• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    திங்கள், 21 ஜூன், 2021

    தமிழ் வான் அவையின் ஒருவருட பூர்த்தி நிகழ்வு

     




    தமிழ் வான் அவையின் இணையவழிப் பன்னாட்டு இலக்கியச் சந்திப்பின்  ஒருவருட பூர்த்தியைச் சிறப்பிக்கும் நிகழ்வு   27.06.21 அன்று  இலங்கை இந்தியா நேரம் 17.30 மணிக்கும் ஐரோப்பிய நேரம் 14.00 மணிக்கும் நடைபெற இருக்கின்றது. 

    இந்நிகழ்வில் எழுத்தாளர் பவா செல்லத்துரை அவர்கள் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து சிறப்பிக்க இருக்கின்றார்.  "ஜெயகாந்தனின் நவீன சிறுகதைகள்" என்ற தலைப்பிலே உரையாற்ற இருக்கின்றார். 💓💓💓💓

    இதுவரை 12 மாதங்களும் கலந்து சிறப்பித்த சிறப்புரையாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்பதையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்😀😀😀 

    கீழே தரப்பட்டுள்ள இணைப்பை அழுத்தி நீங்களும் கலந்து சிறப்பிக்கும்படி அன்புடன் அழைக்கின்றேன். 

    👇👇

    https://us02web.zoom.us/j/2509770769?pwd=M0kyckx0aHdVL0xNeGR4MnRzYkVGdz09

    Meeting ID: 2509770769

    Passwort : 246810




    புதன், 26 மே, 2021

    பேராசிரியர் கைலாசபதி




    ஒவ்வொரு மாதமும் இறுதி வார ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனியில் நடைபெறுகின்ற தமிழ் வான் அவையின் இணையவழிப்  பன்னாட்டு இலக்கியச்  சந்திப்பு இம்மாதம் 30.05.21 அன்று இலங்கை நேரம் 17.30 மணிக்கு ஆரம்பித்தது. 

    இன்னிகழ்ச்சியில் இலங்கையின் தலைசிறந்த எழுத்தாளர் பேராசிரியர் கைலாசபதி அவர்கள் பற்றிப் பேசப்பட்டது. இக்களத்திலே பேரறிஞர் பேராசிரியர் மௌனகுரு அவர்கள் பேராசிரியர் க. கைலாசபதியைப் புரிந்து கொள்ளல் என்ற தலைப்பிலும், கவிஞர் முத்து நிலவன் அவர்கள் சங்க இலக்கியத்திற்கு புது வெளிச்சம் தந்த பேராசிரியர் க.கைலாசபதி என்ற தலைப்பிலும்  உரையாற்றினர். 



     

    ஞாயிறு, 9 மே, 2021

    அம்மா

     



    அம் என்று அடையாளம் காட்டி 

    அம்மாவை அழைத்த போது 

    உலகமே தன் காலடியில் என்ற

    மகிழ்ச்சியைக் கண்ட தெய்வம் அம்மா


    குழந்தையின் முதல் வார்த்தை அம். 

    அம் கபால உச்சியை திறக்கும் மந்திரம். 

    இயற்கை ஆன்மீக சக்தியை இழுக்கும் மந்திரம். 

    இம் மந்திரமே குழந்தை முதல் மொழி

    வாழ்க்கையை தன்னோடு இணைப்பதற்கு 

    பேசத் தொடங்கும் முதல் மொழி அம்.


    உலகத்தை காட்டியதும் அம்மா. 

    அப்பாவை தெரியப்படுத்தியதும் அம்மா. 


    கருவறை சுகம் இவ்வுலகில் 

    என்றும் எங்கும் எப்போதும் கிடைப்பதில்லை. 

    கருவறை அமைதி, ஆனந்தம் 

    எங்குமே கிடைப்பதில்லை. 


    தொட்டிலிலே தாலாட்ட, தோளினிலே கைதட்ட, 

    மடியினிலே தலைதடவ தாய் 

    கரங்கள் போல் சிறந்த கருவி 

    எங்குமே படைக்கப்படுவதில்லை.


    சோற்றுப் பருக்கைகளை கறியுடனே குழைத்தெடுத்து 

    நிலவைக் காட்டி சோறூட்டிய அனுபவ இன்பம் 

    இனி என்றுமே கிடைக்கப் போவதில்லை. 


    அம்மாவின் சேலைத் தலைப்பில் முகம் துடைக்கையிலே 

    வருகின்ற வாசனைக்கு வரைவிலக்கணம் கிடையாது.


