• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    செவ்வாய், 21 செப்டம்பர், 2010


    www.freegifs.de


                 புரட்டாதிச் சனிவிரதம்


            
                                  



    இவ்வருடம் புரட்டாதி மாதம் 18 ஆம் திகதி தொடங்கி வருகின்ற 4 கிழமைகள் தொடர்ந்து 5 சனிக்கிழமைகளில் புரட்டாதிச் சனிவிரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. கன்னிகாமாதம் என்று சொல்லப்படுகின்ற புரட்டாதி மாதத்திலே கன்னிகா விருட்சம் பரவியிருக்கின்ற தினம் புரட்டாதி மாத முதற்சனியாகும். இந்நாளிலேயே சூரியனுக்கும் அவர் மனைவி சாயாதேவிக்கும் மகனாகச் சனீஸ்வரன் தோன்றினார் என்பது ஐதீகம்.
                 இச்சனிக்கிரகம் 9 கிரகங்களில் ஒன்று. இது சூரியகிரகத்திலிருந்து மிக எட்ட இருக்கின்ற ஒரு கிரகமாகும். தனக்கு மகன் பிறந்திருக்கின்ற செய்தி கேட்டு சூரியபகவான் மகனைப் பார்க்க ஆவலுடன் சென்றார். மகனைக் கண்ட மாத்திரத்தில் அவர் குஷ்டரோகியானார். இதனால் கோபம் கொண்ட சூரியனும் மகனாகிய சனீஸ்வரனைத் தூக்கிவீசினார். அவரும் தூரத்திலே முடங்கிவிட்டார். அதாவது முடவனாகி விட்டாராம். வேடிக்கையாக இருக்கின்றதல்லவா? இதுவும் புராணங்கள் கூறுகின்ற கதைதான். சூரியனுடைய தள்ளுவிசையினால் வீசப்பட்டிருக்கும் ஒரு கிரகமே சனிக்கிரகமாகும். சூரியனுக்கு அருகே எதுவுமே செல்ல முடியாது. அருகே சென்றால், செல்பவை தூக்கிவீசப்படும். ஒரு எல்லை தாண்டிப் போனால், உள்ளே இழுத்துவிடும். உறிஞ்சி இழுத்து வீசி எறியப்பட்ட ஒரு கிரகமாக சனிக்கிரகமாக இருக்கலாம்.

              சனீஸ்வரன் கிரகங்களிலே பாபக்கிரகமாகக் கருதப்படுகின்றது. அக்கிரகத்திலிருந்து வீசப்படுகின்ற தீய கதிர்வீச்சானது, உடலிலே பல தீய தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. இதனாலேயே பயபக்தியுடன் சனிக்கிரகத்தை சனீஸ்வரன் என்று அழைக்கின்றோம். இக்கதிர்கள் மூளைநரம்புகளைப் பாதிக்கின்றது. எண்ணங்களை மாற்றிவிடுகின்றது. இதனாலேயே சனிக்கிழமைகளில் (எள்எண்ணெய்) நல்லெண்ணெய் தேய்த்து சூரிய உதயத்தில் அரைமணி நேரம் நின்று குளிக்க வேண்டும் என்று சொல்லப்படுகின்றது. ஜாதகத்தில் சந்திரராசிக்கு 1,2,5,8,12 ஆகிய இடங்களில் சனிபகவான் சஞ்சாரம் செய்கின்ற போது அந்தச் சனி பகவானுடைய கதிர்வீச்சு அதிகரிக்கும். இதனால், எள்எண்ணெயில் ஊறிய உடம்பு இக்கதிர்களைத்தாக்கவிடாது.

             
    கிரகதோஷம் ஒருவர் வாழ்நாளியே ஒவ்வொரு 30 வருடத்திற்கும் ஒரு தடவை வருமாம். இத் தோஷம் உள்ளவர்களுக்குக்கு புத்திரபாக்கியம் குறைவு, மிருகபயம், மரணபயம், அதிகசெலவு, பணநஷ்டம், தேகசுகம்குறைவு, வீண்சச்சரவு போன்றவை நிகழும் எனப் பயம் காட்டப்பட்டுவிட்டது. மக்கள் மனதில் ஒரு நம்பிக்கையை எடுத்துக்காட்ட இவ்வாறு கூறப்படுகன்றது. மனமே எல்லாவற்றிற்கும் காரணமானது. கிரகக்கதிர்களினால், உடலும் அதனோடு இணைந்த மனமும் பாதிக்கப்படுபவர்களுக்கு மேற்கூறியவை நிகழச் சந்தர்ப்பம் இக்கின்றது.  கிரகதோஷம் உள்ளவர்கள் சனீஸ்வரனுக்குரிய தானியமாகிய எள்ளைச் சிறிதளவில் எடுத்து, சனீஸ்வரனுக்குரிய நிறமாகிய கறுப்புத்துணியில் ஒரு பொட்டலமாக கட்டி, ஒரு மண்சுட்டியில் நல்லெண்ணை விட்டு அதற்குள் இந்த பொட்டலத்தை வைத்து எரித்தல் வேண்டும். எள் உணவை சனீஸ்வரன் வாகனமாகிய காகத்திற்குக் கொடுக்க வேண்டும். சனீஸ்வரனின் நிறம் கறுப்பாகக் கருதப்படுவதால், கறுப்புத்துணியில் கட்டப்பட வேண்டும் எனவும் கூறப்படுகின்றது. இக்காலங்களில் விரதம் இருந்தால் சனீஸ்வரன் மகிழ்ச்சியடைந்து இப்பாதகங்களைக் குறைப்பார் என்றும் கருதப்படுகின்றது. பெரியவர்கள் பால்,பழம் போன்றவையை உணவாக உட்கொள்ளலாம் என்றும் குழந்தை நோயாளிகள் இட்லி முதலிய எளிய உணவை உட்கொள்ளலாம் என்றும் சொல்கின்றார்கள். இட்லி எனப்படுவது எளிமையான உணவு என்பது கேள்விக்குறி.
      
