• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 24 மார்ச், 2018

    அவருக்கு அவரையே தெரியவில்லை


    பாடசாலை முடிந்ததும் பரமசிவம் தனது காரைக் (car) கொண்டு ஒரு வீட்டின் முன் நிறுத்தினார். கார்க் கதவுகளைப் பூட்டிய பின் அந்த வீட்டின் முன் கதவைத் திறந்தார், திறந்தார் திறக்க முடியவில்லை. என்ன இது? என்று மாறிமாறித் திறப்பைப் பார்த்தார். திடீரென்று நினைவு திரும்பியவராய் இது யாருடைய வீடு? என்னுடைய வீடு இல்லையே! எப்படி இங்கே வந்தேன். எங்கே வந்திருக்கிறேன்! எதுவுமே தெரியாமல் மங்கிப் போயிருந்த தனது வீட்டு விலாசத்தை நினைத்து நினைத்துப் பார்த்தார். இப்போதுதான் ஞாபகம் வந்தவராய் திரும்பவும் காரை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார்.

               ஏற்கனவே வீடு திரும்பியிருந்த மனைவி ''என்ன….. இவ்வளவு நேரமும் எங்கே போனீர்கள்? என்று கேட்டாள்.
     
    நான் வீடு மாறிப் போயிற்றன். ஏனென்று தெரியல்ல. எனக்கு எங்கட வீட்டு அட்ரஸ் மறந்திட்டுது லீனா……''

    ''ஓ….. எனக்கும் அப்படித்தான் சில வேளைகளில் மறக்கிறது. வயதாகுது இல்லையா!

    என்று பரமசிவத்தைச் சமாதானப்படுத்திய லீனா மனதுக்குள் பெரும் போராட்டத்தைக் கொண்டு வந்தாள். ஏன் இப்படி ஒரு மறதி இவருக்கு வருகிறது. சில நாட்களாக அதிகமாக இருக்கிறதே. ப்ரிட்ஜிக்குள் கண்ணாடியைக் கொண்டு போய் வைக்கிறார். ஏதோ பேச வந்து ஒன்றுமில்லை என்று விடயத்தை மறந்து விடுகின்றார்.

    பாடசாலையிலும் சில தவறுகள் நடப்பதாக ஆசிரியர்கள் சொல்வதை முன்னமே அறிந்திருந்த லீனா, மெல்ல பரமசிவத்திடம் வந்து
     
    நாங்கள் ஒருக்கா டொக்டரிட்டப் போய்க் காட்டலாமா? என்று கேட்டாள்.

    ''சீச்சி ….. அது ஒன்றுமில்ல. எனக்கு ஒன்றுமில்ல. நாளைஞ்சு நாளா நித்திரை இல்ல. அதுதான். நல்லா நித்திரை கொண்டால், சரியாயிடும்|| என்றார் பரமசிவம். 

    ''தெரியுமப்பா…. எ-துக்கும் ஒருக்கா போய்த்தான் பார்ப்பமே''  என்றாள்.
    சம்மதித்த பரமசிவம் டொக்டரிடம் சென்றார். பல பரிசோதனைகள் மூலம் நிலைமையை அறிந்த டொக்டர்.
     
    ''பரமசிவத்திற்கு வந்திருப்பது டெமன்சியா என்று சொல்லப்படும் ஞாபகமறதி நோய். நான் சில மருந்துகள் எழுதித் தருகின்றேன். சில பயிற்சிகள் செய்வதற்கான ஆளை நியமிக்க வேண்டும். நான் தருகின்ற துண்டைக் கொடுத்து குறிக்கப்பட்ட இடத்திற்குக் கொண்டு கொடுங்கள். அவர்கள் இதற்குரிய ஆளை வீட்டிற்கு அனுப்புவார்கள். சிறிதுநாட்கள் பார்ப்போம். தேவையென்றால், ஹொஸ்பிட்டலில நிற்க வேண்டி வரும். இப்போதைக்குத் தேவையில்லை'' என்று சொன்னார்.

    நோய் பற்றியும் நோயின் பாதிப்புப் பற்றியும் அறிந்திராத லீனா. பரமசிவத்தை வீட்டில் விட்டுவிட்டு டாக்டரிடம் ஒரு நேரம் தொலைபேசியில் கேட்டுப் பெற்றுவிட்டு டாக்டரைச் சந்திக்க வந்தாள்.
     
