• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    செவ்வாய், 19 ஜூலை, 2011

    பெண்ணின் பெருமை உணர்வோம்!


                                                                                                   

    பூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் உலகைக் காக்கும் குழந்தையைப் பாதுகாக்கும் கருவறையினுள், பூமியைக் குளிரச் செய்யும் கடல் போன்ற கருப்பைத் திரவத்தினுள் மிதந்து வாழ்ந்து கரு இருளில் களித்துறங்கிய கருமுகில் பெண்ணாள், கருவிறங்கி உலகின் குளிர்மைக்காய்க் கண்விழித்தாள். உலகின் ஒளி பூமித் தாயின் மடியில் புகலிடம் புகுந்தது. பெண்ணாய்ப் பிறந்து கள்ளிப் பாலுக்கு இரையாகிய காலம் கரைந்தோடி, அவள் சொல்லுக்காய் நாடு விழித்திருக்கும் காலம் காட்சிக்கு வந்து விட்டது. இன்று விண்வெளியில் உலாவந்த பெண் தைரியத்தின் முழுவடிவம், இன்பம் சுவைக்கும் சுதந்திரப் பறவை.

    பெண் என்றும் அடிமையில்லை. அவளை யாரும் அடக்கவுமில்லை. அவளே அடங்கி வாழ்ந்தாள். அவளின் மென்மை அடக்கத்தை அணிகளனாக்கியது. அன்றும் இன்றும் பெண்களைப் பாடும் கவிஞர்களே அதிகம். கொடியெனக் கணவன் தோளில் சாய்ந்தாள். கொழுகொம்பாய் அவன் இருக்க, அவனைப் படர்ந்தாள். கரமென மாமியார் உறவில் கைகோர்த்தாள். ஆசானாய் குழந்தைகளை ஆற்றுப்படுத்தினாள். நாத்தனார் வாழ்வில் நலன் விரும்பியானாள். மொத்தத்தில் குடும்பச் சொத்தே அவளானாள். பல வீடுகளின் ஆட்சியே நாட்டின் ஆட்சி. பல வீடுகள் இணைந்ததே, நாடு. வீடு விளங்க நாடு விளங்கும். எனவே தான் பெண்கள், வீட்டின் ஒளி அல்லது நாட்டின் ஒளி என்கின்றோம். இந்த வீட்டிற்கு விளக்கேற்ற ஒரு பெண் தேவை என மாமியார் நாடுவதன் சூட்சுமம்தான் என்ன? விளக்கேற்ற விரல்கள் அற்றவர்களா வீட்டிலிருப்போர். புகுந்த வீட்டின் பெருமை ஒளியை உலகிற்கு விளக்கவென புகுந்தவளாதலால் விளக்கெரிக்க ஒரு பெண் வரவேண்டுமென்ற வார்த்தையைப் பிரயோகித்தனர், பெரியோர். மென்மையான இதழ் பட்ட ஊதுகுழல் வெறுங்காற்றை உள்ளெடுத்து இசையாக வெளியே பரப்புதல் போல கணவன் மனையில் மென்மையாகப் புகுந்து சாதாரண குடும்பத்தைத் தரமான குடும்பமாய் உலகிற்கு உணர்த்தப் புகுமனையில் கால் வைப்பாள்.

    உடலுறுதி கொண்ட ஆணைவிட மனவுறுதி கொண்ட பெண் சிறப்பு மிக்கவள். பெண்ணுக்குப் பிரசவம் என்பது மறுபிறப்பு என்பார்கள். ஒரு குழந்தை பிறக்கும் வரை எத்தனையோ வேதனைகளைச் சுமக்கின்றாள். தன் உயிரைப் பணயம் வைத்து அந்தக் குழந்தையைப் பெற்றெடுக்கின்றாள். குழந்தை பிறந்து மறு வருடமே அடுத்த குழந்தைக்குத் தயாராகி விடுகின்றாள். இதுவே அவளின் தைரியத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. கருணைக்கும் இரக்கத்திற்கும் சகிப்புத்தன்மைக்கும் பொறுமைக்கும் இருப்பிடம் பெண்தான். எனவேதான் ஒரு குழந்தை வளரும் வரையில் தாயின் பராமரிப்பில் இருக்க வேண்டுமென்று சட்டம் கூறுகிறது.

