வெள்ளி, 12 ஆகஸ்ட், 2022
Dr.Abraam George - Shanti Bhavan
செவ்வாய், 9 ஆகஸ்ட், 2022
என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்தியோர்
வெள்ளி, 22 ஜூலை, 2022
எந்த உயிர்களுக்கும் காதல் உணர்வு பொதுவானது
காற்றுக்கும் இலைக்கும் காதல். ஒட்டியிருந்து உறவாடிப் பின் பறந்து சென்றுவிடும். மீண்டும் மீண்டும் தன் கவனத்தை காட்டிச் செல்லும். கடற்கரைக்கும் அலைக்கும் காதல். வந்து வந்து மீண்டும் பிரிந்து சென்று விடும். தொடர்புகள் அறுவதில்லை. தொடர்ந்து இருப்பதும் இல்லை. பூமியைச் சூரியன் நெருங்க விட்டதில்லை. தூரப் போக அனுமதி தந்ததில்லை. சுற்றிச் சுற்றி வட்டமிடும் நிலை புரிந்திருந்தும் கண்காணிப்பில் வைத்துக் கொண்டே இருக்கின்றது. அணைப்பதில் சுகம் இருந்தாலும் அணைக்க விடுவதில்லை. இப்படி எத்தனையோ காதலர்கள் இளமையில் கண்ட காதலை தொடவும் முடியாது, தொலைக்கவும் முடியாது தொடருகின்றனர். தண்டவாளம் இரண்டும் ஒன்றாகச் சேர்வதில்லை. இங்கு காமம் போனது காதல் இருக்கின்றது. முறையற்ற காதலினால், இடைநடுவே முறிந்து போன காதலும் கணக்கில்லை. முடிவுரை எழுதி திருமணத்தில் கரைந்து போன காதலும் பல.
~~காதலினால் சாகாம லிருத்தல் கூடும் கவலைபோம். அதனாலே மரணம் பொய்யாம். என பாரதி குயில்ப் பாடலிலே பாடினார். இது ஒரு புறம் இருக்க
எந்த உயிர்களுக்கும் காதல் உணர்வு பொதுவானது
~~காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்|| என்று உயிர்கள் எல்லாம் ஒன்றிலிருந்துதான் பலவாகிப் பெருகின. அதனால் எல்லாமே எங்கள் ஜாதி என்று பாரதி பாடினார்.
எங்கள் வீட்டுப் பலகணையில் ஒரு பறவை பறந்து வந்து அமர்ந்தது. சற்று நேரங்கழித்து அதனருகே இன்னுமொரு பறவை வந்தமர்ந்தது. தன் காதலன் வந்தமர்ந்ததைப் பார்த்த பறவை சற்று நகர்ந்தது போய் நின்றது. அதுவும் விடாது கிட்டக் கிட்ட நெருங்கியது. ஊடலின் அழகான காட்சியை அமைதியாய்க் கண்காணித்தேன். நீண்ட நேர சம்பாஷணையின் அந்நியோன்யத்தின் உச்சத்தில் இறுதியாக இருவரும் ஒன்றாகப் பறந்து சென்ற காட்சி. ஊடலும் அதன்பின் வரும் கூடலும் உச்சக் காதலை உணர்த்தும் என்பதை நேரடியாக உணரக்கூடியதாக இருந்தது.
துடிஅடிக் கயந்தலை கலக்கிய நன்னீரைப்
பிடிஊட்டிப் பின் உண்ணும் களிறு, எனவும்
உரைத்தனரே||
என்னும் பாடலில் குட்டியானை கலக்கிய நீரை பெண் யானைக்குக் கொடுத்து மீதமிருந்தால் தான் உண்ணுகின்ற ஆண்யானையின் காதலை கலித்தொகை எடுத்துக் காட்டுகின்றது.
சுனைவாய்ச் சிறுநீரை எய்தா தென்(று) எண்ணியப்
பிணைமான் இனி துண்ண வேண்டிக் - கலைமாத்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி
சுனைநீர் சிறிதளவே இருக்கின்றது. தாகத்தில் இருக்கும் பெண்மான் தன்னை எண்ணிக் குடிக்காது என்று எண்ணிய ஆண்மானானது அச்சுனைநீரில் வாயை வைத்துக் குடிப்பது போன்று பாசாங்கு செய்கின்றது என்பதை இப்பாடல் மூலம் மறைப்பொறையனார் ஐந்திணை ஐம்பதில் பாடினார்.
காதல் கொண்ட மான்களுக்கு உள்ள ஒரு வழக்கம் ஒரு பெண்மனைத் துணைக் கொள்ள எண்ணிய மான்கள் பெரிதான சத்தமிட்டுக் கத்துகின்றன. எந்த மான் பெரிதாக கத்துகின்றதோ, அந்த மானையே பெண்மான் கூடுமாம். ஆண்மான்கள் பெண்மான்கள் அறுகம்புல்லைத் தின்னுமாறு செய்து, தெளிந்த நீர் ஓடுகின்ற கானாற்றின் மணற்கரையிலே தூங்கச் செய்து அவ்வாறு தூங்கும் போது இடையூறு வராதபடி காவலும் காத்து நிற்கின்றன. இதேபோல் பெண்யானையின் பசியையும் கன்றின் பசியையும் தீர்ப்பதற்காக ஆண்யானை முற்றாத மூங்கிலின் முளையைத் தந்து அன்போடு உண்ணச் செய்விக்கும். இவ்வாறு அகநானூறு பாடல்கள் பல உயிரினங்களின் காதலை அழகாக எடுத்துக்காட்டுகின்றன.
