• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 13 ஆகஸ்ட், 2016

    கவிஞர் இரா. இரவி அவர்கள் விமர்சனம்

    முக்கோண முக்குளிப்பு
    நூல் ஆசிரியர் : சந்திரகௌரி சிவபாலன் (ஜெர்மனி)  www.gowsy.com
    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

    வெளியீட்டாளர் : ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம், 
    பக்கங்கள் : 194.
    *****

           முகநூல் தோழி சந்திரகௌரி சிவபாலன் அவர்கள்,  நான் எழுதும் நூல் விமர்சனங்களை இணையத்தில் படித்து விட்டு என்னுடைய முகவரியை பெற்று இந்த நூலைஜெர்மனியில் இருந்து அனுப்பி இருந்தார்கள்.  புலம்பெயர்ந்த வலி மிகுந்த வாழ்க்கையிலும் தமிழுக்காக தமிழ் இலக்கியத்திற்கே நேரம், பணம் செலவழித்து நூல் வெளியிடுவது குறித்து முதல் பாராட்டு.
           நூல் ஆசிரியர் சந்திரகௌரி சிவபாலன் அவர்கள் இந்நூலை பெற்றோருக்கு காணிக்கையாக்கி உள்ளார்.  அருமையான கவிதையும் எழுதியும் உள்ளார்.  அதில் இருந்து சில துளிகள். 
     என்னுள் வாசம் செய்து, எனக்குள் ஓர் எழுத்தாளனை, 
    எனக்குள்  ஒரு வைத்தியனை, 
    எனக்குள் ஓர் உழைப்பாளியை, 
    எனக்குள் ஒரு தாய்மையை, 
    எனக்குள் ஒரு பகுத்தறிவாளியை ; 
    எனக்குள்  ஒரு சிந்தனைவாதியை 
    எனக்குள் நான் எல்லாமாய் வாழ  அச்சாணியானவர்களே!
           இக்கவிதையின் நூலாசிரியரின் பன்முக ஆற்றலும் அதற்கு முழுமுதற் காரணமானவர்கள், பெற்றோர்கள் என்பதையும் உணர்த்தி உள்ளார்.
           இது ஒரு வித்தியாசமான நூல் புலம்பெயர்ந்த தமிழர்கள் குறிப்பாக ஈழத் தமிழர்கள் பெரும்பாலும் ஆன்மிகவாதியாகவே இருப்பார்கள்.  சென்ற நாடெல்லாம் கோயில் கட்டி வணங்குவார்கள்.  இந்த நூல் ஆசிரியர் சந்திர கௌரி அவர்கள் பகுத்தறிவாளர்.  வித்தியாசமாக சிந்திந்து எழுதிய ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. 57 கட்டுரைகள் உள்ளன.  பழைய பழக்கவழக்கங்களை கண்மூடி ஆதாரிக்காமல் ஏன்? எதற்கு? எப்படி? என ஆராய்ந்து நன்மை இருந்தால் ஏற்றுக் கொள்ளவும், தீமை என்றால் புறந்தள்ளவும் விழிப்புணர்வு விதைத்து உள்ளார், பாராட்டுகள்.
           நூல் ஆசிரியர் சந்திரகௌரி சிவபாலன் ஒய்வுக்கு ஒய்வு தந்து விட்டு சிறப்பாகச்  சிந்தித்துஎழுதிய கட்டுரைகளின்தொகுப்பு இலக்கியத்தில் ஈடுபட்டு முத்திரை பதித்து வருகிறார்.  முகநூலில், வலைப்பூவில், இணையத்தில் இவரது படைப்புகளைப் படித்தி இருக்கிறேன்.  அவற்றை மொத்தமாக நூலாகக் கண்டதில் மகிழ்ச்சி. ஒய்வுக்கு ஒய்வு தந்து விட்டு சிறப்பாகச் சிந்தித்துஎழுதிய கட்டுரைகளின் தொகுப்பு  என்பதால் தமிழ் இலக்கியத்தை ஆழ்ந்து படித்து உள்ளார். பட்டப்படிப்பு தமிழ் இலக்கியம் பயின்று உள்ளார்.
