• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 28 மார்ச், 2020

    ஜேர்மனிய கொரொனா நிலவரம்



    விதியே விதியே தமிழச்சாதியை என்ன செய்யக் கருதியிருக்கிறாய்? என்று பாரதியார் கேட்டதுபோல், இன்று உலகநாடுகள் எல்லாம் விதியே விதியே உலக நாடுகளை என்ன செய்யக் கருதியிருக்கிறாய்? என்று கேட்பது போலாயிற்று. சற்று பின்னோக்கி சென்ற ஆண்டு இறுதிப் பகுதியை நினைத்துப் பார்ப்போம் ஓட்டம், ஓட்டம், ஓட்டம். விழாக்களும், பண்டிகைகளும், கொண்டாட்டங்களும், கூத்தும் கும்மாளமும், நாளாந்த வேலைகளும், காண்பதை எல்லாம் வாங்கி வந்து வீட்டிற் குவிப்பதும், என்று மனிதன் ஆடிய ஆட்டமெல்லாம் அடங்கி தலையில்(மூளைக்குள்) தட்டி அடங்கிக்கிட என்று மனிதனை அமர்த்திவிட்டாயிற்று.


    என்னை நினைத்துப் பார் என்று இயற்கை அடிக்கடி சமிக்ஞை காட்டியது; புரிந்ததா? Greta Thunberg என்னும் சிறுமி நாடு நாடாய் கூச்சல் போட்டாள். Friday for Future என்னும் பதாதைகளுடன் மக்களைத் திரண்டி எங்கள் எதிர்காலத்தை நீங்கள் அழிக்கப் போகின்றீர்கள் நாங்கள் தான் போராட வேண்டும் என்று போராடினாள். ஐரோப்பிய ஒன்றியம் வருடக்கணக்கில் சூழல் மாசடைதலைத் தடுக்க கூட்டம் போட்டுப் பேசிக்கொண்டேதான் இருக்கின்றார்கள். இந்த நிலையில் ஒரு சிறிய கண்ணுக்குத் தெரியாத 60 – 140 நானோ மீட்டர் அளவுடைய கிருமி இயற்கையை பாதுகாத்து விட்டது. மனிதனை அடக்கி விலங்குகளை, பறவைகளை, இயற்கையை சுயமாக சுதந்திரமாக திரிய விட்டிருக்கின்றது. விமான சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. வானவெளி சுத்தமாகின்றது. தேவை கருதிய போக்குவரத்துச் சேவைகள் நடைபெறுவதனாலும், வியாபார ஸ்தாபனங்களில் விற்பனை நடைபெறாததனால் பிளாஸ்டிக் பாவனை குறைவடைந்துள்ளதனாலும், கடற்தொழில் கட்டுப்படுத்தப்பட்டதனாலும், சூழல் மாசடைதல் தவிர்க்கப்படுகின்றது. 

    இந்த நிலையில் ஜேர்மனியில் 27.03.2020 திகதி முற்பகல் 10.00 மணி Robert Koch Institute சட்டரீதியான அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதன்படி ஜேர்மனியில் 50.871 பேர் நோய் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்கள், 351 பேர் இறந்துள்ளார்கள் எனத் தெரிய வருகின்றது. Nordrhein westfalen மாநிலத்திலேயே அதிகமானவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்கள். இங்கு நோய் தொற்றுக்குள்ளானவர்கள் 11.523 பேர் எனவும் இறந்தவர்கள் 88 பேர் எனவும் தெரியவருகின்றது. அதிலும் ஹைன்ஸ்பேர்க் என்னும் வலையத்திலுள் மட்டும் 1090 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளார்கள். உலக சுகாதார அமைப்பின்படி 80 வீதமான நோய் தொற்றிகள் சாதாரணமானதாகவே காணப்படுகின்றன.  Robert Koch Institute தலைவர் Herr. Lothar Wieler    கூற்றுப்படி பரிசோதனை 3 விதமாக நடைபெறுகின்றன எனத் தெரிவித்துள்ளார். நோய்வாய்ப்பட்டவர்கள், நோய்வாய்ப்பட்டவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தியவர்கள், மருத்துவ ஊழியர்கள் என்னும் முறையிலேயே பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. தீவிர நோய்க்கு உட்பட்டவர்கள் தவிர்த்து ஏனையோர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். நாடே வெறிச்சோடிக் கிடக்கின்றது. Nordrhein westfalen  மாநிலம் மீட்புப் பணிக்காக 25 பில்லியன் ஒயிரோக்களை ஒதுக்கீடு செய்துள்ளது. 

    ஒருவருக்கு நோய் இருக்கின்றது என்பதைக் கண்டறிவதற்கு 14 நாட்கள் தேவைப்படுகின்றன. ஜேர்மனியில் 2 மணித்தியாலத்தில் நோயைக் கண்டுபிடிப்பதற்கான உபகரணத்தைக் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், அது ஏப்ரல் மாதத்திலேயே நடைமுறைப்படுத்துப்படும் என்று அறிவித்துள்ளார்கள். 
    கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்ட வைத்தியர் ஒருவர் ஜேர்மனிய அதிபர் Angela merkel அவர்களுக்கு Pneumokokken என்னும் தடுப்பூசி கொடுத்திருந்தார். Angela merkel அவருடன் தொடர்பு கொண்டிருந்த காரணத்தினால், தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். தற்போது அவருக்கு வழங்கப்பட்ட முதலாவது பரிசோதனை எதிர்மறையானதாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த சில நாட்களில் மேலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றது. அதிபர் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் இருந்தே தன்னுடைய கடமைகளை மேற்கொள்ளுகின்றார். 

    பாலர் பாடசாலைகள், பாடசாலைகள்  19.04.2020 வரை மூடப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்களுக்கான வீட்டுப்பாடங்கள் மின்னஞ்சல், இணையத்தளம் மூலம் அனுப்பப்படுகின்றன. சில இசைக் கல்லூரிகள் இணையம் மூலம் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றன. பல்கலைக்கழகங்கள் 20.04.2020 வரை மூடப்பட்டுள்ளன. சில பல்கலைக்கழகங்கள் Projekt மேற்கொள்ளும் மாணவர்களுக்கான திட்டங்களை இணையம் மூலம் செய்வதற்கு வழி செய்துள்ளன. சினிமா, konzert theater, ஜிம், பிசியோதெரபி, விளையாட்டுக் கழகங்கள், அரசாங்கத் திணைக்களங்கள், உணவகங்கள், வியாபார ஸ்தாபனங்கள் போன்றன காலவரையறையின்றி மூடப்பட்டுள்னன. மருத்துவசாலைகள், தனியார் மருத்துவசாலைகள், வயோதிபர்களைப் பராமரிக்கும் நிறுவனங்கள், மளிகைச் சாமான் கடைகள், மருந்துக்கடைகள், சுகாதார சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், சில நிறுவனங்கள் மட்டுமே திறந்திருக்கின்றன. சில நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி கடமையில் ஈடுபட்டிருக்கின்றார்கள். மேமாத இறுதிவரை களியாட்ட இசை, நிகழ்வுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. 
    திறந்த போக்குவரத்து வாகன வசதிகள் சேவையில் ஈடுபட்டிருக்கின்றன. ரிக்கட் பரிசீலிக்கப்பட மாட்டாது. வாகன நிறுத்துமிடங்களின் வரி வசூலிக்கப்பட மாட்டாது. ஜேர்மனியில் ஊரடங்கு உத்தரவு இல்லை. வீட்டைவிட்டுத் தனி ஒருவர் அல்லது கணவன், மனைவி என இருவர், அல்லது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே வெளியில் செல்லலாம். குறைந்த பட்சம் 1.5 மீற்றர் தொலைவிலேயே ஒருவருக்கொருவர் பேச்சுப் பரிமாற்றம் இருக்க வேண்டும். கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கான தண்டனைப் பணம் 200 ஒயிரோவில் இருந்து 25,000 ஒயிரோ வரை அதிகரிக்கும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் வாடகை கட்டாமல் விட்டால் வீட்டைவிட்டு அவர்களைக் காலி பண்ண முடியாது. வேலைக்கு வராமல் விட்டால் தகுந்த காரணம் காட்டினால், வேலையை விட்டு நீக்க முடியாது. பெற்றோரைப் பிள்ளைகள் வெளியே வராமல் பாதுகாக்க வேண்டும். பேரப்பிள்ளைகள் தாத்தா பாட்டியை சந்திப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான பண முதலீட்டை அரசாங்கம் இந்நோய்க்கு எதிராக வழங்கியுள்ளது. இத்தாலியைப் போன்று வைத்தியர்கள் பற்றாக்குறை இங்கும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், தற்போது தாதியர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. 