இந்தோனேசியாவில், பலினீஸில் ~~மானுக் தேவதா" என்னும் தெய்வங்களின் பறவை என்று அழைக்கப்படும் பறவையானது, ஒரு துணையை ஈர்க்க முயற்சிக்கும்போது ஒரு இடத்தைத் தெரிவு செய்கின்றது. அந்த நிலத்திலே கிடக்கின்ற சுள்ளி, கல் போன்றவற்றையெல்லாம் தன்னுடைய சொண்டினால் அகற்றித் துப்பரவு செய்த பின் அந்த இடத்திலே நின்று நடனமாடவும் பாடவும் செய்கிறது. அந்நடனத்தில் மயங்கிய பெண் பறவை இந்நடனத்தில் மயங்கி அதனோடு இணைந்து நடனமாடி ஒன்றிணைகின்றது. இதேபோல் ஆண் மூட்டைப்பூச்சியின் இனப்பெருக்க உறுப்பு ஒரு கம்பி போன்று கூர்மையானது. இந்த ஆண் மூட்டைப் பூச்சியானது காதல் கொண்ட பெண் மூட்டைப்பூச்சியின் அடி வயிற்றிலே இந்தக் கம்பி போன்ற கூர்மையான பகுதியால் குத்தி விந்தணுக்களை உள்ளே செலுத்திவிடும். இந்த இடம் காயப்பட்டு பெண் மூட்டைப்பூச்சிக்குத் தாங்க முடியாத வலியை ஏற்படுத்திச் சில கணங்களில் மறைந்து போகும். இது இயற்கை அதற்கு அழித்திருக்கும் கொடை ஆகும். தாம் விரும்பிய காதலியை அடையக் காதலர்கள் நடத்துகின்ற நாடகங்களை இந்த ஆண் மூட்டைப் பூச்சி காட்டித் தருகின்றது.
பாலியல் முதிர்ச்சியடைந்த நத்தைகளின் தலைப்பகுதியில் Dart Sac என்னுமொரு பை இருக்கிறது. அதறற்குள் ஒரு கூர்மையான கம்பி போன்று இருக்கின்றன. இது லவ் டொட்ஸ் எனப்படுகின்றது. இந்த லவ் டொட்ஸை மற்றைய நத்தையின் தலையிலே செலுத்தும். அப்பொழுது அதற்குள் இருக்கும் ஹார்மோன்; நத்தைக்குள் செல்லும் அதற்குள் இருக்கும் விந்தணுக்கள் மற்றைய நத்தைக்குள் பரவுகின்றன. காதலைப் பரிமாறும் இந்த வித்தை நத்தைகளுக்கே உரியன. இவ்வாறு உலகத்திற் பிறந்த அனைத்து உயிர்களிடத்திலும் காதல் மேம்பட்டிருப்பதையும் அதன் மூலம் உயிர்களின் விருத்தியையும் நாம் காணக்கூடியதாக இருக்கின்றன.
இவ்வாறு காதலுக்காகத் தம்மைத் தியாகம் செய்வதும், விட்டுக் கொடுப்பதும் காலம் காலமாக அனைத்து உயிர்களிடத்திலும் காணப்படுகின்ற பண்பு. தலைவனிடம் காதல் கொண்ட தலைவி அவன் தன்னை மணப்பானோ என்று அறிய தரையிலே மண் பரப்பி தன்னுடைய கண்களை மூடி விரலினால் வட்டம் வரைவாள். தொடங்கிய இடத்தில் விரல் போய் நிற்க வேண்டும். அப்போது தலைவி நினைத்தது நடக்கும் இதனைக் கூடல் இழைத்தல் என்று கூறுவார்கள். இதில் ஏதாவது தவறு வந்து விடுமோ என்று கூடல் இழைத்துப் பார்க்க அஞ்சுகின்ற பெண்களும் உண்டு. இதேபோல் காதலியை அடைவதற்காக வட்டக்கல்லைத் தூக்குவதும், ஏறு தழுவுதலும். வரைபாய்தலும், மடல்மா ஏறதலும் போன்ற சம்பவங்களை இலக்கியக் காதல் மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறது. தமது காதலில் வெற்றி கிடைப்பதற்காக தமது கொள்கையை விட்டுவிடாது கடைப்பிடித்து காதலர்கள் வாழ்ந்து காட்டியுள்ளார்கள்.
ஆனால் இன்று நட்பும் காதலும் கணவன் மனைவி உறவும், பெற்றோர் பிள்ளைகள் உறவும் என்று அனைத்தும் கேள்விக்குறியாக காணப்படுகின்றன. உண்மைக் காதல் நினைத்து ஏங்குவதில் தொடர்கிறது. திருமணமான காதல் பிரிவை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றது. இருப்பினும் காதலுக்கு முடிவில்லை. காலம் உள்ளவரை தொடரும்.
செவ்வாய், 19 ஜூலை, 2022
முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளார்
முத்தமிழ் வித்தகர் விபுலானந்த
அடிகளார்
காலங்காலமாய் விரைகின்ற
பொழுதுகளிலே சில அற்புதமான அவதாரங்கள் தோன்றித் துளங்கி மறைந்து போகின்றனர். ஆனால், காலம்காலமாய் அவர் ஆற்றிய சேவைகள் அவர்களை இறவாப்பேறுபெற்ற
பெரியார்களாக உலக அரங்கிலே வாழ வைக்கின்றன. மகத்தான மக்கட் பிறப்பிலே இறைவனால், பார்த்துப் பார்த்து நுண்ணறிவை ஊட்டிப் படைக்கப்பட்ட
படைப்புக்களே கிழக்கின் ஜோதி விபுலானந்த அடிகளார் போன்ற துறவிகள்.
