• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    புதன், 25 ஜூலை, 2018

    நெஞ்சம் மகிழ வைக்கும் அவ்வையார் என்னும் நாமம் கொண்ட பெண்பாற் புலவர்கள்



    இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னமே புகழ்பெற்ற பல பெண்பாற் புலவர்கள் தமிழுக்கும் சமயத்திற்கும் சேவையாற்றியுள்ளார்கள். சங்ககாலத்தில் சுமார் 37 பெண்புலவர்கள் இருந்திருக்கின்றார்கள். அவர்கள் பாடிய சுமார் 185 பாடல்கள் கடல்கோள்களுக்கு அகப்படாது எமக்குக் கிடைக்கின்றன. அவர்கள் ஆதிமந்தையார், பொன்முடியார், நக்கண்ணையார், அவ்வையார், ஒக்கூர் மாசாத்தியர், வெள்ளிவீதியார் போன்றோர் என அறியக் கிடக்கின்றது. அதில் அணு என்பது பிளக்க முடியாத அளவு மிகச் சிறியதுகள். அவ் அணுவைப் பிளக்கும் போது பிரமாண்டமான ஒரு சக்தி தோன்றும். அதாவது ஏழுகடல் அளவு சக்தி தோன்றும். ஒரு கடலின் ஆழமே அறிய முடியாது இருக்கும் போது 7 கடல் அளவு சக்தியை புகட்டிய குறள் என்னும் விளக்கத்தை

     
    அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்
     குறுகத் தரித்த குறள்


             என்று திருக்குறளின் பெருமையை அறிவுபூர்வமாக எடுத்துக் கூறிய அவ்வையார் என்னும் பெண்பாற்புலவர் பாடிய பல பாடல்கள் பல எமக்குக் கிடைக்கப் பெறுகின்றன.

           முருகக் கடவுளிடம் நாவற்கனி பறித்துத் தரும்படி கேட்ட போது சுட்டபழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று வினாவிய முருகக் கடவுளை பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா தமிழ்ஞானப் பழம் நீயப்பா என்று பாடிப் புகழ்ந்த அவ்வையார் பாடல்களையும், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், பாடிய அவ்வையார் பாடல்களையும், குறுநிலமன்னன் அதியமான் காலத்தில் வாழ்ந்த அவ்வையார் பாடல்களையும் எடுத்து ஆராயப் புகுந்தால், பாடல்வரிகளில் தன்மையை நோக்கும் போது அவ்வையார் என்பவர் ஒருவரே என்று திட்டவட்டமாகக் கூறமுடியாது உள்ளது.

            உதாரணமாக

     
    அறஞ்செய்ய விரும்பு, ஆறுவது சினம் என்று தொடருகின்ற ஆத்திசூடிப் பாடல்களையும்,
     
    இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக்
    கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து


    என்னும் புறநானூறு பாடல்வரிகளையும் எடுத்து நோக்கினால், வேறுபட்ட கவித்துவத்தைக் காணக்கூடியதாக இருக்கின்றது. எனவே அவ்வையார் என்னும் பெயருடைய வௌ;வேறு பெண் புலவர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் என்பது உண்மையென ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. 

                   திருமணம் செய்யாமல் கல்வி கற்று சமூகப்பணிகளுக்குத் தம்மை அர்ப்பணித்தவர்களே அவ்வை என்னும் பெயரால் அக்காலத்தில் அழைக்கப்பட்டனர். அவ்வழியில் சங்ககாலத்தில் வாழ்ந்த அவ்வையார், குறுநில மன்னன் பாரி வள்ளல் பிள்ளைகளான அங்கவை சங்கவை காலத்தில் வாழ்ந்த அவ்வையார்இ சோழர் காலத்தில் கம்பர் ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்த அவ்வையார். பிற்கால ஆத்திசூடி கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி ஆகிய நீதி நூல்களைத் தந்த அவ்வையார் என  அவ்வையார்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது.

