• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 14 ஜூன், 2019

    பல முதல்களின் முதல்வர் மு.க.சு.சிவகுமாரன் அவர்களின் வெற்றிமணிக்கு 25 வயது



    பல முதல்களின் முதல்வராகிய வெற்றிமணியின் ஆசிரியர் கலாநிதி மு.க.சு.சிவகுமாரன் B.F.A அவர்களின் வாழ்நாள் சேவைகளை இத்தருணத்தில் நினைத்துப் பார்க்கும் நாள். 

    செய்யும் தொழிலும் செயலும் திறம்பட வேண்டுமானால், செய்பவர் திறமை திறம்பட இருக்க வேண்டியது அவசியம். கருவி அற்புதமானால், கருத்தா கருவிக்கு ஆற்றிய அர்ப்பணிப்பும் போற்றப்படவேண்டியதும் புரியப்பட வேண்டியதுமாகும். படைப்பாளியின் திறமை அறியப்பட்டாலேயே அந்தப் படைப்பின் வெற்றி புரியப்படும் வெற்றிமணியான விபரமும் புரியும். 

                       வெற்றிமணி பத்திரிகை தாயகத்தில் ஆரம்பித்து 69 வருடங்கள் ஆகின்றன. அமரர் மு.க.சுப்பிரமணியம் அவர்கள் 1950 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைத்த வெற்றிமணி அவர் மறைவின் பின் நின்று போக அவருடைய மகன் மு.க.சு.சிவகுமாரன் அவர்கள் மீண்டும் தாயகத்தில் வெற்றிமணி மாணவர் காலாண்டு இதழாக இன்றும் வெளியீடு செய்து கொண்டு வருகின்றார். தாயகத்தில் ஏற்பட்ட சில பல  சூழ்நிலைகள் காரணமாக தாமதங்கள் அங்கு ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே காணப்படுகின்றது.

    ஆனால், ஐரோப்பாவில் இவர் புலம்பெயர்ந்து தன்னுடைய வாழ்க்கையைத் தளம் அமைத்த பின்  மீண்டும் வெற்றிமணி பத்திரிகையை யேர்மனியில் ஆரம்பித்து இம்மாதம் (ஆனிமாதம் 1994 - ஆனிமாதம் 2019) 25 வருட வெற்றி காண்கின்றார். தற்போது இலண்டன், சுவிஸ், யேர்மனி ஆகிய நாடுகளில் பலரும் தேடும் சிறப்புப் பெற்ற இலவச வண்ணப் பத்திரிகையாக இப்பத்திரிகை வெளிவருகின்றது. இப்பத்திரிகை எவ்வாறு ஐரோப்பாவில் ஆரம்பிக்கப்பட்டது என்னும் வரலாற்றை இத்தருணத்தில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டிய அவசியத்தில் இருக்கின்றோம். 

    கணனியுகம் பிரபலமடையாத காலத்தில் வெற்றிமணி பத்திரிகைக்கு படைப்புக்கள் ஆசிரியரிடம் கையெழுத்துப் பிரதியாக வந்தடையும்.  அப்போது அத்தனை கட்டுரைகளையும் வாசித்து தமிழில் அச்சடித்து (அக்காலத்தில் venus fonts மாத்திரமே இருந்தது) அக்கட்டுரையை அளவாக வெட்டி வெட்டி ஒட்டி, அவற்றிற்குரிய படங்களுக்குரிய இடத்தை மட்டையில் நீல மையால் கோடு போட்டு நேராக ஒட்டி விளம்பரத்துக்கு சதுரப்பெட்டி போலப் போடுகின்ற வசதிகள் அக்காலத்தில் கணனியில் இல்லாத காரணத்தினால், சதுரம் கீறியே அச்சகத்திற்குக் கொடுக்க வேண்டும்.  படங்களை வெட்டி ஒட்டிப் பின் கழட்டியே அச்சகத்திற்குக் கொடுக்க வேண்டியது அவசியம். தனியே நம்பரிட்டுக் கொடுக்கப்பட்ட படங்களை அவ்வவ் இடங்களில் அச்சகத்தினர் சேர்ப்பார்கள். இவ்வாறு பல பிரயத்தனங்களுக்கு மத்தியில் ஆரம்பத்தில் ஒரு வருடகாலமாக கறுப்பு வெள்ளை வண்ணத்தில் வெற்றிமணி வெளிவந்தது. பின்னரே வெற்றிமணி வண்ணக்கலவையில் பிரகாசிக்கத் தொடங்கியது. 