           மடை திறந்த வெள்ளமாக திருக்குறள் உள்ளிட்ட பல இலக்கியங்களை மேற்கோள் காட்டி கட்டுரைகள் வடித்து உள்ளார்.  வால்மீகி இராமாயணம் வரை படித்துள்ளார்.  நூலாசிரியரின் இரண்டாவது படைப்பு இந்நூல்.  www.gowsy.com என்ற இணையம் சொந்தமாகத் தொடங்கி எழுதி வரும் எழுத்தாளர்.  இந்நூலிற்கு  திருமதி P.S.M. சார்லஸ், வைரமுத்து சிவராசா (பொன். புத்திசிகாமணி) ஆகியோர் சிறப்பான அணிந்துரை வழங்கி உள்ளனர், பாராட்டுகள்.
          நிலவும் யாழ் நூலும் என்ற முதல் கட்டுரையில் யாழ் பற்றிய ஆய்வு மிக நன்று.  யாழின் வகைகள் பற்றி பிரமிப்பில் ஆழ்த்தி உள்ளார்.
          7 தந்திகளுடைய செங்கோட்டி யாழும், 21 தந்திகளுடைய பேரியாழும் ஆகும்.  இவை பற்றிப் பத்துப்பாட்டு அழகாக எடுத்துக்காட்டுகின்றது.  அதன்பின் சிலப்பதிகார காலத்தில் 14 தந்திகளுடைய சகட யாழும், 17 தந்திகளுடைய மகர யாழும் வழக்கத்திற்கு வந்தன.  அதன்பின் 1 தந்தியுடைய மருத்துவ யாழும், 1000 தந்திகளுடைய நாரத பேரியாழும், 100 தந்திகளுடைய கீசயாழும், 9 தந்திகளுடைய தும்புரு யாழும் வழக்கத்திற்கு வந்தன.. அழகான வேலைப்பாடுகளுடனும், இரத்தினக்கற்கள் பதித்தும் இந்த யாழ் வகைகள் காணப்பட்டன எனவும், மேலும் அவை பற்றிய விளக்கங்களும் சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிலப்பதிகாரம், கல்லாடம் ஆகிய நூல்களில் தெளிவாகக் காணக் கூடியதாக இருக்கின்றது.
           பதச்சோறாக இங்கு எழுதி உள்ளேன்.  இது போன்று பல ஆய்வுத் தகவல்கள் நூலில் உள்ளன. தகவல் சுரங்கமாக உள்ளது. கட்டுரைக்குப் பொருத்தமான படங்களும், நல்ல கவிதைகளும் நூலில் இருப்பதால் சற்று பெரிய நூலாக இருந்தாலும் படிப்பதற்கு ஆர்வமாக மிக நல்ல நடை.
          பகுத்தறிவு என்ற கட்டுரையில் எப்பொருள்... என்று தொடங்கும் இரண்டு திருக்குறளையும் மேற்கோள் காட்டி பகுத்தறிவு விதை விதைத்தது சிறப்பு.  கட்டுரையின் தொடக்க வரிகள் இதோ!
          ஏன் என்று கேட்காது விட்டால், மடையர் நாம் என்று காட்டி விடும் அறிவு.  நாம் ஆறறிவு மனிதர்களா? இல்லையெனில் ஐந்தறிவு மிருகங்களா? என்று புரியாது போய்விடும்.
           பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், அறிஞர் சாக்ரடீஸ் ஆகியோர் அறிவுறுத்திய ஏன்? எதற்கு? எப்படி? எதனால் ? என்ற கேள்விகளைக் கேட்டதன் வெளிப்பாடே இந்த நூல் எனலாம்.  அந்த அளவிற்கு எதையும் பகுத்தறிவு கண்ணோட்டத்துடன் கட்டுரைகள் வடித்துள்ளார்.  பாராட்டுகள்.  அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன.  அச்சிட்ட அன்றா பிரிண்டேர்ஸ் (யாழ்ப்பாணம்) அச்சகத்திற்குப் பாராட்டுகள்.
           தமிழ் இலக்கியங்களில் உள்ள பகுத்தறிவு கருத்துக்களை மேற்கோள் காட்டி உள்ளார்.  கட்டுரையின் முடிவில் முடிவுரை போல வடித்த வைர வரிகள் இதோ!