    ''டெமென்ஸியா என்றால் என்ன டாக்டர்? அந்த நோய் வருவதற்குக் காரணம் எதுவாக இருக்கும். பிளீஸ் இந்த நோய் பற்றிய விபரத்தைச் சொல்வீர்களா டாக்டர்? என்று ஆவலுடன் கேட்டாள்.
     
    ''மூளையின் வழமையான செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்படுவதைத்தான் டிமெனஸ்(னுநஅநவெயை) என்பார்கள். ஆழ்மனதில் ஒரு விடயம் ஓடிக்கொண்டிருக்கும் 24 மணி நேரமும் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்.  மூளையின் செல்கள் சிறிது சிறிதாக இறக்க ஆரம்பிக்கும். இதனால் மூளை தன்னுடைய வேலை செயல்பாட்டை இழக்கிறது. மனதிலே குழப்பம், ஞாபக மறதி, பேச முடியாத நிலை, மனநிலையிலே மாற்றங்கள், ஆளுமையிலே மாற்றங்கள் போன்றன தோன்றும்.

    Alzheimer, dementia  நோயாளிகள் எல்லோருக்கும் மூளை செல்களை இழக்க ஆரம்பிக்கின்றது. அமெக்டாலா என்னும்; ஞாபகங்கள் பதியப்படும் இடம் முதலில் பாதிக்கப்படும். இதற்கு ஒரு காரணம் மூளையினுடைய இரசாயணப் பற்றாக்குறையே.  அசிரைல் கோலின்
    (Acetyl choline) என்னும் மூளையில் சுரக்கப்படுகின்ற இரசாயணப்பொருளானது, ஒரு மூளை செல்லிலிருந்து இன்னுமொரு மூளை செல்லுக்குச் செய்திகளின் பரிமாற்றம் செய்வதற்கு உதவி புரிகின்றது. செல்களின் இழப்பினால், இதன் அளவு குறையும் போது செய்திப் பரிமாற்ற அளவு குறைகின்றது. இதனால் செய்கைகள் மொழி போன்றவற்றை பரிமாற்ற முடியாது போகின்றது.
    இதனால் ஞாபக சக்தி குறைகின்றது.

    இன்னுமொரு காரணம் மூளையில் கெட்ட புரதங்கள் அதிகரித்து மூளையின் செல்களைச் சாக வைக்கின்றது. இந்த நோயின் தாக்கத்தைத் தற்போது நிறுத்த முடியாதுள்ளது. குறுகிய கால நினைவுகள் இழப்பதுதான் ஆரம்ப அறிகுறியாக இருக்கிறது. முதல் ஞாபக மறதி பின் போகப் போக மற்றைய மூளைப் பகுதிகள் பாதிக்கப்படும். கதைப்பது, மற்றைய வேலைகள் செய்வது போன்றவை பாதிக்கப்படும். உடலின் இயக்கம் அனைத்திற்கும் மூளையே ஆணை பிறப்பிப்பது நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். ஆனால், இந்த மூளைச் செல்களே சாகும் போது மூளை தன்னையும் பாதுகாக்க முடியாது, தனது உடலையும் பாதுகாக்க முடியாது போகின்றது.

    பொதுவாக ஒரு மனிதன் 60 வயதைத் தாண்டும் போத 5 வீதமும் ஒவ்வொரு 5 வருடங்களும் இரண்டு மடங்காகவும் தாக்கத்தை அனுபவிக்கின்றான். 80 வயதாகும் போது 20-25 வீதம் அதிகரிக்கும். வயது குறைந்தவர்களுக்கும் இந்த நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆரம்பத்தில் குறுகியகால நினைவு இழப்பு, குழப்பங்கள் ஏற்படும். சில மணிநேரங்கள், நாட்கள்  நிமிடங்களுக்கு முன் நடந்ததை மறப்பார்கள். ஆனால் பழைய நினைவுகள் நன்றாக இருக்கும்||

    இவ்வாறு நீண்ட விளக்கத்தைக் கொடுத்த டாக்டர்
     
    ''பயப்பட வேண்டாம். அப்படி ஒன்றும் அவ்வளவு விரைவாகப் பாதிப்பு ஏற்படாது''
    என்று கூறினார்.

