• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 5 மே, 2012

    இதயத்து இமையத்தை இணையத்தில் இணைக்கின்றேன்




    ரோஜா, நந்தியாவட்டை, செவ்வந்தி, ஓக்கிட்ஸ், அந்தூரியம் என்னும் வகைவகையான மலர்கள் நிறைந்த வீட்டுப் பூங்காவின் நடுவே காலைச்சூரியன் கரங்கள் மண்ணில் முத்தமிடும் பொழுது மஞ்சள் முகத்தின் நடுவே மங்கலக்குங்குமப் பொட்டிட்டு பின் தூங்கி முன் எழும் மலராய் திருமதி பரமேஸ்வரி என்னும் மலர், காலைவேளை கண்முழிப்பது நந்தவனத்தினுள். கரங்களால் அம்மலர்களை ஒரு தடவை ஸ்பரிசம் செய்தபின்புதான் தன் கடமைகளை மேற்கொள்வார்.
                
    சித்திராபௌர்ணமி என்னும் இன்றைய நாளிலே என்னை உலகுக்களித்த தெய்வத்தை வரிகளால் வந்தனை செய்ய ஆவல் கொண்டேன். இயற்கை எழில் கொஞ்சும் இலங்கை மண்ணின் கிழக்குப் பகுதியின் ஏர்ஊரில் முத்திரை பதித்த வேலுப்பிள்ளை பரமேஸ்வரி காதல் தம்பதியினர், இல்லறம் இனிதே நடைபெறுவதற்கு உறுதுணை புரிந்தது, இல்லாளின் நல்லறமே. ஏறுபோல் பீடு நடை கணவன் கொள்ள மனையாள் மாட்சியே காரணம். வீடுவசதியற்;றியிருந்த மக்களை, இலங்கையில் வடமுனை, புனாணை போன்ற நகரங்களில் குடியேற்றம் செய்து குடியமர்த்தவும், தாம் வாழும் ஊர்மக்கள் கல்வி வசதி வேண்டி கல்விக்கூடம் அமைக்கவும், ஆலயங்கள் சிறந்த முறையில் நடைபெறவும், வேலையின்றி வாடும் மக்களுக்கு வேலைவசதி செய்து கொடுக்கவும் என வாழும் ஊர்மக்கள் வசதிக்காய் தன்னை அர்ப்பணித்த என் தந்தை, வீடு வரும் போதெல்லாம் இன்முகத்துடன் வரவேற்று வலக்கரமாய் வாழ்ந்திறந்த அந்தக் குலவிளக்கை இலக்கியப்பரப்பில் குறிப்பிடாது செல்ல என் மனம் இடம் தரவில்லை. முத்தான செல்வங்களை உலகுக்கீன்று, முறையாய் வளர்த்துத் தன் கடமையனைத்தும் முடித்துக் கடன் தீர்க்க வழிவிடாது கடைத்தேறிய எனது தாய், ஆங்கிலத்தில் குழந்தையை அழைக்கும் அற்புதமான சொல்லால் இறக்கும் வரை ஆயிரம் தடவை என்னை அழைக்கும் ஒலி என் செவிகளில் இன்றும் கேட்கும். அற்புதமாய் சமைத்தாலும் அழகான உணவகத்தில் உண்டாலும் அவர் சமையல் கைப்பக்குவம் எனக்கும் வரவில்லை நான் எங்குமே கண்டதும் இல்லை. அச்சுவையைப் பெறுவதற்கு நாளும்தான் ஏங்குகிறேன் என்றுமே திரும்பக் கிடைக்காது என்று என் உள் மனம் அலுத்துச் சொல்கின்றது. இறுதி நொடியில் அவர் ஊட்டிய சோயாக்கறியின் அமுதச்சுவை எனக்கு எதிலுமே கிடைத்ததில்லை. அவர் அழகைக் காண்பதற்கு அனைவரிடமும் எத்தனிக்கின்றேன். ஆனால், அத்தனையும் பொய்மையாகிப் போகின்றன. அவர் ஆர்வமும் ஆற்றல்களும் எண்ணிலடங்காதவை. முடியாது என்பதை எள்ளளவும் புரியாத என் தாய், இயமனை வெல்ல முடியாது என்பதை இறுதியில்தான் புரிந்திருப்பார். 

