• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

    விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலக்கும் உணர்வு


    காதல் என்பது ஒரு மனஉணர்வு. இதைக் கடந்து யாரும் வாழ்க்கையில் பயணிக்க முடியாது. இதனைத்தான் காதல் என்பது மாயவலை சிக்காமல் போனவர் யாருமில்லை என்று விக்னேஷ் சிவன் எழுதினார். மனதுள் பூட்டி உணர்வில் வெளிப்படுத்தும் இக்காதலை நிறமூட்டி உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக்காட்டிய பெருமை இலக்கியங்களுக்கும், திரைப்படங்களுக்குமே இருக்கின்றது. 

    கதையாய்ப் பாடலாய் இலக்கியங்கள் அழகுக் காதல் சொல்லும். நடிப்பால் காட்சிகளால் திரைப்படங்கள் காதலை வெளிப்படுத்திக் காட்டும். வாழ்க்கையைப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி இலக்கியங்கள் என்றால், திரைப்படங்கள் என்று சொல்லப்படுகின்ற சினிமாவும் அதைத்தான் செய்கின்றன. சினிமா வரலாற்றிலே காதலைச் சொல்லாத தமிழ் சினிமாப் படங்களை விரல்விட்டுத்தான் எண்ண வேண்டும். ஊனமுள்ளவனாக இருந்தாலும் காதல் வரும் என்று எடுத்துக்காட்டிய பேரழகன், ஒருவரை ஒருவர் தீண்டாமலே காதல் சொல்லும் ஒரு தலை ராகம், பார்க்காமலே உணர்வுகளைப் பரிமாறிக் கடிதம் மூலம் காதல் வெளிப்படுத்திய காதல் கோட்டை, கால் சலங்கையால் காதலியைக் காலமெல்லாம் நினைத்திருந்த காதல் சலங்கை ஒலி, கலையைக் காதலித்து அக்கலைஞனில் காதல் கொண்ட சிந்துபைரவி, பார்வையற்ற ஒருவனாக இருந்தாலும் பணக்காரக் பெண்ணுக்கு காதல் வரும் என்று சொன்ன ராஜபார்வை, வயது பேதம் பார்க்காது தன்னைவிட வயதான பெண்ணின் மேல் காதல் கொண்ட அபூர்வராகங்கள், முதியவர்க்கும் காதல் வரும் என்று சொன்ன முதல் மரியாதை. எனை மாற்றும் காதலே என்று சொன்ன நானும் ரௌடி இவ்வாறு சினிமா சொன்ன காதல் எண்ணிக்கையற்றன. 

    இவ்வாறான சினிமாவில் தேன் சுவை சொட்டச் சொட்ட மக்கள் மனதுக்குள் இதமான காதல் உணர்வுகளை வெளிப்படுத்திய சில பாடல் வரிகளை காதலர் தினத்தில் இரசித்து இன்புறுவாம். 

    காதல் பாடல்களில் வகைகளை எடுத்து நோக்கினால், காதலன் காதலியின்  அழகைப் புகழ்ந்து பாடும் பாடல்கள், காதலி காதலன் அழகைப் புகழ்ந்து பாடும் பாடல்கள், காதலியின் மனதை ஈர்க்கும் பாடல்கள், காதலனை எதிர்பார்த்துக் காதலியும் காதலியை எதிர்பார்த்துக் காதலனும் ஏங்கும் பாடல்கள், பிரிவுத் துயரை வெளிப்படுத்தும் சோகப் பாடல்கள் என வகைப்படுத்தலாம்.

    காதலன் காதலியை வர்ணிக்கும் போது அவள் கண்களுக்கு முக்கித்துவம் கொடுப்பது வழக்கம். “பருவ மங்கையர் பங்கய வாள் முகத்து உருவ உண்கணை ஒண்படை ஆம் எனக் கருதி அன்பொடு காமுற்று” எனக் கம்பன் பாட கம்பனைக் கற்ற கண்ணதாசன் அதேபாணியில் “பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட என்று இரு வல்லவர்கள் என்ற படத்திற்கு கண்ணதாசன் பாடல் வரிகளைத் தந்துவிடுகின்றார். பெண்களுடைய கண்களை பெண் வண்டுகள் என்று கருதிய ஆண்வண்டுகள் அவளுடைய மலர் போன்ற முகத்திலே வந்து மோதுகின்றன. அந்த வண்டுகளைத் தடுப்பதற்காக அவள் கைகளால் மூடுகின்றாள். எவ்வளவு அறபுதமான வரிகள். 

