• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    செவ்வாய், 21 அக்டோபர், 2025

    விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலக்கும் உணர்வு

     



     

    காதல் என்பது ஒரு மனஉணர்வு. இதைக் கடந்து யாரும் வாழ்க்கையில் பயணிக்க முடியாது. இதனைத்தான் ‘’காதல் என்பது மாயவலை சிக்காமல் போனவர் யாருமில்லை’’ என்று விக்னேஷ் சிவன் எழுதினார். மனத்துள் பூட்டி உணர்வில் வெளிப்படுத்தும் இக்காதலை நிறமூட்டி உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக்காட்டிய பெருமை இலக்கியங்களுக்கும், திரைப்படங்களுக்குமே இருக்கின்றன.

    கதையாய்ப் பாடலாய் இலக்கியங்களும், அழகுக் காதல் சொல்லும். நடிப்பால் காட்சிகளால் திரைப்படங்களும், காதலை வெளிப்படுத்திக் காட்டும். வாழ்க்கையைப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி இலக்கியங்கள் என்றால், திரைப்படங்கள் என்று சொல்லப்படுகின்ற சினிமாவும் அதைத்தான் செய்கின்றன. சினிமா வரலாற்றிலே காதலைச் சொல்லாத தமிழ் சினிமாப் படங்களை விரல்விட்டுத்தான் எண்ண வேண்டும். ஊனமுள்ளவனாக இருந்தாலும் காதல் வரும் என்று எடுத்துக்காட்டிய ‘’பேரழகன்’’, ஒருவரை ஒருவர் தீண்டாமலே காதல் சொல்லும் ‘’ஒரு தலை ராகம்’’, பார்க்காமலே உணர்வுகளைப் பரிமாறிக் கடிதம் மூலம் காதல் வெளிப்படுத்திய ‘’காதல் கோட்டை’’, கால் சலங்கையால் காதலியைக் காலமெல்லாம் நினைத்திருந்த காதல் ‘’சலங்கை ஒலி’’, கலையைக் காதலித்து அக்கலைஞனில் காதல் கொண்ட ‘’சிந்துபைரவி’’, பார்வையற்ற ஏழையாக இருந்தாலும் பணக்காரக் பெண்ணுக்குக் காதல் வரும் என்று சொன்ன ‘’ராஜபார்வை’’, வயது பேதம் பார்க்காது தன்னைவிட வயதான பெண்ணின் மேல் காதல் கொண்ட ‘’அபூர்வராகங்கள்’’, முதியவர்க்கும் காதல் வரும் என்று சொன்ன ‘’முதல் மரியாதை’’, எனை மாற்றும் காதலே என்று சொன்ன ‘’நானும் ரௌடி’’ இவ்வாறு சினிமா சொன்ன காதல் எண்ணிக்கையற்றன.

    இவ்வாறான சினிமாவில் தேன் சுவை சொட்டச் சொட்ட மக்கள் மனத்துக்குள் இதமான காதல் உணர்வுகளை வெளிப்படுத்திய சில பாடல் வரிகளை இரசித்து இன்புறுவோம். 

    காதல் பாடல்களில் வகைகளை எடுத்து நோக்கினால், காதலன் காதலியின்  அழகைப் புகழ்ந்து பாடும் பாடல்கள், காதலி காதலன் அழகைப் புகழ்ந்து பாடும் பாடல்கள், காதலியின் மனதை ஈர்க்கும் பாடல்கள், காதலனை எதிர்பார்த்துக் காதலியும் காதலியை எதிர்பார்த்துக் காதலனும் ஏங்கும் பாடல்கள், பிரிவுத் துயரை வெளிப்படுத்தும் சோகப் பாடல்கள் என வகைப்படுத்தலாம்.

    காதலன் காதலியை வர்ணிக்கும் போது அவள் கண்களுக்கு முக்கித்துவம் கொடுப்பது வழக்கம். 

