற்கு ஜெர்மனியில் ஒரு விசேடம் இருக்கிறது. பதிவுத் திருமண அலுவலகத்தில் இருந்து அவர்களுடைய வாகனத்தின் பின்புறம் வீதியில் இழுத்துக் கொண்டு வரும்படி ரின்கள் கட்டுவார்கள். அது பார்ட்டி நடைபெறும் இடம் வரைத் தொடரும்.


    அதேபோல் இன்னும் ஒரு சலுகையும் இருக்கிறது. ஜெர்மனி வீதிகளில் வாகனங்களில் தேவையில்லாது ஹோர்ன் அடிக்கக் கூடாது. முக்கியமான தேவைக்கு மட்டுமே அடிக்க வேண்டும். இல்லாவிட்டால் உதைப்பந்தாட்டத்தில் ஐரோப்பிய ரீதியில் அல்லது உலக உதைப்பந்தாட்டப் போட்டியில் வெற்றியீட்டினால், தொடராக வாகனத்தில் கொடியைக் கட்டிக் கொண்டு விசிரிகள் ஹோர்ன் அடித்துக் கொண்டு வருவார்கள். அடுத்து யாருக்காவது திருமணம் என்றால் மட்டுமே தொடர்ந்து வாகனத்தில் வரும் விருந்தினர்கள் ஹோர்ன் அடித்துக் கொண்டு வருவார்கள். ஹோர்ன் சத்தம் தொடராகக் கேட்கின்றது என்றால் யாருக்கோ திருமணம் என்று அறிந்து விடலாம். 


    அதனாலேயே ஹில்டா கல்யாணத்திற்கு ரின்கள் எடுத்து வைக்கும் படி சுவேதா கூறினாள்.  


    அடுத்த நாள் காலை கல்யாணத்திற்குப் போகும் முன் சுவேதா அழகாகத் தன்னை அலங்கரித்தாள். “அப்…பா  சுவேதா என்ன இது….. பிள்ளை வயிற்றில் வளர வளர உனக்கு இளமை அளவுக்கதிகமா கூடுது. நீயெல்லாம்  இப்பிடி மேக்கப் பண்ணாத தாயே. எனக்குப் பயமா இருக்கு” என்றான் இராகுலன்.


    “நான் அழகாக இருந்தால் உங்களுக்குத் தானே லெவல்” 


    “கேட்க நல்லாத்தான் இருக்கு உன்ர கதை. ஜெர்மனியில 2 வருஷம் குடும்பங்கள் தாக்குப் பிடிக்கிறதே அபூர்வம். இதில நீ வேற கண்ணுக்கு குளிரா இருக்கிறா”


    “சரி நான் வரல்ல. நீங்க மட்டும் போங்க”


    “வேண்டாம் வேண்டாம் ராசாத்தி. ஆர் அங்க என்னை எதிர்பார்க்கப் போறாங்க? வோ இஸ்ற் சுவாதி? வோ இஸ்ற் சுவாதி? (எங்கே சுவாதி) என்று உன்னத்தான் தேடுவாங்க. ஒரு பேச்சுக்கு சொன்னா அதப் பெரிசா எடுப்பியா செல்லம்” என்று அவளை அணைத்தான் இராகுலன். 


    சிரித்தபடி இருவரும் வாகனத்தினுள் ஏறினார்கள். அப்போது ஐயய்யோ கெசெங்க்கை (அன்பளிப்பு) மறந்து விட்டேனே. பொறுங்கள் எடுத்துக் கொண்டு வாறன்; என்று வீட்டுக்குத் திரும்ப நினைத்தவளை இராகுலன் மறித்தான். “பொறு சுவேதா வந்தபிறகு திரும்பிப் போக வேண்டாம் இரு நான் போய் எடுத்து வருகின்றேன் என்று இராகுலன் போய் எடுத்து வந்தான்”


    “இது என்ன சாத்திரம். நீங்களும் தானே வர்றீங்க இராகுலன்”; என்றாள். 


    “பறவாயில்ல. எனக்கு என்ன நடந்தாலும் பறவாயில்ல. உனக்கு ஒன்றும் நடக்கக் கூடாது” என்றான். பெரிதாக இந்த நம்பிக்கைகள் எல்லாம்  இராகுலன் மனதில் எடுப்பது கிடையாது. ஆனாலும் சுவாதி விடயத்தில் எல்லாவற்றையும் கடைப்பிடிப்பான். அந்த அளவில் அவளில் பைத்தியக் காதல் வைத்திருந்தான். 