    அம்மாவின் கறிச்சுவைக்கு இணையாக 

    எந்த அறுசுவையும்  கிடையாது


    பள்ளிப் பருவத்திலே  துள்ளித் திரியும் போது  

    துடுக்கடுக்கிய அம்மாவின் அந்த மந்திர வார்த்தைக்கு 

    இணையான மந்திரம் உலகத்தில் எங்குமே இல்லை.


    அம்மாவின் ஒரு பார்வை போதும் எம்மைக் கட்டிப் போட


    அம்மாவின் ஒரு சொல் போதும் எமைத் திருத்தி வழி நடத்த


    மழைக்குக் குடையானாள், பனிக்கு நெருப்பானாள், 

    நித்திரைக்குப் போர்வையானாள், நோய்க்கு மருந்தானாள், 


    வயதான பாட்டியும் தன் தாய்க்குக் குழந்தைதான்


    கொழுத்த பையனும் தன் தாய்க்கு ஒல்லிதான்


    உடல் முழுதும் மலம் தடவி பிள்ளை வந்தாலும் 


    சந்தனம் எனக் கைகளால் கழுவி விடும் தாயை


    அநாதை விடுதிகளில்; யாரோ பராமரிக்க விடுகின்றார்;.


    சேர்த்து வைக்கும் சொத்தெல்லாம் 

    அம்மா என்ற சொத்துக்கு ஈடாகாது

    இத்தத்துவம் அம்மா எனும் பேரின்பத்தை

    இழந்தவர்களுக்கே புரியும்


     




    சனி, 10 ஏப்ரல், 2021

    பாக்குவெட்டி


    பாரிஸ் நோக்கிப் பயணம் செய்வதற்காக அந்தத் தொடரூந்து காத்துக் கொண்டு நின்றது. அவசரமாக ஓடிச் சென்று தொடரூந்துக்குள் புகுந்தேன். இலக்கங்களைத் தேடி இருக்கையில் அமர்வதற்கு எத்தனித்த நான் என்னுடைய பொதிகளை இருக்கையின் மேலுள்ள பகுதியில் வைப்பதற்காக முயற்சித்தபோது ஒரு கரம் உதவிக்கு வந்தது. அது என்னுடைய இருக்கையின் முன்னே அமர்ந்திருக்கும் மலையாள மொழிபேசும் ஒருவர் என்பதை அறிந்து கொண்டேன். தொங்கிக் கொண்டிருந்த ஒரு பெல்ட்டை தன்னுடைய பேனாவால் தட்டிவிட்டார். என்னுடைய பையைத் தூக்கி மேலே வைத்தார். நாம் இருவரும் உரையாடிக்கொண்டிருக்க தொடரூந்து தொடர்ந்தது. நான் பேச்சினூடே அவருடைய தொடர்பு இலக்கத்தைக் கேட்டேன். கையிலிருந்த பேனாவை என்னிடம் நீட்டினார். அதில் எழுதப்பட்டிருந்த இலக்கங்கள் எனக்கு நன்றாகப் புரியவில்லை. சிரித்தபடி பேனாவை வாங்கி ஒரு தடவை திருப்பினார். பிரகாசமான வெளிச்சத்துடன் விலாசமும் தொலைபேசி இலக்கமும் தெரிந்தது. இருட்டுக்கு ஒளியூட்டியாக இதைப் பாவிக்கலாம் போல் இருக்கிறதே என்றேன். ஆம் என்று சிரித்தபடி மூடியைத் திருப்பிக் காட்டினார். நான் பேசுவதை அப்பேனா ஒலிப்பதிவு செய்து கொண்டிருந்தது. ஆச்சரியத்துடன் ஒரு பேனாக்குள் இத்தனை விடயமா என்று கேட்டபோது கீழ்ப்பகுதியைத் திருப்பி கைத்தொலைபேசி இலக்கங்களைத் தட்டினார். சிரிப்புத்தான் வந்தது. பேனாவை எடுத்து தன்னுடைய சட்டைப் பையில் பொருத்தினார். பேனா மூடியின் கம்பியில் ஒரு அழகான முத்துப் போன்ற பகுதியில் புகைப்படம் எடுப்பதற்குரிய கமெரா தென்பட்டது. ஆச்சரியத்தில் கண்கள் விரித்தேன். ஒரு பேனாக்குள் இத்தனை விடயமா என்று கேட்டபோதே ஒரு பாடல் என் நினைவுக்கு வந்தது. 