    இத்தனை கடினத்தின் மத்தியில் ஆரம்ப காலத்தில் வெளியான வெற்றிமணியை வளர்த்தெடுத்து இன்றைய நவீன காலத்திற்குத் தன்னை இசைவாக்கம் அடைய வைத்து கண்ணையும் கருத்தையும் கவர வைக்கும் வெற்றிமணியாகத் திகழ்வதற்கு வழி செய்த வெற்றிமணியின் ஆசிரியர் கலாநிதி. மு.க.சு.சிவகுமாரன் அவர்களின் Number One சாதனைகளை சற்று சீர்தூக்கிப் பார்ப்போம்.

    1. நுண்கலை பட்டம் B.F.A

    இலங்கையில் முதன் முதலாக நுண்கலையில் கலைமாணி பட்டத்தை (Bachelor of Fine Arts) களனிப் பல்கலைக்கழகத்தில் 1979 ஆம் ஆண்டு பெற்ற முதல் மூன்று தமிழர்களில் மு.க.சு.சிவகுமாரன் அவர்களும் உள்ளார்.(சிவகுமாரன், கே.கே.ராஜா. பவானி) 

    2. சுதந்திரச்சிலை 

    யேர்மனியில் முதன் முதலாக நாம் ஒன்றும் பணத்திற்காகக் கைநீட்டி யேர்மனியில் தஞ்சம் புகுந்தவர்கள் இல்லை. எம் இனத்தின் சுதந்திரத்தை விரும்பிப் போராடி உயிர் பிழைக்கத் தஞ்சம் புகுந்தவர்களே நாம் என்பதை யேர்மனியர்களுக்குப் புரிய வைப்பதற்காகத் தமிழ் சுதந்திரச் சிலையை Ludwig Stadt என்னும் இடத்தில், தாம் வாழ்ந்த அகதிகள் விடுதியில் அமைத்துக் காட்டி மார்பு தட்டிக் கொண்ட முதல் தமிழன்.

    3.  Stadt  சிற்பம் 

    யேர்மனி Ludwigstadte என்னும் நகரத்தில் அந்த நகரத்துக்குரிய சின்னத்தை சிற்பமாக வடிவமைத்துக் கொடுத்து தமிழருக்குப் பெரும் புகழைச் சம்பாதித்துக் கொடுத்த முதல் தமிழன்.

    4. யேர்மனி ஓவிய சிற்பக் கண்காட்சி   (Art and Sclputure  Exibition )

    யேர்மனியிலுள்ள Dortmund என்னும் நகரத்தில் 1990 இல் முதன் முதலாக வண்ணக் கலவைகளுடன் சித்திர சிற்பக் கண்காட்சியை நடத்திய முதல் தமிழன்

    5. இளையவர் இசையில் வெளிவந்த மெல்லிசை இறுவெட்டு வெளியீடு

    யேர்மனியிலுள்ள Lüdenscheid  நகரத்தில் 2000 ஆம் ஆண்டு    முதன்முதலாக இளைஞனின் (20 வயது நிரம்பிய சஞ்ஜீவன் சிவகுமாரன்) இசையமைப்பில் (முறைப்படி சட்டவிதிகளுக்கு அமைந்தது) சிறந்த தொழில்நுட்பத்துடன் தமிழில் மெல்லிசை இறுவெட்டு தயாரித்து வெளியீடு செய்ததுடன், பால்குடி மறந்த கையோடு, கெட்டபையன், பைரவன், மாயவன், சிவமயம் போன்ற   10 க்கும் மேற்பட்ட இசை இறுவெட்டுக்கள் யேர்மனியில் வெளியீடு செய்த முதல் தமிழன்.  