    என்னை விட்டு வெகுதூரம் சென்று 17 வருடங்கள் பறந்துவிட்டன. என் திருமணத்தின் 23 நாள்களின் பின் ஒரு நாள் சந்தோஷவானில் என் வீட்டார். அமோகமாக விழாவை அற்புதமாய் நடத்திவிட்ட ஆனந்தக் களைப்பில் இருந்தனர். அன்றே என் தாயும் 58 வயதிலேயே தன் கடமை முடிந்ததாய் கருதிவிட்டாரோ. நோயில் படுக்கவில்லை. நொந்து அழுததில்லை. வேதனைப்பட்டதில்லை. விடுதலையாவதை இம்மியளவும் தெரியப்படுத்தவில்லை. வழமை போல் ஒரு கைப்பிடி உணவை என் வாயினுள் திணித்த போது தொலைபேசிஅழைப்பு. என் கணவர் திரும்பவும் நாடு வந்தடைந்த செய்தியை அறிய தொலைபேசியை நான் நாடினேன். திடீரென மூளையினுள் ஒரு மெல்லிய இரத்த ஓட்டம். தெரிந்ததை தெரியப்படுத்தினார். சிறிது திக்கு முக்காடினார். வைத்தியரை வரவழைத்தோம். இரத்தஅழுத்தத்தின் அதிகரிப்பை அறியச்செய்து வைத்தியசாலை அனுப்பிவைத்தார். வாகனத்தினுள் வார்த்தைகள் அடங்கிவிட்டன. வைத்தியசாலையினுள் உயிரும் அடங்கிவிட்டது. அவர் இழப்பு வாழ்க்கையின் அர்த்தம் போதித்துவிட்டது.என் வாழ்வுக்கு நான் போட்டது, பிள்ளையார் சுழி. அவர் வாழ்வுக்கு அவர் போட்டது முற்றுப்புள்ளி. அவர் போட்ட அர்ச்சதையில் நான் வாழ்கின்றேன். ஆனால், அவர் விட்ட வெற்றிடத்தை நிரப்ப ஆளின்றி கலங்குகின்றேன். அமைதியான அம்மாவின் இழப்பு. ஈடுசெய்யவொண்ணா பேரிழப்பு. உறவுகள் வரலாம் போகலாம். பெற்றோர் என்னும் உறவு என்றுமே இமயத்தில் வைத்துப் போற்றப்படவேண்டிய உறவு.

             அலைகளின் மெய்மையை அடித்து நிரூபிப்பவள் யான். அந்த அலைகளில் நம்பிக்கை கொண்டவளாய், வானிருந்து என்னை வாழவைக்கும் அவர் செவிகளுக்கு வாய் அலை மூலம் என் வரிகளை அர்ப்பணம் செய்கின்றேன். என் மனக்கடலுள் மூழ்கியிருந்து நித்தம் நித்தம் ஆறுதல் தந்துதவும் ஆற்றலின் அற்புதத்தை வியக்கின்றேன். என் செயல்களில் அவர் மரபணுக்களின் மகிமை கண்டு மகிழ்ச்சி கொள்கின்றேன். என் இரத்த ஓட்டம் நிற்கும்வரை தினமும் அவர் நினைவிலேயே வாழுவேன்.


     உலகெங்கும் அன்னையர் மயம் - அதில்
    உருவாகும் அன்பெனும் பாடம்
    கருவாகி உருவான பின்னும்
    கருவறை போல் காக்கும் பாசம்
    கடமை முடித்து கடைத்தேறினால்
    கலங்கி நிற்கும் கண்மணிகளில்
    கலக்கம் தீர்க்க நிழற்படமாய்
    கண்சிமிட்டி ஆறுதல் தரும்.
    விதியென்றே விளக்கிவிட முடியாது - இறைவன்
    சதியென்று சாடிவிட முடியவில்லை.
    எதுவென்ற புரியாத நிலையில்
    எதிலும் அவர் முகம்
    பூக்களில் காண்கின்றேன்
    ஆடைஅலங்காரங்களில் காண்கின்றேன்.
    சுவையுள்ள உணவுகளில் காண்கின்றேன்.
    சுகாதாரமான வீட்டில் காண்கின்றேன்.
    அறிவுரையில் காண்கின்றேன்.
    ஆராய்ச்சியில் காண்கின்றேன்.
    எதிலுமே காண்பதனால்
    என்னால் முடியவில்லை 
    என்னிலிருந்து அவரைமீட்க.





    ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

    தெவிட்டா இன்பம்


    தெவிட்டா இன்பம்



    என்னைத் தொட்டுச் செல்லும் மேகம் 
    எதையோ சொல்லி மறைந்து சென்றது.
    தமிழும் இனிதே தமிழ்க் கவியும் இனிதே
    கற்பனை இனிதே காட்சியும் இனிதே
    கண்கள் மூட மறுக்கிறது. 
    காட்சிகள் பரந்து கிடக்கிறது.
    ஆயிரம் விழிகள் இருக்க வேண்டும் 
    ஆண்டவன் படைப்பை அநுபவிக்க,
    ஆயிரம் வாய்கள் இருக்க வேண்டும்
    இயற்கையின் அழகை வர்ணிக்க.

    காற்றும் என்னைத் தடுக்கவில்லை,
    மழையும் என்னை விரட்டவில்லை.
    தாளம் போடும் குடையின் துளிகள்
    கற்பனை விரிக்கத் தளமும் ஈன்றது.
    காற்றும் மரமும் கதைகள் பேசும் 
    கானக் குயில்கள் கவிகள் பாடும்
    வானும் மலையும் உரசிக் கொள்ளும்
    வனப்பினைப் பகர வாய்கள் போதா
    வகைவகைப் பச்சைக்கம்பளம் விரித்ததாய்
    பரந்து கிடந்த நிலத்தினில் புரண்டேன் 
    தமிழால் துள்ளிப் பாடம் சொன்னேன்
    தரித்து மெல்ல மீண்டும் வந்தது
    மலைகள் கற்ற தமிழின் பாடம்
    மீண்டு வந்து இதயம் நுழைந்தது

