• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    செவ்வாய், 6 ஜூன், 2023

    விழி சொல்லும் கதைகளை விட மனம்சொல்லும் கதைகள் உணர்வுபூர்வமானவை

     



    விழி சொல்லும் கதைகளை விட மனம்சொல்லும் கதைகள் உணர்வுபூர்வமானவை

    காரணமில்லாமல் மனம் சிலரைத் தேடும். முன்னமே ஒட்டி உறவாடி விட்டுச் சென்றவர்களின் நினைவுகள் மனதுக்குள் தவியாய் தவித்து ஊசலாடும். இது உறவுக்கு மட்டுமா? இல்லை ஊருக்கும் தான் அது பொருந்தும்.  விழி சொல்லும் கதைகளை விட மனம் சொல்லும் கதைகள் உணர்வு பூர்வமாக இருக்கும். புலம்பெயர்ந்து பிறப்பில் இருந்தவர்களைத் தொலைத்து  யாரோ ஊர் பேர் தெரியாத மனிதர்கள் எல்லாம் எம்மோடு ஒட்டி உறவாடுகின்ற போது ஏதோ கனவுகள் போல பழைய ஊர் ஞாபகங்கள் நிழலாடிக் கொண்டேயிருக்கும். இது வெளியில் தெரியாது மனதுக்குள் இருக்கும் ஒரு ஏக்கம். இது அனைவருக்கும் தான் இருக்கின்றது. இந்த மனநோய் இல்லாத புலம்பெயர்ந்த மக்கள் யாருமேயில்லை. கடமைக்காகவும் இருப்பை வலுப்படுத்தவும் ஓடிஓடி உழைத்து ஓய்ந்த பின் தவிப்புக்கு மருந்து தேடப் பிறந்தகம் நோக்கிப் பறக்கின்றவர்கள் அங்கு எதிர்பார்ப்பதெல்லாம் அன்பு, பாசம், அமைதி, அந்தப் பிள்ளைப் பிராயத்து நினைவுகளை மட்டுமே. வானத்தில் பறந்து சென்று மகிழ்ச்சி கண்டாலும் திரும்பவும் வானத்தில் பறந்து திரும்பவும் வாழும் நாட்டில் கால் பதிக்கவே வேண்டும். 

    என்னுடைய என்னையே நானறியேன் என்னும் நாவலிலே முக்கிய கதாபாத்திரம் பேசுவதை இங்கு பதிவு செய்கின்றேன் 

    அந்தக் காற்றைச் சுவாசிப்பேன். என் தாய் மணலில் புரண்டு எழுவேன், அந்தச் சூரியனின் கதிர்களை என் வெற்று உடம்பினால் உடைப்பேன். கால்களால் இலங்கை மண்ணைத் தட்டித்தட்டி ஒத்தடம் கொடுப்பேன், உறவினர் மனதுக்குள் நுழைந்து திரும்புவேன், தியேட்டருக்குள் சென்று சினிமா பார்த்து மூட்டைப்பூச்சிகளுக்கு இரத்ததானம் வழங்குவேன், பள்ளிவாசலிலே நாரிசாசோறு உண்பேன், பொடிமெனிக்கா வீட்டில் பாற்சோறும் கட்டச்சம்பலும் உண்பேன், விகாரையிலே தாமரைப்பூ வைத்து வணங்குவேன், கோயில் குளத்திலே மூழ்கி எழுவேன், சின்னத்தம்பிப் படத்து பிரபுபோல் ஏரியிலே குளிப்பேன்,  அநாதைப்பிள்ளைகளைப் பார்த்து நம்பிக்கை விதைத்து வருவேன், மாமரநிழலிலே ஆறுதலாய் அமர்ந்திருந்து கறுத்தக் கொழும்பான் மாம்பழம் கடித்துத் தின்பேன், பழஞ்சோற்றுக் கஞ்சியிலே ஊறுகாய் சேர்த்தெடுத்து வாசற்கட்டிலே அமர்ந்து காற்று வாங்கி கஞ்சி குடிப்பேன். இப்படி எத்தனையோ ஆசைகள் எனக்குள்ளே இருக்கின்றன. என்று அவர் சொல்வதாக எழுதியிருக்கிறேன். 

    ஏறாவூரிலே நான் வாழந்த அந்தத் தெரு. நடக்கப் பழக்க மில்லாமல் ஓடியே சென்ற சாலை ஓரங்கள்

    சதங்களை எண்ணிக் கொடுத்து முந்திரியம் பருப்புக்கள் வாங்கிய போது முந்திரிப் பால் சுட்டுக் கறுத்த விரல்களால் பெட்டியைத் திறந்து உம்மா எண்ணிக் கையில் புதைத்த பருப்பை வாயில் போட்டபடி மீண்டும் ஓடிய நினைவுகள். என்னுடைய ஐயாவின் காலைப்பிடித்தால் காலுக்கு மேல் ஏறி நடந்தால் 50  சதம் கிடைக்கும். அந்தச் சதங்களை முன் கடையில் போத்தலுக்குள் இருக்கும் முட்டாசு வாங்கி சுவைத்த காலங்கள் ஊர் நினைவுகளை மீட்டுகின்றன. நாம் கடந்து போன காலங்களில் மறந்து போனவை அதிகம். சிட்டுக்குருவிகளாக பறந்த அந்த நாட்கள் நினைவுக்குள்ளே நிழலாடுகின்றன 

    பொப்பிசைச் சக்கரவர்த்தி A,E.மனோகரன் பாடிய பாடலொன்றில்


    கோணேஸ்வரர் கோயில் கொண்ட திருமலையூரில்

    ராவணேசன் ஞாபகமும் வருகுது அங்கே

    கன்னியா வெந்நீர் ஊற்றும் கலங்கரை ஒளி விளங்கும்

    இயற்கை துறைமுகந்தானே என்று பாட அந்தக் கன்னியா வெந்நீர் ஊற்றிலே உள்ள வெப்பத்தின் தன்மையைச் சின்னத்தம்பிப் புலவர் விளக்கும் போது 

    காதலனைப் பிரிந்தவளின் மனம்போல ஒன்று 

    கவிபாடிப் பரிசுபெறான் மனம்போல ஒன்று 

    தீதுபழி கேட்டவன்தன் மனம்போல ஒன்று

    செய்தபிழைக் கழுங்குமவன் மனம்போல ஒன்று 

    நீதிபெற வேழைதுயர் மனம்போல ஒன்று 

    நிறைபழித்த கற்புடையாள் மனம்போல ஒன்று 

    காதுமழுக் காறுடையான் மனம்போல ஒன்று 

    கனலேறு மெழுநீர்கள் உண்டுகன்னி யாயில்.

    வெந்நீர் ஸ்நானம் ஆயிற்று. 

    என்று பாடியுள்ளார். மேலும் சோமசுந்தரப்புலவர் இலங்கை வரலாற்றிலே 

    'மஞ்சளாவிய மாடங்கள் தோறும்

    மயில்கள்போல் மடவார்கணஞ் சூழும்

    அஞ்ச ரோருரக பள்ளியின் மீமிசை

    அன்ன வன்னக் குழாம் விளையாடும்

    துஞ்சு மேதி சுறாக்களை சீறச்

    சுறாக்களோடிப் பலாக்கனி கீறி

    இஞ்சி வேலியின் மஞ்சளிற் போய் விழும்

    ஈழ மண்டல நாடெங்கள் நாடே' 

    என்று இலங்கை வளத்தைப் புகழ்ந்து பாடியுள்ளார். இவ்வாறு எண்ண எண்ண இனிக்கின்ற சொல்லச் சொல்லச் சுவைக்கின்ற இலங்கையின் சிறப்பினை சொல்வதற்கு இக்கட்டுரை போதாது. 

    இலங்கை பூலோகம் படத்திலே ஒரு புள்ளி. ஆனாலும் அது சந்தித்த நிகழ்வகளோ பெரும் சாகரம்.  ரிஷி மூலம் நதி மூலம் பார்க்கக் கூடாது. இதன் குற்றவாளி சுற்றவாளி ஆராய்ந்து கணக்கில் வைக்க எமக்கு இருக்கும் காலங்களோ மிகக் குறைவு. வாழ்ந்து கழித்த நாட்களிலே மனதுக்குள் ஊஞ்சல் ஆடும் நினைவுகளை மனத்துக்குள் சிறை வைத்து, மனக்கண் கொண்டு நோக்குகின்றோம். மகிழ்ந்து இன்பம் அனுபவிப்போம். 

    சொற்களை அடுக்கி அடுக்கிக் கட்டி மேய்க்கும் எழுத்தாளனின் கனவுகளும் நினைவுகளும் சரித்திரமாகும். 


    புதன், 19 ஏப்ரல், 2023

    உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல நூல் விமர்சனம்

     



    ஒரு சிறிய கதை ஒன்றுடன் என்னுடைய உரையை ஆரம்பிக்கின்றேன். சொல்கிறேன். குருவிக்கதை. ஒரு உழவன் தோட்டத்தில் வேலை செய்வதற்குச் செல்லுகின்றான். அங்கே ஒரு குருவிக் கூட்டைக் காணுகின்றான். அங்கே ஒரு முட்டை சிறிய வெடிப்போடு இருக்கிறது. அடுத்த நாளும் போய்ப் பார்க்கின்றான். இன்னும் கொஞ்சம் வெடிப்பு. இந்த முட்டையைப் பார்ப்பதே அவனுக்கு ஒவ்வொருநாளும் பழக்கமாகப் போகின்றது. ஒருநாள் அந்த முட்டைக்குள்ளே இருந்து ஒரு குங்சு வெளியே வருவதற்கு தன்னுடைய சிறகுகளால் முட்டி மோதிக் கொண்டிருப்பதைக் காணுகின்றான். பாவம் அந்தக் குருவி வெளியே வரக் கஷ்டப்படுகின்றது என்று நினைத்து அந்த முட்டையின் வெடிப்புத் துவாரத்தை கொஞ்சம் பெரிதாக உடைத்து விடுகின்றான். அந்தக் குருவி கஷ்டமில்லாமல் வெளியே வர வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன். அடுத்த நாள் பார்க்கிறான் எந்தவித அசைவும் இல்லை. அதற்கடுத்தநாள் போகின்றான். அந்த முட்டையைச் சுற்றி எறும்புகள் ஊர்ந்தது கொணடிருக்கின்றன. அந்த குருவிக்குஞ்சு இறந்து விட்டது. இந்தக் கதை இப்படியே இருக்க இந்த புத்தகத்துக்குள் நாம் இப்போது போவோம். 

    திருமூலருடைய திருமந்திரத்திலே ஒரு பிள்ளையைக் கருத்தரிக்க முன் ஆணும் பெண்ணும் எவற்றைக் கையாள வேண்டும் என்று சொல்லியிருக்கின்றது. அதேபோல் ஒரு பிள்ளையைப் பெற்றவுடன் எப்படிப் பிள்ளையை வளர்க்க வேண்டும் என்பதை இந்தப் புத்தகம் சொல்லியிருக்கின்றது.  குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கடமை இல்லை. அது ஒரு கலை. அது மட்டுமல்ல அறிவியல், உளவியல் சார்ந்தது. பாட்டி தாத்தா கூடத் தம்முடைய பிள்ளைகளை வளர்க்கும் போது விட்ட பிழைகளை திருத்திக் கொள்ள வேண்டியது  அவசியம். இதற்கெல்லாம் ஒரு கைநூலாகப் பல உளவியலாளர்களின் கருத்துக்களை எல்லாம் உள்வாங்கி இரவு பகலாக ஆய்வு செய்து இந்த சமூகத்துக்காக திருமதி கலாநிதி ஜீவகுமாரன் அவர்கள் இந்த நூலை உங்கள் கைகளில் ஒப்படைக்கின்றார். 

