• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 11 டிசம்பர், 2021

    அன்றைய தொய்யில் இன்றைய Tatoo ஆரம்பமும் தொடர்ச்சியும்



    தோல் பேர்த்திய உடலிலே வகைவகையான வண்ணங்களில் பிடித்தவர்களின் உருவங்கள், காதலர்களின்  பெயர்கள், குறியீடுகள் என்று உடல் முழுவதும் பச்சை குத்திக் கொண்டு வலம் வருகின்றவர்களை இன்று உலகம் முழுவதும் காணுகின்றோம். காதல் தோல்வி ஏற்பட்டுவிட்டால், பச்சை குத்திய காதலியின் பெயரை அழிக்க முடியாது அதற்கு மேலே கீறிக் கிழித்துக் கொண்டு வாழுகின்றவர்களையும் அறிகின்றோம். 

    இது இன்று நேற்று வந்த வழக்கமில்லை. எனது பாட்டியினுடைய கையிலே ஒரு பச்சை குத்தப்பட்டிருந்தது. இதைத்தான் அழிக்கமுடியாதே! குத்தும் போது இத்தனை வேதனையுடன் இதன் குத்தத்தான் வேண்டுமா என்று கேட்டதற்கு இறந்த பின் கடவுள் எங்களிடம் எனக்கு என்ன கொண்டு வந்தாய் என்று கேட்டால் காட்டுவற்காகத்தான் பச்சை குத்துவார்கள் என்று சொன்னார். அக்காலத்தில் குறவர் என்றொரு இனத்தவர்கள் மார்பு, கை, கால், முன்னங்கை, புயம் போன்ற இடங்களில் பச்சை குத்துவார்கள். அவர்கள் மஞ்சள்தூளையும் அகத்திக்கீரையையும் தீயிலே எரித்துக் கரியாக்கி அக்கரியை நீரிலே குழைத்து மையை தயாரிப்பார்கள். இந்த மையை கூர்மையான ஊசி அல்லது கத்தியால் தொட்டுத் தொட்டுத் தோலில் குத்திக்குத்தி உருவங்களை வரைவார்கள். ஒருமுறை குத்தினால், குத்திய பச்சை வாழும் காலம் வரை எம்முடன் தொடர்ந்து வரும்.  

    இப்பச்சைக் கலாசாரத்தின் முன்னோடிகளாக ஜப்பான் சுதேசிகளான அயனுகளும் நியூசிலாந்தின் பழங்குடியினரான மவோரிகளும் காணப்படுகின்றார்கள். அவர்களிடமிருந்து மங்கோலியரிடமும் அங்கிருந்து ரோமரும் கிரேக்கரும் உலகமெங்கும் பரவவிட்டனர் என்று சொல்லப்படுகின்றது. 

    ஜெர்மனியக் கப்பல் ஒன்று ஒஸ்ரியா வந்து அங்கிருந்து உலகச்சுற்றுலா மேற்கொள்வதற்காக சென்றபோது ஐஸ் இல் உறைந்து கிடந்த ஒரு உடலை 1991 புரட்டாதி மாதம் 19 ஆம் திகதி ötztal Alps  மலைத்தொடரில் கண்டெடுத்தனர். சுருங்கி வற்றிப்போன இந்த உடலை ஒஸ்ரியா பரிசோதனைக் கூடத்திலே வைத்து உலக மருத்துவர்கள் எல்லோரும் ஆராய்ச்சி செய்தபோது இந்த உடம்பானது கி.மு 3350 - 3105 காலப்பகுதி எனக் கண்டறியப்பட்டது. அத்துடன் அந்த உடலிலே 61 இடங்களில் பச்சை குத்தப்பட்டு இருந்தது. இது கண்டெடுக்கப்பட்ட இடம் இத்தாலிக்கு அருகாமையில் இருந்ததனால், இந்த உடல் எங்களுடையது என்று உரிமை கொண்டாடிய இத்தாலியர்கள், அந்த உடலை எடுத்துக் கொண்டு போய்த் தம்முடைய அருங்காட்சியகத்தில் வைத்துள்ளார்கள். 




    இவ்வாறு உலகமெங்கும் பரந்து கிடக்கும் இந்தப் பச்சை குத்துதல் என்னும் கலை பழந்தமிழ் இலக்கியங்களிலே தொய்யில் என்று அழைக்கப்பட்டது. இந்தத் தொய்யில் அழிக்கக் கூடியது. சந்தனம், குங்குமம், செம்பஞ்சுக் குழம்பு, பச்சைக் கருப்பூரம் ஆகியவை தொய்யில் எழுதப் பயன்பட்ட மூலப்பொருட்களாகக் காணப்பட்டன. சித்திரங்கள் போன்ற உடலோவியம் வரையப்படும். காதலனோ கணவனோ கூடுதலுக்கு முன் பெண்ணின் மார்பின்மீதும், தோளின் மீதும் இத்தொய்யில் வரையும் மரபு அக்காலத்தில் இருந்தது. 

     நக்கீரனாரின் அகநானூற்றுப் பாடலில் தலைவிக்குப் பொட்டிட்டு, மலர்களின் மகரந்தத்தை மார்பில் அப்பி, தொய்யில் வரைந்து மலர் பரப்பிய படுக்கையில் பகற்பொழுதிலும் தலைவன் கூடியிருந்ததாகவுள்ளது. இப்பொழுதுபோல் அக்காலத்திலும் பல வண்ணங்களில் வரையப்பட்டிருந்தது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனின் மனைவியின் தோள்களில் இருந்த தொய்யில்; வெள்ளை நிறத்தில்  இருந்ததாக  நெடுநல்வாடையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்களைத் தழுவுவதிலும் காண்பதிலும் நுகர்வதிலும் இன்பம் காணும் ஆண்கள் பலவகை நறுமணம் கலந்த தொய்யிலைப் பெண்கள் மார்பு, மேனிகளில் வரைவது வழக்கமாக இருந்தது. 

    கண்ணகியின் மார்பிலே அவளுடைய பணிப்பெண்கள் ஏன் பெரியமுத்து மாலையைச் சூட்டியுள்ளார்கள். தொய்யில் எழுதினால் போதுமே என்று ஓரிடத்தில் கோவலன் கூறுகின்றான். 

    ''அரும் பொருள் வேட்கையின் உள்ளம் துரப்ப,

    பிரிந்து உறை சூழாதி ஐய! விரும்பி நீ,

    என் தோள் எழுதிய தொய்யிலும், யாழ நின்

    மைந்துடை மார்பில் சுணங்கும், நினைத்துக் காண்:

    சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது    

    ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார்;

    இளமையும் காமமும் ஓராங்குப் பெற்றார்

    வளமை விழைதக்கது உண்டோ ? உள நாள்,

    ஒரோஒ கை தம்முள் தழீஇ, ஒரோஒ கை

    ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரே ஆயினும்,            

    ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை அரிதுஅரோ,

    சென்ற இளமை தரற்கு!

    காதலி காதலனுக்கு அறிவுரை கூறுகின்றாள். தண்ணீர் உண்ணத் தாகம் எடுப்பது போல, பொருள் தேடவேண்டும் என்னும் ஆசை துரத்துகிறது என்பதற்காக காதலனே என்னைப் பிரிந்து வாழ எண்ண வேண்டாம். விருப்பத்தோடு என் தோளில் தொய்யில் எழுதினாயே அதை எண்ணிப்பார். அது உன் மார்பில் கோடுகளாகப் பதிந்துள்ளது அதையும் எண்ணிப்பார். சென்றவர்கள் எல்லாம் கொண்டு வரப் பொருள் கொட்டிக் கிடப்பதில்லை. அதேபோல் பொருளீட்டாதவர்கள் உண்ணாமல் பட்டினி கிடப்பதுமில்லை. இளமையும் காமமும் இணையப் பெற்றவர் விரும்பும் செல்வம் வேறேதாவது இருக்கிறதா? உயிரோடு உள்ள வரையில் ஒரு கையால் துணைவரைத் தழுவிக்கொண்டு, மற்றொரு கையால் கூறுபட்டுக் கிடக்கும் ஆடையை உடுத்திக்கொள்ளும் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை. இளமை போய்விட்டால் திரும்ப வராது. எனவே இளமையைப் பாதுகாத்துக் கொள் என்கிறாள். 


    பாகுபலி படத்திலே கதாநாயகன் கதாநாயகிக்குத் மயில் இறகால் தொய்யில் வரைவதை அழகாகக் காட்டியுள்ளார்கள். நற்றிணை, கலித்தொகை, மதுரைக்காஞ்சி, சீவகசிந்தாமணி, மேருமந்திரபுராணம், கம்பராமாயணம்;, அம்பிகாபதிக் கோவை போன்ற பல இலக்கியங்களில் பேசப்பட்ட தொய்யில் கலையானது 15ஆம் நூற்றாண்டிற்குப்பின் அழிந்து போனது. பின் பச்சை குத்துதலாக உருமாறி பின் இன்று Tattoo கலையாக மாறியுள்ளது.





     


    சனி, 27 நவம்பர், 2021

    செலவு அழுங்குவித்தல்

     


    சங்க இலக்கியங்களிலே மிகவும் அற்புதமான பாடல்களால் எம்முடைய இதயங்களில் நிலைத்து நிற்பவை அகத்திணைப் பாடல்கள். அதிலே செலவு அழுங்குவித்தல் என்னும் பகுதி நெஞ்சை அள்ளக்கூடிய பகுதியாகும். பொருள் வழிப் பிரிதலும் பிரிவை விரும்பாது அதனை தடுக்க எடுத்துக்கூறுகின்ற காரணங்களும் "செலவு அழுங்குவித்தல்" என்ற கருத்தமைந்த பாடல்களில் அழகாக கையாளப்பட்டுள்ளன. அழகும் சுவையும் நிறைந்த இந்த இலக்கியத்தை சுவைக்க தமிழ் வான் அவை நடத்தும் இணைய வழிப் பன்னாட்டு இலக்கியச் சந்திப்பு நிகழ்வில் கலந்து சிறப்பியுங்கள். இலக்கிய இன்பம் பருக ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழ் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் கலந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றேன்.

    திகதி: 28.11.21 ஞாயிற்றுக் கிழமை

    இந்தியாவில் இருந்து முனைவர் க. ரேவதி அவர்களும்
    சிங்கப்பூரில் இருந்து முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன் அவர்களும் சிறப்புப் பேச்சாளர்களாக கலந்து சிறப்பிக்க இருக்கின்றார்கள்.
    மதிப்புரை வழங்க முனைவர் கோ.கீதா
    முனைவர் இரா. குணசீலன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கின்றார்கள்.

    வியாழன், 4 நவம்பர், 2021

    உப்புக் கருவாடு ஊறவச்ச சோறு



    "கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம். இந்த கௌரவப் பிரசாதம். இதுவே எமக்குப் போதும். புளியோதரையும் சோறும் வெகு பொருத்தமா சாம்பாரும் பூரிக்கிழங்கு பாரு” இந்தச் சமையல் இலக்கியச் சமையலா? இல்லை காய்கறிச் சமையலா? இவை இரண்டும் இந்த உலகத்தில் மனங்கவரும் மந்திரங்களே. உயிரும் உடலும் உள்ளமும் வளர்க்கும் மகான்கள் இலக்கியச் சமையலையும் அடுப்படிச் சமையலையும் இரசிப்பார்கள். இச்சமையல் இக்கால கட்டத்திலும், பழந்தமிழ் இலக்கியங்களிலும் எவ்வாறு பேசப்படுகின்றது என்பதே இம்மாத சிந்தனை. 

    புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணுக்கு சொல்லும் அறிவுரைகளில் ஒன்று காலைவேளை எழுந்து வாசலிலே நீர் தெளித்துக் கோலம் போட்டு சமையல் வேலையைத் தொடங்க வேண்டும். இவ்வாறு செய்யாவிட்டால் அப்பன் பாட்டன் பெயர் கெட்டுப் போகும் என்பார்கள். குடும்ப வாழ்க்கைக்கு சமையல் முக்கியமாகப் பேசப்படுகின்றது. ஆனால், இன்று வாசலில் கோலம் போடுகின்றார்களோ என்னவோ யூரியூப் பார்த்து சமையலில் சப்பைக் கட்டு கட்டுகின்ற இளையவர்களை  நாம் காண்கின்றோம்.

    இன்று உலகநாடுகளின் அனைத்துப் பண்டங்களும் இளையவர்கள் அடுக்களையில் காணப்படுகின்றன. அம்மா கைப்பக்குவத்தை விட யூரியூப் சமையல் குறிப்புக்கள் அடுக்களையில் ஆர்ப்பாட்டமாக இருக்கின்றன. அரிசியும் பருப்பும் அளவாய் இருந்தால், அறியாப் பெண்ணும் கறி சமைப்பாள் என்பது மாறி கைத்தொலைபேசியும் இணையத் தொடர்பும் இருந்தால் ஐந்து வயதுப் பெண்ணும் ஆக்கிப் போடுவாள் என்றாகி விட்டது. சமைப்பது மட்டுமல்ல சமைத்த உணவு இன்ஸ்ரகிராம் எல்லாம் வண்ணம் வண்ணமாய் காட்சிப்படுத்தப்படுகின்றது. திரௌபதி கையிலிருந்த அட்சயபாத்திரத்தில் அள்ள அள்ளக் குறையாது உணவு வந்து கொண்டிருந்தது போல் யூரியூபில் பார்க்கப் பார்க்க குறையாத சமையல் குறிப்புக்கள் வந்து கொண்டிருக்கின்றன.

    இச்சமையலிலே நிற்பன, நடப்பன, ஊர்வன, பறப்பன, பறிப்பன, தோண்டி எடுப்பன என விதம் விதமாக பல் நாட்டுக் கலாச்சார உணவுகளும் பரிமாறப்படுகின்றன. இதில் தமிழன் பண்பாட்டின் ஓர் அம்சமான விருந்தோம்பலும் இடம்பெறுகின்றது. அந்தக்கால சமையல் முறைகளை சங்க கால இலக்கியங்களான  பெரும்பாணற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, போன்ற பாடல்களிலும், நாலாயிர திவ்யபிரபந்தம், பெரியபுராணம் எனப் பல நூல்களில் பாடல்கள் மூலமாக விளக்கியிருக்கிறார்கள். சங்கக்காலத்தில் சோற்றை அடிசில், அயனி, அவிழ், கூழ், சொன்றி, நிமிரல், புழுக்கல், புன்கம், பொம்மல், மிதவை, மூரல் என்ற சொற்களினால் பயன்படுத்தியுள்ளார்கள். வரகரிசி, தினையரிசி, புல்லரிசி, மூங்கிலரிசி போன்ற அரிசி வகைகளை உண்டிருக்கின்றார்கள். 

    அகநானூற்று 393 ஆவது பாடலிலே வேங்கட மலையில் வாழ்ந்த இடையர்கள் விருந்து படைக்கும் முறை அழகாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.  நீண்டு வளர்ந்த காதுகளுடைய இடையர் குல பெண்கள், கொல்லையில் உள்ள வரகினை எடுத்து வந்து, உலக்கையில் போட்டு குற்றி, உமியைப் போக்கி சுளகினால் கொழிக்கப்பட்ட வெண்மையான  வரகரிசியை தண்ணீர் ஊற்றி ஊற வைத்தனர். மண்ணால் செய்த பானையில் அருவியில் இருந்து விழும் சுனை நீரை ஊற்றி, அந்த அரிசியைப் பின்பு சோறாக்கித் தாம் உண்டதுடன் வழிப்போக்கர்களுக்குக் கொடுத்துள்ளார்கள். 

    "வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை 

    முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை

    பிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇ

    வெண்புடையக் கொண்ட துய்த்தலைப் பழனின்

    இன்புளிக் கலந்து மாமோ ராகக் 

    கழைவளர் நெல்லின் அரியுலை ஊழ்த்து” 

    என்னும் வரிகளிலே மானுடைய கொழுப்பான பகுதியில் சமைக்கப்பட்ட கறியும், பன்றிக் கறியும், உடும்புக் கறியும் சமைத்து அத்துடன் புளியும் மோரும் சேர்த்துச் சமைத்த மூங்கில் அரிசிச் சோறும் சேர்த்து விருந்து கொடுத்ததாக இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனார் குறிஞ்சிநில விருந்து பற்றிப் பாடியுள்ளார். 

    மன்னன் தன்னிடம் வந்த வறிய பாணனுக்கு செம்மறி ஆட்டின் இறைச்சியை தணலில் வாட்டி அந்த இறைச்சியுடன் முல்லை மொட்டுப் போன்ற அரிசிச் சோற்றையும் அவன் கழுத்துவரை நிறையும் படி உண்ணக் கொடுத்தான் என்று பொருணராற்றுப் படையிலே ஒரு பாடல் இருக்கின்றது. உடும்பு இறைச்சிக் கறியுடன் சிவப்பரிசிச் சோற்றை உண்டதாக பெரும்பாணாற்றுப்படையில் ஓர் பாடல் எடுத்துரைக்கின்றது 

    முல்லைநில மக்கள் வரகரிசிச் சோறும் அவரைப் பருப்புக் கூட்டும் உண்டதாகவும் மருதநில மக்கள் வெள்ளை அரிசிச் சோறும் நண்டுக் கறியும் ஏழைகளுக்கு உண்ணக் கொடுத்ததாக சிறுபாணாற்றுப் படை எடுத்துக் காட்டுகின்றது. இது இவ்வாறாக இருக்க கடலும் கடல் சார்ந்த பகுதியிலும் வாழ்ந்த மக்கள் கள்ளும் குழல் மீனின் சுட்ட கருவாடும் விருந்தினருக்குப் படைத்திருக்கின்றார்கள். 

    நெய்தல் நில மக்களுடைய இவ்வுணவு வைரமுத்துவின் "உப்புக்கருவாடு ஊற வைச்ச சோறு ஊட்டிவிடத் தோணுதடி எனக்கு” என்னும் பாடலும் கங்கை அமரன் வரிகளில் "நித்தம் நித்தம் நெல்லுச் சோறு நெய் மணக்கும் கத்தரிக்கா நேத்து வச்ச மீன் குழம்பு என்னை மயக்குதையா, பச்சரிசிச் சோறு உப்புக் கருவாடு சின்னமனூரு வாய்க்கால் சேறு கண்ட மீனு” என்னும் பாடலும் நெஞ்சுக்குள் நிழலாடுகின்றது.

    இவ்வாறு பீட்ஸாவும் பேர்கரும் விலைப் போகும் காலத்திலே இன்னும் இலக்கியப் பெண்கள் போல் காணொளிச் சமையல் பெண்களும் வாழுகின்றார்கள் 


    கார்த்திகை மாதம் 2021 வெற்றிமணியில் வெளியாகிய கட்டுரை 


    செவ்வாய், 21 செப்டம்பர், 2021

    பனைமடலால் ஒரு மிரட்டல



    அன்பு, காதல், பாசம், பரிவு, இரக்கம், விட்டுக்கொடுப்பு இவையெல்லாம் மனம் சம்பந்தப்பட்ட விடயம். இரு மனங்கள் இணையாத உறவு பொய்யான உறவாகவே அமையும் என்பது உண்மை. அது காதலுக்கு மட்டும் விதிவிலக்கல்ல. அண்மையில் தமிழர்கள் மத்தியில் நடந்த இரு சம்பவங்கள் என் மனதை ஆட்டிப்படைக்கின்றன. இரு மனங்கள் இணையவில்லையென்றால், மறந்து போகின்ற மனதை வளர்த்து கொள்ளாத இளமை பித்துப்பிடித்தது போலாகிவிடுகின்றது. 


    காதலியை அடைய காதலர்கள் பல யுத்திகளை கையில் எடுப்பார்கள். எவ்வாறான ஈர்ப்பு அவளிடம் தன்னை இழுத்து எடுக்கின்றது என்பதை செயலாலும் சொற்களாலும் உணர்த்துவார்கள். இதைவிட கைகளைக் கிழித்து இரத்தத்தைக் காட்டி நீ இல்லையென்றால், என்னால் வாழமுடியாது என்று பயமுறுத்துதல், கிடைக்காத வேதனையை சிகரெட் புகையால் அனுப்பவதாக வெளிக்காட்டுதல் போன்ற மிரட்டல்கள் மூலமும் காதல் தோன்றுகின்றது. இவ்வகைக் காதல் ஒருவகை மன அழுத்தத்தை ஏற்படுத்தி தியாகத்தால் துளிர்த்து காதலாய் மலர்கின்றது. 


    உயிருக்குயிராகக் காதலித்த ஒரு பெண் சில கசப்பான காரணங்களால் வேண்டாம் என்று விட்டுப் பிரிந்தால் பிடிக்கவில்லை, போய்விட்டால் என்று மனதைத்  தேற்ற வேண்டிய பெறுமதி மிக்க இளமையானது, அவளை குத்திக் கொலை செய்து விட்டு சிறையில் வாசம் செய்கிறது. 


    இன்னுமொரு இளமையானது உயிருக்குயிராகக் காதலித்த பெண் கிடைக்கவில்லையே என்று தன்னுடைய நாடி நரம்பை வெட்டி இரத்த வெள்ளத்தில் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ளுகிறது. இவை இரண்டும் இன்று நேற்று தமிழர்கள் மத்தியிலும் திரைப்படங்களிலும் கண்ட காட்சிகள் அல்ல. 


    இதேபோன்று சங்ககால இலக்கியங்களிலே மடல் ஏறுதல், வரை பாய்தல் என்னும் பெருந்திணை இலக்கியங்களிலே இவ்வாறான ஒரு அழுத்தத்தை பெண்வீட்டாருக்கு அல்லது பெண்ணுக்கு ஆண் வர்க்கம் கொடுத்த தன்மையினைக் காணக்கூடியதாக இருக்கின்றது. பெருந்திணை என்பது பொருந்தாக்காமம் எனப்படுகின்றது. அன்பினைந்திணைக்கு(புணர்தல்,பிரிதல்,இருந்தல், இரங்கல், ஊடல்) அப்பால் ஏற்படும் புற ஒழுக்கங்களாகிய கைக்கிளை, பெருந்திணை என்னும் இரண்டு பகுதியிலே பெருந்திணைக்குள் அடங்குகின்ற மடலேறுதல், வரை பாய்தல் என்பன விரும்பாத பெண்ணை வலுக்கட்டாயமாக அடைய எடுக்கும் செயல்களாகும். இது இராக்கதம் என்று அழைக்கப்படும். இதேபோல் உறக்கத்தில் இருக்கும் பெண்ணிடமும் மது மயக்கத்தில் இருக்கும் பெண்ணிடமும் உடலுறவு கொள்வது பேய்நிலை என்றும் அழைக்கப்படுகின்றது. 