           சங்ககாலத்து அவ்வை தற்போது மலையாளம் என்று சொல்லப்படுகின்ற சேரநாட்டிலே தர்மபுரி என்று தற்போது அழைக்கப்படும் தகடூர் எனப்படும் தலைநகரத்திலே யாளிதத்தனுக்கு மகளாகப் பிறந்தாள். பிள்ளை 3 வயதாக இருக்கும் போது தாய் இறக்கும் தறுவாயில் கலங்கி நிற்க

     
    இட்டமுடன் என்தலையில் இன்னபடி என்றெழுதி
     விட்டசிவனுஞ் செத்து விட்டானோ – முட்ட
     முட்டப்பஞ்ச மேயானாலும் பாரமவ னுக்கன்னாய்
     நெஞ்சமே அஞ்சாதே நீ


    என்று பாடியதாகவும். அக்கணமே கவலை நீத்த தாய் உயிர்நீத்தாள். தந்தையும் உறவினர் வசம் பிள்ளையை ஒப்படைத்துவிட்டு வெளியூர் சென்றுவிட்டார். இவர் கல்வி, சமயப்பற்று அத்தனையும் பெற்றவராய் சமுதாய சமயப்பணிக்காய்த் தன்னை ஒப்படைத்து நல்லறிவாற்றலுள்ள பெண்ணாய் வளர்ந்தாள் என வரலாற்று நூல்கள் எடுத்துக் காட்டுகின்றன. இக்காலம் கி.மு.300 – கி.பி 250 வரையுள்ள காலப்பகுதிகளாகும். இவர் பாடல்கள் சங்கப் பாடல்களான அகநானூறுஇ புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகியவற்றிலே தொண்டைமான், பாரி, அதியமான், எழினி, பாண்டியன் உக்கிரப்பெருவழுதி, சோழன் பெருநற்கிளி, சேரன் மாரி வெண்கோ போன்ற மன்னர்களைப் பற்றிய பாடல்களில் காணக்கிடக்கின்றன.

              இவர் அக்கால குறுநில மன்னன் அதியமான் புகழ்பாடிப் பரிசில்கள் பெற்றுள்ளார். அவர் பெருமை கண்ட மன்னனும்,  அவரை அரசவைப் புலவராக அமர்த்தினார். இம்மன்னனிடம் சிறப்புப் பொருந்திய 12 ஆண்டுக் கொருமுறை காய்க்கின்ற கருநெல்லிக்கனியைப் பொதிகைமலை வாழ்ந்த தவமுனிவர் வழங்க அக்கனியை நீண்ட காலம் வாழ வேண்டிய ஒளவைக்கு அதியமான பரிசாகக் கொடுத்தான்.

    அதியமானுடன் தொண்டைமான் போர் புரிய ஆயத்தமான போது போர் நடக்காதவண்ணம் தடுப்பதற்காக தொண்டைமானிடம் ஒளவையார் தூது சென்றார். தொண்டைமான் படைக்கலக் கொட்டிலைக் காட்டியபோது
     
    இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக்
     கண்திரழ் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து
     கடியுடை வியனகரவ்வேஇ அவ்வே
     பகைவர்க் குத்திக் கோடுனுதி சிதைந்து
     கொல்துறைக் குற்றிலமாதோ


    மன்னனே உன்னுடைய அரண்மனையிலேயுள்ள படைக்களங்கள் யாவும் போர்க்களத்தைக் காணாததால் மயில்பீலி அணியப்பெற்று, மாலை சூட்டப்பெற்று, நெய்பூசப்பெற்று அழகுடன் காணப்படுகின்றன. ஆனால், அதியமானின் வேல்கள் நாளும் பகைவர்களைப் போரில் குத்துதலால், முனைகள் முறிந்து சிதைந்து கொல்லன் உலைக்களத்திலே குவிந்து கிடக்கின்றன என்று அதியமான் பெருமையைப் பாடி தொண்டைமான் போரை நிறுத்தினார்.

                       சோழர்காலத்து 12ம் நூற்றாண்டு வாழ்ந்த ஒப்பற்ற புலவர்களான கம்பர்இ ஒட்டக்கூத்தர், புகழேந்தி, பொய்யாமொழி போன்றோர்க்கு ஒப்பாக அருங்கவியாற்றிய அற்புதத் தமிழ் புலவர் அவ்வையார் பற்றிய ஓர் சம்பவத்தை எடுத்து வருகின்றேன். மன்னர்களைப் புகழ்ந்து பாடலும் அப்பாடலுக்கு மனமுவந்த மன்னர்கள் பரிசில் வழங்கலும் அக்காலத் தமிழ் பற்றுக் கொண்ட மன்னர்களின் மனப்பாங்கு. ஒரு மாமன்னனைக் காண அவ்வையார் செல்கின்றார். அம்மையே நீவீர் எந்த ஊர் என்று மன்னன் கேட்க

