• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 17 ஜூன், 2018

    இலங்கையில் வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் என்னும் நூல் வெளியீட்டுரை







    விரைந்து செல்லும் பொழுதுகளில் விடியலைத் தேடும் மனிதர்கள் மத்தியில் எனக்காகவும் இன்றைய பொழுது புலர்ந்திருக்கின்றது. இன்றைய பொழுதிலே இச்சிறுகதை நூல் வெளியீட்டு விழாவினைச் சிறப்பிப்பதற்காக வருகை தந்திருக்கின்ற பிரதம விருந்தினர்கள் பேராசிரியர் துரை மனோகரன் அவர்களுக்கும், பேராசிரியர் ம.ரகுநாதன் அவர்களுக்கும், சிறப்பு விருந்தினர்கள் கலாகீர்த்தி உடுவை எஸ். தில்லைநடராசா அவர்களுக்கும் தினக்குரல் பிரதம ஆசிரியர் பாரதி அவர்களுக்கும் ஊற்று வலையுலக கலைஞர்கள் அமைப்பு, யாழ் இலக்கியக்குவியம் உறுப்பினர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், வாசக நெஞ்சங்களுக்கும், உறவினர் நண்பர்களுக்கும் அன்பு வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

                 எண்ணங்களுக்கு வலிமையுண்டு என்று வலுவாக நம்புபவள் நான். இது நடக்க வேண்டும் என்று மனதுக்குள் ஆழமாகப் பதியமிட்டுவிட்டோம் என்றால் அது நிச்சயம் நடக்கும். மூளையிடம் தவமிருந்தால், நிச்சயம் வரம் கிடைக்கும். என்னுடைய அன்புக்கும் பெரு மதிப்புக்கும் உரிய ஆசிரியர் பேராசிரியர் துரைமனோகரன் அவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற என்னுடைய நீண்ட நாட்களின் தவம் என்னுடைய நூலுக்கு அவரை அணிந்துரை எழுத வைத்துள்ளது. அவரின் முன்னிலையில் இந்த நூல் வெளியிடப்பட வேண்டும் என்று ஜேர்மனியில் இருந்து ஆசைப்பட்டேன். அக்கனவை நனவாக்கித் தந்தார் யாழ்பவாணன் அவர்கள். துரைமனோகரன் சேரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கினார். ஒரு மாணவிக்கு இதைவிடப் பெறும் பேறு கிடைக்கப் போவதில்லை என்று கருதுகின்றேன்.
               வாழ்க்கைச் சூழல் பல பாடங்களை எமக்குக் கற்றுத் தருகின்றது. சிந்திக்கத் தெரிந்த மனிதன் இது சரியா பிழையா என மூளைக்குள் போட்டு பழுது பார்ப்பான். பிழையெனப்படுவதை தட்டிவிட்டுப் போகும் மூடப்பிறவிகளாக நாம் வாழக்கூடாது. சரியெனப்படுவதை சொல்லத் தயங்கும் கோழைகளாகவும் நாம் வாழக்கூடாது. அனைவருக்கும் இலகுவில் வசப்படக்கூடிய இலக்கியம் சிறுகதை இலக்கியம். இதன் மூலம் தெளிந்த நீரோடைபோல் மனிதன் உலகில் வாழ எம்மால் இயன்ற அருமருந்துகளைத் தந்துவிட்டுப் போகவேண்டிய கடமை ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கின்றது. அக்கடமையைச் செய்ய சரியான வழி எது என தீர்மானிக்கும் போது குறுகச்சொல்லி விளங்க வைக்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது. இது காலத்தின் கட்டாயமும் கூட. அதிகம் எழுதாதீர்கள் என்னும் கட்டளையை உள்வாங்கியே என் சிறுகதைகள் சிறிய கதைகளாக படைக்கப்பட்டன. கதை எழுதி கதாசிரியர் என்னும் பெயர் பெற வேண்டும் என்னும் நோக்கம் சிறிதளவு கூட என்னிடத்தில் இருந்ததில்லை. ஆனால், எதையும் ஏற்றுக் கொண்டு போகும் பாவியாகவும் நான் இருப்பதற்கு நான் தயாராகவில்லை. எழுது எழுது என்று என் மூளையிட்ட கட்டளையை உள்வாங்கியே இன்று உங்கள் கைகளில் என் நூல் வந்து அமரப் போகின்றது. இனிமேல் இந்த நூலுக்குச் சொந்தக்காரி நான் அல்ல. நீங்கள் ஒவ்வொருவருமே அதற்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டியவர்கள் நீங்கள் என்று கூறி