         காலத்தைக் காண இலக்கியங்களைப் புரட்டாதீர் அங்கு!
           அங்கீகரிக்கப்படாத தலைவர்களும்
           தெய்வங்களாக்கப்பட்ட
           போலி மனிதர்களும்
          கோடீஸ்வர்ர்களால் குத்தகைக்கு
          எடுக்கப்பட்ட கோயில்களும் 
          காலத்தை அலங்கோலமாயக்
          காட்டிக் கொண்டிருக்கும்.
    மகாகவி பாரதியார் பாடிய புதுமைப்பெண்ணாக நெஞ்சில் உரத்துடனும், நேர்மைத் திறத்துடனும், கவிதைகளுடன் கட்டுரைகள் வடித்துள்ளார்.
           தமிழ்மொழியின் சிறப்பை, பெருமையை, அருமையை பல கட்டுரைகளில் வடித்துள்ளார். தாய்மொழியின் முக்கியத்துவத்தை விளக்கி உள்ளார்.  இலக்கிய இன்பம் என்ற கட்டுரையில் சங்கப்பாடல் தொடங்கி கவியரசு கண்ணதாசன் பாடல் வரை மேற்கோள் காட்டி வடித்த கட்டுரை நன்ற. வள்ளுவர் பெருமையும், திருக்குறளும் கட்டுரையில் உலகப்பொதுமறையின் மேன்மையை உலகறிய வைத்துள்ளார்.
                ஆடி அமாவாசை, திருநீறு, சந்தனம், சித்ரா பௌர்ணமி, தாலி இவற்றை அறிவியல் பார்வையுடன் பார்த்து தந்த விளக்கங்கள் அருமை.  பாதணி பற்றியும் எழுதி உள்ளார்.  தமிழர்களின் பண்பாடான வணக்கம் செலுத்துதல் பற்றியும் எழுதி உள்ளார்.   சிறந்த சிந்தனையாளர் என்பதால் இன்றைய கல்விமுறை பற்றியும், மலர்களின் நேசம், எழுத்தாளனை மதிக்காத அவல நிலை பற்றியும், அறப்பணி ஆசிரியர் பணி அதற்க்கே  உன்னை அர்ப்பணி "என்பார்கள்.  ஆசிரியர் கடமை பற்றியும் விரிவாக எழுதி உள்ளார்.
           குழந்தை வளர்க்கும் விதம் பற்றி தாய்மொழியாம் தமிழ்மொழியைப் பேசத் தயங்குவது ஏன்? என்ற கேள்வி கேட்டு விளக்கம் தந்துள்ளார்.  மணம் முடிக்காத கன்னிகளுக்கு ஆலோசனை வழங்கி உள்ளார்.  திருமணம் என்ற கட்டுரையில் வாழ்வியல் சிந்தனை விதைத்து உள்ளார்.  தமிழர் திருநாளாம் பொங்கல் பற்றியும் கட்டுரை உள்ளது.  குழந்தைகளின் உலகை படம்பிடித்துக் காட்டி உள்ளார். 
           அவரது படைப்புகள் பற்றி அவரது வரிகளில் காண்போம். 
           எனது படைப்புகள் 
           எனது எழுதுகோல் செதுக்கிய சிற்பங்கள்
           கணினித் துணையுடன் பிரசவித்த குழந்தை 
           இணையங்கள் அணைத்த வாரிசு
           இனிப்பு தடவாத எலுமிச்சை.
           எழுமிச்சை இனிப்பாக இல்லாவிட்டாலும் உடல் நலத்திற்கு நல்லது.  இவருடைய எழுத்து சமுதாயத்திற்கு நன்மை தரும்.நூல் ஆசிரியர் சந்திரகௌரி சிவபாலன் அவர்களுக்கு பாராட்டுகள் .புலப்பெயர்ந்து ஜெர்மனியில் வாழ்ந்த போதும் தமிழ் மீதும் தமிழர் மீதும் பற்றுக் கொண்டு சிந்தித்து பல கட்டுரைகள் வடித்து, அவற்றை தொகுத்து நூலாக வழங்கி, தமிழன்னைக்கு அணி சேர்த்து வருவதற்கு பாராட்டுகள் .தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள் .வாசகரை நெறிப்படுத்தும் மிக நல்ல நூல் .