    காலொந்தே னொந்தேன் கடுகி வழிநடந்தேன்
    யான்வந்த தூர மெளிதன்று கூனல்
    கருந்தேனுக் கண்ணாந்த காவிரிசூழ் நாடா
    இருந்தேனுக் கெங்கே யீடம்

    வளைந்த சங்கு தேனையுண்பதற்காக வாய் திறந்துள்ள நாட்டுக்கு வல்லவனே! காவிரி நதி சூழ்ந்த நாட்டின் மன்னனே! உன்னைக் காண்பதற்காக நெடுந்துரம் பரபரப்போடு  நடந்து வந்தேன். அதனால், கால் நொந்தேன், ஆங்காங்கே தங்கினேன். அதனால், எந்த ஊர் எனக்குச் சொந்த ஊர் என்பது என்று கூறுகின்றார்.

            அதைக் கேட்ட மன்னனும் அரியணை காட்டி அமரச் செய்ய, அவ்விடத்தில் கம்பர் பாடல் ஒன்று படிக்கப்படுகின்றது. மன்னனும் கம்பருக்கு நிகர் யாருண்டு என்று புகழ்ந்துரைக்க
     
    விரக ரிருவர் புகழ்ந்திடவே வேண்டும்
     விரனிறைய மோதிரங்கள் வேண்டும் - அரையதனில்
     பஞ்சேனும் பட்டேனும் வேண்டு மவர்கவிதை
     நஞ்சேனும் வேம்பேனு நன்று

    சூழ்ச்சிக்காரர் இருவர் தன்னைப் புகழ்வதற்காக வேண்டும், எல்லா விரல்களிலும் மோதிரங்கள் வேண்டும், பஞ்சால் அல்லது பட்டால் ஆடை அணிந்திருக்க வேண்டும், அவர்கள் எழுதிய கவிதை வேம்பாக இருந்தாலும் நல்லது என்று அவ்வையார் எழுந்து அவ்விடத்தில் பாடுகின்றார்.

    இதுகேட்ட மன்னன் உலகத்து உண்மை இதுவாகிலும் அம்மையே! கம்பர் சிறப்பான கவி புனையும் ஆற்றல் மிக்கவர் என்று கூற

    வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கரையான்
    தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும்
    வல்லோமே யென்று வலிமைசொல வேண்டாங்காண்
    எல்லோர்க்கு மொவ்வொன்று றெளிது

    தூக்கணாங்குருவியின் கூடு, கரையான் புற்று, தேன்கூடு, சிலந்திக்கூடு, ஆகியவை யாராலும் இலகுவாகச் செய்து முடிக்கக் கூடியதல்ல. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று எளிது. அதனால், யாம் பெரிதும் வல்லோம் என்று வலிமை சொல்ல வேண்டாம் என்று பாடினார். அத்துடன் எவ்வாறு புலமை கம்பருக்கு வந்திருக்கும் என்பதை எடுத்துக்காட்ட

    சித்திரமுங் கைப்பழக்கம் செந்தமிழு நாப்பழக்கம்
    வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம்
    நடையு நடைப்பழக்க நட்புந் தயையும்
    கொடையும் பிறவிக் குணம்

    என்று கூறி

    காணாமல் வேணதெல்லாம் கத்தலாங் கற்றோர்முன்
    கோணாமல் வாய்திறக்கக் கூடாதே – நாணாமல்
    பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தாக்கால்
    கீச்சுக்கீச் சென்னுங் கிளி

    என படிப்பு என்னவென்று அறியாதவர்கள் படித்தவர்கள் முன்னே வெட்கப்படாமல் நினைத்ததெல்லாவற்றையும் கூறலாம் ஆனால், படித்தவர்கள் முன்னே பணியாமல் இருக்கக் கூடாது. அது எப்படியென்றால் கிளி பெரும் பூனை வந்தால் கீச்சுக்கீச்சென்று கத்துவதைப் போன்றது.

    இவ்வாறு பாட அவ்வை மதிநுட்பம் அறிந்த மன்னனும் அம்மையே! தங்கள் பெயர் எதுவென்று உரைக்க அவ்வை என்கின்றார். ஆ… அவ்வையா! என்று துடிதுடித்த  மன்னனும் அவரை அரியாசனத்தின் தன் பக்கத்தில் இருத்துகின்றார்.

