• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 15 ஜூன், 2012

    ஆணே உன் கதி இதுதானா?




    அந்நியநாட்டிலே வாழும் மனிதர் ஆயிரம் - அவர்
    வாழ்க்கை முறையும் ஆளுக்காள் தனிரகம்
    சோம்பிக் கிடப்பாரையும் வாழ வைக்கும்
    சோம்பல் அறியா மனிதரையும் வாழவைக்கும்

    பகலவன் கடமையைப் பங்கேற்றுக் கொண்ட வீதிவிளக்குகள், அசைவின்றி அமைதியைப் பேணிப் பாதுகாக்கும் சாலையோர மரங்கள், வியாபாரநிலையங்களின் விடிவிளக்குகள் மட்டுமே தமது கடமையைப் பங்கேற்றுக் கொண்ட மாலைப்பொழுது , உலகமே உறங்கிக் கொண்டிருக்கும் ஆரவாரமில்லாத மாரிகாலப் பொழுது. வெள்ளைப்பனியில் ஜேர்மனி மூழ்கிக் கிடக்கும் - 14 பாகை கடுங்குளிர். ஆனால், அவள் மட்டும் சாளரம் நடுவே  சாலையை நோக்கியவண்ணம் நின்று கொண்டிருந்தாள். அவள்தான் சாரதா. மணி இரவு பன்னிரெண்டை வழியனுப்பி வைத்திருந்தது. அயலவர் ஆழ்ந்த உறக்கத்திற்குத் தன் காலடிஓசை தகராறு செய்யக்கூடாது என்பதற்காக வாடகை வீட்டின் படிகளில் மெல்லெனத் தாண்டித் தாண்டித் தன் வாசல் கதவை மெதுவாய்த் திறந்தான், பத்மன். ஜேர்மனியில் பகல் 1.00 மணியில் இருந்து 3.00 மணி வரையும் இரவில் சில நகரங்களில் 21.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 6.00 மணி வரையிலும் சில நகரங்களில்  22.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 6.00 மணி வரையிலும் சத்தம் செய்தல் கூடாது. ஞாயிற்றுக் கிழமைகளில் முழுநாளும் சத்தம் இல்லாத நாளாக அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும். இதுவே சட்டமாக இருக்கின்றது. சனிக்கிழமைகளில் 23.00 மணி வரை பிரச்சினை இல்லை. ஆனால், குடியிருப்பிற்கு அருகிலுள்ள குடியிருப்பாளர்களிடம் முன்னமே அறிவித்து இருக்க வேண்டும். அதனால் தான் வசிக்கும் வீட்டிற்கு அருகிலுள்ள குடியிருப்பாளர்கள்  வீட்டில் தன் காலடிச்சத்தம் இடைஞ்சல் செய்யக் கூடாது என்பதற்காக மெல்லென வீட்டினுள் பத்மன் நுழைந்தான்.

    இனிமையான இளமைப் பருவங்கள் கடமைச் சுமையால் கரைந்தோட, காதோரம் வெள்ளிக் கம்பிகள் அவதாரம் செய்ய, நாற்பத்து நான்கு வயதில் தன் மூளையில் தட்டிய, தனக்கென்று ஒரு துணை தேவை என்னும் விடயத்தைக் கருத்தில் கொண்டு துணை ஒன்றைப் பெற்றான். ஆர்ப்பாட்டம் இல்லாது ஆலயத்தில் ஆதரவான சில நண்பர்கள் ஆசீர்வாதத்துடன் மங்கலநாணைத் தன் மனைக்கும் மனதுக்கும் சொந்தக்காரிக்கு அணிவித்தான். அவளும் அவன் மனதுக்குப் பிடித்த பெண்ணாய் அன்போடு வாழ்கின்றாள்;. இன்னும் அவனுக்கு இரவே பகல், பகலே இரவு. பகலில் ஒரு நிறுவனத்தில் வேலை முடித்து அங்கிருந்தே சீன உணவகத்தில் சமையல் பாத்திரங்களைக் கழுவித் துப்புரவு செய்யும் தொடர் பணியை முடித்து இரவு முடியும் அதிகாலைப் பொழுது தன் ஓய்வுக்காக வீட்டை அண்மிப்பான். அவ்வேளை வரை அவனுக்காக உறங்காது விழித்திருக்கும் தன் மனைவியுடன் அளவளாவி விட்டு களைப்பில் கண்ணுறங்கிவிடுவது அவனது நாளாந்த வழக்கமாகும். எப்படித்தான் சீன உணவகத்தில் வேலை செய்தாலும் ஐரோப்பிய நாட்டில் வாழ்ந்தாலும் எங்கள் நாட்டுச் சோறும் உறைப்புக் குழம்பும் சாப்பிட்டால்த்தான் எம்மவர்க்கு உணவு உண்ட உணர்வு ஏற்படும். அதேபோல் பத்மனுக்கு மனைவி சாரதா கைப்பக்குவத்தில் கோழிக்கறி உறக்கத்தை படுக்கைக்குப் போகாமலே கொண்டு வந்தது. ஆனாலும், அன்றைய செய்திகளை இப்போதே கேட்க வேண்டும் அல்லவா. உணவை வாயில் திணித்த வண்ணம், அடுத்த நாள் கடமைகள் பற்றி மனைவியிடமிருந்து விளக்கத்தைப் பெற்றான்.

