• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 26 ஜூலை, 2013

    எனது என்னையே நானறியேன் வெளியீட்டுவிழா பேச்சு






         
    எனது குரலில் கேட்க பச்சை பட்டனை அழுத்தவும்
     
    Audio recording software >>
       
              காலத்தின் கட்டாயத்தில் காலன் கையில் அகப்பட்டு
              ஞாலத்தின் போக்கிலே வாழ்வைத் தொலைத்து - இந்
              நூலுக்கு கதாநாயகனாய் நுழைந்து மீண்ட
              அமரர் கல்விராஜன் அவர்களுக்கே சமர்ப்பணம்.


    விரைந்து செல்லுகின்ற பொழுதுகளில், விடியலைத் தேடும் உயிர்களின் மத்தியில், பொழுதுகளின் விரையத்தில், இன்றும் ஒருநாள்; எமக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றது. என் வாழ்வென்ற புத்தகத்தின் புனிதமான  அங்கமாக இன்றையநாளை நான் கருதுகின்றேன். இந்நாளில் எனை உலகுக்களித்து, உயிர் கொடுத்து, உருவாக்கி இம்மேடையிலே நான் தலைநிமிர்ந்து நிற்க தரம் தந்த என் பெற்றோரை முதலில் வணங்குகிறேன். அழைப்பின் பேரில் இந்நூலின் மூலம் நான் பெற்ற அநுபவச் சேர்வைகளையும்  என் நன்றிக்கடன்களையும் அறியச்செய்யும் உரையை ஆற்ற வந்துள்ளேன்.

                       சூழலில் சிதறிக்கிடக்கும் கேட்டல் உணர்வுகளில் சிக்கியுள்ளோரை மேடைப்புள்ளிக்குக் குவிக்கும் வண்ணம் அரங்கைப் பொறுப்பேற்று தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்திக் கொண்டிருக்கும் நயினை விஜயன் அவர்களே! 
            
                       மழுங்கிக்கிடக்கின்ற, மறைந்து கிடக்கின்ற அறிவை ஊக்கமெனும் நீர் கொண்டு அலசச் செய்கின்ற இலண்டன்தமிழ்வானொலி, பாமுகக் காவலரே! சிறப்பு விருந்தினர் நடாமோகன் அவர்களே!

                     
    வார்த்தைகளால் வடிப்பதை விட இசையால் இதயங்களை நெகிழவைக்கின்ற கவிக்கோ பரமவிஸ்வலிங்கம் அவர்களே! 
                    

     எட்டநிற்கும் சூழ்நிலை ஏற்படினும் விட்டுச்செல்லாது தொடந்து செல்லும் நட்பு உறவுகளே! சொந்தங்களே! தூரத்தை தொலைதூரம் வைத்துவிட்டு இவ்விழா மண்டபத்தை மட்டுமே நெருக்கமாக எண்ணி   எம்மை நெருங்கி வந்திருக்கின்ற அயல்நாட்டு நண்பர்களே! Gelsenkirchen நகரத்து மக்களே! அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

