• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    புதன், 4 மார்ச், 2026

    ஆணும் ஆணும் குழந்தை பெற விஞ்ஞானம் சாத்தியமாக்குமா?

     


    ஆண் பெண் என்னும் இரு பால் பிரிவினர் உயிரினங்களிடையே காணப்படுகின்றன. இவை பால் கவர்ச்சியின் மூலமும் இயற்கை அமைப்பின் மூலமும் ஒன்றோடு ஒன்று கலந்து பரம்பரை அமைப்பு முறையைப் பேணுகின்றனர். காதல், காமக் கவர்ச்சி என்பன இருபாலாரிடையே ஏற்படும் உணர்வு எனக் காலம் காலமாக எமது பண்பாடு கற்பித்தது. இதை மீறிய உறவுமுறைகளைத் தற்போது பல உலக நாடுகள் சட்டரீதியாக ஏற்றுக் கொண்டுள்ளமையை அறிகின்றோம். இதன் மூலம் தமது வாரிசுகளை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதனையே இக்கட்டுரை ஆய்வு செய்கின்றது.

    தற்போது பால் இனம் என்பது இல்லை. மனிதர் என்னும் இனம் மட்டுமே உள்ளது. உறுப்புக்களைக் கொண்டு பால் கவர்ச்சியுள்ள LGBTQ என்றும் Rainbow Society என்றும் அழைக்கப்படும் இனமக்களும் தம்மை வெளிப்படையாக அடையாளப்படுத்தி உலகமெங்கும் வாழுகின்றனர். இது பற்றி எல். ஜி. பி. ரி . கியூ என்னும் நூலில் விளக்கமாக எழுதியுள்ளேன்.

    பெண்ணும் பெண்ணும் காதல் கொள்வதும் காமம் கொள்வதுமான பண்பையுடையவர்கள் லெஸ்பியன் (Lesbian) என்றும் ஆணும் ஆணும் பாலியல் ரீதியாகத் தொடர்பு வைத்திருப்பவர்கள் கே (Gay) என்றும், ஆண் பெண் இருபாலாரிடமும் பாலுணர்வு கொண்டவர்கள் பைசேக்சுவல் (Beisexual) என்றும், பிறப்பால் ஆணாகவோ பெண்ணாகவோ இருந்தாலும் உள் உணர்வுரீதியாக ஆண்கள் தம்மைப் பெண்ணாகவோ பெண்கள் தம்மை ஆணாகவோ நினைத்து வாழ்பவர்கள் ற்ரான்சென்டர் (Transgender) அதாவது திருநங்கை திருநம்பி என்றும், பாலியல் அடையாளம், அல்லது பாலின அடையாளம் (gender identity) பாரம்பரிய வரையறைகளுக்குள் அடங்காதவர்கள் தங்களை ஒரு குறிப்பிட்ட பாலினப் பிரிவுக்குள் அடைக்க விரும்பாமல் கியுவர் (Queer) என்றும் தம்மை அடையாளப் படுத்தி வாழுகின்றார்கள். இவர்களை விட காதலிலோ, காமத்திலோ நாட்டமில்லாத (aromatic) என்பவர்கள் Questionin, Interse, Assexual, Aromatic, Pansexual, Non – Binary of Envy, Genderqueer, Agender, Stud, Muke, MaHu, Hetaro sexism, Cisgender போன்ற பிரிவுகளும் இருக்கின்றன.

    திருமாலுக்கும் சிவனுக்கும் பிறந்த குழந்தையே ஐயப்பர் எனப் புராணக் கதை கூறுகின்றது. திருமால் மோகினி அவதாரம் எடுத்துத் தாரக வனத்துக்கு முனிவர்களின் தவத்தைச் சோதிப்பதற்காக வந்தபோது சிவன் திருமாலில் மோகம் கொண்டு சிவனுக்கும் திருமாலுக்கும் பிறந்த குழந்தையே ஐயப்பர் என புராண வரலாறு கூறுகின்றது. திருமால் மோகினியாக மாறியது ர்ரான்சென்டர் என்றே கருத வேண்டும். இவர்களுக்கு எப்படி குழந்தை பிறந்தது என்பது கேள்விக்குறி? சமூகத்திலே இவ்வாறான பால் பிரிவுகள் இருந்திருக்க வேண்டும் என்பதை அறிவிப்பதாக இக்கதை உணர்த்துகின்றது.