இக்கட்டுரையை வடிப்பதற்காக நான்
அவர் பக்கங்களைப் புரட்டியபோது கண்ணீர்த்துளிகள் கன்னங்களை நனைத்தன. அறிவுப்பசி மட்டுமன்றி
அநாதைகளுக்கு அடைக்கலம் கொடுத்து, சாதிமத பேதமின்றி
ஆசிரியராக, பண்டிதராக, விஞ்ஞானப் பட்டதாரியாக, பாடசாலைகளின் முகாமையாளராக, பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைப்பேராசிரியராக, அறிஞராக, ஆராய்ச்சியாளராக, மொழிபெயர்ப்பாளராக, சமூகத்துறவியாக, சமூகச்சீர்திருத்தவாதியாக, சமயம், மொழி, கல்வி, கலை என ஐம்பது ஆண்டுகளுக்குள்ளேயே
பல பக்க சாதனைகள் புரிந்து வாழ்ந்து உலகவாழ்க்கை
துறந்த அடிகளார் அவர்களின் வாழ்க்கையும், அதற்கான சந்தர்ப்பங்கள்
அவருக்குக் கிடைத்தமையும், அவற்றைச் சரியான
முறையில் பயன்படுத்திக் கொண்டமையும், கற்றதைக் கொண்டு
தன்னை விளங்கச் செய்தமையும், காலம்காலமாய் அழியாப்
புகழை தேடிக் கொண்டமையும் ஆச்சரியத்தில் ஆற்றும் விடயங்களாகக் காணப்படுகின்றன. கற்பனை
பண்ணிப் பார்க்கமுடியாத அளவிற்கு பிரமாண்டமாக என் மனக்கண்ணில் தோன்றுகின்றார்.
அடிகளார் அவர்களுக்குத் தம்பிப்பிள்ளை
என்னும் நாமத்தையே பெற்றோர் சூட்டினர். இளமையில் நோய்வாய்ப்பட்டதனால் கதிர்காமம் கொண்டு
சென்று அவருக்கு மயில்வாகனன் என்னும் நாமம் சூட்டப்பட்டது. எப்பொழுதும் சாந்தமாகவே
காணப்படும் இவரை, மயில்குஞ்சு என்று
இளமையிலே அனைவரும் அன்புடன் அழைப்பார்கள். 1922 ல் சென்னை மயிலாப்பூரில் அமைந்திருந்த இராமகிருஷ்ண
மடத்தில் சேர்ந்து பிரபோதசைதன்யர் என்னும் பிரமச்சரிய ஆச்சிரமப்பெயர் சூட்டப்பட்டார். 1924 ஆம் ஆண்டு பௌர்ணமி
சித்திரை தீட்சையின் பின்பே விபுலானந்த அடிகளார் என்னும் நாமம் சூட்டப்பட்டது. விபுலம்
என்றால், அறிவு. ஆனந்தம்
என்றால், மகிழ்விப்பவர்.
அறிவினால் உலகை மகிழ்விப்பவர் என்னும் அதி அற்புதமான கருத்தமைந்த பொருத்தமான பெயர்
இவருக்கு சூட்டப்பட்டது. இவர் குணம் நாடி, குறிப்பிட்ட நாமங்கள்
அவரை வந்தமைந்தமைந்தாலும் விபுலானந்த அடிகளார் என்னும் நாமமே உலகலாவிய ரீதியில் நின்று
நிலைக்கின்றது.
ஒருமுறைதான் படிப்பார் உள்ளத்தில்
பதித்துவிடுவார். இவர் அறிவுத் திறமை மேலும் வெளிப்பட இவரின் தந்தையார் சாமித்தம்பி
அவர்கள் வீட்டிலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்பிப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
பெரியபுராணவசனம், பஞ்சதந்திரம், வினோதரசமஞ்சரி, வில்லிபாரதம், நைடதம், கந்தபுராணம், காசிகாண்டம்,
முதலிய
நூல்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தந்தையாரால் தரப்பட்டது. நுனிப்புல் மேய்வது போலன்றி ஒவ்வொன்றையும்
முழுவதுமாகக் கற்றாலன்றி மற்றைய நூல் தரப்படமாட்டாது. துறைபோக ஒன்று கற்றதன் பின்பே
மற்றைய நூல் தரப்படும் என்னும் தந்தையாரின் கட்டளையின் படியே தான் கற்றதாக அடிகளார்
கூறியுள்ளார். பொறுப்பான தந்தை அமையப்பெற்றதும் அடிகளாருக்கு ஆரோக்கியமாகவே பட்டது.
இவர் வடமொழி, இலத்தின்,
கிரேக்கம், பாளி, சிங்களம், ஆங்கிலம்,
வங்காளம், அரபு ஆகிய மொழிகளில் கொண்ட ஆழ்ந்த அறிவே ஏனைய இலக்கியங்களுடன்
தமிழ்மொழியை ஒப்பிட்டுத் தமிழின் இன்பம் நுகரக்கூடியதாக இருந்ததுடன் இயல், இசை, நாடகம் என்னும்
முத்தமிழையும் ஒன்றாகவே ஆய்வுசெய்த முதல் வித்தகராகவும் திகழக்கூடியதாகவும் இருந்தது.
கிரேக்க இலக்கியங்களை
ஒப்பிட்டு சிறப்பான நூல்கள் எழுதியுள்ளார். மதங்கசூளாமணி என்னும் நூல் தமிழ் நாடகம்
பற்றிய ஆய்வுப் பெட்டகமாகத் திகழ்கின்றது. தரங்கயனாரின் தசரூபத என்னும் வடமொழி நாடகத்தைத்
தமிழில் மொழிபெயர்த்து வடமொழி நாடகம் எப்படி இருக்கவேண்டுமென்று அதிலுள்ள எடுத்துக்காட்டியல் என்னும் பகுதியில்
விளக்கியுள்ளார். செக்ஸ்பியர் நாடகங்களுடன் ஒப்பிட்டு மேற்கு நாட்டு நாடகங்களில் நாடக
உறுப்புக்கள் எப்படி அமைந்திருக்கின்றன என்பதை விளக்குகின்றார். இவ்வாறு செக்ஸ்பியர்
நாடகங்களுடன் ஒப்பிட்டு தமிழ் நாடகங்களுடன் ஆய்வு செய்ய இவருக்கு ஆங்கில அறிவு மேம்பட்டுக்
காணப்பட்டது. இவ்வாறு ஆங்கில அறிவு மேம்பட மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி என்னும்
ஆங்கிலப் பாடசாலை மெதடிஸ்த மிஷனரிமாரும் கத்தோலிக்கக் குருமாரும் அடியெடுத்துக் கொடுத்தனர்.