                     2008 ஆம் ஆண்டு இலண்டன்தமிழ் வானொலியில் வாழ்வியல் இலக்கியம் கூறும் இலக்கியநேரம் என்னும்; நிகழ்ச்சியில் வாரம் ஒரு இலக்கியம் நான் கொடுத்துக் கொண்டிருந்தேன். அதில் புலம்பெயர்வில் மக்கள் சந்திக்கின்ற பல பிரச்சினைகளை மையமாக வைத்து பல உண்மைக்கதைகளை இலக்கியமாகத் தந்து கொண்டிருந்தேன். அவ்வேளை தவமலர் அவர்கள் தன்னிலை தடுமாறியிருந்த வேளை முழுவதுமான நினைவுப்பேழை குறையுண்டிருந்தவேளை என்னைத் தொலைபேசியில் அழைத்திருந்தார். தன்னுடைய நிலையினைக் கூறினார். இவற்றை வைத்தும் ஒரு இலக்கியம் எழுதித் தரும்படிக் கேட்டுக் கொண்டார். சிலருடைய பெயர்களை முன் வைத்து அவர்களிடம் கேட்டுப் பாருங்கள் என்று நான் கூறினேன். ஆனால், இல்லை, கௌசி ஒருவரிடம் கேட்டேன் மறுத்துவிட்டார். தயவுசெய்து இச்செய்திகள் உலகப்பரப்பில் வெளிவரவேண்டும் அதனால் நீங்களே இதை எழுதுவது சிறப்பு என்று மீண்டும் மீண்டும் வலிந்து கேட்டுக் கொண்டார். சமூக அழுக்குகளைக் கழுவித் துடைக்கும் எழுத்துத் துறையைக் கையேற்ற நான் இவ்வாறான சம்பவங்களை வெளிக்கொண்டுவராவிடில்,             எழுத்தென்ற ஆயதத்தை நான் பயன்படுத்துவதில் எந்தவித பயனுமில்லை என்று உணர்ந்தே சம்மதித்தேன். அக்கதையில் வரும் பிரச்சினைகளுக்கு முழுப்பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்ளுகின்றேன். என்று தவமலர் அவர்கள் கைப்பட ஒரு கடிதத்தை எனக்கு எழுதித்தந்திருந்தார். அவ்வாரம் தொடங்கி என் குரலில் இசைக்கலவை சேர்க்கப்பட்டு 4 வாரங்கள் இலக்கியமாக இக்கதை இலக்கியநேரத்தில்   வெளியானது. அப்போது இவ்விலக்கியம் மிகுந்த வரவேற்புப் பெற்றது. அம்மகிழ்ச்சியில் தவமலர் அவர்கள் இதை ஒரு நூலாக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
                   
      பின் இதனை இணையத்தளத்தில் இன்னும் சிறிது விரிவாக தொடர்கதையாக பதித்திருந்தேன். அதைப் பார்வையிட்ட உலகப்பரப்பிடையும் நல்ல பாராட்டைப் பெற்றது. அப்போது வெல்லவூர் கோபால் என்னும் சிறந்த எழுத்தாளர் அவர்கள், யதார்த்தத்தை உணர்த்தும், இக்கால நடைமுறைக்கு ஏற்ற இந்த கதையை மேலும் விரித்து ஒரு நாவலாக்குங்கள் என்று கேட்டுக் கொண்டார். அவ்வாறே நூலாக்க வேண்டும் என்று விரும்பியிருந்தவேளையிலே தவமலர் அவர்கள் தனது கணவன் ஒரு வருட நினைவுநாளுக்கு இந்தக் கதையை ஒரு புத்தகமாகலாமா கௌசி என்று கேட்டார். நானும் சம்மதித்து ஒரு நூலுக்குரிய உள்ளடக்கம் அதில் போதாத காரணத்தினால்,  அதை விரிவாக எழுதித்தருவதாகக் கூறியிருந்தேன்.
                   
    கல்விராஜன் அவர்களை நான் கண்டதில்லை.
    கேள்விப்பட்டிருக்கின்றேன். கதை நடைபெறுகின்ற காலங்களில் என்னோடு பேசியிருக்கின்றார். அக்காலங்களில் முழுவதுமாக என்னால் அவர் அறியப்படவில்லை. அதனாலேயே இவ்விலக்கியம் வானொலியில் வலம் வந்தவேளையில் இறுதி அங்கம் முடிவில் இவ்விலக்கியம் ஒரு பக்கப் பார்வையிலேயே பேசப்பட்டது. இது கரன் பக்கப்பார்வையில் வேறுவிதமாக அலசப்படலாம் என்று கூறியிருந்தேன்.
                 