    ஜேர்மனியில் டோட்முண்ட் நகரமானது குட்டி யாழ்ப்பாணம் என்று அழைக்கப்படும். அங்கு தமிழர்களுக்குத் தேவையான ஆடை, அணிகலன்கள், உணவுப்பதார்த்தங்கள், பலசரக்குப் பொருட்கள் அனைத்தும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், அவ் வியாபார ஸ்தாபனங்களில் பல சரக்குச் சாமான்கள் விற்பனை செய்யப்படும் 3 கடைகள் மாத்திரமே திறக்கப்பட்டுள்ளன. அவற்றில் கூட வியாழக்கிழமைகளில் இந்திய இலங்கை மரக்கறிகள் வருகின்ற காரணத்தினால் வெள்ளி, சனிக்கிழமைகளில் மாத்திரமே தமிழர்கள் பொருட்கள் வாங்குவதற்குச் செல்கின்றார்கள். அவர்கள் கூட இருவர் இருவராகச் செல்ல வேண்டிய காரணத்தினால், தமிழர்களின் வருகை குறைவாகவே காணப்படுகின்றது.  கடைகளில் கறுவா, இஞ்சி இரண்டும் அமோகமாக விற்பனையாகிறது. தமிழ் ஆலயங்கள் அனைத்தும் மூடப்பட்டு பக்தர்கள் வருகை தடுக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் பாடசாலைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழ்ப் பாடசாலை பரீட்சைகள், போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. 

    இக் கொரொனா நோய்ப் பாதிப்புக்களை நிவர்த்தி செய்வதற்காக 750 பில்லியன்கள் ஒயிரோக்களை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. சில கால்பந்தாட்ட வீரர்கள் கொரொனா நெருக்கடியைச் சமாளிக்க தங்களுடைய சம்பளத்தில் ஒரு பகுதியை தள்ளுபடி செய்திருக்கின்றார்கள். ஜேர்மனியில் இந்நோயின் நிலவரம் எத்தனை நாட்களுக்குத் தொடரும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாதுள்ளது. 







    ஞாயிறு, 22 மார்ச், 2020

    “நான் பேசும் இலக்கியம்” ஆய்வுரை திருமதி. ஹரிணி கண்ணன்



    “நான் பேசும் இலக்கியம்” 26 ஆவது வெற்றிமணி வெளியீடு. 



    ஆசிரியர் சந்திரகௌரி சிவபாலன்(கௌசி). பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தவர். ஆற்றல் மிக்க துணிவும் அன்பும் மிக்க தாயைப் போன்றவர். இவருடைய நாலாவது வெளியீடு இந்தப் புத்தகம். இது 25 ஆக்கங்களைக் கொண்டுள்ளது. வெற்றிமணிக்காக எழுதப்பட்ட கட்டுரைகளும் அதனுடன் சேர்ந்த வேறு 3 அழகான சிறப்பான கட்டுரைகளும் உள்ளடங்கியதாக இப்புத்தகம் வெளிவந்துள்ளது. 128 பக்கங்களைக் கொண்ட ஒரு அழகான பொக்கிஷம் என்று இதனைக் கொள்ளலாம்.

    இந்தப் புத்தகத்தின் அட்டைப் படத்தை பார்க்கும் போது அங்கேயே இலக்கியம் சொட்டுகிறது. “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்” என்ற பாடலே நினைவுக்கு வருகின்றது. இந்த அட்டைப்படத்தை வெற்றிமணி ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் அவர்கள் வடிவமைத்திருக்கின்றார். 



    இந்த அட்டைப்படத்தைப் பார்த்தீர்களானால், அங்கு அழகான பின்னணி வர்ணத்தோடு இரண்டு உதடுகள் இருக்கின்றன. ஒரு உதடு வரைய 3 கோடுகள் வேண்டும். இரண்டு உதடுகள் இருக்கின்றன. மேலே உள்ளது ஆணுடையது. கீழேயுள்ளது பெண்ணுடையது. பெண்ணுடைய உதட்டில் மேல் வரியை எடுத்து ஆணுடைய உதட்டிற்கு மேலே மீசையாகப் போட்டிருக்கின்றார். அதாவது ஆணினுடைய கௌரவம் பெருமை என்பன அவனோடு வாழும் பெண்ணைக் குறித்தே இருக்கின்றன. பெண்ணே அவனுடைய தகுதியை உயர்வுக்குக் கொண்டு வந்து வைத்திருக்;கின்றாள். அரசனுக்கு மந்திரிபோல் மிகுந்த நுட்பமான அறிவுடன் தொழிற்பட்டு குடும்பத்தின் பெருமைக்கு காரணமாகின்றாள். அதனை எடுத்துக்காட்டுவதற்காக அந்த கௌரவமான மீசையை பெண்ணின் மேல் உதட்டில் இருந்து எடுத்திருக்கின்றார். அதேபோன்று ஆணினுடைய உதட்டு நடு வரியை எடுத்து பெண்ணினுடைய உதட்டிலே போட்டிருக்கின்றார். அதாவது நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்பது போல. அதாவது பெண்ணுக்குரிய பேச்சின் சுதந்திரத்தை ஆண் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கும் போதுதான் அவனுக்கு அந்த மீசையே உருவாகும் என்று சொல்லலாம். இவ்வாறுதான் அட்டைப்படத் தோற்றம் அமைந்திருக்கின்றது. இன்னும்பல கோணங்களில் அட்டைப்படத்தை நாம் நோக்க முடியும். பின்னணியில் மயிலிறகு இருக்கின்றது. அவளுடைய கண் வருகின்ற இடத்திலே உதடு இருக்கின்றது. ஒரு கோடு இருக்கின்றது. அக்கோடு மேல் நோக்கிச் செல்கின்றது. பின்னணி ஒரு செம்மையான கலர். வாசகர்களுடைய எண்ணப்போக்கிற்கேற்ப இவ் அட்டைப்படம் தோற்றம் பெறும். இது ஒரு அப்பழுக்கற்ற ஒரு புனிதமான நோக்கத்தைக் கொண்டது. 