    6.ஆன்மீக சஞ்சிகை

    யேர்மனியில் முதன்முதலாக சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் பெயர் சூட்டிய  சிவத்தமிழ் என்னும் ஆன்மீக சஞ்சிகையை 2004 ஆம் ஆண்டு Dielenberg  என்னும் இடத்தில் வெளியீடு செய்து வைத்தது மட்டுமல்லாமல் 15 ஆவது ஆண்டு சிறப்பு மலரையும் ஸ்வெற்றா நகரத்தில் வெளியீடு செய்து வைத்த முதல் தமிழன் 

    7. கனடிய தமிழர் தகவல் ஐரோப்பிய விருது.

    கனடா தமிழர் தகவல் நிறுவனத்தினரால் 1999 ம் ஆண்டு கனடிய தமிழர் தகவல் ஐரோப்பிய விருதை ஜேர்மனியிலிருந்து சென்று பெற்றுக்கொண்ட முதல் தமிழன். கனடாவிலே வெற்றிமணி பத்திரிகை 1995 முதல் 2000 ஆண்டுவரை வெளிவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    8. பரதக்கலை சஞ்சிகை

    இலங்கையிலே பரதக்கலையை முன்னிறுத்தி வந்த முதல் சஞ்சிகையாகிய அபிநயா என்னும் சஞ்சிகையை வெளியீடு செய்த முதல் தமிழன்.

    9. கோடைவிடுமுறை இதழ் ஓவியா 

    யேர்மனியில் 1995 ஆம் ஆண்டு வெற்றிமணியின் கோடைவிடுமுறை கால இதழாக ஓவியா என்னும் சஞ்சிகையை முதன் முதலாக தமிழில் வண்ணப் புத்தகமாக வெளியீடு செய்து வைத்த முதல் தமிழன்.

    10. யேர்மனியில் தமிழ் வெளியீட்டகம் 

    யேர்மனியிலே தன்னுடையதும் பிறருடையதுமான 30க்கும் மேற்பட்ட  புத்தகங்களை தானே வடிவமைத்து தன்னுடைய செலவில் அச்சடித்து வெற்றிமணி வெளியீடாக வெளியீடும் செய்து வைத்தும் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்த முதல் தமிழன்.

    இந்நூல்களில் நான் தேடிப்பெற்ற சிலவற்றை இங்கு குறிப்பிடுகின்றேன். அவ் அனைத்து புத்தகங்களும் 1000 பிரதிகள் வெளிவந்ததுடன் அத்தனையும் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.  

    1. புதிய வடிவங்கள் - கண்ணா
    2. எழுத்தாளன் கவிஞர் வி.கந்தவனம்
    3. ஓவியா - வெற்றிமணி வெளியீடு
    4. இடைவெளி - மாதவி  
    5. காதல் கிராமத்தின் சாரளம் - மாதவி
    6. அது என்பது இதுவா – மாதவி
    7. மாறன் மணிக்கதைகள் - கனக்ஸ்
    8. யேர்மனியில் கவிஞர் வி.கந்தவனம்
    9. பல்கலைச் செல்வர்   சிவகுமாரன் சிறப்புமலர்
    10. வெற்றிமணிகள் கவிச்சித்திரா, சுகந்தினி, சுதர்சன்
    11. காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி - இந்துமகேஷ்
    12. பரதமாதேவி வானதி சிறப்புமலர்
    13. சிவத்தமிழ் முத்துவிழா – தங்கம்மா அப்பாக்குட்டி சிறப்புமலர்
    14. தமிழே காதல் - நிலாமகள் (வர்ணச்சித்திரங்களுடன் கவிதையும் 
           இணைந்து யேர்மனியில் வந்த முதல் நூல்)
    15. அதிசய உலா – சிவகுமாரன்
    16. காதோடு காதாக – கதிர் துரைசிங்கம் (நகைச்சுவைத் துணுக்குகள் 
            முதல் புத்தகவடிவம் பெற்றது) 
    17. திறவுகோல் - கனக்ஸ்- 
    18. யாழ்ப்பாணத்து நாட்டிய மரபு – வலன்ரீனா
    19. பொன்னும் மணியும் - சிவக்குமாரன்
    20. அபிநயா – வலன்ரீனா
    21. பிஞ்சுமனங்களின் தேடல் - பேராசிரியர் மனோன்மணி 
            சண்முகதாஸ்
    22. சிறுவர் பாடல்கள் - சி.நடராஜா
    23. கலைமகன் மணிவிழா – சிவகுமாரன் - மணிவிழா)
    24. யாழ் வெற்றிமணி – வலன்ரீனா