    மனதிலே ஏக்கம். மாயமாய் வந்திணைந்த கணவன் நோயின் தாக்கம். வாசிப்பை நேசித்து, இசையைச் சுவாசித்து, நாளும் நற்காற்றுச் சுவாசிக்க நடை பயின்று, நன்மக்களைப் பெற்று வழமாக வாழ்;ந்த இவருக்கா இப்படி நோய் வந்திருக்கிறது! உள்ளக் கனத்தைச் சுமக்க முடியாது தெருவோரம் இருந்த இருக்கையில் அமர்ந்தாள் லீனா. சுற்றித் திரிகின்ற மனிதர்கள் எல்லோரும் தமக்குள் எத்தனையோ நோய்களைத் தாங்கிக் கொண்டுதான் திரிகின்றார்கள் என்று உணர்ந்தாள். தனக்குள்ளே கணக்குப் போட்டாள். தொடரும் நாட்களில் இவரைக் கண்காணிக்கும் பாரிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. உண்மையைப் பிள்ளைகளிடம் கூற வேண்டும். அமைதியாக இவரிடம் நோய் பற்றிச் சிறிது அறியத் தரவே வேண்டும். பொதுவாக வாசிப்பில் நுழைந்திருக்கும் இவருக்கு நானொன்றும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனாலும், அவர் மனதை மகிழ்ச்சியுடன் வைத்திருக்க வேண்டியது நமது கடமையல்லவா! சிந்தித்துக் கவலைப்பட்டு ஒன்றும் ஆவதில்லை. இனிவரும் காலங்களில் எப்படித் திட்டமிட வேண்டும் என்பதே அவசியம் என்ற துணிவுடன் எழுந்து நடந்தாள், லீனா.

                   வீட்டிற்குள் நுழைந்த லீனாவைக் காத்திருந்த பரமசிவம் தொலைக்காட்சியில் மூளையைப் புதைத்திருந்தார். செய்தியில் நடந்த விடயங்களை லீனாவிடம் எடுத்துரைப்பது இவரது வழமையாக இருந்தது.
    ''ஆ…. லீனா எங்கே போயிருந்தாய்…''
    ''கடைக்குச் சாமான்கள் வாங்குவதற்காகப் போயிருந்தேன். இடையில் சிந்துவைச் சந்தித்தேன். நேரம் போவது தெரியாது அவளுடன் பேசியிருந்துவிட்டதால கடை பூட்டும் நேரத்தைப் பார்க்கவில்லை. என்ன நியூஸ் பார்க்கிறீங்களா? என்ன நடந்தது?
    ''அதுவா உன்னட்டச் சொல்ல வேணுமென்று இருந்தனான்.  அன்றைக்கு அமெரிக்காவில் பொம்ப் வெடித்ததாகச் சொன்னார்களே. அதுட தாக்கமாக ஏதோ …… இப்போத்தானே பார்த்தேன்…  அதுக்குள்ள மறந்திட்டு. உன்னட்ட சொல்ல வேணுமென்று நினைச்சேனே…. ஏதோ….. ''
    ''சரி சரி விடுங்க திரும்பவும் வீடியோ ரெக்ஸ் இல் பார்ப்போம். நான் சாப்பாடு செய்றன்''
    என்று சொல்லிய லீனா சமையலறையினுள் சென்றாள். மனமோ படபடவென்று அடித்தது. டொக்டர் சொல்லிய
    ''ரிவி பார்த்துக் கொண்டிருந்து விட்டு அடுத்த நிமிடம் என்ன நிகழ்ச்சி பார்த்தார்கள் என்பதையே மறந்து போய் விடுவார்கள்''

    வார்த்தைகள் மனதைக் குடைந்தெடுத்தது. இப்படி கொஞ்ச நாட்களாக பரமசிவத்துக்கு இருப்பதை அன்று நினைத்துப் பார்த்தாள் லீனா.