காலைப்பொழுது பாடசாலைப் பாடங்கள், மாலைப்பொழுது பாரதவசனங்கள்
கற்பது என பழகிய பழக்கமானது பின்னாளில் தமிழும் ஆங்கிலமும் ஒன்றாகக் கற்க இலகுவாக இருந்தது.
அதேபோல் கணிதத்தை இவர் புனித மைக்கேல் கல்லூரியில் கல்வி கற்ற காலத்தில் இருந்த பிரெஞ்சு
அதிபர் வண.பொனல் என்பவரிடம் கற்றார். இது இவரது கணிதத்திறமைக்கு அடிகோலாக அமைந்ததுடன்
யாழ்நூல் ஆராய்ச்சிக்குக் கணிதத் திறமையும் காரணமாக அமைந்தது.
இசைமேல் ஆர்வம் தோன்ற மட்டக்களப்பு
வாவியிலே பூரணநிலவு பொங்கிப் பூரிக்கும் பொழுதினிலே அங்கு பொங்கி எழும் நீரரமகளிர்
காந்தர்வ இசையில் களிப்புற ஆழக்கடல் நோக்கி வாவியிலே பயணம் செய்வார். அவ்விசை கேட்டு
மகிழ்ந்தின்புறுவார். ஆண்டுதோறும் ஆனித்திங்களிலே மட்டக்களப்பு மாநிலமெங்கும் காணப்படும்
கண்ணகி அம்மன் ஆலயங்களில் பாடப்படும் பாடல்களும் சிலப்பதிகார பாடல்களின் சிலம்பொலிகளும்
விபுலானந்த அடிகளாரின் இசை ஆராய்ச்சிக்கு அடிமனது ஆரம்பக் காரணமாக இருந்திருக்க வேண்டும். விஞ்ஞானத்தையும் தமிழையும் ஒன்றாகக் காணும் திறமை
அடிகளார்க்கு இருந்ததனால், கணிதம், பௌதிக விஞ்ஞானம், தமிழ் இசை அறிவு கலந்து இவர் யாத்து, 1947ல் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் வெளியீடு செய்யப்பட்ட
யாழ்நூல் அரங்கேறக் காரணம் பற்றி அவரே ஓரிடத்தில் குறிப்பிடுகின்றார்.
``எந்த நூலை வாசித்தாலும் தேனாகத் தித்திக்கவில்லை சிலப்பதிகாரமே
தேனாகத் தித்தித்தது‘‘
எனத் தன் வாயாலேயே
எடுத்துரைத்திருக்கின்றார். சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக் காதையை ஆராய்ந்தார். சிலப்பதிகாரத்தின்
உரையில்லாத பகுதிகளுக்கு உரைதேடப் புகுந்த ஆராய்ச்சியின் பயனும், மாதவியும் கோவலனும் கடற்கரையிலே இருந்து மாறிமாறி
மீட்டிய யாழ் இசையும் இவர் கருத்தைக் கவர்ந்தது. இவ் யாழை யாம் ஏன் மீண்டும் பெற முடியாது
என்று சிந்தித்தார். வங்கக்கடலன்னை கொண்டு சென்ற முளரியாழ், சுருதிவீணை,
பாரிசாத
வீணை, சதுர்தண்டிவீணை, போன்றவற்றை அடிகளார் பழந்தமிழ் நூல்களில் கற்றவற்றைக்
கொண்டு மீண்டும் 23 ஆண்டுகள் உழைத்து
உலகிற்கு செய்தளித்தமை கண்டு இசைத்தமிழ் அன்னை ஆச்சரியத்தில் அகலக்கண்விரித்தாள்.
யாழ் கருவியை பெண்ணின் 7 வகைப் பருவத்துடன் ஒப்பிட்டு அடிகளார் வர்ணித்திருக்கும்
பாங்கு இன்புறத்தக்கது. ``சரித்திரகால எல்லைக்கெட்டாத
காலத்திலே வில்யாழெனக் குழவியாயுதித்து மழலைச்சொற்பேசி சீறியாழ் என்னும் பேதைப் பருவமெய்தி, பாணனொடும் பாடினியொடும் நாடெங்கும் திரிந்து ஏழைகளும்
இதயம் களிப்பெய்த இன்சொல் கூறிப் பின் பேரியாழ் என்னும் பெயரோடு பெதும்பைப் பருவமெய்திப்
பெரும் பாணரோடு சென்று குறுநில மன்னரும், முடிமன்னரும், தமிழ்ப்புலவரும், கொடைவள்ளல்களும்
கேட்டு வியப்பெய்தும் வண்ணம் நயம்பட உரைபகர்ந்து அதன்பின் மங்கைப்பருவமெய்தி அப்பருவத்திற்கேற்ப
புதிய ஆடையும் அணிகலன்களும் பூண்டு நாடக அரங்கத்திலே திறமை காட்டி மடந்தைப் பருவம்
வந்தெய்தலும், திருநீலகண்ட பெரும்பாணரோடும், மதங்கசூளாமணியாரோடும் அம்மையப்பர் உறைகின்ற திருக்கோயில்கள்
பலவற்றை வலம் வந்து தெய்வ இசையினாலே அன்பருள்ளத்தினை உருக்கி, முத்தமிழ் வித்தகராற் பாராட்டப்பட்டு அரிவைப் பருவம்
வந்து எய்துதலும் அரசிளங்குமரிகளுக்கு இன்னுயிர்ப்
பாங்காகி அவர்க்கேற்ற தலைவரை அவர்பாற் சேர்த்துச் சீரும் சிறப்பும் எய்தி இன்று யாழ்
என்னும் மொழி நங்கை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயினாள்‘‘ என்று எடுத்துரைத்தார். மீண்டும் உயிர் பெற வைத்தார்.
