உயிர் வாழ உள்ளத்து உணர்வுகளே உத்தமமானது. இல்லையென்றால் வாழ்தல் என்பது ரொபோட்டோக்களின் அசைவாகவே அமையும்.
உயிர்களின் உணர்வுகளுக்கு உரமூட்டுகின்ற காதலென்னும் பொதுவான மொழியானது, இனம், கடந்து உயிர்களின் வாழ்க்கைக்கு அர்த்தத்தைத் தருகின்றது. இது மனிதனின் ஆதித் துடிப்பு. இது மின்னலாயும் வரும், வாழ்நாள் முழுவதும் தொடரும் தீபமாயும் அமையும். ஒருவரின் குறைகளை நிறைகளாய்க் காண்பதும், அவரின் பலவீனங்களை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக அவருடன் வாழ்வதும் காதலிப்பவர்களால் மட்டுமே முடியும்.
மிருகமாய்த் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய மனித இனத்துக்கு ஏற்படும் காதல் உணர்வானது பிற உயிரினங்களை விடப் புனிதமானது என்று மட்டும் கூற முடியாது. அதேபோல யாருக்கு யாரில் காதல் ஏற்படும் என்பது யாராலும் கூற முடியாது. அக்காதல் எவ்வளவு காலம் நீடித்திருக்கும் என்றும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. உள் உணர்வுகள் ஏற்படுத்துகின்ற பிரதிபலிப்புக்குக் காரணம் தேடாது புரிந்துணர்வின் பால் மனத்தைச் செலுத்துவதே தற்கால பண்பாட்டம்சமாக இருக்கின்றது.
உடல் அழகில் ஆரம்பித்து ஆன்ம அழகை நோக்கி உயர்த்தும் சக்தி காதலுக்கு உண்டு என்று பிளேட்டோவும், ஒருவர் மற்றவர்களுக்காக வாழும்நிலை காதலுக்கு உண்டு என்று அரிஸ்டோட்டிலும், அன்பும் காதலும் குழந்தைப் பருவ அனுபவ நீட்சி என்று சிக்மண்ட் ஃப்ராய்ட்டும் கூறினார்கள்.
காதலை இலக்கியங்கள் அற்புதமாக படம்பிடித்துக் காட்டியுள்ளன. “யாயும் ஞாயும் யாராகியரோ…” என்ற வரிகளில் காதல் சமூக எல்லைகளை உடைப்பதைப் பார்க்கிறோம். சிலப்பதிகாரக் கண்ணகியின் காதல் கணவன் மீது கொண்ட பக்தியும், நீதிக்கான போராட்டமும் ஆகும். கம்பராமாயண ராமன் – சீதை காதல் தியாகத்தின் உச்சம். ஷேக்ஸ்பியரின் ரோமியோ - ஜூலியட் சமூக விரோதங்களை எதிர்த்து உயிர் துறக்கும் காதல். டோல்ஸ்டாயின் அன்னா கரெனினா வில் வரும் காதல் சமூக கட்டுப்பாடுகளுக்குள் சிக்கும்போது உருவாகும் வலியை எடுத்துக் காட்டுகின்றது.
வாழ்க்கையில் பிடிப்பை ஏற்படுத்துகின்ற, அடிப்படையான, ஆச்சரியப்பட வைக்கும் காதலின் பிரதிபலிப்புக்களை மிருகங்கள், பறவைகளின் வாழ்க்கையிலும் காணலாம்.
தன்னுடைய குடும்பத்தைத் தனியே விடாது குடும்பமாகப் பயணிக்கும் யானைகள் பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கும் போதும் குடும்பமாகச் சீரழிப்பதைக் கண்டிருக்கின்றோம். குட்டியை அணைத்துக் கொண்டு கொப்பு விட்டுக் கொப்புத் தாவுகின்ற குரங்குக்குக் கூட்டங்கள் தாய்மையின் தியாகமான காதலை உணர்த்துகிறன, இணை பிரிந்தால் உயிர் வாழாமை மட்டுமல்லாது இரையுண்ணாது காலங்கடத்தும் பறவைகளும், வளர்த்த எசமானைக் கண்டதும் வாலாட்டி மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் நாயும், எசமானில் பாசம் கொண்ட மாடும் காதலுக்குச் சாட்சிகளே.
ஒரே துணையுடன் வாழ்நாள் முழுவதும் அன்னப்பறவை, புறா, ஆல்பட்ராஸ், பென்குயின், கழுகு, நாரை ஆகிய பறவைகள் வாழுகின்றன. அன்னப் பறவைகளினுடைய இரண்டு கழுத்துக்களையும் இணைத்துப் பார்த்தால் காதலின் வடிவம் இதயம் போன்றிருக்கும். நற்றிணையிலே
இணையொடு நீங்கா அன்னம் போல
அணையா அன்பு உடையாள்”
அன்னப்பறவைகள் எப்போதும் துணையைப் பிரியாது சேர்ந்து வாழ்வது போல என தலைவி தலைவன் இடையிலான பிரிக்கமுடியாத காதல் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
‘’குருவி இணை போலக்
குறைவு இன்றி வாழ்க”
- குறந்தொகை -
குருவிகள் சிறிய பறவைகள் என்றாலும், இணைபிரியாத குடும்ப வாழ்க்கை அவற்றின் சிறப்பு எனக் கூறுகிறது.