    விறகு தறிக்க கறி நறுக்க

    வெண்சோற் றுப்புக் கடகு வைக்கப்

    பிறகு பிளவு கிடைத்த தென்றால்

    நாலா றாகப் பிளந்து கொள்ளப் 

    பறகு பறகு என்றே சொறியப்

    பதமா யிருந்த பாக்கு வெட்டி

    இறகு முளைத்துப் போவது ண்டோ?

    எடுத்தீ ராயிற் கொடுப்பீரே



    என்று இராமச்சந்திரக்கவிராயர் பாடிய பாடல் ஒன்று ஞாபக்தில் தட்டியது. புலவர் வைத்திருந்த பாக்குவெட்டி காணாமல் போனது. அந்தப் பாக்குவெட்டி தனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக் கூறி எடுத்தவர் கொடுப்பாரேல் தன் மனக்குறை தீருமென இப்பாடலைப் பாடுகின்றார். என்னுடைய பாக்குவெட்டியால் சமையலுக்கு வேண்டிய விறகுகளை தறிப்பேன். காய்கறிகளை நறுக்குவேன். சோற்றுக்கு அரிசி அல்லது உப்பு இல்லையென்றால், அதனை அடகு வைத்து வாங்குவேன். பாக்குப்பிளவு கிடைத்தால் அதனை 4 பாகங்களாகப் பிளப்பேன். உடம்பிலே அரிப்பெடுத்தால் பறகு பறகு என்று சொறிவேன். இப்படியான பாக்குவெட்டி இறகு முளைத்து பறந்து சென்றிருக்க முடியாது. யாராவது எடுத்தீர்களானால் தயவு செய்து கொடுத்துவிடுங்கள் என்று அழகாகப் பாடுகின்றார்.  சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும் என்பதை அறிந்திருக்கின்றோம். இந்த பாக்குவெட்டி சமாச்சாரத்திலே நான் சிறுவயதில் பயன்படுத்திய ஒரு பென்சில் நினைவுகளைத் தீட்டியது. ஒரு நீண்ட பென்சில் அதன் கீழே ஒரு பிளாஸ்ரிக்காலான கை. அவசரத்தில் முதுகு சொறிய பலர் அதைப் பயன்படுத்துவார்கள். கையை நீட்டு என்று ஆசிரியர் அந்தப் பென்சிலைத் திருப்பி அடிப்பதை கண்டிருக்கின்றேன். இதைவிட பின் பென்ஞ்சில் இருக்கும் மாணவன் முன் பென்ஞ்சில் இருக்கும் மாணவனை சொறிந்து விட்டு பேசாமல் இருக்கவே அதன்மூலம் பெரிய பிரச்சினைகள் தோன்றியதையும் கண்டிருக்கின்றேன். 


    ஹமறால கதைகள் என்ற பெயரில் பல ளுசிங்கள கதைகள் இருக்கின்றன. அதில் ஹமகாமினி என்று ஒரு கதை. ஹமகாமினியை திருமணம் பேசுவதற்காக ஒரு தரகர் அவர் வீட்டிற்கு வருகின்றார். அப்போது அப்பெண் அவரை முதலில் ஒரு உரலைத் திருப்பி அதன் மேல் அமரச் செய்கின்றார். சிறிது நேரத்தின்பின் சற்று எழுந்து கொள்ளுகின்றீர்களா புட்டுக்கு சம்பல் இடிக்க வேண்டும் என்று எழுப்புகின்றார். சம்பல் இடித்தபின் உரலைத் திருப்பி அவரை இருக்கச் செய்கின்றாள். பின் கொஞ்சம் எழும்புகின்றீர்களா? பரணில் இருந்து ஒரு பொருள் எடுக்க வேண்டும் என்கிறாள். எடுத்த பின் திரும்பவும் இருக்கச் சொல்லிவிட்டு இந்த கதவு அடித்துக் கொண்டிருக்கின்றது கதவுக்கு அடை வைக்கவேண்டும் கொஞ்சம் எழும்புகின்றாள் என்கின்றாள். சிறிது நேரத்தின் பின் திரும்பவும் திருப்பி அவரை இருக்க வைக்கின்றாள். இப்படி பலவிதமான செயல்களுக்கு உரலைப் பயன்படுத்துகின்றாள். வறுமையில் ஒரு பொருள் எவ்வாறு பல தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது என்பதை இக்கதை எடுத்துக் காட்டுகின்றது.