    இவ்வாறு கல்வி ஆற்றல் மிக்க தைரியமான அவ்வையார் சோழர்காலத்தில் வாழ்ந்திருக்கின்றார். பிற்கால அவ்வையார் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற சமுதாய சீர்திருத்த சிந்தனைகளை விதைக்கும் இலகுதமிழ் பாக்களை யாத்திருக்கின்றார் என்று அறியக்கூடியதாக இருக்கின்றது.

             எப்போது வாழ்ந்த அவ்வை என்று காலக்கணிப்பீட்டில் மயக்கம் இருந்தாலும் அவ்வையார் என்ற பெயரிலே எமக்குக் கிடைக்கும் அத்தனை பாக்களும் எமது உள்ளத்தை மகிழ்ச்சிப்படுத்துவதாகவே உள்ளன
    .

    உசாத்துணை நூல்களும் இணையப்பக்கங்களும்


          
    தனிப்பாடல் நகைச்சுவை – வே.ந.கபிலர்
    ஒளவையார் வாழ்வும் வாக்கும் – பேராசிரியர் தி. முத்து


    புதன், 11 ஜூலை, 2018

    நடிகையர் திலகம் திரைவிமர்சனம்




    இணையம் உலகத்தைத் தத்தெடுக்காத காலம், திறமைகளும், புகழும், சோகங்களும், நிகழ்வுகளும் சில மனிதர்களையே சென்றடைந்த காலம். அவ்வாறான காலத்திலேயே புகழடைந்தவர்களை சினிமாவும், வானொலிகளுமே அடையாளப்படுத்தின. தமிழ் சினிமாவிலே நடிப்பென்றால், நடிகர்திலகம் சிவாஜி கணேசன் என்று உலகமே கொண்டாடிய காலத்திலே அவரோடு போட்டிபோட்டு நடிகையர் திலகம் என்று பெயர் பெற்றவர்தான் சாவித்ரி….. இவர் எப்போது இறந்தார்? எங்கே இறந்தார்? எப்படி இறந்தார்? என்னும் கேள்விகளுக்கு எம் போன்ற மனிதர்கள் விடை சொல்ல முடியாது இருந்தோம். காரணம் தெரியப்படுத்த வசதிகள் இருந்ததில்லை. இப்போது யார் தும்மினாலும் கடும் நோயில் விழுந்துவிட்டார், யார் சிறிதாகச் சறுக்கினாலும் விபத்துக்குள்ளாகிவிட்டார் என்று தலைப்புக்களைப் போட்டு Youtube இல் வெளிவந்துவிடும். 
                 நடிகையர் திலகம் சாவித்ரி எப்படி வாழ்ந்தார் வீழ்ந்தார் என்பதை நடிகையர்திலகம் என்னும் திரைப்படத்தைப் பார்த்தபோதுதான் அறியக்கூடியதாக இருந்தது. நிச்சயமாக இத்திரைவிமர்சனம் செய்ய வேண்டும் என்று என் மனதில் பட்டது. இத்திரைப்படம் பற்றிய விமர்சனங்கள் தாறுமாறாக வந்திருப்பது உண்மைதான். சாவித்ரி அவர்களுடன் பழகியவர்களை வைத்து இப்படம் வெளிவந்திருக்கின்றது என்பது அவருடைய மகள் சாமுண்டீஸ்வரி அவர்கள் தெரியப்படுத்தியிருக்கின்றார். 

    கீர்த்தி சுரேஸின் சாவித்ரி கதாபாத்திரம் அவரின் நடிப்புக்கு முத்திரை பதிக்கின்றது. நடிகையாக இருந்து மகாநதியாக மாறிய சாவித்ரி அவர்களைப்பற்றிப் பெருமைப்பட வைக்கின்றது. மலையாள நடிகர் துல்கர் சல்மான் ஜெமினிகணேசனாக நடித்திருப்பது அவருக்குப் பெருமை சேர்க்கிறது. கைகளை காற்சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டும், கைகளை பின்புறம் கட்டிக்கொண்டும் நடக்கும் ஜெமினிகணேசனை துல்கர் சல்மான் கொண்டுவந்து முன்நிறுத்தினார்
     