அடிகளாரின் சமூகசேவைக்கு வாலிபப் பருவத்தில்
அவர் பயின்ற படைப்பயிற்சி உரமெடுத்துக் கொடுத்தது. ஐரோப்பிய மகாயுத்த காலத்திலே தரைப்படையில்
சேர்ந்து குதிரையேற்றம், துப்பாக்கிப் பிரயோகம், முதலிய படைப்பயிற்சிகள் பெற்றார். கடற்கரையில் காவல்
இருந்து எதிரிகளை நாட்டுக்குள் புகவிடாமல் காத்தார். சமூகத்தொண்டு தீண்டாமை ஒழிப்பு, சமயத்தொண்டு இவை எல்லாம் இவரை ஒரு வீரத் துறவியாகவே
காட்டுகிறன.
யோக சுவாமிகளின் தொடர்பே இவருக்கு
ஆன்மீக வளர்ச்சிக்குத் துணையாகத் திகழ்ந்தது.
பாரதிமேல் கொண்ட தீராத நாட்டம், தமிழை நவீனப்படுத்தும் பண்பு, ஒப்பியல் கல்வி இவையே பாரதியை உலகுக்கு வெளிப்படுத்த
உதவியாக இருந்தன. பாரதியைப் பித்தன் என்றும்,
கஞ்சாக்கவி
என்றும் அவர் பாடல்கள் வீண் உரைநடையென்றும் தூற்றிய தமிழறிஞர்களை கற்றறிந்தார் ஏற்றுவது கலித்தொகை மட்டுமன்று கண்ணன்
பாட்டுமே என்று கூறிப் புரியவைத்தவர். பாரதி பெருமையை உலகுக்குணர்த்த முதற்காரணம் அடிகளார்
என்றால், அது மிகையில்லை.
இது மறைக்கப்பட்ட உண்மையுமாகின்றது.
அடிகளார் தமிழிசை சம்பந்தமாக நிகழ்த்திய சொற்பொழிவுகளும், ஆராய்ச்சிக் கட்டுரைகளும் இப்பொழுது நூல்களாக வெளிவந்துள்ளன.
எதையும் ஆழ்ந்து நோக்கும் அவர் சிறப்பை நடராசவடிவம் என்னும் நூல் விளக்குகின்றது. ஆரியமும்
தமிழும் வல்ல பண்டிதமணியாருக்கு ஆங்கிலமொழிக் கவிநயத்தை எடுத்துக்காட்டக் கருதி எழுதப்பட்ட
பாட்டுடை உரைத்தொடரே ஆங்கிலவாணி என்னும் கட்டுரையாகும். அடிகளாரின் கற்பனை வளத்தினையும், கவித்துவத்தினையும் அவரால் எழுதப்பட்ட தனிப்பாடல்கள், தில்லைமாநகர் திருவமர்மார்பன் திருக்கோயிற்காட்சி, கங்கையில் விடுத்த
ஓலை, நீரரமகளிர் இன்னிசைப்பாடல், மொழிபெயர்ப்புப் பாடல்கள் போன்றன மெய்ப்பிக்கின்றன.
இத்தனை அறிவுஞானம் பெற்ற அடிகளாரின் நினைவுநாளை
இலங்கைஅரசு அகில இலங்கை அகில இலங்கை தமிழ்மொழி தினமாக பிரகடனப்படுத்தி கௌரவித்தது என்பது
ஆச்சரியப்படும் விடயமல்ல.
முற்றுமுழுதான அறிவுத் திறனும், அயராத உழைப்பும் தமிழ், இலக்கியம்,
சமயம், கலை, சமூக நாட்டுப்பணிகளும்
இவருள்ளத்தில் ஊற்றாய் ஊறிக்கொண்டிருந்தமையே இறவாப்புகழ் பெற்று என்றும் உலகமெலாம்
போற்றப்படும் உத்தம துறவியாக, வித்தகராக, அடிகளார் திகழ்வதற்கு காரணமாகின்றன. கலியுக அகத்தியர், புதுமைக்கபிலன், குருபரம்பரையின்
குலவிளக்கு, வீரத்துறவி இவ்வாறாக
அறிஞர்களால் போற்றப்படும் அடிகளார் பிறந்த மண்ணில் நானும் பிறந்தேன் என்னும் போது எனக்குள்ளும்
மகிழ்ச்சி பொங்கிப் பிரவாகிக்கின்றது.