    வாகனம் கிளம்பியது. பயணக்களைப்பை மறக்க இருவரும் சிரிப்பும் கும்மாளமுமாகப் போய்க் கொண்டிருந்தார்கள். திடீனெ நெடுஞ்சாலை வழியிலே ஒரு டுமுறு (பாரிய வாகனம்) ஒன்று இவர்களின் வாகனத்துடன் பெரிய சத்தத்துடன் மோதியது. இராகுலன் இருக்கையின் முன்னிருந்த பலூன் ஸ்டியரிங்கை விட்டு வெளியே வந்தது. சுவேதா பக்கக் கண்ணாடி, முன் கண்ணாடி எல்லாம் உடைந்து அவள் பக்கக் கதவும் நொறுங்கிப் போனது. 


    இருவரும் உணர்விழந்தனர். அந்த இடத்திற்கு எப்படி யார் அழைத்து மருத்துவ அவசர ஊர்தி அங்கு வந்ததோ தெரியாது. இருவரையும் ஏற்றிக் கொண்டு மருத்துவசாலை நோக்கிப் பறந்தது வாகனம். சுக்குநூறாகிய வாகனத்தை நெடுஞ்சாலையிலிருந்து அகற்றும் பணியில் பலரும் ஈடுபட்டனர். 


    போகும் போதே இருவருக்கும் சிகிச்சை அளித்தபடி மருத்துவ அவசர ஊர்தி துரித வேகத்தில் பறந்தது. இதன் அலாரச் சத்தம் கேட்டவுடன் முன்னே செல்லும் வாகனங்கள் எல்லாம் வழிவிட்டு ஒதுங்கின. மருத்துவமனை அடைந்தவுடன் ஸ்ரெச்சரில் இருவரையும் ஏற்றினர். அப்போது உணர்வு திரும்பிய இராகுலன் அடுத்த ஸ்ரெச்சரில் தூக்கிப் போகும் சுவேதாவைக் காண்கிறான். அவளுடைய கைகள் கீழே தொங்கிக் கொண்டு கிடந்தன. தன்னுடைய மோதிரம் இரத்தக் கறை படிந்து சிவப்பு நிறமாக காட்சியளித்தது. அவளைக் கூப்பிட வாயைத் திறந்து கத்தினான் வார்த்தைகள் வெளிவர முன் கண் மூடிவிட்டான்.


    இப்போது கண் விழித்துப் பார்க்கின்றான். கழுத்துப் பட்டி அணியப்பட்டிருந்தது. அடிபட்ட வலி உடலெங்கும் பிரதிபலித்தது. அங்கங்கே கட்டுக்கள். எழும்ப எத்தனிக்கின்றான். முடியவில்லை. அயர்ந்து மீண்டும் உறக்கம். ஆழ்ந்து பல மாதங்கள் உறங்கிப் போனான். இவ்வாறு நடந்த விபத்திலிருந்து இராகுலன் சுகமாகி வீடு திரும்பி வந்து விட்டான்.


    இன்று சுவேதா வருகின்றாள் என்னும் பூரிப்பில் இவ்வாறு துப்பரவு தொழிலில் ஈடுபட்டிருக்கும் போது அழைப்புமணி அடிக்கின்றது. அவனுடைய சிநேகிதன் ஸ்ரெபான் வந்திருந்தான். வந்திட்டியா நான் ரெடி. எல்லாம் கிளீன் பண்ணிட்டன். ஹொஸ்பிட்டலுக்குப் போவோமா?


    “ஒவ்வொரு நாளும் தானேடா போறாய். இன்டைக்கு வேணாமே. 


