• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    செவ்வாய், 1 மார்ச், 2011

    கூட்டை விட்டு வெளியே வாருங்கள்



    தம்மைச் சுற்றி ஓர் கோட்டை வரைந்து அதன் உள்ளே வாழ்ந்து கொண்டு வெளியே வர வழியின்றித் தவிக்கின்றார், சிலர். இது தான் வாழ்க்கை எனத் திட்டம் தீட்டுகிறார். வாழ்வின் விடியலைச் சுற்றியுள்ள கோட்டினுள்ளே சுற்றிச் சுற்றித் தேடுகிறார். செக்கிழுக்கும் மாடு போல் குறித்த இடத்திலேயே சுற்றி வந்து தரிக்கிறார். வலைக்குள்  அகப்பட்ட மீனால் நீந்த முடியாது. பெட்டிக்குள் அடைக்கப்பட்ட நாகத்தால் சீறமுடியாது. குகைக்குள் உறங்கும் சிங்கத்தால் சீற்றம் கொள்ள முடியாது. எமக்குள்ளே தூங்கிக் கொண்டிருக்கும் திறமையைத் தட்டி எழுப்பி வீறு நடை போடச் செய்தால், எந்தக் கூட்டையும் தாண்டி வெளிவரும் உத்வேகம் தோன்றும். மதங் கொண்ட யானையை அடக்கும் அங்குசம் போல், மனத்துள் தாழ்வு மனப்பான்மை என்னும் அங்குசம் வெற்றிப் பாதையை நோக்கி இலட்சியத்துடன் செல்லும் மனதை அடக்கும். அதை அழித்து எடுக்கும் முயற்சிகள் வெற்றி காண்பது நிச்சயம். 
                   பெண்ணடிமை உடைக்கப் பாரதி ஏடெடுக்கவில்லையானால், அடிமை விலங்கை உடைக்கப் பெண்கள் முன்வந்திருப்பார்களா? அடிமைப்படுத்தப்பட்ட பெண் தன் ஆக்ரோஷத்தை ஆணித்தரமாக வெளிப்படுத்த முடிந்திருக்குமா? '' உன்னையே எண்ணிப்பார் || என்று சோக்ரடீஸ் சொன்னது போல் உங்களுக்குள்ளே என்ன இருக்கின்றது எனத் தோண்டிப்பாருங்கள். உள்ளத்துள் உறங்கிக் கிடக்கும் உண்மைகளை, அநுபவங்களை, தத்துவங்களைக் கொட்டித் தீருங்கள். பெரிய வனாந்திரத்தையே கொழுத்திவிடும் தீக்குச்சி போல் எழுத்தாணி கொண்டு மடமையை நீக்குங்கள். குறுகிய மனப்பான்மையுடன் கூனிக் குறுகி நிற்காது, பரந்துபட்ட மனத்துடன் பலவற்றைச் சிந்தியுங்கள். கனி தரும் விருட்சங்களாக வியாபித்திருந்து வேலி போட்டு வாழாது, வேலியைத் திறந்து விடுங்கள். கனிகள் பலரின் பசி தீர்க்கும் உணவாகட்டும். அவர்கள் உண்ட களிப்பில் நீங்கள் இன்பங் காண்பீர்கள். உங்களை இரு கரம் கொண்டு வரவேற்கக் கணனி காத்திருக்கின்றது. அந்த இலத்திரனியல் உங்கள் இரும்பு வரிகளையும் பொன்வரியாக்கிக் காட்டும்.                                          
                                              

    1 கருத்து:

    1. உள்ளத்துள் உறங்கிக் கிடக்கும் உண்மைகளை, அநுபவங்களை, தத்துவங்களைக் கொட்டித் தீருங்கள். //

      நல்ல ஊக்கமான பதிவும் எழுத்தும்..

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...