• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 29 அக்டோபர், 2017

    எழுத்தாளர் ஜீவகுமாரன் அவர்களுடைய குதிரைவாகனம் நாவல் விமர்சனம்




    இந்த நூல் முதன்முதலாக தமிழ்நாடு ஈரோடு மாவட்டத்தில் வெளியீடு செய்யப்பட்டது. அடுத்ததாக எங்கள் ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தினால் அறிமுகம் செய்யப்படுகின்றது என்பதைப் பெருமையுடன் சொல்லிக்கொள்ளுகின்றேன்.

         இந்த நூலை வாசிப்பதற்காக கையில் எடுத்த போது 245 பக்கங்களாக இருந்தது. இந்த 245 பக்கங்களில் இக்குதிரை வாகனத்தில் ஏறி 5 தலைமுறைகளுக்கூடாக சுமார் 60 வருடகால நிகழ்வுகளுக்கூடாகப் பயணப்பட்டேன். இதற்கு இந்த விமர்சனம் செய்வதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஏனென்றால், 60 வருட காலம் நான் வாழவில்லை. ஆனாலும் இக்கதையின் மூலம் 60 வருட காலங்கள் வாழ்ந்திருக்கின் உண்மை. 

    இந்தப்பயணம் சாதாரணமான கார் அல்லது பஸ் பயணம் அல்ல குதிரை வாகனப்பயணம். குதிரை வாகனப்பயணம் எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். துள்ளித் துள்ளி ஓடும் பயணம். ஒவ்வொரு அத்தியாயமாக டென்மார்க் அத்தியாயத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கித் துள்ளி ஓடுகின்றார். பின் யாழ்ப்பாணம் அத்தியாயத்திலிருந்து டென்மார்க் துள்ளி ஓடுகின்றார். வாசிக்கும் நாமும் துள்ளளோடு முடிவுவரை விடாப்பிடியாக குதிரை வடத்தைப் பிடிப்பதுபோல் இந்நூலைப் பிடித்து வாசித்து முடிப்போம். அதனால்தான் குதிரை வாகனம் என்று பெயர் வைத்திருக்கின்றார் என்று நான் சொன்னால், அது உண்மையல்ல. அது ஒரு சென்ரிமென்ற் கதை என்பதை நீங்கள் வாசிக்கும் போது தான் புரிந்து கொள்வீர்கள். தாங்;கிய நூலை கீழே வைக்கமுடியாத படி அத்தியாயம் அத்தியாயமாய் சண்முகத்தார் பேரன் என்னைக் கதை முழுவதும் அழைத்துக் கொண்டு போகின்றார். மரணப்படுக்கையில் இருக்கும் சண்முகத்தாரின் பேரனின் நினைவுகளே இந்தக் கதையின் சாரம். 

        சந்ததி மாற்றங்கள், சடங்குகளின் நிகழ்வுகள், கோயில் விழாக்களின் மகிமை, உரிமை, அதனை விட்டுக் கொடுக்காத பண்பு,  உறவுகளின் உன்னதம், நட்பின் மகத்துவம், நாட்டின் கலவரம், சாதிக்கட்டமைப்புக்கள், அதன் பிடியில் விடுபடாது வாழும் மனிதர்கள், குடும்பப் பிணக்குகள், கிராமிய வாழ்வில் பிணைந்து கிடக்கும் பண்புகள், புலம்பெயர்ந்த மண்ணின் வாழ்வு முறை, தொடர்ந்து வரும் சமூகப் பண்பில் பாதிக்கப்படும் தலைமுறை, புலம்பெயர்வின் வாழ்க்கை முறை இவ்வாறு அப்பப்பா அடுக்கிக் கொண்டே போகும் அற்புத சுரங்கமாகிய இந்தக்கதை உண்மை என்று உணரும் வகையில் எழுதப்பட்டிருக்கின்றது. நான் சொல்லுகின்றேன். எழுத்தாளர்கள் பிரம்மாக்கள். புத்தகங்களைக் கண்டு முகத்தைச் சுளிக்காதீர்கள். அவர்கள் நல்ல உள்ளங்களைப் படைக்கின்றார்கள். 


            வாசக நெஞ்சங்களுக்கு சொல்லுகின்றேன். இந்தக்கதை ஒரு வரலாற்றுப் பதிவு. அது உண்மையோ சோடிக்கப்பட்ட கதையோ அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. உங்கள் பகுத்தறிவுக்குள் பதியப்பட வேண்டிய பொக்கிசங்கள் நிறைந்த சமூக நாவல்; ன்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 

               சண்முகத்தாரின் பேரன் இறுதிவரைத் தன் பெயரைச் சொல்லாமலே தனது கதையை அழகாக நகர்த்திக் கொண்டு செல்கின்றார். பேரன் வார்த்தைகள் மூலமாக யாழ் மண்ணிலே வாழ்ந்து பெரிய வீட்டில் குடியிருந்து அப்பப்பாவின் மரபணுக்களை முழுவதுமாகப் பெற்று முருகன் கோயிலின் குதிரை வாகனத்திற்குச் சொந்தக்காரராகி, அதன் உரிமையை இறக்கும் வரை கொண்டு சென்றதையும், 58 கலவரங்களும், அதனால், அப்பாவின் இன பேதமற்ற வாழ்க்கையையும் அறியக் கூடியதாக இருக்கின்றது. இனக்கலவரத்தால் தவறான வழியில் பிறந்த சிங்களப் பெண்ணை தன் சொந்தப் பெண்ணாக வளர்த்து அந்த சிங்கள இரத்தம் தமிழ் போராளிகள் குழுவில் இணைந்து மறைந்து போனமை, இஸ்லாமிய மக்களின் இடப்பெயர்வு, அதன் பின் இடையில் வருகின்ற வளமையான சகோதரர்கள் பேச்சுக்கள் குத்தல்கள், இவற்றையெல்லாம் தாண்டி டென்மார்க் நகரம் வந்து  அங்கும் தொடர்ந்த அவரின் நட்பு, டென்மார்க்கில் வளரும் இளந்தலைமுறையினரின் போக்கு என்று கதை தொடர்கின்றது.  தொடர்ந்து வரும் கதையில் பல உண்மைகளை ஜீவகுமாரன் அவர்கள் தன் தீர்ப்பின் மூலம் போட்டு உடைத்திருக்கின்றார். 

          ஒரு நூலை வாசிக்கின்ற போது அந்த எழுத்தாளனோடு நாம் பயணப்படுகின்றோம். அவர் எழுத்தோட்டத்தை இனம் காண்கின்றோம், அவரையும் நாங்கள் வாசிக்கின்றோம் என்பதே உண்மை. தன் வினை தன்னைச் சுடும் என்னும் தீர்ப்பைக் கூறியிருப்பதை ஜீவகுமாரன் அவர்களின் வார்த்தைகள் மூலம் அளந்து பார்த்தேன். தமிழர்களுக்கு ஒரு சாபம் தான் இந்தப்போர் என்பார்கள் என்று ஓரிடத்தில் கூறுகின்றார். ஏன் அப்படிக் கூறுகின்றார் என்பதை நீங்கள் படித்துப் பார்க்கும் போதுதான் உணர்ந்து கொள்வீர்கள். இவையெல்லாம் நீங்கள் படித்து அறிய வேண்டிய பாடங்கள்.

                  எம்முடைய இனம் எவ்வாறான அரக்கத்தனம் படைத்தவர்கள் என்பதை சில இடங்களில் கண்கள் சிவக்க வாசித்தேன். மொஸ்கோவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஆட்களைக் கடத்தும் ஏஜன்சிமார் போல் மனித ஜென்மங்களும் உண்டா என்று எண்ணத் தோன்றியது. இஸ்லாமிய இனத்தவன் கோயில் கிணற்றில் தண்ணீர் குடித்தது குற்றமா? சாதி குறைந்தவன் கடுக்கண் போட ஆசைப்படக் கூடாதா? சாதியைக் காரணமாகக் கொண்டு நட்பை இழக்கக்கூடாது என்பதற்காகவும் காதலை தடுப்பது நியாயமா? இவையெல்லாம் இக்கதையில் வரும் சம்பவங்கள் நீங்கள் படித்துப் பாருங்கள். உங்களுக்கே புரியும்.

                   இக்கதையிலுள்ள மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால், பல அற்புத பொன்மொழிகளை ஜீவகுமரன் அவர்கள் எமக்குத் தந்திருக்கின்றார். 

