• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    செவ்வாய், 29 செப்டம்பர், 2020

    பாசத்தைப் பரிசீலனை செய்வீர்





      காலத்தைச் சிறைப்பிடித்து கணனிக்குள் செலுத்தினாய் 
    நேரமறியா துன்காலத்தை வீணாகத் தொலைத்தாய் 
    தீராத விளையாட்டில் நோயாகிப் போனாய் 
    நிம்மதியில்லா வாழ்வை நீயாக ஏற்றாய் 
     விளையாட்டு வினையானால் வில்லங்கம் சேர்ந்திடும் 
    வித்தகனாகும் உன்வாழ்வு வீணாகிப் போயிடும் 
    பித்தாகிப் போனதனால் பிதாவை தெரியவில்லை 
    சொத்தான சொந்தங்கள் அத்தனையும் புரியவில்லை 
     உறவுகளைக் கொல்வதற்கும் உதவிகளை அழிப்பதற்கும்
     நிறைவான வாழ்க்கையை நிலையில்லா ஆக்கவும் 
    உயர்வுகளின் உன்னதத்தை உன்மத்தம் ஆக்கவும் 
     உன்னால் முடிவதற்கு கணனிக்குள் புகுந்தாயா! 
     
    பெற்றோரே! 

     ஆயிரம் விளையாட்டுக்கள் ஆணித்தரமாக ஆக்கியளித்தார் 
    ஆயுளும் அறிவுமோங்க தமிழர் தரணியாண்டார் 
    ஆட்சியுறு வாழ்வில் மக்கள் சீராய்பெருமையுற்றார் 
    நேசமொடு பண்பும் நிலைத்திட உழைத்திட்டோம் 
     வாரிசுகள் நல்வாழ்வுக்காய் நல்வார்த்தை எடுத்துரைப்பீர் 
     பெற்றபிள்ளை வாழ்வதற்குநம் பெருமைகளை எடுத்துரைப்பீர் 
    கணனிக்குள் கண்வைப்பீர் 
    கண்காணிப்பில் வளர்த்திடுவீர் - வாழ்வு 
    வளம்பெறவே பாசத்தைப் பரிசீலனை செய்திடுவீர் 

     

    ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

    இறுதி நிகழ்வில் தன்னுடைய இறப்பை வெளிப்படுத்தினார்

     

    காலம் கவர்ந்து சென்ற பிரபலங்களில் எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்களும் இணைந்து கொண்டார். பாடுகின்ற போது அவர் இதயத்தில் எத்தனை உணர்வுகளைச் சேர்த்திருப்பார். அத்தனை உணர்;வுகளுக்கும் குரலால் வடிவம் எமக்காகக் கொடுத்தார். மனதுக்குள் கொண்டு வந்து அதனை உணர்ந்து இராகங்களை பரீட்சித்துப் பார்த்து அழகான இனிமையான வடிவத்தை அவராலேயே கொடுக்க முடியும். சொற்களை உச்சரிக்கும் அழகும் பாடலின் பாவங்களை காட்டுகின்ற அழகும் கண்முன்னே காலமெல்லாம் எமக்கு தெரிந்து கொண்டுதான் இருக்கும் என்பது உண்மை. பாலெல்லாம் நல் ஆவின் பாலாமோ பாரிலுள்ள குரலெல்லாம் பாலசுப்பிரமணியம் குரலாமோ என்று சொல்லத் தோன்றுகின்றது. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் என்னும் அந்தக் குயில் தன் குரலை அடக்கிக் கொண்டது. இந்தக் குயிலின் குரல் எமக்கு எப்போதும் கேட்கும். எம்மை விட்டுப் பிரிந்தாலும் இசையாய் ஒலிப்பார். என்று அவரே பாடியிருக்கின்றார். 


    அவருடைய புதிய பாடல்களை நாம் கேட்க முடியாது போகும் அவ்வளவுதான். ஆனால் அவர் எம்மோடுதான் வாழ்ந்து கொண்டு இருப்பார். 