          இரவு உணவு தயாரானது. வழமையாக இரவுணவு உண்பதற்கு பிள்ளைகள் அனைவரும் வந்து ஒன்றாக அமர்ந்து விடுவார்கள். 6 பிள்ளைகளைப் பெற்றெடுத்த பரமசிவம், லீனாவின் 2 பிள்ளைகளே தற்போது இவர்களுடன் வாழ்கின்றார்கள். மற்றையவர்கள் பட்டப்படிப்புக் காரணமாக வௌ;வேறு நகரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அனைவரும் சாப்பாட்டு மேசையில் உணவருந்த அமர்ந்தனர். சுவாரசியமாகச் சிரித்துப் பேசி ஒரு மணித்தியாலம் உணவு மேசை கலகலப்பாகியது. ஆனால், பரமசிவத்திடம் பழைய கலகலப்புக் குறைந்திருப்பதை பிள்ளைகள் அவதானித்தார்கள்.
    ''என்ன பப்பா இன்றைக்கு போறிங்காக(Boring) இருக்கிறீங்கள். சாப்பாடு சரியில்லையா? ப்பா…. சொல்லுங்க பப்பா….. '' என்று கேட்ட பிள்ளைகளிடம். மேசையில் ஓங்கி அடித்தார், பரமசிவம்.
    ''என்னை அமைதியாக இருக்க விடுங்கள்'' என்று கத்தினார்.

    என்றுமே இப்படி அப்பா நடக்காது இன்று இப்படி நடந்த விதம் பிள்ளைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது. சாப்பாட்டை அப்படியே விட்டபடி அழுது கொண்டு போனாள் கடைக்குட்டி ரோசி, அவள் பின்னால், மகன் ரதன் எதுவுமே பேசாமல் கோபத்துடன் சென்றான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த லீனா, மெதுவாக பரமசிவம் பக்கத்தில் வந்து அவர் தோள்களை அணைத்தாள். சிறு குழந்தை போல் அவள் நெஞ்சுக்குள் முகம் புதைத்தார் பரமசிவம். தேம்பித் தேம்பி அழுதார்.
    ''ஒன்றுமில்லப்பா …. ஒன்றுமில்ல…. பிள்ளைகளுக்கு எம்முடைய ரென்ஸன் விளங்காது. அவங்க எங்களோட இருக்கிற நேரம் கொஞ்சம். அது கிடைக்காம போனா கவலைப்படுவாங்கள்தானே. விடுங்க அவங்க எங்கட பிள்ளைகள் கொஞ்ச நேரத்தில எல்லாம் மறந்து பப்பா…என்டு ஓடி வருவாங்க. ரேக்… இற்…. ஈசி''
    ''இல்ல லீனா… எனக்கு எப்பிடி அப்படி ஒரு கோபம் வந்தது. என்னால கொன்றோல் பண்ண முடியல்ல''
    ''இற்ஸ் ஓகே….. பிளீஸ் அதை விடுங்க. வாங்க நாங்க கொஞ்ச நேரம் ஏதாவது விளையாடுவோம்''
    என்றபடி மூளைக்கு வேலை கொடுக்கும் ஒரு விளையாட்டை எடுத்து இருவரும் விளையாடினார்கள்.

                காலத்தின் போக்கில் பரமசிவம் வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. முதலில் வேலையில் இருந்து நிரந்தர ஓய்வைப் பெற்றுக் கொண்டார். பரமசிவம் இசை பயிற்றுவித்த ஆசிரியர். 62 வயதான அவரைப் பார்க்கும் போது இப்போதெல்லாம் 82 வயதானவர் போல் காட்சியளிக்கின்றார். சுத்தக் காற்றைச் சுவாசிக்க காட்டுப் பகுதியில்  நடைப்பயிற்சி, சுகாதார உணவு, பிள்ளைகளுடன் பொழுது போக்கு, பியானோ இசையை மனமுருக வாசிக்கும் கலை என தன்னுடைய வாழ்க்கையை இன்பமாகக் கழித்த பரமசிவத்தின் வாழ்க்கையைக் காலம் அப்டியே திருப்பிப் போட்டது.