    ஆனால் தற்காலத்தில் நானோ ரெக்னோலஜி மூலம் பல தேவைகளை ஒரு பொருளுக்குள் அடக்கும் தொழில் நுட்பம் ஓங்கிவிட்டது. அதன் ஒரு வடிவம் கைத்தொலைபேசி. அக்காலத்தில் ஒரு பொருள் பல தேவைகளை நிறைவேற்றும் போது மற்றவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பலனையே தந்தது. ஆனால் இன்று ஒருபொருள் பல தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற போது  சூழலைப் பாதிப்பதுடன் தமது உடல்நலத்தையும் உளநலத்தையும் பாதிக்கின்றது. இதுவே இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கைக்கும் செயற்கையோடு ஒட்டிய வாழ்க்கைக்குமிடையே உள்ள பேதம் ஆகும்.

    சித்திரை 2021 வெற்றிமணி பத்திரிகைக்காக என்னால் எழுதப்பட்ட கட்டுரை 

                                  


    சனி, 3 ஏப்ரல், 2021

    தமிழ் வான் அவை நடத்திய விபுலானந்தா அடிகளார் 129 ஆவது பிறந்தநாள் விழா

     



    தமிழ் வான் அவை 28.03.202128.03.2021 அன்று நடத்திய சுவாமி விபுலானந்தரின் 129 ஆவது பிறந்தநாள் விழா zoom வழி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் காணொளிகள் இப்பதிவில் இடப்பட்டுள்ளன.



               

    செவ்வாய், 9 மார்ச், 2021

    கல்லா இளமை

     



    இற்றைக்கு முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் இலங்கை மண்ணிலிருந்து உயிர் மட்டும் இருந்தால் போதும் என்று நினைத்தவண்ணம் பல தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் செய்து மக்கள் பலர் புலம்பெயர்ந்தனர். அன்று அவர்களுக்கு இளமைத் துடிப்பும், பலமும், துணிவும் மிதமாக இருந்தன. அவர்கள் எண்ணங்களில் உழைப்பு, ஊக்கம், உயர்வு என்பன மட்டுமே நிறைந்திருந்தன. வாழுகின்ற நாட்டிலே ஓடிஓடி உழைத்து ஓடாய்த் தேய்ந்து தம்மை நிலைநிறுத்தினார்கள். இவ்வாறு வாழ்ந்த ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மாறாத வடுக்களும் மறக்க முடியாத ஒவ்வொரு கதையும், நெஞ்சை விட்டு அகலாத நினைவுகளும் நிறைந்திருக்கும்.


    அன்று இருந்த துடிப்புக்களும் சுறுசுறுப்பும், உடற்தென்பும்  வற்றிப்போன நிலையில் வாழ்க்கையை விட்டு ஒவ்வொருவராகக் கழன்று கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் வயதான பலரும் தம்முடைய நினைவின் அலைகளைப் பின்நோக்கியே பயணிக்கச் செய்கின்றார்கள். பேசுவதற்கு வாய் திறந்தவுடன் நான் அந்தக்காலத்தில் என்று ஆரம்பிப்பது வழக்கமாகி விடும். கடந்தகால நினைவுகளை காண்போரிடம் சொல்லி இன்பம் அனுபவிப்பது வழக்கமாகி விடுவது கண்கூடாகக் காணக்கூடியதாக இருக்கின்றது. தம்முடைய உடல் இங்கே மனம் அங்கே என்பதுபோல் தாயகத்துத் தெப்பக்குளத்தில்  மூழ்கி எழுந்து ஏரியிலே நீச்சலடிப்பது, மாமரநிழலிலே இருந்து மாம்பழங்கள் உண்பது, பழஞ்சோற்றுக் கஞ்சியிலே ஊறுகாய் சேர்த்து உண்பது, தென்னை மரத்தின் கீழ் இருந்து தென்னங்கள்ளுக் குடிப்பது, பனம்பழத்தை கடித்திழுத்து பாதிச்சுவையுடன் காதலிக்குப் பகிர்ந்தளிப்பது உண்பது, சுவைபட நாவூறப் பேசிப்பேசி மகிழ்வது, நண்பர்கள் குழாமுடன் கூடிக் குதூகலித்துத் தம் இளமைக்கால சுறுசுறுப்பும், பெண்களிடம் வம்புச்சண்டை போடுவதும் வாலிபத் திணாவெட்டாக வீர விளையாட்டுக்களில் ஈடுபட்டதையும் நினைத்து நினைத்து இன்புற்றிருப்பதும் தம்முடைய பேரப்பிள்ளைகளிடம்  சொல்லி மகிழ்வதும் முதுமைக்கால வழக்கம்.  