    சாரதாவும் காத்திருந்து வெளியிடும் பத்திரிகைத் துணுக்குகள் போல் தன்னிடம் வந்தடைந்த தகவல்களை பிரதியீடு செய்தாள். தாயகத்திலிருந்து தாயாரின் தொலைபேசி வந்ததாம். அத்தானுக்கு ஆரம்பித்துக் கொடுத்த நிறுவனம் அமோகமாய் வெற்றிநடை போடுகின்றதாம். அக்காளுக்குக் கட்டிக் கொடுத்த வீட்டில் இரு மாடிகளுக்கும் இணைப்பை ஏற்படுத்தும் தொலைபேசி ஒன்று அனுப்பப்பட வேண்டியுள்ளது. தங்கையின் திருமணம் தடபுடலாக 500 பேர் வாழ்த்த சொகுசு ஹொட்டலில் தடபுடலாக நடந்தேறியுள்ளது. தம்பிக்குத் தலைநகரில் தலைசிறந்த வியாபாரநிறுவனம் அமைத்தாயிற்று. கடைக்குட்டிக்குப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இவையனைத்தும் வந்த செய்திகளாய் இருக்க. ''தம்பியை ஒருக்கால் நாளைக்கு ரெலிபோன் எடுக்கச் சொல்லு பிள்ள' இது நாளைய கடமையாய் இருந்தது. 

    அத்தனையையும் கேட்டுச் சிரித்தபடி சாரதா கன்னத்தைத் தடவியபடி, 'இன்னும் ஒரு கடமைதானே பாக்கி இருக்கிறது சாரதா. அதன் பின் நமக்காக நாம் வாழ்வோம். என்னைப் போலும் உன்னைப் போலும் இரண்டு பிள்ளைகளைப் பெற்று அவர்களுக்காக நானும் நீயும் கண் விழிப்போம் இன்பமான நாளை எமக்காக உருவாக்கிக் கொள்ளுவோம்'' என்றான், பத்மன். அவன் கூறிவிட்டான். அது எந்த அளவிற்கு உண்மை என்று சாரதா உணராதவளானாள். ஆனால், அவர்களுக்காக அவர்கள் வாழும் நாளை எண்ணி அந்த இரு ஜீவன்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றன என்பது மாத்திரம் உண்மை. 

    உணவு உள்ளே செல்ல கட்டில் அவனை வரவேற்றது. படுத்த மறுகணமே நித்திராதேவி அவனை அணைத்துக் கொண்டாள். சாரதா வெப்பமூட்டிகளைக் குறைத்தாள், மின்விளக்குகளை அணைத்தாள், போர்வைக்குள் புகுந்தாள். வழமைபோல் காலை கண்விழித்தாள். கட்டிலின் அருகே வேலைக்குப் போகாமல் இன்னும் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் கணவனைப் பார்த்தாள். துடித்து எழுந்தாள். இவரை எழுப்பிவிட மறந்துவிட்டேனே பேசப்போகின்றார் என்று நினைத்தபடி அருகே சென்று மெல்லென அவனைத் தொட்டு எழுப்பினாள். உடல் சில்லென்று குளிர்ந்தது. அவனை மெல்ல உழுப்பினாள். உடல் அசையவில்லை. மீண்டும் உழுப்பினாள். பேச்சில்லை. ஐயோ... என்று அலறியபடி போர்வையை நீக்கினாள். உயிரற்று அவன் உடல் அமைதியாக சலனமின்றி உறங்கிக் கொண்டிருந்தது. சாரதா உடல் நடுக்கம் கண்டது. அழுவதா துடிப்பதா அடுத்த காரியத்தில் இறங்குவதா எதுவாக இருந்தாலும் அவளாகவே செய்ய வேண்டும். தொலைபேசியில் 113 என்னும் இலக்கத்தை அழுத்தினாள். விரைந்து வந்தது அம்புலன்ஸ் வண்டி. உடல்தாங்கி வைத்தியசாலை நோக்கி விரைந்தது. பத்மன் வாழ்வை முடித்துக் கொண்டான் என்னும் வேதனைச் செய்தி உறுதியானது. கடமைகள் முடிக்கப் பிறந்தவன் போல் அந்நியநாட்டில் வாசம் செய்து தன் சொந்தக் கடமை முடிக்காது சொல்லிக் கொள்ளாமல் விடைபெற்ற பத்மன் நிலையால் அதிகம் பாதிக்கப் படப்போவது சாரதா மட்டுமே என்பது நிச்சயம்.  