    இந்த நூலின் பெயர் உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல. நிற்க இடமும் நீளமான நெம்புகோலும் இருந்தால் பூமியையே நகர்த்துவேன் என்றார் ஆர்க்கிமீடிஸ். அதேபோல் நீண்ட தடி இருந்தால் நிலாவைத் தொட்டு விடுவோம் என்று இந்த நூலின் முன்னட்டையிலே குழந்தைகள் தொடுவது போல் படம் வரையப்பட்டுள்ளது. இவர்கள் பார்வை பூமி நோக்கி இருக்கவில்லை. எம்மைத் தாண்டி ஏதோ ஒன்று இருக்கின்றது என்பதை அறியும் ஆவலாக முயற்சித்துப் பார்ப்பவர்களாக இருக்கின்றார்கள். இந்த நூலுக்கு ஏன் இந்த முன்னட்டை என்று சிந்தித்துப் பார்த்தால், குடும்பம், மக்கள், பணம் என்று ஒரு குறுகிய வட்டதுக்குள் பெரியவர்கள் வாழுகின்ற போது குழந்தைகள் உலகம் வேறு ஒரு ஆராய்ச்சிப் பாதையை நோக்கிப் போவதாக இருக்கின்றது. அப்படியான குழந்தைகளை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதைத்தான் இந்த நூல் எடுத்துரைக்கின்றது. அதனாலேயே இந்த நூலுக்கு ஆசிரியர் இந்தப் படத்தைத் தந்திருக்கின்றார். பின்பக்கத்தில் ஆசிரியரைப் பற்றி பதிப்பகத்தார் பரணீதரன் அவர்களின் குறிப்பு வந்திருக்கின்றது. இலக்கிய அப்பாக்களாகிய எழுத்தாளர் திரு.கு.சின்னப்பா பாரதி, டெல்லி நேரு பல்கலைக்கழக பேராசிரியர் ஹரிஹர பாலசுப்பிரமணியம் அவர்களுக்கும் இந்த நூலைச் சமர்ப்பணமாகத் தந்திருக்கின்றார். பேராசிரியர் மௌனகுரு அவர்கள் வாழ்த்துரை தந்திருக்கின்றார். ஞானம் சஞ்சிகை ஆசிரியர் ஞானசேகரம் அவர்கள் அணிந்துரை தந்திருக்கின்றார். விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், அது இந்த மண்டபத்துக்குரிய விலை அல்ல. புத்தகக் கடைக்குரிய விலை.   

    இந்த நூலாசிரியரைப் பற்றி உங்களில் அநேகம் பேருக்குத் தெரிந்திருக்கும். இவர் இந்த நூலை எழுதாமல் விட்டிருந்தால், அவர் வாழுகின்ற நாட்டுக்கு வஞ்சகம் செய்தவராகவே கருதப்படுவார். இலங்கையிலே இவர் கலைமாணிப் பட்டம் பெற்றிருக்கலாம். ஆனால் இங்கு மனிதவாழ்விலே தொட்டில் முதல் சுடுகாடுவரையிலான புரிந்துணர்வு, பராமரிப்பு, அன்பு, அறிவு ஆகியன வாழ்வாதாரங்களாக இருப்பதனால் அதுசம்பந்தப்பட்ட அறிவைப் பெற்றுக் கொள்வதும், நடைமுறைப்படுத்துவதுமான கல்வியைக் கற்றுக் கொண்டார். அதில் குழந்தை வளர்ப்புத்துறை முக்கியமானதாக இருந்தது. அதைவிட குழந்தைகளுடைய பாடசாலையிலே அவர்களுடனேயே பணி புரிந்தது மட்டுமல்லாமல் டென்மார்க்கில் தமிழ்க் குடும்பங்களிலே ஏற்படுகின்ற பிரச்சினைகளை அவர்களிடம் சென்று கேட்டுத் தெரிந்து அதனை டெனிஸ் மொழியில் மொழிபெயர்த்து இங்குள்ள அரசாங்கத்துக்கு தெரியப்படுத்துகின்ற தொழிலைச் செய்பவர். அதனால், இந்த நூலை எழுதாமல் விட்டிருந்தால், பெரிய பழி இவரை வந்து சேர்ந்திருக்கும். அதேபோல இந்த நூலை வாசிக்காமல் விட்டீர்களானால், உங்களுடைய பிள்ளைகள் தவறு விடுகின்ற சந்தர்ப்பங்களில் என்ன காரணம் என்று தெரியாதவர்களாக ஆவீர்கள். இந்தத் தொழிலும் சரி இந்த நூலும் சரி ஒரு தொண்டு என்றுதான் சொல்ல வேண்டும். தன்னுடைய அனுபவங்களின் தெளிவை இந்த நூலாகத் தந்திருக்கின்றார். அதற்கு உளவியலாளர்களுடைய எடுத்துக்காட்டுக்களைத் துணையாக எடுத்திருக்கின்றார். 

    12 அத்தியாயங்களிலே 8 சாராம்சங்களுக்கு விடை காண்பதுதான் இந்த நூலாக இருக்கின்றது என்று ஆசிரியர் தன்னுடைய முன்னுரையிலே அறியத் தந்துள்ளார். 

    1. நமது சொத்துக்களாக நமது பிள்ளைகளை கருதலாமா? அவர்களைத் தனிப்பட்ட மனிதர்களாக எப்படி வளர்க்க வேண்டும்

    2. குழந்தைகளின் வளர்ச்சிக் கட்டங்களை எவ்வாறு புரிந்து கொண்டு பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.

    3. அடித்து வளர்ப்பது சரியா? எப்படி அடிக்காமல் வளர்க்கலாம்.

    4. கட்டுப்பாடுகள் குழந்தை வளர்ப்புக்கு ஏன் அவசியம்

    5. நாம் விழிப்புணர்வுள்ள பெற்றவர்களாக இருப்பது எப்படி? 

    6. எமது மக்கள் இந்த புலம்பெயர்ந்த சூழ்நிலையில் கலாசாரச் சிக்கல்களை எப்படிப் புரிந்து கொள்வது?

    7. எங்களுடைய வளர்ப்பிலே தவறுகண்ட அரசாங்கம் பிள்ளைகளை ஏன் எப்படி பெற்றோரிடம் இருந்து பிரித்தெடுக்கின்றது? 

    8. உங்களுடைய பிள்ளைகள் உங்களுடைய பிள்ளைகள் அல்ல என்னும் கூற்றை எவ்வாறு புரிந்து கொள்வது 

    இவைதான் அந்த சாராம்சங்கள். அதாவது என்னுடைய எண்ணம் பகவத்கீதை பக்கம் போகிறது குருஷேத்திர யுத்தத்திலே பகவான் கிருஸ்ணபரமாத்மாவால் அருச்சுனனுக்குச் சொல்லப்பட்ட 18 அத்தியாயங்கள் அடங்கிய 700 சுலோகங்கள். இதுதான் பகவத் கீதை. இது மனிதவாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கின்ற அத்தனை நூல்களையும் கசக்கிப் பிழிந்தால் அதுதான் பகவத்கீதை. அதேபோல  குழந்தை வளர்ப்பு பற்றிய அத்தனை நூல்களையும் கசக்கிப் பிழிந்தால், வருவது உங்களுடைய பிள்ளை உங்களுடைய பிள்ளை அல்ல என்கின்ற இந்த நூல். இது ஒரு வாழ்க்கைத் தத்துவம். இந்தப் புத்தகத்தை நீங்கள் படித்தால், குழந்தைநல உளவியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களாக நீங்கள் விளங்குவீர்கள். இதைக் கேட்டவுடன் 10 மாதம் சுமந்து தாலாட்டிப் பாராட்டி கண்முழித்து பிள்ளைகளின் நோய் துன்பங்களை அனுபவித்து நாங்கள் வளர்க்கி;ன்ற பிள்ளைகள் எங்களுடைய பிள்ளைகள் இல்லையா? என்ன விசர்க் கதை. இதற்கு ஒரு மேடை இதற்கு ஒரு மைக், இதற்கு ஒரு புத்தகம். எழும்புங்க நடையைக் கட்டுவோம் என்று யாரும் கிளம்பி விடாதீர்கள். இதையேதான் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களும் சொல்லியிருக்கிறார். தனியே கலாநிதி ஜீவகுமாரன் அவர்கள் மட்டும் சொல்லவில்லை. எதற்கும் ஜீவா அண்ணனையும் இதற்கு அத்தாட்சியாகச் சேர்ப்போம். 

    அப்துல்கலாம் எதைச் சொன்னார் என்றால், உங்களுடைய டென்மார்க் வைத்தியசாலை ஒன்றில் செய்திப்பலகையில் எழுதப்பட்டிருக்கின்ற ஒரு கவிதையைத்தான் அவர் சொன்னார். அது என்னவென்றால், 1902 ஆம் ஆண்டு உலகப் புகழ் பெற்ற சூஃபிக் கவிஞர் கலீல் ஜிப்ரான் அவர்கள் எழுதிய ஒரு கவிதை. இதனை இந்த நூலில் ஆசிரியர் தந்திருக்கின்றார். 

    உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல.

    அவர்கள் இயற்கையின் (கடவுளின்) குழந்தைகள் 

    உங்கள் மூலமாக வந்திருக்கிறார்களே அன்றி உங்களிடம் இருந்து அல்ல. 

    உங்களுடன் இருந்தாலும் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல.

    உங்களுடைய அன்பை அவர்களுக்குத் தரலாம். உங்களுடைய எண்ணங்களை அல்ல.

    அவர்களுக்கு என்று தனிச்சிந்தனைகள் உண்டு. உடலுக்குத்தான் பாதுகாப்புத் தர முடியும் ஆன்மாக்களுக்கு அல்ல. இதில் அற்புதம் என்னவென்றால், நீங்கள் வில். உங்களிடம் இருந்து எய்யப்படும் உயிருள்ள அம்பு குழந்தைகள். அம்பு எதை அடைய வேண்டும் என்ற இலக்கை வில் தீர்மானிப்பதில்லை. அம்பை எய்பவன்தான் தீர்மானிப்பான். நீங்கள் அம்பை எய்பவன் அல்ல. நீங்கள் அந்த வில்லுத்தான். அந்த அம்பை எய்பவர் நீங்கள் இயற்கை என்று எடுத்துக் கொண்டால் இயற்கை. கடவுள் என்றால் கடவுள்.  



    இந்த வித்தியாசத்தை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். டெனிஷ்காரனுக்கு விளங்கியிருக்கிறது. இது எங்களுடைய பெற்றோர்களுக்கு விளங்க வேண்டும் இல்லையா? என்ன செய்கிறது பாழாய்ப் போன மனசு கேட்குதில்லையே என்று நீங்கள் கூறலாம். தொப்புள் கொடி வெட்டப்படும் போது உங்களுக்கும் பிள்ளைக்கும் உள்ள தொடர்பு பிரித்து எடுக்கப்படுகின்றது. ஒரு நாற்றைப் பிடுங்கி வேறு இடத்திலே நாட்டினால்தான் அந்த நாற்று நல்ல நாற்றாக வளரும் என்று ஆசிரியர் கூறுகின்றார்.  

    அதனால், இந்த நூலை வாசிக்கத் தொடங்குவதற்கு முன் இதுதான் நீங்கள் முற்றுமுழுதாக மனதிலே பதிக்க வேண்டிய விடயம். அடுத்தது நீங்கள் வாழுகின்ற கலாசார சூழல் இதனையும் மனதில் கொள்ள வேண்டும். எமது பெற்றோர்கள் புலம்பெயாந்தது குற்றம். பலவிதமான கலாசார மாணவர்கள் கற்கின்ற பாடசாலையிலே பிள்ளைகளைப் படிக்கச் அனுப்பியது குற்றம். அப்படி இருக்கும் போது தம்முடைய ஆசைகளைப் பிள்ளைகளில் திணிப்பது குற்றம், தங்களுடைய கலாசாரத்திலேயே பிள்ளைகள் வளர வேண்டும் என்று அடம்பிடிப்பது குற்றம், இப்படிப் பல குற்றங்களைத் தங்களிடம் வைத்திருந்துவிட்டு பிள்ளைகள் வளர்ந்தபின் யோசித்து யோசித்து மனநிலை பாதிப்படைவது பாரியகுற்றமாக இருக்கின்றது.  இதனை எல்லாம் தீர்த்து வைக்க வேண்டும் என்றால், 

    பிள்ளை வயிற்றில் உருவாவதில் இருந்து பெற்றோர் கவனம் எடுக்க வேண்டும். வளருகின்ற காலங்கள் முழுவதும் கவனம் எடுக்க வேண்டும். இதைத்தான் இந்தப் புத்தகம் உங்களுக்குச் சொல்லுகிறது. 