    மதுரராணியாக பத்திரிகையாளராக நடிகை சமந்தாக் காதல் காட்சிகள் தேவையில்லாமல் இத்திரைப்படத்தில் கொண்டுவந்து சேர்த்து சாவித்திரியின் கதையைச் சுருக்கியிருக்கின்றார்கள். அக்காலத்தில் பெயரும் புகழும் பெற்ற நடிகர் திலகம் சிவாஜிக்கணேசன் பற்றிய சில விடயங்களாவது இத்திரைப்படத்தில் காட்டப்படும் என்று எதிர்பார்த்தேன் எதுவுமேயில்லாது கதைக்குத் தேவையற்ற சமந்தா காதல் கதை இப்படத்தின் தரத்தைக் குறைப்பதாக இருக்கின்றது. . 45 வருடங்கள் வாழ்ந்த நடிகையர் திலகம் சாவித்திரி அவர்கள் பற்றி 2 மணித்தியாலங்கள் பேசுவதற்கு விடயங்கள் டைரக்டருக்கு கதாசிரியருக்கு இல்லாமல் போனது கேள்விக்குறியாக இருக்கிறது. 

        நடிகை சாவித்திரி மருத்துவமனையில் அட்மின் ஆகியிருக்கிறார். அவர் பற்றி ஒரு கதை எழுதுங்கள் என்னும் கடமை சமந்தாவிடம் ஒப்படைக்கப்படுகின்றது. அதன்பின்தான் கதை ஓட்டம் ஏற்படுகின்றது. சாதாரண பெண்ணாக நடனத்தில் ஆர்வம் கொண்டு நாடகத்தில் இணைந்து பிரபல நடிகையாகி நடிகர் ஜெமினிகணேசனை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து அவர் மூலம் அனைத்தும் கற்றுத் தன் திறமையினால், புகழ் உச்சிக்குப் போனவர். சாவித்திரி அவர்கள். அவருக்கு சினிமா உலகத்தையே காட்டியவர் ஜெமினிகணேசன்தான். ஆனால், ஜெமினிகணேசன் அவர்களுடைய சபலப்புத்தியினால், அவரைவிட்டு தனியாக வாழ்ந்து குடிக்கு அடிமையாகி கோமா நிலைக்கு ஆளாகி உயிர்துறந்தார் என்று கதை ஓட்டம் செல்கிறது. முதன்முதலாகக் குடிப்பழக்கத்தை ஜெமினிக் கணேசன் மூலம் சந்தர்ப்ப வசத்தால் அருந்துகின்றார். அதுவே வாழ்க்கையின் கசப்புக்குத் துணைபோகின்றது. சிற்சில காட்சிகள் மனதுக்கு இதமாக இருக்கின்றன. ஒரு கண்ணில் மட்டும் இரண்டு துளிகள் கண்ணீர் வரவேண்டும் என்று இயக்குனர் கூற கிளிசரின் இல்லாமலேயே இரண்டு துளிகள் கண்ணீரை வரச் செய்த காட்சியை கீர்த்தி சுரேஸ் அவர்கள் சிறப்பாக நடித்திருந்தார். முதன்முதலாக மது அருந்தும் போது துலகர் சல்மான் அவர்கள் பார்க்கின்ற பார்வை அவரின் நடிப்பை மேம்படுத்துகின்றது. ஒருகட்டத்தில் ஜெமினிக்கணேசனுடன் பேசவேண்டும் என்று சாவித்ரி நினைக்கின்றார். தொலைபேசி எடுத்து அழைக்கின்றார், ஹலோ,ஹலோ என்று அழைத்த ஜெமினிகணேசன் அவர்கள் இவர்தான் என்று புரிந்து கொண்டு அம்மாடி என்று அழைக்கின்றார். இக்காட்சி மனதை நெகிழ்வைக்கின்றது. 

