• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 29 ஜனவரி, 2011

    புலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு ( அங்கம் 4)

                                                                                                                           
    வைபவங்கள்

    புலம்பெயர் நாடுகளில் நடைபெறுகின்ற வைபவங்களில் பூப்பனிதநீராட்டுவிழா, திருமணவிழா போன்றவற்றை எடுத்துநோக்குவோம். 

                                                                               பூப்புனித நீராட்டுவிழா:

    பருவ மடைந்தா ரெனப்பறை சாற்றி
    பலவருடங் கழித்து விழாச் செய்து
    பலநூறு பேருக்கு அழைப்பிதல் கொடுத்து
    சிலரை மட்டும் உபசரித்து
    பல ஆயிரங்கள் செலவு செய்தும்
    சிறிது பணச் செலவில் 
    கரண்டி பரிமாறாது
    சிறிதும் கையலம்பாது 
    உணவு உருசிக்கச் செய்து
    விருந்தினர் நிலை சிந்திக்காது
    பல மணிநேரம் புகைப்படம் எடுத்து
    இறுதிவரைப் பெண்ணை நிறுத்தி வைத்து
    பலர் வேதனைப்பட்டு வாழ்த்தும்
    பூப்புனித நீராட்டுவிழா.

           இது புலம்பெயர்விலே பெயர் பெற்ற விழா. பலர் இதைப் பணச்சடங்கு என்றும் கூறுவார்கள்.

                                                                 பூம்புனிதநீராட்டுவிழா:

    ஒரு பெண் இயற்யாக உடலினுள் ஏற்படுகின்ற ஓமோன் மாற்றங்களால் முதல் மாதவிடாய் காண்பது பூப்படைதல் என்படுகின்றது, அன்றிலிருந்து அப்பெண் ஒரு குழந்தையைச் சுமப்பதற்குத் தகுதிபெற்றவளாகிவிடுகின்றாள். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பூப்படைதல் முக்கிய அம்சமாகின்றது. எப்படிப்பட்ட பெண்ணாயினும் இக்காலத்தில் அழகாகவே காட்சியளிப்பாள்; கன்னியென்னும் அந்தஸ்துப் பெற்றுக் காண்பவர்கள் கண்களுக்கு அழகுப்பொம்மையாகவே தோற்றமளிப்பாள். இவ்வாறான பெண்ணை மேலும் அழகுபடுத்தி அலங்கரித்து ஒரு காட்சிப்பொருளாக மேடையில் மணித்தியாலக்கணக்கில் நிறுத்திவைத்து, நிகழ்வுகள் நடைபெறுகின்றன. தாயகத்தில் நாம் கண்டறியாத, கேட்டறியாத, தமிழர்கள் வைஸ்ணவர்கள, என்ற பேதமின்றி ஒருபுதுவித கலாசாரப் படிவங்கள் புலம்பெயர்வில் படிந்துவிட்டன. இது ஒரு சடங்காகக் காணப்பட்டாலும் புலம்பெயர் பெற்றோர் கூறுகின்ற காரணம், 'நாம் இவளுடைய கல்யாணத்தை நடத்தி அழகு பார்க்க முடியுமோ என்பது சந்தேகம். அதனாலே இச்சடங்கைச் செய்வோம். நாம் பிறருக்குக் கொடுத்தவற்றையெல்லாம் எப்படி மீட்கப்போகின்றோம்'' என்பதேயாகும். அப்படியானால், முதலில் தமது பிள்ளைகளில் பெற்றோரே நம்பிக்கை வைக்காதபோது பிள்ளைகள் எப்படிப் பெற்றோரின் பேச்சுக்கு இடம்தரப் போகின்றார்கள். பூப்படைந்தவுடனேயே முடிவுகட்டி விடுகின்றார்கள். தமது பிள்ளைகள் தாம் விரும்பிய ஆணைத் தமது விருப்பத்திற்கு மாறாகத் திருமணம் செய்யப்போகின்றார்கள் என்பதை. இதைவிட இன்னும் ஒரு காரணம் இச்சடங்குகளுக்குக் கூறப்படுகின்றது. பூப்புனிதநீராட்டுவிழா என்பது பெற்றோர்களுக்கு ஒரு முதலீடாக அமைகின்றது என்று சொல்பவர்களும் உண்டு. புகைப்படக்கலைஞர் சட்டதிட்டங்களுக்கமைய சடங்கு நிகழ்வுகள் நடைபெறும். திரைப்பட இயக்குனர்போல் சில புகைப்படக்கலைஞர்கள் காணப்படுவார்கள். அவர்கள் அதட்டலுக்கும் ஆள்காட்டிவிரலுக்கும் ஏற்பப் பெற்றோர்கள் தம்மை அமைதிப்படுத்தி அவதானமாக இருக்கவேண்டும்.


