பலன் ஒன்று படி இறங்கி வந்ததனால், அபிராமி தன் மடியில் வந்த மகவைத் தொட்டிலில் போட்டுத் தாலாட்டித் தன் தோளில் போட்டுச் சீராட்டி சப்பாணிப்பருவம், சாய்ந்தாடுபருவம், எனப் பருவந்தோறும் நாட்டுப்பாடல்கள் பாடி இயற்கையாய் அன்பையும் கலந்து வளர்த்த பிள்ளை அட்ஷயா, பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை என
மலர் பருவம் தளிர் பருவம்
மகிழ்ந்தின்பச் சுவை ததும்பும்
மாங்கனிப் பருவம் தேன் சுவைப்பருவம்
தித்திப்பாய் தெளிந்து நிற்கும் பருவம்
வந்தடைந்தாள். கன்னிப்பருவத்தில் எத்தகைய பெண்ணாகிலும் ஒருவித களைகட்டியே காணப்படுவாள். இது இயற்கை. இறைவன் இனத்தை வளர்க்க இயற்றி வைத்த சூன்யம். காட்சிப்பொருளாகக் காலமெல்லாம் அவள் வாழத் தோற்றம் பெற்றதல்லவே வாழ்க்கை. ||மாங்கல்யம் தந்துநானே|| ஒலிக்க அவள் கழுத்திலே தொங்கி மார்பிலே தவழ மங்கலநாண் அணிந்து அடுத்த தலைமுறைக்கு வலிமை சேர்க்க வேண்டியதல்லவா அவள் வாழ்க்கை.
எனவே பருவமடைந்த பெண்ணைப் பலரும் அறிய பூப்புனிதநீராட்டுவிழா செய்யப் பெற்றோர் சித்தம் கொண்டனர். ஐரோப்பியநாட்டிலே தமிழர்கள் பூப்புனித நீராட்டுவிழா செய்வதென்றால், அழைப்பிதழ் தொடக்கம் அணிகலன் வரை தாய்நாட்டில் இருந்து கொண்டு வருவார்கள். அதுமட்டுமல்ல வாழைமரத்தை வாழைக்குலையுடன் இணைத்தே தாய்நாட்டிலிருந்து இறக்குமதி செய்து நட்டுவார்கள். பெண்ணைப் பெற்றவுடன் அவள் பூப்புனித நீராட்டு விழாவிற்கென்றே பணம் சேகரிக்கும் பணியில் தம்மை முழுதாக ஈடுபடுத்துவார்கள். பலருக்கும் தமது பெண்ணின் பூப்புனித நீராட்டு விழாவே சிறந்தவிழா என்று பெயர்பெற வேண்டும் என்பதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். விதவிதமான ஆடையில் விலைமதிக்கவொண்ணா படாடோபத்துடன் ஆடம்பரத்தை விரவவிட்டு விழாவைச் சிறப்பிப்பர். ஐரோப்பியர்கள் வியந்து நிற்கும் வண்ணம் விருந்தினரை அழைப்பார்கள். ஏனெனில் இவ்வாறு மண்டபம் நிறைந்த மக்களை ஐரோப்பியர்கள் மேடை நிகழ்வுகளில்தான் கண்டிருப்பார்கள். ஆனால், தமது குடும்ப விழாக்களுக்கு இப்படி அழைப்பது அவர்களுக்கு அதிசயமாகத் தெரிவது ஒன்றும் வியப்பில்லை. விருந்தினரை அழைப்பது மட்டுமன்றி உறவினர்களையும் ஸ்பொன்சர் செய்து தாயகத்திலிருந்து அழைப்பது வழக்கமாக இருந்தது. பெற்றோர் தமது பெற்றோர் உறவினர்களை சகோதரர்களை அவர்கள் ஆசீர்வாதம் பெறுவதற்கு அழைப்பார்கள். அரவிந்த் தம்பதியினர் இந்நடைமுறைக்கு விதிவிலக்கானவர்கள் அல்ல.
அரவிந்த் தம்பதியினர் தமது ஏக புதல்வி அட்சயாவின் பூப்புனிதநீராட்டுவிழாவிற்கான ஆயத்தங்களைத் தடபுடலாக நடத்தத் திட்டமிட்டனர். விருந்தினரை இவ்விழாவிற்கு அழைப்பதன் நோக்கமே பெண் நல்லமுறையில் வாழவேண்டும் என்று வாழ்த்துகளை, வாழ்ந்த அநுபவம் பெற்றவர்களிடம் இருந்து பெறுவதற்காகவும், தமது மகிழ்ச்சியைப் பலருடன் இணைந்து பகிர்ந்து கொள்வதற்காகவும், எனது மகள் வயதுக்கு வந்துவிட்டாள். அதனால், ஆணைப் பெற்றோர்களே! அவதானமாக இருங்கள். எங்கள் வீட்டிலும் ஒரு பெண் இருக்கின்றாள் என உலகுக்கு அறிவிப்பதற்குமாகவே அமைகின்றது.
அரவிந்த் தனது தந்தையை தாய்நாட்டிலிருந்து வரவழைத்திருந்தார். தன் தந்தையை அழைத்திருந்த பெருமையில் சில கடமைகளை அவரிடமே ஒப்படைத்திருந்தார். அவரும் ஓடியாடி வேலைகளை செய்து கொண்டிருந்தார்.