    பழங்குடி மக்களிடமும் ஆதி மனிதனிடமும் இருந்த முறை தவறிய காதலை ஒரு வரையறைக்குள் கொண்டுவரவே பண்பாடுகளும் கலாச்சாரங்களும் உருவாகின. அவை மனித உணர்வுகளுக்கு கட்டுப்பாட்டை விதித்து வாழ்க்கையின் சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும் இல்லாமல் செய்கின்றன என்று தற்கால தலைமுறையினர் வாதிடுகின்றனர். காலம் காலமாகத் தன்னைக் கொன்று சமூகத்தின் பார்வைக்காக எத்தனையோ ஆண்களும் பெண்களும் இவ்வுலகில் வாழ்ந்து மடிந்திருக்கின்றார்கள். மனிதர்களின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுங்கள் என முழக்கமிடுகின்றனர். மேலை நாடுகள் இவற்றுக்குத் தலைசாய்த்து இச் சமூகத்தினரை ஏற்கத் தொடங்கிவிட்டனர்.

    "கே" எனப்படும் ஆணும் ஆணும் இணைந்து ஒரு சிசுவை உருவாக்க முடியுமா?

    கர்ப்பம் உருவாக விந்து (sperm) + முட்டை (egg) + கருப்பை (uterus) தேவை. ஆண்களிடம் விந்து மட்டுமே இருக்கும். முட்டையும் கருப்பையும் இல்லை. வேறு மூன்று வழிகளில் பிள்ளையை இவர்கள் பெற முடியும்.

    1. சரோகசி (Surrogacy):

    ஒரு ஆண் தனது விந்துவை ஒரு பெண்ணின் முட்டையுடன் (donor egg) இணைத்து மற்றொரு பெண்ணின் கருப்பையில் (surrogate mother) கர்ப்பமாக வளர்க்கலாம். பிறந்த பிள்ளை சட்டப்படி அவர்களின் பிள்ளையாக இருக்கலாம் (நாட்டின் சட்டத்தைப் பொறுத்து). இந்த முறையில் குழந்தைகளைப் பெற்றெடுக்க வழிமுறை உண்டு.2. தத்தெடுப்பு (Adoption)

    இயற்கைக்கு மாறாகப் பல விடயங்களைச் செய்துகாட்ட விஞ்ஞானம் முயற்சி செய்து கொண்டு இருக்கிறது. ஆனால், சமய நிறுவனங்களும் நாட்டு அரசினரும் தடை செய்து கொண்டிருக்கின்றனர். ஏனென்றால், இந்த இயற்கைக்கு மாறான விடயங்களால் பாதிப்புக்களை எதிர்நோக்கலாம் என்கின்றனர். உதாரணமாக ஒரு உயிரின் மரபணு (DNA) அப்படியே நகலாக இன்னொரு உயிரை உருவாக்கும் குளோனிங் முறை வெற்றியடைந்தது.

    குளோன் செய்ய வேண்டிய உயிரிலிருந்து (உதா: செம்மறியாடு, மாடு) தோல் செல்போன்ற சாதாரண உடல் செல் எடுக்கப்படுகிறது. அந்த செல்லுக்குள் முழு DNA இருக்கும். அதன்பின் மற்றொரு பெண் உயிரின் முட்டை செல் (egg cell) எடுக்கப்படும். அதில் இருக்கும் நியூக்ளியஸ் (DNA) முழுவதும் அகற்றப்படும். இப்போது அது காலியான முட்டையாகின்றது. இபபவது DNA இடமாற்றம் நடத்தப்படுகிறது. முதல் உயிரின் உடல் செலிலிருந்து எடுத்த நியூக்ளியஸ் இந்த காலி முட்டை செலுக்குள் வைக்கப்படும். சிறிய மின்சார அதிர்ச்சி கொடுக்கப்படும் போது தனால் அந்த செல்லானது “நான் கருவாக வளர வேண்டும்” என்று நினைத்துப் பிரிவடைந்து வளரத் தொடங்குகிறது. உருவான கரு (embryo) ஒரு சரோகேட் தாயின் கருப்பையில் வைக்கப்படுகிறது. அது பின் சாதாரண கர்ப்பம் போல வளர்ந்து பிறக்கிறது. இவ்வாறு உருவான முதல் குளோன் பாலூட்டி 1996 இல் ஸ்காட்லாந்தில் பிறந்த செம்மறியாடு “Dolly”. இதுவே குளோனிங் உலகத்தை மாற்றியது.

    எனவே எதுவும் சாத்தியம். மனித உடலும் செல்களினால் உருவாக்கப்பட்ட ஒரு ரோபோ என்றால் நம்ப மறுக்கும் மனம். ஆனால் அதுவும் உண்மையே. மூளையின் செயற்பாடு நின்றுவிட்டால், எமது இதயம் தொழிற்பட மறுத்தால் ரோபோக்களைத் திருத்துவது போலத் திருத்திச் செயற்பட முயற்சி செய்வோம். முடிந்தால் எம்முடைய இயந்திர உடல் தாங்கி சிறிது காலம் ஆயுளை நீட்டிப்போம். ஒருநாள் நின்று அனைத்தும் நிற்க. வெறும் சாம்பலாவோம்.