    ஆண்மகனானவன் உடல் முழுவதிலும் சாம்பல் பூசி, எருக்கம்பூ, ஆவரம்பூ மாலை அணிந்து பனை மடலால் செய்யப்பட்ட குதிரையிலே ஏறி அம் மடல்மாவை நண்பர்கள் அல்லது சிறுவர்கள் இழுத்து வர மன்றத்திற்கு வருவார்கள். அப்போது அப்பெண்ணிடம் காதல் கொண்ட விடயத்தைக் கூறியபடி தம் இருவருடைய படங்களையும் கீறி கையில் எடுத்துக்கொண்டு வருவான். இக்காதலை ஊரார் அறிந்து கொண்டார்கள் என்று வெட்கப்பட்ட பெற்றோர்கள், அவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பார்கள். இவ்வாறான முயற்சியில் ஈடுபட்டும் பெண்ணைப் பெற முடியாத நிலையில் வரைபாய்ந்து(மலையில் இருந்து பாய்தல்) தம்மை மாய்த்துக் கொள்வார்கள். இது ஒரு தற்கொலை முயற்சியாகவும் பெண்ணுக்கும் அவளின் பெற்றோருக்கும் ஒரு மிரட்டலைத் தருகின்ற நிகழ்வாகவும் நடைபெற்றது. 


    அகநானூறு 322 ஆவது பாடலிலே 

    ஆராக் காமம் அடூஉ நின்று அலைப்ப

    இறு வரை வீழ்நர் 

    என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


    குறுந்தொகை 182 ஆவது பாடலிலே மாதங்கீரனார் இவ்வாறு பாடுகின்றார்


    விழுத்தலைப் பெண்ணை விளையல் மாமடல்

    மணி அணி பெருந் தார் மரபிற் பூட்டி

    வெள் என்பு அணிந்து, பிறர் எள்ளத் தோன்றி

    ஒருநாள் மருங்கில் பெருநாண் நீங்கி

    தெருவின் இயலவும் தருவது கொல்லோ?

    கலிழ் கவின் அசை நடைப் பேதை

    மெலிந்திலள் நாம் விடற்கு அமைந்த தூதே!


    அழகு ஒழுகும் அசைந்த நடையையுடைய தலைவி நெஞ்சம் நெகிழவில்லை. நான் அவளிடம் விடுவதற்கு அமைந்த தூது என்னவென்றால்,  சிறந்த உச்சியையுடைய பனையின் முதிர்ந்த பெரிய மடலால் செய்யப்பட்ட மணிகள் அணிந்த குதிரையின் மேலேறி பெரிய மாலை முறைப்படி அணிந்து வெள்ளை எலும்பையும் அணிந்து ஒருநாளிலே பிறர் இகழும்படியாக  நாணத்தை விட்டு தெருவிலே செல்வேன்;. அப்படிச் சென்றால், அவளை அடைய முடியும் என்பதாக இப்பாடல் அமைந்திருக்கின்றது. 


    இவ்வொழுக்கமானது எக்காலத்திலும் ஒரு பெண்ணை அடக்குமுறைக்குள் கொண்டு வருவதாகவே அமைகின்றது. இறுதியில் ஒத்துக் கொண்டால், ஆவதும் பெண்ணால், ஒத்துக் கொள்வில்லையானால் அழிவதும் பெண்ணால் என்னும் தீர்ப்பை வழங்கிவிடுவது இயல்பாகப்படுகின்றது.  


    சனி, 11 செப்டம்பர், 2021

    மகாகவி பாரதி 100 ஆவது நினைவு நாள் 2021

                                                



    கவி என்னும் வித்துக்குள் 
    உலகை கட்டிப் போட்ட கவிஞனே 💪

    காற்றும் கூடப் பேசும் உன்  மொழியைக் 
    காலம் கூட அழிக்க மாட்டா 😝 

    நீ போட்ட பாதைக்குள் நீள்கிறது 
    கவிஞர் குழாம் 

    பாதை எங்கும் தடயங்கள் 
    பூங்காக்களைப்  பொழிகின்றன 💝💝

    வாசம் நுகருக்கிறேன் 
    எனக்குள்  கரைந்து போகிறேன் 😀😀

    தேர் பிடித்து யாரும் இழுக்கவில்லை 
    மேடையிட்டு யாரும் போற்றவில்லை 
    மலர் எடுத்து யாரும் சூட்டவில்லை 
    பொன்னாடை யாரும் போர்த்தவில்லை 😮😮😮

    புகழோடு இன்றும் வாழ்கிறாயே 
    கவிஞனா நீ காலத்தில் தேவனா நீ 
    கவிதையின் கடவுளா நீ    🙏🙏🙏


    ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

    பாசம்




    தன் முயற்சி பலித்தால், வாழ்க்கை வைரங்கள் மின்னுமாப் போல் உணர்வு தோன்றும். விண்ணைப் பிடிப்பதானால், இன்னும் முயற்சி வேண்டுமென உள்ளமும் உடலும் இணைந்து கொள்ளும். தனியளாய்தான் தன் மகனின் வைத்தியப் படிப்புக்குத் துணையாய் நின்றாள், துணையிழந்தால், துவண்டு விடுவார் என்னும் வாக்குகளை உள்வாங்கி ஏப்பமிட்டாள். அவள்தான் சுதா. முதல் முறை சம்பளத்தைப் பெற்றுக் கொண்ட வேந்து, அம்மாவின் கையில் அழகான புடவையையும் 500 ஒயிரோ பணத்தையும் கொடுத்து

    அம்மா சம்பளம் போட்டிற்றாங்கள். உங்களுக்கு என்னவும் வேணுமென்றால், இதில வாங்குங்க. பேசாமல் இதையும் கொண்டு போய் எனக்கென்று சேர்த்து வையாதீங்க. விளங்கிச்சா….”

    போடா, போ….. இனி ஏன் உனக்குச் சேர்க்கப் போறன். வாற என்ர மருமகளுக்கு வகை வகையா நான் வாங்கிக்கொடுக்கத் தேவல்லையா?

    என்ன மருமகளுக்கா. உங்களுக்கென்ன பயித்தியமா? ஆகத்தான் வாறவள தலையில தூக்கி வச்சீங்க. பிறகு நீங்கதான் அவஸ்தப்பட வேண்டிவரும். இப்ப ஒண்டும் அவசியமில்ல. ஆறதலாப் பார்க்கலாம்”

    பொறு பொறு படிப்புப் படிப்பு என்டு தள்ளிப் போட்டிற்றா. இனி வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்குப் போக வேணாமா? சும்மா எனக்குப் புத்தி சொல்லத் தேவல்ல. கிழட்டு வயசிலயா கல்யாணம் செய்யப் போறாய். எல்லாம் நல்லா நடக்கும். மகளின் அன்பு எப்படி என்று அறியாதவள் நான். வாற என்ர மருமகளை என்ர மகளப் போல பார்க்கப் போறன். நீ உன்ர வேலயில கவனமா இரு||

    மகனை அடக்கிவிட்டுத் தன் முயற்சியைத் தொடர்ந்தாள் சுதா. அயராத முயற்சி பலனலிக்காது விட்டதாக சரித்திரமே இல்லையே தாயாரின் வேண்டுதலின்படி பல்கலைக்கழக வளாகத்திலே விஞ்ஞானப் பட்டப்படிப்பைக் கற்கும் மாணவி நிரூபா முன்னே போய் நின்றான் வேந்து.

    எப்படி இருக்கிறீங்க. என்னத் தெரியும் என்று நினைக்கிறன்”

    ம்…”

    கென்டின் போயிருந்து பேசுவோமா?

    ஓகே..”

    கோப்பியின் சுவையுடன் அவள் பேச்சின் சுவையும் இணைந்து கொள்ள. புரிய வேண்டியப பல செய்திகள் புரிந்து கொள்ள மனதுக்குள் ஒரு இனம் புரியாத இன்ப உணர்வு ஏற்படுவதை உணர்ந்தான் வேந்து. மீண்டும் அவளைச் சந்திக்கவே மனம் துடித்தது. இருவர் பேச்சும் சுமுகமாக நிரூபா தான் தன் எதிர்காலம் என்பது வேந்து மனதில் நிரூபனமாகிவிட்டது. சிலகாலம் பேசிய பின் முடிவைப் பெறலாம் என்று எண்ணி வந்த எண்ணம் பஞ்சு போல் சொல்லிக் கொள்ளாமலே பறந்து போனது. நிரூபாவும் நிதானமாகவே முடிவெடுத்தாள்.

    நான் வெளிப்படையாகவே சொல்றன். பேசிப்பேசி நாட்களைத் தள்ளி, நாளொருநாள் எனக்குப் பிடிக்கவில்லை என்று விட்டுப் போக எனக்கு விருப்பமில்ல. ஒரு பார்வையில் புரிந்து கொள்ளும் இது எனக்கு செட் ஆகுமா என்று. ஆகும் போல் மனம் சொல்லுது. நீங்க…? தன் பேச்சைத் தரித்தாள். கண்களை விழித்தாள். தலையை ஒருபுறம் சரித்தாள். அவள் பார்வை விழிக்குள் பதுங்கிப் போனான் வேந்து. சிக்கிக் கொண்ட பார்வையையும் பாய்ந்து கொள்ளத் துடிக்கும் மனதையும் சிக்கெனப் பிடித்தான். வைத்தியசாலையில் வகைவகையான அழகு பிம்பங்கள் தன் முன் தோன்றினாலும் சலனப்படாத மனம் இன்று மட்டும் ஏன் தடுமாறுகின்றது. இதைத்தான் விதி என்பதா? இல்லை ஈர்ப்பு என்று சொல்வதா எதுவாக இருந்தாலும். தலையை ஆம் என்று பேச்சின்றி அசைத்தான்.

     “என்ன? சொல் வேண்டும். பேசத் தெரியும் தானே”

    எப்போ கல்யாணத்தை வச்சிக்கலாம். மீண்டும் எப்போ சந்திக்கலாம்?