             இந்த நூல் இந்த அளவில் நூலாக உருப்பெற்று உங்கள் கைகளுக்கு வந்திருக்கின்றது என்றால், அதில் அடங்கியிருக்கின்ற பாரிய வேலைப்பழு சொல்லித் தீராது. ஆனால், அத்தனை பொறுப்புக்களையும் தன் தலைமேல் கொண்டு கடினத்தையும் இலகுவாகக் காட்டி என் கருத்துக்களையும் உள்வாங்கி இந்நூல் வெளிவரவும் வெளியீட்டுக்கும் முக்கிய காரணகர்த்தாவாகிய யாழ்பாவணன் ஜீவலிங்கம் அவர்களுக்கு என்னுடைய நன்;றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கின்றேன். என்னுடைய முக்கோணமுக்குளிப்பு நூலை மலேசியாவில் வெளியீடு செய்து வைத்ததோடு மட்டுமல்லாமல் என்ன உதவியென்றாலும் கேளுங்கள் அக்கா நான் செய்வேன் என்று முழுமூச்சாகத் தமிழுக்கும் கலைகளுக்கும் பெரும் பணியாற்றும் என் உடன் பிறவாச் சகோதரன் இந்நிகழ்வுக்குத் தலைமைதாங்கும் ஊற்றுவலையுலகக் கலைஞர்கள் மன்றத்தலைவர் ரூபன் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகின்றேன். கல்வியிலும் தரத்திலும் பெருமையிலும் போற்றப்படும் பிரமுகர்கள் புலம்பெயர்ந்து வாழும் எம்முடைய இலக்கிய தாகத்திற்கு மதிப்பளித்து என்னையும் ஒரு பொருட்டாக மதித்து என்னுடைய நூல் வெளியீட்டுக்கு வருகை தந்திருப்பது தமிழுக்கும் இலக்கியத்துக்கும் அவர்கள் கொடுத்திருக்கின்ற முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றது. பேராசிரியர் துரை மனோகரன் அவர்களுக்கும், பேராசிரியர் ம.ரகுநாதன் அவர்களுக்கும், சிறப்பு விருந்தினர்கள் கலாகீர்த்தி உடுவை எஸ். தில்லைநடராசா அவர்களுக்கும் தினக்குரல் பிரதம ஆசிரியர் பாரதி அவர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகின்றேன். வரவேற்புரை வழங்கிய ரேகா சிவலிங்கம் அவர்களுக்கும், 21ம் நூற்றாண்டில் சிறுகதை என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றிய மூத்த எழுத்தாளர் ஐ. சாந்தன் அவர்களுக்கும், வெளியீட்டுரை வழங்கிய வேலணையூர் தாஸ் அவர்களுக்கும், நான் உலகுக்குச் சொல்ல வந்தது என்ன என்பதை நுண்மான் நுழைபுலம் தேடி ஆய்வுரை ஆற்ற வந்திருக்கின்ற கு.றஜீவன் அவர்களுக்கும் விரிவுரையாளர் தி.செல்வமனோகரன் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவிப்பதுடன் மட்டுமல்லாமல் சிறப்புப் பிரதியைப் பெறுபவர்களுக்கும் மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். எத்தனை தவறுகளை நாம் சுட்டிக்காட்டினாலும் மனம் சோராது எமக்கு ஒத்துழைப்புத்தந்து அழகாக இரண்டாவது தடவையும்  இந்நூலை வடிவமைத்துத்தந்த அன்ட்ரா பிரின்ரஸ்க்கும் என் நன்றியை தெரிவிக்கின்றேன். இதைவிட என்னை யாரென்று அறியாமலே இங்கு வருகைதந்து இவ்விழாவைப் பெருவிழாவாக்கிக் கொண்டிருக்கும் தமிழை நேசிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் எனது உறவினர்களுக்கும் மிக்க நன்றியைத் தெரிவித்து விடைபெறுகின்றேன்.