    இவ்வாறே புறநானூற்று 243 ஆவது பாடலிலே ஒரு முதியவர் பாடுவதாக இப்பாடல் அமைந்திருக்கின்றது. இப்பாடலை தொடித்தலை விழுத்தண்டினார் என்னும் புலவர் பாடுகின்றார்.


    இனிநினைந் திரக்க மாகின்று திணிமணற்

    செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்

    தண்கய மாடு மகளிரொடு கைபிணைந்து

    தழுவுவழித் தழிஇத் தூங்குவழித் தூங்கி

    மறையென லறியா மாயமி லாயமொடு

    உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து

    நீர்நனிப் படிகோடேறிச் சீர்மிகக்

    கரையவர் மருளத் திரையகம் பிதிர

    நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து

    குளித்துமணற் கொண்டகல்லா விளமை

    அளிதோ தானே யாண்டுண்டு கொல்லோ

    தொடித்தலை விழுத்தண் டுன்றி நடுக்குற்

    றிருமிடை மிடைந்த சிலசொற்

    பெருமூ தாளரே மாகிய வெமக்கே!


    பல முதியவர்கள் ஒன்றாகச் சேர்ந்து இருக்கின்ற ஒரு சபை. அதிலே முதியவாகள் தம்முடைய இளமைப் பருவத்தைப் பற்றி உரையாடிக் கொண்டு இருக்கின்றார்கள். அப்போது கையிலே இரண்டு பக்க நுனிகளிலும் இரும்புப் பூண் பிடித்த தடியை வைத்துக் கொண்டு தொடித்தலை விழுத்தண்டினார் என்று பாடல் மூலம் இப்பெயரைப் பெற்ற புலவர்; ஏக்கத்துடன் தன் எண்ண அலைகளை மீட்டுப் பாடுகின்றதாக இப்பாடல் அமைந்திருக்கின்றது. 


    குளிர்ந்த பொய்கையின்கண் செறிந்த மணலிலே செய்யப்பட்ட பாவைக்கு பறிக்கப்;பட்ட பூவைச் சூடி  மகிழும் பெண்களுடன் கைகோர்த்து அவர்கள் தழுவினவிடத்தே தழுவி, அசைந்த இடத்து அசைந்து ஒளித்துச் செய்கின்றவை அறியாத வஞ்சனை அறியாத இளமைந்தருடனேயே கூட உயர்ந்த கிளைகளையுடைய மருத நில மரங்கள் நிறைந்த ஆழமான நீரையுடைய துறையிலே வந்து நீருக்கு அண்மையில் அமைந்திருக்கும் மரக்கொம்பிலே ஏறி கரையிலே இருப்பவர்கள் வியக்கும்படியாக நீர்த் திவலை தெறிக்க பொய்கைக்குள்ளே பாய்ந்து நீந்தி ஆழச் சென்று அங்குள்ள ஆழக்கடல் மணலை அவர்களுக்கு கையிலே அள்ளி எடுத்து வந்து காட்டிய அந்த பயம் அறியாத இளமை இப்போது எங்கே இருக்கின்றது? விழுதினால் செய்யப்பட்ட பூண் போடப்பட்ட பிடியையுடைய கொம்பினாலான தடியை ஊன்றி இருமலிடையே சில சொற்கள் மட்டுமே பேசக்கூடிய முதுமையாளர்களாகிய எமக்கு அந்த இளமை இன்று உண்டோ. அந்நிலை நினைந்து இரங்கத்தக்கதாகும் என்று இப்பாடலைப் பாடுகின்றார். 


    கடந்து சென்ற நாட்கள் இப்போது நினைத்து ஏங்கினாலும் வருவதில்லை. ஆனால், அதே விளையாட்டு, அதே துடிப்புடன் இன்றைய இளையவர்களைக் காணும் போது அன்றைய நிலையை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடிவதில்லை. அது எந்தக் கண்டம் கடந்தாலும் ஒவ்வொரு முதியவர்களும் அனுபவிப்பது நிச்சயமானதாகவே இருக்கும். 


    ஆணும் ஆணும் குழந்தை பெற விஞ்ஞானம் சாத்தியமாக்குமா?

      ஆண் பெண் என்னும் இரு பால் பிரிவினர் உயிரினங்களிடையே காணப்படுகின்றன . இவை பால் கவர்ச்சியின் மூலமும் இயற்கை அமைப்பின் மூலமும் ஒன்றோடு ஒன...