புறா துணையை இழந்தால் நீண்ட காலங்கள் துயரோடே காணப்படும்.
“துணை இழந்த புறா போல
துயருறும் என் நெஞ்சம்”
- நற்றிணை –
பென்குயின்கள் தங்கள் துணையை மிக அன்புடன் பராமரிக்கின்றன. குறிப்பாக எம்பெரர் பென்குயின்களில், ஆண் பென்குயின் முட்டையை கால்களில் வைத்துக் கொண்டு கடும் பனிக்காலத்திலும் பாதுகாக்கிறது. இது தியாகம் மிக்க காதலின் சின்னமாகும்.
மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பல காதல் பாடங்கள், இயற்கையின் சிறு பறவைகளிடமே மறைந்துள்ளன.
அதேபோல ஓநாய்கள், யானை, நாய், குதிரை, பீவர், சிம்பாஞ்சி, டால்பின், ஆகிய விலங்குகள் துணையின் காதலை வாழ்நாள் முழுவதும் விட்டுக் கொடுக்காது. வாழ்நாள் முழுவதும் ஒரே துணையுடன் வாழும் விலங்குகளாக அறியப்படுகின்றன.
யானை தன்னுடைய துணையுடன் மட்டுமன்றி குட்டிகளுடனும் உறவுகளுடனும் தீராத காதலுடையது. உறவு யானை இறந்தால் அதைச் சுற்றி நின்று துயரப்படும் தன்மையானது அதனுடைய காதலை எடுத்துக்காட்டுகின்றது. ஆண்–பெண் ஓநாய்கள் இணைந்து குடும்பத்தை உருவாக்கி, குட்டிகளை பாதுகாப்பதிலும் வளர்ப்பதிலும் சம பங்கு வகிக்கின்றன. குடும்பத்திற்கான இந்த ஒற்றுமை உண்மைக் காதலின் அழகான வடிவமாகும். குதிரைகள் தங்கள் துணையுடனும் பராமரிப்பாளருடனும் ஆழமான பாசத்தைக் கொண்டிருக்கின்றன. பிரிந்தால் மனஅழுத்தம் அடைவதும், மீண்டும் சந்திக்கும் போது மகிழ்ச்சியுடன் காணப்படுவதும் குதிரைகள் தம்முடைய காதலை வெளிப்படுத்துகின்ற அம்சங்களாகின்றன. ஆண், பெண் பீவர்கள் இணைந்து குடியிருப்புகளை கட்டி, குட்டிகளை வளர்க்கின்றன. இணைந்த உழைப்பும் குடும்ப ஒற்றுமையும் உண்மைக் காதலின் அடையாளம் என்பதை உணர்த்துகின்றன. சிம்பாஞ்சிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களிடையே ஆழமான பாசத்தை வெளிப்படுத்துகின்றன. காயமடைந்த உறுப்பினர்களை கவனித்தல், குட்டிகளை அன்புடன் பராமரித்தல் ஆகியவை கருணைமிக்க காதலை எடுத்துக்காட்டுகின்றன. டால்பின்கள் காயமடைந்த தோழர்களை நீர்மேலே தூக்கி மூச்செடுக்க உதவுவதைப் பார்க்கும் போது சமூக உறவுகளுக்கும் காதலுக்கும் கொடுக்கின்ற முக்கியத்துவத்தை அறியக்கூடியதாக இருக்கின்றது.
காதல் பார்வை, ஈர்ப்பு மானில் உண்டு என்பதை ஆண் மானின் பார்வை பெண் மான்மீது காட்டும் மென்மையான காதலைச்
“பெண்மான் நோக்கின் பெருங் காதல்” என்னும் வரிகள் எடுத்துக் காட்டுகின்றன.
இன்றைய காதல் வேகமானது. ஒரு மெசேஜில் தொடங்குகிறது. ஒரு பார்வையில் இல் முடிகிறது. சமூக வலைதளங்கள் காதலை மிக அருகில் கொண்டுவந்தன. அதே நேரத்தில் அதன் ஆழத்தை சுருக்கின. பல இடங்களில் காதல் உடல் ஈர்ப்பாக, உடனடி தேவையாக, நுகர்வுப் பொருளாக மாறுகிறது. ஆனால் இதற்கிடையிலும், புரிதலோடு, பொறுமையோடு, ஒருவருக்கொருவர் இடம் கொடுத்து காதலோடு வாழும் மனிதர்களும் இருக்கிறார்கள். அவர்களிடம்தான் காதல் இன்னும் உயிரோடு இருக்கிறது.
உண்மைக் காதல் என்பது கை பிடிப்பதில் இல்லை, வாக்குறுதிகளில் இல்லை, படங்களில் இல்லை. ஒருவரின் மௌனத்திலும் அருகில் நிற்பது, வலியிலும் விட்டு விலகாமல் இருப்பது, காலம் மாறினாலும் மனம் மாறாது இருப்பது. காதல் இல்லாத வாழ்க்கை இதயம் துடிக்காத உடலைப் போன்றது. காதலின் வடிவங்கள் மாறலாம். காதல் மாறாது. அது உயிரைவிடப் பெரிதானது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.