    "ஒருவன் தன்னைக் குற்றவாளியாக உணருந் தருணம் போல கொடிய நிகழ்வு எதுவும் இந்த உலகத்தில் இல்லை"

    "குலை தள்ளிய வாழையை அழகாக இருக்கிறது என்று யாரும் விட்டுவைப்பதில்லை. குலையுடன் சேர்த்து வாழையையும் வெட்டிவிடுகின்றார்கள். ஏன் குட்டி வாழைகள் செழித்து வளர வேண்டும் என்பதற்காக"

    "கெட்டுப் போயிருந்து நல்லா வரலாம். ஆனால், நல்லாய் இருந்த குடும்பம் கெட்டுப் போகக் கூடாது"

    "மகிழ்ச்சியை எங்கிருந்து நாம் பெறுகின்றோம் என்பதுதான் முக்கியமே தவிர எத்தனை இலட்சங்களும் கோடிகளும் செலவழித்துப் பெறுகிறோம் என்பது முக்கியமல்ல" 

    "நல்லவர்கள் மனம் நொந்து சொல்லும் வார்த்தைகளுக்கு வலிமையுண்டு"

    "எமது மனதும் வாழ்வும் தடுமாறும் பொழுது எமது வார்த்தைகளும் தள்ளாடிப் போகின்றன. குடை சரிந்த  வண்டியில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டு மாடுகள் தறிகெட்டு ஓடுவது போல"

                  தலைமுறை மாற்றத்தால் வருகின்ற வார்த்தைகளைப் பாருங்கள். "உங்கட தலைமுறைதான் வரவுக்கும் செலவுக்கும் லாப நட்டம் பார்த்து வாழுறது. எங்கட குடும்பம் அப்படி இல்லையடா. எங்கடை வீட்டிலை அன்று எத்தினை கொத்து அரிசி சமைக்க வேணும் எண்டு விடியற்காலையில் தெரியாது… ஆட்கள் வர வர சமையல் நடக்கிற வீடடா அது. கொடுத்துக் கொடுத்து அழிஞ்ச குடும்பம் இல்லையடா… கொடுத்துக் கொடுத்து நல்லா வாழ்ந்த பரம்பரையடா….. "என சண்முகத்தார் பேரன் மகனுடன் தன் பரம்பரைப் பெருமை பேசுகின்ற விடயமாக இருக்கிறது. 

             இக்கதை வாசிக்கும் போது என் பழைய நினைவுகள் என்னைத் தொட்டுச் சென்றன. இதில் ஒவ்வொருவரும் இவ்வாறான பல நினைவுகளில் வாழ்ந்திருப்பீர்கள். நன்றி ஜீவகுமாரன் அவர்களே. சொன்னால் நம்ப மாட்டீர்கள் சில இடங்களில் குதிரை வாகனத்தை அப்படித் தரித்து நிறுத்திவிட்டு, என் நினைவுகளை மீட்டிப் பார்த்துப் பின் மீண்டும் குதிரை வாகனத்தைச் செலுத்தினேன். ஏன் நாமென்ன சாதாரணமானவர்களா? உங்கள் ஒவ்வொருவரிடமும் ஓராயிரம் அநுபவப் புதையல்கள் நிறைந்து கிடக்கின்றன. என்ன சிலர் வெளியிடத் தெரியாதிருப்பார்கள். எழுத்தாளர்கள் அதை எழுத்தால் படம் போட்டுக் காட்டிவிடுவார்கள். அதனால், நீங்களும் உங்கள் நினைவுகளைத் தட்டிப் பார்க்க இவ்வாகனம் துணைபுரியும் என்பதை இதனை வாங்கி வாசிக்கும் போதே உணர்ந்து கொள்வீர்கள். 

              இக்கதையின் நாயகனும் நண்பன் பாலனும் இறக்கும் வரை தொடர் நட்புடன் இருந்து நட்புக்கு இலக்கணமாக இருந்தமையை பல இடங்களில் கதைமூலம் காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பாக இருந்தது. 

               ஒரு சமூகத்திற்குத் தேவையான அன்பு, பாசம், விட்டுக்கொடுப்புக்கள் நட்பின் மகத்துவம் இவற்றையெல்லாம் கதைக்குள்ளே கொண்டுவந்து சேர்ப்பது என்பது எவ்வளவு கடினமான காரியம் என்பது ஒரு எழுத்தாளராக இருக்கின்ற எமக்குத் தெரியாமல் இல்லை. இதனை வெறுமனே விமர்சனம் என்ற பெயரில் நான் சொல்லிக் கொண்டு போக இதுதானே கதை என்று யாரும் வாங்கிக் கொள்ளாமல் இருப்பது மனதுக்குச் சங்கடமாகவே படுகிறது. ஒரு கதை என்றால் அக்கதையின் கருவை மட்டும் அறியும் அவா எனக்கு இல்லை. ஒரு கதை வாசிக்கின்றோம் என்றால், அக்கதையினூடாக கதாசிரியர் சொல்லவருகின்ற பண்புகள், விடயங்கள், கலாச்சாரசூழல், மனிதமனங்களின் ஆக்கபூர்வமான சத்துக்கள், சமூகத்திற்கு எதைக் கற்பிக்க விரும்புகின்றார் போன்றவற்றிலேயே பொதுவான நாட்டம் எனக்கு இருக்கின்றது. அதுவே வாசகர்களுக்கும் இருக்க வேண்டும். அந்த வகையிலேயே இந்நூல் ஒவ்வொருவர் கைகளிலும் இருக்க வேண்டியது அவசியமாகின்றது. இதன் மூலம் நாம் கற்கின்ற விடயங்கள் அதிகமாக இருக்கும். 

                   ஒரு பாரதிராஜாவின் திரைப்படத்தையும், வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசத்தையும் மனதில் கொண்டுவந்து நிறுத்திய இக்கதையின் விமர்சனத்தை கோயிலிலே பூஜையை முடிக்கும் போது குருக்கள் சொல்லுகின்ற மந்திரமென ஜீவகுமாரன் அவர்கள் எழுதிய மந்திரமாகிய 

    சர்வே ஜனகா சுகினோ பவந்து 
    லோகா சமஸ்தா சுகினோ பவந்து 

    என்னும் மந்திரத்தை உச்சரித்து. அற்புதமான இவ்வரலாற்றுப் படிவினைப் படிப்பதற்கும் சுவைப்பதற்கும் விமர்சிப்பதற்கும் சந்தர்ப்பம் தந்த இந்நூலின் ஆட்சியாளர் ஜீவகுமாரன் அவர்களுக்கும் எழுத்தாளர் சங்கத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு இந்தப் புத்தகத்தை என்னிடம் யாரும் இரவல் கேட்காதீர்கள் இதன் அற்புதத்தைச் சொந்தமாய் வாங்கி அடிக்கடி சுவைத்து இன்புறுங்கள் என்று கூறி முடிக்கிறேன்.

    வெள்ளி, 13 அக்டோபர், 2017

    ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையின் 28 ஆவது ஆண்டு பரிசளிப்பு விழாவும் சுவாமி விபுலானந்த அடிகளாரின் ஆவணப்பட வெளியீடும்





    ஜேர்மனி டோட்முண்ட் நகரில் அமைந்த Helmholtz Gymnasium, Münster Str 122 இல் ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையால் நடத்தப்பட்ட 28 ஆவது ஆண்டு விழா 11.10.2017 அன்று விபுலானந்தர் அரங்கில் மிக விமர்சையாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி ஒரு முப்பரிமாண நிகழ்வாகவே நடைபெற்றது. முத்தமிழ்வித்தகர் விபுலானந்த அடிகளார் அரங்கு, முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு, மாமாங்கப் பிள்ளையார் ஆலய இசை இறுவெட்டு வெளியீடு என அமைந்திருந்தன. விபுலானந்த அடிகளாரின் நூல்களும் சிறப்பு விருந்தினர் பாபு தம்பிராஜா வசந்தகுமார் அவர்களால் கையளிக்கப்பட்டது.