    இல்லறத்தை விடச் சிறந்த அறம் ஒருவனுக்கு இல்லை. இந்த இல்லறத்தைச் சிறப்பான முறையில் நடத்த வேண்டுமென்றால், சிறந்த இல்லாள் தேவை. இதன் மூலமே அவன் சமூகத்தின் முன் ஏறுபோல் பீடுநடை பயில முடியும் என வள்ளுவப் பெருந்தகை கூறியிருக்கின்றார். உடலால் வாழும் ஆணைவிட உள்ளத்தால் வாழும் ஆற்றல் பெற்ற பெண் உலகில் சிறப்புப் பெறுகின்றாள். இந்தப் பெண்மையின் பெருமையை உணர்ந்துதான்
    மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல
    மாதவம் செய்திடல் வேண்டுமம்மா
    என்று கவிமணி தேசியவிநாயகம்பிள்ளை அவர்கள் கூறுகின்றார்.

    ஒரு அழகிய கற்புடைய பெண் ஆண்டவனின் முழுமையான சிறந்த படைப்பாகவும், தேவதைகளின் பெருமையாகவும், உலகின் அதிஅற்புதமான தனித்த அதிசயமாகவும் விளங்குகின்றாள்.” என்று ஹெர்மிஸ் என்னும் அறிஞர் கூறுகின்றார்.
    நாம்பெற்றிருக்கின்ற வாழ்விற்கும், அந்த வாழ்வைத் தகுதியுள்ளதாக அமைத்துத் தந்ததற்கும், நாம் கடவுளுக்கு அடுத்தபடியாகப் பெண்களுக்குக் கடமைப்பட்டுள்ளோம்” என்று பொவீ என்னும் அறிஞர் மொழிந்துள்ளார்.
    இதனையேதான் நமது மகாகவி பாரதியாரும்
    பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
    புவி பேணி வளர்த்திடும் ஈசன்.”
    என்று முழுமையாகப் பாடிச் சென்றார். எனவே பெண்ணின் பெருமையை உணர்வோம். புவி பேணி வளர்த்திட அவள் புகழ் பாடுவோம்.

    முத்துக்கமலம் இணையத்தில் வெளியான எனது படைப்பு

    12 கருத்துகள்:

    1. பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா -- பாரதி

      பதிலளிநீக்கு
    2. //உடலுறுதி கொண்ட ஆணைவிட மனவுறுதி கொண்ட பெண் சிறப்பு மிக்கவள். பெண்ணுக்குப் பிரசவம் என்பது மறுபிறப்பு என்பார்கள். ஒரு குழந்தை பிறக்கும் வரை எத்தனையோ வேதனைகளைச் சுமக்கின்றாள். தன் உயிரைப் பணயம் வைத்து அந்தக் குழந்தையைப் பெற்றெடுக்கின்றாள். குழந்தை பிறந்து மறு வருடமே அடுத்த குழந்தைக்குத் தயாராகி விடுகின்றாள். இதுவே அவளின் தைரியத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. கருணைக்கும் இரக்கத்திற்கும் சகிப்புத்தன்மைக்கும் பொறுமைக்கும் இருப்பிடம் பெண்தான்.//

      பெண்மையை என்றும் போற்றி வணங்குகிறேன்.
      நல்ல அருமையான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

      பதிலளிநீக்கு
    3. பெண்ணின் பெருமை உணர்த்தும்
      அருமையான பதிவு
      ஆண்களிடம் உரிமை கேட்டுப் பெறவேண்டிய நிலையில்
      இன்று உண்மையில் பெண்கள் இல்லை
      திறமை உள்ள அவர்கள் இப்போது அவர்களே
      உரிமையை எடுத்துக்கொள்ளும் தகுதி பெற்றுவிட்டார்கள்
      அதனால்தான் ஊர்ந்துகொண்டிருந்த உலக முன்னேற்றம் கூட
      இப்போது நாலுகால் பாய்ச்சலில் பாயத் துவங்கியுள்ளது
      சிந்தனையை தூண்டிச் செல்லும் தரமான பதிவு
      தங்கள் கேட்க்கும்படி செய்திருந்தால்
      இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

      பதிலளிநீக்கு
    4. பெண்ணின் பெருமை பேசும் அருமையான படைப்பு

      பதிலளிநீக்கு
    5. அருமையான பதிவு.
      வாழ்த்துக்கள்.