    படிப்பதற்குத் தெளிவான எழுத்தின் வடிவத்தைக் கொண்டுள்ளது. முன்னாள் மொழித்துறை கலாசாரப் பேராசிரியர், இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் செ.யோகராசா அவர்கள் இந்நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கின்றார். 



    புத்தக ஆசிரியர், படைப்புக்களின் சிறப்புக்களைக் கூறிய இவர் புலம்பெயர் பெண் இலக்கியப் படைப்பாளிகளில் பெரிதும் பேசப்படுகின்ற நிரூபா, தமிழ்நதி போன்றோர் வரிசையில் இவரையும் முன்னிறுத்தி இருக்கின்றார். இதனை வெளியீடு செய்துள்ள வெற்றிமணி ஆசிரியர் எழுத்தாளரை முழுமையாகப் புரிந்து கொண்ட வகையில் தன் பதிப்புரையை வழங்கியிருக்கின்றார். எதனைக் கேட்டாலும் நிறைவுத் தன்மையோடு அள்ளிக் கொடுக்கும் தன்மை சிறந்த எழுத்தாளரில் இருக்க வேண்டும். அது திருமதி. சந்திரகௌரி சிவபாலனிடம் அதிகமாகவே உள்ளது எனவும் மற்றும் அவருடைய சிறப்பியல்புகளையும் கூறியுள்ளார். பொதுவாகவே வெற்றிமணிக்கு எழுதும் ஆக்கங்களை அவரே முதலில் படித்து சுவைத்து விட்டு பிரசுரிப்பார். அதனால், அவரே முதல் வாசகனுமாவார். அதனால், ஒவ்வொரு எழுத்தாளர் பற்றிய முழுமையான புரிந்துணர்வு அவரிடம் இருக்கின்றது. சிந்தனை சிவவிநோபன் சிங்கப் பெண் என்று இவ் ஆசிரியரை மிகப் பொருத்தமானதாகவே விளித்து வாழ்த்துரை வழங்கியிருக்கின்றார். 



    இந்தப் பேசும் இலக்கியம் பன்முகத் தன்மையைக் கொண்டது. பல அறியாத விடயங்கள் சுவையாகப் படைக்கப்பட்டுள்ளன. புலம்பெயர்தேசங்களில் கவிதை, கட்டுரை, சிறுகதை என்று நீண்டு செல்லும் இந்த வரிசையிலே இலக்கியம் சார்ந்த படைப்பு சிறப்பாக சீர்தூக்கிப் பார்க்கக் கூடியதாகவுள்ளது. புதிய தலைமுறையினருக்கும் இலகுவாகப் படிக்கக் கூடிய வகையில் பழந்தமிழ் பாடல்களுக்குக் கூட இலகுதமிழில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. விரிகின்ற பக்கங்களில் என் இதயத்தெளிவு பதிந்திருக்கும். வார்த்தைகளின் படையலுக்குள் மூளைச் சலவை பொதிந்திருக்கும் என இந்தப் புத்தகத்தைப் பற்றி ஆசிரியர் சூக்குமமாகக் கூறியுள்ளார். இதன் பொருளை புத்தகத்தை வாங்கிப் படிக்கும்போது புரிந்து கொள்ள முடியும் என நினைக்கின்றேன். 

    வாசகர்களின் வாசிப்புத் தன்மைக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காகவும் அதிக நேரம் எடுக்கக் கூடாது என்பதற்காகவும் சிலவற்றை மட்டும் குறிப்பிடுகின்றேன். குறிப்பாகப் பழந்தமிழ் இலக்கியங்களுக்கு நான் அடிமை. பழைய நாகரிகங்கள், அதன் சிறப்புக்கள், வரலாறுகள், இலக்கியங்கள், அவர்கள் வாழ்ந்த அழகான வாழ்க்கை முறை, அவர்களுடைய மென்மையான மனம், வீரம், காதல், மிக சுவையாகச் சொல்லப்பட்டிருக்கும். இவ்வாறான விடயங்களைப் படிக்கும் போது அதனோடு சேர்ந்து நாங்கள் பயணித்துக் கொண்டு செல்வோம். எப்போது பெண்கள் சுதந்திரம் பெற்றார்களோ அன்றிலிருந்து மகளிர் தினம் கொண்;டாடப்பட்டது என்று பொதுவாக சொல்வார்கள். இடையில் ஏதாவது அடக்குமுறைகள் பெண்களுக்கு எதிராக நடந்திருக்கக் கூடும். ஆனால், ஆதிகாலத்தில் பெண்கள் மிகவும் சுதந்திரமாக இருந்திருக்கின்றார்கள். அதற்கு இலக்கியமே சான்று. பொன்னியின் செல்வனில் பூங்குழலி இலங்கைவரைப் படகோட்டி வந்தாள். அந்தளவிற்கு வீரமாகவும் சுதந்திரமாகவும் இருந்திருக்கின்றார்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் மிக்க துணிச்சலுடன் எதிர் கொண்டிருக்கின்றார்கள். வீட்டில் புத்தகங்களின் ஒவ்வொரு பாகங்களும் அடிக்கி வைக்கப்பட்டிருக்கும். அவற்றை வாசிப்பதற்கு போட்டி போட்டுக் கொண்டு வாசிப்போம். இவ்வாறு சுவையையும், ஆர்வத்தையும் தூண்டக் கூடிய இலக்கியங்களை இன்றைய தலைமுறையினர் தவற விடுகின்றார்கள். இத்தன்மையை இவ்வாறான புத்தகங்கள் மீண்டும் கொண்டு வந்து அவர்களின் ஆவலைத் தூண்டக் கூடியது. 

    அந்தக் காலத்தில் பொதுவாக புலமைக்குள் போட்டி இருந்தது. ஆனால், அந்தப் போட்டியையும், பொறாமையையும் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் காட்டிக் கொள்ளாமல் புலமையிலேயே காட்டிக் கொள்வார்கள். இதற்கு ஒளவையும், கம்பரும் விதிவிலக்கல்ல. இதில் ஒரு அழகான சம்பவம் கூறப்பட்டுள்ளது. குலோத்துங்க சோழன் அவையிலே ஆஸ்தான கவியான கம்பர் வீற்றிருக்கின்றார். கம்பருக்கு அவர் புலமையிலே சிறிது செருக்கு இருக்கின்றது. அங்கு ஒளவை வருகின்றார் அவருக்கு குலோத்துங்க சோழன் அவையிலே வரவேற்பு நடக்கின்றது. இதனைப் பொறுக்காத கம்பர், நான் சொல்லுகின்ற ஒரு அடியிலே உள்ள பொருள் என்னவென்று கண்டுபிடித்து ஒரு பாடல் பாட வேண்டும் என்று சொல்லுகின்றார். அதற்கு ஒளவையும் சம்மதிக்கின்றார். ஒளவையை குறைத்து மதிப்பிடும் கம்பர்

    “ஒரு காலடீ நாலிலைப் பந்தலடீ” என்று வரி கொடுக்கின்றார். அதாவது ஒரு தண்டிலே நான்கு இலைகளைக் கொண்டுள்ள ஆரைக்கீரையை பொருளாகக் கோண்டு வரி கொடுக்கின்றார். அடீ என்பது நாகரீகமற்ற முறையில் விளிப்பதாக அமைகின்றது. உடனே ஆத்திரம் கொண்ட ஒளவையும் அடிக்கு அடாதானே பதில். 