                  இந்நிகழ்வில் கனடாவில் இருந்து சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த பாபு தம்பிராஜா வசந்தக்குமார் அவர்கள் தயாரித்த விபுலானந்த அடிகளாரின் ஆவணப்படமும், மாமாங்கப்பிள்ளையார் ஆலய இறுவெட்டும் ஜேர்மனியில் முதன்முதலாக வெளியீடு செய்யப்பட்டது.  இந்நிகழ்வுக்கு; ஐரோப்பா இலங்கை தொலைதூரக்கல்வி இயக்குனரும் பாரிஸ் உயர் கற்கைபீட பேராசிரியருமான சச்சிதானந்தன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். இவ்விழாவிற்கு ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையின் பொறுப்பாளர் தமிழ்மணி ஸ்ரீஜீவகன் அவர்கள் தலைமைவகித்தார். ஜேர்மனி தமிழ்க்கல்விச்சேவை பழைய மாணவர்கள் நிகழ்ச்சித் தொகுப்பினைச் செய்தனர்.

                  மங்களவிளக்கேற்றல், தமிழ்மொழி வாழ்த்துப்பாடல், அகவணக்கம், என மங்களகரமாக விழா ஆரம்பிக்கப்பட்டது. இவ்விழாவிற்கு முன்னைநாள் உறுப்பினர்கள், பாடசாலைகளின் நிர்வாகிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

                  இக்கல்விச்சேவையானது இலங்கைப் பாடத்திட்டத்திற்கமைய இலங்கை அரசினால் வழங்கப்படும் பாடநூல்களைக் கொண்டே மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கின்றது என்பது அறியக்கிடக்கின்றது. இக்கல்விச்சேவையின் கீழ் ஜேர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, சுவிஸ் போன்ற நாடுகளில் இருந்து மாணவர்கள் வருடம் ஒருமுறை நடத்தப்படும் ஆண்டு இறுதிப்பரீட்சையில் பங்கு கொள்கின்றார்கள். சித்தியடையும் மாணவர்களில் அதிகூடிய புள்ளிகளைப் பெறும் மாணவர்களுக்கு ஆண்டுவிழாவிலே பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வு வருடாவருடம் நடைபெறும். அவ்வாறே இவ்வருடமும் ஆண்டுவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் தத்தமது திறமைகளையும், கலைநிகழ்ச்சிகளையும் அரங்கில் வெளிப்படுத்தி மகிழ்ந்தார்கள்.

                    விபுலானந்த அடிகளார் ஆவணப்படம் சபையோருக்குக் காண்பிக்கப்பட்டு வெளியீடு செய்யப்பட்டது. ஆவணப்படத்தினை ஜேர்மனி கல்விச்சேவை நிர்வாகச் செயற்குழு உறுப்பினர் அம்பலவன் புவனேந்திரன் அவர்கள் விமர்சிக்க சிறப்பு விருந்தினர் பாபு தம்பிராஜா வசந்தகுமார் அவர்கள் ஆவணப்படத்தினை வெளியீடு செய்து வைக்க ஜேர்மனி தமிழ்கல்விச்சேவை பொறுப்பாளர் ஸ்ரீஜீவகன் அவர்கள் ஆவணப்பட இறுவெட்டினைப் பெற்றுக்கொண்டார்.
          

                    மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கப்பிள்ளையார் ஆலய இசை இறுவெட்டினை ஜேர்மனி தமிழ்க்கல்விச்சேவை நிர்வாகச் செயற்குழு உறுப்பினர் சந்திரகௌரி சிவபாலன் அவர்கள் விமர்சனம் செய்து வெளியீடு செய்து வைக்க, அதனை பிரதம விருந்தினர் சச்சிதானந்தம் அவர்கள் பெற்றுக் கொண்டார். 

                   ஜேர்மனியின் பல பாகங்களில் சங்கீதம் கற்பிக்கும் ஆசிரியர்கள் நால்வர் இணைந்து நடத்திய சங்கீதக் கச்சேரி பார்வையாளர்கள் மனதைக் கவர்ந்தது.

                 மாணவர்களின் பரீட்சை விடைத்தாள்களில் காணப்பட்ட சில சுவாரஷ்யமான விடயங்கள் அடங்கிய கருத்துக் களஞ்சியத்தினை விடைத்தாள்களை மதிப்பீடு செய்கின்ற ஆசிரியர்கள் வை.சிவராஜா, அம்பலவன் புவனேந்திரன், சந்திரகௌரி சிவபாலன், இராகுலன் ஸ்ரீஜீவகன் ஆகியோர் தொகுத்து வழங்கியிருந்தமை சுவாரஷ்யமாக இருந்தது.

                 சிறப்புவிருந்தினராக கலந்து கொண்ட பாபு தம்பிராஜா வசந்தகுமார் அவர்களும் முன்ஸ்டர் .பாடசாலை நிர்வாகிகளும் ஜேர்மனி தமிழ் கல்விச்சேவை பொறுப்பாளர் ஸ்ரீஜீவகன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்கள்.

                    பொறுப்பாளர் ஸ்ரீஜீவகன் அவர்கள் ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையின் ஆரம்பம் பற்றியும் அதனை அவர் இத்தனை வருடங்கள் கொண்டு நடத்துவதற்குத் தான் பட்ட கடினங்கள் பற்றியும் எடுத்துரைத்தார். பிரதம விருந்தினர் ஜேர்மனிக்கும் பிரான்ஸ்க்கும் இடையிலுள்ள தொடர்பு பற்றியும் தமிழ்மொழி பற்றியும், சுவாமி விபுலானந்தர் பற்றிய அரிய பல தகவல்களையும் கல்விச்சேவை பற்றியும் பலவாறாகத் தனது உரையை ஆற்றினார். வருகை தந்திருந்த பிரமுகர்கள் மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கிச் சிறப்புச் சேர்த்ததுடன் ஆசிச்செய்திகளும் வழங்கினர். ஜேர்மனி தமிழ்கல்விச்சேவை உபதலைவி திருமதி. கலா மகேந்திரன் நன்றியுரையுடன் விழா சிறப்பாக நடைபெற்றது.
     






    வியாழன், 28 செப்டம்பர், 2017

    பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல்ல கால வகையினானே


    மொழி உணர்வு என்பது கட்டமைக்கப்படுவதுதானே அன்றி இயற்கையான ஒன்றல்ல. 

    மொழி என்பது ஒரு பரிமாற்று ஊடகம், தொடர்பாடல் ஊடகம் என்பதை மறந்து விடல் கூடாது. தனித்தமிழ் என்று கூறி மொழியைக் கடினப்படுத்துவது மொழி அழிவதற்கான காரணமாகிவிடுகின்றது. இங்கு மொழி இலக்கணம் காப்பாற்றப்படுகின்றது. மொழியைக் காப்பாற்ற முடியாமல் போய்விடுகின்றது. 

    உலகத்தைக் கையில் கொண்டு ஒரு துறையில் உள்ளவர்கள் தமது துறையில் உள்ளவர்களை நாடி உலகமெங்கும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுகின்றார்கள். ஒரு நாட்டு ஆண் வேறு நாட்டிலுள்ள வேற்று மொழி பேசும் பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்திக் காதல் கொள்ளுகின்றான். youtbube, Twitter, Instergram, Skype, Facebook, Messenger, Whatsapp. viber போன்றவை    மூலம் பல்வேறுபட்ட மொழி பேசுபவர்கள் பல்வேறுபட்ட மொழி பேசுபவர்களுடன் தொடர்பில் இருக்கின்றார்கள். இவ்வாறு தனிமை, தனித்தியங்குதல் என்பது இக்காலகட்டத்தில் கேள்விக்குறியாக இருக்கின்றது. கலை, கலாசாரம், மொழி அத்தனையும் கலந்துபட்ட காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். 

              அடுத்த தலைமுறையில் எமது மொழி வாழுமா? என்ற கேள்விக்குறியுடன் உலகநாடுகளெங்கும் பரந்து வாழும் நாம். எமது எதிர்காலத் தலைமுறையினருக்கு எமது மொழியைப் போதிப்பது அவசியமாகின்றது. மொழியைத் தவிக்கவிட்டுவிட்டு மொழிக்கலப்பு பற்றிப் பேசுவது அபத்தமாக இருக்கின்றது. 