வியாழன், 7 ஜூலை, 2022
முரசுக்குப் பின்னால் இன்று கொட்டும் முரசாக முகநூல
உலகம் ஒரு சிறு கிராமமாக ஒடுங்கிவிட்டது. நாம் உலகத்தைக் கைகளுக்குள் கொண்டு வந்து காட்சிப் பொருளாக்கிவிட்டோம். சினிமாக் கொட்டகைகள், வியாபார ஸ்தாபனங்கள், விழாக்கள், ஆலய வழிபாடு இவைபோன்ற எதுவுமே தேவையில்லை. அனைத்தையும் இருந்த இடத்தில் இருந்து கண்டு களிக்கின்றோம்
காலையில் எழுந்து கமராக் கண்களை விரிக்கின்றோம். முகநூல், புலனம் ஆகிய கட்டிடங்கள் அழைக்கின்றன. அவற்றிலே முகநூலைத் திறந்தால், மரணஅறிவித்தல், பிறந்தநாள் விழா, திருமண விழா, புத்தக வெளியீடு, பொருள்களின் விற்பனை, உலகச் செய்திகள், இலக்கிய, கலை நிகழ்வுகள், அரசியல் ஆய்வுகள், உறவினர்களின் சந்திப்பு உரையாடல்கள் என தொடர்ந்து றீல் போல் விழுந்து கொண்டே இருக்கும். வாழ்த்துகள், ஆழ்ந்த அனுதாபங்கள் மாறி மாறி தட்டச்சில் கைகள் சுழலுகின்றன. ஒரு தளம் பல விளம்பரங்களுக்குரிய காட்சியகமாக இருக்கின்றது. கதவைத் திறந்து முன் பகுதியில் இருக்கும் பிறந்தநாள் விழா அறை. அதற்குள் பலரும் பயணம் செய்த காட்சியைக் காணலாம். இவ்வாறு ஒவ்வொரு அறையாகப் காட்சியகத்தைப் பார்த்து முடித்து வெளிவர பல மணித்தியாலங்களைக் கடந்து விடுவோம்.
2003 ஆம் ஆண்டு Mark Zuckerber ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது நண்பர்களுக்காக உருவாக்கிய Facemash.com என்னும் இணையத்தளம். பின் 2004 இல் முகநூலாக உருவெடுத்தது. பல நாடுகள் முகநூலைத் தடை செய்துள்ளன. பல இடங்களில் வேலைநேரங்களில் பார்ப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இருந்தும் 2022 தை மாதக் கணக்கீட்டின்படி மாதந்திரம் முகநூலைப் பயன்படுத்துபவர்கள் 2.912 பில்லியன்கள் என்று கணக்கீடு காட்டுகின்றது. நாள்தோறும் பயன்படுத்துபவர்கள் 1.929 பில்லியன்கள். ஒரு பில்லியன் என்பது 1.000,000,000 என்பதை நாம் அறிந்திருக்கின்றோம். 2009 ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய கூட்டரசு நாடுகளின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு செயலகம் தற்பொழுது உலக மக்கள் தொகை 6,831,200,000 என மதிப்பிட்டுள்ளது. 1990 ஆண்டுகளின் பிற்பகுதியில் உலகெங்கும் நிகழும் பிறப்புகள் வருடத்திற்கு 173 மில்லியனாக இருந்ததிலிருந்து, தற்போது இறப்புகளின் எண்ணிக்கையைப் பிறப்புகளின் எண்ணிக்கை விஞ்சிவிட்டதால் உலக மக்கள்தொகையானது 2050 ஆம் ஆண்டில் 8 முதல் 10.5 பில்லியன் வரையில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படியென்றால் இந்த முகநூலுக்குள் புதைந்துள்ளவர்களுடைய தொகை எவ்வாறு உயரும் என்று அறியக் கூடியதாக இருக்கின்றது. இந்தக் காலம் கொண்டு வந்து தந்த ஒரு காட்சியகமமே முகநூல் என்பது உண்மை. இருந்தும் இந்த முகநூலின் சாதகங்கள் பாதகங்கள் எடுத்துரைப்பது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல.
எப்படி இருந்தது இப்படியானது என்பதே இக்கட்டுரை. முற்காலத்தில் ஒரு விழா என்றால், அறிவித்தல்கள் கடதாசியில் பிரசுரிப்பார்கள். அயலவர்களுககுக் கொண்டு சென்று கொடுப்பார்கள். இலலையென்றால், பத்திரிகைகளில் வெளியிடுவார்கள். சங்ககாலத்திலே ஒரு இடத்தில் விழா நடைபெறப் போகின்றது என்றால், ஒவ்வொரு தெருவாகக் குயவர்கள் சென்று விழாச் செய்தியினை உரைக்கின்ற வழக்கம் இருந்தது. அரசனுடைய பிறந்தநாள், படையெழுச்சி நாள், மணநாள் போன்ற நிகழ்வுகளை முரசறைந்து அறிவிப்பார்கள். உதாரணமாக அரசனுக்கு பிறந்தநாள் என்றால், அந்தச்செய்தியை மக்களுக்கு அறிவிக்கும் போது முரசறைந்து அறிவிக்கும் வழக்கம் இருந்தது. இதனை
'திருநாள் படைநாள் கடிநாள் என்றிப்
பெருநாட் கல்லது பிறநாட் கறையாச்
செல்வச் சேனை வள்ளுவ முதுமகன்'
என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன. ஒவ்வொரு விழாக்களுக்கும் ஒவ்வொரு வகையான முரசு பயன்படுத்தப்பட்டது. முரசு போர்முரசு, கொடைமுரசு, மணமுரசு என தேவைக்கேற்பப் பயன்படுத்தப்பட்டன. முரசினை வைப்பதற்கு என்று ஒரு தனிக் கட்டிலும் உருவாக்கப்பட்டு அதன் மீது வைக்கப்பட்டிருந்துள்ளன. இச்செய்தியினை பதிற்றுப்பற்று எடுத்துக்காட்டுகின்றது.
'செங்கள விருப்பொடு கூலம் முற்றிய
உருவச் செந்திணை குருதியொடு தூஉய்
மண்ணுறு முரசம் கண்பெயர்த்து இயவர்||
விழாச் செய்திகளைச் சொல்வதற்காக மணமுரசு பயன்படுத்தப்பட்ட செய்தியை மணிமேகலை எடுத்துக்காட்டுகின்றது.
வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசும்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி
ஏற்றுதி போர்த்த இடியுறு முழக்கின்
கூற்றுக்கண் விளிக்கும் குறுதி வேட்கை
முரசுகடிப் பிகூஉம் முதுகுடிப் பிறந்தோன்
என்று மணிமேகலை கூறும். பழைமை உடைய குடியில் பிறந்தவன் வென்ற காளையின் தோலினால் போர்த்தி இடி போன்ற முழக்கத்தைச் செய்கின்ற முரசைக் கச்சையானையின் கழுத்தின்; மேலே ஏற்றிக் குறுந்தடியால் அடித்து விழாச் செய்தியை ஊர் மக்களுக்கு அறிவித்தான் என் திருவிழாச் செய்தியை ஊரவர்க்கு அறிவிக்க் போது முரசு அறைந்த செய்தியை மணிமேகலை எடுத்தக்காட்டுகின்றது.
இவ்வாறு முரசு செய்கின்ற மரம், அது செய்கின்ற முறைமைகள், அதற்குக் கிடைக்கின்ற மரியாதை, பல்வேறுவிதமான முரசுகள் அவைபற்றிய விளக்கம் என்பன அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, மணிமேகலை, பெருங்கதை போன்ற பாடல்களில் அழகாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. ஆனால், இந்த முரசு இன்று ஒரு பக்கப்பார்வையில் முகநூலுக்குள் அடங்கிவிட்டதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
இதேபோல் 1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் Mark Zuckerberg உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட தஞ்சைப்பெரிய கோயிலை எடுத்துப் பார்த்தால் அது கட்டப்பட்ட காலப்பகுதியில் வேதம் ஓதுவார் இல்லங்கள், வியாபார ஸ்தாபனங்கள், தேவதாசிகளின் இல்லங்கள், நடன ஆலயங்கள், இசைக்கல்லூரிகள், திண்ணைக் பள்ளிக் கூடங்கள் போன்றன கோயிலுக்குரியதாக கட்டப்பட்டிருந்தன எனக் கற்றிருக்கின்றோம்.
இங்கு முகநூல் பல விடயங்களைத் தனக்குள் அடக்கி எம்மவரிடையேயும் உயர்ந்து நிற்பதை 2022 ஆண்டு காலப்பகுதியில் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது
வியாழன், 30 ஜூன், 2022
கர்ப்பக்கிரக ஆய்வுகூட அன்பளிப்பு
கழுத்தில் தாலி ஏறிவிட்டால் புதுமணத் தம்பதிகளிடம் கேட்கும் அடுத்த கேள்வியாக அமைவது வயிற்றில் பூச்சி புழுக்கள் இல்லையா? என்பதே. இந்தக் கேள்வி தமிழர்கள் மத்தியில் கலாசாரமாகவே இருக்கின்றது. திருமணம் மூலம் அங்கீகாரம் வழங்கி அவர்களை இனத்தின் விருத்திக்குத் தயாராகச் செய்யும் கடமை தம்மிடம் இருப்பதாக பெரியவர்கள் கருதுகின்றார்கள். அந்தக் கருக்கட்டல் சரியான முறையில் ஏற்படுவதற்கும் அக்கருவைச் சரியான முறையில் வளர்த்தெடுப்பதற்கும் உரிய ஆலோசனைகளை வழங்குவதும் அவர்களின் கடமையாக இருக்கின்றது. முதல் இராத்திரிக்கு நாள் குறித்துக் கொடுப்பதும் இல்லையென்றால் தேனிலவுக்கு தம்பதியினரை அனுப்பி வைப்பதும் ஒரு ஆரோக்கியமான குழந்தையை உலகத்துக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கமாக அமைகின்றது. இச்செயற்பாடு எந்த அளவிற்கு இளந் தலைமுறையினரால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது என்பது தற்காலத்தில் கேள்விக்குறியாக இருந்தாலும் முறையற்ற உறவுகளால் கருத்தரித்தல் ஏற்படுவது இக்காலத்தில் சர்வசாதாரணமாக இருக்கின்றது. இதனால் கருச்சிதைவுகள் நடைபெறுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. உருவான குழந்தையை வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மூலமோ வீட்டில் மருத்துவச்சியை அழைத்தோ குழந்தைப் பேறை கவனமாகச் செய்கின்ற முறை ஐரோப்பிய நாட்டிலும் இருக்கின்றது.
குழந்தை வயிற்றில் உருவாவதற்கு எடுக்க வேண்டிய முயற்சிகள், எப்படி வளர்கின்றது, எவ்வாறு வளர்த்தெடுக்கப்படுகின்றது. ஏன் பிள்ளைக்குக் குறைபாடுகள் ஏற்படுகின்றன. பிள்ளையை எப்படி வெளியே இலகுவாக எடுப்பது. கருசசிதைவு செய்வது என்பன பற்றி நற்றிணை, புறநானூறு, திருமந்திரம், குறுந்தொகை, பட்டினத்தார் பாடல்கள், போன்ற பல பாடல்களிலே எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
அக்குழந்தை கருவாகின்ற காலத்திலே புல்லுக்கு மேலே விழுந்த பனித்துளியின் அளவிற்கு அந்த கரு இருக்கும் என்று அருணகிரிநாதர் தன்னுடைய திருப்புகழிலே பாடியிருக்கின்றார்.
அறுகுநுனி பனியணைய சிறிய துளி
பெரியதொரு ஆகமாகி என்கிறார்.
இதனைப் பட்டினத்தார் பாடுகின்ற போது
"ஒருமட மாதும் ஒருவனுமாகி இன்ப சுகம்தரும் அன்பு பொருந்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து ஊறு சுரோணிதம் மீது கலந்து
பனியில் ஓர் பாதி சிறு துளி மாது பண்டியில் வந்து புகுந்து திரண்டு
பதும அரும்பு கமடமி தென்று பார்வை மெய் வாய் செவி கால் கைகள் என்று
உருவமும் ஆகி உயர வளர் மாதம் ஒன்பதும் ஒன்றும்
நிறைந்து மடந்தை உதரம் அகன்று புவியில் விழுந்து
ஓரறிவு ஈரறிவாகி வளர்ந்து"
என்று பாடிச் செல்கின்றார்
இதனையே திருவாசகத்திலே அற்புதமாக கரு உருவாகி குழந்தையாக பிறப்பது பற்றி மாணிக்கவாசகர் பாடுகின்றார்.
