என் மகளின் பதினெட்டாவது வயது பிறந்ததின விழாவிலே என்னால் வாசிக்கப்பட்ட கவிதை.
வானுயர் என் விளக்கு நீ
என் வயிற்றில் வளர்ந்த முத்து
நீ
என்னைச் சுற்றிச் சுழலும் எல் ஈ டி லைர்றே
எங்கள் குடும்பத்தின் குதூகலமே, குலவிளக்கே - என்
எண்ணங்களை உன் திசை நோக்கி சுழல வைக்கின்றாய்
வலிமைமிக்க எதிர்முனைக் காந்தக்கதிரோ நீ
கண்மணியே என்னுள் இருந்து வெட்டி எடுத்த வைரமே
தாயென்னும் பட்டம் சுமக்க வைத்து
பதவி உயரச் செய்தாய்
அம்மா என்னும் அமுத மொழியை
ஆசை தீர அனுபவிக்க வைத்தவள் நீயன்றோ
எங்கள் இன்பமும் நீயே துன்பமும் நீயே
தாய்ப்பாசத்தின் உணர்வை பரிந்துரைக்க முடியாது
உன் நேசத்தின் வலிமை நிழல் கூட அறியாது
உன் வார்த்தைகளின் வலிமை வாயுரைக்க முடியாது
நீ வந்துதித்த பெருமை பிறர்
உணர்வுக்குப் புரியாது
என் உதிரம் சுமந்து உலகில் பிறந்து
உருவானாய் இன்று பதினெட்டு
கருவறையுள் கருவானாய் களித்திருந்தேன்.
உருவான பொழுதெல்லாம் புத்துணர்வு பூத்திருந்தேன்
கருவான பொழுது உருவான இன்பம்
இன்று பதினெட்டாய்ப் உருவான போது
பரிமாணம் காண்கின்றது.
நீ பாதம் எடுத்து நடக்கையிலே பரவசம் அடைந்தேன்
நீ பள்ளி செல்கையிலே பார்த்து நான் ரசித்தேன்
சின்னக் குழந்தையாய் நீ சுழன்று வந்தபோது
செல்லமே உன் சுட்டித்தனத்தை சுகமாய் ஜீரணித்தேன்
இன்று பருவப்பெண்ணாய் காட்சியளிக்கிறாய்
மெய்மறந்து நிற்கின்றேன்
என் வாழ்வின் தொடர்ச்சி உன் வாழ்க்கையின் உயர்ச்சி
நாளும் பொழுதுமாய் நல்லுணர்வு பெருக வேண்டும்
நாம் காணும் மனிதரை மனதார மதிக்க வேண்டும்
விதியென்று விளக்கமில்லா வாழ்வை விளக்கி நீ வாழ வேண்டும்
காண்பவற்றில் நல்லதையே கடைந்து நீ எடுக்க வேண்டும்
உலகத்தைப் படிக்க வேண்டும் உண்மையைப் புரியவேண்டும்
பொறுமையைக் கைக்கொண்டு புகழுடன் வாழவேண்டும்
உன்னத உழைப்பாலே உயர்வை எட்ட வேண்டும்
கேட்பதெல்லாம் உண்மை என்று நாட்டம் நீ தவிர்க்க வேண்டும்
முழுவயது கண்டுவிட்டாய் முயற்ச்சியை தொடர்ந்து எடு
எட்டு எட்டு உயர்ச்சியை எட்டு எம்மை விட்டுவிடாது
தொட்டபடி வாழ்ந்து தொடர்ச்சியை கண்டுவிடு
அப்பாவின் செல்லமாய் அம்மாவின் சுகந்தமாய்
என்றும் நீ
வாழ்வில் உயர இணைந்தே வாழ்த்துகிறோம்.
மீண்டுமாய் பிறந்தநாள் வாழ்த்துகள்