    இறைவனை மெல்ல வரவழைத்து - அவன் 
    காதனில் ஒருமுறை கேட்க வேண்டும்
    மனிதனைப் படைத்ததும் ஏன் இறைவா?
    இயற்கையைப் படைத்ததும் ஏன் இறiவா?
    மனிதனைப் படைத்தது நிஜமானால் 
    இயற்கையை இரசிக்கப் படைத்தாயா? - இல்லை
    இயற்கையை அழிக்கப் படைத்தாயா?
    மரங்களின் அழகை இரசிக்காமல்
    தரித்து நல் இன்பம் காண்பான்
    மலையின் அழகை இரசிக்காமல் 
    குடைந்து மெல்லக் கல் எடுப்பான்
    சுத்தக்காற்றை சுவாசிக்காது 
    தொழிற்சாலைகள் கட்டித் துயர் தருவான்
    பாடும் குயிலை இரசிக்காது 
    பார்வைக்கு வைத்துப் பயன்பெறுவான்
    காட்டுமிருகம் வேட்டையாடி 
    கூட்டில் கொண்டு அடைத்து வைத்து
    காசு உழைத்துக் களித்திருப்பான்

    எத்தனை அழகு இயற்கையில் இருக்க
    இவற்றிற் கெல்லாம் சமாதிகட்டி
    தாய்ச்சியில் பொரியும்மீன் எடுத்து
    தாளிதம் செய்த குழம்பில் விட்டு
    அவித்தசோற்றில் குழைத் தெடுத்து
    உண்டு மகிழும் இன்பம் மட்டும்
    உயர்வே என்று உணரும் வாழ்வு
    வாழும் மனிதர் ஆயிரமே.
    வீட்டுக்கு வீடு கதைகள் பேசி
    வீணே காலம் கழிப்பவரும்
    நாட்டுநடப்பு பேசிப்பேசி
    நல்ல பொழுதைக் கழிப்பவரும் 
    காட்டுவழியே நடந்து நடந்து 
    கால்கள் போன போக்கில் எல்லாம்
    வீட்டு எல்லை மறந்து உள்ளம்
    நாட்டம் கொண்டு நாட்டைவிட்டு
    தெவிட்டா இன்பம் தேடித்தேடித்
    தெரிந்து வர வாரீர்வாரீர்

    வெள்ளி, 6 ஏப்ரல், 2012

    ஆலமரத்தடிப் பிள்ளையார்:



    ஆலமரத்தடிப் பிள்ளையார்: 



    ஆலமரத்துப் பிள்ளையார் 
    பல அற்புதங்கள் காட்டுவார் - என் 
    சொந்தக் கவலை தீரவே 
    சொல்லி அழவே நாடுவேன். 

    ஆலமரத்தடிப் பிள்ளையாரைத் தொழுதால் ஆரம்பிக்கும் கருமங்கள் யாவும் நலம் பெறுமே என அளவிலா நம்பிக்கை கொண்ட பக்தர்குழாம் நாளின் ஆரம்பமே ஆலமரத்தடி என்று வாழ்வது நிஜம். இப்பிள்ளையார் எவ்வாறு இங்கு வந்தமர்ந்தார் என்னும் வினாவிற்கான தேடலின் தெளிவு பெற கீழே தொடருங்கள்.