    இந்த ஆசிரியருடைய சுவாரஸ்யம் என்னவென்றால், நன்றாகக் கதை சொல்லுவார். இதனை விட மகாபாத்திர கதாபாத்திரங்களுடன் கனவில் பேசியிருக்கின்றார்.  கதை சொல்லுவதென்றால், கதைகள் மூலமாக, சம்பவங்கள் மூலமாக பசுமரத்தாணி போல் மனதிலே சில விடயங்களைப் பதித்து விடுவார். அதற்கான தீர்வுகளும் தந்துவிடுவார். அதனால், இங்கு ஒலிவர், சங்கர் போன்ற கதாபாத்திரங்களை இந்தப் புத்தகத்தில் நடிக்க வைத்திருக்கின்றார்கள்.  

    இப்போது உங்களுடைய பிள்ளை என்ற காரணத்தாலேயே உங்களுடைய ஆசாபாசங்களை பிள்ளைகளில் வலுக்கட்டாயமாகத் திணிக்கின்றீர்கள். அதற்குப் பிள்ளைகள் அடங்கவில்லை என்றால், வன்முறையைக் கையாளாதீர்கள். வன்முறை என்றால், தடியெடுத்து அடிக்க வேண்டும் என்றில்லை. நீங்கள் பிள்ளைகளுக்குக் கொடுக்கின்ற ரோச்சரே வன்முறைதான். இதற்காக கலாநிதி அவர்கள் புத்தருடைய காலத்திலே வாழ்ந்த அங்குலிமால் கதையை எடுத்துக்காட்டியிருக்கின்றார். அங்கு விமானத  தாங்கிக்என்றொரு அரக்கன் இருந்தான். அவன் 1000 மனிதர்களைக் கொல்வதாக சபதம் எடுத்திருந்தான். கண்ணெதிரே காணுகின்றவர்களை கொன்று அவர்களுடைய கட்டைவிரலை வெட்டி மாலையாகப் போட்டுக்கொண்டு திரிந்தான். அந்த ஊர் மக்கள் எல்லாம் பயந்து வெளியே வராமல் இருந்தார்கள். அவ்வழியே வந்த புத்தரிடம் அவனெதிரே போகாதீர்கள் என்று தடுத்தார்கள். ஆனால் புத்தர் எதையும் கேட்காமல் அவன் முன்னே போய் நின்றார். அவனுக்கோ பெரும் ஆச்சரியம். எனக்கு முன்னே துணிந்து இவர் வந்திருக்கின்றாரே என்று உன்னுடைய இறுதி ஆசை என்ன என்று கேட்டான். அவரும் அருகே இருந்த மரத்தின் கிளையை வெட்டு என்றார். மீண்டும் வெட்டியதை ஒட்டு என்றார். அவனால் முடியாது என்று தன்னுடைய இயலாமையை நினைத்து வருந்துகி;றான். 

    நீ வெட்டுவதை மட்டும் வைத்துக் கொண்டு பெரிய வீரன் என்று எப்படிக் கூற முடியும் என்கிறார். இப்படித்தான் வன்முறையால் திருத்தலாம் என்று நினைப்பவர்களும் அங்குலிமாமா போன்றவர்களே தான். வெட்டப்படும் மரம் போன்றவை எங்கள் குழந்தைகளின் உள்ளமும் உணர்வுகளும். இந்த வன்முறை என்பது உங்களுடைய வீட்டுக்குள் இருந்து ஆரம்பித்து நாட்டுக்குள் சென்று உலகத்திற்குப் பரவுகின்றது. 

    என்னுடைய யூரியூப் சனலில் இந்த சீரியல் கில்லர் என்று ஜெப்ரி டாமர், ஜோசப் கசவைணநட  போன்றோரைப் பற்றிப் பதிவுகள் போட்டிருக்கின்றேன். சிறுவயதிலே அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் வளர்ந்த பின் எவ்வாறு தொடர் கொலைகாரர்களாகவும், போதைவஸ்துக்கு அடிமையானவர்களாகவும்  அவர்களை மாற்றியிருக்கின்றது என்பதை அறியக் கூடியதாக இருக்கின்றது. இவ்வாறு சிறுவயதில் எம்மையறியாமல் நாங்கள் செய்கின்ற தவறுகள் வளர்ந்தபின் அவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். 

    நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் விளைவு நிச்சயமாகக் கிடைக்கும். அதைத்தான் செயல் விழைவுத் தத்துவம் என்று வேதாத்திரி மகரிஸி சொல்லுவார். நாம் என்ன நினைக்கின்றோமோ அதுவாகவே மாறுகின்றோம். அதேபோல் நாம் என்ன செய்கின்றோமோ அது எம்முடைய பிள்ளைகளிலே பிரதிபலிக்கும். 

    பிள்ளைகளை முன்னே வைத்துக் கொண்டு நாம் தொலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தால், பிள்ளை சாப்பிடவில்லை என்றால், உங்களுடைய ரெலிபோனைக் கொடுப்பது இப்படியான காரியங்கள் செய்தால், உங்களுடைய பிள்ளைகளும் அதைத்தான் செய்யப் போகின்றார்கள். சரி ரெலிபோன் இல்லாமல் சாப்பிடப்பழக்க வேண்டும் என்று ஒருநாள் நீங்கள் முடிவெடுத்து தொலைபேசியைக் கொடுக்காமல் விடுகின்றீர்கள்.முதல் நாள் அடம்பிடிக்கும் ஏனென்றால், நீங்கள் பழக்கிவிட்டீர்களே. நீங்கள் என்ன செய்வீர்கள். இவனைத் திருத்த முடியாது என்று ரெலிபோனைத் திரும்ப கொடுத்துவிடுவீர்கள். ஒரு பிள்ளை ஒரு பழக்கத்தை தொடங்கினால், அந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு 21 நாட்கள் எடுக்கும். ஆனால், எங்களுடைய பெற்றோர்களுக்கு அந்தப் பொறுமை இல்லை. உடனே செய்ய வேண்டும் என்றால், பிள்ளை வைன் கொடுத்து ஆடவிடும் பொம்மையா? அதனால், பொறுமையும் தொலைநோக்கு சிந்தனையும் இருக்க வேண்டும். 

    மகாபாரத யுத்தம் முடிந்து பாஞ்சாலி பல விதவைகளைக் காணுகின்றாள். மனதாலே சரியாக வேதனைப்பட்டுக் கண்ணனிடம் சொல்கிறாள் என்னால்தானே இந்த யுத்தம். நான் தானே இதற்குக் காரணம் என்கிறாள். அதற்கு கண்ணனும் நீ மட்டும் காரணம் இல்லை. நீ கொஞ்சம் தொலைநோக்குப் பார்வையை கொண்டிருந்திருந்தால் இவ்வளவு துன்பம் வந்திருக்காது என்கிறார். அது என்னவென்று பாஞ்சாலி கேட்கக் கண்ணன் கூறுகிறார். நீ கர்ணனை அவமானப்படுத்தியிருக்கக் கூடாது ஐந்து பேரைத் திருமணம் செய் என்று குந்தி சொன்ன போது நீ சம்மதித்திருக்கக் கூடாது, துரியோதனன் விழுந்தபோது அவமானப்படுத்திச் சிரித்திருக்கக் கூடாது இப்படியெல்லாம் நீ செய்யாது விட்டிருந்தால் இவ்வாறு வந்திருக்காது என்கிறார். 

    இதுபோலவேதான் இப்படி நடக்கும் என்று நாம் சிந்திப்பதில்லை. ஆத்திரத்தில் ஏதாவது செய்துவிட்டு அதற்குப் பின் நாம் வருந்துவோம். அது பிள்ளைகளில் எப்படி பிரதிபலிக்கும் என்று பல எடுத்துக்காட்டுக்களை இந்த நூலிலே ஆசிரியர் கொண்டு வந்திருக்கிறார். 

    பாஞ்சாலிக்கு கண்ணன் சொல்லியது தொலைநோக்குப் பார்வை எமது பெற்றோர்களுக்குக் கூட இல்லை. என்ன மனிதனுக்கு இவ்வளவு  தான் என்று கட்டுப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக எங்களுடைய பார்வை ஒரு எல்லைக்கு அப்பால் போகாது. அதேபோல் இந்த பூமியிலே எத்தனையோ விதமான நுண்அங்கிகள் சிறிய பூச்சிகள் எல்லாம் இருக்கின்றன. ஆனால், அவை போடுகின்ற சத்தத்தை எம்மால் கேட்க முடியாது. இவ்வாறு எம்முடைய புலன்கள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன.

     பூமிக்கு மேலே நீங்கள் நிற்கின்றீர்கள் உங்களைக் கவர்ந்து வைத்திருக்கின்ற புவியீர்ப்பு விசையை நீங்கள் பார்க்க முடியாது, காற்றைக் கண்களால் காணமுடியாது. ஏன் நீங்கள் இப்போது பார்க்கும் சூரியன் இப்போது இருக்கும் சூரியன் அல்ல. 8 நிமிடத்தின் முன் எப்படி இருந்தது என்பதையே நாம் பார்க்கின்றோம். இந்தப் பிரபஞ்சத்தில் நாம் இருக்கின்ற இடம் ஒரே இடமல்ல ஒரு நிமிடத்தின் முன் எங்கோ இருந்தோம் பூமி பிடித்து வைத்திருப்பதால் டென்மார்க்கில் இந்த ஹோல் இற்குள் இருக்கின்றோம். இது உண்மையல்ல. உங்களுடைய உடல் ஒரு ஆச்சரியம். இவ்வாறுதான் சில விடயங்கள் உங்களை மீறித்தான் நடக்கின்றன. இவ்வாறுதான என்று கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றன. அவற்றை மாற்ற முடியாது. உங்களைக் கேட்டு உங்களுடைய பிள்ளை பிறக்கவில்லை. நீங்கள் விரும்பியது போல அப்பிள்ளை இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அவர்களை அவதானமாக வளர்த்து விட வேண்டிய கடமை மட்டுமே உங்களுடையது. 

    பூதக்கண்ணாடியால் தொலைதூரத்தை நாங்கள் பார்ப்பது போல எங்களுடைய பிள்ளைகள் எங்கே சென்றாலும் என்ன செய்தாலும் அவர்களில் அவதானம் எமக்குத் தேவை. நேரம் இல்லை என்று பிள்ளைகள் கையில் தொலைபேசியைக் கொடுத்துவிட்டோ, தொலைக்காட்சியைப் போட்டு விட்டோ நீங்கள் போனால், உங்களை விட உங்கள் பிள்ளை வேறு ஒரு கவன ஈர்ப்புக்குள்ளேயே போகும். அது பெருத்து பலூன் வெடிப்பது போல ஒருநாள் வெடிக்கும். அதனால், என்ன வேலை இருந்தாலும் ஒரே இடத்தில் இருந்து கொண்டு எங்கேயோ ஹரியானா மாநிலத்தில் குருஷேத்திரத்தில் நடக்கின்ற காட்சிகளை சஞ்சயன் திருதராட்டினனுக்கு பார்த்துச் சென்னான் இல்லையா அதேபோல் உங்கள் பார்வை எங்கே இருந்தாலும் பிள்ளைகளில் இருக்க வேண்டும். 

    பிள்ளைகளின் வளர்ச்சிக் கட்டங்களை ஒவ்வொன்றாக உளவியல் ரீதியாக ஆழமாக நோக்க வேண்டும். இந்தப் புத்தகம் அழகாக அந்த வளர்ச்சிக் கட்டங்களை எடுத்துக் காட்டியிருக்கிறது. குழந்தை பிறந்து 2 வயது வரை, ஒன்றரை வயதில் இருந்து 3 வயது வரை, 3 வயதில் இருந்து 4 வயது வரை, 4 முதல் 7 வயது வரை, 7 வயது முதல் 12 வயது வரை, 12 முதல் 18 வயது வரை  இப்படிப் பருவங்கள் தோறும் நடக்கின்ற குழந்தையின் மாற்றங்கள் தாமாக எப்படி வளருகின்றார்கள் இதையெல்லாம் அற்புதமாக இந்தப் புத்தகம் தந்திருக்கின்றது. 

    ஒருநாள் ஒரு மிருகக்காட்சிசாலைக்கு பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு கலாக்கா போயிருக்கின்றா. அங்கே ஒரு கங்காரு ஒரு குட்டி போட்டிருக்கின்றது. அந்த கங்காரு பிறந்த குட்டியைத் தன்னுடைய காலால் தள்ளி விடுகிறது. அப்போது ஒலிவர் என்னும் பையன் ஏன் கங்காரு குட்டியை அடிக்குது என்று கேட்கின்றான். அதற்கு கலாக்கா ஒரு பிள்ளையை தூக்கி வைத்துக் கொண்டிருந்தால் அந்தப் பிள்ளை எப்படி வளரும். கங்காரு தன்னுடைய பையிற்குள் வளர்ந்த குட்டியை வைக்க முடியுமா? அதனால் அது தானாக வளர விடவேண்டும். என்னும் விளக்கத்தை அழகாக சொல்லுகின்றார். 