    லீனா கூட வேலை நேரத்தைக் குறைத்து இரண்டு நாட்களே வேலைக்குச் சென்று வந்தாள். அவ்வேளையில் வீட்டுத் திறப்பைத் தன்னுடனேயே கொண்டு போய்விடுவாள். அவசியமில்லாமல் வீட்டைவிட்டு வெளியில் போய்விட்டால், இடம் தெரியாமல் அலைந்துவிடுவார் என்ற பயம் அவளுக்கு தற்போது அதிகமாகவே இருந்தது.

                ஒருநாள் இரவு நித்திரை இல்லாமல் திரும்பித் திரும்பிப் புரண்டு கொண்டிருந்தார் பரமசிவம், காலையில் எழுந்த லீனா. காலை உணவு தயாரித்துப் பிள்ளைகளை வீட்டிற்கு அனுப்பியபின் படுக்கை அறையினுள் வந்தாள். அங்கே பரமசிவம் ஏதோ தேடிக்கொண்டிருந்தார்.
     
    ''என்ன தேடுகின்றீர்கள்? என்று அன்புடன் கேட்ட லீனாவிடம்
    ''என்னுடைய தலையணையை இங்கேதான் வைத்தேன். யாரோ களவாடிப் போய்விட்டார்கள். ரதன்தான் எடுத்திருப்பான். இல்லாட்டால்…. யாரோ களவெடுத்துவிட்டார்கள்…. எனக்கு என்ர தலையணை வேணும்''

    என்று அடம்பிடித்தபடி திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். கட்டிலிலேயே கிடந்த தலையணையைக் காணவில்லை என்று தேடிக்கொண்டிருந்தார். தன்னுடைய தலையணை இதுதான் என்று மறந்த நிலையில் அதற்கான காரணத்தைப் பிறரிடம் பழி போடுகின்ற இவருடைய நிலையைக் கண்டு லீனா
     
    ''இஞ்ச பாருங்க….. இந்தா இருக்கிறது உங்களுடைய தலையணை. இதுதான் உங்களுடையது. யாருமே எடுக்கவில்லை என்றபடி கையில் தலையணையைக் கொடுத்தாள். வாங்கள் குளித்துவிட்டுச் சாப்பிடுவம். இப்போதெல்லாம் பரமசிவத்திற்கு தனியே குளிக்கக் கூட முடிவதில்லை. மறதி என்பதைத் தாண்டி தன்னுடைய வேலைகளைச் செய்வதற்குக் கூட அவரால் முடிவதில்லை. யாராவது ஞாபகப்படுத்தினாலன்றி அவரால் குளிப்பதற்கு சாப்பிடுவதற்குக் கூடத் தெரியாமல் போய்விடுகின்றது.

            குளித்து உடை மாற்றி உணவை உண்டபின் அவருக்காகக் கொடுக்கபட்ட குளிசையைக் கொடுத்த லீனா, அவரின் பதட்டம் நீங்கியபின்
     
    ''பரம் நான் இன்றைக்கு வேலைக்குப் போக வேண்டும். உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேணுமெண்டால், நான் திரும்ப வரும்வரை ஒரு லேடி இங்கு வந்து நிற்பா. அவ உங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வா….''

    என்று லீனா சொல்லி முடிப்பதற்கு முன்னமே
     
    ''இல்ல…இல்ல…. இங்க யாரும் வரவேண்டாம். என்னுடைய வேலையை நான் செய்வேன். நான் ஒன்றும் வருத்தக்காரன் இல்ல. யாரும் வரத் தேவையில்ல….''

    இதைத் திரும்பத் திரும்ப 10 தடவை சொல்லியிருப்பார். இது நோயின் தாக்கம் என்பதை அறிந்து கொண்ட லீனா. பேசுவதைத் திரும்பத் திரும்பப் பேசுவது தற்போது அவருடைய பழக்கமாகவே இருந்தது. இதைச் சொன்னேன் என்பதை மறந்தே விடுகின்றார். திரும்பவும் ஒப்புவிக்கின்றார்.
     