    “நைன் (இல்லை) இண்டைக்கு எப்படியும் அவளைக் கூட்டிற்றி வரவேணும். எத்தனை நாளைக்கு ஏமாற்றுவார்கள். அந்த ஹொஸ்பிட்டலில ஏதோ பிரச்சினை இருக்குது. போனால் என்னை ரெஸ்ட் பண்ணுறாங்கள். நீயும் வந்து பேசாமல் நிற்கிறாய். எப்பிடியும் இன்றைக்குக் கூட்டிவந்து அவளை வீட்டில வச்சு ரீற்மன்ட் கொடுப்பம். இல்லாட்டி டுசில்டோப் கிரன்கன் ஹவுசுக்கு(மருத்துவமனை) கூட்டிக் கொண்டு போவம்” என்று கூறியபடி ஜக்கட்டை அணிந்தான் இராகுலன்.


    வழமைபோல் இருவரும் வாகனத்திற்கு செல்வதற்குக் கதவைத் திறந்தபோது ஸ்ரெபானி கதவின் முன்னே வந்து நின்றாள். எனக்கு இப்போது நேரம் இல்லை. ஸ்ரெபானி. திரும்பத் திரும்ப என்னுடைய நேரத்தை எடுக்காதீர்கள். இன்றைக்கு சுவேதா வந்துவிடுவாள். பிறகு பேசுவோம். பின்னேரம் வாருங்கள் என்று சொல்லியபடி வாகனத்திற்குள் ஏறினான் இராகுலன். ஸ்ரெபான் பின் தொடர்ந்தான். அவர்களுக்குப் பின்னே ஸ்ரெபானி தன்னுடைய வாகனத்தை எடுத்துக் கொண்டு வருவதை இராகுலன் கண்டு விட்டான். 


    “எதுக்காக இவ பின்தொடருகிறா  ஸ்ரெபான்”


    “தெரியாது இராகுலன் சிலவேளை அவளும் சுவோதவைப் பார்க்கப் போகிறாவோ? என்று ஸ்ரெபான் கூறினான்.


    மருத்துவமனைக்குள் இராகுலன் நுழைந்ததும் இவனைக் கவனித்த அலுவலர்கள் இராகுலன் என்ன பேசப் போகின்றான் என்று தெரிந்தவர்கள் போல் விருந்தினர் அறைக்குள் இருக்கச் சொன்னார்கள். அதற்குள் அங்கு வந்த ஸ்ரெபானி


    “இராகுலன் இன்றைக்கு எப்படியும் சுவேதாவைப் பார்க்கலாம். வாருங்கள் போவோம் என்றாள். ஏன் இந்த ஹொஸ்பிட்டலில் இல்லையா மாத்திப் போட்டார்களா? இதெல்லாம் எனக்கு அறிவிப்பது இல்லையா? என்று கேட்டான் இராகுலன்”


    பொதுவாகவே ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளித்துப் பலனளிக்கவில்லை என்றால், அந்த நோய்க்கு விசேடமான மருத்துவமனைக்கு நோயாளியை மாற்றுவது வழக்கம். அதனால் அங்கு தன்னைக் கேட்காமல் மாற்றிவிட்டார்கள் என்று ஆத்திரம் கொண்டு மருத்துவமனை அலுவலகத்திற்குப் போவதற்கு  கோபத்துடன் எழுந்தான் 


    “பொறுங்கள் இராகுலன். என்னோடு வாங்கள் போய்ப் பார்ப்போம். இப்போது கோபம் கொண்டு ஒன்றும் ஆகப் போவது இல்லை” என்று கூறி அவனை ஸ்ரெபானி அழைத்தாள்.


    “இராகுலன் எமக்கு இன்றைக்கு எப்படியும் சுவேதாவை வீட்டுக்குக் கூட்டிப் போக வேண்டும் இல்லையா? அதால ஸ்ரெல்லா சொல்றதுபோல கேட்போம் என்றான். 


    வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு ஸ்ரெபானியின் வாகத்தில் மூவரும் பயணமானார்கள். வாகனம் சுடலைக்குள் நுழைகிறது. மூவரும் இறங்கினார்கள். அங்கே சுவேதாவின் சமாதிக்கு முன் இராகுலனைக் கொண்டு நிறுத்தினார்கள். 


    “பாருங்கள் இராகுலன் இங்கேதான் சுவேதா படுத்திருக்கிறாள். சுவேதா இறந்து போனாள். இதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்” அவளுடைய பெயர் எழுதப்பட்ட சமாதியைக் காட்டுகின்றார்கள். 