    திருமண பூப்புனிதநீராட்டு விழாக்களின் பொதுநடவடிக்கை

    விழா ஆரம்பம், அழைப்பிதலில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தைக் கடந்துவிடும். வடை, கோப்பி தேநீருடன் விருந்தினர்கள் வழிமேல் விழி வைத்துக் காததிருப்பார்கள். வருகின்ற விருந்தினர்கள் 400 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்து வந்தவர்களாகவும் இருப்பார்கள். இவ்வைபவத்தில் கலந்து கொண்டு வேறு ஒரு அழைப்பிதழ் கிடைத்த வைபத்திற்கும் போகவேண்டும் என்ற கலவரத்தில் காணப்படுவார்கள். ஏனென்றால், அழைப்பிதலைப் பெரிதாக மதித்து அவர்களிடம் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணப்பாங்கோடு காத்திருப்பவர்களுக்கு நேரகாலதாமதமாக உள்நுழையும் பூப்படைந்த பெண்ணோ, திருமணம் செய்யவிருக்கும் மாப்பிள்ளை, பெண்ணோ, பெரும் சங்கடத்தை ஏற்படுத்திவிடுவார்கள். 
                  வைபவ மண்டபத்தில் பாடல்கள் ஒலிக்கும் அது செவிப்பறைக்குச் சாவுமணி அடிக்கும். தலைக்குள் ஏற்படும் வலியைத் தவிர்க்க அங்கு ஆரவாரமாகத் திரியும் ஒருவரை அழைத்து ஒலியின் தன்மையைக் குறைக்கும் படிப் பணிவுடன் கேட்டால், ஓரளவு ஒலி குறைய மூச்சுவிடும் செவிப்பறைக்கு, என்ன இது ஒலி குறைந்துவிட்டதே என்று நினைத்த வேறு ஒருவர் ஒலியின் அளவை அதிகரி;க்கச் செய்ய நடுக்கம் வந்துவிடும். மீண்டும் ட்ரம் ஒலி காதைப்பிளக்கும். அழுகின்ற செவிப்பறையுடன் சுகதேகியாக விழாமண்டபம் நுழைந்தவர்கள் தலைவலி நோயாளியாக வீடுநோக்கிப் புறப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். காசையும் கொடுத்துத் தலைவலியையும் வாங்குவது என்னும் பழமொழி இதுதான் என்பது இங்கு வந்தபின்னேதான் உணர்ந்து கொண்டேன். ஏனிந்தப் பேரொலி? புரியவில்லையே. கண்ணதாசன் மேளதாளங்கள் திருமணவீட்டில் ஒலிப்பது, வந்திருப்பவர்கள் கூறுகின்ற அமங்கள வார்த்தைகள் விழாக் கதாநாயகர்களுக்குக் கேட்கக் கூடாது என்பதற்காக என்றார். அமங்கள வார்த்தைகளைச் சொல்பவர்கள் பிறருக்குக் கேட்கும்படியாகவா சொல்லப்போகின்றார்கள். மெல்லிசை மனதுக்கு இனிமை பயக்கும் என்பதைப் புரிந்தும் புரியாமல் நடக்கும் பேர்வழிகளை என்னென்பது. 
                   சடங்குநடைமுறைகள் மேடையில் நடந்து முடிவடைய  உணவுபரிமாறப்படும். இது ஒரு பெரிய சமாச்சாரம். இதனை அடுத்த அங்கத்தில் அநுபவிப்போமா. 