    “பருவ மங்கையர் பங்கய வாள் முகத்து உருவ உண்கணை ஒண்படை ஆம் எனக் கருதி அன்பொடு காமுற்று” 

    எனக் கம்பன் பாட கம்பனைக் கற்ற கண்ணதாசன் அதேபாணியில்

    “பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத

    நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட’’

    என்று இரு வல்லவர்கள் என்ற படத்திற்கு கண்ணதாசன் பாடல் வரிகளைத் தந்துவிடுகின்றார். பெண்களுடைய கண்களை பெண் வண்டுகள் என்று கருதிய ஆண்வண்டுகள் அவளுடைய மலர் போன்ற முகத்திலே வந்து மோதுகின்றன. அந்த வண்டுகளைத் தடுப்பதற்காக அவள் கைகளால் மூடுகின்றாள். எவ்வளவு அறபுதமான வரிகள்.

     ''செந்தமிழ் தேன்மொழியால் நிலாவென சிரிக்கும் மலர் கொடியாள்,

    பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிடத் தலைகுனிவாள்.

    சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்தி பூச்சரமோ,

     கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக்

    கடலினில் கொண்டு கரைத்தவளோ”

     என்னும் கண்ணதாசன் வரிகள் இன்றும் நெஞ்சில் நிலைத்திருக்கின்றன. கடலின் நீலமே அவள் கண்களிலிருந்து கரைத்ததுதான் என்று தற்குறிபேற்ற அணியில் வர்ணிக்கின்றார். அவள் பிறந்த குலம் எவ்வாறாக இருந்தாலும் அழகில் குறைந்துவிடவில்லை என்பதற்கு உதாரணமாக தாமரை சேற்றில் பிறந்தாலும் அழகானது என எடுத்துக்காட்டிள்ளது சிறப்பாக இருந்தது.

     வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என்னருகில் வந்தாள்.

    கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்.

    அன்னம் கூட அவளிடத்தில் வந்து நடை பயிலும்.

    ஆடல் கலை இலக்கணத்தை அறிய வரும் மயிலும்.

    இன்னிசையைப் பாடங் கேட்க எண்ணி வரும் குயிலும்.

    இயற்கையெல்லாம் அவள் குரலின் இனிமையிலே துயிலும்”

     

    என்னும் பாவை விளக்குப் படத்தில் வரும் வரிகளில் அன்னநடையைப் புலவர்கள் பெண்ணின் நடைக்கு உவமையாகச் சொல்வார்கள். அந்த அன்னமே இவளிடம் நடைப்பாடம் கற்க வருவதாகச் சொல்வது காதலனின் அதீத கற்பனையாக வெளிப்படுகின்றது. அதேபோல் மயில் ஆடல்கலையையும், குயில் பாடலையும் பயில வருகின்றன.

     “என்னிசை நின்றால் அடங்கும் உலகே”

    என்று சிவபெருமான் தேவநாதருக்குப் புத்திபுகட்டுவதற்காக தன் இசையை நிறுத்தி உலகத்தையே அசையாமல் செய்தார் எனப் புராணம் கூறுகின்றது. இங்கு இயற்கையைத் தன் காதலி அவள் குரலினால் துயில வைக்கின்றாள் எனக் கவிஞர் எழுதியிருப்பது சுவாரஸ்யமாக இருக்கின்றது.

    உலகத்தில் எவையெல்லாம் சிறப்பாக இருக்கின்றனவோ, அவையெல்லாம் தன் காதலியாகக் காணுகின்ற காதலனின் மனத்தை

    “காலங்களில் அவள் வசந்தம், கலைகளிலே அவள் ஓவியம், மாதங்களில் அவள் மார்கழி(குளிர்மை), மலர்களிலே அவள் மல்லிகை(வாசனை). பறவைகளில் மணிப்புறா, பாடல்களில் தாலாட்டு, கனிகளிலே மாங்கனி, காற்றினிலே தென்றல், பால் போல் சிரிப்பதில் பிள்ளை(களங்கமில்லை). பனிபோல் அணைப்பதில் கன்னி, கண் போல் வளர்ப்பதில் அன்னை’’ எனப் புகழ்ந்து பாடிய கவிஞர், அன்னை பிள்ளையை வளர்ப்பது போலவே என்னைக் கவிஞனாக வளர்த்துள்ளாள் எனத் தன் காதல் உணர்வுகளைப் பாடலாகத் தந்திருக்கின்றார்.