                   அதன்படி தவமலர் கூறிய சம்பவங்களைத் தவிர வேறு பல விடயங்களைத் திரட்டத் தொடங்கினேன். கதையின் நாயகன் பற்றிய பல விடயங்களைப் பெற்றுக் கொண்டேன். என் அநுபவங்களால், இக்கதையை அலங்கரித்தேன். கதைக்கு அழகூட்டப் பல கற்பனை நிகழ்வுகளை அணிகலனாக்கினேன். ஒரு சமுதாய எழுத்தாளன் எழுத்துக்கள் வாசகர்களை திருப்திப்படுத்துவதுடன், சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்களையே அளிக்கவேண்டும் என்பதில் கூடிய கவனமெடுத்தேன். அதன்படி அவர் கேட்டுக்கொண்டதற்கமைய பங்குனி மாதம் இந்நூலை நிறைவு செய்து தவமலர் அவர்களிடம் ஒப்படைத்தேன். ஆனால், அதை நூல்வடிவில் ஆக்குவதற்கான அச்சகஅநுபவம், உதவிகள் இல்லாத காரணத்தினால், அப்பொறுப்பையும் அவர் என்னிடமே ஒப்படைத்திருந்தார். ஒரு நூல் இலங்கையில் அச்சகத்தில் கோர்க்கப்பட்டு ஒரு நூலாக ஆக்கப்பட்டு விமானம் ஏறி ஜேர்மனி வந்தடைய வேண்டுமென்றால், எத்தனையோ பேரின் உழைப்புக்கள் அதில் சேர்ந்து கொள்ளும் என்பதை நூல் வெளியீடு செய்தவர்கள் அறிந்திருப்பார்கள். இவ்வேளையில் என் உறவினர்களுக்கும் எனது நன்றியையும் அன்பையும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

                     எதை எழுதிக்கொட்டினாலும் சட்டைசெய்யாது அதைப் பொன் எழுத்துக்களாக ஏற்று, வான் பரப்பிலே வலம் வரச் செய்து, உறங்காது எம்மை விழித்திருக்கச் செய்து, அறிவுச் சுரங்கத்தை ஆ10ழ்ந்து தோண்டி, வெளிவரச் செய்கின்ற இலண்டன் தமிழ் வானொலிக்கும் அதன் அதிபர் அவர்களுக்கும் இவ்வேளை எனது மனம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகின்றேன். இலக்கியநேரத்திலே பழந்தமிழ் இலக்கியங்களை ஆய்வு செய்யும் போக்கை மாற்றியமைத்து, பாட்டுடைத்தலைவனையுடைத்தாய் பாடுபொருள் கொண்டு ஏட்டிலே வடிப்பது இலக்கியமானால், நம்மோடு வாழ்ந்து நாமறியாச் செய்தி பல தந்து ஊரோடு நாம் வாழ உன்னத அறிவுரைகள் காட்டி நிற்கும் சாதாரண குடிமக்களின் வாழ்வும் ஒரு இலக்கியமே என இலக்கியநேரத்தை வாழ்வியல் கூறும் இலக்கியமாக மாற்றியமைத்த அதிபர் நடாமோகன் அவர்களின் தூயசிந்தனைப் போக்கிற்கு நாம் தலைசாய்க்கவேண்டும். பெருநன்றியை மனமுவந்து தந்தேயாக வேண்டும்.
                     

                        படிக்காதவனால் படைக்கமுடியாது. வாசிப்புத்தான் ஒரு மனிதனைப் பூரணமனிதனாக்குகின்றது. இது என்ன? தவமலரின் கதைதானே? இதில் என்ன இருக்கப்போகின்றது எனக் கூறுவோர். நிச்சயம் படைக்கமுடியாதவர்கள், படைப்புக்களைப் படிக்காதவர்கள், வெறுமனே இருக்கைகளுக்கு பாரமாகவும், விழாக்களுக்கு முகம் காட்டுபவர்களாகவும் இருப்பவரே என்பதை அறிந்ததனால், செவிக்குள் மட்டுமே இவ்வார்த்தைகளை எடுத்து மூளைக்குச் செலுத்தாது வீசிவிட்டேன். அடுத்தவர் சரித்திரம் எமக்கேன் என்று நினைப்பவர்கள் ஆண்டவனுக்கே நாம் சரித்திரம் உருவாக்கியிருக்கின்றோம். அதற்குள் பல தத்துவங்களை கூறுகின்றோம் என்பதைச் சற்று உணர்ந்து கொள்ளவேண்டும்.