    இக்கட்டுரை யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்படவில்லை. பலரின் புலம்பலும் புண்படும் வார்த்தைகளும் என் வரிகளின் மூலம் பலருக்கு வெளிச்சமாக்கப்படுகின்றன. புரிதலும் திருந்தலும் மனிதவர்க்கத்தின் கடமையல்லவா. காலப்போக்கில் நாம் மாறிவிட்டோம் என்னும் போதுதானே உடலிலும் உள்ளத்திலும் வளர்ச்சி கண்ட பெருமை எமக்கு ஏற்படும். அனைத்து வைபவங்களும் இப்படி என்று சொல்லமுடியாது. அநேகமான வைபவங்கள் இப்படி நடைபெறுவதனாலேயே நான் என் வரிகளை விதைக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. வாசித்தவிட்டு மௌனமாகிவிடாதீர்கள். மூளைக்கு ஏற்றுங்கள். உங்கள் அபிப்பிராயங்களைத் தாருங்கள். நன்றி.







    வியாழன், 27 ஜனவரி, 2011

    தாயார் பாடல்




    கீச்சுமூச்சுத் தம்பலம் கீயோமாயோத் தம்பலம்
     கீதமாச்சு உங்கள் நினைவோ தம்பலத்தில்
     கீதமாச்சு உங்கள் நினைவோ தம்பலத்தில்

    பல்லாங்குழி ஆட நானும்
     சொல்லாமத்தான் போனபோது
     சொல்லிச்சொல்லி அடிச்சஅடி வலிக்கவில்லை - நீங்க
     சொல்லாமாத்தான் போன அடி வலிக்கிறதுநெஞ்சில்
     சொல்லாமத்தான் போன அடி வலிக்கிறது.

     கிட்டிப்பொல்லு அடித்த அடி
     பட்டு நானும் பதறியதும்
     கட்டிவந்து அணைத்த சுகம் மறக்கவில்லைநீங்கள்
     விட்டுச்சென்று போனசுகம் மறக்கவில்லைஎன்னை
     விட்டுச் சென்று போனதுயர் கனக்கிறதுஎன்னை       
     விட்டுச் சென்று போனதுயர் கனக்கிறது.

     சின்னச்சோறு நான் சமைக்க
     கன்னத்திலே முத்தமிட்டு
     தித்திப்பதாய்ச் சொன்னசொல்லு மறக்கவில்லைஉங்கள்
     தித்திப்பான உணவுதேடி ஏங்கிறதுமனம்
     தித்திப்பான உணவு தேடி ஏங்கிறது

    புதன், 26 ஜனவரி, 2011

    9 வயதில் மெனூஷா கவிதை


    5 வயதில் என் மகளை ஆண்டவனை வணங்க அழைத்தேன்.   வழமைபோல் தேவாரம் பாடப் பணித்தேன். அவளும் அன்று பாடிய தேவாரம் என் எண்ணத்தில் புதுக் கருத்தைப் பதித்தது. அன்று தொட்டு அவள் பணியில் இடையிடையே கவிதை ஆர்வத்தைத் தூண்டினேன். அவ்வழியே வந்த கவிதையைப் படவடிவில் கொண்டு வந்து உங்கள் காதுகளுக்குப் பாய்ச்ச விளைந்தே இங்கு இடம் ஒதுக்கினேன். 

    5 வயதில் பாடிய பாடல்

    பிள்ளையார் பிள்ளையார் 
    பெருமை வாய்ந்த பிள்ளையார் - நீ
    நல்லவர்களை காப்பாற்ற வேண்டும்
    கூடாதவர்களைக் குடையெடுத்து அடி 




    செவ்வாய், 25 ஜனவரி, 2011

    மறக்குமா நெஞ்சம் மறக்குமா?




    மறக்குமா நெஞ்சம் மறக்குமா? 


    ஓ! நெஞ்சே! ஓ! நெஞ்சே!
    ஒரு வயதில் நானுடுத்தி விளையாடியதாய்
    ஒருமுறை என்னம்மா எடுத்துக் காட்டியதாய் 
    சிறுவயதில் எந்நெஞ்சில் நிலையாய் ஓர்எண்ணம்
    சிந்தித்துப் பார்க்கிறேன் சிந்தனையில் எட்டவில்லை
    சிவப்புக்கரைச் சேலையென்று சொன்ன அச்N;சலையை
    மறந்து விட்டாயா? நெஞ்சே மறந்துவிட்டாயா? அச்N;சலையை


    நெஞ்சம் : மறக்கும் நெஞ்சம் மறக்கும்   


    பத்து வயதில் பவித்திரமாய் வைத்திருந்து
    பத்துமுறை உடையணிந்து பக்கத்தில் படுக்கவைத்து
    நித்தமும் நகையணிந்து சுத்தமாய்க் குளிக்கவைத்து
    முத்தமும் தித்திப்பாய் தந்ததாயென் தாயுரைத்த
    முத்துத் தோடணிந்த சித்திரப் பாவையை
    கச்சிதமாய்க் காட்டிவிடு சித்தத்தில் வரவில்லை
    மறக்குமா? நெஞ்சம் மறக்குமா?