    செல்களை உருவாக்கிச் செயற்படுத்தி உறுப்புக்களை வளர வைக்கும் விஞ்ஞானம் கருப்பையை உருவாக்க முயற்சிக்க மாட்டாது என்று ஏன் நம்ப மறுக்கின்றோம். அமெரிக்காவில் ஒரு ஆண் குழந்தையைக் கருவில் சுமந்தார் என்று பல செய்திகள் வெளியாகின. அவர் Trans men ஆக இருந்திருக்கின்றார். பிறக்கும் போது பெண்ணாகப் பிறந்து பின் மனத்திலும் அடையாளத்திலும் ஆணாகத் தன்னை மாற்றி வாழ்ந்தவர் என்பது தெரிய வந்தது.

    முடிவாக வேகமாக முன்னேறிவரும் விஞ்ஞானம் எதிர்காலத்தில் இதனையும் சாத்தியப்படுத்தலாம். நாம் நினைத்துப் பார்க்காத பல சாதனங்களை விஞ்ஞானம் நடத்திக் காட்டி இருக்கின்றது.

    Gay தம்பதிகள் பிள்ளை பெறுவது, வளர்ப்பது என்பதை மூன்று கோணங்களில் மதம், அறிவியல், சமூகப் பார்வை

    மதத்தின் பார்வை

    மதங்களில் ஒரே மாதிரி கருத்து இல்லை. பெரும்பாலும் பாரம்பரிய விளக்கங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன.

    இந்து மதம்:

    பாரம்பரியமாக திருமணம் = ஆண் + பெண் என்ற கருத்தே வலுவாக உள்ளது. ஆனால் புராணங்களில் பாலின வேறுபாடு, மூன்றாம் பாலினம், பாலின மாற்றம் போன்ற குறிப்புகள் இருக்கின்றன (அர்த்தநாரீஸ்வரர், சிகண்டி). Gay பிள்ளை வளர்ப்பு பற்றி நேரடி தடை எதுவும் இல்லை. ஆனால் சமூக நடைமுறை மத விளக்கத்தைவிட கடுமையாக இருக்கிறது.

    மொத்தத்தில் மதங்கள் பெரும்பாலும் பாரம்பரிய குடும்ப அமைப்பையே முன்னிலைப்படுத்துகின்றன. ஆனால், சமீப காலங்களில், “கருணை, அன்பு, அறம்” என்பவற்றை மையமாக வைத்து சிலர் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

    கிறிஸ்தவம்:

    பல திருச்சபைகள் ஒரே பாலின உறவுகளை ஆதரிப்பதில்லை. குழந்தை வளர்ப்பு “ஆண்–பெண் குடும்பம்” என்ற பாரம்பரியக் கருத்தோடு இணைக்கப்படுகிறது. ஆனால் நவீன கிறிஸ்தவ பிரிவுகள் சில LGBTQ மக்களை ஏற்றுக்கொள்கின்றன.



    இஸ்லாம்:

    ஒரே பாலின உறவுகள் பொதுவாக அனுமதிக்கப்படவில்லை. குடும்பம் என்பது ஆண்–பெண் உறவாகவே பார்க்கப்படுகிறது. அதனால் Gay தம்பதிகளின் குழந்தை வளர்ப்பு பெரும்பாலும் மறுக்கப்படுகிறது.

    மொத்தத்தில் பெரும்பாலான மதங்கள் பாரம்பரிய குடும்ப அமைப்பையே வலியுறுத்துகின்றன. ஆனால் காலப்போக்கில் சில மாற்றங்கள் நடக்கின்றன.

    Gay பெற்றோர்கள் வளர்க்கும் குழந்தைகள்:

    Gay பெற்றோர்கள் வளர்க்கும் குழந்தைகள் மனநலம், கல்வி, சமூக இவை எல்லாவற்றிலும் சாதாரண பெற்றோரின் குழந்தைகளுக்கு சமமாகவே இருக்கிறார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன இவர்கள் வளர்ப்பில் குழந்தைக்குத் தீங்கு ஏற்படும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. குழந்தைக்கு அன்பு, பாதுகாப்பு, நிலையான சூழல் போன்றனவே முக்கியம். பெற்றோரின் பாலினம் முக்கிய காரணம் இல்லை. ஒரு குழந்தைக்கு மிக முக்கியமானது “யார் பெற்றோர்?” அல்ல, “எப்படி பெற்றோர்?” என்பதே.