               ஆணும் பெண்ணும் கலந்தால் ஒரு உயிர், நாடுகள் கூட்டுச் சேர்ந்தால் பொருளாதார வளம். மொழிகள் கலந்தால் மொழி வளம். இனங்கள் கலக்கின்றன. கலாசாரங்கள் கலக்கின்றன. மொழியைக் கட்டிக் காக்க வேண்டிய தமிழரே தமது பிள்ளைகளுக்கு தமிழ் மொழியைக் கற்பிக்காது அவர்களுடன் தமிழ் மொழியே பேசாது. தமிழ் மொழி வேற்று மொழிகளுடன் இணைகின்றது என்பதில் கவலைப்படுவதில் நியாயமில்லை.

             வேவ்வேறு மொழி பேசுகின்ற பெண்களையோ ஆண்களையோ திருமணம் செய்யும் போது எமது மொழி வாழும் என்றால், அம்மொழி திருமண பந்தத்தின் போது பகிரப்பட்டதாக இருத்தல் வேண்டும். ஒரு தமிழ்மொழி பேசும் பெண், ஒரு ஆங்கில மொழி பேசும் ஆணைத் திருமணம் செய்கின்றபோது தமிழ்மொழி ஆங்கிலமொழி பேசும் ஆணுக்குக் கற்றுக் கொடுக்கப்படல் வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் தமிழ்மொழி வளம் பெற சாத்தியம் இருக்கின்றது. மக்களுக்காகவே மொழி. மொழிக்காக மக்கள் இல்லை.

    கால ஓட்டத்தில் கலந்து வந்த மொழிச் சேர்க்கை:

    படையெடுப்பு, வியாபாரம், அயல்நாட்டு தொடர்புகள் மொழியில் மாற்றங்களை ஏற்படுத்துவது இயற்கை. மொழி உணர்வு என்பது கட்டமைக்கப்படுவதுதானே அன்றி இயற்கையான ஒன்றல்ல. 

    ஆரியம் தமிழ்மொழியில் கலந்திருந்தது என்பதற்கு பல ஆதாரங்கள் தொல்காப்பியர் காலத்திலும் இக்காலத்திலும் காணப்படுகின்றன. 

    "வடசொற் கிளவி வடஎழுத்து ஒரீஇ 
    எழுத்தொடு புணர்தல் சொல்லாகும்"

    வடசொல்லைத் தமிழில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தொல்காப்பியர் விளக்கியிருக்கிறார். ஆரியத்திற்கு உரிய எழுத்தை விடுத்து ஆரியத்துக்கும் தமிழுக்கும் பொதுவான எழுத்தில் அமைக்கப்படும் சொல் என்று விளக்கியிருக்கின்றார். எமக்குக் கிடைக்கின்ற முதல் தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம் அதில் வடமொழி தமிழில் கலந்திருந்தமையை இதன் மூலம் அறியக்கிடக்கின்றது. 

    அதேபோல் நன்னூலில் " பழையன கழிதலும் புதியன புகுதலும்
    வழுவல கால வகையினானே" என்று சொல்லப்பட்டிருக்கின்றது .

    காலமாற்றத்திற்கேற்ப மொழியில் மாற்றம் ஏற்படுவது இயற்கை. அது ஆரோக்கியமும் கூட. சங்க காலத்திலே யவணர் என்ற சொல் வழக்கில் இருந்தது. வியாபார நோக்கில் அந்நிய நாடுகளில் இருந்து தமிழகம் புகுந்த கடல்வழி பயணிகள் தமது மொழிச் சொற்களை விதைத்தமையுடன் என் மொழிச் சொற்களையும் கொண்டு செக்றிருக்கின்றார்கள் என்பது உண்மையே. 

    மாங்காய்      -      Mango (ஆங்கிலம்)
    மண்வெட்டி -     Mametti          (ஒல்லாந்தர் மொழி) 
    தாங்கி             -    Tank          (ஆங்கிலம்)
    வெற்றிலை   -    Betel          (ஆங்கிலம்)
    ஊர்உலா       -    Urlaub      (ஜேர்மன் மொழி)


    அதேபோல் சஙகம் மருவிய காலத்தில் ஏராளமான சொற்கள் தமிழில் வந்து கலந்தன. 

    பல்லவர் காலத்திலே மதங்களின் ஆட்சி மேலோங்கி இருந்த போது  ஆரியர் வழிபாட்டுச் சொற்கள், பொருட்கள் தமிழர்களிடையே கலந்தன. வடமொழி கலந்த உரைநடை இக்காலத்திலேயே வந்துவிட்டது. உதாரணமாக களவியல் உரையை நோக்கலாம். ஆரியச்சொற்களின் ஆட்சிக்கு எதிரான போக்கிலே தமிழின் மேன்மையை எடுத்துணர நற்றமிழ் ஞானசம்பந்தன், தமிழ் மூவர் என்னும் சொற்கள் பயன்படுத்தப்பட்டன. 

             வீரசோழியம் என்னும் வடமொழி நூல் தமிழில் எடுத்தாளப்பட்டுள்ளது. நேமிநாதம், தண்டியலங்காரம், யாப்பெருங்கலக்காரிகை, போன்ற நூல்கள் வடமொழி இலக்கணமரபைத் தழுவி எழுதப்பட்டன. 

    காவ்ய என்னும் வடமொழிச்சொல்லே காப்பியம் என தமிழ்மொழியில் வழங்கப்பட்டது. தண்டியலங்காரத்தில்  காவிய மரபு பேசப்பட்டுள்ளது.

    நாயக்கர் காலத்தை எடுத்து நோக்கும்போது ஆசானும் அகராதியும் துணை செய்தாலன்றி உட்புக முடியாத இரும்புக்கோட்டையிலானது நாயக்கர்காலப்பாடல்கள் என நாயக்கர் கால இலக்கியப்போக்கு காணப்படுகின்டறது. அருணகிரிநாதருடைய பாடல்களில் ; மணிப்பிரவாளநடையினைக் காணலாம். "வாலவ்ருத்த குமரனென சில வடிவங்கொண்டு....'  என்னும் பாடலினை உதாரணத்திற்கு எடுத்து நோக்கலாம். 

    போத்துக்கேய ஒல்லாந்தர் காலங்களில் போத்துக்கேய ஒல்லாந்த மொழிச் சொற்கள் தமிழ்மொழியில் வந்து கலந்தன. இவ்வாறே பிரித்தானியர் ஆட்சியில் ஆங்கில மொழிச்சொற்கள் ஏராளமாகத் தமிழில் வந்து கலந்தன. 

    "நீ எழுதியவற்றை ஆங்கிலம் தெரியாத தமிழனிடம் வாசித்துக்காட்டு அது அவனுக்கு விளங்குமானால், அதுவே சிறந்த உரைநடை'' என பாரதியார் கூறுகின்றார். அந்தளவிற்கு ஆங்கிலம் தமிழில் கலந்துவிட்டது. இதனாலேதான் 2000ஆம் ஆண்டு விடியலில் தனித்தமிழ் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. சூரியநாராயண சாஸ்திரிகள் தனது பெயரை பரிதிமால் கலைஞன் என்று மாற்றினார். மறைமலையடிகளின் பெயர் சுவாமி வேதாசலம். வடமொழி சொற்களான சுவாமி என்பதை அடிகள் என்றும், வேதம் என்பதை மறை என்றும்  அசலம் என்பதை மலை என்றும் தமிழுக்கு மாற்றி  மறைமலையடிகள் என்று தனக்குப் பெயரிட்டார்  இதனால், அவரால் ஒன்றும் பெரிதாகச் சாதிக்க முடியாமல் போய்விட்டது. இதன் தொடர்ச்சியே புலம்பெயர்ந்த தமிழர்களிடம் காணப்படுகின்றது. 
              
               இப்போது புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்களில் ஒரு சந்ததியினருக்கு இம்மொழிக்களப்பு சங்கடத்தை ஏற்படுத்தினாலும் இது உணர்வுபூர்வமான தன்மையாகவே காணப்படுகின்றது. இனக்குழுமங்கள், கண்டுபிடிப்புகள் எம்முடன் இணைவதுபோல் ஆரோக்கியமான மொழிச்சேர்க்கை ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. 


     வேற்றுமொழிச் சொற்களை அப்படியே பயன்படுத்துதல் தான் சிறப்பு அதனைத் தமிழில் எழுதும்போது அது புதிய வடிவத்தைப் பெறுவது இயல்பு. உதாரணமாக   car என்பதை கார் எனப்பயன்படுத்தும் போது இருள் என்ற பொருளைத் தருகின்றது.