    நெஞ்சம் : மறக்கும் நெஞ்சம் மறக்கும் 


    ஓடும் பஸ்ஸில் பாய்ந்த ஏறியதும்
    உதவும் கரங்களை உதறித் தள்ளியதும்
    உண்ணும் கண்களை உறுத்துப் பார்த்ததும்
    உரசிய உடல்களை ஊசியால் பதித்ததும்
    நிஜமாய் வந்து நிழலாய் மறைகிறது
    நினைத்துப் பார்க்கிறேன் நினைவிலில்லை முகங்கள்
    மறக்குமா நெஞ்சம் மறக்குமா?


    நெஞ்சம் : மறக்கும் நெஞ்சம் மறக்கும்


    பெண்ணென்றும்ஆணென்றும் மொழியென்றும் பேதம் அங்கில்லை
    பெற்றோரும் மற்றோரும் சுற்றமாய் இருந்ததில்லை
    கற்றலும் மறக்கவில்லை களிப்பும் குறைந்ததில்லை
    கையுணவு காய்ந்தும் கதைகள் குறைவதில்லை
    கூடிக் குலாவி நின்றோம் கொட்டமடித்து நின்றோம்
    புல்கலையும் பயின்று பாதை மாறிவிட்டோம்
    புழகிய உறவுகளும் பறந்து மறைந்துவிட்டார்
    பாடிப்பறந்த நட்பைத் தேடியும் காணவில்லை
    சாடையாய் முகவடிவம் கண்ணில் தெரிகிறது
    மறக்குமா நெஞ்சம் மறக்குமா?


    நெஞ்சம்: மறக்கும் நெஞ்சம் மறக்கும்
           துன்பத்தை மறந்து இன்பத்தை நினைத்திருக்க 
           இரண்டு மனம் இறைவன் படைக்கவில்லை
           மறக்க வேண்டும் மனம் அமைதி அடைவதற்கு
           மறக்க வேண்டும் மனம் அமைதி அடைவதற்கு



    மறக்குமா நெஞ்சம் மறக்குமா?

    ! நெஞ்சே! ! நெஞ்சே!
    ஒரு வயதில் நானுடுத்தி விளையாடியதாய்
    ஒருமுறை என்னம்மா எடுத்துக் காட்டியதாய்
    சிறுவயதில் எந்நெஞ்சில் நிலையாய் ஓர்எண்ணம்
    சிந்தித்துப் பார்க்கிறேன், சிந்தனையில் எட்டவில்லை
    சிவப்புக்கரைச் சேலையென்று சொன்ன அச்சலையை
    மறந்து விட்டாயா? நெஞ்சே மறந்துவிட்டாயா?

    நெஞ்சம் : மறக்கும் நெஞ்சம் மறக்கும்  

    பத்து வயதில் பவித்திரமாய் வைத்திருந்து
    பத்துமுறை உடையணிந்து பக்கத்தில் படுக்கவைத்து
    நித்தமும் நகையணிந்து சுத்தமாய்க் குளிக்கவைத்து
    முத்தமும் தித்திப்பாய் தந்ததாயென் தாயுரைத்த
    முத்துத் தோடணிந்த சித்திரப் பாவையை
    கச்சிதமாய்க் காட்டிவிடு சித்தத்தில் வரவில்லை
    மறக்குமா? நெஞ்சம் மறக்குமா?

    நெஞ்சம் : மறக்கும் நெஞ்சம் மறக்கும்

    ஓடும் பஸ்ஸில் பாய்ந்த ஏறியதும்
    உதவும் கரங்களை உதறித் தள்ளியதும்
    உண்ணும் கண்களை உறுத்துப் பார்த்ததும்
    உரசிய உடல்களை ஊசியால் பதித்ததும்
    நிஜமாய் வந்து நிழலாய் மறைகிறது
    நினைத்துப் பார்க்கிறேன் நினைவிலில்லை முகங்கள்
    மறக்குமா நெஞ்சம் மறக்குமா?