                      இந்நூலுக்குள் என்ன இருக்கின்றது என்பதை நூலுக்கு அணிந்துரை தந்த பவானந்தராஜா அவர்களும், சிறப்புரை தந்த திருமதி.ஜெகதீஸ்வரி மகேந்திரனும், நூலினுள் சிறப்பாகத் தந்திருக்கின்றார்கள். அவர்களுக்கும் இவ்வேளை நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். அத்துடன் நூலுக்கு விமர்சனம் செய்த ஸ்ரீஜீவகன் அவர்கள் மிகத் தெளிவாக விமர்சனத்தைச் செய்திருக்கின்றார். இந்தளவிற்கு என்னால் கூட இந்நூல் பற்றிக் கூறமுடியாது. இவ்வேளை சிரமத்தைக் கருதாது முழுவதுமாக ஆழமாகப் பார்வையிட்டு இவ்விமர்சனத்தைத் தந்திருந்த ஸ்ரீஜீவகன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகட்டும். 

                 எழுத்துக்களை எனக்குச் சொந்தமாக்கும் போது என் மூளையைத் திறந்து வைத்துக் கொள்ளுகின்றேன். அதனுள் ஓடியோடித் தேடுகின்ற அதிர்வுகளின் அசைவில் வந்து விழுகின்ற எழுத்துக்கள் என்ன ஆச்சரியம் மூளை நினைத்துக் கொண்டிருக்கும்போதே வார்த்தைகள் வந்து விழுகின்றன. எனது எழுத்துக்கள் வேறு பலரின் பெயரில் நூல்களில், பத்திரிகைகளில், மேடைப்பேச்சுக்களில் வெளியாகியுள்ளன. யார் யாரோ என் வரிகளை உச்சரிக்கும்போது எனக்குள் ஆனந்தம் தோன்றுகின்றது

                ஆனால், என் கட்டளைகளை என் கை நிவர்த்தி செய்து முதல் முதல் வெளியான நூல் இந்த தவமலரின் என்னையே நானறியேன் என்னும் நூல்த்தான். இந்த பிரபஞ்ச சாகரத்தில்  Bigban  என்று சொல்லப்படுகின்ற முதல் வெடிப்பில் சிதறிய சூரிய நட்சத்திரங்கள் போல் உலகமெல்லாம் பற்பல கதை வடிவங்கள். அதற்குள் இந்நூலுக்கு தட்டிவிட்டாலும் உதறித்தள்ளினாலும் ஒட்டிக்கொள்ளுகின்ற ஒரு கருவை எனக்களித்து அதை நூலாக்கி வெளியிட்ட  தவமலர் அவர்களுக்கு மிக்கநன்றியுள்ளவளாக இருக்கின்றேன். என் எழுத்துலக சரித்திரத்தில் இந்நூல் போல் தவமலர் அவர்களும் ஓரிடம் பெறுகின்றார்.
                  
    ஒரு மனிதன் எண்ணங்களின் ஊற்று ஒரு நூல் என்ற தட்டில் வைத்து பருகப் படைக்கும் போது அதை உள்ளன்புடன் ஏற்றுக் கொள்வோர் எத்தனை பேராக இருப்பார்கள் என்று சொல்லமுடியாது. ஒரு புத்தகத்தினுள் நுழையும் போது மனிதனுக்கு ஒரு புதிய அகத்தினுள் நுழைவது போன்ற உணர்வு ஏற்பட வேண்டும். ஒரு புதிய வீட்டினுள் புகும் போது ஒரு புதிய அநுபவம் ஒவ்வொருவருக்கும் ஏற்படும். அதுபோலவேதான் புத்தகமும். அதற்குள் புகுந்து வெளிவரும்போது புதிய ஒரு அநுபவத்தைப் பெற்றுவருவீர்கள். அந்த உணர்வை இந்தப் புத்தகம் உங்களுக்குத் தரும் என்று நான் நிச்சயமாகக் கூறி உங்களிடம் இருந்து தற்காலிகமாக விடுபடுகின்றேன்.

    நன்றி வணக்கம்.


    6 கருத்துகள்:

    1. இனிய வாழ்த்து.
      மேலும் உயர்க!
      வளர்க!
      வேதா. இலங்காதிலகம்.

      பதிலளிநீக்கு

    2. Howdy! Do you know if they make any plugins to assist with Search Engine Optimization? I'm trying to get my blog to rank for some targeted keywords but I'm not seeing very good gains. If you know of any please share. Thank you! capitalone.com login

      பதிலளிநீக்கு

    3. You should be a part of a contest for one of the best websites on the net. I'm going to highly recommend this website! sign in to gmail

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...