              ஏற்கனவே பரிச்சயமான சொற்களை நாம் மாற்றியமைக்கும் போது பரிச்சயம்  இல்லாமல் போகின்றது. கோப்பி என்பதை கொட்டை வடி நீர் என்னும்போது மொழி பின்னோக்கிப் போகவே சந்தர்ப்பம் இருக்கிறது. கோப்பி என்று பயன்படுத்துவது எந்தவித மொழிவளக் குறைவான சொல் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும். 

                   15 மொழிகள் பேசுகின்ற ஐரோப்பிய நாட்டில் வளரும் ஒரு பிள்ளை. மொழிகளிலே தமிழ்மொழியே கடினமானது என்கிறாள். இன்னும் தமிழ்மொழி கடினப்படுத்தப்படுவது. மொழிவளம் குறைவதற்குக் காரணமாகின்றது. அடுத்த தலைமுறைக்கு எமது மொழியைக் கொண்டுசெல்ல மொழி இலகுவாக்கப்பட வேண்டும். கடினப்படுத்தப்படக் கூடாது. 

    மொழிக்கலப்புப் பற்றிக் காசியானந்தன்:

    ''இராமசாமி சதுக்கத்தில் சர்க்கார் விராந்தையில் காணப்பட்ட பீரோவைத் திருடிய ஆசாமி துர்அதிஸ்டவசமாக பொலிசாரிடம் வில்லங்கத்தில் மாட்டிக் கொண்டான்''

    இராமசாமி  -  வடமொழி
    சதுக்கம்        -  பாளி
    சர்க்கார்       –  போத்துக்கேயம்
    திருடிய       -   தெலுங்கு
    ஆசாமி       –   மலையாளம்
    துர்அதிர்ஸ்டம்  - வடமொழி
    பொலிஸார்        -  இலத்தீன்
    வில்லங்கத்தில் -மராட்டி
    மாட்டி                    -  தெலுங்கு
    கொண்டான்      -  மலையாளம்

    இங்கு தமிழென்று நாம் கருதுகின்ற ஒரு வாக்கியத்தில் எத்தனை பிறமொழிச் சொற்கள் கலந்திருக்கின்றன என்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது. 
                     பல மொழிகள் இணைந்தே ஆங்கிலமொழி வியாபார மொழியாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. எனவே பிற மொழிகளை அங்கீகரிப்பதும் பிறமொழிகளில் எம்மொழி இணைவதும் சாதாரணமாக நடைபெறுகின்றது. ஆனால், பிறமொழிகளைக் கையாளும் போது தமிழ்மொழி ஆளுகைக்குள்ளே அமைய வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். தேவையானபோது மொழிக்கலப்பு அவசியமாகின்றது. ஒலிபெயர்ப்பு செய்யலாம், புதிய சொற்கள் கண்டுபிடிக்கலாம். 

                 எனவே மொழிக்கலப்புப் பற்றிப் பேசும் நாம், எமது எதிர்காலத் தலைமுறைக்கு மொழியைக் கொண்டுசெல்வதற்கு முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அதனைப் பாதுகாக்க வேண்டிய அவசியமும் எமக்கு இருக்கின்றது.






    திங்கள், 18 செப்டம்பர், 2017

    வெற்றி நிலா முற்றம்


    “சில செயல்கள் வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், அச் செயல்கள்தான் உலகில் பாதி மனிதர்களது இதயம் வெடிக்காமல் இருக்க  உதவும் வடிகாலாக இருக்கிறது என்பது உண்மை”

    இதைச் சொன்னவர் யார்

    ஒரு மாணவன் சித்தத்தில் சிலை வடிக்கும் சிற்பக்கலைக்கும்  ஓவியக்கலைக்கும் மனதைப் பறிகொடுத்தான். தன் சிந்தனையில்  கலையைக் கட்டிப்போட்டான். எண்ணம் எல்லாம் ஊறிக்கலந்திருந்த கலையை கலைத்துவிட்டு வாழ அவன் ஒன்றும் சாதாரண மகன் அல்ல. குரும்பசிட்டி பொன். பரமானந்த வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் மு.க.சுப்பிரமணியம் அவர்கள் பெற்றெடுத்த ஒரு கலை முத்து. உலகப் பல்கைக்கழகத்தின் (Cultural Doktorate in Fine Arts – USA ) கவின்கலையில் கலாநிதி என்னும் உயர் கௌரவத்தைப் பெற்ற முதல் ஈழத்துத் தமிழன். வாழ்க்கை முழுவதும் இரு துறைகளில் தடம் பதித்து புகழோடும் வாழும் நற்குண மனிதன். அவர் தான் கலாநிதி மு.க.சு.சிவகுமாரன். இவர் கவிஞனாய், ஓவியனாய், சிறுகதையாளனாய், பேச்சாளனாய் பல்வேறு பரிமாணங்களை எடுத்து ஜேர்மனியில் வாழ்ந்து வருபவர்.

              1950 அன்று தந்தையார் ஆரம்பித்து வைத்த வெற்றிமணி பத்திரிகையை ஜேர்மனியில் வாழ்ந்து கொண்டு நடத்திக் கொண்டு இருக்கின்றார். இரவு நேரம் முழுவதுமாகத் தன் வாழ்வாதாரப் பணியில் ஈடுபட்டு, பகல் முழுவதுமாக இலக்கியத்துறைக்குத் தன்னை அர்ப்பணித்து வெற்றிமணி என்னும் பத்திரிக்கையை ஜேர்மனி, இங்கிலாந்து, இலங்கை ஆகிய மூன்று நாடுகளிலும் இலவசப் பத்திரிகையாக வெளிவரச் செய்கின்றார். அதேபோல் சிவத்தமிழ் என்னும் சஞ்சிகையும் ஆன்மீகச் சஞ்சிகையாக வெளிவருகின்றது. வெற்றிமணி பத்திரிக்கை ஆனி மாதம் 2017 ல் 250 ஆவது பத்திரிகையாக வெளியாகியுள்ளது. இப் பூரிப்பில் இப்பத்திரிகையைக் கையேந்தி  தனது தந்தையார் வாழ்ந்து மடிந்த வீட்டின் முன் நின்று கொண்டு வாசித்துள்ளார். தனது தந்தையின் மூச்சுக் காற்றை உணர்ந்தவராய் இவ்வரிகளைக் கூறுகின்றார்.

                    தனது 250  ஆவது நிறைவை நினைவு கூர்ந்து அப்பத்திரிகையில் எழுதி வருகின்ற எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் முகமாக விருதும் விருந்தும் என்னும் ஒரு நிகழ்வினை  வெற்றிநிலா முற்றம் என்னும் பெயரில் விருதும் விருந்தும் நிகழ்வாக ஜேர்மனி schwerte நகரில் 16.09.2017 அன்று மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் மிகச் சிறப்பாக நடத்தி முடித்துள்ளார்.


     கலைஞர்கள், எழுத்தாளர்கள், மத குருக்கள், வாசகர்கள் என ஆர்வலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள். குறிக்கப்பட்ட நேரத்தில் மங்கள விளக்கேற்றலுடன் விழா ஆரம்பிக்கப்பட்டது.  schwerte அம்மன் கோவில் மத குருக்களினுடைய மகனின் தேவரத்துடன் விழா களைகட்டத் தொடங்கியது. ஆசிரியர் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்துமத குருக்கள் மூவர்  ஆசியுரை வழங்கியிருந்தார்கள்.

                         தமிழர் கலாச்சார நற்பணி மன்ற, நுண்கலைக்கல்லூரி, அறநெறிப்பாடசாலை ஸ்தாபகர் நயினை விஜயன் அவர்களுக்கும், ஆன்மீகத் தென்றல் புவனேந்திரன் அவர்களுக்கும், நடனக் கலைஞன் நிமலன் சத்தியகுமார் அவர்களுக்கும் சிவத்தமிழ் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

                         5 நிமிட உரைகள் என்று வாழ்த்துரைகள் வழங்கப்பட்டன. அதில் நானும் எனது உரையை நடத்தியிருந்தேன். நிகழ்வில் கவனக் குறைவு ஏற்படாத வகையில் இடையிடையில் பரதநாட்டியம், வீணை இசை, திரை இசைநடனம், வெற்றிமணி ஆசிரியருடைய மகன் சஞ்சி சிவாவினுடைய  நெறியாள்கையில் வெளியான பாடல்களைப் பாடிய பெண்குரல்களுக்குரிய தான்யா, விஜிதா ஆகிய இருவருடைய பாடல்களும்,  இலங்கைத் திருத்தலங்களின் ஒளிவடிவங்களும் அகலத் திரையில் காண்பிக்கப்பட்டன.