    முடிவாக காதல் என்பது பிள்ளை பெறும் திறன் அல்ல. காதல் என்பது குடும்பம், பெற்றோர் என்பவை பல வடிவங்களில் இருக்கலாம். "கே" க்களின் திருமணங்கள் அதிகரிக்கும் பட்சத்தில் மனித உருவாக்கம் குறையும் என்னும் குற்றச்சாட்டுக்களும் இருக்கின்றன. ஆனால், மனிதர்களில் சாதாரணமான மக்களும் இருக்கின்றார்கள்; ரெயின்போ சமூகத்தினரும் இருக்கின்றார்கள். எனவே மனித இனம் அழிந்துபோகச் சாத்தியக் கூறுகள் இல்லை. ஆணும் ஆணும் இணைந்து குழந்தை பெற்றெடுப்பதை எதிர்காலமே பதில் கூறும்.







    செவ்வாய், 3 மார்ச், 2026

    ஒரு குழந்தை பிறக்கும் போது அங்கே ஒரு தாயும் பிறக்கிறாள்

     



    பூமிப் பந்திலே தோன்றிய உயிர்களில் மகத்தான உயிரினம் மனித இனம். இம்மனித இனத் தோற்றத்தில் ஆணும் பெண்ணும் அவசியமாக இருந்தாலும் தாயே ஒரு கரு உருவாகி கர்ப்பம் தரித்துப் பாராமரிப்பதில் முக்கிய பொறுப்பை ஏற்றுக் கொள்ளுகின்றாள். அந்தத் தாய் கருப்பை ஆய்வு கூடத்தினுள் வைத்து ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து இந்த உலகத்துக்குக் கொடுப்பது என்பது இலகுவான காரியமல்ல. மூன்றாவது மாதத்துடன் வாந்தி, தலைச் சுற்றலில் ஆரம்பித்துத் உடலுக்குள் ஏற்பட்ட மாற்றத்தை உடல் உணர்ந்து கொள்ளும் வரை உபாதை அடைகின்றாள். வலிதாங்கி, உடல் நோய் பொறுத்து, பத்தியம் இருந்து தாய் குழந்தையைப் பெற்றெடுக்கின்றாள். எம்முடைய தமிழ் மக்கள் பச்ச உடம்புக்காரி என்று குழந்தையைப் பெற்றெடுத்த தாயை கவனமாகப் பேணுவார்கள். குழந்தை பிறந்த பிறகு தாயின் உடல் மற்றும் மன நலத்தை மீட்டெடுக்க ஒவ்வொரு கலாச்சாரத்திலும் தனித்துவமான வீட்டு மருத்துவச் சடங்குகளும், பாட்டி வைத்திய முறைகளும் (Home remedies) பின்பற்றப்படுகின்றன. அதில் மட்டக்களப்பு மக்கள் இன்றும் சில பகுதிகளில் குழந்தை பிரசவித்த தாய்மாருக்கு எடுக்கும் கவனம் குறிப்பிடத்தக்கது.


    குழந்தை பிறந்த பிறகு ஒரு தாய்க்கு ஏன் அதிகப்படியான கவனிப்பும் பராமரிப்பும் தேவைப்படுகிறது என்றால், ஒரு உயிர் உருவாவதும், அது உலகிற்கு வருவதும் தாயின் உடலுக்கு மிகப்பெரிய சவாலாகும். பிரசவத்தின் போது ஏற்படும் இரத்த இழப்பால் உடல் பலவீனமடையும். அதை ஈடுகட்ட சத்தான உணவு அவசியம். கர்ப்ப காலத்தில் விரிவடைந்த கருப்பை மற்றும் பிற உறுப்புகள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப கால அவகாசம் தேவை. உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவுகள் திடீரென குறைவதால் உடல் சோர்வு ஏற்படும். பிரசவத்திற்குப் பின் பல பெண்களுக்கு பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வு அல்லது 'Baby Blues' ஏற்பட வாய்ப்புள்ளது. தூக்கமின்மை மற்றும் புதிய பொறுப்புகள் தாய்க்கு மன அழுத்தத்தை தரலாம். அன்பான கவனிப்பு மற்றும் அரவணைப்பு மட்டுமே தாயை இந்த மனநிலையில் இருந்து மீட்க உதவும்

    தாய்ப்பால் ஊட்டுதல் 

    குழந்தைக்குத் தேவையான முழு ஊட்டச்சத்தும் தாயிடமிருந்தே கிடைக்கிறது. தாய் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும். தாய் உட்கொள்ளும் உணவே குழந்தையின் செரிமானத்தையும் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கிறது. பிரசவத்திற்குப் பிறகு தாயின் நோய் எதிர்ப்பு சக்தி தற்காலிகமாகக் குறைந்திருக்கும். கிருமித்தொற்று ஏற்படாமல் இருக்கவும், உடல் காயங்கள் (தையல்கள் போன்றவை) விரைவில் ஆறவும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.