    ‘எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
    மட்டிற் பெரியம்மை வாகனமே - முட்டமேற்
    கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
    ஆரையடா சொன்னா யடா’

    எட்டே கால் லட்சணமே என்றால், அவலட்சணமே. எமனேறும் பரியே எருமை. பெரியம்மை என்றால், மூதேவி. அவர் வாகனம் அண்டங்காக்கா. கூரையில்லாத வீடு குட்டிச்சுவர். குலராமன் தூதுவன் குரங்கு. ஆரையடா சொன்னாய் அடா என்றால், ஆரைக்கீரையை என்றும் யாரையடா என்று விளிப்பதாகவும் சிலேடையாக ஒளவை பாடல் அமைகின்றது. இதன்பின் ஒளவையின் சிறப்பை கம்பர் தெரிந்து கொண்டதாக அச்சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது. இச்சம்பவம் இப்புத்தகத்தில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இதனைப் படிக்கும் போது எனது தாத்தா எனக்குக் கூறிய 

    “மந்திக்கு வால் நான்கு மதகரிக்கு கோடெட்டு 
    மங்கைக்குத் தனமில்லை முயலுக்கு கொம்பு”  

    என்ற பாடலைச் சொல்லி, இது எப்படி அதாவது எப்படி மந்திக்கு வால் நான்கு என்று வரும் . இப்பாடடுக்குப் பொருள் சொல் என்று தாத்தா கேட்பார். நாம் புரியாதிருக்க அதன் விளக்கத்தை அவர் கூறினார். அப்போது எமக்குப் புரியவில்லை. இலக்கியம் படித்த பின்பே எமக்குச் சரியாகப் புரிந்தது. மந்திக்கு வால், நான்கு மதகரிக்கு கோடு 8, மங்கைக்குத் தனம், இல்லை முயலுக்கு கொம்பு. இப்படியாகபப் பாடல்களைப் பிரிக்க வேண்டும். இவ்வாறான புதிர்கள் அக்காலங்களில் பேசப்பட்டன. இவற்றை இந்நூல் ஞாபகப்படுத்துகின்றது. 

    இந்நூலில் சேர, சோழ, பாண்டியர், பல்லவர் காலத்துக் குறிப்பேடுகளையும், அந்நிய படையெடுப்புக்கள் அதன் தடயங்கள், தமிழிலே ஏற்பட்ட பிறமொழிக் கலப்புகளையும் எடுத்துக் காட்டியுள்ளார். கவிஞர் கண்ணதாசனுடைய மதிப்புமிக்க வரிகள் காணப்படுகின்றன. பழந்தமிழ் செய்யுள்கள் தற்காலத்து திரைப்படப்பாடல்களாகக் காணப்படுகின்றன “யாயும் ஞாயும் யாராகியரோ, நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன் போன்ற பாடல்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன். என்னும் பாடலிலே நீ வருகின்ற வழி தன்னில் யாருன்னைக் கண்டார். உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார். உன் மலர் கூங்தல் அலைபாய அவர் என்ன சொன்னாh. உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்;” என்னும் வரிகளிலே பெண்ணில் சந்தேகக் கேள்விகளைக் கேட்பதாகப் பாடல் அமைந்திருக்கும். அதற்குக் காதலி அதற்கான காரணத்தை அழகாகக் கூறுகின்றாள். இவ்விடயம் இலக்கியப் பாடலில் இருந்தே கண்ணதாசனால் எடுக்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரத்தை இங்கு கொண்டு வந்திருக்கின்றார். 

    இன்றைய சில திரையிசைப்பாடல்களைக் கேட்கும் போது எங்கே சுவை போனது, எங்கே நயம் போனது, எங்கே உலகம் போய்க் கொண்டிருக்கின்றது என்னும் கவலை எம்மத்தியில் இருக்கின்றது. எவண்டி உன்னைப் பெத்தான் பெத்தான். கையிலே கிடைத்தால், செத்தான், செத்தான். அதாவது மாமனாரைப் போட்டுத் தள்ளிப்போட்டு நானும் நீயும் நன்றாக இருப்போம். இதற்கு மகள் எப்படி ஒத்துக் கொள்வார். இவ்வாறு இன்றைய பாடல்கள் காண்படுகின்றன. இது பழைய புலவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் மிகக் கவலைப்படக்கூடிய விடயமாக இருக்கின்றது. 

    இலக்கியமும் அதனோடு சேர்ந்த விழிப்புணர்வும், அதனோடு சேர்ந்த இயற்கை என தனது படைப்புக்களை சிறகடித்து இப்படைப்பாளர் பறந்திருக்கின்றார். மட்டக்களப்பின் மகத்தான பாடல்களைப் பட்டியலிட்டிருக்கின்றார். தமிழுக்கு மகத்தான சேவை புரிந்தது மட்டக்களப்பு என்று சொல்லலாம். நாட்டுப்புறப்பாடல்களில் பேச்சுத் தமிழ் கொட்டும். ஆராரோ ஆரிவரோ என்னும் தாலாட்டுப் பாடலிலே மண்ணின் வாசம் வீசுவதைக் காணலாம். கிழக்கின் ஜோதி விபுலானந்த அடிகளார் பற்றிப் பேசப்பட்டுள்ளது. அக்காலத்துக் காதல் உணர்வுகள் அழகுணர்ச்சியோடு எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. தலைவி தோழிக்குத் தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் அழகாகக் காட்டப்பட்டுள்ளது. தன்னுடைய காதலன் தன்னை மறந்து போவதை தீம்பால் உண்பவன் கொள்கலன் வரைதல் என்று சொல்லப்படும். ஒரு பாத்திரத்தில் இருக்கும் பாலை நுகர்ந்து குடித்துவிட்டு அப்பாத்திரத்தைக் கவிட்டு வைத்துவிட்டுப் போவது போன்ற செயலை தலைவி தன் தோழிக்குக் கூறுவது போன்ற பாடல்கள் இந்நூலிலே எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி” என்னும் பாடலின் சந்தர்ப்பம் போன்றவை இந்நூலில் அழகாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. 

    சிறுவர்களுக்கான இலக்கியம் படைக்கச் சிறுவர்களையே படைப்பாளியாக்கிய வெற்றிமணிப் பத்திரிகையின் ஸ்தாபகர் அமரர் மு.க.சுப்பிரமணியம் அவர்கள் பற்றி பேசப்பட்டுள்ளது. 