    ''இல்ல பரம்…. இங்க வருபவர் என்னுடைய நண்பிதான். அவரும் ரீச்சராக இருந்தவர்தான். உங்களுக்கு உதவி செய்வதற்காக மட்டுமில்ல. நானும் பிள்ளைகளும் இல்லாத போது நீங்கள் அவருடன் பேசிக் கொண்டிருக்கலாம். தனியே இருக்காமல் இருப்பது போல் இருக்கும் அல்லவா?நான் வந்தபின் போய்விடுவார்''

    என்றவாறு ஆறுதல் படுத்தினாள். இதேவேளை வேலைக்காக நியமிக்கப்பட்ட பெண் சுஜா அங்கு வந்தான். இருவரிடமும் கைகுலுக்கி வணக்கத்தைத் தெரிவித்தவளை லீனா, பரமசிவத்திடம் அறிமுகப்படுத்தினார். கண்களால் சுஜாவிடம் அனுமதி  பெற்று விடைபெற்றாள். அருகே சென்ற சுஜா
     
    ''எப்படி இருக்கின்றீர்கள்? என்று கேட்டாள்.
     
    ''நல்லம் என்று பதில் சொன்னார். மீண்டும் பல கேள்விகளை சுஜா கேட்டபோது எந்தவித பதிலையும் பரமசிவம் சொல்லவில்லை. படுக்கப் போவதாகச் சொல்லி வரவேற்பறை சோபாவில் அமர்ந்தார். போர்த்துவதற்கான போர்வையை பல தடவை எடுப்பதும் விழுத்துவதுமாக இருந்தவரிடம்.
     
    ''நான் உதவி செய்யலாமா? ''என்று சுஜா கேட்டபோது
     
    ''ஆம்'' என்றார். அவரைப் படுக்கப் போர்த்திவிட்டு தொலைக்காட்சியை போட்டுவிட்டாள்.
     
    ''சரி… நீ போகலாம்'' என்று பரமசிவம் கட்டளை பிறப்பித்தார்.

    ஓகே என்று சிரித்தவளாய் மறு அறையினுள் போய் அமர்ந்த சுஜா அடிக்கடி அவரின் நிலையைப் பார்த்தபடி இருந்தாள். இவ்வாறாக சுஜாவின் கவனிப்பில் நாட்கள் கரைந்தபோது சுஜாவால் உணர முடிந்தது. பரமசிவத்தால், நீண்ட நாட்கள் வீட்டில் இருக்க முடியாது என்னும் விடயத்தை.

               ஒருநாள் லீனா போனபின் உணவருந்த மேசையில் இருந்தவர் பாணில் பட்டர் பூசும் கத்தியை ஜேமுக்குள் விட்டார். கத்தியை ஆட்டி ஆட்டி தேநீருக்குள் சீனி கலக்குவது போல் கலக்கினார். திரும்ப எடுத்த கத்தியை பாணில் தட்டித் தட்டிப் பூசினார். பார்த்துக் கொண்டிருந்த சுஜா, அவரின் கையைப் பிடித்து உதவி செய்ய நினைத்தாள். ஆனால், சுஜாவின் கையைத் தட்டிவிட்ட பரமசிவம் எதுவுமே சொல்லாமல் மேலும் தனது வேலையைத் தொடர்ந்தார். 2 மணித்தியாலங்களாக இரண்டு துண்டுகள் பாண் சாப்பிடும் பரமசிவத்தை நினைக்க சுஜாவுக்குக் கவலையாக இருந்தது. ஏதோ ஒரு விடயத்தைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தார். அவர் எதைச் சொல்லுகின்றார் என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. ஏன் அவராலேயே புரிந்து கொள்ள முடியவில்லை.

                   உணவருந்தியபின் எழுந்தவர் வீட்டின் மேல்மாடி, கீழ்ப்பகுதி என்று எதையோ தேடுவது போல் அலைந்து கொண்டிருந்தார். தன்னுடைய அறையினுள் சென்று கதவைத் சன்னலைத் திறப்பதும் மூடுவதுமாக முயற்சி செய்து கொண்டிருந்தார். மூடவேண்டுமா? திறக்க வேண்டுமா? என்பதை அவராலேயே முடிவு செய்ய முடியவில்லை. சமையலறை அடுப்பைப் போடுவதும், அதை அப்படியே விட்டுவிட்டு மேலே போவதுமாக அவரால், மனம் ஒருநிலைப்பட முடியவில்லை. ஒருவாறு அமைதிப்படுத்தும் குளிசையை சுஜா கொடுத்ததும் மேல்மாடியில் மகனுடைய அறையைத் தன்னுடைய அறை என்று எண்ணியவராய் கட்டிலிலே படுத்துவிட்டார். படுத்தவுடன் குளிசையின் வீரியத்தில் உடனே தூங்கிப்போனார்.