    பெரும்பாலான நாடுகளில் இந்த காலத்தை "தனிமைப்படுத்தப்பட்ட காலம்" (Confinement Period) என்று அழைக்கிறார்கள். அதன் முக்கிய விவரங்கள் இதோ:

    இந்தியாவில் பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு என்பது ஒரு கலை போலவே போற்றப்படுகிறது. தாய்க்கும் குழந்தைக்கும் தினமும் வெதுவெதுப்பான நல்லெண்ணெய் அல்லது மூலிகை எண்ணெய் மசாஜ் செய்யப்படுகிறது. இது எலும்புகளை வலுப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. பிரசவ லேகியம், காயம் (காயப்பொடி), ஓமம் கலந்த நீர் போன்றவை செரிமானத்திற்கும் பால் சுரப்பிற்கும் தரப்படுகிறது. பொதுவாக 40 நாட்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் ஓய்வெடுக்க வேண்டும். 'வயிறு கட்டுதல்' (Tummy Binding) மூலம் கருப்பை பழைய நிலைக்குத் திரும்ப உதவுகிறார்கள்.

    2. சீனா: 'சுவோ யுயே சி' (Zuo Yue Zi - Sitting the Month)

    இதன் பொருள் "ஒரு மாதம் அமர்ந்திருத்தல்" என்பதாகும். 'வெப்பம்' தான் இவர்களின் முக்கிய கொள்கை. தாய்மார்கள் குளிர்ந்த நீரில் கை நனைக்கவோ, குளிக்கவோ, தலை வாரவோ கூடாது என்பது பழங்கால நம்பிக்கை. இஞ்சி, பேரீச்சம்பழம் மற்றும் மூலிகைகள் சேர்த்த சூப் வகைகள் அதிகம் தரப்படும். குறிப்பாக, பன்றி கால் சூப், பால் சுரப்பிற்கு மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

    3. லத்தீன் அமெரிக்கா: 'லா குவாரன்டீனா' (La Cuarentena)

    மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் 40 நாட்கள் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. 'Faja' எனப்படும் துணியால் வயிற்றை இறுக்கமாகக் கட்டுவார்கள். உடலை முழுவதுமாகப் போர்த்திக் கொண்டு காற்று புகாமல் பார்த்துக்கொள்வார்கள். 40-வது நாளில் தாய்க்கு ஒரு மூலிகைக் குளியல் அளிக்கப்படும், இது 'உடலை மூடுதல்' (Closing the bones) என்று அழைக்கப்படுகிறது.

    4. மலேசியா மற்றும் இந்தோனேசியா: 'பாந்தாங்' (Pantang)

    'பெர்டுங்கு' (Bertungku) என்ற முறையில், சூடாக்கப்பட்ட கற்கள் அல்லது மூலிகை மூட்டைகளைக் கொண்டு வயிற்றுப் பகுதியில் ஒத்தடம் கொடுப்பார்கள். 'ஜமு' (Jamu) எனப்படும் பாரம்பரிய மூலிகை பானங்கள் உடல் வலிமையைத் திரும்பப் பெற வழங்கப்படுகின்றன.

    இதுவே ஒரு குழந்தை பிறந்துவிட்டால் மட்டக்காளப்பிலே பிள்ளை பிறப்பதற்கு 1 மாதத்திற்கு முன் கருவேலம் பட்டை, சித்தரத்தை, வேர்க்கொம்பு, பறங்கிக்கிழங்கு, மஞ்சள், ஓமம், வெட்டிவேர், நாயுருவி வேர், அசமதாகம், மிளகு, திப்பிலி போன்ற பல வேதிப் பொருட்களை மாதவிடாய் வந்த பிள்ளையிடம் கொடுத்து சின்னச்சின்னத் துண்டாக வெட்டிக் கழுவி அதனைத் தென்னஞ்சாராயப் போத்தலுக்குள் நல்ல நேரம் பார்த்துப் போட்டு மூடிவிடுவார்கள்.

    அந்தப் போத்தலை நீர் ஊறுகின்ற வாய்க்கால் பகுதிக்கு அண்மையில் நிலத்துக்குக் கீழே புதைத்து வைப்பார்கள். குழந்தை பிறந்தபின் ஊற வைத்த போத்தலை எடுக்கும் போது அது நன்றாக ஊறி இருக்கும்.

    குழந்தை பிறந்து 3 ஆவது நாளில் குழந்தை பெற்ற பெண்களை நன்றாகச் சுடுநீரில் குளிக்க வார்ப்பார்கள். மதியச் சாப்பாட்டின் பின் இந்த ஊற வைத்த பொருட்களை வடித்தெடுத்து அப்பொருள்களை இவையெல்லாம் ஊறிய தென்னஞ்சாராயத்தில் இருந்து ஒரு தேக்கரண்டி எடுத்துக் குடிக்கக் கொடுப்பார்கள்.