    ஆசிரியர் குறிப்பு

    ஐரோப்பியநாடுகளில் 50 தாண்டித் தமிழர்கள் வாழ்வது அருமையாகி விட்டது. இரவு படுத்து பகல் எழுந்திருப்பது கேள்விக்குறியாகிவிட்டது. அளவுகடந்த கடமைச்சுமையும் அடுத்தவர்களைப் பார்த்துத் தாமும் அதுபோல் வாழவேண்டும் என்ற அளவுக்கு மீறிய ஆசையும் ஓய்வில்லாத உழைப்பும் மனஅழுத்தங்களையும் இதயச்சுமையையும் கொண்டுவருகின்றது. வைத்தியவசதி அதிகமுள்ள நாடானாலும் இவர்கள் உயிர்களைக் காப்பாற்றாமல் போவதற்கு அவர்களே அவர்களுக்குப் பொறுப்பாகின்றார்கள். 


                 

    9 கருத்துகள்:

    1. வணக்கம் அன்பு சகோதரி...
      ஒரு ஆணின் நிலையிலிருந்து
      நீங்கள் யோசித்தது எனக்கு
      மனமகிழ்வைக் கொடுக்கிறது,

      " தான் கொண்ட அன்புள்ளங்களுக்காய்
      தான் கொண்ட பாரம் அறியாது
      உழைப்பது உடல் பாரமே தவிர
      மனபாரம் கிடையாது...
      சோம்பித் திரியாது
      சொந்தங்கள் வாழ்ந்திடவே
      சேர்த்துவைக்க எத்தனித்தாலே
      மனிதனின் கடமையாம்.."

      அழகாக ஒரு கட்டுரை சகோதரி
      மனம் நிறைந்தது..

      பதிலளிநீக்கு
    2. சாரதாவின் நிலை குறித்து வருத்தமே மேலிடுகிறது . உங்கள் எழுது நடை நன்றாக உள்ளது .

      பதிலளிநீக்கு
    3. கதை மனத்தைப் பாதித்தாலும்
      பின் குறிிப்பு அதிகம் பாதித்தது
      அவர்கள் நிலையினை ஒரு கட்டுரையாக கூடத்
      தரலாமோ எம்மவர்களின் அங்குள்ள
      உண்மை நிலையை சரியாக அறியலாமே
      எனத் தோன்றியது
      எப்போதும் போல மனம் கவர்ந்த அருமையான நடை
      ம்னம் கவர்ந்த பதிவு
      தொடர வாழ்த்துக்கள்

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. நன்றி சார். கட்டுரை சுவாரஷ்யம் இல்லாமல் இருக்கலாம் என்பதனாலேயே வாழ்வியல் இலக்கியங்களாகத் தருகின்றேன். புலம்பெயர் தமிழர் வாழ்வு என்னும்பெயரிலும் கட்டுரைகள் எழுதியிருந்தேன்

        நீக்கு
    4. ஆசிரியர் குறிப்பில் தாங்கள் குறிப்பிட்டுள்ள தகவல்
      முற்றிலும் உண்மை.இங்கு உள்ளவர்கள் அதிகமாக
      மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு ஒன்றில் நோயாளியாகவோ
      அல்லது இறந்தோதான் போகின்றனர் .இந்த சம்பவங்கள் இங்கு
      அதி வேகமாக பரவிவருவது மிகவும் மனவருத்தத்திற்கு உரிய
      ஒரு விடயம் இதனை தெளிவு படுத்தும் நோக்கில் தாங்கள்
      வெளியிட்ட படைப்பிற்கு எனது மனமார்ந்த நன்றிகளையும்
      பாராட்டினையும் தெரிவித்துக்கொள்கின்றேன்!....

      பதிலளிநீக்கு
    5. பலமுறை பதிவுக்குள் வந்து
      வெறும் கைய்யுடன் திரும்பிவிட்டேன்
      தங்கள் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..

      பதிலளிநீக்கு
    6. This is a true fact ma.The situation is not only European countries but also in all the western countries including USA.There is one tamil cinema paadal (sorkamae ennralumae nammur polakkuma?)Therefore our country is best one ,Unity is diversity,Happiness in hard to live .Your contribution is a valuable one by DK.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...