    இருவரின் சிரிப்பும் திருமணத்தில் கொண்டு நிறுத்தியது. அமோக திருமண நிகழ்வில் தன் மகனை நிரூபாக்குக் கைப்பிடித்துக் கொடுத்தாள் சுதா. ஆடம்பரமாகத் தன் மகனை அழகு பார்த்தாள். எண்ணிய எண்ணியபடியே ஆற்றிய சுதாக்கு இப்போதெல்லாம் மருமகளுக்குப் பார்த்துப் பார்த்துப் பணிவிடை செய்வதே பணியாகிப் போனது. அன்புக்குப் பஞ்சமின்றிய சுதாவுடனேயே நிரூபா தங்கிவிட்டாள். நிரூபாவின் பல்கலைக்கழகப் படிப்புக்குப் பங்கம் வந்துவிடக் கூடாது என்பதில் சுதாவும், வேந்துவும் கவனமாக இருந்தனர். மாமியை அரவணைப்பதிலும் மகிழ்ந்து செல்லங் கொஞ்சுவதிலும் பல்கலைக்கழக இறுதி நேரம் செலவாகியது. வேந்துவின் பேச்சுக்கும் வாழ்வுக்கும் ஏற்ற பெண்ணாக நிரூபா திகழ்ந்தமை அவர்கள் வாழ்வில் வசந்தத்தை வழங்கியது.மகள் நாளைக்கு எத்தனை மணிக்கு யுனிவேர்சிட்டி. ஏனென்றால், காலையில் நேரத்துக்கு எழும்ப வேண்டுமே! என்றாள், சுதா

     

    அம்மா உடம்புக்குச் சுகமில்ல என்று நேற்று முழுவதும் சொன்னீங்க. நாளைக்கு சும்மா அயர்ந்து தூங்குங்க. அவ தனக்கும் எனக்கும் சாப்பாடு செய்து எடுத்துக் கொண்டு போவா. ஓய்வில்லாமல் வேலை செய்தால் உடம்பு என்னத்துக்கு ஆகும். நாங்க என்ன சின்னப் பிள்ளைகளா? என்றான் வேந்து

    பறவால்லப்பா…. வீட்ட வந்து கொஞ்சநேரந்தான் புள்ள எங்களோட கதைக்குது. மற்றநேரம் படிப்பு படிப்பு என்று பறக்குது. என்னால ஏண்ட உதவியச் செய்றன் இன்னும் இந்த உடம்பு இருந்து என்னத்தச் சாதிக்கப் போகுது. நீங்க ரெண்டு பேரும் நல்லா இருந்தாத்தான் நானும் நிம்மதியா இருப்பன். நீ சொல்லு பிள்ள. அவன் கிடக்கிறான்''

    நாளைக்கு 8 மணிக்கு அங்க நிக்க வேணும் மாமி”

    6 மணிக்கு எழும்பினாக் காணும்”

    மறுநாள் காலை கண் விழித்தாள். உடல் அலுப்பு வாட்டி எடுத்தது. வயதாகிவிட்டால், எங்கிருந்துதான் இந்த வருத்தங்கள் எல்லாம் வந்து ஒட்டி கொள்கிறதோ! எத்தனை வருடங்கள் தான் இந்த உடல் எங்களுக்காக உழைப்பது. 110 தாண்டி யாராவது வாழ்ந்ததாக நாம் அறியவில்லையே. உடல் முடியவில்ல. தட்டுத்தடுமாறிப் பார்த்தாள். மணி 7.30. உடலை நிதானப்படுத்தினாள். சமையலறையில் பெரிய சத்தம். மகனும் மருமகளும் வாக்குவாதப்படுவதும் பாத்திரங்கள் உருட்டுவதும் காதில் விழுந்தது.

    முதலே சொல்லியிருந்தால் நான் அலார்ம் வைத்து எழும்பியிருப்பேன். எல்லாம் தான்தான் செய்ய வேணும். வயசு போனா போன மாதிரி இருக்க வேண்டியதுதானே. இப்ப எனக்குத்தான் தேவ இல்லாத  ரென்ஸன்.”

    ஒரு பாசம் என்றா என்னவென்று தெரியாத ஜென்மம். அவவே முடியாது என்று படுத்திருக்கிறா. ஏன் நீ நேற்றே சொல்லியிருக்கலாமே. வேணாம் மாமி நாளைக்கு கென்டினில சாப்பிடுறன் என்று. ஒரு நாளுக்கு கென்டினில் சாப்பிட்டால், உடம்பு ஒன்றும் கெட்டுவிடாது.  இன்றைக்கு பிந்திப் போறதால உன்ர படிப்பு ஒன்றும் குறையப் போறதில்ல. எனக்கு முக்கியம் அம்மா. அவ இல்லாட்டி உனக்கு நான் இல்ல. எனக்கு இந்த வாழ்க்க இல்ல. இதக் கொஞ்சம் இப்ப புரிஞ்சுக்க.

    நீ ஒன்றும் இப்படிக் கரிஞ்சு கொட்டி எனக்கு ஒன்றும் சாப்பாடு தேலையில்ல. நான் ஆஸ்பத்திரியில சாப்பிடுவன். வுளஉhß (போய் வருகின்றேன்)” பதிலுக்குக் காத்திராமல் தாயை ஒரு தடவை எட்டிப் பார்த்தான். புறப்பட்டான்

    உலகத்தில இல்லாத பெரிய அம்மா. அவவும் ஏதோ பெரிய அன்பு காட்டிற மாதிரி நடிப்பு” முணுமுணுத்துவிட்டு நிரூபாவும் கிளம்பிவிட்டாள்.

    ஒரு தாயுள்ளம் இடிந்து போனது. உண்மைக்கும் நடிப்புக்கும் வித்தியாசம் தெரியாத பெண்ணையா என் மகள் என்று கருதினேன். நெஞ்சு படபடத்தது. நோய்க்கு முதற் காரணமே மனம் என்னும் மாயப்பொருள்தானே. ஆயினும் என் மகள் பேசினால், நான் தாங்காமலா இருப்பேன். நானும் பிழை விட்டிருக்கிறேன். சின்னஞ்சிறுசுகள் பாவம் நிம்மதியாப் படுத்திருக்கலாம். இப்ப அநாவசிய சண்டை என்னால் வந்துவிட்டது என்ற படி இரவுணவை வகைவகையாய்த் தயார் படுத்தினாள். அசதியோ ஆட்டிப்படைத்தது. எனினும் பிள்ளைகளை நினைக்க, அவை இரண்டாம் பட்சம் என்று கருதினாள். உணவு தயாரானதும் மீண்டும் வந்து படுத்துவிட்டாள். இந்த உடலுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. அதனால் என்னைக் கேட்காமலே மூளை என்னை உறங்க வைத்திருக்கிறது. பிள்ளை யூனிவர்சிட்டி முடிக்கும் வரையாவது நான் தாக்குப்பிடிக்க வேணும். அதுக்குப்பிறகு என்ர கடமை முடிஞ்சுது என்று நான் போய்ச் சேர்ந்திருவன் என்று நினைத்தவளாய் இமை மூடினாள்.

             கண்விழிக்கும் போது இருவரும் ஒன்றாக வீடு வந்திருந்தது தெரிய வந்தது. மீண்டும் நிரூபாவே வாய் திறந்தாள்.

    இப்ப பாருங்க. இவக்கு முடியாதென்று கடையில வாங்கி வந்தா. இஞ்ச ஆக்கிப் படைச்சிருக்கு. இதுக்கு என்ன செய்யப் போறீங்க”

    ஆ.. அப்பிடியா! அப்ப சாப்பிடுவம். வாங்கினத பிரிஞ்சுக்குள் (குசனைபந) போடு. நாளைக்கு சாப்பிடுவம். அம்மா…. எப்பிடி உடம்பு இருக்கு. ஏனம்மா இப்ப சமைச்சனீங்க. சும்மா படுத்திருக்லாமே”

    காலயில என்ன அறியாமப் படுத்திட்டன் மகன். நீங்க கென்டீனில சாப்பிட்டிருப்பீங்க. வாய்க்கு ருசியாச் சாப்பிட்டாத் தானே. படிப்பு ஏறும். வேலையும் நல்லாச் செய்ய முடியும். நான் இருக்கும் வரையும் என்னால ஏன்டவரை செய்யிறன். பிறகு உன்ர மனிசி உன்னப் பார்த்துக் கொள்வாள்” என்றாள்

    என்ன செய்யுது மாமி? எதாவது பார்த்து மாமிக்கு மருந்தக் குடுங்களேன். உங்கள படிப்பிச்சதுக்கு மாமிக்கு ஒரு வருத்தமும் வராம பார்க்க வேண்டி யதுதானே உங்கட பொறுப்பு”

     

    நீ வேல செய்யாம இருக்கிறதுக்கென்டு சொல்லு என்று மனதுக்குள் நினைத்தவனாய். “வாங்க அம்மா. சேர்ந்து சாப்பிடுவம்” என்று சொல்லியபடி வேந்து எழுந்தான். மூவரும் ஒரே மேசையில் உணவருந்தினர். சிறிது நேரம் தொலைக்காட்சி. அன்றைய பொழுது அமைதியாகக் கழிந்தது.

    காலம் கரையவும், தன் வாழ்நாளைத் தன் மகன் மருமகளுக்காய் அர்ப்பணிக்கவும் சுதா வாழ்வு தொடர்ந்தது. சின்னச் சின்னத் தவறுகள் வராமல் தன் பிள்ளைகளை குதூகலமாய் வைத்திருந்தாள். அடிமனதில் பெண்பிள்ளை இல்லையென்ற குறை இருந்ததுவே இவ்வாறு நிரூபாவில் அளவுகடந்த பாசத்தைக் காட்ட காரணமாகியது. சிறிது நேரம் பல்கலைக்கழகம் இருந்து திரும்பிவரப் பிந்திவிட்டால், சுதா மனம் படபடவென்று துடித்துப் பாடாய்ப்படுத்தும். அவள் சிரித்த முகம் பார்த்தே மனவமைதி கொள்வாள். அளவுக்கு மீறி பாசம் வைக்காதீங்க அம்மா என்று வேந்து அடிக்கடி சொல்வான். ஆனால், பாசம் என்பது வரிந்து கட்டிக் கொண்டு வருவதில்லையே. தரமான மனதுக்குத் தானாக வரும். அதை மறைத்து வைக்கவோ, விலத்திக்கொள்ளவோ முடியாது. அடித்துப் போட்டாலும் பாசம் வைத்தரைத் தேடியே ஓடும். இதே நிலைதான் சுதாவுக்கு.

    அன்றொருநாள் வேந்துக்கு இரவுவேலை. நேரமோ விரைவாய் கடக்கிறது. நிரூபா இன்னும் வரவில்லை. மகனுக்கு தொலைபேசியில் அழைத்தாள். அவனும் இன்று யூனிவேர்சிட்டி முடியத் தாமதமாகும் என்று சொன்னான். ஆயினும் சுதாவுக்கு மனம் இருப்புக்கொள்ளவில்லை. கடிகாரமோ நேரத்தை இரவு 9 மணியெனக் காட்டியது. இப்படித் தாமதமாக நிரூபா வருவதில்லையே! ஏங்கிக் கொண்டு சாளரமூடாகத் தன் பார்வையைப் பதித்திருந்தாள்.வீட்டின் முன்னே ஒரு வாகனம் வந்து தரித்தது. கண்ணைச் சுருக்கிப் பார்த்தாள். இருண்ட வீட்டில் சாளரவெளிச்சம் வெளிவர அவசியமில்லையே. வாகனத்தினுள் இருந்து இறங்கினாள் நிரூபா. யாரோ கையைப் பிடித்து இழுப்பதையும் அதை விலத்தி விட்டு வாகனத்தினுள் இருந்து வெளிவருவதையும் பின் கையை இழுப்பதனால் உள்ளே செல்வதையும் கண்டாள். மீண்டும் கண்களை அகட்டிப் பார்த்தாள் சுதா. அழகான ஒரு ஆண்மகன் வாகனத்திற்குள் இருப்பது தெரிந்தது. அவன் கன்னங்களில் நிரூபாவின் உதடுகளின் அழுத்தம். மீண்டும் அவன் இதழோடு நிரூபா இதழ்கள் இணைவது கண்டு சுதா ஆடிப்போனாள். சட்டென்று படுக்கையில் விழுந்தாள். நிசப்தம், என்ன செய்வதென்றே புரியாத நிலை. வழமையாக அவளுக்காக விழித்திருந்து உணவு பரிமாறிவிட்டே தூங்கச் செல்லும் சுதாவின் கைகால்கள் எல்லாம் நடுக்கம் கண்டன. விழிநீர் விழிவிட்டு விடைபெற்றது. கண்களைத் துடைத்துவிட்டு வெளியே வந்தாள்.