    அதன் பின் இந்த ஊறிய வேதிப் பொருட்களை நன்றாகக் காய வைத்து இடித்து மாவாக்கி குழந்தை பெற்ற தாய்மாருக்கு மாதவிடாய் ஏற்படுகின்ற காலத்தில் தேனில் கலந்து 3 உருண்டைகள் உருட்டிக் கொடுப்பார்கள்.

    பெண்களைக் குளிக்க வார்ப்பதை வேது வார்ப்பது என்பார்கள். அதற்கு வேப்பம் பட்டை, வேப்ப இலை, ஆமணக்கு, ஆடாதோடை போன்றவற்றை அவித்த நல்ல சூடான நீரை இடுப்புப் பகுதிக்கெல்லாம் ஊற்றிக் குளிக்க வார்ப்பார்கள்.

    வேர்க்கொம்பு, பரங்கிக்காய், கருவேலம் பட்டை, அசமதாகம், மஞ்சள், வெள்ளைப் பூண்டு, மிளகு, திப்பிலி போன்ற பொருட்கள் மாத்திரமே ஊற வைத்து மண்ணுக்குள் புதைக்காமல் கொடுக்கின்ற வழக்கம் ஏறாவூரில் இருக்கின்றது.

    இவ்வாறெல்லாம் கொடுப்பது மட்டுமல்ல. பத்தியக்கறி என்று சரக்குச் சாமான்களாலேயே தூள் செய்து அந்தத் தூளிலேயே தாய்க்கு உணவு சமைத்துக் கொடுப்பார்கள். ஒரு மாதத்துக்குக் குஞ்சுக் கோழி, மீன், முருங்கைக்காய் என்று பார்த்துப் பார்த்துச் சமைத்து உண்ணக் கொடுப்பார்கள்.

    ஒரு குழந்தை பிறக்கும்போது, அங்கே ஒரு தாயும் பிறக்கிறாள். பழைய ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும், புதிய பொறுப்புகளைச் சுமக்கத் தயாராகவும் அந்தத் தாய்க்கு ஓய்வும், சத்தான உணவும், எல்லாவற்றிற்கும் மேலாக அன்பான அரவணைப்பும் மிக அவசியம்.





    ஞாயிறு, 1 மார்ச், 2026

    வாழ்வின் போராட்ட முதல் படி




     விழுவதும் எழுவதும்

    எழுந்ததும் விழுவதும்

    வாழ்வின் இயற்கை

    முயற்சியின் முதற்படி

    படி படி வாழ்வைப் படியென

    உள்ளத்துள் ஒரு உந்துதல்

    உதைத்துக் கொண்டே

    உரக்கச் சொன்னது

    கற்றேன் கற்றேன்.


    ஒரு அடி தரையில் படிய

    மறு அடி உயர்த்த

    தரையில் முத்தமிடும்

    உடலின் ஓங்கிய குரல்

    உள்ளிருந்து ஒலித்தது

    போராடத் துணிந்தாய்  - உன்

    வாழ்வின் முதல் நம்பிக்கை

    முதல் வெற்றி 



    புதன், 18 பிப்ரவரி, 2026

    உயிரினும் ஓம்பப்படும்





    உயிர் வாழ உள்ளத்து உணர்வுகளே உத்தமமானது. இல்லையென்றால் வாழ்தல் என்பது ரொபோட்டோக்களின் அசைவாகவே அமையும். 

    உயிர்களின் உணர்வுகளுக்கு உரமூட்டுகின்ற காதலென்னும் பொதுவான மொழியானது, இனம், கடந்து உயிர்களின் வாழ்க்கைக்கு அர்த்தத்தைத் தருகின்றது. இது மனிதனின் ஆதித் துடிப்பு. இது மின்னலாயும் வரும், வாழ்நாள் முழுவதும் தொடரும் தீபமாயும் அமையும். ஒருவரின் குறைகளை நிறைகளாய்க் காண்பதும், அவரின் பலவீனங்களை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக அவருடன் வாழ்வதும் காதலிப்பவர்களால் மட்டுமே முடியும்.

    மிருகமாய்த் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய மனித இனத்துக்கு ஏற்படும் காதல் உணர்வானது பிற உயிரினங்களை விடப் புனிதமானது என்று மட்டும் கூற முடியாது. அதேபோல யாருக்கு யாரில் காதல் ஏற்படும் என்பது யாராலும் கூற முடியாது. அக்காதல் எவ்வளவு காலம் நீடித்திருக்கும் என்றும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. உள் உணர்வுகள் ஏற்படுத்துகின்ற பிரதிபலிப்புக்குக் காரணம் தேடாது புரிந்துணர்வின் பால் மனத்தைச் செலுத்துவதே தற்கால பண்பாட்டம்சமாக இருக்கின்றது.