                  தமது திறமையில் அனைவரையும் கவர்ந்த வெற்றிமணி ஆசிரியருடைய மகன் சஞ்சி சிவா, நெடுந்தீவு முகிலன் ஆகியோர் நெறியாள்கையில்  வெளியான குறுந்திரைப்படங்கள் அகலத் திரையில் காண்பிக்கப்பட்டன. எதிர்காலத் தலைமுறையினரின் அதீத வளர்ச்சியினை இத்திரைப்படங்கள் வெளிப்படுத்தின. இந்நிகழ்ச்சிகளை அகரம் சஞ்சிகை ஆசிரியர் த.இரவீந்திரன் அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தார்.

    இறுதியில் வெற்றிமணி விருது உரியவர்களுக்கு வழங்கப்பட்டது. இவ்விருது எனக்கும் கிடைத்தது பெரும் மதிப்பைத் தருகின்றது. ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

    பொதுவாகவே நிகழ்வுகள் முடிவடைந்ததும் களைப்புடனே வீட்டிற்கு வருவது வழைமை. ஆனால், இந்நிகழ்விற்கு எவ்வாறு சென்றோமோ அந்த சுறுசுறுப்புடனேயே வீடு வந்தடைந்தோம். வெற்றிமணி ஆசிரியர் தன்னுடைய பத்திரிகையில் காட்டுகின்ற கவர்ச்சியையும், புதுமையையும், நேர்த்தியையும் நிகழ்ச்சியிலும் காட்டியிருந்தார்

     மனமும் வயிறும் நிறைந்த உணர்வுடனும் வீடு நோக்கித் திரும்பினோம்.


























    வியாழன், 14 செப்டம்பர், 2017

    பழகிப்பார் பிடிக்கவில்லையா இருக்கிறது இன்னும் ஒன்று

       


    “காலடிக்கும் கன்னாக்காரி நானிருக்கன் dont worry . உனக்கெதுக்கு அச்சம் அச்சம். ஆசைக்கள allow பண்ணு. அச்சங்கள deleat பண்ணு. போய் வரலாம் உச்சம் உச்சம்.

    “இன்னும் கொஞ்சம் சத்தமாப் போடு, இன்னும் கொஞ்சம் சத்தமாப் போடு. என்ன இது கொஞ்சமும் உசார் இல்லாம இருக்கு”

    சகுந்தலா வாகனத்துள் இருந்தவளாய். முன் இருக்கையில் அமர்ந்து இருக்கும் மகளிடம் பாட்டை சத்தமாய்ப் போடும்படி கரைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

    “பொறுங்க அம்மா. உங்கள் உசாருக்கெல்லாம் பாட்டுப் போட முடியாது. நவியிட சத்தமும் கேட்குதில்ல. எங்க கொண்டு எங்கள கொல்லப் போறீங்களோ தெரியாது”
    மகள் வசந்தி தனது காதலன் சபேஷின் அருகில் இருந்தபடி தாயை அதட்டினாள்.

    “பேசாம இரும் சகு. சத்தம் கூட்டினால் நவிகேசன் சத்தம் சரியாக் கேட்காது” ருத்ராவின் வார்த்தைகளைக் கேட்டு

    “இல்ல ருத்ரா. பாட்டு உசாரா இருந்தாத்தான் பிரயாண களைப்புத் தெரியாது”

    “ஏன் நான் பக்கத்தில் இல்லையா? ருத்ரா சகுந்தலாவைக் கட்டி அணைத்தான்.

    முன் இருக்கையில் மகள் வசந்தியும் அவள் காதலன் சபேஷும் இருக்க, பின் இருக்கையில் சகுந்தலாவும் அவள் காதலன் ருத்ராவும் இருந்தபடி வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.

    “வீட்டில் அப்பா என்ன செய்றாரோ தெரியாது. ஒருக்கா டெலிபோன் எடுத்துப் பாருங்கோ அம்மா”

    “சும்மா இருக்க மாட்டா...... தொடங்கிட்டியா...... கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம் என்றுதான் வந்தனான். திரும்பவும் அந்த மனிசன நினைவுபடுத்திறாய். அவர் ஒன்றும் செத்துக் கித்துப் போக மாட்டார். அந்த ஹார்ட் பேசன்ட்டோட என்ன கிடந்தது சாகச் சொல்லாத”

    “ஏன் அம்மா உங்களுக்குக் ஹார்ட் இல்லையா? உங்களுக்கு வருத்தம் வராதா?

    “இப்ப என்ன செய்யச் சொல்றாய். எனக்கும் வர வேணும் என்று விரும்புறியா? அந்த வருத்தக்காரனோட வீட்டிலேயே கிடக்க வேண்டும் என்றியா? ஆத்திரத்தில் கத்தினாள் சகுந்தலா.

    cool.... cool சகுந்தலா” என்றபடி அவளைச் சாந்தப் படுத்தினான் ருத்ரா.

    பேரின்பம் அன்பாகவும் சிறப்பாகவும் மனைவி மகளுடன் வாழ்ந்தவர் தான். காலம் மனிதர் வாழ்வில் தானாகவே சேற்றை அள்ளிப் பூச நோயைக் கொண்டு வந்து சேர்த்துவிடும். நோய் வந்து விட்டால் வலி சினத்தைத் தருவதுதானே இயற்கை. பொறுத்து வாழக் கட்டிய தாலி அச்சப்படுத்திய காலம் கடந்துவிட்டது. வாழும் போது கட்டிய கணவனிடம் பெற்ற சுகம் அனைத்தும், அவன் துன்பப்படும் காலத்தில் மறந்து விடுவதுதான் இக்காலத்தின் நிகழ்வு என்பதாயிற்று. அவனைத் தூக்கி நிமிர்த்த மனம் ஒப்பவில்லையானாலும் வேறு ஒருவனை அணைக்க எப்படி மனம் வருகின்றதோ புரியவில்லை. ஆனால், சகுந்தலாக்கு அந்த மனம் இருக்கிறது.

    வீட்டை விட்டு வெளியே போவதுதான் அவளுக்கு பாரிய இன்பம் அதுவும் ருத்ராவுடன் போவது என்றால் கொள்ளைப் பிரியம். சந்தி சிரிப்பது பற்றிய அச்சம் அவளுக்கு இல்லை. இருந்திருந்தால், தனது மகளை இப்படி வளர்த்திருப்பாளா?

    எப்படி என்று கேட்கின்றீர்களா?

    வசந்தி, சகுந்தலா பேரின்பம் பெற்றெடுத்த ஒரே பெண்பிள்ளை. கல்வி என்பது கொஞ்சம் முயற்சி எடுத்தால், பெற்றுக் கொள்வதற்கு ஐரோப்பிய நாடு வேண்டிய உதவிகளை வழங்கும். அதனால் வசந்தி நன்றாகப் படித்தாள். நல்ல தொழிலும் பெற்றாள். சமுதாயக் கட்டுப்பாடுகள், ஒழுக்க நெறிகள் அவளுக்கு புரியாத புதிர். வாழ்க்கை என்பது ஒருமுறைதான் அதை வாழ்ந்து முடிக்க எப்படியும் வாழலாம் என்னும் இலட்சியத்தை உடையவள். ஆனால், தந்தையில் பாசம் அதிகம் இருந்தாலும் தாயின் போக்கில் பிடிப்பு பற்றிக்கொண்டதற்கு காரணம் கேட்க முடியாது. பிள்ளையைத் தாய் சரியான முறையில் வளர்த்தெடுப்பாள் என்பதில் அதிக நம்பிக்கை கொண்டவர்தான் பேரின்பம். அதனால், அவர்கள் இருவரும் பேரின்பத்திற்குச் செய்தது நம்பிக்கைத் துரோகம். அவருக்கு மட்டுமா!