    ஹைக்கூ பற்றிய புதிய கண்ணோட்டம் வைக்கப்பட்டுள்ளது. பழந்தமிழ் பற்றிப் பேசிய ஆசிரியர் வாழ்வு, இயற்கை, புதியன புகுதல் பழையன கழிதல், ஆரோக்கியமற்ற வாழ்வு, திருவள்ளுவர் வாசுகி பற்றிய விடயங்கள், பெண்கள் தினத்தில் வெளியிடப்பட்ட இந்நூலில் பெண்கள் பற்றிய விடயங்கள், தாய்மையைப் போற்றிப் பெண்களை அதிசயப் பிறவியாகவும் விளித்துள்ளார். உண்மையில் அதிசயப் பெண், ஆற்றல் வாய்ந்த சிங்கப்பெண், தன்னுடைய உள்ளக்கிடக்கை, ஆற்றல், இவற்றையெல்லாம் வெளியில் எல்லாம் கொட்டிவிட வேண்டும் என்னும் தமிழ் மீதுள்ள அவா, பற்று, போன்றவற்றை இச்சிறிய புத்தகமே தெளிவாகக் காட்டிவிடுகிறது. கொட்டுவதற்கு அதிகமான விடயங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் சிறிது சிறிதாக இப்புத்தகத்தில் கொட்டியிருக்கின்றார். நிச்சயமாக திருப்தியையும், இலக்கியம் சார்ந்த ஆவலையும் தூண்டக்கூடிய அழகான ஒரு படைப்பு. இவ்வாறான படைப்புக்கள் மென்மேலும் வெளியிட வேண்டும். ஏனென்றால் மிகுந்த சுவைமிகுந்த விடயங்கள் அவருடைய உள்ளக்கிடக்கையில் நிறைந்திருக்கும் என்பது என்னுடைய கருத்து. இப்புத்தகத்திற்கு மென்மேலும் வரவேற்பை வழங்கி நான் குறிப்பிடாத பல விடயங்களை நீங்கள் சுவைக்க வேண்டும் முழுவதையும் சொல்லிவிட்டால், வாசிப்பவர்கள் ஆர்வத்திற்கு ஒரு இடையூறாக இருக்கும் என்பதற்காகவே சிலவற்றை மட்டும் கூறியிருக்கின்றேன். எனவே இப்புத்தகத்தை வாங்கி அவருக்கும் ஊக்குவிப்பை வழங்கி மென்மேலும் அவருடைய பல படைப்புக்களுக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறி விடைபெறுகின்றேன்.



    திங்கள், 16 மார்ச், 2020

    "நினைவுகள் துணையாக" கவிதைநூல் விமர்சனம்




    கவிதை இலக்கியம் என்பது மனிதனின் உள்ளத்திற்குள் புகுந்து உணர்வுகளுடன் பேசும். ஒன்றைத் தொட்டு வேறு ஒன்றாய் விரியும். மனதுக்குள் சிலசமயங்களில் ஆழ்ந்த சிந்தனையையும், மகிழ்ச்சியையும், கிளுகிளுப்பையும், அழுகையையும் தோற்றுவிக்கும். யாருமற்ற உலகத்தில் சில நொடிப் பொழுதுகள் எம்மை வாழ வைக்கும். இவ்வாறான உணர்வுகளை சந்திக்க வைத்த பொலிகையூர் ரோகா அவர்களுடைய “நினைவுகள் துணையாக” என்ற கவிதைத் தொகுப்பு என் கைக்குள் அடக்கமாகிய போது ஒவ்வொரு பக்கங்களையும் திருப்புகிறேன்.  என் மனதுக்குள் பல பக்கங்கள் விரிகின்றன.

    கவிதை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரன்முறையை மனிதன் தாண்டி எத்தனையோ வருடங்களாகி விட்டன. “சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற் புதிது, சோதிமிக்க நவ கவிதை எந்நாளும் அழியாத மாகவிதை” என்று மகாகவி பாரதியார் ஆளுமையுடன் அன்று பாடினார். அதற்கேற்ப இன்று வரை ஹைக்கூ, துளிப்பா, புதுக்கவிதை என எத்தனையோ கவிதை வடிவங்கள் எம்மிடையே கோலோச்சுகின்றன. அன்று பாரதி கஞ்சாக்கவி என்று உரைத்த தமிழ் உலகம் இன்று பாரதியைக் கொண்டாடுகின்றது. 

    தற்காலக் கவிதை பற்றி கவிஞர் சுரதா அவர்கள் “கவிதை என்பது சொற்களின் சுருக்கம்” என்று கூறுவார். இது கடல் மட்டத்தின் மேல் தெரியும் ஒரு பனி மலை போல் இருக்கும் வெளியே தெரிவது சிறு தொடர் ஆனால் கடலுக்குள் ஆழச்சென்று பார்த்தீர்கள் என்றால் பரந்து விரிந்து ஆழமாகக் காணப்படும் அது போலவே தான் தற்கால கவிதைகளை நான் இனம் காணுகின்றேன். கவிதை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று விளக்கம் நாம் கொள்ள முடியாது. காலத்துக்குக் காலம் அதன் வடிவங்கள் மாறிக் கொண்டுதான் வந்திருக்கின்றன.

    “காரிகை கற்றுக் கவி பாடுவதிலும் பேரிகை கொட்டி பிழைப்பது மேல்” என்னும் முதுமொழியை யாம் அறிந்திருக்கின்றோம். யாப்பருங்கலக்காரிகை கற்று மன்னர்களைப் புகழ்ந்து கவி பாடி, அவர்கள் கொடுக்கும் வெகுமதியைப் பெறுவதிலுள்ள கடினத்தைக் குறித்து அதனை விட பேரிகை கொட்டி வாழலாம் என்று சலிப்படைவதாக இம்முதுமொழி யாப்பருங்கலக்காரிகை கற்பதில் உள்ள கடினத்தன்மையை குறிக்கின்றது. பாவினம் படைக்க காரிகை கற்பதின் கடினத்தை அறிந்து தற்காலத்தில் கவிதை வடிவங்கள்; மாற்றங்கள் கண்டுள்ளன. 

    “உள்ளத்து உள்ளது கவிதை இன்ப உருவெடுப்பது கவிதை
    தெள்ளத் தெளிந்த தமிழில் உண்மை தெரிந்துரைப்பது கவிதை” 

    எனக் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள் உரைப்பது போல காதலின் அழகையும் ஆழத்தையும் கவிதையாக வடித்து இந்நூலை ஆக்கியதாக எழுத்தாளர் பொலிகையூர் ரேகா தன்னுடைய உரையிலே கூறியிருக்கின்றார். 

    இலங்கையில் வடமாராட்சி மாநிலத்திலுள்ள பொலிகண்டி என்னும் ஊரில் பிறந்து இந்தியாவிலே தன்னை இனங்காட்டிக் கொண்டிருக்கின்ற பொலிகையூர் ரேகா அவர்கள் உதவிப் பேராசிரியராகப் பணி புரிகின்றார். இளங்கலைக்கல்வி, முதுகலை வணிகவியல்,  வணிக ஆய்வியல், முதகலை வணிக நிருவாகவியல், வணிக நிர்வாக ஆய்வியல் ஆகிய கல்வித் தகைமைகளைப் பெற்றிருப்பதுடன் குருதிக்காடும் குழலிசையும் என்ற கவிதைத் தொகுப்பை 2017 ஆம் ஆண்டும், மனிதர்கள் காத்திருக்கின்றார்கள் என்ற சிறுகதைத் தொகுப்பை 2018 ஆம் ஆண்டும், சங்க இலக்கியங்களில் காந்தள் என்ற ஆய்வு நூலை 2019 ஆம் ஆண்டும் வெளியீடு செ;யதிருக்கின்றார். இவருடைய “நினைவுகள் துணையாக” என்ற இந்தக் கவிதைத் தொகுப்பு வெற்றிமணி வெளியீடாக வெளிவந்திருக்கின்றது. 

    ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல ஒரு கவிஞனை இனங்காண அவனால் எழுதப்பட்ட ஒரு கவிதை போதுமானது. காலம் கடந்தும் அவர்களை வாழ வைக்கும்.

    “யாயும் ஞாயும் யாராகியரோ
    எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
    யானும் நீயும் எவ்வழி அறிதும் 
    செம்புலப் பெயல் நீர் போல்
    அன்புடை நெஞ்சம் தான் கலந்தனவே” 

    என்னும் இப்பாடலை எழுதிய புலவருக்கு செம்புலப் பெயல் நீரார் என்னும் பெயரை இப்பாடலே கொடுத்தது. கணியன் பூங்குன்றனார் புறநானூற்றில் 192 பாடல்களும் நற்றிணையில் 226 பாடல்களும் பாடியிருந்தாலும் அவருடைய “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் பாடலே பெரிதாகப் பேசப்படுகின்றது. 

    இவ்வாறு இந்நூலிலுள்ள சில கவிதைகள் மனதோடு பேசு பொருளாகக் காணப்படுகின்றன. ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே காணப்படும் விரகதாபம் கவிதைகளிடையே இழையோடிக் காணப்படுகின்றன. 

    “நீர் வரத்துக்காகவும் 
     உரிமையாளர் வரவுக்காகவும் 
     நீர்க்குழாயடியில் 
     காத்திருக்கும் குடங்கள் போல
     உன் வரவுக்காகவும்
     உண்மை அன்புக்காகவும் 
    வெறுமையோடு காத்திருக்கின்றேன்” 

    என்னும் கவிதையில் காதலன் வரவுக்காகக் காத்திருக்கும் ஒரு பெண்ணின் உணர்வுகளுக்கு நீர்க்குழாயடியில் காத்திருக்கும் குடங்களை இக்கவிஞர் ஏன் உவமையாக எடுத்துரைக்க வேண்டும் என்று சிந்தித்துப் பார்த்தால், இவர் மனதிலே வேரூன்றிப் போயிருக்கும் சமூகப் பார்வை வெளிப்படுத்தப்படுவதை அவதானிக்கலாம். தண்ணீர் தட்டுப்பாடு இந்திய மண்ணில் காலம் காலமாக பேசுபொருளாகக் காணப்படுகின்றது. நீயும் வர மாட்டாய் நீரும் வரமாட்டாது என்னும் தவிப்பு தென்படுகின்றது. 

    “வானிலிருந்து நீ வராத பருவத்தில்
    தானாய் எங்கள் விழிகளில்
    தாரைதாரையாய் கண்ணீர் மழை” 

    என்று பாடினார் தேவகி மைந்தன். சமூக சிந்தனை ஊறிய மனதில் கவிதையின் கருவாக அதுவே பிரதிபலிக்கும். பாரதியாரின் சுயசரிதையிலே அவருடைய 10 வயதில் ஒரு 9 வயதுப் பெண்ணைக் காதலித்திருக்கின்றார். “தேசபக்தி வீரனைப் போல உன் வரவுக்காய் காத்திருக்கின்றேன்” என்று ஒரு கவிதை எழுதியிருக்கின்றார். பின் கண்ணம்மாவைத் திருமணம் செய்த போது “காதல் ஒன்றாய் கடமை ஒன்றாய் ஆனது” என்று குறிப்பிடுகின்றார். காதலியைக் காத்திருக்கும் போதும் அவருக்கு அவர் மனதுக்குள் உள்ள தேசபக்தியே உவமைப் பொருளாகக் கையாளப்படுகின்றது. அதேபோல் காதலன் வரவுக்கு நீரின்றி வாடும் மக்களின் உணர்வை எடுத்து வந்திருப்பது இவருடைய சமூகப்பார்வையே ஆகும். 

    “தூரத்து நிலவு காட்டி 
    என் தாய் அளித்த 
    உணவு  போல
    எங்கோ இருப்பாய் என்ற 
    உன் மேலான நம்பிக்கையில் 
    என் பொழுதுகள் 
    கழிந்து கொண்டிருக்கின்றன”

    என்னும் கவிதையிலே ஒரு ஏமாற்றம் புலப்படுகின்றது. அன்று தொட்டு இன்றுவரை “நிலா நிலா ஓடிவா. நில்லாமல் ஓடி வா” என்று நிலாவைக் காட்டி சோறூட்டிய தாய்க்குத் தெரியும் நிலா வராது என்னும் உண்மை. ஆனால், குழந்தையிடம் தூரத்து நிலவைக்காட்டிய போது நிலா வரும் என்று தாய் உரைத்த பொய், அந்தக் குழந்தை மனதில் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏங்கிய ஏமாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். இவ்வாறு வராத காதலனுக்காக தன் பொழுதுகளை கழித்துக் கொண்டிருக்கும் காதலியை இக்கவிதையில் படம் பிடிக்கின்றார். காதலில் ஏமாற்றங்களே அதிகம் என்பதை இந்நூலில் பல இடங்களில் காணக்கூடியதாக இருக்கின்றன. நிலாவைப் பாடாத கவிஞர்கள் இல்லையென்றே சொல்லிவிடலாம். முரளிதரன் அவர்கள் நிலா பற்றிய ஒரு கவிதையில் தந்திருக்கின்றார். 

    “பசிக்காக அழுதது குழந்தை
    தாய் அம்புலி காட்டினாள்
    ரொட்டி கேட்டு அழுதது
    குழந்தை” 

    கிடைக்காததற்கு புலம்புவதைவிட கிடைப்பதற்குப் புலம்புதல் உத்தமம் என்பதைப் புரிய வைக்கின்றார். 

    “உலக அதிசயங்கள் 
     எத்தனையோ
     இருந்துவிட்டுப் போகட்டும்
     எனக்குத் தெரிந்த 
     ஒரே அதிசயம் நீதான்
     என்னால் புரிந்து கொள்ள
     முடியாத அதிசயமும் நீதான்! 

    என்னும் கவிதையின் பாடுபொருள் பழையதாக இருந்தாலும் இன்றும் பேசப்படும் பொருளும் அதுவாகவே இருக்கின்றது. 