      


    Tokyo தமிழ்சங்கம் நடத்திய இணையவழி விழாவிலே  அவர் பாடிய கடைசிப் பாடல் சாதி மலர் பூச்சரமே சங்கத் தமிழ் பாச்சரமே என்னும் பாடல். கிண் என்ற குரலில் எந்தவித சோர்வையும் குரல் காட்டிக் கொடுக்கவில்லை. 4 சுவருக்குள் வாழ நீ என்ன கைதியா? தேசம் வேறல்ல. தாயும் வேறல்ல. ஒன்றுதான். தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் ஒன்றுதான். கடுகு போல் உன் மனம் இருக்க் கூடாது. கடலைப் போல் விரிந்ததாய் இருக்கட்டும்.  இறக்கப் போகின்றேன் என்று தெரியாது அவர் கூறிய வார்த்தைகள் அவரை அறியாமலே உலகத்திற்கு சைகை காட்டியிருக்கின்றது. வருங்காலத்தில் என்ன நடக்கப் போகின்றது என்று யாருக்கும் தெரியாது. இப்போது நான் இங்கு பாடிக் கொண்டிருக்கின்றேன். என் முன்னே பார்வையாளர்கள் இல்லை. எனக்கப்புறம் எப்படி எல்லாம் நிகழ்வுகள் வரும் என்று எனக்குத் தெரியாது. என்று தனது இறுதிநாளை வெளிக்காட்டினார். இரசிகர்கள், தனக்காகப் பாட்டுக்களை எழுதிய பாடலாசிரியர்கள், இசையமைத்தவர்கள், என்று தன்னுடைய நன்றியைத் தெரிவித்து விடைபெற்றார். இதுவே அவர் நேரடியாக எம்மிடமிருந்து விடைபெற்ற வாசகங்களாக இருக்கின்றன. இயற்கையை நேசிக்கச் சொன்னார். ஆனால், சொன்ன அந்த நல்ல உள்ளத்தையே கொரொனா என்னும் நுண் அரக்கன் தொலைத்துவிட்டான். அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டி  

    போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் என்று அவர் எமக்குச் சொன்ன வரிகளை நினைவு படுத்தி விடைபெறுகின்றேன்.


    வெள்ளி, 4 செப்டம்பர், 2020

    மகாபாரதத்தில் ஏகலைவன் கதையும் மறு வாசிப்புக்களும்

     



    நாம் குரு தட்சணையாக நாம் விரும்புவதை ஆசிரியர்களுக்குக் கொடுப்பது வழக்கம். பரதநாட்டிய அரங்கேற்றம், சங்கீத அரங்கேற்றம் நடக்கின்ற போது ஆசிரியர்களுக்கு மாணவர்கள் தாம் கற்ற வித்தையை மதித்து கற்றுத் தந்த குருவுக்கு குரு தட்சணை கொடுத்து மகிழ்ச்சி அடைவார்கள். இவ்வளவு தொகை குருதட்சணையாக எனக்குக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுப்பெறும் ஆசிரியர்களும் இருக்கின்றார்கள். ஆசிரியர் கேட்காமலே மாணவர்கள் விரும்பிக் கொடுக்கும் தொகையைக் குருதட்சணையாகப் பெற்றுக் கொள்ளும் ஆசிரியர்களும் இருக்கின்றார்கள். குருதட்சணை கொடுப்பதற்கும் பெற்றுக்கொள்வதற்கும் மனம் என்பது முதல் இடத்தில் வந்து அமர்ந்து கொள்ளுகின்றது. இந்த மனம் இணக்கம் ஏற்படுவதற்கு கற்பித்தல் முறை முன்னிலையில் நிற்கின்றது. இக்கருத்தை மனதில் நிறுத்தி இலக்கியத்திலே ஒரு குருதட்சணை பற்றி நாம் பார்ப்போம். அத்துடன் இக்குருதட்சணையை விளக்குகின்ற மகாபாரத உபகதைகளுள் ஒன்றான ஏகலைவன் கதை மறுவாசிப்புக்குள்ளான விடயங்களையும் நோக்குவோம். 

    மகத நாட்டைச் சேர்ந்த ஹிரண்யதனு என்னும் மன்னனின் மகனே ஏகலைவன். வேட்டுவ குலத்தைச் சேர்ந்திருந்தாலும்; ஒடுக்கப்பட்ட நிஷாத மக்களுக்கு இளவரசன் ஆவான்;;. இந்த மகதநாடு அஸ்தினாபுரத்திற்கு அருகே அமைந்து இருந்தமையால் அர்ச்சுனன், துரியோதனன் ஆகியோர் துரோணாச்சாரியாரிடம் வில் வில்வித்தை பயில்வதைக் காண்கின்றான். அவர் கற்பிக்கும் முறையில் ஆசை கொள்கின்றான். அவரிடம் எப்படியாவது சீடனாக சேர்ந்து வில்வித்தை பயில வேண்டும் என்று ஆசை கொள்ளுகின்றான். இங்கு கற்பித்தலின் கவர்ச்சியை அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. கற்பித்தல் என்பது ஒரு கலை. பல பட்டங்களைப் பெற்று இருப்பவர்களுக்குக் கூட கற்பிக்கும் முறை என்பது தெரியாமல் இருக்கும். அக்கலை தெரிந்த ஆசிரியர்களே மாணவர்களின் மனதில் இடம்பிடிக்கின்றார்கள். அந்த ஆசிரியர்களை மேதாவிகளாகவே மாணவர்கள் கருதுகின்றார்கள். இதை மனதில் பதித்து ஏகலைவனையும் துரோணரையும் அணுகுவோம். 