    இந்தக் காதலி எவ்வாறான அழகானவளாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனதுக்குப் பிடித்துவிட்டால், அவள் காதலனுக்குத் தேவதைதான். அவள் கோபுரங்கள் சாய்வதில்லை படத்து அறுக்காணியாகக் கூட இருக்கலாம்.  16 வயதினிலே கமலஹாசன் போல் சப்பாணியாகக் கூட இருக்கலாம். இருந்தாலும் காதல் மலரும், மனங் காவியம் பாடும். அதுவே காதலுக்கு உள்ள மகத்துவம். அதனாலேதான் என்னவோ தன்னுடைய காதலனின் அழகை எடுத்துக் காட்டுவதற்கு பல எடுகோள்களை முன் வைக்கின்றாள்

    கறுப்புத்தான் எனக்குப் பிடித்த கலரு. அவன் கண்ணு ரெண்டும் என்னை மயக்கும் தவுஸண்ட் வோட்ஸ் பவரு’’ என்று சொல்வது மட்டுமல்லாமல்ல. இரவு, விவசாயி, மண்ணுக்குள்ள இருக்கிறப்போ வைரம், காதலனை ரசிக்க வைச்ச கண்ணுமுழி, கண்ணகி, கருவறை , பாவாடை கட்டிப் பதிஞ்ச தடம், என்று பலவாறாக கறுப்பின் பெருமைகளைப் பாடுகின்றாள். ஏனென்றால், இவ்வாறான பெருமைகள் பொருந்திய கறுப்பு தான் தன் காதலன்.

    இருமனங்கள் சந்தர்ப்பவசத்தால் ஈர்க்கப்படுகின்றன. அதைத்தான் சிலரைக் கண்டால் மனதுக்குள் பல்ப் எரிகின்றது என்பார்கள். அவ்வாறு ஈர்க்கப்பட்ட மனங்கள் ஒன்றாகக் கலக்கின்றன. உயிரில் கலந்து விடுகின்றன. உயிரில் கலக்கும் போது “யாருமில்லா தனியறையில் ஒரு குரல் போல எங்கோ இருந்து என்னை இசைக்கிறாய்” என்கிறார் கவிஞர் பா.விஜய். தனியாக இருக்கும் ஒரு அறையில் அமைதி குடிகொண்டிருக்கும். அந்த அறையில் ஒருவரை எங்கோ இருக்கும் ஒருவர் இசைக்க வைக்க எப்படி முடியும்! இசைக்குத்தானே மனங்களை மட்டுமல்ல மரங்களைக் கூட இசைய வைக்கக் கூடிய சக்தி உண்டு. ஆனால், எங்கோ இருந்து ஒருவரை இசைக்க வைக்கக் கூடிய சக்தி அந்தக் காதலுக்குத்தான் உண்டு.

     

    விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிருள் கலந்த காதல் உணர்வுகள் “Black and White கண்ணு காதலியைப் பார்த்தா கலரா மாறும். துருப்புடுச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறும்” என்று விக்னேஷ் சிவன் அவர்கள் நானும் ரௌடிதான் என்னும் படத்தில் எழுதுகின்றார். “காதலுக்கு மொழி தேவையில்லை கண்கள் பேசும் வார்த்தைகளே காதலுக்கு மனப்பதிவுகளை வலிமையாக்குகிறது. இதனையே ஒலி இல்லாத உலகத்தில் இசையாக நீயே மாறி காற்றில் வீசினாய் காதில் பேசினாய். மொழியில்லாத மௌனத்தில் விழியாலே வார்த்தை கோர்த்து கண்ணால் பேசினாய்” என்று அதே நானும் ரௌடிதான் என்னும படத்தில் தாமரை வரிகளைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

     வெண்பஞ்சு மேகங்கள் உன் பஞ்சுப் பாதங்கள்

    மண் தொட்டதால் இன்று

    செவ்வானம் போல் ஆச்சு. 

    விண் சொர்க்கமே பொய் பொய்

    என் சொர்க்கம் நீ பெண்ணே”

     

    என்னும்போது வாழ்க்கையில் சொர்க்கத்தைக் காணவே விரதங்களும் கோயில், குளங்களும் சுற்றுகின்ற அடியார்களுக்கு நடுவே ஒரு பெண் போதும் சொர்க்கம் காண என்று கூற உண்மைக் காதலுக்குத்தான் முடியும்.

     “ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்

    நிலவில் குளிரில்லை.

    அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்

    மலரில் ஒளியில்லை.

    குயில் ஓசை போலொரு வார்த்தை

    குழலோ யாழோ என்றிருந்தேன்.

    கலை அன்னம் போலவள் தோற்றம்

    இடையில் இடையோ கிடையாது”

     என்னும் வாலியின் கற்பனை வரிகளை விட்டு காதல் பாடல்களை எழுத முடியாதுள்ளது.

    காதல் பாடல்களில் சோகப்பாடல்களே அதிகமாக பலரின் மனங்களை இலகுவில் ஆட்கொண்டுவிடுகின்றன. பிரிவுத்துயரை வெளிப்படுத்தும் “கண்கள் இரண்டும் என்று உன்னைக் கண்டு பேசுமோ?  

    காலம் இனிமேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ?

    கணையாழி இங்கே மணவாளன் அங்கே

    காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே”

    ஆண்டுகள் கடந்தாலும் மனதுக்குள் ஆழமாகப் பதியும் வரிகள் உன்னைக் காணாமல் உயிர் வாழ முடியாது என்பதை காதலி வெளிப்படுத்தும் பாங்கைக் கண்ணதாசன் வரிகளில் கேட்டு இன்புறக் கூடியதாக இருக்கின்றது.

    எதுக்காகக் கிட்ட வந்தாளோ! எதைத்தேடி விட்டுப் போனாளோ! விழுந்தாலும் நான் ஒடஞ்சே போயிருந்தாலும் நினைவிருந்தால் போதும் நிமிர்ந்திடுவேன் நானும் என்று பாடும் வரிகளில் கண்ணீரும் கூட சொந்தமில்லை என்று வலி சுமந்த வரிகள் நெஞ்சைத் தொடுகின்றன.

     100 வீதம் காதல் என்னும் படத்திலே

     “இரு விழிகள் போதவில்லை அழுதிடக் கண்கள் கோடி எனக்கில்லை.

    காற்றிலே ஆடும் காகிதம் போல தூரமாகப் போகவே நேர்ந்தது ஏனடி.

    கண்ணுக்கு இமையின்று தூரம். நெஞ்சுக்கு நினைவின்று தூரம்.

    உடலுக்கு உயிரின்று தூரம் ஆனதே.

    கிளை மேலே இணை சேர்ந்த பூக்கள் புயலாலே

    மண் மேலே விழுந்தால்

    மீணடும் ஒன்றாகச் சேரக் கூடுமோ”

    என்னும் போது கண்ணுக்கு இமைபோல் காதலியைக் காத்து நின்ற காதலன் நெஞ்சு முழுவதும் அவள் நினைவுகளைச் சுமந்தான். அவள் பிரிந்து சென்றதனால் உடல்தான் தாங்கி நிற்கின்றான். உயிரான காதலியை வெகுதூரம் பிரிந்து விட்டான் என்னும் போது உயிரும் உடலும் ஒன்றிணைந்த காதல் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான வரிகளை மோகன் ராஜ் தந்திருப்பது ரசித்து இன்புற வைக்கின்றது.

    இதேபோன்று அள்ளஅள்ளக் குறையாத அட்சய பாத்திரம் போல் சினிமா காதல் பாடல்களை எமக்கு தந்து கொண்டே இருக்கும். இதற்கு அனைத்துக் கலைகளும் போல் பாடலும் பாடகர், இசையமைப்பாளர், கவிஞர், போன்ற மூவரும் ஒன்றிணைந்த கூட்டுச் சேர்க்கையிலேயே சினிமாவில்  களை கட்டி இரசிக உள்ளங்களுக்கு நல்ல தீனி போடுகின்றது.