    நெஞ்சம் : மறக்கும் நெஞ்சம் மறக்கும்

    பெண்ணென்றும்ஆணென்றும் மொழியென்றும் பேதம்  அங்கில்லை
    பெற்றோரும் மற்றோரும் சுற்றமாய் இருந்ததில்லை
    கற்றலும் மறக்கவில்லை களிப்பும் குறைந்ததில்லை
    கையுணவு காய்ந்தும் கதைகள் குறைவதில்லை
    கூடிக் குலாவி நின்றோம் கொட்டமடித்து நின்றோம்
    பல்கலையும் பயின்று பாதை மாறிவிட்டோம்
    பழகிய உறவுகளும் பறந்து மறைந்துவிட்டார்
    பாடிப்பறந்த நட்பைத் தேடியும் காணவில்லை
    சாடையாய் முகவடிவம் கண்ணில் தெரிகிறது
    மறக்குமா நெஞ்சம் மறக்குமா?

    நெஞ்சம்: மறக்கும் நெஞ்சம் மறக்கும்
           துன்பத்தை மறந்து இன்பத்தை நினைத்திருக்க
           இரண்டு மனம்  இறைவன் படைக்கவில்லை
           மறக்க வேண்டும் மனம் அமைதி  அடைவதற்கு
           மறக்க வேண்டம் மனம் அமைதி அடைவதற்கு

    திங்கள், 24 ஜனவரி, 2011

    நாதங்கள்


           
    வானுக்கும் மண்ணுக்கு மோர் நெசவாலை
    வெள்ளிக் கம்பிகள் நீட்டியோர் சரிகைச்சேலை
    பூமியில் வீழுதுபார் தாளம்மாறாத ஓசை
    புதுப்புது ராகம் இசைக்குது மேகத்தின்கொடை
    தத்தோம் தித்தோம் தகதிமிதோம் தகதிமிதோம்

    தோலிலே தட்டிடும் விரல்களின் நாதம்
    தோடுடைய செவியனின் உடுக்கையிலும் நாதம்
    தாளவாத்தியக் கருவிகள் தந்திடும் ஞானம்
    தரணியில் தோற்கருவிகள் தரமான ராகம்
    தத்தோம் தித்தோம் தரிகிடத்தோம் தரிகிடதோம்

    மண்ணிலே உருவங்கள் மகத்தான படைப்புகளி
    மண்ணையே பதங்காண பாதங்களின் துடிப்பு
    மண்ணிலே சேர்ந்திடும் சுதிசேரும் துள்ளல் - கால்கள்
    மண்ணிலே பண்ணிய சுகமான ராகம்
    தத்தோம் தித்தோம் ததிங்கிணத்தோம் ததிங்கிணத்தோம்

    பாதங்கள் படப்படப் பாய்ந்திடும் பந்துஉதை
    பட்டதால், உருண்டு ஓடிடும் பந்து
    தொம் தொம் தத்தோம் தத்தோம்
    கதாநாயகன் கையிலே வில்லனும் பந்து
    தாக்கிடும் குத்திலே தோன்றிடும் சிந்து
    தோம் தோம் தித்தித்தோத் தித்தோம்

    சதங்கை கட்டிய கால்களும் துள்ளும் - ஜதி
    சந்தங்கள் கூட்டிச் சதங்கையும் பாடும் - ஆதி
    அந்தமுமில்லா ஆண்டவன் ஆடிய தாண்டவம்
    அரங்கிலே காட்டிய களிப்பிலே கேட்கும்
    தரிகிடதோம் தரிகிடதோம் தித்தோம் தித்தோம்

    தோளிலே மூடையைச் சுமந்திடும் தொழிலாளி
    தோணிபோல் முதுகை வளைத்திடும் பாரத்தை
    தூக்கியே தரையிலே போட்டிடும் ஜதியும்
    தொம் தொம் தொம்தொம் தகதொம்