    பளிச்சென்ற புன்னகை முகத்துடன்  குளியலறையிலிருந்து வெளியே வந்த நிரூபா,

    மாமி ரெலிபோன் அடித்துச்சொல்ல மறந்திட்டன். நான் வெளியில பிரெண்ட்ஸ் ஓட சாப்பிட்டிற்றன். நீங்க சாப்பிட்டிற்றுப் படுங்க”

    யார் பிரன்ட்ஸ் பிள்ள”

    உங்களுக்குத் தெரியாது மாமி”

    உணவை வெறுத்து உடலைக் கட்டிலில் சரித்தாள். மனமோ சிந்தனையில் ஆழ்ந்தது. இதை எப்படிக் கையாள்வது. நான் கண்டதாகச் சொன்னால், வயசு போன காலத்தில கண் தெரியவில்லை என்பாள். புத்தி சொன்னால், எனக்கு எல்லாம் தெரியும் என்பாள். ஏனென்றால், நிரூபாவைச் சுதா நன்றாகவே படித்து வைத்திருக்கின்றாள். அளவுக்கதிகமாக இடத்தைக் கொடுத்துவிட்டேனோ! என்னிலோ, அல்லது எனது மகனிலோ ஏதோ பிழையிருந்திருக்குமோ! இல்லையென்றால், இவள் வேறு துணை நாடியிருக்க மாட்டாளே. மனம் தடுமாறும் வயதில் தவறுவிடுவது சாத்தியமே. ஆனாலும் தடுமாற என் மகனில் என்ன குறையைக் கண்டிருப்பாள்? இதைவிட எப்படிப் பாசத்தை இவளில் என்னால் காட்டமுடியும். சொந்த இரத்தம் போலல்லவா கவனித்தேன். எனது மகளென்றால், நான் என்ன துரத்தியா விடப்போகிறேன். புத்தி சொல்லிப் பார்ப்போம். புரிந்து நடந்து கொள்வாள். சந்தர்ப்பம் சூழ்நிலையை திருந்தப் பார்க்கலாம். இப்போது இக்கதையை வேந்துவிடம் அறிவிக்கத் தேவையில்லை. நாளை பேசிப் பார்ப்போம் என்று அன்றைய இரவைத் தூக்கமில்லா இரவாய் அனுப்பி வைத்தாள்.

     நாளும் காத்திருக்காமல் இறக்கை கட்டுகிறது. மனக்குளப்பமோ நாளுக்கு நாள் மன உழைச்சலை அளவின்றி அதிகரிக்கச் செய்கிறது. வேந்துவை நிரூபா கட்டி அணைக்கும் போதும், மாமி மாமி என்று தன்னிடம் குழையும் போதும்; சுதா மனதில் தேளொன்று இறுகக் குத்துவது போல் வேதனை வாட்டி எடுத்தது. அன்று தொலைக்காட்சியின் முன்னே மாமியும் மருமகளும் நாடகம் ஒன்றை இரசித்தபடி இருந்தனர். இதுவே சந்தர்ப்பம் என்ற படி

    பிள்ள உன்னிடம் கன காலம் ஒரு சங்கதி கேட்கவென்று இருக்கிறன். நீ எப்படி எடுப்பியோ தெரியாது. ஆனாலும், இன்டைக்குக் கேட்கவே வேணும் என்று முடிவடுத்துவிட்டேன். உன்னோட படிக்கிற பெடியன்கள் யாராவது உன்ன விரும்பிறதென்று கேட்டவனுகளோ?

    கண்களைச் சுருக்கினாள், இருட்டு வெளிச்சமானால், அடையாளங்கள் வெளிப்படை அல்லவா? போதிய அளவு ஒளித்தாலும், மறைவு எப்படியோ காட்சிப்படுத்தப்படும் அல்லவா

    என்ன இது புதுக்கதையா இருக்கு. எல்லாருக்கும்தான் என்னப் பிடிக்கும்”

    எல்லாருக்கும் பிடிக்கிறதுக்கும் ஒருவனுக்குப் பிடிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கிறது நிரூபா. இது ஒன்றும் பெரிய விடயமல்ல. இந்த வயசில அறியாமப் பிழை விடுறது வழமைதான். ஆனால், இதக் கொஞ்சம் நீ யோசிச்சுப் பார்த்தா சரியாயிடும்”

    என்ன சரியாயிடும்? நீங்க என்ன சொல்றீங்க? முழுப்பூசணிக்காயை முழுவதுமாக மறைத்தாள்.

    பிள்ள உன்ர நன்மைக்குத்தான் சொல்றன். வேந்து அறியிறதுக்கு முதல் அந்தப் பிள்ளயிட்;டச் சொல்லி ஒதுங்கச்த சொல்லிரு மகள். அதுதான் எல்லாத்துக்கும் எல்லாருக்கும் நல்லது”

    எந்த வார்த்தைகளும் காதில் செலுத்தாது. இருந்த இடத்தைவிட்டு விட்டென்று எழுந்தாள். தன் அறையினுள் சென்று அமர்ந்து கொண்டாள். எப்படி இந்த மனிசிக்கு இது தெரிந்தது. இதுக்கு ஒரு முடிவு கட்ட வேணும் என்று நினைத்தாள்

    நிரூபா நடவடிக்கைகள் சுதாவின் அச்சத்துக்கு நெய்யூற்றியது. எத்தனை காலங்கள் வேந்துவிடம் மறைப்பேன். நடிப்புலக மேதையாய் நிரூபா நடமாடும் காட்சி மனதைச் செல்லரிக்க வைத்தது. மீண்டும் மீண்டும் பேசும் பேச்சுக்கள் விழலுக்கிறைத்த நீரானது. எப்படியும் நிரூபாவை வழிக்குக் கொண்டுவந்து விடலாம் என்று போட்ட கணக்கு பொய்க்கணக்கானது.

    பார்த்துப் பார்த்துச் செய்த பணிவிடைகள் பலனளிக்காமல் போனது. சேர்த்து வைத்த பாசமெல்லாம் வேசமாகிப் போனது. தாய்க்குத் தாயென போட்ட கணக்கு தப்பானது. நேசம் வைத்த மனசு பேதலித்துப் போனது. இளமைக் கனவுகளும் எடுத்தெறியும் உறவுகளும் இலகுவானதனால், அன்புக்கும் காமத்துக்கும் வேறுபாடு புரியாது போனது. நிரூபா என்னும் கல்லுக்குப் பாசமென்னும் பாலூற்றிய சுதா பரிதவித்துப் போனாள். அழகுப் பெண்ணானவள் மெலிந்து துரும்பானாள். உடனிருந்தே கொல்லும் மனநோயானது பாசத்தை யாரென்று ஆராயாது பற்று வைக்கும் உனக்கு பாசமே கல்லறையாகும் என்று சுதா மனதுக்கு சபதம் போட்டது

    வேந்துக்கு உண்மை விளங்கியது. இறங்க வேண்டிய அளவுக்கு இறங்கினான். மாமி, மாமா மௌனமானார்கள். பெற்றெடுக்கவும் பார்த்துப் பார்த்து வளர்த்தெடுக்கவும் கற்பிக்கவுமே உரிமை கொண்ட புலம்பெயர் பெற்றோர்களிடையேயுள்ள ஒரு பெற்றோரே இந்த நிரூபாவின் பெற்றோரும். அளவுக்கதிகமான சுதந்திர உரிமை சூழலையும் சுற்றத்தையும் எண்ணிப் பெரிதாய்க் கவலைப்படுவதில்லை.

    அன்றொருநாள் தன் பெட்டியை எடுத்தாள் இழுத்தாள். அதுகூட அவள் மனம் போன போக்குக்கு இழுபட்டது. வீட்டு வாசலிலே நின்ற சுதா அவளைத் தடுத்தாள்.

     “நில்லு மகள் நில்லு மகள்…...” அவளின் காலில் விழுந்தாள். “

    எங்களை விட்டிற்றிற்றுப் போகாத பிள்ள.  கொஞ்சம் பொறுமையாக இரு. எல்லாம் சரியாயிடும். வேந்து தனிச்சுப் போவான். அந்தப் பெடியனிட்ட நான் கதைக்கிறன்”

    நீங்கள் ஒன்டும் கதைக்க வேண்டாம். எனக்கு இங்க இருக்கப் பிடிக்கல்ல. விடுங்க….”

    காலால் எற்றிவிட்டாள். அவளைக் கடந்து போனாள். உடல் நிலத்தில் சரிந்தது. பாசம் வைத்த மனசு மயக்கமானது. வேலை முடிந்து வீடு வந்த வேந்து வாசல்படியில் மயங்கிக் கிடக்கும் தாயைக் கண்டான்.

    அம்மா! எழும்புங்க எழும்புங்க….”

    அவளால் எழும்ப முடியுமானால், இப்போது மகனுக்கு ஓடிப்போய் குடிக்கவோ உண்ணவோ ஏதாவது கொடுத்திருப்பாளே.

    ஆஸ்பத்திரிக் கட்டிலில் கிடந்த தாயைக் காண அறையினுள் நுழைந்தான் வேந்து. ஆனால், தாயோ அவனைப் பெரிதாக அலட்சியம் செய்யவில்லை.

    போட்டது போட்டபடி கிடக்கு. இங்கே ஏன் தான் என்னக் கொண்டுவந்து வச்சிருக்கிறியோ தெரியாது. களைச்சுவரும் புள்ள. டெவில் செய்து தரக் கேட்டவள். வேந்து…. என்ன டா இது. ஏன் என்ன இஞ்ச கொண்டு வந்தனீ?

     

     -  05.09.2021 தினகரன் பத்திரிகையில் வெளியானது - 

     

     

     

     

     

     

     


     

    செவ்வாய், 27 ஜூலை, 2021

    சுயம்

                                                 


    ஓடி வந்து தாயைக் கட்டிப் பிடித்து அழுகின்றாள் சத்யா. 😭😭😭விஜய் ரிவி சீரியலில் மூழ்கியிருந்த கலாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. “என்ன மகள்….. என்ன மகள்? என்ன நடந்தது. இஞ்ச வந்து பாருங்க. என்று கணவன் சிவத்தை அழைத்தபடி பதட்டத்துடன் மகளைப் பார்த்தாள், கலா. 😏

    புகையிரத நிலையத்தில் இருந்து ஓடியே வந்திருக்கின்றாள். அவள் வசிக்கும் பகுதியில் நாயோடு🐕 சிலர் நடப்பதைக் காணலாம். மற்றப்படி யாரும் வெளியே அநாவசியமாக திரிய மாட்டார்கள். பக்கத்து வீட்டுக்காரன் யார் என்று தெரியாதுதான் அவர்கள் வீதி மக்கள் வாழுகின்றார்கள். 