    “செந்தமிழ் தேன்மொழியால் நிலாவென சிரிக்கும் மலர் கொடியாள், பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிடத் தலைகுனிவாள். சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்தி பூச்சரமோ, கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ” என்னும் கண்ணதாசன் வரிகள் இன்றும் நெஞ்சில் நிலைத்திருக்கின்றன. கடலின் நீலமே அவள் கண்களிலிருந்து கரைத்ததுதான் என்று தற்குறிபேற்ற அணியில் வர்ணிக்கின்றார். அவள் பிறந்த குலம் எவ்வாறாக இருந்தாலும் அழகில் குறைந்துவிடவில்லை என்பதற்கு உதாரணமாக தாமரை சேற்றில் பிறந்தாலும் அழகானது என எடுத்துக்காட்டிள்ளது சிறப்பாக இருந்தது.

     “வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என்னருகில் வந்தாள். கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள். அன்னம் கூட அவளிடத்தில் வந்து நடை பயிலும். ஆடல் கலை இலக்கணத்தை அறிய வரும் மயிலும். இன்னிசையைப் பாடங் கேட்க எண்ணி வரும் குயிலும். இயற்கை எல்லாம் அவள் குரலின் இனிமையிலே துயிலும்” என்னும் பாவை விளக்குப் படத்தில் வரும் வரிகளில் அன்னநடையைப் புலவர்கள் பெண்ணின் நடைக்கு உவமையாகச் சொல்வார்கள். அந்த அன்னமே இவளிடம் நடைப்பாடம் கற்க வருவதாகச் சொல்வது காதலனின் அதீத கற்பனையாக வெளிப்படுகின்றது. அதேபோல் மயில் ஆடல்கலையையும், குயில் பாடலையும் பயில வருகின்றன. “என்னிசை நின்றால் அடங்கும் உலகே” என்று சிவபெருமான் தேவநாதருக்குப் புத்திபுகட்டுவதற்காக தன் இசையை நிறுத்தி உலகத்தையே அசையாமல் செய்தார் எனப் புராணம் கூறுகின்றது. இங்கு இயற்கையைத் தன் காதலி அவள் குரலினால் துயில வைக்கின்றாள் எனக் கவிஞர் எழுதியிருப்பது சுவாரஸ்யமாக இருக்கின்றது. 

    உலகத்தில் எவையெல்லாம் சிறப்பாக இருக்கின்றனவோ, அவையெல்லாம் தன் காதலியாகக் காணுகின்ற காதலனின் மனதை “காலங்களில் அவள் வசந்தம், கலைகளிலே அவள் ஓவியம், மாதங்களில் அவள் மார்கழி(குளிர்மை), மலர்களிலே அவள் மல்லிகை(வாசனை). பறவைகளில் மணிப்புறா, பாடல்களில் தாலாட்டு, கனிகளிலே மாங்கனி, காற்றினிலே தென்றல், பால் போல் சிரிப்பதில் பிள்ளை(களங்கமில்லை). பனிபோல் அணைப்பதில் கன்னி, கண் போல் வளர்ப்பதில் அன்னை. எனப் புகழ்ந்து பாடிய கவிஞர், அன்னை பிள்ளையை வளர்ப்பது போலவே என்னைக் கவிஞனாக வளர்த்துள்ளாள் எனத் தன் காதல் உணர்வுகளைப் பாடலாகத் தந்திருக்கின்றார்.

    இந்தக் காதலி எவ்வாறான அழகானவளாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனதுக்குப் பிடித்துவிட்டால், அவள் காதலனுக்குத் தேவதைதான். அவள் கோபுரங்கள் சாய்வதில்லை படத்து அறுக்காணியாகக் கூட இருக்கலாம்.  16 வயதினிலே கமலஹாசன் போல் சப்பாணியாகக் கூட இருக்கலாம். இருந்தாலும் காதல் மலரும், மனங் காவியம் பாடும். அதுவே காதலுக்கு உள்ள மகத்துவம். அதனாலேதான் என்னவோ தன்னுடைய காதலனின் அழகை எடுத்துக் காட்டுவதற்கு பல எடுகோள்களை முன் வைக்கின்றாள் 



    “கறுப்புத்தான் எனக்குப் பிடித்த கலரு. அவன் கண்ணு ரெண்டும் என்னை மயக்கும் தவுஸண்ட் வோட்ஸ் பவரு என்று சொல்வது மட்டுமல்லாமல்ல. இரவு, விவசாயி, மண்ணுக்குள்ள இருக்கிறப்போ வைரம், காதலனை ரசிக்க வைச்ச கண்ணுமுழி, கண்ணகி, கருவறை , பாவாடை கட்டிப் பதிஞ்ச தடம், என்று பலவாறாக கறுப்பின் பெருமைகளைப் பாடுகின்றாள். ஏனென்றால், இவ்வாறான பெருமைகள் பொருந்திய கறுப்பு தான் தன் காதலன்.