    தாயினுடைய வயிற்றிலிருந்தே பிள்ளை எல்லாவற்றையும் கேட்கும் நீங்கள் வயிற்றில் பிள்ளை இருக்கும் போது என்ன மனநிலையில் இருக்கின்றீர்களோ அது பிள்ளையின் ஆழ்மனதில் பதிந்துவிடும். தொப்பிள்கொடியுடன் உங்களுடைய கோப தாபங்களையும் பிள்ளைக்கு நீங்கள்  கொடுத்து விடுவீர்கள் அதற்குப் பிறகு என்ன பிள்ளை பிறந்தபின் சிடுமூஞ்சியாகத்தான் இருக்கும். வயிற்றில் இருக்கும் போது மகிழ்ச்சியோடு இருந்தால், பிள்ளை மகிழ்ச்சியாகவே இருக்கும். உங்களுக்கெல்லாம் பிரகலாதன் கதை தெரியும். மனத்தை விட ஆழ்மனம் ளரடிஉழnஉழைரள அiனெ வலிமை மிகுந்தது. அந்த  ஆழ்மனம் கருவிலே உருவாகிவிடும். எனவே உங்களுக்குக் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை இருக்கிறதா? உங்களுக்கும் இந்த உலகத்துக்கும் சரியான ஒரு மனிதனைக் கொடுக்க விரும்புகின்றீர்களா? அன்றிலிருந்து அவதானமான ஒரு பெற்றோராக நீங்கள் மாற வேண்டும். அதிலும் கவனம் எடுக்க வேண்டும். இதற்கு அம்மா மட்டும் பொறுப்பில்லை. அம்மாவைக் கரிந்து கொட்டுகின்ற அப்பா இருந்தால் அதனையும் வயிற்றுக்குள் இருந்து பிள்ளை கேட்கும். அதுவும் பிள்ளையின் தலைவிதி அதுவும் இதையெல்லாம் கேட்க வேண்டும். பிள்ளை வளருகின்ற போது சூழலும் பிள்ளையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனையும் கவனத்தில் எடுக்க வேண்டும். பிள்ளைப் பெறுவதும் வளர்ப்பதும் ஒரு தற்செயலான விடயமாக இருக்கக் கூடாது. அது ஒரு தெய்வீக உணர்வு

    படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும் 

    உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக் 

    குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி, 

    இட்டும் தொட்டும், கவ்வியும், துழந்தும் 

    நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும், 

    மயக்குறு மக்களை இல்லோர்க்குப் 

    பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே. 

    பலவற்றையும் படைத்துப் பலரோடும் சேர்ந்து உண்ணும் பெருஞ்செல்வம் உள்ளவரானாலும் என்ன? மெல்லமெல்லக் குறுகுறு நடந்து சென்று தம் சிறிய கையை நீட்டி, உணவருந்துகின்ற பாத்திரத்திலிருக்கின்ற நெய்யுள்ள சோற்றிலே கையை வைத்து அந்தக் கையாலேயே பெற்றோரைக் கட்டிக்கொண்டும், வாயாற் கவ்வியும், கையால் அளைந்தும், தம்முடைய உடம்பெல்லாம் அந்தப் பிள்ளை சிதறடிக்கின்ற போது அக் குறும்புகளால் உணவு வீணாகிறதே என்ற நினைவை மயக்கிப் பெற்றோரை இன்பத்தால் மகிழச் செய்யும் மக்களை இல்லாதவர்க்கு தாம் வாழுகின்ற நாட்களெல்லாம் பயனில்லாத நாட்கள். இப்படியான குறும்பு செய்த குழந்தையை சமூகக் குற்றவாளியாக மாற்றாமல் இருப்பது பெற்றோர்களாகிய உங்கள் கையிலேதான் இருக்கின்றது என்று கூறி. நீங்கள் இந்தப் புத்தகம் வாசித்து முடிக்கும் போது ஒரு முழுமனிதனாக மாறுவீர்கள்.

    சிந்தித்துப் பார்த்து செய்கையை மாற்று சிரிசா இருந்தா திருத்திக்கோ தவறு சிறிசா இருந்தா திருத்திக்கோ. தெரிந்தும் தெரியாது நடந்திருந்தால் அது திரும்பவும் வராமல் பார்த்துக்கோ என்ற சினிமாப் பாடலை உங்களுக்கு எடுத்துக் காட்டி தவறு திரும்பவும் வராமல் இந்த நூலை வாசியுங்கள் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். இப்போது இந்தப் பறவைக் கதைக்குள் வருகின்றேன். 

    அளவுக்கு மீறிய அன்புஇ எதிர்பார்ப்பு  இவைதான் அந்தப் பறவையைக் கொன்றது. 

    ஒரு பறவை முட்டையில் இருந்து வெளியே வருகின்றபோது அதன் இறக்கைகள் மெதுவாக அசையும் கால்கள் துடிக்கும் முட்டைகளின் சுவர்களில் முட்டி மோதும். இது தானே இயற்கை. சுப பிரசவம்।  அதை அப்படியே விட்டிருந்தால் இந்நேரம் அழகான பறவையாகப் பறந்திருக்கும்.. இப்படித்தான் நாமும் நம் பிள்ளைகளுக்கு வலி தெரியக் கூடாது என்று கஷ்டம் தெரியக் கூடாது என்று வளர்த்து அவர்களாகத் தம்முடைய பாதையைக் கண்டு பிடிக்க விடுவதில்லை. இந்த நூல் அதற்கான தெளிவை எங்களுக்கு எடுத்துக் காட்டுகின்றது.  

    இந்தப் புத்தகம் ஒவ்வொருவருடைய புத்தக அலுமாரியில் இருக்க வேண்டிய புத்தகம். இன்றுதான் என்னுடைய கைகளில் கிடைத்தது பிரின்ற் எடுத்து நான் வாசித்து முடித்த போது என்னுடைய இரண்டு கைகளாலும் கட்டி அணைத்து கலாக்காவுக்கு இறுக ஒரு முத்தம் தர வேண்டும் போல் இருந்தது. இந்த வாழ்க்கையில் எத்தனை அனுபவங்கள், எத்தனை வாசிப்பு அனுபவங்கள், எத்தனை பிரயத்தனம், இவ்வளவு கஸ்டப்பட்டு உழைத்த இந்த நூல் கட்டாயம் எல்லோராலும் வாசிக்கப்பட வேண்டியது அவசியம். முழுவதுமாக நீங்கள் வாசிக்கா விட்டாலும் 11 ஆவது அத்தியாயம் கட்டாயம் நீங்கள் வாசிக்க வேண்டும். உங்களுடைய பிள்ளைகள் பிள்ளைபிடி காரர்கள் என்று சொல்லப்படுகின்ற இந்த நாட்டு அரசாங்க நிறுவனங்கள் உங்களுடைய பிள்ளைகளைத் தூக்கிக் கொண்டு போகாதிருக்க குழந்தைகளின் பாதுகாப்புச் சேவைச் சட்டங்களை இதில் கூறுகின்றார். தூக்கிக் கொண்டு போகும் குழந்தைகளை 11 விதமாக வகைப்படுத்துகின்றார். அவற்றையெல்லாம் நீங்கள் கட்டாயம் வாசித்து அறிந்திருக்க வேண்டியது அவசியம்;. 


    புதன், 8 மார்ச், 2023

    ஆண்களை விஞ்சி வாழ்வது நோக்கமல்ல. ஆண்களில் தங்கி வாழப் பிடிப்பதில்லை


    மகளிருக்காக ஒரு தினம் கொண்டாடப்படும் இந்தத் தருணத்தில் நான் கல்பனா சவ்லா பற்றியோ மேரி கோம் பற்றியோ ஆராயப் போவதில்லை.  தற்காலப் பெண்கள் பற்றியே சிந்திக்கத் தொடங்குகின்றேன். 

    அன்றைய ஒளவையாரின் திறமையும் துணிச்சலும், ஆண்டாளின் பிடிவாதமும், வெள்ளிவீதியாரின் உணர்வு வெளிப்பாட்டுத் தைரியமும் இடைப்பட்ட காலத்தில் எங்கே போனது என்று பூதக்கண்ணாடி போட்டுத் தேடியபோது தற்காலம் மீண்டுமாய் நிமிர்கிறது. தாய்வழி சமுதாயம் தந்தை வழி சமுதாயமாக மாறியது எப்படி? ஒரு குடும்பத்தை வழி நடத்தத் தெரிந்த பெண்ணுக்கு நாட்டை வழி நடத்தத் தெரியாதா? ஊதாரிக் கணவனைக் கண்டிப்போடு வழிநடத்தி வீட்டுக் கணக்கை போட்டுக் கொடுப்பவள் அந்தத் தலைவனுடைய மனைவி அல்லவா? 

    "தற்காத்து தற்கொண்டான் பேணித் தகைசான்ற

     சொற்காத்துச் சோர்விலாள் பெண்|2

    ஒரு நாட்டை ஆளுவது என்பது மீன் குழம்பு வைப்பது போலே இருக்குமா? இல்லை பிள்ளையைக் குளிப்பாட்டுவது போல இருக்குமா என்ற கேள்வி ஆண்கள் மத்தியில் எழுந்ததற்குக் காரணம் என்ன? தமது இயலாமையை அதிகாரமாக சொல்லத் தெரிந்த தைரியமே. குழந்தை வளர்ப்பு என்பது சாதாரணமான விடயம் இல்லை. எதிர்கால சமுதாயம். நாளைய நாட்டுப் பிரஜைகள் அறிஞர்கள், ஜனாதிபதிகள் ஆவர். பிள்ளையின் பார்வையிலேயே அதனுடைய உள் உணர்வுகளைப் புரியக் கூடியவள் தாய். தாயின் பார்வையே பிள்ளைக்குப் பாடம் நடத்தும். பெரியவர்கள் மத்தியில் அடக்கமில்லாமல் இருக்கும் போது தாயின் கண்களே பிள்ளைக்குக் கட்டளை போடும். தாய் என்னும் பதவி ஒரு சாதாரண பதவியாகக் கொள்ள முடியுமா? இது எல்லாம் ஒரு புறம் இருக்க 

    இக்காலப் பெண்கள் அக்காலப் பெண்கள் போல இல்லை என்னும் குற்றச்சாட்டு இருக்கின்றது. சங்ககால ஒளவையார் சங்க இலக்கியங்களில் குறுந்தொகையில் 15 பாடல்களும், நற்றிணையில் 7 பாடல்களும், அகநானூற்றில் 4 பாடல்களும், புறநானூற்றில் 33 பாடல்களும் பாடியிருக்கின்றார். இன்னும் எத்தனையோ பாடியிருக்கலாம். ஆனால், கடல்கோள்களுக்குத் தப்பி இத்தனை மட்டுமே எமக்குக் கிடைக்கின்றன.  கல்வியறிவால் உயர்ந்த ஒளவாயார் குலோத்துங்கன் சோழன் அவையிலே கம்பரை 

    "எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே

    மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்க்

    கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே

    ஆரையடா சொன்னாயது."

    என்று அவலட்சணம், எருமை, மூதேவி, குட்டிச் சுவர், குரங்கு என்று பாட்டால் வைதிருக்கும் தைரியமும், அதியமான நெடுமான் அஞ்சியின் அன்புத் தோழியாக இருந்ததுடன் அவர் அளித்த கெட்டிக் கரையையுடைய பட்டாடை பெற்றுக் கொண்டதுடன், பழைய கள்ளை பொற்கிண்ணத்தில் பருகக் கொடுத்து மன்னன் உணவு பரிமாறிய சம்பவங்களும் அறியக்கிடக்கின்றன. ஆனால், ஒரு பெண் ஆணுடன் நட்பு வைத்துக் கொள்வது அடங்காப்பிடாரித்தனம், கற்பை மீறிய செயல் என்று இப்போதும் சிலருடைய கூற்றுக்களுக்கு எதிராகப் பெண்கள் இப்போது டீநளவல வைக்கத் தொடங்கிவிட்டார்கள்.  அதற்கும் மேலே என்று காதலனுக்கும் மேலே டீநளவல இடம் நட்பு வைத்திருக்கின்றார்கள்.