     

     

     

     

    நளவெண்பா கதைச் சுருக்கம்

     


    நளவெண்பா கதைச் சுருக்கம்

     


    நளவெண்பா என்னும் காப்பியம் மகாபாரதத்தின் ஒரு துணைக்கதையாகும். நாடு உட்பட அனைத்து உடைமைகளையும் சூதினால் பாண்டவர்கள் இழந்து விடுகின்றனர். தருமர், வனவாசம் சென்று கண்ணனை துரியோதனனிடம் தூதாக அனுப்பி விட்டு போரில்லாத வாழ்க்கையை நல்ல நிலைக்குக் கொண்டு வர முடியுமா என்று கலங்கி மிக்க கவலையில் இருக்கின்றனர். அர்ச்சுனனோ பாசுபதம் சிவனிடம் இருந்து பெற்று வருவதற்காகச் சென்று விடுகின்றான். தருமரோ கவலையோ காட்டிலே இருக்கின்றார். இந்த சமயத்திலே வேதவியாச முனிவர் அவ்விடம் வருகின்றார். தருமனின் கவலையைத் தீர்க்கும் முகமாகவும் ஒருவருக்கு சனியின் ஆட்சி நடைபெறும் காலத்திலே எவ்வாறான கஸ்டங்கள் வரும் என்பதை விளக்க நளனுடைய கதையைக் கூறுகின்றார்.

     

    இந்தக் கதையை வடமொழியிலே மிக்க சுவைபட ஹர்ஸ கவி என்பவர் காவியமாக்கினார். இந்த வடமொழி காவியத்தை தமிழில் வெண்பா யாப்பிலே புகழேந்தி நளவெண்பா என்ற பெயரிலே 405  பாடல்களை யாத்துள்ளார். இது பாயிரம், சுந்தர காண்டம் (14 – 168), கலிதொடர் காண்டம்(169 – 316)  கலி நீங்கு காணடம் (317 – 405) என அமைகின்றது. அதன் பின் 16 ஆம் நூற்றாண்டிலே அதிவீரராம பாண்டியன் நைடதம் என்னும் பெயரிலே நளவெண்பாவை யாத்தார்.

     

    ஒரு குகைக்குள் ஆகுகன் ஆகுகி என்னும் ஒரு வேட்டுவத் தம்பதிகள் வசித்து வந்தார்கள். ஒருநாள் அவர்கள்  வீட்டிற்கு ஒரு முனிவர் வருகின்றார். அன்று இரவு அந்த முனிவர் அவர்கள் வீட்டில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. ஆனால், இரண்டு பேர் மட்டும் இருக்கக் கூடிய குகையில் முனிவரையும், தாங்க முடியாத குளிரின் காரணத்தினால் தன்னுடைய மனைவியையும் அந்தக் குகையினுள் தங்க விடுகின்றான்.  மனைவி மேலும் தன் மேலும் அதீத நம்பிக்கை கொண்ட ஆகுகனின் குணத்தைப் பாராட்டிய முனிவர். இருவருக்கும் ஆசி வழங்குகின்றார். சிறிது காலத்தின் பின் ஆகுகனும் மனைவியும் இறந்து போகின்றார்கள். அதன் பின் அடுத்த ஜென்மத்தில் ஆகுகன் நிடத நாட்டு இளவரசனான நளனாகவும் விதர்ப்ப நாட்டு மன்னன் வீமராஜன் மகள் தமயந்தியாக ஆகுகியும், அந்த முனிவர் ஒரு அன்னப்பறவையாகவும் பிறக்கின்றார்கள்.

     

    ஒருநாள் நளன் ஒரு சோலைக்குச் செல்லும் போது ஒரு அன்னபபறவையைப் பார்க்கின்றார். அந்த அன்னப்பறவையை தன்னிடம் பிடித்து வரும்படி பெண்களிடம் கூறுகின்றான்.  பிடித்து வரப்பட்ட அன்னம் நடுங்குவதைக் கண்ட நளன் அன்னத்திடம் அழகிய பெண்களின் நடையா உன்னுடைய நடையா சிறப்பானது என்று காண்பதற்காகத்தான் அழைத்து வரச்சொன்னேன் என்று கூறுகின்றார்.

     

    அஞ்சல் மடஅன்னமே! உன்தன் அணிநடையும்

    வஞ்சி அனையார் மணி நடையும் விஞ்சியது

    காணப் பிடித்ததுகாண் என்றான் களிவண்டு

    மாணப் பிடித்த தார் மன்

     

    இத்துடன் நளனுக்கும் அன்னத்துக்கும் நட்பு ஆரம்பமாகின்றது.