    அங்கு தோற்றம் மறைவு எழுதப்பட்ட சமாதி அவன் கண்முன்னே தெரிகிறது. விபத்து நடந்த இடத்தில் அங்கங்கள் ஒவ்வொன்றாக தெரிவு செய்து எடுக்கப்பட்ட பெட்டியைத்தான் நண்பர்கள் உறவினர்களால் பார்க்க முடிந்தது. குற்றுயிராய்க் கிடந்த இராகுலனுக்கு அவள் உருவம் எல்லாம் பிரமையே. மருத்துவசாலையில் எழுந்தமை எல்லாம் பிரமையே. அவன் மூளை தானாகத் தயார் பண்ணிய பிரமையே அவளைக் கண்டமை. அவள் இருக்கின்றாள் என்று மருத்துவமனையில் வாதிடுவது போன்ற சகல நிகழ்வுகளும் பிரமை பிரமை. இதனை மருத்துவர்கள் நிறுவி நாளாகி விட்டது. 


    ஆனால், அவனுடைய மனம்!!!!!!!!!!!!!!


    “மைன்கொட் (என்ர கடவுளே) எத்தனை தடவைதான் எனக்கு இதை நிறுவப் பார்ப்பீர்கள். நீங்கள் எத்தனை தடவை சொன்னாலும் நான் இதை நம்பப் போவதில்லை. அந்த ஹொஸ்பிட்டலில் அவளை வைத்து என்ன செய்கின்றார்களோ தெரியாது. எல்லாரும் சேர்ந்து நாடகம் ஆடுறீங்களா? இப்ப ரெண்டில் ஒன்று பார்க்க வேணும். இன்றைக்கு சுவேதாவைத் தர வேண்டும். இல்லையென்றால் இந்த மருத்துவமனைக்கு வழக்குப் போடுவேன்” என்று கூறியபடி வாகனத்துக்குள் போய் ஏறி இருந்து விட்டான். 


    ஸ்ரெபான் கண்களில் இருந்து கண்ணீர் அவனை அறியாமலேயே ஆறாகப் பெருக்கெடுத்தது. தன்னுடைய நண்பனை எப்படியும் சுவேதா நஜனைவுகளில் இருந்து மீட்டுவிட வேண்டும் என்று ஸ்ரெபான் துடியாய்த் துடித்தான்.  


    எத்தனையோ முனைப்புக்களில் ஈடுபட்ட போதும் மனநில வைத்தியர் ஸ்ரெபானியினால் இராகுலனுடைய மூளைக்குச் சுவேதா இறந்த செய்தியைப் பதிய வைக்க முடியவில்லை. ஹோமா நிலையில் இருந்து எழுந்த இராகுலன் இன்னும் சுவேதா மருத்துவமனையிலேயே இருக்கின்றாள். அவர்கள் அவளை வைத்து ஏதோ செய்கின்றார்கள் என்று தான் நினைக்கின்றான். 






      


    சனி, 10 ஜூலை, 2021

    ஒன்றாக வாழுகின்றோம். ஒன்றாகவா வாழுகின்றோம்


    எழுதப்படாத சட்டங்கள், மனிதாபிமானங்கள், விட்டுக்கொடுப்புகள், பிறரை மதிக்கும் பண்புகள் போன்ற காரணங்களினால், பல அமைப்புகள், பல குடும்பங்கள், பல நண்பர்கள் காலவேறுபாடுகள் அற்று ஒன்றாக வாழுகின்றார்கள். ஆனால், ஒன்றாகவா வாழுகின்றார்கள்? என்ற கேள்வியுடன் இக்கட்டுரை ஆரம்பிக்கின்றது.

    ஐந்து விரல்களும் ஒன்றாக இருப்பதில்லை என்று சொல்லுகின்றார்கள். ஒன்றாக இல்லை என்பதற்காக அதனை வெட்டி எறிந்துவிட முடியாது. அதனால், சமாளித்து சகித்துக் கொண்டு போக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. ஒன்றை உயர்த்திப் பார்க்க ஆசைப்படுகின்றோம். வேண்டிய சக்தியை தாரை வார்க்கின்றோம். ஆனால், அங்கு ஒத்துழைப்புக்கள் கிடைக்கவில்லை என்றால், வைத்த பற்றும் இணைந்து பயணித்த அனுபவங்களும் எம்மை மௌனமாக வழிநடத்த அடுத்தவர் கண்களுக்கு ஒன்றாக வாழுகின்றோம். ஆனால், மனதால் ஒன்றாகவா வாழுகின்றோம்? 