            குடி ஒரு மனிதனை அது பெண்ணாக இருந்தாலும் சரி ஆணாக இருந்தாலும் சரி எப்படிப் பாதிக்கும் என்பதை இப்படம் எடுத்துக் காட்டுகின்றது. சந்திரன் தோன்றி வளர்ந்து தேய்ந்து மறைவது போலவேதான். மனிதனுடைய வாழ்க்கையில் எதுவும் நிலையில்லை. அரண்மனையில் வாழ்ந்தவர்கள் கூட ஒருநாள் பரிதாபமாக இருக்க இடமில்லாமல் அலைவார்கள் என்பது எல்லோருக்கும் பாடமாக இருக்க வேண்டும். திறமைசாலிகள் கூட ஒருநாள் தடுமாறிவிடுவார்கள் என்பதுவும் இப்பாடம் கற்றுத் தருகின்றது. நாடக நடிகையாகி, சினிமா நடிகையாகி, திரைப்படத் தயாரிப்பாளராகி, டைரக்டராகி இலட்சக்கணக்கில் சம்பாதித்து இறுதியில் ஒன்றரை வருடங்கள் ஜடமாகக் கோமாநிலையில் இருந்து உயிர்துறந்த நடிகையர் திலகம் சாவித்ரி அவர்களுடைய வாழ்க்கை மற்றைய நடிகைகளுக்கும் பாடமாக அமைய இத்திரைப்படம் அமைந்திருந்தது.  





    ஞாயிறு, 1 ஜூலை, 2018

    ஆணும் ஆணும் பெண்ணும் பெண்ணும் அணுகுவதும் இணைவதும் முறையா!

          

      ஒரு திருமண பந்தத்தின் சிறப்பு ஒரு உயிரை உலகத்திற்கு உருவாக்குதல். ஆணும் பெண்ணும் சேர்ந்து அற்புதமாக ஒரு குழந்தையை உலகத்திற்குக் கொண்டுவருகின்றார்கள். இது இயற்கையும் கூட. இந்த இயற்கையின் மூலமே இனவிருத்தி நடைபெற வேண்டும் என்பது நியதி. ஆனால், தற்காலத்தில் பரவலாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் விடயமாகக் கருதப்படுவது ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் சேருகின்ற ஓரினச் சேர்க்கை.

              உலகத்தில் 20 வீதமானவர்கள் ஆணுக்கு பெண் தன்மையும் பெண்ணுக்கு ஆண் தன்மையும் உள்ள மாறுபட்ட குணமுள்ளவர்களாகத்தான் பிறக்கின்றார்கள். இவ்வாறு  பிறப்பது இயற்கைக்கு மாறுபட்டதாக இருந்தாலும். இது இயற்கைதான் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

    ஒரு தாயின் வயிற்றிலிருந்து ஒரு உருவம் பிறக்கின்றது. அது மனிதன் பிறப்பில் ஆணாகப் பெண்ணாகப் பெயர் பெறுகின்றது, ஆனால், இது ஆண் என்றும் பெண் என்றும் அடையாளம் கொடுத்தது மனிதனே என்பதும் உண்மை. வளர்ப்பில் வேறுபட்ட குணாதிசயங்களை ஊட்டி வளர்த்த போது அது பெண்ணென்றும் ஆணென்றும் தன்னை அடையாளப்படுத்துகின்றது.

             ஒவ்வொரு ஆணுக்கும் சில பெண் தன்மைகள் இருப்பது இயற்கை அதுபோல், ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண் தன்மை இருப்பதும் இயற்கை. வேலைத்தளத்திலே பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண் தன்னை ஒரு ஆண்போல் நடையுடை பாவனையில் காட்டிக் கொள்ளுவாள். சில ஆண்கள் வெட்கப்படுவதிலும் சில நடவடிக்கையிலும் பெண்போல் நடந்து கொள்வான். இது எப்படி ஏற்படுகின்றது என்றால், இயற்கையில் தாய் தந்தையிடம் இருந்து 23 குரோமோசோம் சோடி சேர்கின்ற போது ஒரு குழந்தை உருவாகின்றது. தாயின் xx என்னும் குரோமோசோம் தந்தையின் xy என்னும் குரொமோசோம் இணைந்து பிள்ளை வயிற்றில் உருவாகின்றது. இப்போது தாயிடமிருந்து ஒ மட்டுமே வரும். தந்தையிடமிருந்து x அல்லது y வரும். எனவே  முதலில் அம்மாவிடம் இருந்து வரும் குரோமோசோம் வேலை செய்ய ஆரம்பிக்கின்றது. எனவே 42 நாட்கள் பெண்ணுக்குரிய உறுப்புகள் தோன்றுகின்றன. சூலகங்கள் கூடத் தோன்றி பின் வேறாகின்றது. பின்னரே ஆணாயின் ஆண்களின் உடல் உறுப்புக்களாக மாறுகின்றன. எனவே ஆரம்பத்தில் எல்லோரும் பெண்களாகவே உருவெடுக்கின்றார்கள் என்பது விஞ்ஞான ரீதியில் அறியப்பட்ட உண்மையாகும்.