    “வசந்தி! உனக்கு கணவன் வேணுமென்றால், நான் சொல்வதைக் கேள். உணர ஆட்டத்திற்கு எல்லாம் ஆடவேண்டும் என்றால், இலங்கையில் இருந்து ஒருவனை இங்கே எடு. பழகிப் பார். அந்த நேரமே வேறு ஒருவனைத் தேடிப்பிடி. அவனோட பழகிப்பார். எது ஒத்து வருதோ அவனை கல்யாணம் செய். I mean இலங்கையில் இருந்து கூப்பிட்டவனை விட்டுப் போட்டு மற்றவனைக் கல்யாணம் செய். இது ஒன்றும் தவறில்ல. பிடித்தவனைத் தானே கல்யாணம் செய்ய வேணும். கல்யாணம் ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொல்லியிருக்கின்றார்கள்” இவ்வாறே சகுந்தலா மகளுக்கு புத்தி சொல்லி வளர்த்தாள்.

    தாய் சொல்லே மந்திரம் என்று நினைத்த வசந்தியும் ராம் ஐ இலங்கையில் இருந்து ஜேர்மனிக்கு இறக்குமதி செய்தாள். வந்தவனோ காதலி மனம் நிறையக் காதல் சுமந்தவள் என தப்புக் கணக்குப் போட்டான். அன்பாகத்தான் பழகினாள். அளவுக்கதிகமாகக் காதலைக் கொட்டினாள். மதி மயங்கி கண்கெட்ட காதலுக்கு ராமும் அடிமையாக்கினான். தன் உடலெங்கும் அவள் பெயரைப் பச்சை குத்தினான். அவள் இன்றி ஒரு மணிப் பொழுதைக் கூட அவனால் தாண்ட முடியவில்லை. ஆனால், வசந்தியோ ....

    “இங்க பாருங்க ராம். உங்களை நான் இங்கே கூப்பிட்டு எடுத்தது உங்களுக்கு நல்லதாப் போயிட்டுது. சும்மா உங்களால் இலங்கையில் இருந்து ஜேர்மனிக்கு வரமுடியாது. அந்த உதவியை நான் தான் உங்களுக்குத் தந்திருக்கிறேன். நீங்கள் இங்கே வேலை செய்யக் கூடிய அனைத்து வசதிகளும் இருக்கிறது. எனக்கு ராம்...... உங்களை விட வேறு ஒரு பெடியனில் ஆசை ஏற்பட்டு விட்டது. அவன் இங்கே பிறந்துள்ளான். எனக்கு அவன் கூட வசதியாகத் தெரிகின்றான். அவனோடப் பழகிப் பார்க்கிறான். பிடிக்கவில்லை என்றால் உங்களைத் திருமணம் செய்கிறேன். ok  தானே.

    “வாழ்க்கையை எப்படி இலகுவாக எடுக்கிறாய். நான் இங்கை வருவதற்காகவா உன்னோடு பழகினேன். நான் உன்னை என் உயிராக அல்லவா நினைத்தேன்”

    Stupid.... சேர்ந்து வாழ மனம் ஒத்துப் போக வேணும். எனக்கு உன்ன விட best தேவை”

    இப்படிக் கூறித் தான் வசந்தி, ராமை பிரிந்தாள்               

    வசந்தியை மறக்க முடியாத வேதனை அவன் வாழ்க்கையை வெறுக்கச் செய்தது. சகுந்தலாவிடம் சொல்லி, வசந்தி மனதை மாற்றலாம் என்று கருதிய ராம், அவள் தாய் சகுந்தலாவிடம் முறையிட்டான்.

    “ராம். இந்தக் காலத்துப் பிள்ளைகள் இப்படித்தான் தம்பி. வெள்ளைக்காரப் பிள்ளைகளப் பார் குறைந்தது ஒரு 30 பெடியங்களோட பழகித்தான், பிறகு ஒருவனைக் கல்யாணம் செய்வார்கள். நீர் வேண்டுமென்றால் வேற பெட்டைய பிடியும். ஆனால், கல்யாணம் கட்டிப் போடாதையும். வசந்தி இப்ப புதுப்பெடியனப் பிடித்திருக்கிறாள். உமக்குத் தெரியும்தானே. அவன் அவளுக்கு ஒத்து வரவில்லை என்றால், உம்மோடதான் வாழ்வாள் தம்பி”

    “நல்ல தீர்ப்பு சொல்லியிருக்கிறீங்கள். கல்யாணம் என்பதும், காதல் என்பதும் உங்களுக்கு வியாபாரமாய் போய்விட்டது. நல்ல அம்மாவும், நல்ல மகளும்”

    என்றபடி ஏக்கம் கொண்ட மனதுடன் நம்பிக்கை துரோகத்தையும் சுயநலத்தையும்  எண்ணி கலங்கினான் ராம்.


    வீட்டில் தாலி கட்டிய கணவன் தனித்திருக்கத் தன் காதலன் ருத்ராவுடன் தாய் சகுந்தலாவும், இலங்கையில் இருந்து திருமணம் செய்வதற்காக அழைத்தெடுத்த ராமைத் தவிக்க விட்டுத் தன் காதலனுடன் வசந்தியும் உல்லாசப் பிரயாணம் மேற்கொண்டு டென்மார்க் நோக்கிப் பயணம் செய்தார்கள்.



    செவ்வாய், 12 செப்டம்பர், 2017

    கலைஞர்கள் கௌரவிப்பு



    ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தினரால் நடத்தப்படும் கலைஞர்கள் கௌரவிப்பும் வீ. ஜீவகுமாரன்  அவர்களுடைய குதிரைவாகனம்  என்னும் நூல் வெளியீடும் 14.10.2017  அன்று சனிக்கிழமை    பிற்பகல்   14.00 மணியளவில்    நடைபெற இருக்கின்றது.

             வருடா வருடம் நடைபெறும் இந்நிகழ்ச்சி சென்ற வருடம் சில காரணங்களினால் நடித்த முடியாமல் போய்விட்டது

    கவிஞர் முகில்வாணன், எழுத்தாளர் ஜீவகுமாரன், கவிஞர் பசுபதிராஜா, வில்லுப்பாட்டு ராஜன் ஆகியோர் கௌரவிக்கப்பட இருக்கின்றார்கள். 

                               எழுத்தாளர் ஜீவகுமாரன் அவர்களுடைய குதிரைவாகனம்  என்னும் நூலும் அறிமுகம்  செய்யப்பட இருக்கின்றது. நான்  இந்நூலுக்கான   விமர்சனத்தை செய்ய இருக்கின்றேன். 

                இந்நிகழ்வு சிறப்புடன் அமைந்து எழுத்தாளர் சங்கத்தினரின் முயற்சிகள் முன் எடுப்புக்கள் அனைத்திற்கும் ஆதரவு தரும் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று முழுமையாக நம்புகின்றேன்.  

    அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.  வாழும் போதே கலைஞர்களை வாழ்த்தும் உன்னத முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்புத் தந்து அவர்களை வந்து வாழ்த்த வேண்டும் என்று ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் ஒருவராய்  உங்களிடம் வேண்டிக் கேட்டுக்கொள்ளுகின்றேன்.

                               தமிழ் வாழ நாமும் வாழ்வோம் 





    வியாழன், 10 ஆகஸ்ட், 2017

    உயிரைத் துச்சமாக நினைக்கும் இளம் தலைமுறையினர்

             

             




    தமிழ் தாய்மார் தம் கணவனுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விடத் தம் மகன்மாருக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் முதன்மையானது. பெற்றது முதல் பார்த்துப் பார்த்து வளர்த்தெடுத்து அவர்கள் தேவைகளை அளவுக்கதிகமாகவே செய்வதில் தந்தையை விடத் தாய் முனைந்து நிற்பாள். பெண் பிள்ளைகளுக்குக் கூட அந்த அளவிற்கு அவள் இடம் கொடுப்பதில்லை. உணவில் கூட அதை அண்ணாக்கு கொடு. அது அண்ணாவிடம் கேட்க வேண்டும். அதை அண்ணாக்கு என்று வை என்று முழுக் கவனத்தையும் தமது ஆண்பிள்ளையிடம் செலுத்துகின்றாள். கழிவறை சுத்தம் செய்வதில் இருந்து அனைத்துக் கடினமான  வேலைகளையும் இரவு பகல் பாராமல் செய்து பிள்ளைகள், பிள்ளைகள் என்று படோபகாரமான வாழ்க்கையை வாழ வைக்கின்றாள். விலைகூடிய பொருள்களை வாங்கிக் கொடுத்து கஷ்டம் தெரியாமல் வளர்த்தேடுக்கின்றாள். ஆனால், பிள்ளைகளோ பெற்றோருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்துப் பார்ப்பதில்லை.