    "வானிடை வாழுமவ் வானவர்க்கு 

    மறையவர் வேள்வியில் வகுத்தஅவி 

    கானிடைத் திரிவதோர் நரி புகுந்து 

    கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப 

    ஊனிடை யாழி சங்குத்தமார்க் கென்று 

    உன்னித்தெழுந்த வென் தடமுலைகள் 

    மானிடவர்க்கென்று பேச்சுப்படில் 

    வாழ்கில்லேன் கண்டாய் மன்மதனே" 


    என்று அக்காலத்தில் பாடும் ஆண்டாள் தைரியம் யாருக்கு வரும். இன்று பெண்களின் கவிதைகளில் அதிகமாக ஆபாசம் இருப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் மேலோங்கி வரும் நிலையில் ஆணென்ன பெண் என்ன? அந்தப் பால் வேறுபாடுகளே தேவையில்லை என்று பேசத் தொடங்கிவிட்டார்கள். இன்று ஆண்களின்  பாலியல் தொல்லைகளை அநந வழழ என்று ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக எடுத்துக் கூறுகின்றார்கள்.

    "ஏதிலாளன் கவலை கவற்ற

    ஒருமுலை அறுத்த திருமா உண்ணி என்னும் நற்றிணைப் பாடலிலே                             

    பகைவன் செய்த கொடுமையானது உள்ளத்தை அரித்தெடுக்கத் தன் ஒரு முலையை அறுத்துக் கொண்ட திருமாவுண்ணியும், நீதி தவறிய நாட்டை வாதாடித் தீயால் அழித்த சிலப்பதிகார நாயகி கண்ணகியும் தைரியத்துக்கு எடுத்துக்காட்டுக்கள். கணவன் நல்லவனா கெட்டவனா என்பது கேள்விக்குறி. ஆயினும் அச்செயலை அவன் செய்திருக்க மாட்டான் என்னும் நம்பிக்கையும், அம்மன்னனின் நீதி தவறிய செயலும் அவளுக்கு மனதில் தீயாய் பற்றி எரிந்தது. திருமாவுண்ணி அதன் பின் வாழ்ந்தாளா என்பது கேள்விக்குறி. ஆயினும் செயலைத்தான் நாம் நோக்கவேண்டிள்ளது. 

    அக்காலத்திலும் கணவனுக்குப் பயந்து பெண் அடங்கிக் கிடக்கவில்லை. சமூகத்தின் கேள்விகளுக்கு அவள் பயப்படவில்லை. "ஐயோ சாமி நீ எனக்கு வேண்டாம்" என்று தூக்கி எறிந்துவிட்டுப் போக அவளுடைய கல்வியும், தன்னம்பிக்கையும், துணிச்சலும் கைகொடுக்கின்றன. 

    காரைக்காலம்மையார் சங்கம் மருவிய காலத்தில் வாழ்ந்தவர். அவருடைய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகமே பிறகால பல்லவர்கால இலக்கிய வடிவமான பதிகத்திற்கு அடியெடுத்துக் கொடுத்தது. பிடிவாதமும் முற்போக்கு சிந்தனையும் உள்ளவர். கணவனோடு மட்டுமே சிவனடியார்களுக்கோ விருந்தினர்களுக்கோ உணவு பரிமாற முடியும் என்றிருந்த அக்கால வழக்கத்தை உடைத்து கணவன் அனுப்பிய மாங்கனியின் ஒன்றை கணவனுக்குத் தெரியாமலே சிவனடியாருக்குப் படைத்தவர். அதனைக் கணவனுக்குத் தெரியாமல் மறைத்தவர். அத்துடன் உணவை ஒறுத்து உடலை மெலிய வைத்து ஊர் ஊராகச் சென்று சிவத்தொண்டு புரிந்தவர். 

    "ஈங்கு இவன் குறித்த கொள்கை இது இனி இவனுக்கு ஆகத்

    தாங்கிய வனப்பு நின்ற தசைப் பொதி கழித்து இங்கு உன் பால்

    ஆங்கு நின் தாள்கள் போற்றும் பேய் வடிவு அடியேனுக்குப்

    பாங்குற வேண்டும் என்று பரமர் தாள் பரவி நின்றார்"

    வேறு மனைவியை மணந்து வாழ்ந்து கொண்டிருக்கும் கணவன் தன்னைக் கடவுளாக வணங்குங்கள் என்று ஊராருக்குச் சொல்ல இவனுக்காகத் தாங்கிய உடல் தேவையில்லை என்று பேய்வடிவம் பெற்றதாக வரலாறு கூறுகின்றது. அதாவது அயபநசளரஉhவ என்று வேறு ஒரு கட்டுரையில் எழுதியிருந்தேன். 

    இது கடவுள் பற்றினால் என்று எடுத்துக் கொள்ள முடியாது. தோல்வியின் கண் மனமாற்றமே என்று உளவியலாளர்கள் கருதுகின்றார்கள். 

    இந்த தைரியம் இக்காலப் பெண்களிடம் மிதமாகவே இருக்கின்றது.  நல்ல காரியம் ஆற்ற வேண்டுமானால், துணையுடன் ஆற்ற வேண்டும். துணை விரும்பவில்லை என்றால், உங்களுடைய ஒத்துழைப்புத் தேவையில்லை. என்னால் தனியே காரியமாற்றத் தைரியமிருக்கின்றது என்று செயலாற்றத் தொடங்கிவிடுகின்றனர்.  

    பொறுமை, பூமி என்று பெண்ணுக்கு புகழாரம் சூட்டியதால், கவலைகளை மனதுக்குள் போட்டு அடக்கி அடக்கி குடும்பத்தில் என்ன பிரச்சினைகள் இருந்தாலும் மறைத்து வாழ்ந்த பெண்களே இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தார்கள். ஆனால், இன்று 

    நீர்கால்   யாத்த  நிரைஇதழ்க்  குவளை

    கோடை ஒற்றினும்   வாடா தாகும் (குறுந்தொகை)

    குவளை மலர்கள்  நீரின்றி வாடி மீண்டும் நீர் வரும்போது உயிர்த்து எழுவதுபோல், மாரியில் உறங்கும் மரங்கள் கோடையில் துளிர்ப்பது போல் மீண்டும் எழுவர் பெண்கள். 

    முன்னேற்றப் பாதையில் திருமணம் தடையானால் திருமணம் செய்து வாழ்வதையே வெறுக்கின்றனர். ஆண்களை மிஞ்சி வாழ்வது நோக்கமாக இருப்பதில்லை. ஆண்களைத் தங்கி வாழப் பிடிப்பதில்லை. எதிர்வரும் காலம் பெண்கள் வாழ்க்கையில் சாதனையில் உயர்ந்து செல்ல சிறந்த வழிமுறைகளைக் காட்டிக் கொண்டே இருக்கும். அதனால், பெண்கள் எண்ணங்களுக்குத் தடை போடத் தேவையில்லை. 



    சனி, 4 பிப்ரவரி, 2023

    காதல் என்பது எதுவரை?



    காதல் என்பது எதுவரை, கல்யாணக் காலம் அதுவரை, கல்யாணம் என்பது எதுவரை கழுத்தினில் தாலி வரும் வரை என்பது கவிஞர் பாடல். அப்படியானால் காதல் கல்யாணத்தினுடன் முடிந்து விடுவது இயற்கையா? அதன் பின் தொடருவது என்ன? இங்கு காதலுடன் திருமணத்தை தொடர்பு படுத்துவதுதான் கேள்விக்குறியாக இருக்கின்றது. காதல் என்பது உலகத்து உயிர்கள் எல்லாவற்றுக்கும் பொதுவானது. அவையெல்லாம் தாலி கட்டிக் குடும்பம் நடத்தவில்லை. மாடப்புறா கூரை மேல் இருந்து கொஞ்சிக் குலாவுவதும், ஏரிக்கரையினிலே யானை தும்பிக்கையை ஏந்திக் காதலியைத் தடவுவதும், தரையைப்; பெருக்கி ஒரு பறவை நடனம் ஆடிக் காதலியை ஈர்ப்பதுவும் தாலி கட்டுவதற்காகவா? காதல் என்பது அதற்கு அப்பாற்பட்டது. இரு மனங்களின் சங்கமம். அது எல்லை தாண்டிச் சிந்திக்க வைக்கும். உயிரைக் கூடத் துச்சமாக எண்ண வைக்கும். ஒரு கணப்பொழுதில் உள் நுழைந்து மறு கணப்பொழுது மகிழ்ச்சியைத் தந்து உள்ளத்திற்குள் கூடு கட்டிக் கொண்டாடும். 

    சின்னச் சின்ன நிகழ்வுகளை சரித்திர சாதனைகளாகப் போற்றும். எத்தனை வருடங்கள் கடந்தாலும் இன்றே ஆரம்பித்த உணர்வைத் தரும். இந்தக் காதலினால், எத்தனை முதிர் கன்னிகள் திருமண வாழ்க்கையை தரிசிக்காமல் இருக்கின்றார்கள். சட்டம் போட்டு திருட்டை ஒழிக்க முடியாது. சட்டம் போட்டுத் திருட்டுக் காதலைத் தடை செய்ய முடியாது. புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் சந்ததி மூன்றாவது தலைமுறையைக் கண்டுவிட்டது. இப்போது இரண்டாவது தலைமுறையின் திருமண வாழ்க்கை பற்றிய ஏக்கத்தை முதலாவது தலைமுறை தாங்கிக் கலங்குகின்ற காலம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. இக்கட்டுரை இது பற்றிய ஆய்வாக தொடர்கிறது.

    புலம்பெயர்ந்த போது தமிழர்களுக்கு புகுந்த நாட்டு மொழியும் புரியவில்லை. அந்த மனிதர்களின் வாழ்க்கை முறையும் புர்pயவில்லை. அதிகமானவர்கள் தம்முடைய கிராமத்திலேயே இருந்து வெளியுலகம் தெரியாமல் வாழ்ந்து விட்டு ஒரு அந்நிய கலாசாரத்துக்குள் நுழைகின்றார்கள். தமது தேவைகளை நிறைவேற்றுவதற்காக பலவற்றை விட்டுக் கொடுத்தவர்களுக்குத் தம்முடைய பிள்ளைகளின் திருமண வாழ்க்கையை மட்டும் விட்டுக் கொடுக்க விரும்பம் இருந்ததில்லை. வெள்ளைக்காரனின் பாடசாலையில் வெள்ளக்காரனிடம் படிக்கலாம், வெள்ளைக்காரன் உணவுகளை உண்ணலாம், வெள்ளைக்காரனை நம்பி அவன் தரும் மருந்தை நோய்க்காக அருந்தலாம், அந்த மருத்துவரிடம் உடலை ஒப்படைக்கலாம், அவன் கட்டிய வீட்டில் குடியிருக்கலாம். ஆனால், அவனுக்குத் தன்னுடைய மகளைக் கட்டிக் கொடுக்க முடியாது. என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் எல்லாம் பெறுவோம் எம்முடைய குடும்பத்துக்குள் வெள்ளைக்காரனை நுழைய விடமாட்டோம் என்று கங்கணங்கட்டியதால், இன்று தாலிக்கயிறு கட்ட முடியாத முதிர் கன்னிகள் புலம்பெயர்ந்த நாடுகளில் அதிகமாகி விட்டனர். இந்தக் கயிறு தேவையா என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.