    ஆலமரத்தின் சிறப்பு அது கீழ்ச்செலுத்தும் விழுதுகளின் அமைப்பு. கிளைகளைத் தாங்கி நிற்கும் விழுதுகள் அம்மரத்தைத் தாங்கி நிற்பதாகப் பார்ப்பவர்களுக்குக் காட்சியளிக்கும். அம்மரத்தின் அருகாமையில் அற்புதமாய்ப் படர்ந்து செழித்து வளர்ந்திருந்தது அறுகம்புல். இவ் அறுகம்புற்களை மேயவிடுவதற்காக பசுமாடுகளைக் கொண்டுவந்து விடுவது அக்கால மக்களின் வழக்கமாக இருந்தது. இதில் இயற்கையாகவே பல மருத்துவத்தன்மை நிறைந்திருக்கின்றன. விற்றமின் ஏ சத்து நிறைந்த இவ்அறுகம்புல் இரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் இரத்தத்திலுள்ள செங்குருதிச்சிறுத்துணிக்கைகளை( சிவப்பணு ) அதிகரிக்கச் செய்வதுடன் இரத்தச்சோகை, இரத்தஅழுத்தம் போன்ற நோய்களையும் தீர்த்து வைக்கின்றது. உடற்சூட்டைத் தணித்து வாயுத் தொல்லைகளை நீக்குவதுடன் நரம்புத்தளர்ச்சி நோய்க்கும் மருந்தாகவும் அமைகின்றது. பெண்களுக்கு மாதவிடாய்க்காலங்களில் வரும் தொல்லைகளும் இதனால் தீர்க்கப்படும். இதைவிட இன்னும் பல நோய்களைத் தீர்த்து வைக்கும் அவ்அறுகம் புற்களைப் பசுமாடுகள் மேய்ந்து அது தரும் பாலைக் குடிப்போர், ஆரோக்கியம் மிகுந்தவர்களாகக் காணப்படுவார்கள். அப் பாற்சுவை நோக்கியும் நிறைபலன் கருதியும் அக்கால மக்கள் அப்பசுமாடுகளை அங்கு மேயவிடுவார்கள். ஆனால், அவ் ஆலமரத்தை நாடி யானைகள் வருவதும் வழக்கமாக இருந்தது. இனச்சேர்க்கையில் விருப்புக் கொண்ட யானைகள் அம்மரத்தை வந்தடைந்தன. ஏனெனில், இனச்சேர்க்கையின் போது ஆண்யானையின் பலத்தைப் பெண்யானை தாங்கமாட்டாத காரணத்தினால், ஆண்யானை தன்னுடைய பலத்தையெல்லாம் ஆலமர விழுதை இழுத்துத் தாங்கி நின்று பலத்தைக் குறைக்கும். இவ் யானைகள் வரும்போதும் போகும் போதும் அருகே படர்ந்து கிடக்கும் அறுகம்புற்களை மிதித்தழித்துச் சேதப்படுத்திவிடும். யானைக்குப் புற்களும் தாவரங்களும் உணவில்லையே பெரிய மரங்களையல்லவா உணவுக்காக அது நாடி நிற்கும். பசுக்களுக்குகந்த அறுகம்புற்கள் சேதப்படுவது பாதுகாக்கப்பட வேண்டுமல்லவா! இதைவிட யானை போடும் லத்திக்கும் யானைகளுக்கும் பயந்த பசுமாடுகள் அவ்விடம் நோக்கி வரமாட்டாது. இதனால், யானையைத் தடுக்க நினைத்த அக்கால மக்கள். மாட்டுச்சாணத்தினால், பல உருவங்களைச் செய்து ஆலமரத்தைச் சுற்றி வைத்துவிடுவார்கள். பின் விளையாட்டாக அருகே படர்ந்து கிடக்கும் அறுகம்புல்லை அதன் மேல் குற்றிவிடுவார்கள். மாட்டுச்சாணத்தின் மணத்திற்கு யானைகள் அவ்விடத்தை எட்டியும் பார்க்காயின. இச்சாணத்தின் வடிவங்களே மெல்லமெல்ல ஆலமரத்தடிப்பிள்ளையார் வடிவங்களாயின. வீடுகளில் பூஜைகள் செய்யும் போது பிள்ளையார் என்று மாட்டுச்சாணத்தையும் அதன்மேல் அறுகம்புல்லையும் குற்றி வைப்பதும் அக்காரணத்தினாலேயே தான்.

    எனவே காரணங்கள் இல்லாமல் காரியங்கள் இல்லை. காரணங்களைக் கேட்காது நாம், காரியங்களை ஆற்றிக் கொண்டிருந்ததனால், காரணங்கள் மறைவாயின. இன்று எதற்கும் ஏன் என்று கேட்கும் பழக்கம் வளர்க்கப்பட்டால், அறிவு தெளிவுபெறுவது நிச்சயம்.



    வெள்ளி, 23 மார்ச், 2012

    அன்று தான் உண்மையில் நான் வருந்தினேன்


    அன்று தான் உண்மையில் நான் வருந்தினேன் 







    உன் அகம் புறம் இரண்டையும்
    ஊடுருவி உன்னை உண்மையுடன்
    உணர்ந்து அறிந்தவனும் நான் தான்

    உன் உள் மனஉழைச்சலை என் முன்னே கூறி
    உள்ளம் நீ நெகிழ்ந்த போது – உன்
    கண்ணைத் துடைக்க மாட்டாத பாவியும் நான் தான்

    உன் வாழ்க்கையில் நீ அதிகம் பார்த்ததும் என்னைத் தான்
    உன்னை விட உன் முகத்தை அதிகம் ரசித்தவனும் நான் தான்

    மேடையில் நீ ஆட நாள் குறித்து போதும் - உன்
    ஆட்டத்தை முதலில் இரசித்தவனும் நான் தான்

    தாயகத்தில் தவித்திருப்போர்க்குத் தானம் வழங்கத்
    தயாள குணம் உனக்கில்லையென்று உன்னை பழித்திருப்பார்க்கு . உன்
    தாராள குணத்தை எடுத்துக்காட்டி சாட்டையடி
    கொடுக்கமுடியாத பாவியும் நான் தான்

    நீ பிறந்தது தொட்டு உனக்கும் எனக்கும்
    ஒரு  இறுக்கமான தொடர்பு இருந்து கொண்டுதான் இருக்கின்றது
    எத்தனை தடவை ஆடை மாற்றி என்முன்னே தோன்றினாலும்
    அத்தனை முறையும் உன்னை ரசித்து உனக்காக சேவைபுரியும்
    என்னை நீ இறுகத் துடைப்பாயே 
    அன்று கூட உன்னை நான் நொந்ததில்லை – ஆனால்
    உன் தவறைத் தட்டிக் கேட்ட தாயின் 
    அதட்டலை என்முன்னே வந்து திட்டித் தீர்த்தாயே – அப்போது
    உன்னை ஓங்கி அறைய முடியாது நின்றேனே – அன்றுதான்
    உண்மையில் நான் வருந்தினேன்.