     அன்னம் நளனிடம் சொல்கிறது நீ அழகாகவும் அறிவாகவும் மக்களின் மேல் பாசமாகவும் இருக்கின்றாய் அதங்கேற்ப ஒரு பெண் உனக்கு வேண்டும். நான் வாழுகின்ற நாட்டிலே ஒரு இளவரசி இருக்கிறாள். அவள் பெயர் தமயந்தி அவளை நீ காதல் மணம் புரிவது நல்லது என்று கூறி அவளைப் பற்றி வர்ணித்துச் சொல்கின்றது.

     நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்அமைச்சா

    ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா - வேல்படையும்

    வாளுமே கண்ணா வதனமதிக் குடைக்கீழ்

    ஆளுமே பெண்மை அரசு

     

    நாற்படை -  தேர்ப்படை, யானைப்படை. குதிரைப்படை, காலாள் படை

    சந்திரன் போன்ற முகமே வெண்கொற்றக்குடை அதன் கீழ்தான் பெண்மை என்ற அரசை ஆட்சி செய்கின்றாள் என்பது போல் பாடுகின்றார்.

     இதைவிட அவளுடைய அழகைப்பற்றிச் சொல்லும்போது

     

    என்றும் நுடங்கும் இடைஎன்ப ஏழுலகும்

    நின்ற கவிகை நிழல் வேந்தே – ஒன்றி

    அறுகால் சிறுபறவை அஞ்சிறகால் வீசும்

    சிறுகாற்றுக் காற்றாது தேய்ந்து

    என்று அவளுடைய இடையை வர்ணிக்கின்றது. எப்படி தெரியுமா. தமயந்தி கூந்தலிலே மலர்கள் சூடியிருக்கின்றாள். அந்த மலர்களிலே தேன் அருந்துவதற்காக வண்டுகள் வருகின்றன. அந்த வண்டுகளின் சிறகுகள் அசைகின்ற போது ஏற்படும் காற்றுக்கு அவளுடைய இடை அங்கும் இங்குமாக அசைகின்றது. இப்படி அங்கும் இங்கும் அசைந்து வளைவதனால், அவளுடைய இடை தேய்ந்து போய் இருக்கின்றதாம். இதை உயர்வு நவிற்சி அணி என்று சொல்வார்கள். மிகைப்படுத்திக் கூறுவதுதான். அது என்னவோ பெண்களுடைய இடுப்பை மின்னலிடை, கொடியிடை, என்றுதான் வர்ணிப்பார்கள்

    சின்னச் சின்னக் கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் என்ற பாடலிலே பின்னி வைத்த கூந்தலில் முல்லைப் பூவைச் சூடினால்,அல்லி நடை பின்னல் போடுமா சிறு மின்னலிடை பூவைத் தாங்குமா? என்று பாடுகின்றார்

    ஒரு நகைச்சுவையான கதை இருக்கின்றது. இதை என்னுடைய நண்பன் சிவலிங்கம் கூறினார். ஒரு ஆங்கிலேயன் தமிழ் இலக்கியங்களை கற்றால், இறுதியில் அவர் தரும் ரிப்போhட்டில் பெண்கள் எல்லாம் தமிழகத்தில் என்புருக்கி நோய் வந்தவர்களாகவே இருப்பார்கள் என்று எழுதுவாராம். (இது நகைச்சுவைக்காக மட்டுமே )

     இவ்வாறு அவள் அழகைப் பலவாறாக அந்த அன்னம் வர்ணிக்கின்றது. அப்போது தமயந்தியைப் பார்க்காமலே நளனுக்கு அவள் மேல் காதல் வருகின்றது. நான் போய் தமயந்தியிடம் தூது சொல்லவா என்று கேட்டு தூது போகின்றது. நளனைப் பற்றி அன்னம் தமயங்தியம் பலவாறாக வர்ணிக்கின்றது.