மானுடப் பிறப்பினுள் மாதா வுதரத்
தீனமில் கிருமிச் செலவினிற் பிழைத்தும்
ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும்
அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் ஊறலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்
மனிதப் பிறப்பிலே தாயின் வயிற்றிலே கருவுறுகின்ற போது அதனை அழிப்பதற்குச் செய்யும் குறைவில்லாத புழுக்களின் போருக்குத் தப்பியும், முதல் மாதத்தில் தான்றிக்காய் அளவுள்ள கரு இரண்டாகப் பிரிவு படாமல் தப்பியும், இரண்டாம் மாதத்தில் நடக்கின்ற காரியங்களாலே உருக்கெடுவதிலிருந்து தப்பியும், மூன்றாம் மாதத்தில் தாயின் மதநீர்ப் பெருக்குக்குத் தப்பியும், நான்காவது மாதத்தில் அம்மத நீர் நிறைவினால் உண்டாகும் பெரிய இருளுக்குத் தப்பியும், ஐந்தாவது மாதத்தில் உயிர் பெறாது இறப்பதிலிருந்து தப்பியும், ஆறாம் மாதத்தில் கருப்பையில் சொறி மிகுதியால் உண்டாகிய துன்பத்தினின்று தப்பியும், ஏழாவது மாதத்தில் கருப்பை தாங்காமையால் பூமியில் காயாய் விழுவதனின்று தப்பியும்(குறைப்பிரசவம்), எட்டாவது மாதத்தில் வளர்ச்சி நெருக்கத்தினால் உண்டாகும் துன்பத்தினின்று தப்பியும்(இட நெருக்கடி), ஒன்பதாவது மாதத்தில் வெளியே வர முயல்வதால் வருந்துன்பத்தினின்று தப்பியும், குழவி வெளிப்படுதற்குத் தகுதியாகிய பத்தாவது மாதத்திலே தாய் படுகின்ற கடல் போன்ற துன்பத்தோடு துயரத்தினின்று தப்பியும், பூமியிற்பிறக்கின்றது.
இவ்வாறு பிறக்காது காந்தபுரத்து மன்னன் மகள் பிரசவ வேதனையால் துடித்தபோது நறையூர் மருத்துவச்சி அவளுடைய வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுத்ததாகக் கொங்கு மண்டல சதகம் 92 ஆவது பாடலிலே பாடப்பட்டுள்ளது. இந்நூல் 11 ஆம் நூற்றாண்டு எழுதப்பட்டது.
குறைவறு தெண்ணீர் நதியணை காந்தபுரத் தொரு நல்
லிறை மகளார் மக வீனப் பொறாதுட லேங்க வகிர்
துறை வழி பேற்று மகிழ்வூட்டு மங்கல தோன்றி வளர்
மறைவழி நேர் நறையூர்நாடு சூழ் கொங்கு மண்டலமே
என அறுவைச்சிகிச்சை மூலம் குழந்தை பிறந்த செய்தி கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு பெற்றெடுக்கும் பிள்ளைகளைக் கருச்சிதைப்பது பற்றிக் கூறும் போது இது ஒரு பாவச் செயல் எனவும் மருத்துவர்களோ மற்றவர்களோ அதற்கு ஊக்கமளிக்கக் கூடாது என புறநானூற்றுப் பாடல் எடது;துரைப்பதில் இருந்து அக்காலத்தில் கருச்சிதைவுமுறை நடைபெற்றிருக்கின்றது என்பதை அறியக் கூடியதாக இருக்கின்றது.
கருப்பை என்பது கர்ப்பக்கிரகம் போன்றது. அங்கு பரிசுத்தமான ஒரு உயிர் உற்பத்தி நடைபெறுகின்றது. ஆணும் பெண்ணும் தம்முடைய எதிர்கால வாரிசை உருவாக்க எடுக்கும் முயற்சியின் ஆய்வுகூடம். இதனாலேயே இக்கரு வளர்ச்சி சிறப்பாக அமைய என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பழைய தமிழ் இலக்கியங்கள், சித்தர் பாடல்கள் அற்புதமாக எடுத்துக்காட்டியிருக்கின்றன.
இது ஆனி மாத வெற்றிமணி பத்திரிகையில் வெளியானது
Dr.Abraam George - Shanti Bhavan
கல்வியின் மூலம் வறுமையை, ஏற்றத்தாழ்வுகளை நீக்க முடியும் என்று முன்னெடுத்து வெற்றி கண்டவரே டாக்டர் ஆபிரகாம் ஜோர்ஜ் என்பவர். இவர் என்ன செய்தார...
-
தோல் பேர்த்திய உடலிலே வகைவகையான வண்ணங்களில் பிடித்தவர்களின் உருவங்கள், காதலர்களின் பெயர்கள், குறியீடுகள் என்று உடல் முழுவதும் பச்சை குத்திக...
-
தன் முயற்சி பலித்தால் , வாழ்க்கை வைரங்கள் மின்னுமாப் போல் உணர்வு தோன்றும். விண்ணைப் பிடிப்பதானால் , இன்னும் முயற்சி வேண்டுமென உள்ளமும் உடல...
-
கவி என்னும் வித்துக்குள் உலகை கட்டிப் போட்ட கவிஞனே 💪 காற்றும் கூடப் பேசும் உன் மொழியைக் கால...