விழாவிற்கான நாளும் நெருங்கியது. நல்வாழ்த்துச் சொல்லப் பலரும் பங்குபற்றினார்கள். மண்டபம் நிறைந்த விருந்தினர்கள். அழகான மண்டபம் அதில் அழகுத் தேவதையாய் பருவப் பெண்களெல்லாம் கண்டு பொறாமை கொள்ளும் அளவிற்கு பேரழகியாய் மண்டபத்து மேடையிலே வீற்றிருந்தாள் அட்சயா. சொர்க்கத்துத் தேவதைக்குத் தொடக்குக் கழிக்கும் வைபவம் நடந்தேறியது. புகைப்பட வீடியோ கலாசாரங்கள் அமர்க்களமாய் அமைந்தன. பிற்காலத்தில் பெற்றோரும் மற்றோரும் இந்நாளை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்கவென ஒப்பனை மாறாத பொலிவுடன் படங்கள் வீடியோக்கள் அவதானமாக எடுக்கப்பட்டது. விருந்தினர் உபசரிப்பு முற்றுப்பெற்று அன்பளிப்பு வரிசை நீண்டது. மெல்லமெல்ல வரிசை நீளம் குறைய மண்டபம் காலியாக அரவிந்த் குடும்பமும் வீடு திரும்பியது.
தன் மகளின் பூப்புனித நீராட்டுவிழாவைச் சிறப்புடன் நடத்திமுடித்த பெருமையுடன் அரவிந்தன் தம்பதியினர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். மாதமொன்று கழிந்தது. மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் தன் மகளுக்கு ஏற்படவில்லையென அபிராமி மனதில் ஓர் ஏக்கம் எழுந்தது. ஆனால், இப்பருவத்தில் சில பெண்கள் 2 வருடங்களின் பின்னும் அடுத்த மாதவிடாய் காண்பார்கள் என அயலவர் பகர்ந்து நிற்க அபிராமியும் அமைதியானாள். மாதங்கள் ஒவ்வொன்றாய்க் கடந்து செல்ல அட்சயா வயிற்றைக் குமட்டி வாந்தி எடுக்கத் தொடங்கினாள். உடலில் வாட்டம் ஏற்பட்டது. உணவுகளைக் காணும் போது வெறுப்பு எற்பட்டது. பலரின் கண்ணும் என் பிள்ளைமேல் பட்டுவிட்டதே. வராதநோய் ஏதோ வந்துவிட்டது. என அங்கலாய்த்த தாய் அபிராமி, தன் மகளை வைத்தியரிடம் கொண்டு சென்றார். தகுந்த பரிசேதனையின் பின் தன் மகளின் வயிறு வாரிசொன்றைச் சுமக்கிறது என்னும் இடியொன்று அபிராமி காதுகளில் வந்து விழுந்தது. ஒடுங்கிப் போனாள் அவள். அசையாது பிரமை பிடித்தவள் போளானாள். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் பிள்ளையை வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். அப்பாவியாய் நின்ற அந்தப் பச்சைக் குழந்தை ஒரு குழந்தையை சுமக்கும் நிலை பெற்றது கண்டு துடித்துப் பேன பெற்றோர்கள், காரணம் வினவி காரண கர்த்தாவை அடையாளங் கண்டு பிடித்தனர்.
வயது செல்லச் செல்ல பகுத்தறிவு பண்பட்ட நிலையில் தொழிற்படும். இது மனிதப்பண்பு. ஆனால், இப்பண்பற்ற மிருகமாகும் மனிதர்கள் சமுதாயத்தில் துடிக்கத் துடிக்க உயிருடன் புதைகுழியில் புதைக்கப்பட வேண்டியவர்கள். இக்காலத்தில் 11,12 வயதிலேயே பெண்கள் பருவமடைகின்றனர். பார்க்கும்போது குழந்தைகள் என எண்ணத் தோன்றும் உள்ளம் வர வேண்டும். ஆனல், மிருகமாய் வாழும் கிழட்டு ஜென்மங்கள்; பண்பட்ட கலாசாரம் என்று சொல்லப்படுகின்ற எம்மினத்தில் வாழ்வது வெட்கப்பட வேண்டியது. தாயகத்தில் இருந்து விமானம் ஏறி வந்து தன் மகனின் பிஞ்சுக் குழந்தையைத் தொடுவதற்கு அந்த முற்றிய மரத்திற்கு எப்படி மனம் வந்தது? மௌனமாய் நாடு திரும்பி விட்டாலும் தன் கேவலமான துரோகச் செயல் ஒர்நாள் வெளிப்படும் என ஏன் அந்த மிருகம் எண்ணவில்லை?
உண்மை தெரிந்த பெற்றோர் துடித்துப் போனார்கள். தன் மகளின் பெண்மையைச் சீர்குழைத்த தன் தந்தையை நினைத்து அரவிந்த் ஆடிப்போய்விட்டார். அரவிந்த் எடுக்க வேண்டிய நடவடிக்கை யாதென வாசகர்களே! வந்து தீர்ப்பளியுங்கள்.
மிருகமாய் வாழும் ஜென்மங்கள் என்னும் தலைப்பில் என்னால் எழுதப்பட்ட இக்கதை தினக்குரல் என்னும் பத்திரிகையில் 26.02.12அன்று பிரசுரிக்கப்பட்டது