• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    செவ்வாய், 20 ஜூன், 2017






    காலம் எனும் காற்று எனைப் புரட்டிப் போட்டாலும்
    வாழ்க்கை எனும் சூழல் எனை வதைத்து நின்றாலும்
    தமிழ் எனும் கைத்தடி கொண்டு தளராத மனம் கொண்டு
    எழுத்தால் என்றும் நிமிர்ந்து நிற்பேன் என்று கூறி


    அம்பிகையைச் சரணடைந்தால் அதிக வரம் பெறலாம் 


    என்னும் சத்திய உண்மையைச் சாற்றிட வந்தேன்

    அகிலாண்ட ஈஸ்வரியே ஆதிபரா சக்தியே 
    அகிலமெல்லாம் ஆட்சி செய்யும் அன்னை பராசக்தியே
    அண்டமெல்லாம் புகழ் பரப்பி அரசாள வந்தவளே – என் 
    நாவினிலே வந்தமர்ந்து நல் ஆசி தாருமம்மா

    கவியரங்குத் தலைமைக்கும் கவிஞர்குழாம் மூவர்க்கும் 
    கவிபருக வந்தோர்க்கும் காமாட்சி பக்தர்க்கும் 
    சிரந்தாழ்த்தி வணங்குகின்றேன் சிந்தையுள் நுழைகின்றேன்
    வரந்தந்தருளும் மாதேவி அடிபணிந்து வணங்குகிறேன்.

    மரபுக் கவியால் இங்கு மயக்க நான்வரவில்லை
    உணர்வுக் கவியால் உங்கள் உள்ளம் தொடவந்தேன்
    மதம் கொண்ட மதம் எனக்குப் பிடிக்கவில்லை
    இதம் கொண்ட மதத்தால் இதயங்கள் மீட்க வந்தேன்

    அகிலாண்ட நாயகியின் திருவிழா காட்சி - இங்கு
    அழகுத் தேர் பவனியின் அற்புதக் காட்சி
    காமாட்சி பக்தர்கள் மனமெங்கும் ஆட்சி 
    சிவஸ்ரீ பாஸ்கரகுருக்கள் மனதிலும் மகிழ்ச்சி

    அற்புதங்கள் தொடரட்டும் ஆன்மீகம் நிலைக்கட்டும்

    தாயே! அம்பிகையே!

    என்சொல்லும் செயலும் என்கருத்தும் கனிவும்
    என்கண்ணின் ஒளியும் என்காட்சிப் படிவும்;
    என்எண்ணக் கருவும் எடுத்தாளும் கவியும்
    எதிலும் நிறைந்தாய்தாயே என்னுள் அமர்ந்தாய் நீயே

    வீசும் காற்றும் வீழும் மழையும் 
    உதிக்கும் கதிரும் உறையும் பனியும்
    எரிக்கும் தணலும் அணைக்கும் நீரும் 
    விரிந்த கடலும் அடர்ந்த விருட்சமும்

    அணுவும் கருவும் ஆற்றல் உலகும் 
    விண்ணும் மண்ணும் வேதப் பொருளும் 
    எண்ணும் எழுத்தும் கண்ணின் ஒளியும்
    உள்ள அனைத்தும் உனக்குள் அடக்கம்

    விஞ்ஞானத் தோற்றத்தால் அஞ்ஞானம் அகற்றினாய் 
    விளக்கங்கள் வெளிப்படுத்தும் வினைகளையும் ஏற்றாய்
    விளக்கமில்லா மானிடரும் கலக்கமில்லா தேற்றார்
    விசாலாட்சி யுன்னருளால் விக்கினங்கள் விலக்கிட்டார்

    சந்தனம் சாத்தியே சாந்த சொரூபியானாய்
    அறுகம்புல் உண்ட பசுச்சாணத்தின் விபூதிதரும் 
    நல் அதிர்வுகளின் பெருமையினை உன்
    உடல் குளித்து விளக்கம் சொன்னாய்.