    உடல் அழகில் ஆரம்பித்து ஆன்ம அழகை நோக்கி உயர்த்தும் சக்தி காதலுக்கு உண்டு என்று பிளேட்டோவும், ஒருவர் மற்றவர்களுக்காக வாழும்நிலை காதலுக்கு உண்டு என்று அரிஸ்டோட்டிலும், அன்பும் காதலும் குழந்தைப் பருவ அனுபவ நீட்சி என்று சிக்மண்ட் ஃப்ராய்ட்டும் கூறினார்கள்.

    காதலை இலக்கியங்கள் அற்புதமாக படம்பிடித்துக் காட்டியுள்ளன. “யாயும் ஞாயும் யாராகியரோ…” என்ற வரிகளில் காதல் சமூக எல்லைகளை உடைப்பதைப் பார்க்கிறோம். சிலப்பதிகாரக் கண்ணகியின் காதல் கணவன் மீது கொண்ட பக்தியும், நீதிக்கான போராட்டமும் ஆகும். கம்பராமாயண ராமன் – சீதை காதல் தியாகத்தின் உச்சம். ஷேக்ஸ்பியரின் ரோமியோ - ஜூலியட் சமூக விரோதங்களை எதிர்த்து உயிர் துறக்கும் காதல். டோல்ஸ்டாயின் அன்னா கரெனினா வில் வரும் காதல் சமூக கட்டுப்பாடுகளுக்குள் சிக்கும்போது உருவாகும் வலியை எடுத்துக் காட்டுகின்றது.

    வாழ்க்கையில் பிடிப்பை ஏற்படுத்துகின்ற, அடிப்படையான, ஆச்சரியப்பட வைக்கும் காதலின் பிரதிபலிப்புக்களை மிருகங்கள், பறவைகளின் வாழ்க்கையிலும் காணலாம்.

    தன்னுடைய குடும்பத்தைத் தனியே விடாது குடும்பமாகப் பயணிக்கும் யானைகள் பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கும் போதும் குடும்பமாகச் சீரழிப்பதைக் கண்டிருக்கின்றோம். குட்டியை அணைத்துக் கொண்டு கொப்பு விட்டுக் கொப்புத் தாவுகின்ற குரங்குக்குக் கூட்டங்கள் தாய்மையின் தியாகமான காதலை உணர்த்துகிறன, இணை பிரிந்தால் உயிர் வாழாமை மட்டுமல்லாது இரையுண்ணாது காலங்கடத்தும் பறவைகளும், வளர்த்த எசமானைக் கண்டதும் வாலாட்டி மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் நாயும், எசமானில் பாசம் கொண்ட மாடும் காதலுக்குச் சாட்சிகளே.

    ஒரே துணையுடன் வாழ்நாள் முழுவதும் அன்னப்பறவை, புறா, ஆல்பட்ராஸ், பென்குயின், கழுகு, நாரை ஆகிய பறவைகள் வாழுகின்றன. அன்னப் பறவைகளினுடைய இரண்டு கழுத்துக்களையும் இணைத்துப் பார்த்தால் காதலின் வடிவம் இதயம் போன்றிருக்கும். நற்றிணையிலே

    இணையொடு நீங்கா அன்னம் போல

    அணையா அன்பு உடையாள்”

    அன்னப்பறவைகள் எப்போதும் துணையைப் பிரியாது சேர்ந்து வாழ்வது போல என தலைவி தலைவன் இடையிலான பிரிக்கமுடியாத காதல் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.


    ‘’குருவி இணை போலக்

    குறைவு இன்றி வாழ்க”

                   - குறந்தொகை -


    குருவிகள் சிறிய பறவைகள் என்றாலும், இணைபிரியாத குடும்ப வாழ்க்கை அவற்றின் சிறப்பு எனக் கூறுகிறது.

    புறா துணையை இழந்தால் நீண்ட காலங்கள் துயரோடே காணப்படும்.


    “துணை இழந்த புறா போல

    துயருறும் என் நெஞ்சம்”

                    - நற்றிணை – 

    பென்குயின்கள் தங்கள் துணையை மிக அன்புடன் பராமரிக்கின்றன. குறிப்பாக எம்பெரர் பென்குயின்களில், ஆண் பென்குயின் முட்டையை கால்களில் வைத்துக் கொண்டு கடும் பனிக்காலத்திலும் பாதுகாக்கிறது. இது தியாகம் மிக்க காதலின் சின்னமாகும்.

    மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பல காதல் பாடங்கள், இயற்கையின் சிறு பறவைகளிடமே மறைந்துள்ளன.