    இருமனங்கள் சந்தர்ப்பவசத்தால் ஈர்க்கப்படுகின்றன. அதைத்தான் சிலரைக் கண்டால் மனதுக்குள் பல்ப் எரிகின்றது என்பார்கள். அவ்வாறு ஈர்க்கப்பட்ட மனங்கள் ஒன்றாகக் கலக்கின்றன. உயிரில் கலந்து விடுகின்றன. உயிரில் கலக்கும் போது “யாருமில்லா தனியறையில் ஒரு குரல் போல எங்கோ இருந்து என்னை இசைக்கிறாய்” என்கிறார் கவிஞர் பா.விஜய். தனியாக இருக்கும் ஒரு அறையில் அமைதி குடிகொண்டிருக்கும். அந்த அறையில் ஒருவரை எங்கோ இருக்கும் ஒருவர் இசைக்க வைக்க எப்படி முடியும்! இசைக்குத்தானே மனங்களை மட்டுமல்ல மரங்களைக் கூட இசைய வைக்கக் கூடிய சக்தி உண்டு. ஆனால், எங்கோ இருந்து ஒருவரை இசைக்க வைக்கக் கூடிய சக்தி அந்தக் காதலுக்குத்தான் உண்டு. 

    விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிருள் கலந்த காதல் உணர்வுகள் Black and White கண்ணு காதலியைப் பார்த்தா கலரா மாறும். துருப்புடுச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறும்” என்று விக்னேஷ் சிவன் அவர்கள் நானும் ரௌடிதான் என்னும் படத்தில் எழுதுகின்றார். “காதலுக்கு மொழி தேவையில்லை கண்கள் பேசும் வார்த்தைகளே காதலுக்கு மனப்பதிவுகளை வலிமையாக்குகிறது. இதனையே ஒலி இல்லாத உலகத்தில் இசையாக நீயே மாறி காற்றில் வீசினாய் காதில் பேசினாய். மொழியில்லாத மௌனத்தில் விழியாலே வார்த்தை கோர்த்து கண்ணால் பேசினாய்” என்று அதே நானும் ரௌடிதான் என்னும படத்தில் தாமரை வரிகளைக் காணக்கூடியதாக இருக்கின்றது. 

    “வெண்பஞ்சு மேகங்கள் உன் பஞ்சுப் பாதங்கள் மண் தொட்டதால் இன்று செவ்வானம் போல் ஆச்சு.  விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ பெண்ணே” என்னும்போது வாழ்க்கையில் சொர்க்கத்தைக் காணவே விரதங்களும் கோயில், குளங்களும் சுற்றுகின்ற அடியார்களுக்கு நடுவே ஒரு பெண் போதும் சொர்க்கம் காண என்று கூற உண்மைக் காதலுக்குத்தான் முடியும். “ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை. அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை. குயில் ஓசை போலொரு வார்த்தை குழலோ யாழோ என்றிருந்தேன். கலை அன்னம் போலவள் தோற்றம் இடையில் இடையோ கிடையாது” என்னும் வாலியின் கற்பனை வரிகளை விட்டு காதல் பாடல்களை எழுத முடியாதுள்ளது.
      
    காதல் பாடல்களில் சோகப்பாடல்களே அதிகமாக பலரின் மனங்களை இலகுவில் ஆட்கொண்டுவிடுகின்றன. பிரிவுத்துயரை வெளிப்படுத்தும் “கண்கள் இரண்டும் என்று உன்னைக் கண்டு பேசுமோ? காலம் இனிமேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ? கணையாழி இங்கே மணவாளன் அங்கே காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே” ஆண்டுகள் கடந்தாலும் மனதுக்குள் ஆழமாகப் பதியும் வரிகள் உன்னைக் காணாமல் உயிர் வாழ முடியாது என்பதை காதலி வெளிப்படுத்தும் பாங்கைக் கண்ணதாசன் வரிகளில் கேட்டு இன்புறக் கூடியதாக இருக்கின்றது. 