    கல்வி கற்கின்ற போது எந்த வெளிநாட்டுக்காரனையும் காதலித்துவிடாதே என்று கூடவே பாடசாலைக்குக் கூட்டிக் கொண்டு போய்விட்டு பாடசாலை முடிந்தவுடன் வாசலில் காவல் இருந்து கூட்டி வந்து போர்க் குதிரைக்கு வடம் கட்டியது போல் படிப்பைத் தவிர வேறு எதையும் நினைத்துப் பார்க்காது வளர்த்துவிட்டு, அந்தப்பெண் முதிர் கன்னியானவுடன் தமது முடியாமையால், யாரையாவது காதலித்தால் கல்யாணம் செய்து தருவோம் என்று பெற்றோர் கூறுகின்ற போது காதல் என்ன கடையில் வாங்கும் பொருளா? இளமையும் காதல் உணர்வும் இறந்து போன பருவத்தில் காதலிக்கச் சொன்னால், எப்படிக் காதல் வரும் என்று கலங்கி நிற்கின்றனர் பாரதிதாசன் சொன்ன 

    " கோரிக்கையற்றுக் கிடக்கும் வேரிற் பழுத்த பலாக்கள்"

    "கன்றும் உண்ணாது கலத்திலும் படாது

    நல்லான் தீம்பால் நிலத்துஉக் காஅங்கு

    எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது 

    திதலை அல்குல் என்மாமைக் கவினே"


    எனக் குறுந்தொகைப் பாடலிலே  பசு மாட்டினுடைய  பால் பாத்திரத்திலும் எடுக்காமல். கன்றுக் கட்டியும் அருந்தாமல் வீணாக நிலத்திலே சிந்தினால், யாருக்குப் பயன் இருக்கப் போகிறது அவள் அழகு பசலை நோயினால், அழிந்து போகின்றது என்பது போல் புலம்பெயர்ந்த பல கன்னிகள் அழகிழந்து ஏங்கி நிற்கின்றனர். 


    பூக்களிலே நானுமொரு 

    பூவாய்ப் பிறப்பெடுத்தேன் 

    பூவாகப் பிறந்தாலும் 

    பொன்விரல்கள் தீண்டலையே 

    பொன்விரல்கள் தீண்டலையே - நான் 

    பூமாலையாகலையே 


    என்னும் நாட்டுப் புறப்பாடலிலே பெண்ணின் ஏக்கம் புரிகிறது. இதேபோல


    மனைவி ஆகாமலே கன்னி கழியாமலே

    தாய் ஆகாமலே தாலாட்டுப் பாடாமலே

    பாட்டி ஆகிவிட்டேன் வயதான ஒரே காரணத்தால் 


    என்னும் ஒரு அற்புதமான கவிதையைப் பெயர் அறியாத ஒரு கவிஞன் பாடியிருக்கிறார். 


    இவ்வாறு காதலித்தவனைக் கைப்பிடிக்க முடியாது நல்ல வெயிலிலே ஒரு இடத்தில் வைக்கப்பட்ட நெய்யைக் கைகள் இல்லாத ஒரு வாய் பேச முடியாத ஒருவன் காவல் காத்து நிற்பது போல அழிந்து போகின்ற இளமையும் காமமும் உணர்ந்தும் பேசமுடியாது நிற்கின்ற முதிர் கன்னிகளைத் தரிசிக்கின்ற கலாசாரப் பெட்டகங்கள் இன்னும் புலம்பெயர்ந்த தேசங்களில் வாழுகின்றார்கள். 


    இந்த நிலையில் தம்முடைய இறுக்கங்களைத் தளர்த்தப் பல பெற்றோர்கள் முன் வந்தாலும், பெண்கள் கண்டவுடன் காதலிக்கும் வயது கடந்துவிட்டதால் தமக்குரிய ஆண்களைத் தரம் பிரித்துப் பார்க்க அவர்கள் மனம் நினைக்கின்றது. வாழ்ந்து பார்த்துக் காதலிப்போம், சேர்ந்து வாழ்ந்து பார்த்து திருமணம் செய்வோம் என முடிவெடுக்கின்றனர். காதல் யாருடனும் வரலாம் கல்யாணம் ஒருவருடனேயே வரவேண்டும் என்று தத்துவம் பேசுகின்றனர். இந்தப் பிரச்சினைகளுக்கு மத்தியில், கல்யாணம் அவசியம் தானா? என்ற கேள்விகளை முதிர்கன்னிகள் எழுப்பத் தொடங்கிவிட்டனர். பண்பட்டவர்கள் தமிழர்களா? வெள்ளையர்களா? ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய சூழ்நிலை எம்மவர் மத்தியில் நிழலாடுகின்றது. 


    மீண்டும் வருகின்றேன். காதல் என்பது எதுவரை? 

    February வெற்றி மணி பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை 


     


    சனி, 7 ஜனவரி, 2023

    உண்மை நட்பை இலக்கியங்களில் மட்டுமே காண முடியும்




    மனித வாழ்க்கையிலே உள்ள உறவுமுறைகளிலே நட்பு என்னும் உறவே மிதமாகப் பேசப்படுகின்றது. பெற்றோரிடம் மனைவியிடம் கூறத் தயங்கும் விடயங்களைத் துணிந்து நண்பர்களிடம் உரைக்கின்ற வழக்கம் பரந்த உலகம் முழுவதிலும் அனைத்து மனித வர்க்கத்திடமும் இருக்கின்றது. நண்பன் தனக்காக எதையும் விட்டுக் கொடுப்பான் தன்னுடைய உயிரையும் தருவான். தன்னுடைய இரகசியத்தைக் காப்பாற்றுவான் என்னும் நம்பிக்கைகள் இருந்து வருகின்றது. இந்த வழக்கம் தற்காலத்தில் போற்றிப் பாதுகாக்கப்படுகின்றதா என்பதும் இலக்கியத்தில் நட்பு எவ்வாறு கொண்டாடப்பட்டது என்பதும் ஆராயப் புகுந்தால் கால மாற்றத்திற்கேற்ப இலத்திரனியல் உலகில் மனங்கள் அந்தப் பண்புகளை மறந்து விடுகின்றார்கள் என்பதே உண்மை. இலக்கியத்தில் உண்மை நட்பு இருக்கின்றது. ஆனால், நடைமுறை வாழ்க்கையில் இருக்கின்றதா என்றால் அது இருக்கின்றது ஆனால், கேள்விக்குறியாகவே இருக்கின்றது 

    தளபதி திரைப் படத்திலே பாசம் வைக்க நேசம் வைக்கத் தோழன் உண்டு வாழ வைக்க, அவனைத் தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே. உள்ள மட்டும் நானே, உசிரைக் கூடத்தானே என் நண்பன் கேட்டால்  வாங்கிக்கன்னு சொல்லுவேன். நட்பைக்கூடக் கற்பைப் போல எண்ணுவேன். என்னும் பாடலாசிரியர் வாலி அவர்களின்; வரிகளிலே நண்பன் என்பவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை மனதிலே கொண்டு வந்து பதிக்கின்றார். நட்பாலே நெஞ்சைத் தைத்து, ஒரு விழி அழ மறுவிழியாய் அழுத நட்புக்களும், ஒரு பருக்கைச் சோறும் தட்டில் இல்லாது வழித்து வழித்து உணவுண்டு, விரல்கள் வறண்டு போகும் வரை பேசிப் பேசிச் சிரித்து ஆட்டம் போட்ட நட்புகள்  போன இடம் இன்று தெரியவில்லை. அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்து நண்பர்களின் இறுக்கத்தை நினைத்து ஏங்க வைக்கும் காலமாக இக்காலம் விளங்குகிறது. 

    இன்பத்திலும் துன்பத்திலும் அருகிலே இருக்கும் ஒரு உறவு நட்புறவு. அந்த  நட்புக்கு இலக்கணம் வகுக்கும் வள்ளுவர் ஆடை விழுகின்ற போது ஓடிச் சென்று அந்த ஆடையைப் பற்றுகின்ற கைகளைப் போல நண்பர்கள் இருக்க வேண்டும் என்கிறார். நட்பின் முக்கியத்துவம் கருதி நட்பு, நட்பு ஆராய்தல், தீ நட்பு, கூடா நட்பு பழைமை என்று 5 அதிகாரங்களுக்குள் அறிவுரைகளை அள்ளிக் கொட்டியிருக்கின்றார். அக்காலத்திலும் இக்காலத்து நட்புப் போல் அதிகமாக இருந்திருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. அறிவுக்கும் நட்புக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அறிவுடையவர்களுடைய உறவு வளர்பிறையைப் போல வளர்ந்து கொண்டே போகும். நாளும் நல்ல செய்திகளையும் அறிவுப் பரிமாற்றங்களையும் செய்கின்ற போது அதன் வளர்ச்சி பல்கிப் பெருகும். ஆனால், பேதையர் நட்பு தேய்ந்து போய் நின்று விடுவதை இலக்கியக் கூற்றாக மட்டுமன்றி இன்றும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. 

    நட்பின் இலக்கணம் கூற விழைந்த ஒளவையாரும் குளம் வற்றி நீரின்றி கவலையுடன் இருக்கும் குளத்தை ஒட்டி உறவாடிய பறவைகள் நாடி வருவதில்லை. அதே போல உண்மை நண்பன் என்று உறவாடிய நண்பர்கள், தேவையில்லை என்று அறிந்தவுடன் விலகிச் செல்வதை உண்மை நட்பின் இலக்கணம் இல்லை என்று ஒளவை எடுத்துரைக்கின்றார்.  ஆனால், அக்குளத்தினுடனே இருந்து கொடிகளும், ஆம்பலும், நெய்தலும்,  வாடி வதங்கும் அவ்வாறுதான் உண்மை நட்பு என்றும் கூடவே இருக்கும்.  என்று  நட்புப் பற்றி ஒளவையார் கூறுகின்றார். 

    கடையாயார் நட்பிற் கமுகனையார்; ஏனை

    இடையாயார் தெங்கின் அனையர் தலையாயார்

    எண்ணரும் பெண்ணை போன்று இட்டஞான்று

    இட்டதே  தொன்மையுடையார் தொட

    என நாலடியார் 3 வகையான நண்பர்களை எமக்கு இனம் காட்டுகிறார். பாக்கு மரத்துக்கு தண்ணீர் விட்டுக்கொண்டே இருக்க வேண்டும். எப்போதும் உதவி செய்து கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறான நட்புக்கு உதவி பண உதவி மாத்திரமல்ல என்பதே இங்கு எடுத்துக் காட்டவேண்டிய விடயமாக இருக்கின்றது. எப்போதும் உதவி கேட்டு நீதான் உலகத்திலேயே சிறந்த நண்பன் என்பவர்கள். ஒருநாள் கிடைக்கவில்லை என்றால், அக்காலத்தில் ஊர் முழுவதும் ஆனால், இக்காலத்தில் உலகம் முழுவதும் மூடாத வாயாக வட்சப் அழைப்பு தொடர்ந்து கொண்டேயிருக்கும். வசை புராணம் பாடி அடுத்தவர்களிடம் அந்த நபரில் இருந்த நன்மதிப்பைப் பிடிங்கி எடுத்துவிடுவார்கள். ஆனால், தென்னைமரம் தினமும் இல்லாவிட்டாலும் அடிக்கடி நீர் விட்டால் தன்னை எம்மோடு இணைத்து வைத்துக் கொள்ளும். ஆனால் பனை இருக்கிறதே விதையிடும் போது நீர் விட்டால் போதும் அந்த அடிப்படை அறிவை வைத்துக் கொண்டு காலம் முழுவதும் தானாக நீர் பெற்றுப் பயனைத் தரும்.  முதன்முதல் கண்டபோது ஏற்பட்ட உணர்வு எவ்வித எதிர்பார்ப்புக்களும் இல்லாமல் காலம் முழுவதும் புத்தம் புது மலர் போல மலர்ந்து கொண்டே இருக்கும். இவ்வாறான நட்பைப் பெறுவது அரிது. பெற்றால் பிரிவது அரிது. மனதால் தேடுவதும் தற்காலத்தில் தேடிக் கிடைக்காததும் இவ்வாறான நட்பே ஆகும்.  

    இலக்கிய காலத்திலே ஒளையார் அதியமான், கர்ணன் துரியோதனன், கோப்பருஞ்சோழன் பிசிராந்தையார், பாரி கபிலர் போன்றோர் நட்பை இலக்கியங்களிலே மன்னனுக்கும் புலவர்களுக்கும் இடையிலே இருந்த சிறப்பினை நாம் அறிந்திக்கின்றோம். அதேபோல், மணிமேகலைக்கு சுதமதியும், மாதவிக்கு வசந் மாலையும், கண்ணகிக்கு தேவந்தியும் காப்பியத் தோழிகளாக இருந்தனர். சங்ககாலப் பாடல்களிலே குடிமக்களிடத்தில் தோழமை உறவை எடுத்துப் பார்க்கும் போது தலைவிக்கும்  தலைவனுக்கும் இடையிலே ஏற்படும் கற்பொழுக்கம், களவொழுக்கம் ஆகிய இரண்டிலும் தோழியின் பங்கு அளப்பெரியது. தோழி என்பவள் தலைவியின் வளர்ப்புத்தாயாகிய செவிலித்தாயின் மகளே ஆவாள். சிறுவயதில் இருந்து ஒன்றாகவே வளருகின்றார்கள். தலைவனுடன் தலைவி காதல் வசப்படுகின்ற போது அக்காதலுக்குத் தூதாக வருபவளும், தலைவியின் குரலாக இருப்பவளும் தோழியே. அவளுக்கு நேர்மையாகவும், கண்டிப்பாகவும்,  அறிவுரை போதிப்பவளும் அவளே. தலைவனுடைய செயல்களை எப்போதுமே சந்தேகக் கண் கொண்டே நோக்குவாள். தலைவனும் தலைவியும் திருமணம் செய்து வாழுகின்ற கற்பொழுக்கத்திலே பரத்தையர் வழிப்பிரிந்த தலைவனுக்கு தலைவியோடு இணைந்து வாழவேண்டும் என்று அறிவுரை கூறுபவளும் தலைவன் தலைவியரிடையே ஏற்படும் ஊடலைத் தீர்த்து வைப்பவளும் அவளே. 