    “பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் 
    வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
    நுழைசெல்லும் காற்று இசையாதல் அதிசயம் 
    குருநாதர் இல்லாத குயில்பாட்டு அதிசயம்
    அதிசயமே அதிர்ந்து போகும் 
    நீ எந்தன் அதிசயம்”

    என்னும் வைரமுத்து உலகத்தில் எத்தனையோ அதிசயங்கள் இருந்தாலும் இந்த அதிசயங்களே அதிர்ந்து போகின்ற நீ என்னுடைய அதிசயம் என்று கூறுகின்ற பாணியிலேயே இவ் ஆசிரியரும் பெண்கள் அதிசயம் பற்றிக் கூறுகின்றார். படைப்பின் அதிசயம் அதுவாக இருந்தாலும், இங்கு அதிசயமாக எடுத்துக்காட்டப்படும் அனைத்திலும் அழகுதான் மேலோங்கி நிற்கின்றது. ஆனால், இந்த இடத்தில் ஒருவிடயம் பற்றிச் சொல்ல வேண்டியது அவசியம். இயற்கையின் படைப்பின் ஒரு அங்;கமே பெண். அப்பெண்களை அதிகமான அதிசயப் பொருளாகவும், காமப் பொருளாகவும், காட்சிப் பொருளாகவும் படைத்துக் காட்டுகின்றவர்கள் கவிஞர்களே. இக்கவிஞர்களே பெண்களின் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைக்கும் காரணமாகின்றார்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது. கவிஞர்கள் பெண்களைப் போகப் பொருளாகப் படைத்துக் காட்டுகின்றார்கள்.

    வாலி ஜீன்ஸ் படத்திற்காகப் பாடிய பாடலில்

    “பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
    அடடா பிரம்மன் கஞ்சனடி
    சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
    ஆஹா அவனே வள்ளலடி”

    என்னும் சொற்களின் மூலம் விரசத்தை ஏற்றுகின்றார். இவ்வாறு பெண்கள் அங்கங்களை மிதமிஞ்சிய சொற்களின் மூலம் வர்ணிப்பது, மானிடப் பிறவி என்ற எண்ணத்தை விடுத்து அதிசயப்பொருளாகக் காட்டுகின்ற கற்பனை கடந்த வர்ணனைகளை பயன்படுத்துவது பழந்தமிழ் இலக்கியங்களிலும் காணக்கூடியதாக இருக்கின்றது. இக்கவிதை நூலின் ஆசிரியர் “என்னால் புரிந்து கொள்ள முடியாத அதிசயம் நீதான்” என்னும் வார்த்தைகளைப் பயன்படுத்தும் போது  இங்கு அழகையும் மீறி ஒரு மனவுணர்வைப் பதிவு செய்வதாகப்படுகின்றது. “ஆறும் அது ஆழம் இல்ல. அது சேரும் கடலும் ஆழம் இல்ல. ஆழம் எது ஐயா அந்த பொம்பள மனசு தான்யா” என்ற முரளிதரன் அவர்களுடைய வரிகளுடன் ஒத்துப் போவதாக உணர்கின்றேன். தன் காதலியின் மனதின் ஆழத்தைப் புரிய முடியாது காதலன் தவிப்பு வரிகளாக இவற்றைக் கொள்ளலாம். 

    இவ்வாறு பல மன உணர்வுகளை ஏற்படுத்தும் கவிதைகளை உள்ளடக்கிய இந்நூல் வெற்றிமணி பத்திரிகையின் 25 ஆவது வெளியீடாக வெளிவந்திருக்கின்றது. ஜேர்மனியில் வெற்றிமணி பத்திரிகையின் ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் அவர்களின் அன்னையாரின் 100 ஆவது பிறந்தநாளையும் சர்வதேச மகளிர் தின விழாவையும் முன்னிட்டு நடத்தப்பட்ட புதுமைப்பெண்கள் 2020 என்னும் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 







    செவ்வாய், 3 மார்ச், 2020

    ஜெர்மனியில் முதன்முதலாக தொடர்கதை எழுதிய பெண் எழுத்தாளர்



    மனைவி நல்லவளாகவும், புத்திசாலியாகவும் இருந்தால், மனைவியை முன்னேற்ற வேண்டியது கணவனின் கடமை. என்னுடைய மனைவி நல்ல கெட்டிக்காரி சொன்னவர் யார்? 

    2011 ஆம் ஆண்டு ஹம் நகரிலே பிரான்ஸ் தமிழரங்கு தமிழ் கலாசார ஒன்றிய விழாவிலே முத்தான மூன்று கலைஞர்களாக கௌரவிக்கப்பட்டவர்களில் ஒருவரான அமரர் திருமதி புஸ்பராணி ஜோர்ஜ் அவர்களின் கணவன் ஜோர்ஜ் அவர்களே இவ்வார்த்தைகளுக்குச் சொந்தக்காரன் ஆவார். இலங்கையில் பருத்தித்துறையில் இருந்து 1988 இல் புலம்பெயர்ந்து ஜேர்மனியில் ஹம் நகரில் வாழ்ந்து வந்தது ஒரு குடும்பம். அக்குடும்பத்தில் இருந்து எழுதி வந்த எழுத்துக்கள் இடையில் நின்று போனது. காலம் எழுத்தாளர்களை மறந்து விடுகின்றது. மறக்கப்படுகின்றார்கள். தொடர்ந்த செயற்பாடுகளே எழுத்தாளர்களை அடுத்தவர்கள் கண்களுக்கு அடையாளம் காட்டிக் கொண்டே இருக்கும். இதற்கு அத்தாட்சியானது திருமதி புஸ்பராணி ஜோர்ஜ் அவர்களின் இழப்பு. 

    நான் அறிந்த வரையில் ஜேர்மனியில் முதன் முதலாக தமிழில் ஒரு தொடர் கதையை எழுதிய ஒரு பெண் எழுத்தாளர் என்னும் பெருமை திருமதி புஸ்பராணி ஜோர்ஜ் அவர்களையே சாரும். ஒரு எழுத்தாளராக கலைஞராக அவர் வலம் வந்த காலப்பகுதியில் ஜேர்மனி மாத இதழ்களான திரு காசி. நாகலிங்கம் அவர்களை ஆசிரியராகக் கொண்ட வண்ணத்துப்பூச்சி, இலக்கியச் செம்மல் இந்துமகேஷ் அவர்களை ஆசிரியராகக் கொண்ட பூவரசு போன்ற இதழ்களில் இவருடைய படைப்புக்கள் வெளிவந்தன. 

    இம் மாத இதழ்களில் வெளியான கதைகளை உள்ளடக்கியே கதம்ப வாசகங்கள் என்னும் ஒரு நூல் இவரால் 2004 இல் திருகோணமலையில் வெளியீடு செய்யப்பட்டு ஜேர்மனி ஹம் நகரில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அதன் பின் நிதங்களின் தரிசனம் என்னும் அமரர் திருமதி லூர்த்தம்மா யோசேப் அவர்களின் ஞாபகார்த்த மலர் ஒன்றை 2010 இல் வெளியீடு செய்திருந்தார். இது கிறிஸ்தவ ஆராதனைப் பாடல்களுடன் மேற்படி தம்பதியரினது வாழ்க்கை வரலாறு, பரம்பரைப் பெருமைகளைப் பதிவதுடன் இந்நூல் மாரீசன்கூடல் பற்றிய பிரதேச வரலாற்றினையும் ஓரளபதிவு செய்கின்றது. இவ்விரண்டாம் பாகத்தில் முழுமையாக ஒரு குடும்பத்தின் ஏழு தலைமுறைக்கான சந்ததி வரலாறு பட்டியலிடப்பட்டுள்ளது.