    இதில் இவர் தந்தை வெற்றிமணி வெளியீடாக வெளியீடு செய்த புத்தகங்களாகக் குறிப்பிடத்த தக்கவை

    1. தம்பிக்கு - டாக்டர்.நந்தி
    2. நாடகம் - கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை
    3. கீரிமலையினிலே நூல்நயம் (கவிஞர்.வி.கந்தவனம்) இரசிகமணி  
           கனகசெந்திநாதன்
    4. கணக்கியலுக்கோர் அறிமுகம் - வை.சிவஞானசுந்தரம்
    5. பரீட்சையில் சித்தியடைவது எப்படி - கவிஞர்.வி.கந்தவனம்
    6. ஒரே ஒருதெய்வம் குறுநாவல் - சிவகுமாரன்

    இவ்வாறு பல சாதனைகளை யேர்மனியில் செய்த இவர் பல முதல்களின் முதல்வராகினார். பல திறமைகளையும் அர்ப்பணிப்புக்களையும் செய்து பிறருக்காகத் தன் வாழ்நாள்களை செலவிட்டு தமிழுக்கும் தமிழர்களுக்கும் சேவையாற்றும் வெற்றிமணி ஆசிரியரின் தியாக மனப்பான்மையின்றி இந்த வெற்றிமணி 25 ஆண்டுகளை ஐரோப்பாவிலே கடந்திருக்காது என்பதை உறுதியாக இந்த சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்துவது அவசியமாகும். இதேவேளை அவரின் இம்முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்குகின்ற எழுத்தாளர்களும் வர்த்தக நிறுவனங்களும் பாராட்டப்பட வேண்டியவர்களே.

    பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ பாரிலுள்ள
    நூலெல்லாம் வள்ளுவன் செய்நூலாமோ – பாரில் 
    தோன்றிய பத்திரிகையெல்லாம் வெற்றிமணி போலாமோ
    போற்றத் தகுதியெனத் தெளி 

    கை வந்தமரும் எதுவும் கருத்தைக் கவர வேண்டும் 
    கண் தோன்றும் எதுவும் மனத்தைக் கவர வேண்டும் 
    சொல் பெற்று உயரும் வடிவம் சொந்தமாக வேண்டும் 
    அதுவே விண்முட்டும் புகழை உவந்தளிக்கும்

    25 ஆவது ஆண்டில் காலடி பதிக்கும் வெற்றிமணிக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள்.








    4 கருத்துகள்:

    1. தங்கள் பதிவு காலத்திற்கு அவசியமானது நன்றி அன்புடன் மு.க.சு.சிவகுமாரன்.

      பதிலளிநீக்கு
    2. சிறப்பு. நல்ல தொகுப்பு. வாழ்க வெற்றிமணி ஆசிரியரின் பணிகள். தெரியாத தகவல்களை தெரிந்து கொண்டேன். நன்றி கௌசி சிவபாலன்.

      பதிலளிநீக்கு
    3. வாழ்த்துக்கள். நல்ல பதிவு. வெற்றிமணி ஆசிரியரின் பணிகள் தொடர வாழ்த்துகின்றோம்.

      சாந்தினி

      பதிலளிநீக்கு
    4. "பல முதல்களின் முதல்வர் மு.க.சு.சிவகுமாரன் அவர்களின் வெற்றிமணி" பற்றிய தகவல்கள் அறிந்து பெரிதும் உவந்தோம்.இவற்றைப் பதிவு செய்தமைக்கு உளமார்ந்த நன்றிகள்.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...