    வெள்ளி, 1 ஜூன், 2018

    நாட்டிலுள்ள விஷத்தையெல்லாம் நான் குடிக்க வைத்துவிட்டான் - கண்ணதாசன் வரிகள் -

               

     
    ஜூன் 24 அன்று கண்ணதாசன் நினைவுநாள். உலகத் தமிழர்களின் வாயில் முணுமுணுக்கும் காதல், தத்துவம், தாலாட்டுப் பாடல்களின் கவித்துவத்தால் மனித மனங்களை அடிமைப்படுத்தியவர். அதுமட்டுமல்ல பல மனித மனங்களின் சோகத்திற்கும், மகிழ்ச்சிக்கும், நித்திரைக்கும் தேடும் வரிகளுக்குச் சொந்தக்காரன். பழைய தமிழ் இலக்கியங்களின் கற்பனைகளையும் அழகு தமிழ் சொற்களையும் கலந்து தன் கற்பனை என்னும் தேனூற்றி அற்புதமான பாடல்களை யாத்தளித்து, சேரமான் காதலி என்னும் நாவலுக்காக சாகித்திய அகடமி விருது பெற்ற எழுத்தாளர். 


                 இவரது குடும்பம் பெரிது. 3 திருமணம். 15 வாரிசுகள். பிறந்தது ஓரிடம் வளர்ந்தது ஓரிடம். காரைக்குடியைச் சேர்ந்த பழனியப்பச் செட்டியார், இவரை வளர்ப்பதற்காக இவருடைய தாய்தந்தைக்கு 7000 ரூபாய் பணம் கொடுத்து வாங்கினார். ஆரம்பப் பெயர் முத்தையா என்றும், அதன் பின் வளர்ப்புத் தந்தையிட்ட பெயர் நாராயணன் என்றும் மாற்றப்பட்டது. இன்று கண்ணதாசன் என்னும் பெயர் உலகறிந்த பெயராக நின்று நிலைக்கின்றது. திரையுலகின் மறக்கவொண்ணாத நாயகனாய் திரைக்கதை வசனம், பாடல்கள் எழுதியது மட்டுமல்ல நடிகனாகவும் விளங்கியிருக்கின்றார். இவது பராசக்தி, கறுப்புப்பணம், சூரியகாந்தி, இரத்தத்திலகம் ஆகிய படங்களில்  நடித்திருக்கின்றார்.
     
                 16 வயதில் வீட்டைவிட்டு வெளியேறி சென்னைக்கு வந்தார். பல இன்னல்களையும் சோகங்களையும் சுமந்தார். திருமகள் பத்திரிகையில் புரூப் திருத்துனராக வேலைகேட்டு வந்து பத்திரிகை ஆசிரியராக அமர்த்தப்பட்டார். பின் திரைஒலி, சண்டமாருதம், தென்றல் திரை ஆகிய பத்திரிகையில் பணியாற்றினார். அனைத்துப் பத்திரிகைகளிலும் கதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள் எழுதியதனால், இவரது இலக்கிய ஆளுமையை உலகம் அறிந்து கொண்டது. அதன் பின் தான் திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதத் தொடங்கினார். இவரது முதல் கதை கிரகலட்சுமி என்னும் பத்திரிகையில் “நிலாவொளியிலே" என்னும் பெயரிலே வெளிவந்தது. அதிலிருந்து தீவிரமாக எழுதத் தொடங்கினார்.
             
             காப்பியங்கள், கவிதை நூல்கள், சிற்றிலக்கியங்கள், கவிதை நாடகங்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், புதினங்கள்,சிறுகதைகள், வாழ்க்கைச் சரித்திரங்கள், கட்டுரைகள், சமயநூல்கள், நாடகங்கள், உரைநூல்கள் போன்ற வடிவங்களில் தமிழ் இலக்கிய உலகில் வலம் வந்துள்ளார். சுமார் 5000 க்கும் அதிகமான பாடல்களை திரைப்படங்களுக்கு எழுதியுள்ளார்.
     
                கன்னியின் காதல் என்ற திரைப்படத்திற்கு எழுதிய “கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே" என்னும் பாடலே இவர் திரைப்படத்துறைக்குள் பிரவேசித்த முதல் அறிமுகப் பாடல். அடுத்தடுத்து முயன்றால் பலன் கிடைக்கும் என்னும் தத்துவப்பாடலாக இது அமைந்திருந்தது. மூன்றாம்பிறையில் வந்த “கண்ணே கலைமானே" என்னும் உறங்கச் செய்யும் பாடலே இவரது இறுதிப் பாடலாக அமைந்தது. அவர் உறங்க அவர் பாடிய பாடலாயும் அமைந்திருந்தது. இடையில் வந்த பாடல்களுக்கும் கவிதைகளுக்கும் நான் சக்தியைப் பெற்றதே கம்பராமாயணப் பாடல்கள் தான் என்று தன் வாயாலேயே கூறியிருக்கின்றார். “காலமெனும் ஆழியிலும், காற்று மழை ஊழியிலும் சாகாது கம்பனவன் பாட்டு. அவன் தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு" என்று கம்பருக்கு அவர் பாடிய பாடல்கள் கண்ணதாசனுக்கும் பொருந்துவதாக இருக்கின்றது.
     