         இவ்விரதம் விஷ்ணுகோயிலில் அநுஷ்டிக்கப்படுகின்றது. ஏனென்றால், புரட்டாதி மாதத்திலே சூரியன் கன்னிராசியில் சஞ்சரிப்பார். கன்னிராசியானது, புதனின் ஆட்சியின் உச்சவீடு. மகாவிஷ்ணுவே புதனாக அவதரித்தவர். எனவே விஷ்ணுகோயிலில் இவ்விரதம் அநுஷ்டிக்கப்படுகின்றது. என்று கூறுவர். ஆனால் சிவன் கோயிலிலும் இவ்விரதம் அநுஷ்டிக்கலாம். ஏனென்றால், சனீஸ்வரன் தனக்குக் கிரகபதவி கிடைக்க வேண்டுமென்று காசிக்குச் சென்று காசிவிஸ்வநாதரை வழிபட்டுப் பதவியைப் பெற்றதன் காரணத்தினால் சிவன் கோயில்களில் இவரை வழிபடுவது சிறந்தது என்றும் கூறப்படுகின்றது. விஷ்ணு ஆதிமூலம். இவரே அவதாரங்கள் எடுக்கக் கூடியவர். சூரியன் உட்பட கிரகங்கள் எல்லாம் தோன்றுவதற்கு முதல் இருந்த நிலையே ஆதிமூலநிலை. இந்தநிலையையே விஷ்ணுவாக உருவகித்திருக்கின்றார்கள். அவதாரம் என்றால், ஆதியிலிருந்த இரசாயண மூலக்கூறுகள் கீழே இறங்குதல். எனவே விஷ்ணு நிலையே அவதாரம் எடுக்கக் கூடிய நிலையாகக் கருதப்படுகின்றது. இந்தப் பிரபஞ்சமானது சிவனாக உருவகிக்கப்பட்டிருக்கின்றது என்பதை எனது திருநீலகண்டர் என்னும் கட்டுரையில் வாசித்திருப்பீர்கள். எனவே இந்தப் பிரபஞ்சமாகிய சிவன் கோயிலிலும் சனிக்கிரகம் இருக்கலாம் ஆதிமூலமாகிய விஷ்ணு கோயிலிலும் சனிக்கிரகம் இருக்கலாம் அல்லவா.
            
     சனிக்கிரகத்திலிருந்து வருகின்ற கதிர்கள் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமாயிருந்தால், எள்எண்ணெயை உடலிற்குப் பூசுகின்றோம். அது ஏற்றுக் கொள்ளக்கூடியது. ஆனால், அதை எரிப்பதன் அவசியம் தான் என்ன? என்ற வினா எழலாம். எள்ளானது எள்எண்ணெயில் எரிகின்ற போது அதன் தன்மை ஆவியாக வெளிவருகின்றதல்லவா? இதனை எமது மூளையிலுள்ள அமிக்டாலா  உணர்ந்து கொள்வதுடன் அதற்கேற்பத் தன்னுடலிலே மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.
            

     புரட்டாதி மாதத்திலே குளிர்காலம் ஆரம்பித்துவிடுகின்றது. சூரியவெளிச்சம் குறைந்துவிடுகின்றது. பகல் குறைந்து இரவுப்பகுதி அதிகரித்தும் காணப்படுகின்றது. இதனால் தாவரங்கள் பச்சையம் தயாரிப்பது குறைந்துவிடுகின்றது . ஒட்சிசனை வெளியிடுவது குறைகின்றது. எள் உணவிலே Arginin என்று சொல்லப்படுகின்ற அமினோவமிலம் இருக்கின்றது. இந்த அமினோவமிலம் சுவாசிக்கப்படுகின்ற ஒட்சிசனுடன் இணைந்து நைத்திரிக்கமிலத்தை உருவாக்குகின்றது. இந்த நைத்ரிக் அமிலம் அல்லது நைத்திரிக்மோனோ ஒக்சைட் இரத்தக்குழாய்களை விரிவடையச் செய்கின்றது. இரத்தக்குழாய்கள் விரிவடையும் போது உடலுக்குக் கொண்டுசெல்லப்படும் ஒட்சிசனின் அளவும் அதிகரிக்கின்றது. இதனால் இக்காலப்பகுதியில் ஒட்சிசனின் அளவு உடல் உறுப்புக்களுக்குச் சென்றடைய எள் உணவு உதவுகின்றது. இதைவிட இந்த எள்உணவானது இரத்தக்குழாய்களின் சுவர்களில் காணப்படுகின்ற மெல்லிய சுவர் போன்றிருக்கும் பகுதியையும்( Endothel)வலுவடையச் செய்கின்றது. எனவே எள் உணவு உண்பது இக்காலப்பகுதியில் மிகவும் அவசியப்படுகின்றது.


                                             எனவே காரணமில்லாமல் இவை ஏற்படுத்தப்படவில்லை என்பது இவற்றின் மூலம் தெளிவாக்கப்படும் போது விரதம் காப்பாரும் விளக்கம் பெறுவர் எமது இளையசந்ததியினரும் இவைபற்றிப் புரிந்து கொள்வதுடன் பிறருக்கும் புரியச் செய்வர்.



    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...