    ஒரு குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள். கணவன் மனதுக்கு ஏற்ற மனையாளாக வாழ மனைவிக்குத் தெரியவில்லை. அவன் விருப்பு வெறுப்புகளுக்குத் தன்னை அர்ப்பணிக்கத் தெரியவில்லை. அவனைப் புரிந்து நடக்கத் தெரியாது போகத் தானும் வாழாது கணவனையும் மகிழ்ச்சியுடன் வாழ விடாது மனைவி வாழுகின்றாள். இதேபோல் மனைவியின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கத் தெரியாத மனிதனாக கணவன் வாழுகின்ற பட்சத்தில் போட்டிபோட்டுப் போராட்ட வாழ்க்கையைக் காலம் முழுவதும் இருவரும் வாழ்கின்றனர். குடும்பத்தை வழிநடத்த புரிந்துணர்வுகளும் விட்டுக் கொடுப்புகளும் தேவை. பெற்றெடுத்த வாரிசுகளின் நலன், சமூகப் பார்வை போன்றவை எழுதப்படாத சட்டங்களாக இருக்க குடும்பங்கள் ஒன்றாகக் காட்சி தருகின்றன. ஒன்றாகவா வாழுகின்றார்கள்? 

    அக்கால இலக்கியங்களில் காணப்படும் இவ்வாறான நிலைமைகளை எமக்குக் கற்றுத் தந்திருக்கின்றன. பரத்தை ஒழுக்கம் நாடி கணவன் செல்கின்றான் என்று தெரிந்தும் மனைவி அவனுடன் ஒன்றாகவே வாழுகின்றாள். கணவனைப் பரத்தை வீட்டிற்குக் கூடையில் சுமந்து சென்ற மனைவியின் கதை எமக்கு எதைப் போதிக்கின்றது? கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்னும் தத்துவத்தையா? இல்லை. மனதை அடக்கிக் கணவன் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதையா? வாழ வழியில்லாத பேதையர்கள் வாழ்க்கையில் ஒன்றாக இல்லை ஒன்றாகவே வாழுகின்றார்கள் என்பதையா? 

    “மந்தப் பரத்தையோடும் வருமொழியாரோடும்”  சேர்ந்து கோவலன் தன் பொருள் இழந்தான். மாதவி சேர்க்கையின் பின் கோவலன் வணிகர் கடமையாகிய பொருளீட்டல் தொழிலைச் சரிவரச் செய்யவில்லை. மன்னர்களுக்கே கடன் கொடுக்கக் கூடிய தனவந்தனாக இருந்த கோவலன் தன்னுடைய செல்வங்களையெல்லாம் இழக்கின்றான். 

    பாடமை சேக்கையுட் புக்குத் தன்பைந்தொடி 

    வாடிய மேனி வருத்தங்கண் டியாவுஞ்

    சலம்புணர் கொள்கைச் சலதியொ டாடிக் 

    குலந்தரு வான்பொருட் குன்றந் தொலைந்த 

    இலம்பாடு நாணுத் தருமெனக் கென்ன

    என்று கூறிக் கோவலன் கண்ணகியைச் சரண்புகுகின்றான். இத்தனையும் அறிந்திருந்தும் கண்ணகி கோவலனுக்காக வாழ்ந்தாள். கோவலனைப் பிரிந்த வருத்தம் இருந்தாலும் அறச் செயல் செய்ய வேண்டும் என்ற காரணத்தினால், வாழ்ந்தாள்.

    அக்காலப் பெண்கள் அறம் செய்வதாக இருந்தாலும் கணவன் மனைவியுடன் இணைந்துதான் செய்யவேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் இருந்தது. இராமனும் சீதையும் வனவாசம் செய்த காலகட்டத்தில் இராமன் இல்லாத சமயத்திலே அறச்செயலில் ஈடுபட்ட காரணத்தினால், இராவணனால் சீதை கடத்தப்பட்டாள் என்று உரைக்கிறது இராமாயணக் காட்சி. 