    நகை அணிந்தாய் நல்லாரம் புனர்ந்தாய் 
    நகையணியும் இடங்காட்டி குத்தூசி மருத்துவத்தை
    நயமாகக் காட்டினாய் தாயே! நாமணிய வைத்தாய் நீயே
    நோய்க் குறையின்றி எமை வாழவைத்தாய் நீயே

    காசியிலே விசாலாட்சி மதுரையிலே மீனாட்சி 
    காஞ்சியிலே காமாட்சி ஜேர்மனியிலும் உன்னாட்சி
    காமாட்சி உன்னருளால் பக்தர் குழாம் சூழ்ந்தாட்சி
    காலமெல்லாம் ஐரோப்பா உன்னிடமே அடைக்கலமாட்சி - இங்கு

    கட்டுக்கடங்கா ஆசை தொட்டுத் தொடர்கிறது
    மட்டுமரியாதை தெரியாமானிடம் தட்டுத் தடுமாறுகிறது
    வெட்டென்றும் குத்தென்றும் நாடே கட்டுப்பாடிழக்கிறது - தாயே
    சட்டமும் காவலும் கைகட்டி நிற்கிறது.

    பொய்யுங்களவும் வஞ்சனையும் புகுந்திட்ட பூமியிலே
    தெய்வசக்தியைப் பாடாவிட்டால் சஞ்சலங்கள் தீர்ந்திடாது
    சக்தியுனைத் திடமோடு தஞ்சமென சரணடைந்தால் 
    வந்தவினை தீர்ந்துவிடும் எண்ணமெலாம் ஈடேறும் 

    ஆட்டையும் மாட்டையும் பலி கொடுப்பார் – தாய்
    ஆருயிர் கேட்பதாய்; கதை அளப்பார்
    அருளுங் கரங்கள் உதிரம் அருந்துமென
    அற்பமனிதன் அறிகிறான் ஆருயிர்கள் அழிக்கிறான்.

    ஆணவம் ஆத்திரம் கொன்று விடு
    ஆசைகள் அறியாமை அழித்து விடு
    அன்னையின் அடிகளில் பலி இட்டு 
    அன்னையின் அருளினைப் பெற்று விடு

    உண்மை ஒளி ஓங்கிட வரம் கேட்பாய்
    உள்ளக் கள்ளச்சிந்தை கரைந்திட வரங்கேட்பாய்
    வையகம் ஓங்கிட வரம் கேட்பாய்
    பொய் வேசங்கள் மறைந்திட வரங்கேட்பாய்

    சக்தியைப் பாடிடும் வாயாலே கொடுஞ்
    சொற்களை பேசிடா வரங்கேட்பாய்
    நித்தமும் ஜெயித்திடும் மந்திரத்தால் - கெட்ட
    நிந்தனை வென்றிடும் வரங்கேட்பாய்  

    செய்கையும் செயலுமே நலம் பெற்றால் - தாய்
    செவ்விய வரமதும் சேர்ந்திடு மென்
    சத்திய உண்மையைச் சாற்றிட வந்தேன்
    உத்தம மனிதா! உணர்ந்திடு நன்றாய்

    நீக்கமறுந் துயர் நீங்கத் துதித்தேத்தி
    போக்கரியவிடர் புவியகல புஷ்பம் சாற்றியே
    நோக்கரிய புண்ணியம் புரிந்துலகில் மேலோங்கின்
    காத்தருளும் தேவி காட்சி தந்தருள்வாள். 

    ஜேர்மன் நகர் அமர்ந்துயர்ந்தோர் தொழவிளங்கி
    சேர்ந்தொலிநீர் ஞாலத் திருலகற்றும் - அம்பிகையே 
    ஈங்குன் பெருமையினைச் சாற்றவெனக் கருள்புரிந்த
    பாங்கொளி தேவி பாதந்தொழுதேன்.





    1 கருத்து:

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...