           இவ்வாறு இயல்பாகவே பெண் தன்மையைப் பெற்ற ஒரு ஆண் தன் நிலைமையை வெளியில் சொல்ல முடியாது வேதனையை அனுபவிக்கும் நிலமையும் முடியாத பட்சத்தில் தற்கொலை செய்து கொள்ளுகின்ற நிiலைமையும் பண்பாட்டுப் போர்வைக்குள் கிடக்கும் மனிதர்களுக்கு  பெரும் சவாலாக அமைகின்றன. இயற்கையை மீற முடியாது என்று சொல்லும் எம்மவர்கள் இவ்வாறான மனிதர்களை கண்டிப்பதும் அவர்களின் மனவேதனையை மேலும் தூண்டும் விதமாக வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்வதும் தவிர்க்கப்பட வேண்டியது அவசியமாகும். ஒவ்வொரு மனிதர்களும் தமக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் அல்லது தமது பிள்ளைகள் இவ்வாறான ஹோமோன்களின் மாற்றத்திற்கு ஆளாக்கப்பட்டிருந்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

                        மகாபாரத யுத்த காலத்தில் யுத்தத்தில் பங்கெடுப்பதற்காக இலங்கையிலிருந்து சென்ற மகாவீரன் அறவான் என்பவன் தன் வில்வித்தைச் சிறப்பை கிருஸ்ணரிடம்  காட்டியபோது அவனது திறமையை உணர்ந்த கிருஸ்ணர் தனது சூழ்ச்சியைப் பயன்படுத்தி அறவானிடம் ஒரு கோரிக்கை வைக்கின்றார். உன்னுடைய இந்த அம்பைப் பயன்படுத்த முன் உன்னை நீயே கொல் என்று கூறுகின்றார். அதற்கு இறப்பதற்கு முன் எனக்குத் திருமணம் செய்யும் ஆசை இருக்கின்றது என்று அறவான் கேட்கின்றான். அதற்கு கிருஸ்ணர் மோகினி என்னும் பெண்ணாக மாறி அறவானைத் திருமணம் செய்கின்றார். இது மகாபாரத கதையில் இடம்பெற்ற ஒரு நிகழ்வு. இங்கு கிருஸ்ணர் பெண்ணாக மாறுகின்றார். இது ஒரு ஆண் பெண்ணாகத் தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மைக்குள் அடங்குகின்றது. இதுபோல் புராணக் கதைகளிலும் அறிந்திருக்கின்றோம். ஆகவே ஒரு ஆண் ஆணையே விரும்புவதும், ஆண் தனது உடல் உறுப்புக்களை மாற்றி பெண்ணாக மாறுவதும் தற்போது வெளிப்படையாக நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.

             எனவே இயற்கையை மீற முடியாது. அதற்கு இடம் கொடுத்தலாகாது என்பவர்கள் காலம் காலமாகக் கட்டிக்காத்து வந்த தமது பழக்கவழக்கங்களையே காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்வதைக் கண்கூடாகக் காண்கின்றோம். இயற்கையாகத் தோன்றுகின்ற நரையை மறைத்து "டை" போடுகின்றோம். இயற்கை நகத்திற்கு சாயம் பூசுகின்றோம். காதலுக்கு மறுப்புத் தெரிவித்து கடுமையாகக் கண்டித்த நாம், இப்போது காதல் திருமணத்தை ஏற்றுக் கொள்ளுகின்றோம். சாதிக்கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்த நாம், அதை மீறிப் சாதி, மத, இன பேதமின்றி பயணிக்கின்றோம். இவ்வாறு மாற்றத்திற்கு உள்ளான நாம், இயற்கையாகவே ஒரு மனிதனின் உடல்மாற்றத்தைக் கேவலமாக கருதுவது எந்தவிதத்தில் நியாயமாகின்றது.

          ஒரு மனிதனின் ஆசாபாசங்களுக்கு இடையூறு ஏற்படுத்தாது ஒவ்வொரு மனிதர்களினதும் மன உணர்வுகளை அழிக்க நினைப்பதும்  கொலைக்குச் சமனாகும்.

    ஜூலை வெற்றிமணி பத்திரிகையில் வெளியாகியுள்ளது





    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...