    நாதங்கள் காதோரம் நாள்தோறும் கேட்கும்
    கேட்கின்ற இசையாவும் ராகமாய் ஒலிக்கும்
    ஒலிக்கின்ற ஓசையிலே  ஒருப்பட ஒன்றிடும்
    மனமெங்கும் இசைலயங்கள் இணைந்தே கலந்திடும்


    சனி, 22 ஜனவரி, 2011

    மௌனமாய்




                                                         மௌனமாய்


    மௌனம், நிசப்தம், 
             வெளிப்படும் விநோதம்


    மௌனமாய் பூக்கும் மலருக்கு 
     வாசனை ஒலியாகும்
    மௌனமாய் உதிக்கும் கதிரவனுக்கு 
     கடும் வெயில் ஒலியாகும்
    மௌனமாய் மலரும் விழிகளுக்குப்
     பார்வை ஒலியாகும்
    மௌன ஒலியைப் புரிந்திட – மனம்
    ஒருமைப்பட வேண்டும்


    அகல் விசும்பின் மௌனம்
     இடியெனக் கலையும்
    கார் இருளின் மௌனம் 
     விடியலில் கலையும்
    ஓவியன் மௌனப்பார்வை
     வண்ணக்கலவையில் கலையும்
    பூமியின் மௌனம் 
     பூகம்பத்தில் கலையும்
    கவிஞனின் மௌனம் 
     கவிதையில் கலையும்
    பொறுமை மீறிய மௌன வரிகள்
     பொங்கியே கரு சுமக்கும்

    வெள்ளி, 21 ஜனவரி, 2011

    விடை கொடு





                                                  இருமனம் கலந்த திருமணம். இல்லற வாழ்வின் தனிஅறம். உள்ளம் கலந்த உறவில் தன் இன்பம் கருதா சுவை அறம். வாழ்ந்து வளம் கண்டு வாழ்வைச் சுவைத்த வள்ளுவரின் வார்த்தைக் குவியலை அள்ளிப் பருகிய பகீரதன், தேடிப் பெற்ற தேன்மொழியும் பேச்சில் தேன் வடிப்பாள்ளூ அறிவில் வியக்க வைப்பாள்ளூ அழகில் பார்த்தறியா ரதியோவென அதிசயிக்க வைப்பாள். அனைத்துப் பெற்றும் பகீரதன் மனதை அணைத்தெடுக்கத் தெரியாது, அவன் அன்புத் தீயை அணைக்க மட்டும் தெரிந்தவள். தேன்மொழி உன் பாதங்களைப் பக்குவமாய்ப் பாதுகாக்கும் இந்த Nike பாதணி விலையோ அதிகம் ஆனாலும் என் மனதுக்குப் பிடித்தது. நான் வாங்க நீ அணிய மாட்டாயா? எனக்குப் பிடிக்காத Nike ஐ என் பாதம் தாங்காது. விட்டுவிடுங்க, இந்தப் பேச்சை. வைப்பாள் முற்றுப் புள்ளி. விதவிதமான நாகரீக அழகிகளாய் பொம்மைகள் ஆடைமாளிகையில் அவன் நெஞ்சிலே தூண்டிலைப் போட்டிழுக்க, தன் மஞ்சத்திற்குச் சொந்தக்காரி இடையில் தவழ ஓர் இரம்யமான ஆடையை அவள் உத்தரவின்றி வாங்கினான். வந்ததே உபத்திரவம். நான் கேட்டேனா? உங்கள் விருப்பத்திற்கு ஆடை அணிய வேண்டியது, நீங்கள். நானல்ல. நான் விரும்பியதை நான் கேட்பேன். அதையே நான் அணிவேன். அதை மட்டும் நீங்கள் வாங்கினால் போதும். தனக்கு உரியவளை உரிமையுடன் இரசிக்க அவனுக்கு முடியவில்லை. வாய்க்கு உருசியாகக் கொத்து ரொட்டி வீட்டில் கொத்துவோமா? பகிர்ந்து நாமிருவர் உண்போமா? கொத்தியது ரொட்டியை அல்ல. அவன் உள்ளக் கிடங்கில் உருவாகிய ஆசையை. எனக்குக் கொத்துரொட்டி செய்யத் தெரியாது. தெரிந்து கொள்ளும் ஆவலும் எனக்கு இல்லை. அதில் பெரிதாய் நாட்டமும் இல்லை. நீங்கள் விரும்பினால் செய்து சாப்பிடலாம் நான் வேறு ஏதாவது செய்து சாப்பிட்டுக் கொள்வேன். இப்போதும் ஆசைக்கு வெட்டு.