    வந்த சத்யாவின் கைகளில் இருந்து இரத்தம் 🩸வடிந்த வண்ணம் இருந்தது. என்ன இரத்தம் என்று பெரிதாகக் கத்தியபடி கைகளில் இருந்த இரத்தத்தைப் பார்க்கின்றாள். அந்த இரத்தம் சத்யாவின் கைகள் காயப்பட்டது போல் இருக்கவில்லை. 


    சத்தமாகக் கத்திய மகளைக் கலா ஒண்ணுமில்ல. ஒண்ணுமில்ல என்று அணைத்து கன்னங்களைத் துடைத்தபடி அமைதியடையச் செய்தாள். 
    ஓடி வந்த சிவமும் என்ன நடந்ததோ என்று பதட்டத்துடன் நின்றான். கண்களால் அவரை சத்தமில்லாமல் நிற்கச் செய்துவிட்டு மடியில் மகளைப் போட்டுத் தடவினாள் கலா. சத்யா ஒரு பெண்👩என்று செல்லமாக வளர்ந்தவள். 

    இரட்டைப் பின்னல் போட்டு வட்டமான கறுப்பு ஸ்ரிக்கர் பொட்டு வைத்த வட்ட பொலிவான முகமே அவளின் அடையாளம். கறுப்பும் இல்லை சிவப்பும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட பூசி மெழுகிவிட்டது போன்ற ஒரு பளபளப்பான உடல் நிறம். குறும்பான பார்வை. எதற்கும் கோபம் வராத சிரித்த முகம். பற்களால் உதட்டைக் கடித்து அவள் பார்க்கும் பார்வையிலே எத்தனை பெரிய பணக்காரனாக இருந்தாலும் காலடியிலே விழுந்து போவார்கள். 

    ஜெர்மனியில் வாழ்ந்தாலும் அடக்கமாகப் பிள்ளையை வளர்த்திருக்கின்றார்கள் என்ற பட்டத்தைத் தன் பெற்றோருக்கு வாங்கிக்  கொடுத்திருக்கின்றாள்.  பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பட்டத்திற்காகப் படித்துக் கொண்டு இருக்கின்றாள். பாடசாலைக் காலங்களில் கூட அந்தப் பின்னலும் நீண்ட காற்சட்டையும் கூடவே வரும். அலங்காரமில்லாத அழகான பெண்ணாக இருந்த அவளை அணைப்பதற்கு ஆண்வர்க்கம் போட்டி போடும். ஆனால், இந்த தனித்தன்மை மிக்க சத்யா வேறு ஒரு தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாள். எந்த இராஜகுமாரனை அவள் தேடுகின்றாள் என்பது யாருக்குத் தெரியும். 👫தாய் தந்தை சொற்களுக்கு மறு வார்த்தை கூறமாட்டாள். இந்த ஜெர்மனியில் இவ்வாறான  கலாசார பெட்டகத்தை யார் காணப் போகின்றார்கள் என்ற பெருமை பெற்றோருக்கு இருந்தது.  


    இந்த ஜெர்மனி மண்ணில் இப்படி ஒரு பெண்ணா என்று பார்க்கும் சில தமிழர்கள் வெட்கப்படுவதும் தாய் கலாவிடம் “என்ன கலா உன்ர பிள்ளைக்கு கொஞ்சம் நாகரிகம் சொல்லிக் கொடுக்கக் கூடாதா? நீயே பெரிய சினிமா அக்ரஸ் மாதிரி வேலைக்கு வாறாய். உன்ர மகள் என்ன நாட்டுப் புறமாய் இருக்கிறாள்” என்று நக்கல் அடிப்பவர்களிடம் மகளுக்குச் சாதகமாக கலா பேசினாலும் அவள் மனதுக்குள் கவலை எப்போதும் அப்பிக் கொண்டிருக்கும். சத்யாவிடம் வந்து “இஞ்ச பார் சத்யா. உன்னால எனக்கு எவ்வளவு வெட்கக் கேடு. இந்த ஜெர்மனியில உன்னப் போல யாரையாவது கண்டிருக்கிறீயா? பார்க்கிற சனமெல்லாம் கேலியாகக் கதைக்குதுகள்”😆 என்று கலா அடிக்கடி கேட்பதும். அதற்கு அவளென்ன உரிஞ்சு போட்டா ஆடுறாள். இந்த சனம் கதைக்கிறதக் கதைக்கட்டும். உனக்கு விசரென்றா அங்கால போ” என்று மகளுக்கு வக்காளத்து வாங்குவான் அப்பா சிவம். சத்யாவும் அம்மா இது என்ர ஸ்ரைல். விடுங்களேன். என்று சிலுப்பி விட்டுப் போய்விடுவாள். 

    அழுகை நின்றவுடன் ஆறதலாக கலா கேட்டாள் என்ன நடந்தது சத்யா? 

    ரெயினுக்குள் இருந்து நான் இறங்கும் போது ஒரு பெடியன் என்னை இறுக்கிக் கட்டிப் பிடிச்சான். நானும் விடச் சொல்லி மல்லுக் கட்டினன். என்ர தலையெல்லாம் இழுத்து சட்டையெல்லாம் இழுத்தான். பிடிச்சு தள்ளிப் போட்டு ஓடி வந்திட்டன் என்றாள். அப்ப கையில எப்படி இரத்தம் வந்தது. எனக்குத் தெரியா அம்மா என்றாள். “சரி சரி வேற யாரும் பார்க்க இல்லலையா. இல்லம்மா யாரும் இந்த ஸ்ரேசனில இறங்கல்ல”  என்றாள். “சரி மல்லுக்கட்டும் போது ஏதாவது கீறுப்பட்டிருக்கும். இனிமேல் தனிய வராத. அப்பா இல்லாட்டி நான் ஸ்ரேசனுக்கு ரெயின் வரும்போது வந்து நின்று கூட்டி வருவோம்” என்று சொல்லிவிட்டு எழுந்தாள். அன்றைய நாள் சத்யாவின் விசும்பலுடனும் கலாவின் என்ன நடக்கப் போகுதோ என்ற ஆராய்ச்சியுடனும், சிவத்தின் மகள் பற்றிய சிந்தனையுடனும் கழிந்தது. 

    ஒன்றும் பெதிதாக நடக்காதபடியால் அப்படியே நாட்கள் நகர்ந்தன. அன்று பல்கலைக்கழகம் போவதற்காக ஆயத்தமான சத்யாவின் கைப்பைக்குள் சாப்பாட்டுப் பெட்டியை வைப்பதற்காகக் கலா கைப்பையைத்  திறந்தாள். அதற்குள் ஒரு பொம்மை இருப்பதைக் கண்டாள். இது யாருடைய பொம்மையை வைத்திருக்கின்றாள் என்று சிந்தித்தபடி மகளிடம் 
    சத்யா இந்த பொம்மை யாருடையது? என்று கேட்ட போது “பொம்மையா? தெரியாதேம்மா. சிலவேளை இது மிசேலாட அக்காட மகளுடையதாக இருக்க வேண்டும் அம்மா. விளையாடுற நேரம் மறைத்து வைத்திருக்கிறேன் போல. அப்பிடியே கொண்டு வந்திட்டன் என்று நினைக்கின்றேன் என்றாள். 

    “நீ மறைச்சு வச்சது உனக்கே தெரியாது. நல்ல பிள்ள. இப்பிடி மறதி இருந்தால், நல்……லாப் படிப்பாய். சரி சரி அந்தப்பிள்ளையிட்டப் போய்க் கொடுத்திட்டு வா” என்றாள் கலா. 

    பல்கலைக் கழகத்தில் இருந்து மிசேலா வீட்டிற்குப் போய் வரும் எண்ணத்துடன் வீட்டை விட்டு போனாள். இன்று சிவம் வேலைக்கு விடுமுறை எடுத்திருந்த காரணத்தால் சத்யா இன்று பல்கழகத்திற்கு காரில் போனாள். மிசேலா வீட்டிற்கும் போய் வர வேண்டும் என்ற காரணத்தினால் நேரமாகும் என்று சத்யா பெற்றோரிடம் சொல்லிவிட்டுப் போனாள். சத்யாதான் வர தாமதமாகுமே எங்கேயாவது போவமா என்று கேட்டான் சிவம். ஓம் எங்கேயாவது நடந்து போட்டு வருவம் என்று கலாவும் சொல்ல. 

    இருவரும் அருகே இருந்த பென்ராத் அரண்மனைக்குப் போவோம் என்று முடிவெடுத்தார்கள். அதற்கு அருகாமையில் நடப்பதற்கு பச்சைப் பசேலென்ற மரங்களும், அடர்ந்த காடுகளும், புல்வெளியும், சுவாசிப்பதற்குச் சுத்தக் காற்றும் சுகமாக வீசும் ஒரு நடப்பதற்காக பகுதி(பார்க்) இருக்கின்றது. 

    வெயிலைக் கண்டால் பழமரம் தேடும் பறவைகள் போல சனக்கூட்டம் நிரம்பி வடியும். நண்பர்கள் கூட்டம், பிள்ளைகளும் பெற்றோரும் என்று அமளி துமளியாக இருக்கும். 

    இருவரும் தாமதமாக நடப்பதற்கேற்ற பாதணிகளை அணிந்து கொண்டு தயாராகிவிட்டார்கள். நேரம் 5 மணி ஒரு 2 மணித்தியாலங்களை அங்கு கழிக்கலாம். கோடைகாலத்தில் இருட்டுவதற்கு 10 மணியாகும். அதனால், இந்த நேரமே இதமான காலநிலையாக இருக்கும் என்று இருவரும் புறப்பட்டார்கள். 

    இருப்பது ஒரு பிள்ளை என்ற காரணத்தினால், அவர்கள் இருவருடைய எண்ணம் கவலை மகிழ்ச்சி எல்லாம் சத்யாவைச் சுற்றியே வரும். “26 வயதுக்கு வந்து விட்டாள். இனி ஒரு கல்யாணம் பேசி செய்ய வேண்டும். அவளாக ஒரு பெடியனைப் பார்த்தாலும் பரவாயில்லை. சனங்களும் எப்ப கல்யாணம் எப்ப கல்யாணம் என்று கேட்குதுகள் என்ன செய்வதன்று தெரியவில்லை. எங்களை நம்பி இருப்பவளுக்கு நாமாகத்தானே ஒரு மாப்பிள்ளை பார்க்க வேண்டும்” என்று கலாவே பேச்சைத் தொடங்கினாள். 

    “இந்தத் தமிழாக்கள் எங்க போனாலும் கல்யாணத்தை ஒரு பெரிய பிரச்சினையாகத் தான் எடுக்கிறார்கள். இங்க வந்தும் இந்தக் குணம் விட்டுப் போகுதில்ல. பிள்ளைகளுக்குப் பிடிச்சால் கட்டுங்கள் தானே. எதுக்குப் போட்டுக் கரைச்சல் கொடுப்பான். அதது நடக்க வேண்டிய நேரத்தில நடக்கும்” என்று அலுத்துக் கொண்டான் சிவம்.

    பலதும் பத்தும் கணவனும் மனைவியும் பேசுவதற்கு ஏற்ற நேரம் இந்த நடைப்பயிற்சியே. இயற்கை அழகு இரசிக்கப்படும், மக்களின் விமர்சனங்கள் உரைக்கப்படும், மெல்ல மெல்ல கையில் கொண்டு செல்லும் ஐஸ் உம் உதட்டை முத்தமிட்டு வாய்க்குள் கரைந்து போகும். 