    துரோணரிடம் தனக்கு வில்வித்தை கற்றுத் தரும்படி ஏகலைவன் கேட்கின்றான். ஒரு வேட்டுவ குலத்தில் பிறந்தவனுக்கு வில்வித்தை கற்றுத் தர முடியாது என துரோணர் மறுக்கின்றார். இதையிட்டு ஏகலைவன் கோபம் கொள்ளாது, துரோணரைச் சிலையாக முன்னிறுத்தி அவரைத் தனது குருவாகக் கொண்டு வில்வித்தை கற்கின்றான். துரோணர் இளவரசர்களுக்கு வில்வித்தை கற்பிக்கும் போது ஒளித்திருந்து பார்த்துவிட்டு பின் சிலையின் முன்னின்று தானாகவே முயற்சிசெய்து பயிற்சி பெறுகின்றான்.  எதுவானாலும் ஒரு வேடுவ குலத்தில் பிறந்த ஒருவனுக்கு வில்வித்தை ஒன்றும் கடினமான காரியமல்ல. ஒரு கற்கின்ற மாணவனுக்கு ஆசிரியர் ஒன்றும் முக்கியமல்ல. ஒரு வழிகாட்டி மாத்திரமே ஆகும். ஆனால், அவனின் நம்பிக்கை அந்த ஆசிரியர். அந்த நம்பிக்கையே ஏகலைவனுக்கு துரோணாச்சாரியாராக அமைகின்றது. 


    ஒரு அமாவாசையிலே ஒரு நாய் குரைக்கும் சத்தம் தன்னுடைய நித்திரையை குலைக்கும் போது   வில்வித்தையிலே சிறந்த வீரனான ஏகலைவன், அந்த நாயின் வாயைக் கட்டுவதற்காக ஒலி வந்த திசையை நோக்கி 7 அம்புகளைப் பாய்ச்சுகின்றான். ஒலி வந்த இடமான நாயினுடைய வாயினுள் அத்தனை அம்புகளும் சென்று வாயைக் கட்டிப் போடுகின்றது. என்னைத் தவிர வேறு யாரும் இக்கலையை அறிந்திருக்க முடியாது என்னும் எண்ணப் போக்கில் இருந்த அர்ச்சுனன் இந்த நாயைக் காண்கின்றான். இதனை யார் செய்திருக்க முடியும் என்று பொறாமை கொள்ளுகின்றான். துரோணாச்சாரியாரிடம் கேட்கின்றான். காட்டிலே அவ்வித்தையைச் செய்தவனை துரோணரும் அர்ச்சுனனும் தேடிப் போகின்றனர். ஏகலைவனைக் காணுகின்றனர். இதனைக் கற்பித்த குரு யார் என்று ஏகலைவனை வினாவ அவனும் துரோணாச்சாரின் சிலையைக் காட்டி அவரே தன்னுடைய குரு என்கின்றான். துரோணாச்சாரியாரும் குருதட்சணையாக ஏகலைவனுடைய வலது கை கட்டைவிரலைக் கேட்கின்றார். மறுப்புத் தெரிவிக்காத ஏகலைவனும் தன்னுடைய கட்டைவிரலை அவருக்குக் குருதட்சணையாகக் கொடுக்கின்றான். இங்கு குருதட்சணை கொடுப்பது தருமம் என்று ஏகலைவன் கருதுகின்றான். கட்டைவிரலைக் கேட்பது சரியா என்னும் கேள்வி காலம் காலமாகக் கேட்கப்படும் கேள்வி. குருதட்சணை கேட்கும் போது யாரிடம் எது கேட்க வேண்டும் என்னும் அடிப்படை அறிவு ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டியது அவசியம். இதுவே மறுவாசிப்பில் அலசப்பட வேண்டிய அறிவாக இருக்கின்றது. 