                           என் ஆசையை ஒரு தடவையாவது தீர்த்து வைக்க மாட்டாயா? உன் ஆசையை ஒரு தடவையாவது தியாகம் செய்ய மாட்டாயா? என்னில் நீ கொண்ட காதல் கானல் நீரா? நான் உன்னில் கொண்ட காதல் உன் அலட்சியப் போக்கால் தீராக் காயமாய் என் சித்தத்தைச் சித்திரவதை செய்யுமோ? இந்த வாழ்க்கைக்குத் திருமணம் தேவையா? பலகாலம் ஒன்றாய் வாழ்ந்து திருமண பந்தத்தில் இணைகின்ற ஐரோப்பியர்களிடம் கூட பாதிரியார், இருவரும் ஒருவருக்கொருவர் சிரித்து அழுது ஒன்று கலந்த வாழ்க்கை வாழ்வீர்களா?  எனக் கேட்டு ஒப்புதல் பெறுகின்றார். ஆனால் கலாச்சாரத்தைக் கண்ணாகப் போற்றும் உன்னிடம் இவ்வாழ்க்கையை நான் எதிர்பார்க்கவில்லை. என் தாலியைச் சுமக்கும் தாரம் நீ என் வாரிசைச் சுமக்கவும் தயங்குகின்றாய். உன் தாலியைத் தானமாய் வேறு பெண்ணுக்குத் தந்து விடு. அவள் என் வாரிசைச் சுமக்க வழிவிடு. அவள் என் நாமத்தைச் சுமந்து, என் சந்ததி காக்கும் தனையனைத் தந்திடுவாள். எனக்கு விடைகொடு.
            
                                    விட்டுக் கொடுத்தலும், இதயங்கள் மாறி ஒன்று கலத்தலும், தியாகத்தில் இல்வாழ்க்கையில் இன்பம் காண்தலும் இன்றி, ஓடும் புளியம்பழமும் போல் ஒடடியும் ஒட்டாமலும் வாழும் வாழ்க்கையில், உண்மை அன்பில் உறைந்திருப்பவர் உள்ளம் சுக்குநூறாக உடையும். வாழ்க்கையை இரசிக்க வாழ்க்கைத்துணை இணைந்து வரவில்லையானால், அவ்வாழ்க்கை நரக வாழ்க்கை. இவ்வாறு எத்தனை உள்ளங்கள், மனஅழுத்தம் என்னும் நோயுடன் மனிதர்களாய் உலா வருகின்றார்கள்.   