    திடீரென்று கலாவின் பார்வை இரண்டு பெண் பிள்ளைகளில் மொய்த்தது. சிவத்தின் கையை இறுகப் பிடித்தாள் கலா. “இஞ்சப்பா அங்க இருக்கிற அந்த இரண்டு பிள்ளைகளையும் பாருங்கள். நம்மட சத்யா போல இருக்குதெல்லா”

    கண்களைச் சுருக்கிச் சந்தேகத்துடன் பார்த்தான் சிவம். ஓம் ஓம் சத்யாதான். என்ன அது அந்தப் பெட்டையைக் கட்டிப் பிடிச்சுக் கொண்டு இருக்கிறாள். மனம் படபடவென்று இருவருக்கும் தாண்டவமாடியது. விழித்த விழி நிறுத்தியது. 

    அருகே போவோமா? இல்லையா? சிந்தித்த இரு மனங்களும் போவோம் என்று முடிவெடுத்தன. அருகே இருவரும் வந்தார்கள். சத்யா பெற்றோரைக் கவனிக்கவில்லை. அவர்கள் கண்களை அவர்களால் நம்பவே முடியவில்லை. 

    அப்படி ஒரு கம்பீரத் தோற்றம். காலுக்கு மேல் கால்களைப் போட்டு இலேசாக மேல்காலை ஆடடிக் கொண்டிருந்தாள். கையிலே சிகரெட் புகையை இழுத்து உறிஞ்சியபடி புகையை தள்ளிக் கொண்டிருந்தாள். நேர் கொண்ட பார்வை. இடையிடையே தன் அருகே இருந்த பெண்ணுக்கு சில்மிசங்களைச் செய்தபடி சிரிக்க வைத்துக் கொண்டிருந்தாள். அவளும் சத்யா மடியில் விழுவதும் சத்யாவைக் கட்டிப் பிடிப்பதும் கொஞ்சலாகப் பேசுவதுமாக இருவரும் சுகமான மகிழ்வான ஒரு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்.  

    ஆடிப்போனார்கள் கலாவும் சிவமும். தம்முடைய கண்களை அவர்களால் நம்பவே முடியவில்லை. மிக வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள். அவசர அவசரமாக வீட்டுக்கு வந்தார்கள் 

    ஆச்சார அனுஸ்டானங்களைக் கடைப்பிடித்து, அடக்கவொடுக்கமாக, எங்களுக்கு அடிபணிந்து செல்லமாக வாழும் சத்யாவையா நாம் கண்டது?
    “ஏனப்பா… ஒருமுறை போய் கதைச்சுப் பார்த்திருக்கலாம். ஒருவரைப் போல 7 பேர் இருப்பார்களாமே. அதனால், சிலவேளை அது வேற பிள்ளையாக இருக்கும்” என்று தன்னுடைய மனதைச் சாந்திப்படுத்த கலா நினைத்தாள்.

    “சீச்சி அது நம்மட சத்தியாதான். இத எப்படி அவளிட்டக் கேட்பது? இது இருவருடைய மனப் போராட்டம். மௌனமாக நேரம் நகர்கிறது. வீட்டுக்குள் வருகிறாள் சத்யா. வரும்போதே அம்மா பசிக்குது. என்ன சாப்பாடு? என்று கேட்டபடி உள்ளே நுழைகின்றாள். குளியலறைக்குள் சென்று தன்னை சுத்தீகரித்தவளாய் சமையலறைக்குள் நுழைகின்றாள். 

    புட்டை தட்டிலே போட்டபடி “மிசேலா வீட்டிற்குப் போனாயா? என்று கலா கேட்டாள். 

    இல்லம்மா அவளை பென்ராத் பார்க்கில் சந்திச்சேன். பொம்மையைக் கொடுக்க நினைச்சன். அதை மறந்து போனன். உனக்கு எங்க அந்த எண்ணம்  இருக்கப் போகிறது என்று நினைத்த கலா. 

    ஆட்டிறைச்சிக்கறியை தட்டிலே போட்டபடி “நாங்கள் வந்தாமே. எங்களைக் கண்டியா? என்றாள். இல்லையே எங்கே பென்ராத்துக்கா? நான் காணல்ல. என்று சாதாரணமாகப் பதிலிறுத்தவளாய் அமைதியாகச் சாப்பிட்டு விட்டு அம்மா நீங்கள் பாத்திரங்களை வையுங்கள் நான் கழுவி வைக்கிறன். நீங்கள் நடக்கப் போனதால களைப்பாக இருக்கும் ரிவி பாருங்கள். நான் கிச்சனை துப்பரவாக்கிவிட்டு வருகிறேன் என்றாள்.

    குழம்பிய மனதுக்குள் எப்படித்தான் சமாதான நீர் பாய்ச்ச முடியும். நம்பிக்கை சிதறடிக்கப்பட்ட  வேதனையை என்ன சொல்லித் தீர்க்க முடியும். வெடிக்கப் போகும் கவலையை அடக்கி வைத்த கலா சமயலறையை விட்டு நகர்ந்தாள். 

    சிவத்தால் எதையும் கட்டுப்படுத்த முடியவில்லை. சத்யா உன்னட்ட ஒன்று சொல்ல வேணும். அம்மா சொன்னவவா?

    “என்னப்பா”
    உனக்கு ஒரு பெடியனை பார்த்திருக்கிறம். எங்கட குடும்பத்திற்கு ஏற்ற பிள்ளை. நீ சொல்லும் தராதரம் எல்லாம் இருக்கிறது. அவர்களுக்கு என்ன சொல்ல. 

    “பிரச்சினை இல்லப்பா. அடுத்த இரண்டு மாதத்தில் படிப்பு முடிகிறது தானே. உங்களுக்குப் பிடித்தால் எனக்கு சந்தோஷம். என்ன இந்த நாட்டு உருப்படாத கலாசாரத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பவர் என்றாலேயே கொஞ்சம் கஸ்டம்” என்றாள் சத்யா. 

    ஆச்சரியத்தின் உச்சிக்குப் போன சிவம், எதுவுமே பேசாமல் தலையாட்டிவிட்டு கலாவை ஓரக் கண்ணால் பார்த்தான். 

    கலாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஓங்கி அறைய வேண்டும் போல் இருந்தது. என்ன மாதிரிப் பேசுறாள். உள்ளம் வேதனையால் நிறைந்தது. இப்படி ஏமாற்றி எந்த இடத்தில் எங்களை மரியாதை கெடுக்கப் போகின்றாளோ! மகளிடம் கொண்டிருந்த நம்பிக்கை ஒரு நொடியில் சுக்குநூறாகிப் போனது. அவளைப் பார்க்கவே வெறுப்பாக இருந்தது. பொத்திப் பொத்தி வளர்த்து பொல்லாத குணங்களைப் பதிய வைத்து விட்டோமோ! சிதைந்து போயிருக்கும் தனது மனது என்ன தீர்வை எடுக்கலாம் என்று தெரியாது குழம்பியது. 

    சமையலறையைத் துப்பரவு செய்து விட்டு அம்மாவின் அணைப்பைத் தேடி நெருங்கினாள் சத்யா. கலாவின் கையைப் பிசைந்தபடி அவளை ஒட்டிக் கொண்டு கலாவின் கையை எடுத்து தன்னுடைய தோளின் மேலாக எடுத்துத் தன்னைக் கட்டிப் பிடிக்க வைத்தாள். சத்யா கை படும்போது கலாவுக்கு அருவருப்பாகவும் வெறுப்பாகவும் இருந்தது. அம்மா யூரியூப்பில் வடிவேல் பகிடி பார்ப்போமா என்றாள்.அம்மாவும் மகளும் வடிவேல் பகிடி பார்த்து சிரித்து மகிழ்வது வழக்கம். இன்றைய களைப்பை சிரிப்பால் துடைத்தெறியலாம் எ;னபது சத்தியாவின் நியாயம்.

    “எனக்கு எதுவுமே வேணாம். நான் படுக்கப் போறன்” என்றபடி அவள் கையை விலக்கிவிட்டு படுக்கைக்குப் போய்விட்டாள்.

    இந்த அம்மாக்கு என்ன நடந்தது! எப்பவும் இப்படி இருக்க மாட்டாவே! சத்யாக்கு ஆச்சரியம். தானே தனியாகத் தொலைக்காட்சியில் உறைந்தாள்.
    அடுத்தநாள் சிவம் வேலையில் இருந்து வந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தான். அழைப்பு மணி ஒலித்தது. கதவைத் திறந்மத போது ஜெர்மனிய பொலிஸ் வாசற்கதவடியில் வந்து நின்றது. உள்ளே வரலாமா? உங்களுடைய மகளுடைய ஒரு விடயம் பற்றிப் பேச வேண்டும் என்றார்கள். கலக்கத்துடன் உள்ளே வர சிவம் அனுமதி அளித்தான். கலாவும் அந்த இடத்திற்கு ஓடி வந்தாள்.  

    ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஜெர்மனிய பொலிஸ் ஒரு மாபெரும் கட்டுடலுடனும் உயரமான தோற்றத்துடனும் காணப்படுவார்கள். ஆசிய நாட்டு ஆடவர்கள் அவர்களின் நெஞ்சுப் பகுதியைத் தாண்ட மாட்டார்கள். பின்பக்கப் பாக்கெட்டுக்குள்  துப்பாக்கி சொருகப்பட்டிருக்கும். நிமிர்ந்த கட்டுடல். அவர்களைப் பார்க்க பயத்தைவிட பற்றே அதிமாக இருக்கும். பண்பாகப் பழகும் விதம் எல்லோருக்கும் பிடிக்கும் 

    துப்பாக்கி தூக்கிவரும் போராளிகளைக் கண்டு பாடசாலை மாணவர்கள் எல்லாம் படிப்பும் வேண்டாம். ஒன்றும் வேண்டாம் என்று அவர்கள் பின் பயிற்சி எடுப்பதற்காக ஓடினார்களே. அந்த இலங்கைப் போராளிகளைப் பார்த்தே இத்தனை ஆசைப்பட்டார்கள் என்றால், இந்த ஜெர்மனிப் பொலிஸ்காரரின் தோற்றத்தைக் கண்டால் எப்படி இருக்கும். உத்தரவில்லாமல் வீட்டுக் கதவை உடைத்தல், உள்ளே வரல் அவர்களுக்கு அனுமதி இல்லை. 

    உங்களுடைய மகளுடன் பேச வேண்டும் என்றாள். அவள் பல்கலைக்கழகம் போய்விட்டாள் என்று சிவம் கூறினான். ஈரக்குலை நடுங்குவது என்று சொல்வார்களே அந்த அனுபவத்தை அப்போது தான் கலா அனுபவித்தாள். 

    “உங்கள் மகள் ஒரு பையனைப் போட்டு அடித்திருக்கிறாள். விழுந்த ஒவ்வொரு அடியும் அவனை மரணத்திற்குக் கொண்டு போய் இருக்கும். நல்ல வேளை தப்பிக் கொண்டான். இன்று தான் கண்விழித்தான். உங்கள் விலாசத்தைப் பல்கலைக்கழகத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொண்டோம்.” என்றார்கள் 

    கலாவும் சிவமும் சத்தியாவின் நல்ல குணங்களை எல்லாம் எடுத்துச் சொன்ன போது எதுவுமே பேசாமல் சிரிப்பை மட்டும் உதிர்த்து விட்டு அவ வந்தவுடன் ஸ்டேசனுக்குக் கூட்டிக் கொண்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டுப் போனார்கள். 