     உதாரணத்திற்கு ஒரு பாடல் சொல்கின்றேன்

     செம்மனத்தான் தண்ணளியான் செங்கோலான் மங்கையர்கள்

    தம்மனத்தை வாங்கும் தடந்தோளான் - மெய்ம்மை

    நளனென்பான் மேனிலத்தும் நானிலத்தும் மிக்கான்

    உளனென்பான் வேந்தன் உனக்கு

    செம்மையாகிய ஒழுக்கமுடைய நடுநிலைமையுடைய நேர்மையான மனத்தையுடையவன், இரக்கமுடையவன், நீதி வழுவாத ஆட்சி புரிபவன், மங்கையர்களுடைய மனங்களைக் கவரக்கூடிய நீண்டு உயர்ந்த தோள்களை யுடையவன் விண்ணுலகம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று சொல்லப்படுகின்ற நானிலத்திலும் சிறப்புடைய நளன் என்னும் மன்னனே உனக்கு காதலனாவான். இவ்வாறு பலவாறாகப் புகழும் போது

     பெண்ணுதவும் காலைப் பிதாவிரும்பும் வித்தையையே

    எண்ணில் தனம்விரும்பும் ஈன்றதாய் - நண்ணிடையிற்

    கூறியநற் சுற்றம் குலம்விரும்பும் காந்தனது

    பேரழகு தான்விரும்பும் பெண்

     என்று நீதிவெண்பாவிலே சொல்லப்பட்டது போல் தமயந்தி நளன் பேரழகில் காதல் கொள்ளுகின்றாள்.

    இந்த சமயததிலே தமயந்தியின் தந்தை தமயந்திக்கு சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்கின்றார். அதற்கு நளன் உட்பட  பல தேவர்களும் வருகின்றார்கள். அத் தேவர்களில் சனி பகவானும் வருகின்றார். அவர்களுக்கு தமயந்தி மனதில் நளனை வைத்திருக்கின்றாள் என்று தெரியும். அதனால் எல்லோரும் நளனுடைய உருவத்திலே வருகின்றார்கள். தேவர்கள் கண் இமைக்க மாட்டார்கள் என்பதைத் தெரிந்த தமயந்தி நளனை அடையாளம் கண்டு கொள்ளுகின்றாள். மாலையிடுகின்றாள். இருவருக்கும் திருமணம் நடக்கின்றது. நளன் தமயந்தியை தன்னுடைய நிடத நாட்டிற்குக் கூட்டிப்போகின்றார். ஏமாற்றம் அடைந்த சனி பகவானுக்கு ஆத்திரம் வருகின்றது. நளனைத் துன்புறுத்த சமயம் பார்த்திருக்கின்றார்.

    இருவருக்கும் இந்திரசேனா, இந்திர சேனன் என்னும் இரண்டு குழந்தைகள் பிறக்கின்றார்கள். அரசாட்சி கிடைத்த மன்னன் நளன் சிறப்பாக ஆட்சி புரிந்து வருகின்றார். அப்போது ஒருநாள் நளன் கோயிலுக்குப் போகும் போது கால்களைக் கழுவும் போது ஒரு இடம் கழுவுப்படாமல் இருக்கின்றது. அதன் வழியாக சனி பகவான் இவரைப் பிடித்துவிடுகின்றார். இதனால், அமைச்சர் புட்கரனுடன் சூதாடி தன்னுடைய நாட்டை இழக்கின்றார். காட்டில் வனவாசம் போக வேண்டும். யாருக்கும் தெரியாமல் வாழ வேண்டும். தமயந்தியும் தன்னுடைய பிள்ளைகளை பணிப்பெண்கள் மூலம் தந்தையிடம் ஒப்படைக்கின்றாள். நளன் எவ்வளவோ கூறியும் கேட்காமல் நளனுடனேயே காட்டுக்குள் வருகின்றாள். தன்னுடைய மனைவி காட்டிலே படுகின்ற கஸ்டத்தைப் பொறுக்காத நளன் காட்டிலே அவளைத் தனியே விட்டு விட்டுப் போய்விடுகின்றான். அவள் தன்னுடைய வீட்டிற்குப் போய்விடுவாள் என்று நம்புகின்றாள். நளன் தனியே விட்டுப் போனதன் பின் ஒரு பெரிய பாம்பு தமயந்திமுன் வந்து நிற்கின்றது. அப்போது காப்பாற்றும்படிக் கத்துகின்றாள். அங்கே ஒரு வேடன் வருகின்றான். அவன் பாம்பிடம் இருந்து தமயந்தியைக் காப்பாற்றி அவளை அடைவதற்காக அவளைத்  துரத்தி ஓடுகின்றான். இதனால் காட்டில் இருப்பது சாத்தியமில்லை என்று வேறு ஒரு நாட்டில் பணிப் பெண்ணாக வேஷம் போட்டு வாழுகின்றாள். அந்த நாட்டுக்கு விருந்தினராக வந்த அவள் தந்தை அங்கிருந்து அவளைக் கண்டு தன்னுடைய நாட்டுக்கு அவளைக் கூட்டிப் போய்விடுகின்றார்.