    ஆனால், தற்காலத்திலே தூது போன தோழி தலைவனைத் தன் வயப்படுத்தி தலைவியைப் பிரியச் செய்கின்ற செயல்களையும், தோழியிடம் நல்லவர் போல் நடித்து அவளுடைய நல்லெண்ணம் கொண்டவர்களிடம் அவளைப் பற்றி அவதூறு பேசுகின்ற தோழமையும் இலத்திரனியல் காலத்தில் நடைமுறை வாழ்க்கையில் மிதமிஞ்சியே காணப்படுகின்றன. உறவுகளிலே போலி என்ற வார்த்தையில்  நட்பு என்ற உறவே முன்னிலை வகிக்கின்றது. கூடவே இருந்து குழி பறிக்கின்ற குணத்துடனே கைகொடுக்கும் போது எதிர்மறை ஆற்றலைச்(நேபயவiஎந நுநெசபல) செலுத்தி விடக்கூடிய தன்மையும் நண்பர்களுக்கு உண்டு. அதனாலேயே தமிழர்கள் எச்சரிக்கையாக கைகூப்பி வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வார்கள். எனவே யார் உங்களுக்கு வணக்கம் தெரிவிக்கின்றார்களோ அவர்கள் உங்களிடம் எச்சரிக்கையாக இருக்கின்றார்கள் என்று அறியக் கூடியதாக இருக்கும். உன் பிள்ளை மருத்துவராகி விட்டானா? உன் பிள்ளைக்கு நல்ல மாப்பிள்ளை கிடைத்து விட்டானா? நீ நல்ல வாகனம் புதிதாக வாங்கி விட்டாயா? உனக்குச் சம்பளம் இந்த வேலையில் அதிகமாகக் கிடைக்கின்றதா? நீ வருடா வருடம் சுற்றுலா போகின்றாயா? நீ இவ்வளவு காலமும் தொடர்ச்சியாக இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றாயா? நானும் அதைச் செய்ய வேண்டும். என்னால் முடியுமோ முடியாதோ வரிந்து கட்டிக் கொண்டு குழப்பியடிக்க முயற்சிப்பேன்.; இப்படி அடுக்கிக் கொண்டு போகும் பொறாமை நட்புக்கள் மனதுக்குள் புழுங்கி வெளியிலே பற்களைக் காட்டிச் சிரிக்கும். எங்களைக் கட்டி அணைத்துக் கைகொடுத்து சிறப்பு, வாழ்த்துகள் என்று சொல்லும். அதனால், நம்பிக் கெடும் கோமாளிகளாக யாரும் இருக்கக் கூடாது. சிலருக்கு ஒரு சூடு. ஆனால், பலரும் சூடு வாங்கிக் கொண்டு ஏமாந்து கொண்டு வருந்துகின்றார்கள். அவர்களிடம் அவதானம் தேவை. புலம்பெயர்ந்த வாழ்க்கையில் எல்லாம் கிடைக்கின்றது. ஆனால், எப்படிக் கிடைக்கின்றது என்பதே முக்கியம். எல்லாராலும் எதையும் செய்ய முடியும். ஆனால், எப்படிச் செய்கின்றார்கள் என்பதே முக்கியம். அதனால், அவதானத்தை கைக் கொண்டு ஓடும் புளியம் பழமும் போல் வாழ்வதுதான் இக்காலத்துக்கு உரியதாக இருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது. இவ்வாறான நட்புகளுக்கு மத்தியில் எம்முடைய நெஞ்சைத் தம்முடன் இணைத்துத் தைத்துத் தொடரும் நட்புக்களும் இருக்கவே செய்கின்றன. அவர்களை காலம் இனங்காட்டிக்கொண்டே இருக்கும். 

    எனவே நாம் உண்மை நட்பை இலக்கியங்களில் மட்டுமே அன்றி நிஜத்திலும் கண்டிப்பாகக் காணலாம். 



    வியாழன், 8 டிசம்பர், 2022

    காதலின் இலக்கணம் இனி இலக்கியங்களில் மட்டுமே இருக்கும்.

     



    இலக்கியக் காதல் தூய கோட்பாடு சார்ந்தது. அதை நடைமுறை வாழ்க்கையில் காண முடியவில்லை. காண முடியாது என்னும் எண்ணப்போக்கில் இக்கட்டுரை தொடர்கிறது. 

    உயர்ந்தோர் மாட்டான ஒரு  செம்மைப்படுத்தப்பட்ட இலக்கிய சமுதாயத்தைக் கற்பனை பண்ணிப் படைக்கப்பட்ட பாடல்களே சங்க இலக்கியங்களில் காட்டப்பட்டுள்ளன. அங்கும் ஒழுக்க விழுமியங்கள் வலிந்து புகுத்தப்பட்டுள்ளன. தலைவி தன்னுடைய எண்ணக்கருக்களைத் தான் கூறாது, தன்னுடைய  தோழி மூலமே வெளிப்படுத்தியதாக எழுதப்பட்டுள்ளன. 

    பூலோகம் வாழும் வரைக் காதல் வாழும். அதன் நுண்ணிய உணர்வுகளை இலக்கணம் போட்டுக் கட்டுக்கோப்புக்குள் கொண்டுவரமுடியாது. காலமாற்றத்துக்கேற்ப அதன் பண்புகள் மாறுபடும் என்பதை யாரும் மறுக்க முடியாது. 

    "கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்"

    மலையின் உச்சியில் உள்ள ஒரு மூலிகை பறித்துவா என்று குப்பனிடம் காதலி கேட்கிறாள். இவ்வளவு உயர்ந்த மலையில் எப்படி ஏறுவது என்று குப்பன் மலைத்து நிற்கிறான். அதைப் பார்த்த காதலி சிரித்து விடுகிறாள். உடனே குப்பன் அவளைத் தூக்கினான், மலையின் மீது தாவினான், பறந்தான் என்று பாரதிதாசன் காதலியரின் கடைக்கண் பார்வைக்குள் கட்டுப்படும் காதலர்களின் துணிவை அழகாக எடுத்துக் காட்டுகின்றார். ஆனால் இன்று விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளர் கோபிநாத் அவர்கள் காதலியிடம் காதலைச் சொல்வதற்குத் தயங்கும் ஆண்களை இனம் காட்டினார். முடிந்தால் செய்வேன். இல்லையென்றால், நீ பறித்துவா என்று சொல்லும் காதலர்களையே இன்று அதிகம் காணக்கூடியதாக இருக்கின்றது.  

    "ஒத்த அன்பான ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம் அக்கூட்டத்தின் பின் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறு இருந்ததென கூறப்படாததாய் யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்புறுவதொரு பொருளாதலின் அதனை அகம்"

    என்று நச்சினார்க்கினியார் விளக்கம் தருகிறார். காதல் இருவருக்கும் ஒரே அளவானதாக இருக்க வேண்டும். இருவரிடையிலும் குற்றம் குறை கண்ணுக்கு அகப்படாது. 

    "சுனைவாய்ச் சிறுநீரை எய்தா தென்(று) எண்ணியப்

    பிணைமான் இனி துண்ண வேண்டிக் கலைமான் தன்

    கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்

    உள்ளம் படர்ந்த நெறி"

    தாகம் எடுத்து நீரருந்த வருகின்ற இணைமான்கள் வழியிலே காணுகின்ற குளத்து நீர் சிறிதளவே இருப்பதைக் கண்ட ஆண்மானானது தன்னுடைய பெண்மானுடன் தானும் அருந்துவதாக சாடை காட்டி பெண்மானை அருந்தச் செய்வதாக மாறன் பொறையனார் ஐந்திணை ஐம்பதிலே எழுதியுள்ள பாடல் போல் விட்டுக் கொடுப்புக்களும் இருக்க வேண்டும்.

    இவ்வாறான காதலர்கள் சேருகின்ற போது ஏற்படுகின்ற இன்பமானது அதன் பின் எவ்வாறு அந்த இன்பம் இருந்தது என்பதை வெளியிலே யாருக்கும் சொல்லாது தம்முடைய உள்ளத்துக்குள்ளேயே மறைத்து வைத்துப் பொக்கிசத்தை அடிக்கடி எடுத்துப் பார்த்து மகிழ்ச்சியடைவது போல் நினைத்து நினைத்து இன்புறுவார்கள்.

    அகமாகிய உள்ளத்துக்குள் நிகழ்வதால் அதை அகம் என்று நச்சினியார்க்கினியார் குறிப்பிடுகின்றார். இன்று தன் காதலியின் சுகத்தை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுதலும் தத்தமக்கு ஏற்படும்  உள்ளத்துணர்வினை வட்ஸ்அப் மூலம் பகிர்ந்து கொள்ளுதலும் களவொழுக்கத்தின் கட்டுப்பாட்டை மீறுவதாக இருக்கின்றது. 

    உயிரினங்கள் அனைத்துக்கும் காதல் கைகூடும். ஆனால், மனித குலத்தின் காதல் மனதுக்குள் இன்பம் துய்ப்பதாகும். மாற்றார் கண்களுக்குள்ளும் கருத்துக்குள்ளும் அகப்படாததாய் உள்ளத்துணர்வாக அமையும். காதல் வயப்பட்ட பெண் தூக்கம் தொலைத்து நிற்பதைப் புலவர் பதுமனார் குறுந்தொகையிலே பாடும் போது 

    "நள்ளென்றன்றே யாமம் சொல் அவித்து

    இனிது அடங்கினரே, மாக்கள் முனிவு இன்று

    நனந்தலை உலகமும் துஞ்சும்

    ஓர் யான் மற்றத் துஞ்சாதேனே"

    மக்களெல்லாம் பேச்சொலி இன்றி உறங்குகின்றனர். மற்ற உயிர்களெல்லாம் வெறுப்பு எதுமில்லாமல் நன்றாக உறங்குகின்றார்கள் யான் மட்டும் உறக்கமின்றித் தவிக்கின்றேன் என்று பொருள் வழிப் பிரிந்த காதலனை நினைத்து உறக்கம் தொலைத்துக் காதலி பாடிய இலக்கியக் காதலை இக்காலத்து இலத்திரனியல் உலகத்தில் காணமுடியாது. காதலன் பிரிந்து சென்று அடுத்த நிமிடமே எங்கே நிற்கின்றாய். வீடியோ அழைப்பு எடு. வாகனம் ஓடுவதாக இருந்தால், லொகேசனை அனுப்பு என்று கேட்டு காதலன் செல்கின்ற பாதையை எல்லாம் அறிந்து விடுவாள். நினைத்து ஏங்க வேண்டிய அவசியம் அவளுக்குத் தேவையில்லை.  அதுதவிர அடிக்கடி உலகம் தழுவிய நண்பர்கள் தொலைபேசியிலே பலதும் பத்தும் கதைத்து அவளுடைய நேரத்தைக் கொள்ளையடித்து இயல்பான உறக்கத்துக்கு அவளைக் கொண்டு வந்துவிடுவார்கள். இங்கு எண்ணி ஏங்கி உறக்கம் தொலைக்க அவளால் முடிவதில்லை. 

    இங்கு காதல் இலக்கணம் மாறுதோ. இலக்கியம் ஆனதோ. இதுவரை நடித்தது அது என்ன வேதம். இது என்ன பாடம் என்று கண்ணதாசன் வரிகளை எண்ணத் தோன்றுகிறது.