                          பெற்றோர் தரும் பாசத்தின் காரணமாக கட்டுகடங்காது சுதந்திரத்தைப் பெறும் பிள்ளைகள், தாயின் பாசத்தையோ தந்தையின் பாசத்தையோ கடமை என்று முடிவெடுத்து அதைப் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. இதை உணர்ந்தே அன்று ``பெற்றமனம் பித்து. பிள்ளை மனம் கல்லு” என்னும் பழமொழியைக் கூறியிருக்கின்றனர்.

             பிள்ளைகள் கேட்டதெல்லாம் கொடுக்கும் உரிமை மட்டும் பெற்றோருக்கு உண்டு. தம் தேவைகளுக்கு முடிவெடுக்கும் உரிமை தமக்கே உண்டு என்று தெளிவாக இருக்கின்றார்கள். கண்டிப்பாகப் பெற்றோர் எடுத்துரைக்கும் வார்த்தைகள் தமக்கு விரோதமானது என்று நினைக்கின்றார்கள். பெற்றோர்களும் தாம் வாழுகின்ற நாடு, சூழலுக்கு ஏற்ப சிந்தித்து  வாழ்வதற்கு நினைப்பதில்லை. தமது இரத்தத்தைப் பாலாக்கிக் கொடுக்கும் தாய்மார் தமது இரத்தமே தமது பிள்ளைகளிடம் ஓடுகின்றது என்று தமது முடிவைத் தமது பிள்ளைகளில் திணிக்கப் பார்க்கின்றார்கள். இதனால் விபரீதமான நிலைமைகள் ஐரோப்பிய நாடுகளில் ஏற்படுகின்றது.

            பல்வேறுபட்ட கலாச்சார, மொழி வேறுபாடுள்ள நண்பர்களுடன் ஐரோப்பிய நாடுகளில் வாழுகின்ற பிள்ளைகள். வேற்று கலாச்சாரத்தில் வாழுகின்ற பிள்ளைகளைக் காதலிப்பது தவிர்க்க முடியாததாகி விடுகின்றது. இக்காதலை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை எமது பெற்றோர் பெற்றுக்கொள்ளவில்லை என்பதே உண்மை. காதல் என்பது ஒத்த அன்பினரான இரு மனங்களுக்கிடையே ஏற்படுகின்றது. அது இனம், மதம், மொழி வேறுபாடு பார்த்து வருவதில்லை என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். சந்தர்ப்பம், சூழ்நிலைகள் இக்காதல் என்னும் வலையில் எமது இளம் சந்ததியினரை விழ வைக்கின்றது. இச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியதும் நாம் தான் என்று சொல்வதற்கு நிச்சயமாக மாற்றுக் கருத்து இல்லை. இதனைச் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளும் பெற்றோர்கள், சில காலங்கள் கவலையில் ஆழ்ந்து பின் மகிழ்ச்சியுடன் வாழ்வது கண்கூடு. இதை அறியும் பிள்ளைகள் அதற்கேற்றாப் போல் வாழுகின்றனர். சில பிள்ளைகள் தமது ஆசை நிறைவேறாவிட்டால் தமது வாழ்க்கையைத் தாமாகவே முடித்துக் கொள்ளுகின்றனர். 

       இதை விட வாழ்க்கையில் ஏற்படுகின்ற சின்னச் சின்னப் பிரச்சனைகளைக் கூட எதிர்கொள்ள முடியாது, அரிய வாழ்க்கையின் பெறுமதி உணராது  தமது பிரச்சினைகளின் வடிகாலைத் தேடிக் கண்டுபிடித்து தீர்த்து வைக்கும் தைரியம் அற்றவர்களாக எமது எதிர்கால வாரிசுகள் வாழ்வது வேதனைக்குரிய விடயமாக இருக்கின்றது.

           பெற்று எடுத்து அவர்கள் தேவைகள் எல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்து, சத்துணவு கொடுத்து வளர்த்தெடுத்த தேகத்தை நெருப்புக்கு வாரிக் கொடுக்க எந்தத் தாய் தந்தையினரின் மனம்தான் இடம் கொடுக்கும்.

                வாழ்க்கை மனிதனுக்கு ஒரு முறைதான். ``கூன், குருடு, செவிடு நீங்கிப் பிறத்தல் அரிது”

               என்று அவ்வைப் பிராட்டி சொல்லி இருக்கிறார். அவ்வாறு எந்தக் குறையும் இல்லாமல் பிறக்கும் நாம், வாழ எமக்குக்குக் கிடைத்த வாழ்க்கையை வாழ்ந்து தீர்க்க வேண்டும் அல்லவா! திடீரென கிடைக்கின்ற  உணர்ச்சிகளுக்கு அடிமையாகி எமது வாழ்க்கையை முடித்துக் கொள்வது எவ்வளவு மடத்தனமானது.

               நாம் எடுக்கின்ற தீர்மானங்கள் அடுத்த நொடிப் பொழுது மாறிப் போவதை நாம் வாழ்க்கையில் எத்தனை முறை அவதானித்து இருக்கின்றோம். எமக்கே வேடிக்கையாக இருக்கும். நாள் முழுவதும் அழுது தீர்க்கும் விடயமாக இருக்கும். அடுத்த நாளே சிரித்து மகிழும் சம்பவம் ஒன்று நடக்கும். இவ்வாறுதான் மனிதன் வாழ்க்கை அமைக்கப்பட்டிருக்கின்றது. வாழ்க்கை முழுவதும் சந்தோசத்தை அனுபவித்த மனிதர்கள் இருக்கின்றார்களா? அப்படிக் கூறினார்கள் என்றால் அது நடிப்பு என்றே கருத வேண்டும். கடவுளே தஞ்சம் என்று இருப்பவர்கள் கூட கடவுளின் சோதனை என்று கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

                எனவே இன்பமும் துன்பமும், கஷ்டமும் நஷ்டமும், வெற்றியும் தோல்வியும், வரவும் செலவும், துக்கமும் மகிழ்ச்சியும், அதிர்ஷ்டமும் இழப்பும், பிறப்பும் இறப்பும் இயற்கை என்று நம்பும், ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை நாம் கொள்ள வேண்டும். எதிலும் ஆழமான நம்பிக்கை வைத்தல் கூடாது. ஐரோப்பிய நாடுகளில்  எப்படியும் வாழலாம் என்னும் சுதந்திரம் இருக்கும் போது இறப்பை ஏன் நாடவேண்டும். இன்பத்தை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும் அதேவேளை துக்கத்தையும் பகிந்து கொள்ள ஏன் விரும்புவதில்லை. பகிர்ந்து கொள்ளும் துக்கம் அரைவாசியாகக் குறைவது இயற்கை.

                      வாழ்க்கையில் ஏற்படும் இழப்புக்களுக்கு மாறாக வாழ்க்கையை வேறுமாதிரி வாழ்ந்து பார்க்கலாமே! ஆதரவற்றவர்களுக்கு உதவ முன்வரலாமே, வாழ்க்கையைப் பிறருக்காக அர்ப்பணித்து வாழ்ந்து பார்க்கலாமே! அதில் வரும் சுகத்தில் கவலையை மறக்கலாமே! குறுகி நிற்கும் மனத்தை விரித்துப் பார்க்கலாமே. வாழ்க்கையில் சாதனை படைத்துக் காட்டலாமே!

                    வாழ்க்கை என்பது வாழ்வதற்குத்தான். நாமாக எமது வாழ்க்கையை முடிக்க எந்த உரிமையும் எமக்குத் தரப்படவில்லை. வாழ்ந்து முடித்து பூரண மனிதனாக வாழும் போதுதான் பிறந்த பிறப்புக்கு அர்த்தம் இருக்கின்றது.

    சுயமாகத் தம் உயிரை மாய்த்துக் கொண்ட பிள்ளைகளை இழந்த அனைத்துப் பெற்றோர்க்கும் இக்கட்டுரை சமர்ப்பணம்

    ஆணும் ஆணும் குழந்தை பெற விஞ்ஞானம் சாத்தியமாக்குமா?

      ஆண் பெண் என்னும் இரு பால் பிரிவினர் உயிரினங்களிடையே காணப்படுகின்றன . இவை பால் கவர்ச்சியின் மூலமும் இயற்கை அமைப்பின் மூலமும் ஒன்றோடு ஒன...