    புதன், 21 மார்ச், 2012

    கில்லி மனதில் வள்ளி


                           
                                      கில்லி மனதில் வள்ளி 

    Image Hosting




    வானத்தில் தோன்றுவது விடிவெள்ளி 
    என் மனதில் தோன்றியது வள்ளி
    நான் உன்னைக் கண்ட இடம் பள்ளி 
    நான் உன்னைச் சந்திப்பது தினம் வெள்ளி 
    நீ என் இதயத்தைத் திருடிய கள்ளி 
    நான் பார்ப்பதற்கு வெறும் சுள்ளி – ஆனாலும் 
    நான் ஒரு கில்லி
    உன்னோடு நான் விளையாடுவது நுள்ளி
    நான் எப்போதும் உண்ணுவது உள்ளி 
    வைக்காதே என்னை வெகுதூரம் தள்ளி 
    உன்னுடைய தாய் எனக்கு வில்லி 
    கோபத்தில் அவள் ஒரு சில்லி ( Chilli )
    என்னை எதிர்ப்பது உன்னுடைய மல்லி ( தம்பி )
    உன்னோடு நான் வாழத் தேவை சல்லி 
    போடாதே மனதில் சந்தேகப் புள்ளி
    அதனால் நான் ஊத்தப் போவது மில்லி

    வெள்ளி, 9 மார்ச், 2012

    மகளிருக்காய் ஓர் தினம்


              

             "பெண்ணுக்குள்ளே ஞானத்தை வைத்தான்
             புவிபேணி வளர்த்திடும் ஈசன்''

    ஞானம் என்னும் பொருள் வைக்கப்பட்டுள்ள இடம் பெண் என்பதை மகாகவிபாரதி உலகுக்கு வெளிப்படுத்திச் சென்றுள்ளார். எனவே தான், மனிதனை வாழவைக்கும் இந்தப் பூமியைப் பூமாதேவி என்றும் ஆகாயத்தை ஆகாயவாணி என்றும் கடலைக் கடலன்னை என்றும் நதிகளைக் கங்கை என்றும் காவேரியென்றும் எங்கெங்கும் இயற்கை சக்திகளில் பெண்வடிவம் காண்கின்றோம். கல்வி, செல்வம், வீரம் இம் மூன்றும் பெறக் கலைமகள், அலைமகள், மலைமகள், என முச்சக்திகளான பெண்தெய்வங்களை வழிபட வேண்டியது அவசியமாகின்றது. 

             ஒரு பெண் வாழும் வீடு சிறப்பாய் அமைந்தாலேயே நாடும் சிறப்புறும் வீடுகள் நிறைந்ததுதான் நாடு. எனவே, இல்லறத்தை ஒரு பெண் நல்லறமாக்காதுவிடில் உலகு உவகை கொள்வது எங்கே? உயர்ச்சியடைவது எங்கே? உலகத்தை வளர்த்து வாழவைக்கும் புத்தகங்களாகவும் கலைகளாகவும் கல்விக்கழகங்களாகவும் பெண்கள் விளங்குகின்றனர்|| எனப் பெண்கள் பற்றிச் ஷேக்ஸ்பியர் கூறியுள்ளார். எனவே உலகமே அவள் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது என்பது வெள்ளிடைமலை.

             இவ்வாறு உலகத்திற்குப் பெருமை சேர்க்கும் பெண்ணைப் பொதுவாகவே கவிஞர்கள், கொடிக்கு உவமைப்படுத்துவார்கள். கொடி மென்மையானது. பூத்துக்குலுங்கும் கொடியானது, ஒரு பற்றுக்கோடு கொண்டே படரும். அந்தக்கொடியான கொழுகொம்பின்றி படராதுவிடுமேயானால், நீண்டு வளராது. புதராகப் படர்ந்து காணப்படும். கொழுகொம்பிலே படரும்போது நிறைந்த பூக்களைத் தந்து கொழுகொம்பையே அழகாக்கும் தன்மையைக் கொண்டிருக்கும். கொடி கொழுகொம்பிற்கு அழகைத் தருதல் போல பெண்ணானவள் தன் கணவனைக் களிப்புறச் செய்கின்றாள். பூக்களைத் தந்து கொடி மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருதல் போல பிள்ளைகளைப் பெற்று சமூகத்திற்குச் சிறந்த பணியாற்றுகின்றாள். கணவன் என்னும் கொழுகொம்பைப் படர்ந்து வாழுகின்றாள். இளமையில் பெற்றோரில் தங்கித் திருமணத்தின் பின் கணவனில் தங்கி முதுமையில் பிள்ளைகளில் தங்கி வாழும் பண்பு பின்தங்கியவளாகவே அவளை ஆக்கிவிடுகின்றது. பெண்ணின் கருணை, பொறுமை, சகிப்புத்தன்மை, மென்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு இவையனைத்தும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் ஆண்வர்க்கம், அவளை அடிமைப்படுத்துவது காலாகாலமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. ஆனால், இன்று இந்நிலைகளை உடைத்தெறிந்து பெண்வர்க்கம் துணிந்து முன்னேற்றம் கண்டுள்ளது. 