    நன்றி
    அன்புடன்
    கவிஞர் இரா .இரவி

    http://tamil.pratilipi.com/kavignar-eraravi


                       பேராசிரியர் சிவராஜா ,  பேராசிரியர்    துரை மனோகரன் அவர்கள்                
                                                                      இருவரினதும் விமர்சனம் 

                                                                  பேராசிரியர் சிவராஜா 


    “இது என் நூல் யாரும் இரவல் கேட்காதீர்கள்” காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் கண்ணதாசன் கைப்பட எழுதிய வாசகம்தான் இது. ஒரு பயனுள்ள நல்ல நூலை நாம் யாருக்கும் இரவல் தர மனம் வராது தவிப்போம். அப்படியே தந்தாலும் நினைவுபடுத்தி பெற்றுக் கொள்வோம்.
    ஒரு நூலுக்கான மதிப்பை அதை படிக்கும் ஓரிரு பக்கங்களிலேயே தீர்மானித்து விடலாம். மீண்டும் மீண்டும் படிக்க வைக்கும் புத்தங்கள் உலத்தின் தலைச் சிறந்த மதிப்பைப் பெற்றதாகும்.
    படிக்க படிக்க சலிப்பு தட்டாக ஒரு நூல் இந்த முக்கோண முக்குளிப்பு. ஒரு நூலுக்கான தகுதியும் அதுதான்.
    சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல்நவின்றோர்க்கு இனிமை, நன்மொழி புணர்தல்
    ஓசை யுடைமை, ஆழம் உடைத்தாதல்
    முறையின் வைப்பே, உலகமலை யாமை
    விழுமியது பயத்தல், விளக்கும் உதாரணத்தது
    ஆகுதல் நூலிற்கு அழகென்னும் பத்தே

    என்று ஒரு நூலிற்கான பத்து அழகுகளைப் பற்றி என் முன்னோடி பவணந்தி எடுத்துரைக்கிறார்.
    பத்து பொருத்தமும் பொருந்தி வரும் ஒரு நல்ல புத்தகமே இந்த முக்கோண முக்குளிப்பு.
    நன்றாகத் தமிழ் செய்யும் ஞானம் பெற்ற புலம்பெயர்ந்த தமிழச்சியால் (சந்திரகௌரி சிவபாலன்) எழுதப்பட்ட இந்த நூல் பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய களஞ்சியமாகும். தமிழ்ச் சொற்களைப் பொதிந்து வைத்திருக்கும் அம்பராத்தூணி.
    இலக்கிய இன்பம்
    அறிந்ததும் புரிந்ததும்
    சிந்தனையின் தேனூற்று
    என்று நூலை மூன்றாகப் பிரித்து பாகுபடுத்தி முக்கோண முக்குளிப்பு என்ற தலைப்பை இந்நூலுக்கு இட்டிருப்பது நூல் பொருத்தமாகும்.
    இலக்கிய இன்பம் என்ற பகுதியில் இலக்கயத்தைப் பற்றிய நல்ல புரிதலை நமக்கு கொடுக்கிறார் நூலாசிரியர். இலக்கிய வரிகள் புலவர்களின் அறிவுகள் என இந்தப் பகுதி விரிகிறது. நான் கேளவி படாத இலக்கிய மேற்கோள்கள் இதில் இடம் பெற்றிருக்கிறது. அந்த தகவல்களும் சிறப்பானதாகவே இருக்கிறது.
    அறிந்ததும் புரிந்ததும் என்ற தலைப்பில் தமிழர் கலாச்சாரத்தையும் அதற்கான அறிவியல் விளக்கத்தையும் தனக்கே உரிதான அழகான மொழி நடையில் எழுதிருப்பது சிறப்பு. திருநீறு, ஆடி அமாவாசை, ஆலமரத்தடி பிள்ளையார், தமிழர் கலாச்சாரத்தில் தாலி, தலைப்பாகை, விளக்கின் ஆன்மீகத் தத்துவம் என்பது போன்ற புதிய கோணத்தில் சொல்பட்டிருக்கும் செய்திகள் அற்புதம்.
    சிந்தையின் தேனூற்று என்ற தலைப்பில் சொல்லி இருக்கும் ஒவ்வொரு கருத்துகளும் நடைமுறை இயல்பையும் அதன் வெளிப்பாட்டு நடைத்தையும் நமக்கு சொல்லி தெளிவை கொடுக்கின்றன.
    கல்வி, அன்பு, நட்பு, அனுபவம், சீதனம், திருமணம், வன்முறை, முதியோர் தினம், நம்பிக்கை, கோபம் என்பது போன்ற தலைப்புகளில் எழுதிருக்கும் பாங்கு அழகு.
    “இது எனக்கான தெளிவு மட்டுமல்ல உலகத்துக்கான தெளிவு” என்று நூலாசிரியர் சந்திரகௌரி சிவபாலன் ‘விதைத்தை விளக்குகின்றேன்’ என்னும் என்னுரையில் சொல்லி இருக்கிறார். உண்மையும் அதுதான். எல்லோரும் வாசித்து தெளிய வேண்டிய நூல் உருவாகும்.
    ” தன் எண்ணமென்னும் பொக்கிசத்தை பிறர் எண்ணத்திற்குள் புகுத்தும் அற்புதக்கலை கைவரப் பெற்றவர் சந்திர கௌரி” என்று வாழ்த்துரையில் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கூறும் கூற்று மெய்யானதே.
    நூல் அமைப்பு அழகு!
    எழுத்தின் வடிவம் வாசிக்க ஆர்வம்!
    வாசிக்க ஆர்வத்தைத் தூண்டும் வடிவமைப்பு!
    ஜெர்மன் எழுத்தாளர் சங்கம் வெளியீடாக வந்திருக்கும் இந்நூல் எல்லோர் வீட்டு நூலகத்திலும் இருக்க வேண்டிய பயனுள்ள நூலாகும்.
    அன்னை சந்திரகௌரி சிவபாலன் அவர்களுக்கும், ஜெர்மன் எழுத்தாளர் சங்கத்திற்கும் என் நெஞ்சம் கனிந்த வாழ்த்துகள்.
    மேலும் பல நூல் படைக்க வேண்டும்.