    அன்று இலக்கியம் காட்டிய காதலை மனதுக்குள் நினைத்து தற்கொலைகள் அதிகம் ஏற்பட்டது. இன்று பெண் ஆணுக்குச் சமமாகச் சம்பாத்தியம் பண்ணத் தொடங்கிவிட்டால், ஆணைத் தங்கி வாழும் நிலை பெண்ணுக்கு இல்லை. காதலுக்காக ஏங்கிக் காலத்தை வீணடிக்கும் நோக்கமும் இல்லை. இயற்கையாக ஏற்படும் உணர்வுக்கேற்ப காதலை இருவரும் ஏற்றுக்கொண்டார்கள். 

    விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,

    மறந்தனம் துறந்த காழ் முளை அகைய,

    நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப்

    நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்' என்று,

    அன்னை கூறினள், புன்னையது நலனே

    அம்ம! நாணுதும், நும்மொடு நகையே

    விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப,

    வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்

    துறை கெழு கொண்க!-நீ நல்கின்,

    இறைபடு நீழல் பிறவுமார் உளவே.

    என நற்றிணையில் சொல்லப்பட்டது போல் நீங்கள் பாலும் தேனும் இட்டு வளர்த்த புன்னை மரம் உங்களுக்குத் தங்கை என்று தாய் சொன்னதால், அதன் கீழ் இருந்து இருவரும் இனி காதல்மொழி பேசவும் பழகவும் முடியாது என்று தோழி தலைவனிடம் சொல்லிய இயற்கையை நேசித்த, பூசித்த இலக்கியக் காதலை  இன்று நினைத்துப் பார்க்க முடியாது. 

    இன்று பணமும், அந்தஸ்தும் இனமும், மொழியும், மதமும், பார்த்துப் பெற்றோர் காதலரைப் பிரித்து வைக்க முடியாது. காதலர்களே பிடித்திருந்தால், சேர்வார்கள். பிடிக்கவில்லை என்றால் பிரிவார்கள். தமக்கு எது செட் ஆகிறதோ அதை நோக்கி போய்க் கொண்டே இருக்கும் காதலுக்கு இலக்கணத்தை நாம் இலக்கியத்திலேயே தேட வேண்டும்.



    ஞாயிறு, 13 நவம்பர், 2022

    Cryonic Technology

     

    இறந்தவர் மீண்டும் எழும்ப முடியுமா? மறுபிறப்பு ஒன்று இருக்கிறதா? ஒரு மணிதனால், 100 ஆண்டுகள் கழிந்தும் வாழ முடியுமா? இவ்வாறான கேள்விகள் எங்கள் மத்தியில் இருக்கின்றது. சித்தர்கள் ஒரு உடலை விட்டு இன்னும் ஒரு உடலுக்குள் சென்று கூடுவிட்டுக் கூடு பாயும் யுத்தியைக் காட்டியிருக்கிறார்கள். எகிப்து நாட்டவர்கள் இறந்தவர் மீண்டும் எழுவார் என்ற நம்பிக்கையில் அவர்களுடைய உடலை பதப்படுத்தி வைத்து அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் எல்லாம் அவர்களுடைய உடலுடன் சேர்த்து மம்மிகள் என்ற பெயரில் பிரமிட்டுகள் செய்திருக்கின்றார்கள். ஆனால் விஞ்ஞானம் நோயால் இறந்த மனிதனை  மீண்டும் உயிருடன் கொண்டுவர முடியும் என்று உறுதியாகச் சொல்லியபடி முயற்சி செய்து செய்து கொண்டிருக்கின்றார்கள். அதுதான் கிறையோனிக். இது பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். 



    யாருக்குத்தான் காலங்கடந்தும் வாழ வேண்டும் என்று ஆசை இருக்காது. எனக்கும் ஒரு கவலை இருக்கின்றது. இந்த ரெக்னோலஜி இனிவரும் காலங்களில் எப்படி இருக்கப் போகின்றது. எங்களுடைய மூதாதையர் வீட்டில் இருந்தே திரைப்படம் பார்க்கும் வசதி பெற்றிருக்கவில்லை. கைத்தொலபேசியுடன் உலகம் முழுவதும் தொடர்பு கொள்ள வசதி இருந்ததில்லை.

       

    ஆனால், இன்று அந்த வசதியை ரெக்னோலஜி ஆக்கித் தந்திருக்கின்றது. இதைப் போல நானோரெக்னொலஜி மூலம் என்ன எல்லாம் வரும். அதை நாம் பிரயோகிக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு இருக்கிறது. ஆனால், அதற்கேற்ற பணவசதி இருக்க வேண்டாமா. அதுபற்றியே இந்தப் பதிவு  அமைகின்றது. 


    கிறையோனிக் மூலம் நோயால் இறந்த மனிதனை பிரிசேர்வ் பண்ணி வைத்து அந்த நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டவுடனே அந்த மனிதனுக்கு மருத்துவம் பார்த்து அவரை மீண்டும் வாழவைபபதுதான் கிரையோனிக் என்பது. கிரையோனக் என்றால், கிரேக்க மொழியிலே குளிர் என்பது அர்த்தமாகவுள்ளது. ஒரு மனிதன் இறந்தபின் அவனுடைய உடலை அல்லது உறுப்பை குறைவான குளிரில் அதாவது  −196 °c அல்லது −320.8 °f  இல் பிறிசேர்வ் பண்ணி வைத்தல். அதன்பின் 100 அல்லது அதற்கு மேலும் 1000, 2000, வருடங்கள் கழித்து ஒரு இறந்த மனிதனை எழுப்பலாம் என்னும் ரெக்னோலஜி வருகின்ற போது நானோ ரெக்னோலஜி பயன்படுத்தி என்ன நோயால் இறந்தாரோ அதற்குரிய மருத்துவம் செய்து எழுப்புதல். உதாரணமாக புற்றுநோய் வந்து இறந்தவர்கள் புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடித்த பின் மருந்தின் மூலம் பிறிசேர்வ் பண்ணிய உடலை மீண்டும் உயிருடன் எழுப்பலாம். உடம்போ கெட்டுப் போகாது. 1967 இல் முதல் உடல் பதப்படுத்தப்பட்டது. 



    ரொபேர்ட் எடின்பர் என்பவரே இத்தொழில் நுட்பத்தை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர். 1963 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில்  கிரையோனிக் நிறுவனம் தொடங்கப்பட்டது. உலகில் 7 கிரையானிக் நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. 

    இறந்து சில நிமிடங்களுக்குள் வேலையைத் தொடங்கிவிடுவார்கள். முதலில் மூளை செயல் இழக்காமல் இருக்க தேவையான ஒட்சிசன் மூளைக்குக் கொடுக்கப்படும். உடலிலுள்ள இரத்தமும் நீரும் முழுமையாக வெளியேற்றப்படும உடல் சிதையாமல் இருக்க வேதிப்பொருள் இரத்தத்திற்குப் பதிலாகப் பாய்ச்சுவார்கள். பின் ஐஸ்கட்டிகளுக்குள் அந்த உடல் வைக்கப்படும். 




    பின்னர் அந்த உடலை - 196 டிக்கிரி செல்சியஸ் திரவ நைட்ரஜன் நிறைந்த கண்டைனருக்குள் வைத்து மூடிவிடுவார்கள். உதாரணமாக புற்றுநோயால் ஒருவர் உயிரிழந்தால், புற்றுநோய்க்குரிய மருந்தை அந்த உறுப்புக்குச் செலுத்தி நானோ தொழில்நுட்பத்தில் புது உறுப்பாக வளர்க்கப்பட்டு அவருடைய உடலுக்குள் வைக்கப்படும். மூளைக்குத் தேவையான ஒட்சிசனை அளித்து பழைய நினைவுகளைக் கொண்டுவர முடியும். 



    கிரையோயினிக்ஸ் இன்சிரியூட் - 35 ஆயிரம்  அமெரிக்க டொலர் இவ்வாறு பதப்படுத்தத் தேவை என்கிறார்கள்.

    அல்கோல் - 2 இலட்சம் அமெரிக்க டொலர் தேவை என்கிறது 

    ஓகஸ்ட 2022 கணிப்பீட்டின் படி 500 பேர் பிறிசேர்வ் பண்ணப்பட்டுள்ளார்கள். 3000 ககு மேற்பட்டவர்கள். பெயர் பதிவு செய்திருக்கிறார்கள் 

    "நோயாளிகள்" மருத்துவ ரீதியாகவும் சட்டப்பூர்வமாகவும் இறந்த பின்னரே Cryonic  நடைமுறைகள் தொடங்கும். 12. 01.1967 இல் கேன்சர் நோயால் இறந்த கலிபோர்னியா யூனிவேர்சிட்டி சைக்கொலஜி professor James Bedford சடலம் தான் உறைந்த முதல் சடலமாகும். 



     

    மூளையின் அமைப்பு அப்படியே இருக்கும் வரை அதன் தகவல் உள்ளடக்கத்தை மீட்டெடுப்பதற்கு எந்த அடிப்படைத் தடையும் இல்லை என்று கிரையோனிஸ்டுகள் வாதிடுகின்றனர். 

    எதிர்காலத்தில், நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்கவும், அவர்களைக் கொன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும் உதவும் என்று கிரையோனிக்ஸ் வழக்கறிஞர்கள் கருதுகின்றனர்.

    கிரையோனிக்ஸ் விலை உயர்ந்ததாக இருக்கலாம். 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி, கிரையோனிக்ஸைப் பயன்படுத்தி சடலங்களைத் தயாரித்து சேமிப்பதற்கான செலவு America Doller 28,000 முதல் 200,000 வரை இருந்தது.

    ஜெர்மனியின் முதல் கிரையோனிக்ஸ் 96 வயதான முன்னாள் பொறியாளர். பிப்ரவரி 17, ஞாயிற்றுக்கிழமை காலை, டீனிமேஷன் செய்யப்பட்டு, அவர் 6 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி 23 அன்று ஃப்ராங்க்ஃபர்ட்டிலிருந்து  டெட்ராய்ட்டுக்கு -78°c வெப்பநிலையில் உலர் பனியில் மாற்றப்பட்டு அதன்பின் நோயாளி 5.5 நாட்களில் -196°f க்குக்  குளிரூட்டப்பட்டார். பின்னர் மார்ச் முதலாம் திகதி 2019 அன்று நிரந்தர சேமிப்பிற்காக அமெரிக்காவில் அவருடைய உடல் கிரையோனிக்காக  மாற்றப்பட்டது .



    18.11.2016: இங்கிலாந்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி லுகேமியாவால் பாதிக்கப்பட்டு, குணமடையாமல் இருந்த போது இந்த உலகத்தில் நான் வாழ வேண்டும் என்றும் ஆசையாக இருக்கிறது என்றும் சமூக நிறுவனங்களிடம் தன்னைப் பதப்படுத்தும்படிச் கேட்டுக் கொண்டாள்.  அதன்படி அவளுடைய உடல் அவள் இறந்தபின்  கிரியோபிரிசேர்வ் செய்யப்பட்டது. அவள் இறப்பதற்கு முன்பே அவளுக்கு இந்த நடைமுறைக்கு  சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டது. 

    எனவே நீங்களும் மீண்டும் வாழ விரும்பினால், முயற்சி செய்யலாம். ஆனால், நீங்கள் மீண்டும் எழும்போது உள்ள உலகத்துக்கு ஏற்றபடி உங்களர்ல் வாழமுடியுமோ தெரியாது. வீதியில் ரொபோட்டோக்கள் நடந்து கொண்டு திரியும். வாகனங்கள் வானத்தில் பறக்கும், செயற்கைச சூரியன் இருக்கும். எதை எப்படித் தொடுவது என்று தெரியாமல் உங்களை நீங்கள் அப்டேர் செய்யமுடியாமல் தண்ணீருக்குள் வழுந்து நீந்தத் தெரியாதது போல் தத்தளிப்பீர்கள். யோசித்துப் பாருங்கள். உங்களுடைய கருத்தைப் பகிர மறக்க வேண்டாம். 


    விழி சொல்லும் கதைகளை விட மனம்சொல்லும் கதைகள் உணர்வுபூர்வமானவை

      விழி சொல்லும் கதைகளை விட மனம்சொல்லும் கதைகள் உணர்வுபூர்வமானவை காரணமில்லாமல் மனம் சிலரைத் தேடும். முன்னமே ஒட்டி உறவாடி விட்டுச் சென்றவர்களி...