             ரேடியத்தை உலகுக்களித்த மேரிகியூரி அம்மையார், விஞ்ஞான உலகில் முத்திரை பதித்தவர். முறையான கல்வி வசதியில்லாத நிலையிலேயே 18ம் நூற்றாண்டு கரோலின் கர்ஷேல் என்னும் விண்வெளி வீராங்கனை 3 புதிய நட்சத்திரக்கூட்டம், 8 வால்நட்சத்திரம் மற்றும் பல கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளார். ஆயினும் ஐரோப்பிய மண்ணில் கூட அடக்குமுறை தலைவிரித்தாடியது. 16 ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் சூனியக்காரிகள் என்று உயிருடன்  தீ வைத்துக் கொழுத்தப்பட்டனர். அவர்கள் செய்த சூன்யம் என்னவென்றால், ஆண்மருத்துவர்கள் இருக்கும் போதே நோயுற்றவர்களைத் திறமையான முறையில் சிகிச்சையளித்து குணமாக்கியமையே ஆகும். இவ்வாறு பெண்மையின் இயல்பான ஞானத்தில் பொறாமை கொண்ட ஆண்வர்க்கம், பெண் இனத்தின் அடக்குமுறையை வளர்த்து
    கொண்டிருந்த போது 1910ம் ஆண்டு டென்மார்க்கிலுள்ள கொப்பன்காகன் (Koppenhagen) என்னும் இடத்தில் கிளாராசெற்கின் (Clarazetkin) என்பவர் ஒரே தொழில்புரியும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிசமமான வருமானம் கிடைத்தல் வேண்டும், கர்ப்பம் அடைந்த பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படல் வேண்டும், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படல் வேண்டும், என கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்தார். இவர் தூக்கிய போர்க்கொடியே மகளிர்தினத்திற்கு அடிகோலியது. 1917ல் இரஷ்யாவிலுள்ள Sanktpetersburg என்னும் இடத்தில் ஆரம்பத்த பெண் ஆடைத்தொழிலாளிகளின் வேலைநிறுத்தத்தை நினைவுகூறுமுகமாக 1921 பங்குனி 8ல் சர்வதேச மகளிர்தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. தற்பொழுது வருடாவருடம் உலகலாவிய ரீதியில் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

                உலகத்தை உய்வடையச் செய்யும் பெண்கள் தமது பொறுப்பை உணர்ந்து கடமை தவறாது கண்ணியமாக வாழ்க்கையை நல்லமுறையில் நடத்தினால், உலகு உவகை கொள்ளும் என்பது திண்ணம். 

    ஞாயிறு, 4 மார்ச், 2012

    வாழ்க்கைப் பாடம்


    மனித மனங்கள் பற்றிய பதிவு
                
    சாளரத்தினூடு தன் பார்வையைச் செலுத்தியவாறே அருகே அமர்ந்திருந்த சௌம்யாவின் கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் கன்னத்தை ஈரமாக்கியிருப்பதை அறிந்த அவள் தாய் வித்யா, அவளை அணுகி பனி படர்ந்த அழகைக் கண்ட ஆனந்தக் கண்ணீரா? இல்லை ஆழமான இதயம் அழுகின்ற நீரோட்டமா? என்று மனதில் நினைத்தவளாய் தன் மகளைக் கட்டி அணைத்தான். விடுங்கோ அம்மா! என்று சௌம்யா தாயாரைத் தள்ளிவிட்டாள்.  நான்தான் ஏதும் குற்றம் செய்துவிட்டேனோ! என்று மனதில் நினைத்தவளாய் அவளைச் சீண்டிப்பார்த்தாள். அவளும் சீறினாள். இது விளையாட்டு இல்லை. அவள் மனதால் அழுகின்றாள். என்று புரிந்து கொண்டாள். ''சௌம்யா அம்மா ஏதாவது பிழை செய்தேனா? இல்லை உனக்கு வேறு ஏதாவது பிரச்சினையா? எதுவாக இருந்தாலும் சொல். அம்மாவைத் தவிர ஒரு பெண்ணுக்கு வேறு யாரும் சரியான வழியைக் காட்டமுடியாது. அழுவதால் எந்தப் பிரச்சினையும் தீரப் போவதில்லை. எதுவாக இருந்தாலும் சொல் என்றாள். 