    காரைக்காலம்மையார் சிறந்த இலக்கியவாதியாக இருந்த போதிலும் கணவன் பரமதத்தனுடன் ஒன்றாக வாழ்ந்தாள். சிவபக்தர்களைப் போற்றும் பண்புள்ளம் கொண்ட காரைக்காலம்மையார் மாங்கனி விடயத்தில் கணவன் அறியாது சிவபக்தனுக்கு உணவளித்த அறச் செயலை மறைக்க இறைவனை வேண்டி மாங்கனி பெற்றாள். பரமதத்தனுடன் வாழ்ந்தாலும் மனதளவில் அவள் வாழ்க்கை எதனை நாடியது? ஒன்றாகவே வாழ்ந்தாள். ஆனால், ஒன்றாகவா வாழ்ந்தாள்?

    புத்தரைத் திருமணம் செய்த போதே தன்னை விட்டுப் பிரியப் போகின்ற ஒரு ஞானியுடனேயே நான் குடும்பம் நடத்துகின்றேன் என்று யசோதரை தெரிந்துதான் புத்தருடன் வாழ்ந்தாள். புத்தரை குடும்ப வாழ்க்கைக்குள் அமிழ்த்திவிட முயன்றாள். ஆனால், புத்தர் ஒன்றாக வாழ்ந்தார். வாழ்க்கை முழுவதும் துறவற சிந்தனையுடன் வாழ்ந்தார். ஒன்றாகவா வாழ்ந்தார்? இறுதியில் 29 வயதில் யசோதரையை விட்டு சென்றார். 

    நிடத நாட்டு மன்னன் நளனை கலி பிடித்து ஆட்டுகின்றது. அரசாட்சி துறந்து தமயந்தியுடன் கானகம் புகுந்தான். ஒன்றாக வாழந்தான். ஆனால், தன்னோடு தன் மனைவி தமயந்தி கானகத்தில் அவலங்களை அனுபவிப்பதை நாளும் பொழுதும் அவதானித்தான். கலியின் சூட்சியினால் தன் ஆடை இழந்த வேளையிலே தன் மனைவியின் ஆடைக்குள் தன் மானத்தைக் காப்பாற்றினான். இதனால், நடுநிசியில் ஆடையைக் கிழித்து இரவில் தனியே அவளை விட்டுச் சென்றான். 

    “கானகத்துக் காதலியைக் காரிருளில் கைவிட்டுப்

    போனதுவும் வேந்தர்க்குப் போதுமோ – என்று 

    சாற்றினான் அந்தவுரை தார் வேந்தன் தன்செவியில்

    ஏற்றினான் வந்தான் எதிர்”

     தான் இல்லாவிட்டால், தன் மனைவி தன்னுடைய தந்தையிடம் சென்றுவிடுவாள் என்று எண்ணம் கொண்டான். இங்கு கானகத்தில் நளன் தமயந்தியின் அர்ப்பணிப்பு எடுத்துக் காட்டப்படுகின்றது. 

    இராமகிருஸ்ண பரஹம்ஸர் தன் மனைவி சாரதா அம்மையாருடன் ஒன்றாக வாழ்ந்தார்.  காமத்தின் சாயல் கூட இல்லாது இருவரும் ஒன்றாகவே வாழ்ந்தார்கள். 

    இவற்றைவிட மன்னன் தலைமையில் அவைக்களப் புலவர்களாக கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, ஒளவையார் சீத்தலைச் சாத்தனார் போன்ற புலவர்கள் ஒன்றாகவே அவையிலே வீற்றிருந்தார்கள். ஆனால், ஒன்றாகவா இருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் இடையில் புலமைப் போட்டிகளும் அரண்மனை பஞ்சாயத்துகளும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன.


    தவறு கண்ட இடத்தில் எழுத்தாணியால் தன் தலையிலே குத்திக்கொள்ளும் சீத்தலைச்சாத்தனார் போலே எத்தனையோ பேர் பொருந்தாத உறவுக்குள், அமைப்புக்குள், குடும்ப வாழ்க்கைக்குள் புகுந்து தம்மைத்தாமே காயப்படுத்திக் கொண்டு ஒன்றாகவே வாழுகின்றார்கள். இது எழுதப்படாத சட்டம். 

    july2021 வெற்றிமணி வெளியீடு 

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...