    துரோணாச்சாரியார் ஏகலைவனுக்கு வில்வித்தை கற்பிக்க மறுப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆசிரிய மமதையாக இருக்கலாம். இல்லையெனில் அரசகுமாரர்கள் கற்கும் இடத்தில் ஒரு வேடுவக் குலத்து மனிதன் கற்பது தராதரக் குறைவாக மற்றைய அரசகுமாரார்கள் நினைத்து மறுப்புத் தெரிவிப்பார்கள் என்ற காரணமாகவும் இருக்கலாம். ஒரு வேடுவன் இவ்வாறு திறமையுடன் இருந்தால் சட்டதிட்டங்களை மீறும் வழியில் தன்னுடைய திறமையைப் பிரயோகிப்பான் என்ற எண்ணப் போக்கும் காரணமாக இருக்கலாம்.  இதைவிட வேடுவ குலத்தில் வளருகின்ற ஒருவனுக்கு இரத்தத்திலேயே வில்வித்தை ஊறியிருக்கும். இக்கலையை ஏகலைவன் ஏன் துரோணாச்சாரியாரின் அவமானச் சொல்லைத் தாங்கி அவரை குருவாகக் கொள்ள வேண்டும் என்பதும் கேள்விக்குறியே! கற்கும் வல்லமையுள்ளவன் ஒரு ஆசிரியரையே தஞ்சம் அடைந்து கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நாம் கற்கின்ற கல்வி எங்கிருந்து கிடைக்கப்பெற்றது என்பதைப் பொறுத்தே அதற்குப் பெருமை அமைகின்றது. இது எக்காலத்திற்கும் உரிய பொதுவிதியாகப் படுகின்றது. யுஉhநn பல்கலைக்கழகத்தில் டீயரiபெநnநைரச கல்வி கற்பவர்களுக்கு ஒரு மதிப்பு இருப்பதை நாம் அறிவோம். அதுபோலவே துரோணரின் மாணவன் என்பதில் ஏகலைவனுக்குப் பெருமை இருந்தது. 

    ஏகலைவனும் வேடனாகப் பிறந்தது என் குற்றமில்லை என்று எதிர்த்துப் பேசியிருக்கலாம். குருதட்சணையாக என்னுடைய விரலைத் தரமுடியாது என்று சொல்லியிருக்கலாம். 👀👀ஆனால், ஏகலைவன் தருமத்தை மதிக்கும் ஒரு மாணவனாக இருந்தான். அதுபோலவே மாணவர்கள் தருமத்தை மதித்து குருதட்சணை வழங்குகின்றார்கள். ☺☺

    இந்த ஏகலைவன் கிருஸ்ணரின் தந்தை வாசுதேவரின் சகோதரரான தேவேஸ்டிரவின் மகனாவான். ஏகலைவன்; சிறுவயதில் தொலைந்து போனதாகவும்  ஹிரணியதனுசு என்னும் வேடர் தலைவன் ஏகலைவனை எடுத்து வளர்த்ததாகவும் கதை கூறுகின்றது. ஏகலைவன் கதை பல மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பிரளயன் தன்னுடைய உபகதையில் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக மறுவாசிப்புச் செய்துள்ளார். ஏகலைவன் துரோணரிடம் வில்வித்தை கற்பிக்கக் கேட்கவுமில்லை. அவருடைய சிலையை வைத்து மானசீக குருவாக அவரை நினைத்து வில்வித்தை கற்கவும் இல்லை. யாரிடம் இக்கலையைக் கற்றாய் என்று துரோணர் ஏகலைவனிடம் கேட்கும் போது மீன்குஞ்சுக்கு நீச்சல் கற்றுத்தர வேண்டிய அவசியம் இல்லாத போது வேட்டுவ இளைஞனான எங்களுக்கு யாரும் கற்றுத் தரத் தேவையில்லை என்று ஏகலைவன் பதில் கூறுகின்றான். அர்ச்சுனா வெட்டி எறி இவன் கட்டை விரலை என்று துரோணர் கூற அர்ச்சுனன் கட்டை விரலை வெட்டி எறிவதாக  பிரளயன் கதை கூறுகிறது. இளைய பத்மநாபன் அவர்களால் எழுதப்பட்ட ஏகலைவன் நாடகத்திலே ஏகலைவனே தன்னுடைய விரலை வெட்டி துரோணாச்சாரியாரின் பாதங்களில் குருதட்சணையாக வைத்ததாக எழுதப்பட்டுள்ளது. இதேபோல் தமயந்தி என்னும் படைப்பாளி தன்னுடைய தென்மோடிக் கூத்திலே கட்டைவிரல் என்ன என்னுடைய உயிரினை ஈயவும் சித்தமாயுள்ளேன். ஆனால் உங்கள் உள்ளெண்ணம் குரோதமானது சதி நிறைந்தது. வரலாறு உங்கள் துரோகத்தை இழித்துரைக்கும். என்னையும் மூடனென நகைத்துரைக்கும். நான் தரும் குருக்காணிக்கையால் இந்த இரண்டு தவறும் நடக்கவேண்டாம் நீங்கள் சென்று வருக என்று அனுப்பி வைக்கின்றான். 




    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...