    திருமதி. புஸ்பராணி ஜோர்ஜ் என்பவர் 3 குழந்தைகளுக்குத் தாயான பின்பே பலநோக்குக் கூட்டுறவு சங்கத்தில் சாதாரண தொழிலாளியாக இணைந்து யாழ் கொக்குவில் கல்லூரியில் கணக்கியல் படித்து Higher National Diploma படித்து கணக்காளராகப் பதவி வகித்தார். இவரது அயராத ஊக்கமும் உழைப்பும் கணவனின் ஒத்துழைப்புமே இவரது உயர்வுக்குக் காரணமாக இருந்திருக்கிறது. ஜேர்மனியிலுள்ள ஹம் தமிழாலய உதவி நிர்வாகியும், ஆசிரியருமாகக் கடமையாற்றியதுடன் 1993 கலாசார சிதைவு என்ற நாடகத்திலும், ஐசாக் இன்பராசா அவர்களின் நாடகக் குழுவிலும் நடிக்கத் தொடங்கி ஏறக்குறைய 30 நாடகங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

    கதம்பவாசகங்கள் என்னும் நூலில் 10 சிறுகதைகளும் நெடுங்கதைகளும் இடம்பெற்றிருக்கின்றன. எழுதாத கோலங்கள், பிரியாத உறவுகள், ஓயாத பயணங்கள், முடியாத தொடர்கள், சுதிசேரா சுரங்கள், ஒலிக்காத ஓசைகள், அழியாத சுவடுகள், சுவையா இலக்குகள், புரியாத சில நொடிகள், நிழலின் நிசங்கள் ஆகிய தலைப்புகளில் இவை அமைந்துள்ளன. 

    இவருடைய கதைகளை சீர்தூக்கிப் பார்க்கும் போது இவருடைய கதைகளில் தன்னுடைய அனுபவங்களைக் கதைகளில் பதியமிட்டிருக்கின்றார். பிறந்த மண்ணுக்கும் தான் வாழ்ந்த மண்ணுக்குமிடையே பாலம் போட்டு நடந்திருக்கின்றார். கதைகளைப் படிக்கும்போது ஆர்வம் மேலீட்டால் புத்தகத்தை மூடி வைக்க முடியாத வண்ணம் எழுத்துநடை எம்மை இழுத்துக் கொண்டு செல்கின்றது. 

    “பெண்களான நீங்கள்தான் பெண்களை வாழவிடாமல் பழிச்சொற்களைச் சுமக்கக் காரணமாகிறீர்கள். ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லும்போது, அவர்களின் வசைமொழிகளால் தான் ஒழுக்கமாய் உயர்ந்த எண்ணங்களோடு வாழும் பெண்களும் தமக்கேற்பட்ட பழி மாறப்போவதில்லை என மனம் சோர்ந்து போய் நாளாவட்டத்தில் தான் பிழை செய்யாமலே பழி பாவத்திற்கு உள்ளாகி விட்டேன். நான் எப்படி நடந்தாலும் இந்த உலகத்திற்கு என்னவென்று ஒரு மன உடைவின் உந்தலால் தன்னை மாற்றி நடத்தை கெட்டவளாக ஆகிவிடுகிறாள்” என பெண்களே பெண்களுக்கு விரோதிகள் என்பதைத் தன் எழுத்தில் அடையாளங் காட்டுகின்றார். இவ்வாறு பல இடங்களில் நீதிபதியாய் நியாயம் சொல்லுகின்ற தன்மையைக் காணக் கூடியதாகவுள்ளது.  

    தொடுவானம் ஆசிரியர் அ.பி.ஜெயசேகரம் அவர்கள் மனிதவாழ்வில் புதைந்திருக்கும் பல்கூறுகளில் வினாக்களை எழுப்பி அவற்றுக்கு விடை காண முயல்பவர் எழுத்தாளரே என்றும் இந்நிலையில் ஈழத்தமிழரின் சமகால வாழ்வு அவர்களின் புலப்பெயர்வு, பொருளாதார தடை, உறவுகளின் பிரிவு, போன்ற புறச்சூழல்களை முன்னிறுத்தி பல்வேறு வினாக்களைத் தனக்குள்ளே எழுப்பி அவற்றிற்கான விடைதேடும் பாங்கில் தன்னுடைய கதைகளை புஸ்பராணி நகர்த்திச் செல்கின்றார் என்கிறார்.

    பூவரசு ஆசிரியர்  இந்துமகேஷ் அவர்கள் ஆசிரியர் பற்றிக் குறிப்பிடுகையில் அன்னிய மண்ணின் வாழ்க்கைச் சூழல், குடும்பப் பொறுப்பு, தாயக மண்ணில் உறவுகளின் பிரிவுத்துயர், என்று விரைந்தோடும் காலகட்டத்தில் நேத்திற்காய் மல்லுக்கட்டி கலை, இலக்கியம் என்று கால்பதிக்க முயலும் பெண்களின் வரிசையில் புஷ்பராணி ஜோர்ஜ் கவன ஈர்ப்புப் பெறுகிறார் என்கிறார்.

    நூலகவியலாளர் செல்வராஜா அவர்கள் ஐ.பி.சி வானொலியில் இவர் பற்றிக் கூறும்போது தனது உணர்வுகளை சம்பவக் கோர்ப்பாக்கிக் கொட்டத் துடிக்கும் வேகம் தெரிகிறது. இவருடைய ஆக்க இலக்கியம் மேலும் மேலும் தொடரவேண்டும் அதற்கு தனது எழுத்துக்களைப் மேலும் மேலும் பட்டை தீட்டிக்கொள்ள வேண்டும். இன்று ஈழத்து எழுத்துத் துறையில் நன்கு பேசப்படும் பிற எழுத்தாளர்களின் நூல்களை வாசித்து அவர்களின் எழுத்துக்களின் பாணிகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். சம்பவங்களை எழுத்தில் வடிப்பதில் பல நுணுக்கங்கள் உள்ளன. அவற்றைக் கண்டறிய வேண்டும். உரையாடல்களில் சுருங்கச்சொல்லி விளங்க வைக்கும் பாணி வரவேற்கத்தக்கது. நீண்ட உரையாடல்கள் வாசகரைக் கவர்வது குறைவு. இத்தகைய அடிப்படை நுட்பங்களை மனதில் பதித்து மேலும் மேலும் வளர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இன்று எழுத்தாளர் புஸ்பராணி நம்மத்தியில் இல்லையானாலும் இவ் அறிவுறுத்தல்கள் வளருகின்ற எழுத்தாளர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்று கருதுகின்றேன். 

    இவர் நீண்டு வாழ்ந்திருந்தால் நிலையான பல படைப்புக்களை இவ்வுலகிற்குத் தந்திருக்கலாம். காலம் கரைத்துவிட்ட படைப்பாளியாக இவர் கருதப்படாது வாழ்ந்திருக்கலாம். இவரால் உலகுக்கு அளிக்கப்பட்ட கதம்பவாசகம் ஒன்றேயானாலும் அது பல நிதர்சனங்களின் தரிசனமாகவுள்ளது.



    உதவி: கதம்பவாசகங்கள்
          நூலகவியலாளர் செல்வராஜா 
          திரு. ஜோர்ஜ் 

    இக்கட்டுரை வெற்றிமணி பங்குனி இதழில் வெளியானது. 

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...