                 மெதுவாகப் போர்வையை எடுத்துப் போர்த்திய சுஜா அமைதியடைந்தவளாய், திரும்பிய போது மகள் ரோசி அவ் அறையினுள் சென்றாள். வெளியே வந்த சுஜா திரும்பி ரோசியைப் பார்த்தாள். ரோசி தந்தையினுடைய கைகளைப் பிடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தாள். நித்திரையின் போது மட்டும் தந்தையின் ஸ்பரிசத்தைப் பெறக்கூடிய நிலையில் இருக்கும் பிள்ளைகளை நினைத்து மனம் மிகக் கலங்கிய நிலையில் வீடு திரும்பிய லீனாவிடம் அனைத்தையும் கூறி விட்டு வீடு திரும்பினாள்.

                   அன்று அன்றுதான் சுஜா இறுதியாக பரமசிவத்தைப் பார்த்த நாள், இரவு முழுவதும் தூங்கவில்லை இப்போதுதான் தூங்குகின்றார். இப்போது எழுந்திருக்க மாட்டார் என்று சொல்லிச் சென்ற லீனாவை அனுப்பிவிட்டு நேரமாகியும் எழுந்திருக்காத பரமசிவத்தைப் பார்ப்பதற்காக அறைக்குள் சுஜா சென்றாள். அங்கு குளியலறை என்ற எண்ணத்துடன் மலம் கழிப்பதற்காக அமர்ந்த பரமசிவத்தை ஓடிச்சென்று அழைத்துக் கொண்டுபோய் குளியலறையினுள் விட்டாள். நீண்டநேரமாக கதவு திறக்கப்படாத காரணத்தினால், கதவைத் திறந்து பார்த்த போது பரமசிவம் காற்சட்டை என்று நினைத்துத் துவாயை எடுத்து போடுவதற்கு நீண்ட நேரமாக முயற்சி செய்து கொண்டிருப்பது தெரிந்தது.
     
    ''இங்க பாருங்க பரமசிவம் …. இது துவாய் இங்கே இருக்கிறது உங்கள் காற்சட்டை.. ''

    என்று சுஜா கொடுத்த போது சுஜாவின் கைகளைப் பரமசிவம் தட்டிவிட்டார். அருகே வைத்துவிட்டு வந்த சுஜா, திரும்பவும் சென்று பார்த்தபோது அக்காற்சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தார். அவ்வேளை திரும்பி வந்த லீனாவிடம் பரமசிவத்தை ஒப்படைத்துவிட்டு வீடு திரும்பிய சுஜா, அடுத்த வாரம் அவரிடம் போவதற்கு முயற்சித்தபோது அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்னும் செய்தி சுஜாவிற்கு அறிவிக்கப்பட்டது.

                       அன்றொருநாள் சுஜா, லீனாவைத் தொலைபேசியில் அழைத்தாள்.
     
    ''லீனா…. பரமசிவம் சுகம் எப்படி? எனக்கு நேரம் கிடைக்கவில்லை. அதனால், உன்னைத் தொடர்பு கொள்ளவில்லை என்றாள்.
     
    ''சுஜா … நேரம் கிடைத்தால், இன்று கோப்பிக்கடையில் சந்திப்போமா? வந்து எல்லாம் சொல்லுகிறேன். 4 மணிக்கு வா'' என்று கோப்பிக் கடையின் விலாசத்தைத் தந்தாள்.

    கோப்பியைப் பருகிய வண்ணம் இருவரும் அமர்ந்திருந்தனர். லீனா முகத்தில் இறுக்கம் இருந்தது. இனிமேல் என்னுடைய குடும்பத்தையும் குழந்தைகளையும் தனியே கவனிக்க வேண்டிய பொறுப்பு லீனாக்கு இருந்தது. அவளாகவே தொடங்கினாள், கண்ணீர் முத்துக்கள் கன்னங்களில் படரத் தொடங்கியது. 