    அதேபோல ஓநாய்கள்,  யானை, நாய், குதிரை, பீவர், சிம்பாஞ்சி, டால்பின், ஆகிய விலங்குகள் துணையின் காதலை வாழ்நாள் முழுவதும் விட்டுக் கொடுக்காது.  வாழ்நாள் முழுவதும் ஒரே துணையுடன் வாழும் விலங்குகளாக அறியப்படுகின்றன.

    யானை தன்னுடைய துணையுடன் மட்டுமன்றி குட்டிகளுடனும் உறவுகளுடனும் தீராத காதலுடையது. உறவு யானை இறந்தால் அதைச் சுற்றி நின்று துயரப்படும் தன்மையானது அதனுடைய காதலை எடுத்துக்காட்டுகின்றது. ஆண்–பெண் ஓநாய்கள் இணைந்து குடும்பத்தை உருவாக்கி, குட்டிகளை பாதுகாப்பதிலும் வளர்ப்பதிலும் சம பங்கு வகிக்கின்றன. குடும்பத்திற்கான இந்த ஒற்றுமை உண்மைக் காதலின் அழகான வடிவமாகும். குதிரைகள் தங்கள் துணையுடனும் பராமரிப்பாளருடனும் ஆழமான பாசத்தைக் கொண்டிருக்கின்றன. பிரிந்தால் மனஅழுத்தம் அடைவதும், மீண்டும் சந்திக்கும் போது மகிழ்ச்சியுடன் காணப்படுவதும் குதிரைகள் தம்முடைய காதலை வெளிப்படுத்துகின்ற அம்சங்களாகின்றன. ஆண், பெண் பீவர்கள் இணைந்து குடியிருப்புகளை கட்டி, குட்டிகளை வளர்க்கின்றன. இணைந்த உழைப்பும் குடும்ப ஒற்றுமையும் உண்மைக் காதலின் அடையாளம் என்பதை உணர்த்துகின்றன. சிம்பாஞ்சிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களிடையே ஆழமான பாசத்தை வெளிப்படுத்துகின்றன. காயமடைந்த உறுப்பினர்களை கவனித்தல், குட்டிகளை அன்புடன் பராமரித்தல் ஆகியவை கருணைமிக்க காதலை எடுத்துக்காட்டுகின்றன. டால்பின்கள் காயமடைந்த தோழர்களை நீர்மேலே தூக்கி மூச்செடுக்க உதவுவதைப் பார்க்கும் போது சமூக உறவுகளுக்கும் காதலுக்கும் கொடுக்கின்ற முக்கியத்துவத்தை அறியக்கூடியதாக இருக்கின்றது. 

    காதல் பார்வை, ஈர்ப்பு மானில் உண்டு என்பதை ஆண் மானின் பார்வை பெண் மான்மீது காட்டும் மென்மையான காதலைச்

    “பெண்மான் நோக்கின் பெருங் காதல்” என்னும் வரிகள் எடுத்துக் காட்டுகின்றன.

    இன்றைய காதல் வேகமானது. ஒரு மெசேஜில் தொடங்குகிறது. ஒரு பார்வையில் இல் முடிகிறது. சமூக வலைதளங்கள் காதலை மிக அருகில் கொண்டுவந்தன. அதே நேரத்தில் அதன் ஆழத்தை சுருக்கின. பல இடங்களில் காதல் உடல் ஈர்ப்பாக, உடனடி தேவையாக, நுகர்வுப் பொருளாக மாறுகிறது. ஆனால் இதற்கிடையிலும், புரிதலோடு, பொறுமையோடு, ஒருவருக்கொருவர் இடம் கொடுத்து காதலோடு வாழும் மனிதர்களும் இருக்கிறார்கள். அவர்களிடம்தான் காதல் இன்னும் உயிரோடு இருக்கிறது.

    உண்மைக் காதல் என்பது கை பிடிப்பதில் இல்லை, வாக்குறுதிகளில் இல்லை, படங்களில் இல்லை. ஒருவரின் மௌனத்திலும் அருகில் நிற்பது, வலியிலும் விட்டு விலகாமல் இருப்பது, காலம் மாறினாலும் மனம் மாறாது இருப்பது. காதல் இல்லாத வாழ்க்கை இதயம் துடிக்காத உடலைப் போன்றது. காதலின் வடிவங்கள் மாறலாம். காதல் மாறாது. அது உயிரைவிடப் பெரிதானது. 













    ஆணும் ஆணும் குழந்தை பெற விஞ்ஞானம் சாத்தியமாக்குமா?

      ஆண் பெண் என்னும் இரு பால் பிரிவினர் உயிரினங்களிடையே காணப்படுகின்றன . இவை பால் கவர்ச்சியின் மூலமும் இயற்கை அமைப்பின் மூலமும் ஒன்றோடு ஒன...