      பதிலளிநீக்கு
    6. “ஒரு அழகிய கற்புடைய பெண் ஆண்டவனின் முழுமையான சிறந்த படைப்பாகவும், தேவதைகளின் பெருமையாகவும், உலகின் அதிஅற்புதமான தனித்த அதிசயமாகவும் விளங்குகின்றாள்.” என்று ஹெர்மிஸ் என்னும் அறிஞர் கூறுகின்றார்...

      இப்பொழுது தான் படிக்கிறேன்...நல்ல பதிவு...

      பதிலளிநீக்கு
    7. மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல
      மாதவம் செய்திடல் வேண்டுமம்மா

      இயற்க்கையிலயே பெண்ணுக்கு ஆணைவிட சக்தி அதிகம்... அதனால் தான் சக்தி எனப்படுகிறாள்...

      பெண் நினைத்தால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும்..... அத்தகைய சக்தி அவளுக்கு மட்டுமே உண்டு

      பெண்களின் சக்தியை பெண்களே உணராதிருப்பது தான் உண்மை...

      மாதா பிதா குரு தெய்வம்... என்று சொல்கிறோம் மாதா என்பவள் பெண் அவளே முதலாக கருதப்படுகிறோம்....

      ஆண்மையை ஜெய்ப்பது என்றும் பெண்மையே...பெண்ணின் பெருமைய உணர்த்திய கௌரி மேடத்திற்கு பாராட்டுக்கள்

      பதிலளிநீக்கு
    8. நன்று.

      பழம்பெருமை பேசுகிறீர்களோ? தற்காலப் பெண்ணின் பெருமை என்னவென்று நினைக்கிறீர்கள்? மாமியார் நாத்தனார் உறவாடல் இன்றைய சூழலுக்குப் பொருந்துவதாக நினைக்கிறீர்களா? அடுத்த ஐம்பது வருடங்களுக்குப் பெண்மை தொடர்ந்து சிறக்க என்ன செய்ய வேண்டும்? பாரதியின் பெண் இன்னும் வந்தபாடில்லை என்று தோன்றுகிறதே? :)

      பதிலளிநீக்கு
    9. Natarajan Mariappan ‎//பெண் என்றும் அடிமையில்லை. அவளை யாரும் அடக்கவுமில்லை. அவளே அடங்கி வாழ்ந்தாள். அவளின் மென்மை அடக்கத்தை அணிகளனாக்கியது. அன்றும் இன்றும் பெண்களைப் பாடும் கவிஞர்களே அதிகம்.//

      //விளக்கேற்ற விரல்கள் அற்றவர்களா வீட்டிலிருப்போர்.//

      //உடலுறுதி கொண்ட ஆணைவிட மனவுறுதி கொண்ட பெண் சிறப்பு மிக்கவள்//

      அற்புதமான கட்டுரை கௌரி அவர்களே! .நிதர்சனமான உண்மைகளை நிறையத் தமிழ் கலந்து கொடுத்திருக்கிறீர்கள்..அரு​மை..தொடரட்டும் உங்கள் சொற்காலம்

      பதிலளிநீக்கு
    10. ///மாதராய் இவ்வுலகில் பிறந்திட
      மாதவம் செய்திட வேணுமம்மா//

      அழகுத் தமிழ் நடையில்
      ஆரவாரமின்றி தெளிவுபட
      பெண்மையின் புகழை இனிமையாக
      உரைத்திருக்கிறீர்கள்.
      அருமை அருமை

      முத்துக்கமலத்தில் உங்கள் கட்டுரையை
      வாசித்திருக்கிறேன் தோழி.
      என்னைப்போல் புதிய
      வலைப்பதிவர்களை
      உங்கள் எழுத்துக்கள் ஈர்த்திருக்கிறது .
      என் தளத்தில் தங்கள் கருத்தை பார்த்தவுடன்
      எனக்கு மாபெரும் பரிசு கிடைத்தது போல் இருந்தது

      நன்றி நன்றி நன்றி தோழி.

      பதிலளிநீக்கு
    11. பெண்ணின் பெருமையே தனி ! அதற்கு இதுவும் சான்று !! வாழ்த்துக்கள் !!!

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...