                பாடல்களால் பணம் குவிந்த பணத்தை திரைப்படம் தயாரித்து அழித்தார். சேமிப்புப் பழக்கமில்லாத கண்ணதாசன் “பிர்லாவைப் போல சம்பாதித்தேன். ஊதாரியைப் போல செலவழித்தேன். பல நேரங்களில் பிச்சைக்காரன் போல ஏங்கி நின்ற வாழ்க்கைதான் எனக்கு வாய்த்திருக்கின்றது என்று தனது கட்டுரை ஒன்றில் எழுதியிருக்கின்றார். சந்தர்ப்பத்திற்கேற்ப பாடல்கள் எழுதுவதில் திறமையானவர். பணக்கஸ்டத்தில் சகோரர்கள் உதவி செய்ய மறுத்த போது “அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே" என்னும் பாடலை எழுதினார். விஸ்வநாதன் அவர்கள் நெஞ்சிலோர் ஆலயம் படத்திற்காகப் பாடல் எழுத வரும்படி கண்ணதாசனை அழைத்துக் காத்திருந்த போது அவர் வரவில்லை என்ற காரணத்தால், கோபப்பட்ட விஸ்வநாதன் அவர்கள் “இனிமேல் கண்ணதாசனிடம் பாடல்கள் கேட்கப் போவதில்லை" என்று  கூறியதை அறிந்த கண்ணதாசன் “சொன்னது நீதானா சொல் சொல் என்னுயிரே" என்னும் பாடலை எழுதிக் கொண்டு போய்க் கொடுத்தார்.
               
                              மனவாசம், வனவாசம், எனது வசந்த காலங்கள், எனது சுயசரிதம் என்னும் ஆகிய 4 புத்தகங்களும் ஒருவன் எவ்வாறு வாழக்கூடாது என்பதற்காக தன் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டிய புத்தகங்களாகும். அவர் தன்னுடைய பல பாடல் வரிகளில் தன் வாழ்க்கையையே படம் பிடித்துக் காட்டியுள்ளார். “ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு. ஒரு கோலமயில் என் துணையிருப்பு|| இறப்பதற்கு முன்பே தனக்குத்தானே எழுதிய இரங்கற்பாவில் “ஏற்றிய செந்தீயே நீ எரிவதிலும் அவன் பாட்டை எழுந்து பாடு" என்று இறுதி வரிகளை எழுதியுள்ளார்.

                இவர் கற்பனையில் வரைந்த பாடல்களுக்குச் சில எடுத்துக்காட்டுக்கள்

    காதல் பாடல்
    “பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும்
     பாவை, உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும்
     மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் - நானாக வேண்டும்
     மடிமீதில் விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும்"

    “கம்பன் கண்ட சீதை உங்தன் தாயல்லவா
    காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா
    அம்பிகாபதி அணைத்த அமராபதி – மங்கை அமராபதி
    சென்ற பின்பு பாவலர்க்கு நீயேகதி – என்றும் நீயேகதி"

    தாலாட்டுப்பாடல்

    காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
    காலமிதை தவற விட்டால் தூக்கமில்லை மகளே
    எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி
    ஈரேழு மொழிகளுடன் போராடச் சொல்லுவதே தீராத தொல்லையடி"

    சோகப்பாடல்

    “உன் கண்ணில் நீர் வடிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
    என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா என் உன்னதன்றோ"

    “வானிலுள்ள தேவர்களை வாழ வைக்க விஷம் குடித்தான்
    நாட்டிலுள்ள விஷத்தையெல்லாம் நான் குடிக்க விட்டுவிட்டான்"

    தத்துவப்பாடல்

    “ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்
    அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்"

    “படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு
     பாடம் படிக்காத மேதைகளும் பாரினுள் உண்டு"

    “வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
    வாசல் தோறும் வேதனை இருக்கும்
    வந்த துன்பம் எது என்றாலும்
    வாடி நின்றால் ஓடுவதில்லை"

                   இவ்வாறு காலத்தால் அழியாத பல திரையிசைப் பாடல்களைத் தந்த கவிஞர் கண்ணதாசன் அவர்கள் மறைந்தும் மறையாது பல உள்ளங்களில் மறக்க முடியாது இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...