    ''இற்ஸ் ஓகே…. அமைதியடை லீனா. இதுதான் நடக்க வேண்டும் என்று விதி இருந்தால், தடுக்க முடியாது'' என்று ஆறுதல் படுத்தினாள் சுஜா
     
    ''அவரை மருத்துவமனையில் வைத்துப் பராமரிக்க எனக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. அவருக்கு வேறு ஒரு நோயும் இல்லை. ஆனால், பிள்ளைகள் வீட்டில சுதந்திரமாக இருக்க முடியவில்லை. சத்தமாகக் கதைக்க முடியாது. பூனைபோல் பதுங்கிக் கொண்டே தான் வாழவேண்டும். எந்த அவசரமென்றாலும் தனியே அவரை விட்டுச் செல்ல முடியவில்லை. கதவைத் திறந்து ஓடி விடுகின்றார். தண்ணீர், குக்கர் எல்லாம் கரண்ட் கட் பண்ணித்தான் வைக்க வேண்டி இருந்தது. எல்லாவற்றையும் விட ஹோலுக்குள் மல, சலம் கழிக்கத் தொடங்கி விட்டார். ஏனென்றால், பாத்ரூம் எங்கே இருக்கிறது என்று அவருக்குத் தெரியவில்லை. இப்படிப் பல பிரச்சினை. அதனால்தான் வயோதிபர் மடத்தில் ஸ்பெசல் பிரிவில் காசு மேலதிகமாகக் கட்டி விட்டிருக்கின்றேன். சுஜா….அவருக்கு என்னைக் கூட சில சமயங்களில் யாரென்று தெரியவில்லை…..''

    என்று விக்கி விக்கி அழுதாள். அவளை அருகே போய் இறுகக் கட்டி அணைத்து
     
    ''கவலைப்படாதே….. எனக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை. மனதைத் தேற்றிக்கொள் என்று சுஜா சொன்னாள்.
     
    ''அப்பாக்குப் பிள்ளைகளை தெரியாதது போல கொடுமை இந்த உலகத்தில இருக்கா. பிள்ளைகளால் தாங்க முடியவில்லை சுஜா… இந்த நோயைக் குணப்படுத்த முடியாது. தள்ளிப் போடலாம் என்று டொக்டர் சொல்கிறார். இப்போதெல்லாம் அவர் நிசப்தமாக ஒரே இடத்தில் கண்ணை மூடிக் கொண்டே இருக்கிறார். அவருடைய மூளை நினைவுகள் எல்லாவற்றையும் இழந்து விட்டது. நடக்கத் தெரியாது. பேசத் தெரியாது…..'' அடுத்த வார்த்தை வர முடியாது விக்கித்து நின்றாள். வாழ்க்கையில் ஏற்படும் சில கவலைகளுக்கு யாராலும் ஆறுதல் படுத்த முடியாது. அவர்களே ஆசுவாசப்பட வேண்டியிருக்கிறது. இதைத்தான் நரகவேதனை என்பார்களோ!

    நீண்ட சம்பாஷனையின் பின் இருவரும் விடைபெற்றனர். இந்த நோய் சிறிது சிறிதாக ஒருவரைக் கொல்லும் என்பது நிச்சயம் இல்லை. தேங்காய் எண்ணெய் நல்ல மருந்தாக இருக்கிறது என்பதை காலம் தாழ்த்தியே சுஜாவால் அறிந்து கொள்ள முடிந்தது.










    5 கருத்துகள்:

    1. மனம் கனக்கச் செய்யும் பதிவு கடைசிப் பாராவுக்கான விளக்கப்பதிவு தொடரும் என நினைக்குறேன் வாழ்த்துக்களுடன்

      பதிலளிநீக்கு
    2. படிக்கப் படிக்க வேதனைதான் கூடிக் கொண்டே சென்றது சகோதரியாரே

      பதிலளிநீக்கு
    3. வாசித்தேன் இது தான் வாழ்க்கை சிலருக்கு .
      என்ன செய்வது.
      மெயிலில் சந்திரகௌரி ராசப்பா என்று உள்ளது.
      கதை மிக நீட்டம் இரண்டு பிரிவாகப் போட்டிருக்கலாமோ என்று தோன்றியது.
      தொடரட்டும் பயணம்.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...