    அன்புடன் 
    பேராசிரியர் சிவராஜா 




                                                            வாழ்த்துரை

                -    பேராசிரியர் துரை.மனோகரன்

                 முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர்

                   பேராதனைப் பல்கலைக்கழகம்


     இன்று சர்வதேச அளவில் இலக்கியவாதியாகப் புகழ்பெற்றுவரும் சந்திரகௌரி சிவபாலன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1980களில் தமிழ் சிறப்புக்கலை பயின்றபோது எனது மாணவியாக விளங்கியவர். இன்று தமது எழுத்தாற்றலை மேன்மேலும் வளர்த்து, தமிழ்கூறுநல்லுலகத்துக்குத் தமது பங்களிப்புகளை வழங்கிவருவதை அறிந்து, நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இப்போது ஜேர்மனியில் வாழ்ந்துகொண்டு, தமது படைப்புலகை விரிவுபடுத்தி வருவது பெருமைக்குரியது.


    அவரது முதல் நூல் என்னையே நானறியேன் என்னும் நாவல். இலங்கையில் இருந்து ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்து வாழ்ந்த ஒரு மத்தியதரக் குடும்பத்தின் வாழ்வியலை அற்புதமாக இந்நாவல் சித்திரிக்கிறது. அவரது இரண்டாவது நூலான முக்கோண முக்குளிப்பு இன்னொரு வகையில் குறிப்பிடத்தக்க நூலாக விளங்குகிறது. இலக்கிய இன்பம், அறிந்ததும் புரிந்ததும், சிந்தனையின் தேனூற்று ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்ட இந்நூலுக்கு முக்கோண முக்குளிப்பு எனப் பெயரிட்டமை பொருத்தமேயாகும். அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புநூலாக இது விளங்குகிறது.  


    இலங்கையில் பிறந்து வளர்ந்து, கல்விகற்றுத் தொழிலாற்றிய சந்திரகௌரியின் முக்கோண முக்குளிப்பு என்ற நூல் இலங்கையிலேயே வெளியிடப்படுவது மகிழ்ச்சிக்குரியதாகும். இந்நூலின் ஆசிரியை பாராட்டுக்கு உரியவர். இந்நூலை வெளியிடும் ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கமும் பாராட்டுக்கு உரியது.

    எழுத்துலகில் வளர்ந்துவரும் சந்திரகௌரி சிவபாலன், எதிர்காலத்திலும் மேலும் பல சிறந்த 
    நூல்களை எழுதி வெளியிடவேண்டும். எனது மாணவி என்ற முறையில் அவரின் வளர்ச்சி கண்டு நான் பெருமிதம் அடைகிறேன். சந்திரகௌரியின் இந்நூல் வெளியீட்டுவிழா சிறப்புற அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...