                      ''அம்மா என்னுடைய Best Friend லாராவிடம் எனக்குக் கணிதப்பாடத்தில் குறைவான புள்ளி கிடைத்ததைச் சொல்லிக் கவலைப்பட்டேன். அவளும் அநுதாபமாகக் கேட்டுக்கொண்டிருந்து விட்டு பிறகு 5,6 பிள்ளைகளிடம் அதைப் போய்ச் சொல்லி நக்கலடித்துக் கதைக்கின்றாள். அவள் என்னுடைய Best Friend என்று இவ்வளவு நாளும் நினைத்தேன் அம்மா'' என்று கூறி விம்மிவிம்மி அழுதாள். பெரியவர்கள்தான் இப்படி என்றால் இந்தச் சிறியவர்களும் இப்படியா? என்று மனதில் நினைத்த வித்யா, மகளை அணைத்தபடி, ''இங்கே பார்! பூமியெங்கும் கொட்டிக் கிடக்கிறது வெள்ளைப் பனி உன் வார்த்தைகளைப் போல. அழகாகக் காட்சியளிக்கின்றது. ஆனால், அழுக்குகளும் குப்பைகளும் நிறைந்த பூமியின் மேல் மாசற்ற தன் வெண்பஞ்சுத் தோற்றத்தை வெளிப்படுத்தி அழுக்குகளை மறைத்துக் கிடக்கின்றது. அதேபோலேயே நீ நல்லவர்கள் என்று நினைக்கும் மனிதர்கள், மனதுக்குள் எத்தனை அழுக்குகளை வைத்திருக்கின்றார்கள் என்று யாருக்குத் தெரியும். பனி படர்ந்த பூமியில் பனியை விலக்கி நல்ல நிலத்தை அறிதல் போல நல்லவர்கள் யாரென்று அறிந்தல்லவா நட்பைத் தேடிக் கொள்ள வேண்டும். யாவரும் வெள்ளை உள்ளம் கொண்டவர்கள் போலவே தெரிவார்கள். நூல்கள் பல வெளியிட்டிருப்பார்கள். அதில் பல நல்ல அறிவுரைகள் கூறியிருப்பார்கள். ஆனால், கேவலமான பல காரியங்களைச் செய்வார்கள். மேடையேறிப் பேசுவார்கள் ஆனால், தம் வாழ்க்கையில் பல குப்பைகளை வைத்திருப்பார்கள்.  அதனாலேயே சிலருடன் புளியம்பழம் போல் ஒட்டியும் ஒட்டாமலும் வாழவேண்டும் என்பார்கள். எதையும் எண்ணி அலட்டிக் கொள்ளாதே. 

             சிரித்துப் பழகினால் ஆளை வளைக்கப் பார்க்கின்றாள் என்பார்கள். துயரைப் பகிர்ந்தளித்தால் நன்றாய் நடிக்கின்றாய் என்பார்கள். திறமையைக் கொட்டினால், புகழுக்கு வீங்கிக் கிடக்கின்றாள் என்பார்கள். பேசாமல் இருந்தால், பெருமையில் இருக்கின்றாள் என்பார்கள். வாய்விட்டுப் பேசினால், அலட்டுகின்றாள் என்பார்கள், தேடிப் பழகினால், வேறு ஆளில்லை என்னைத் தேடி வருகின்றாள் என்பார்கள். ஒதுங்கிப் பழகினால், லெவல் அடிக்கின்றாள் என்பார்கள். யதார்த்தம் உரைத்தால் படித்த பெருமையில் பேசுகின்றாள் இல்லையென்றால் வித்துவச் செருக்கு என்பார்கள். இவளுக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணம் கொண்டவள் என்பார்கள். உதவி செய்வார்கள் அதனால், உயர்ந்துவிட்டால், என்னால் உயர்ந்துவிட்டுப் பெருமைகாட்டுகின்றாள் என்பார்கள். எழுதிக் கொட்டினால், வார்த்தையில் வன்முறை காட்டுகின்றாள் என்பார்கள். எழுத்தை நளினப்படுத்தினால் நன்றாய் நடிக்கின்றாள் என்பார்கள். அதனால், மனதை அறியும் கருவி கண்டுபிடிக்கும் வரை மனித வாழ்க்கையை அவதானமாகத்தான் வாழவேண்டும்'' 

         ''இல்லை அம்மா! அப்படி ஒரு கருவி இருந்தால், மனிதன் நிம்மதியாக வாழவே முடியாது. அதனால், அந்தக் கருவி கண்டுபிடிக்கக் கூடாது. வேறு இனமாக வாழவேண்டும். என்றாள் சௌம்யா.  ''பிறந்துவிட்டால், அந்தப் பிறப்பின் இறுதி வரை வாழ்ந்துதான் முடிக்க வேண்டும். ஏன் மனித இனத்தில் மட்டுமே இவ்வாறான குணமுள்ளவர்கள் இருக்கின்றார்கள் என்று நினைக்கின்றாயா? விலங்குகளில் இல்லையா? கொம்பைக் கொண்டு மாடு ஏன் படைக்கப்படுகின்றது? தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுவதற்காகவே. நன்றியுள்ளது நாய். ஆனால், தன் உணவை உண்ண வருகின்ற பிற நாய்களைத் துரத்திவிடுமே. தம்மைப் பாதுகாக்க பிற உயிரினங்கள் ஆயுதங்களுடனேயே பிறக்கின்றன. கடலுக்குள் வாழுகின்ற உயிரினங்களைப் பார். சில மீன்கள் ஒரு வகையான வாயுவை வெளியகற்றுகின்றன. இது எப்போதும் எதிரியைக் குறி பார்த்தே வாழும். 