    இது என்ன புதிய பிரச்சினை. ஒன்றே ஒன்றைப் பெற்றோம். அதுவும் இப்படிப் பிரச்சினையைத் தரும் பிள்ளையாகப் போய்விட்டதே. ஆண்டவா எங்களுக்கு ஏனிந்த சோதனை? இவளுக்கு என்ன குறை வச்சம். இப்படி எங்களை மாறி மாறி மரியாதை கெடுக்கிறாளே. இப்பிடி நோஞ்சான் மாதிரி வீட்டுக்குள்ளே இருப்பவளுக்குள் இத்தனை வீரமா? ஏதோ தவறு நடக்கிறது என்று சிவமும் கலாவும் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். 

    வீட்டுக்குள் நுழைகிறாள் சத்யா. கெதியாக பேக்கை வச்சிட்டு வா. பொலிசுக்குப் போக வேணும்.

    ஏனப்பா என்ன விசயம்? 

    அங்க வா அவங்க சொல்லுவாங்க. ஒன்றும் தெரியாத சின்னக் குழந்தையா நடிக்காத. ஆரொ ஒருவனைப் போட்டு அடிச்சிருக்கிறா என்றான் சிவம். 
    நானா…. விழுந்து விழுந்து சிரித்தாள். உங்களுக்கென்ன பைத்தியமா…..
    ஓம் எங்களுக்குப் பைத்தியம்தான். அங்க வந்து சொல்லு. கொஞ்ச நாளா உன்ர நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டுதான் வர்றம் என்றாள் கலா.
    அங்க என்ன கதை. கதையை வளர்க்கிறத விட்டுப் போட்டு இங்க வந்திருக்கிறார்கள். 

    சரி யாரைத் தேடுறதென்று நீ வந்து சொல்லு ….. வா…. என்ற படி கலா வெளியே வந்தாள்.

    கதவைப் பூட்டியபடி பின் தொடர்ந்தாள் சத்யா.

    பொலிஸ் நிலையத்தில் அதிகாரியின் முன் மூவரும் இருக்கின்றார்கள். விளக்கம் எடுக்கின்றார் அதிகாரி. ஆனால், எதுவுமே தனக்குத் தெரியாது என்று சொல்லிவிடுகின்றாள் சத்யா.

    ஆனால், கையில் காயத்துடன் சத்யா வந்த சம்பவம் கலாவின் மனதுக்குள்ளும் சிவத்தின் மனதுக்குள்ளும் சமாதியாகிறது. பிடிவாதமாகத் தனக்குத் தெரியாது என்றே முடிவெடுத்த சத்யாவைப் பொலிசார் தனியே விசாரிக்கப் பெற்றோரிடம் அனுமதி கேட்கின்றார்கள். 

    சில நிமிடங்களின் பின்
    உங்கள் மகளை நாளை ஒரு மனநல வைத்தியர் வீட்டிற்கு வந்து பார்ப்பார் என்று சொல்லி அனுப்பிவிடுகின்றார்கள்.

    திரும்பத் திரும்பத் சத்யாவை கேள்வி மேல் கேள்வி கேட்டு சிவமும் கலாவும் துளைத்தெடுத்தார்கள். அவளும் தெரியாது என்றே பதிலளித்தாள். 
    அடுத்தநாள் வந்த மனநல டாக்டர் தனியே நீண்ட நேரம் பேசுகின்றார். நாளை மீண்டும் வருவதாகச் சொல்லிவிட்டுப் போகின்றார். ஒருவாரத் தொடர் கவனிப்பின் இறுதியில் சிவத்தையும் கலாவையும் தனியே தன்னுடைய அலுவலகம் வரும்படி டாக்டர் அழைப்பு விடுகின்றார். 

    இருவரும் டாக்டரிடம் செல்கின்றனர். டாக்டர் தனக்கு முன்னே இருக்கும் இருக்கையைக் காட்டுகின்றார். இருவரும் அமருகின்றனர். தொடர்ந்து டாக்டர் கூறிய விடயங்கள் இருவருக்கும் தூக்கி வாரிப் போட்டது. கலாவின் கண்ணீரை அடக்குவதற்கு அவளால் முடியவில்லை. 

    பல்கலைக்கழக வளாகத்தில் சத்யா தனியாக ஒரு பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருப்பது வழக்கும். தன்னுடைய நண்பர்கள் யாருடனும் பேச மாட்டாள். தனியே ஒரு சிறு குழந்தையாக மாறித் தன் கற்பனையில் உருவாக்கிய சிறு பெண்பிள்ளையுடன் இணைந்து விளையாடுவதாக பாவனை பண்ணி விளையாடிக் கொண்டிருப்பாள். அவளுக்குச் சிறுவயதில் இருந்தே சேர்ந்து விளையாடுவதற்கு ஒரு சகோதரர் இல்லாத காரணத்தினால் அவளுக்குள்ளே இருந்த குழந்தை மனம் அவளைக் குழந்தையாகவே மாற்றிவிடுகிறது. அவளுக்கு முன்னே யாரோ ஒரு குழந்தை கற்பனையில் இருக்கும். அக்குழந்தை எப்போதும் அவளுடன் பேசுவதும் விளையாடுவதும் வழக்கம்.

    ஆனால், அவள் பல்கலைக்கழக வகுப்புகளுக்கு ஒழுங்கு தவறுவதில்லை. படிப்பில் எந்தவித குழப்பமும் செய்ததில்லை. இவளுடைய இந்தப் பழக்கம் ஏனைய மாணவர்களுக்கு சந்தேகமாக இருந்தாலும் அவர்கள் அதைப் பெரிது படுத்துவதில்லை. பல்கலைக்கழகம் வருவதும் பொவதுமாக இருப்பதனால், பெரிய நட்பு வட்டம் அவளுக்கு இருந்ததில்லை. வகுப்பு முடிந்தவுடன் வீட்டுக்கு வந்து விடுவாள்.

    இது என்ன புதுக் குழப்பம் என்ற படி மனதால் தளர்ந்து போனார்கள் சிவம் தம்பதியினர். எத்தனை விந்துக்களை விரயம் செய்திருக்கிறேன். எங்களுடைய சுகத்திற்காக சத்யாவைத் தனியாக வாழவிட்டு நோயாளியாக்கியிருக்கின்றோம் என்று சிவத்தின் இதயம் குற்ற உணர்ச்சியால் துடியாய்த் துடித்தது. கலாவோ கற்பனை பண்ணிப் பார்க்க முடியாத கவலையில் உறைந்து போயிருந்தாள்.

    நா தளதளக்க “ இந்தப் புதிய பிரச்சிளை என்ன டாக்கடர்” என்றார் சிவம். 
    உங்கள் மகளுக்கு வந்திருப்பது பல ஆளுமைக்கோளாறு என்று சொல்லப்படும் மல்ரிபில் பேர்சனலிற்றி டிசோர்டர் personality disorder என்னும் நோய். அவளைத் தனியே வளர்த்திருக்கிறீர்கள். உறவுகளோ சொந்தங்களோ இல்லாத இடம். சுற்றவுள்ள குடியிருப்பாளர்களோடு தொடர்பில்லை. நண்பர்களுடன் பழகுவதற்கு விடவில்லை. இந்த நிலையில் அவள் ஆணாகத் தன்னைக் கற்பனை பண்ணிக் கொள்ளுகின்றாள். அந்த சமயத்தில்  ஆணுக்குரிய அத்தனை வலுவும் அவளிடம் வந்து சேரும். தனக்கு ஏற்ற ஒரு பெண் துணையாக  மிசேலாவுடன் பழகுகின்றாள். மிசேலா அவளுடைய காதலி. என்று சொன்னவுடன் ஸ்தம்பித்துப் போகின்றார்கள் இருவரும். 

    கலா உதடுகளைக் கடித்தபடி தலையை மேற்புறம் நோக்கிப் பார்க்கின்றாள். வடிகின்ற கண்ணீருக்கு அடைகட்ட எத்தனிக்கின்றாள். கண்ணீரோ மடைதிறந்து தாரைதாரையாக வடிகின்றது. எப்படியெல்லாம் என் மகளைத் தவறாக நினைத்திருக்கின்றேனே. என்று மனத்தின் ரணம் வலியை மிதமாக்குகின்றது. 

    “காதலியைக் காப்பாற்றுவதற்காகவே அந்தப் பையனைப் போட்டு புரட்டி எடுத்திருக்கின்றாள். அவனும் சத்யாவின் அழகுக்கு அடிமையாகி, அவளை அடையவதற்கு மிசேலா மூலம் முயற்சி செய்திருக்கின்றான். மிசேலா சத்யாவைக் காதலிப்பதை அறிந்து மிசேலாவைக் கோபத்தில் தாக்கிய போதே அவனைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியிருக்கின்றாள். சத்யாவை அவன் அணைக்க முற்படும்போது நிலைமை பாரதூரமாக மாறியிருக்கின்றது. சத்யாவினுள் இருந்த ஆண்மை மிக வேகமாகத் தொழிற்பட்டதனால், அவன் காயப்பட்டு உணர்விழந்து போயிருக்கின்றான். நிலமைக்குத் திரும்பிய சத்யா ஓடி உங்களிடம் வந்திருக்கின்றாள்.

    நானும் பொலிஸாரும் செய்த தீவிர ஆராய்ச்சிகளின் பின் தான் உண்மைகளைக் கண்டுபிடித்தோம். உண்மையில் சத்யாக்குத் தன்னுடைய நிலைமை பற்றித் தெரியாது. 3 விதமான மனிதர்களாக வாழுகின்ற சத்யா தான் வாழுகின்ற வாழ்க்கைக்கு உண்மையாகவே வாழுகின்றாள். ஆணாக வாழுகின்ற போது ஆணாகவே மாறுகின்றாள். பெண்ணாக வாழும்போது அடக்கமான பெண்ணாகவே வாழுகின்றாள்.  ஒரு வாழ்க்கைக்குள் ஒரு வாழ்க்கை அவளுக்குக் குறுக்கிடுவது இல்லை. 

    மனம் தான் எல்லாவற்றிற்கும் காரணம். அது தனக்கேற்றது போல் உருவம் எடுக்கும்தன்மை உள்ளது.

    அப்பாவி சத்யாவின் இந்த நோய்க்கு ஒரு விதத்தில் நீங்களும் குற்றவாளிகளே” என்று கூறிய டாக்டர்.

    “என்னுடைய பயிற்சிக்குத் தவறாது சத்யாவை அனுப்புங்கள். அவளைக் கவனமாகக் கையாள வேண்டியது உங்கள் பொறுப்பு” என்று கூறி கைகுலுக்கி டாக்டர் இருவரையும் வீட்டிற்கு அனுப்புகின்றார். 

    இப்போதுதான் இருவரும் சத்யா வாழ்க்கைப் பாதையின் படிகளை உன்னிப்பாக நினைத்துப் பார்க்கின்றனர். உண்மைகள் புலப்படுகின்றன. 


     

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...