    எதுக்காகக் கிட்ட வந்தாளோ! எதைத்தேடி விட்டுப் போனாளோ! விழுந்தாலும் நான் ஒடஞ்சே போயிருந்தாலும் நினைவிருந்தால் போதும் நிமிர்ந்திடுவேன் நானும் என்று பாடும் வரிகளில் கண்ணீரும் கூட சொந்தமில்லை என்று வலி சுமந்த வரிகள் நெஞ்சைத் தொடுகின்றன. 

    100 வீதம் காதல் என்னும் படத்திலே “இரு விழிகள் போதவில்லை அழுதிடக் கண்கள் கோடி எனக்கில்லை. காற்றிலே ஆடும் காகிதம் போல தூரமாகப் போகவே நேர்ந்தது ஏனடி. கண்ணுக்கு இமையின்று தூரம். நெஞ்சுக்கு நினைவின்று தூரம். உடலுக்கு உயிரின்று தூரம் ஆனதே. கிளை மேலே இணை சேர்ந்த பூக்கள் புயலாலே மண் மேலே விழுந்தால் மீணடும் ஒன்றாகச் சேரக் கூடுமோ” என்னும் போது கண்ணுக்கு இமைபோல் காதலியைக் காத்து நின்ற காதலன் நெஞ்சு முழவதும் அவள் நினைவுகளைச் சுமந்தான். அவள் பிரிந்து சென்றதனால் உடல்தான் தாங்கி நிற்கின்றான். உயிரான காதலியை வெகுதூரம் பிரிந்துவட்டான் என்னும் போது உயிரும் உடலும் ஒன்றிணைந்த காதல் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான வரிகளை மோகன் ராஜ்; தந்திருப்பது ரசித்து இன்புற வைக்கின்றது. 

    இதேபோன்று அள்ளஅள்ளக் குறையாத அட்சய பாத்திரம் போல் சினிமா காதல் பாடல்களை எமக்கு தந்து கொண்டே இருக்கும். இதற்கு அனைத்துக் கலைகளும் போல் பாடலும் பாடகர், இசையமைப்பாளர், கவிஞர், போன்ற மூவரும் ஒன்றிணைந்த கூட்டுச் சேர்க்கையிலேயே சினிமாவில்  களை கட்டி இரசிக உள்ளங்களுக்கு நல்ல தீனி போடுகின்றது. 




    13 கருத்துகள்:

    1. அங்கங்கே அழகிய அருமையான பாடல் வரிகள்... அருமை சகோதரி...

      பதிலளிநீக்கு
    2. சிறப்பான பகிர்வு. பாராட்டுகள்.

      அனைவரிடத்திலும் அன்பு செலுத்துவோம்...

      பதிலளிநீக்கு
    3. அருமையான தொகுப்பு சகோ
      அற்புதமான பாடல் வரிகளை எடுத்து மேற்கோள் காட்டிய விதம் சிறப்பு.

      /^என்னிசை நின்றால் அடங்கும் உலகே” //
      இவ்வரிகளை எழுதியவர் கவிஞர் கா.மு.ஷெரீப் என்பது குறிப்பிடத்தக்கது.

      பதிலளிநீக்கு
    4. அருமையான தலைப்புடன் இந்தக் கட்டுரை வெகு சுவாரஸ்யமாக உள்ளது. திரைப்பட எடுத்துக்காட்டுகள் பிரமாதம். பாராட்டுகள்.

      ’காதலாவது கத்திரிக்காயாவது’ http://gopu1949.blogspot.com/2014/02/vgk-05.html
      என ஒதுக்க முடியாததாகவே உள்ளது இந்தக் காதல் என்னும் உணர்வு.

      பதிலளிநீக்கு
    5. உய்தலிற்காய் உலகு வளர்தலிற்காய்
      மெய்யாக உருவான இணைதலாய்
      தெய்விகக் காதல் உயர்வுடைத்தாம்.
      விவரணம் இனிதே

      பதிலளிநீக்கு
    6. பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

      பதிலளிநீக்கு
    7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      பதிலளிநீக்கு
    8. சீரிய சிறப்புப் பதிவு...ஆழமான சிந்தனையுடன் கூடிய அருமையான பதிவு..வாழ்த்துகளுடன்..

      பதிலளிநீக்கு
    9. இந்த பதிவை எழுத மிகவும் உழைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

      பதிலளிநீக்கு
    10. ஆம். அதிகமான என்னுடைய பதிவுகள் தேடல்களின் பின்னே தான் எழுதப்படும்.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...