    சில மீன்கள் வாளுடன் வாழுகின்றன. சில மீன்கள் ஒருவிதமான பசையைக் கக்கும் இதன் மூலம் வேற்று மீன்கள் இப்பசையில் ஒட்டிக் கொள்ளும். இப்படித்தான் வாழ்க்கை முழுவதும் போராட்டம். மனிதனும் மிருகங்களும் போராடியே வாழ வேண்டும். ஏன் எத்தனை செல்களுடன் போராடி முன்னிலைக்கு வந்து எனக்கு நீ மகளாகப் பிறந்திருக்கின்றாய்''  அப்படியென்றால், என்னதான் செய்வது அம்மா!'' என்று வினா எழுப்பினாள் சௌம்யா. 

                        '' வெள்ளைக் கடதாசியாய் வாழாதே. உன்னில் பல கிறுக்கல்களைக் கீறிவிடுவார்கள்.   துன்பமோ இன்பமோ அநுபவித்துப் பார். சோர்ந்து கண்ணீர் விட்டால், வாழ்க்கையை வாழவே முடியாது.  இதுவே வாழ்க்கை என்ற எண்ணத்தைத் திடகாத்திரமாகக் கொள். பழிப்பவரை எதிர்த்து நில். சட்டை செய்யாதே. உன் எதிர்கால வாழ்க்கையே உன் இலட்சியமாகக் கொள். சுயநலவாதியாய் இரு. இதைத்தான் வள்ளுவரும் 

    ''தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்
     துன்னற்க தீவினைப் பால்''  

    என்று கூறியிருக்கின்றார். சுயநலமுள்ளவன் பிறர்க்குத் தீமை செய்ய மாட்டான். ஏனென்றால், அது தன்னைப் பாதிக்கும் என்ற காரணத்தை மனதில் கொள்வதனால் மனதைத் தீவினைபால் செலுத்த மாட்டான். உன்னை நீ நேசிக்கப் பழகிக் கொள். உன்னை வளர்த்துக் கொள். இடையில் வருகின்ற இடைஞ்சல்களை எடுத்தெறிந்துவிட்டு நிமிர்ந்து நில். மற்றவர்கள் தருகின்ற நிந்தைக்கு உன் கண்ணில் இருக்கும் கண்ணீர் வீணாகக் கூடாது. நெஞ்சை நிமிர்த்திக் கொள். உன் மனதுக்கு நியாயம் என்று படுவதை எதிர்த்து நின்று கேட்கத் தயங்காதே. சட்டென்று பேசி நியாயம் காண். சிந்தித்துக் கோழையானால், உன்னை ஏறி மிதித்து மேலே போய்க் கொண்டே இருப்பார்கள். நல்ல மனிதர்களைக் காண்பதும் அரிது. அவர்களுடன் பழகுவதும் அரிது. உலகத்தில் எல்லோருக்கும் நல்லவளாய் வாழ உன்னால் முடியாது. நல்ல மனதர்களைக் கண்டுபிடிக்கவும் உன்னால் முடியாது. அதனால், உன் மனதுக்குச் சரி என்று படும் விடயங்களை மட்டுமே செய். சந்தேகம் ஏற்பட்டால் சரியா என்று மறு பரிசீலனை செய்து பார்த்து திருத்திக் கொள். இப்போது எழுந்து வா சுத்தக் காற்றைச் சுவாசிக்க காலாற மரங்கள் அடர்ந்திருக்கும் பகுதியில் நடந்து வருவோம். காதுக்குள் மெல்லிய இசையைக் கேட்போம். இல்லை குருவிகளின் ரீங்காரத்தை ருசிப்போம். மரங்களின் சல்லாபத்தை ரசிப்போம். இயற்கையின் அற்புதத்தைக் காண்போம்'' என்று நீண்ட பிரச்சாரம் செய்து முடித்தாள் வித்யா. எழுந்த சௌம்யா அம்ம்ம்மா.......என்ற வண்ணம் அவளை இறுக்கிப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள். ''அப்படி என்றால் இந்த மிருகங்கள், மீன்கள் எல்லாவற்றிற்கும் பாதுகாப்புக் கருவிகளை யார் படைத்தார்கள் அம்மா? சௌம்யா அடுத்த கேள்வியைத் தொடுத்தாள். தாய்க்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கின்றது என்று மனதில் நினைத்தபடி '' அது ஒரு பெரிய உhயிவநச.  அவை ஒன்றும் படைக்கப்படவில்லை. தேவை கருதி மெல்ல மெல்ல வளர்ந்தன. மனிதனுக்கு வால் இல்லாது போனது போலவேதான் நடந்தது. இது பற்றி இன்னும் ஒருநாள் விளக்கமாக விளக்குகின்றேன்'' என்ற படி தன் மகளின் கவலை தீர்த்த நிம்மதிப் பெருமூச்சுடன் எழுந்தாள் வித்யா. 

    வீடுகள் வாழ்வின் படிமங்கள்

    வீடுகள் வாழ்வின் படிமங்கள் 'மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின்' சுவர் கொண்ட வீடல்ல வீடு நினைவுகள் குடியிருக்கும் இடமே வீடு. தாய் காத்த வ...