    புதன், 19 ஜனவரி, 2011

    நம்பினார் கெடுவதில்லை




    தன்னம்பிக்கை கொண்டு தடம்பதிக்கின்ற வேளை தடுக்குமோ விதி. நம்பிக்கை கொண்டு எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு காலடிக்கும் இடையூறு வரும்போது எதிர்பார்க்காது ஒன்று நடந்து விட அதன் காரணம் புரியாது விழிக்கும் போது விதியை நோக்குகின்றோம். நம்பிக்கையுடன் நூற்றுக்கு நூறு வீதம் நம்புகின்ற ஒரு செயல் தடைப்படின் விதியை நம்புகின்றோம். விதியை மதியால் வெல்லலாம் என்னும் ஒரு நம்பிக்கை கொண்டு தொடருகின்றோம். 
                மண்சோறு விளையாடிய தாய் மண்ணை விட்டு புகைப்படத்தில் அறிமுகமாகிய புதுமுகத்திற்குக் கழுத்து நீட்டி அந்நிய நாட்டில் வாழ வரும் பெண் கொண்டது, நம்பிக்கையே. மொழி, கலாச்சாரம், மனிதர்கள் அனைத்தும் புதிது. ஆனாலும், அந்நிய நாடு பற்றி எழுதப்படாத வெள்ளைக் கடதாசியாய் நம்பிக்கையென்னும் துடுப்புக் கொண்டு களம் புகுகின்றாள். வாழ்கின்றாள். ஆள்நடமாட்டமில்லா வான்வெளியில் விமானியை முற்றுமுழுதாக நம்பி ஆகாயத்தில் நாம் பறக்கவில்லையா? நம்பிக்கை இல்லாதவன் வாழ்வில் நிம்மதிதான் காண்பது எங்கே. முடியாது என்று துவண்டாலும் மீண்டும் முயற்சிக்கத்தானே வேண்டும். பூமிப்பந்தில் வந்து விழுந்து நாம் எழுந்து நடந்தேயாகத் தான் வேண்டும். விதியை எண்ணி வீணாய்க் காலத்தை விரயமாக்கும் வீணர்களாய் நாம் வாழலாமா?
                ''நம்பினார் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு' எனப்படுவது, இறைவனை நம்பினார் கைவிடப்படார் என்பதே. ஆனால், அதன் உன்மை தத்துவம் உருக்கொள்வது, என்னால் முடியும் என நாம் திடமாகக் கொள்ளும் எண்ணப்பதிவு ஆழ்மனதை அச்சடித்தது போல் ஆட்கொள்ளுகிறது. ஆட்கொண்ட எண்ணம் அகலவிரிகின்றது. பிரபஞ்சசக்தியுடன் தொடர்புகொள்கின்றது. அதை அடைவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. எனவே எல்லாம் ஆவது மனதாலேயே. வில்லியம் ஜேம்ஸ் கொண்ட நம்பிக்கை எவரெஸ் சிகரத்தைத் தொட்ட முதல் மனிதனாய் முகம் காட்டியது. நயாகரா அருவி மீது குறுக்கே நடந்தார், சார்ள்ஸ் பிளான்டின். அவர் கொண்டது தன்னம்பிக்கை. நம்பிக்கை என்பது வாழ்வில் மரணிக்க விடாமல் மனிதனை வாழவைக்கும் சக்தியுள்ளது. துவண்டு விடாதீர்கள். சோதனை மேல் சோதனை ஏற்படினும் வாழும் மண் சோதனைக் களமாயிடினும் நம்பிக்கை என்னும் துடுப்புக் கொண்டு வாழ்க்கைப் படகை வழிநடத்துங்கள்.

            பாரப்பா இவ்வுலக பிரச்சினைகள்
             பகிரப்பா விதியென்ற சிறப்புப் பெயரால்
             தேடப்பா நம்பிக்கை என்ற ஆயுதத்தை – எதிர்நீச்சல்
             போடப்பா வாழ்வின் சிக்கல்களை

    திங்கள், 17 ஜனவரி, 2011

    மாற்றங்கள்

                                  மாற்றங்கள்                                                                     

    கல்லுங் கத்தியாய் வாளும் வான்குண்டாய் 
    மனிதன் கண்டது மாற்றம்
    நடையாய் நடந்தின்று நாடு கடந்து
    படையாய் தொடர்வது பறக்கும் மாற்றம்
    மாற்றங்கள் தொடர்கிறது உலகில் - மனிதன் 
    மனமாற்றம் அடையத் துடித்தாலும் 
    அழியவில்லை ஆரம்ப ஆச்சாரம்
    துடிப்புடன் சொல்பவரும் சொந்தத்தில் மாற்றமில்லை
    எடுப்புடன் வருபவரும் பழைமையை எடுத்தெறிய மனமில்லை
    மாற்றங்கள் காண வேண்டும் - ஐயோ
    மாற்றங்கள் காண வேண்டும் யாம்

    புத்தி சொல்லப் போபவரை புரிந்துணர வேண்டும் - பழம்
    புத்தியைக் கத்திபோல் வெட்ட வேண்டும்
    பூவாய் மணக்க வேண்டும் மாற்றம்
    இசையாய் இனிக்க வேண்டும் மாற்றம்
    இல்லத்தில் இருந்து உள்ளப் படுக்கையில் 
    உறைய வேண்டும் மன மாற்றம்
    நல்லதைத் தேடி நாம் வாழப் பழக வேண்டும்
    செல்லும் இடமெல்லாம் சிந்தனை தேடவேண்டும்
    நாலுபேரோடு நாமும் பழகி நல்லவராய் நாம் வாழ
    மாற்றங்கள் காண வேண்டும் - ஐயோ 
    மாற்றங்கள் காண வேண்டும் யாம் 

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...