     இதேவேளை காட்டுக்குள் தீப்பிடித்து எரிகின்றது. அங்கே ஒரு கார்க் கோடகன் என்னும் ஒரு பாம்பு காப்பாத்துங்கள், காப்பாத்துங்கள் என்று கத்துகின்றது. இதைக் கண்ட நளனும் அந்த பாம்பைக் காப்பாற்றுகின்றான். அந்தப் பாம்பும் உடனே நளனைத் தீண்டுகின்றது. நன்றி கெட்ட பாம்பு என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். பாம்பு தீண்டியதனால், நளனுடைய அழகான உடம்பு கூன்விழுந்த கிழவன் வடிவமாக மாறுகின்றது. அப்போது நளன் உனக்கு நல்லதுதானே செய்தேன். எனக்கு ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்டபோது, ஆம் நல்லதுதான் செய்தேன்.  நீ எவ்வளவு நாட்களுக்குத்தான் காட்டிலே சுற்றித் திரிவாய் நான் தீண்டியதால் நீ உருவம் மாறி வேறு ஒருவராகி விட்டாய் நீ நாட்டில் எங்கேயும் போய் வாழலாம் நான் தருகின்ற இந்த உடையைப் போட்டால் உன்னுடைய பழைய உருவம் கிடைக்கும் என்று கூறி ஒரு ஆடையைக் கொடுக்கின்றது. இப்போது நளன் அயோத்தி நாட்டை அடைகின்றார். அம்மன்னனுக்கு தேரோட்டியாக வேலை பார்க்கிறார். இப்படியே பல வருடங்கள் செல்கின்றன. தமயந்தியும் நளனைக் கண்டுபிடிக்க ஒரு யுத்தியை மேற் கொள்ளுகின்றாள். தன்னுடைய அப்பாவிடம் இரண்டாவது திருமணம் செய்து வையுங்கள் என்று கேட்கிறாள். வீமமகாராஜனும் 2 ஆவது சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்கின்றார். அந்த சுயம் வரத்திற்கு அயோத்தி மன்னன் வருகின்றார். அவருடைய தேரோட்டியான  நளனும் அந்த அரண்மனைக்கு வருகின்றார். நளன் தன்னுடைய அரண்மனை வாயிலை அடைந்தவுடன் தமயந்தி உள்ளுணர்வில் ஒரு மாற்றம் ஏற்படுகின்றது. அன்று சனிபகவான் நளனைப் பிடித்த ஏழரை ஆண்டுகள் முடிவடைகின்றது. மனமிரங்கிய சனிபகவான் நளனை விட்டுப் போய்விடுகின்றார். தன்னுடைய மனைவியின் சுயம்வரத்தை அறிந்து பொறுக்க முடியாத நளன் கார்கோடகன் கொடுத்த உடையை அணிந்து அழகான நளன் வடிவத்தில் தோன்றுகின்றான். மறுபடியும் தமயந்தி நளனுக்கு மாலை சூட்டி ஒன்றிணைகின்றார்கள். அப்போது திருமணத்திற்குச் சீர்வரிசையாக வீமராஜனிடம் படைகளை நளன் கேட்டுப் பெற்று புட்கரனைத் தோற்கடித்து நிடதநாட்டை ஆளுகின்றான். இதுதான் நளதமயந்தியின் நளவெண்பா. அக்காலத்தில் பெண் தனியே வாழாமல் மறுமணம் செய்து வாழ்வதற்கு அனுமதி இருந்திருக்கின்றது என்பதை இச்சம்பவம் மூலம் அறியக் கூடியதாக இருந்திருக்கின்றது. பெண் உரிமை பேணப்பட்டிருக்கின்றது.

     


    விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலக்கும் உணர்வு

        காதல் என்பது ஒரு மனஉணர்வு. இதைக் கடந்து யாரும் வாழ்க்கையில் பயணிக்க முடியாது. இதனைத்தான் ‘’காதல் என்பது மாயவலை சிக்காமல் போனவர் யாரு...