• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    செவ்வாய், 9 செப்டம்பர், 2025

    எழுத்துகளுக்கும் ஆடை கட்ட வேண்டும்

     




    எழுத்துகளுக்கும் ஆடை கட்ட வேண்டும்

     

    இலக்கியம் என்பது ஒரு சமூகம் வாழுகின்ற காலத்தைத் தெட்டத் தெளிவாக வேறு சமூகத்துக்கு, அடுத்த கால கட்டத்துக்குப் படம்பிடித்துக் காட்டச் சிறந்த கண்ணாடி. அதனாலேயே காலத்தின் கண்ணாடி இலக்கியம் என்பார்கள். சங்கம் தொட்டு இன்று வரை தமிழ் இலக்கியங்களே எமது பண்பாட்டு விழுமியங்களை உலகத்துக்கு எடுத்துக்காட்டியது. எனவே இலக்கியம் சத்தியமாக இருப்பதுடன் சுத்தமாகவும் இருக்க வேண்டியது அவசியமாகின்றது. ஆனால், தற்காலத் தமிழ் இலக்கியங்கள் எதிர்காலத் தலைமுறையினருக்கு என்ன பண்பாட்டைப் போதிக்கப் போகின்றது என்பது கேள்விக்குறியாக அமைகின்றது. இலக்கியங்களைக் கற்பதில் அச்சமும் வெட்கமும் ஏற்படுகின்றது.

     

    இக்கட்டுரை இரண்டு அம்சங்களை ஆராய்கின்றது. ஒன்று நூல்களிலுள்ள அச்சுப் பிழைகளும், கருத்துப் பிழைகளும், இரண்டாவது ஆபாச எழுத்துக்கள்.

     

    ‘நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற

    நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு’’

     

    என்று நாம் கற்கின்ற நூல்களின் அளவே எம்முடைய அறிவு அமைகின்றது என்கிறார் ஒளவையார்

     

    ‘தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

    கற்றனைத் தூறும் அறிவு’’

     

    என்று படிக்கப் படிக்க அறிவு வளரும் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. எனவே படிப்பு என்பது பாடசாலைக் கல்வியில் மாத்திரமன்று நாம் வாசிக்கின்ற நூல்களின் மூலமும் பல விடயங்களைக் கற்றுக் கொள்ளுகின்றோம். வாசிப்பினால், அறிவு பெற்ற பல அறிஞர்களை நாம் அறிவோம். நெருப்பு வெளிச்சத்தில் படித்த ஆபிரகாம் லிங்கன், இறக்கும் தறுவாயிலும் நூல்களைப் படித்த பகத்சிங், சோக்ரட்டீஸ், கருணாநிதி, பாரதிதாசன் போன்றவர்கள் வாசிப்பின் மகத்துவத்தை உலகத்துக்கு உணர்த்தியிருக்கின்றாரகள்.

     

    நாம் என்ன கற்கின்றோமோ அதுவாகவே மாறுகின்றோம். மனத்தைச் செம்மைப்படுத்தும் நூல்களைக் கற்கின்ற போது எமது சமுதாயத்துக்கு நல் வழிமுறைகளைக் காட்டுவோம் அதனாலேயே நல்வழி, நன்னெறி போன்ற நூல்களை இளம் பிராயத்திலேயே மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகின்றது. நல்ல நண்பனாக, நல் ஆசானாக, நல்ல ஆன்மீக குருவாக, நல்ல மனிதனை உருவாக்க வாசிப்பு உதவியிருக்கின்றது. ஆனால், இன்று இக்கருத்துக்கள் உண்மையானவையா? என்னும் ஐயம் ஏற்படுகின்ற வகையிலே கருத்துப் பிழைகள் அமைந்துவிடுகின்றன. இன்று பத்திரிகைகளில் பிரசுரமாகின்ற பல சிறுகதைகளில் சிறுகதைக்குரிய செப்பம் இல்லை. அவை அழுக்குகளோடு பிறந்த சிசுக்களாகவுள்ளன. பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் கூட அவற்றினைச் செப்பனிடுவதில் அக்கறை கொள்வதில்லை என செங்கை ஆழியான் அவர்கள் ஞானம் ஆசிரியர் தி.ஞானசேகரன் அவர்களின் நேர்காணலில் குற்றஞ்சாட்டுகின்றார்.

     

    இதற்கு எடுத்துக்காட்டாகத் தமிழ்நாட்டுப் பெண் சாதனையாளர்கள் பன்னாட்டுக் கருத்தரங்கு என்னும் நூலிலே அரசு கல்வியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் ஒருவர் ‘மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’’ என்னும் கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை அவர்களின் வரிகளை ஒளவையாரின் வரிகள் என்று எழுதியுள்ளார். தமிழ் பல்கலைக்கழக நூலகர் தனது கட்டுரையில் இந்த வரிகளையே பாரதியார் பாடியதாக எழுதியுள்ளார். ஒரே நூலில் இவ்வாறான தவறுகள் வந்திருக்கின்ற போது அந்த நூலுக்கு அணிந்துரை எழுதிய மிகுந்த கல்வியாளரே அதனைக் கண்டு கொள்ளவில்லை. சிலப்பதிகாரப் பாடல் என்று சிலப்பதிகாரத்திலேயே இல்லாத ஒரு பாடல் கொரொனா காலத்திலே இணையத்தில் உலாவின. இவ்வாறான தவறுகளை வாசிக்கின்ற வாசகர்கள், மாணவர்கள், பேச்சாளர்களும் தப்புத் தப்பாக உலகத்துக்குச் செய்திகளைச் சொல்பவர்களாக இருப்பார்கள். இணையத்திலேயே தவறுகள் ஏற்படுகின்றன என்பதைத் தாண்டி அச்சு நூல்களிலும் தவறுகள் காணப்படுகின்றன.

     

    சங்கப்புலவர் சீத்தலைச்சாத்தனார் பாடல்களில் தவறுகளைக் காணுகின்ற போது தன்னுடைய கையிலுள்ள எழுத்தாணியால் தலையிலே குத்துவார். இதனால், இவருக்கு சீத்தலைச் சாத்தனார் என்று பெயர் வந்ததாகக் கூறுவார்கள்.

     

    செண்பகப் பாண்டியனுக்கு ஏற்பட்ட ஐயத்தைத் தீர்த்து வைக்கத் தருமி மூலம் சிவன் அனுப்பி வைத்த பாடலாகிய

     

    ‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

    காமம் செப்பாது கண்டது மொழிமோ

    பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்

    நறியவும் உளவோ நீ அறியும் பூவே’’

     

    என்னும் பாடலிலேயே குற்றம் கண்டு பிடித்து நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதிட்டவர் நக்கீரர். இவ்வாறான இலக்கியப் பாரம்பரியம் கொண்ட நம் தமிழ் இலக்கியம் இன்று தவறுகளைக் கண்டும் காணாதிருக்கின்றது.

     

    அடுத்து எழுத்துக்களில் ஒழுக்கக் கேடான நாகரிகம் அற்ற விரசத்தை எழுதுதல். அதற்கான அங்கீகாரத்தை எழுத்துலகம் வழங்குதல். இவ்வாறான எழுத்துக்கள் மூலம் சமூகத்திற்கு எழுத்தாளர் எதைக் கொடுக்கப் போகின்றார்கள் என்று புரியவில்லை. ஜான்ரஸ்கின் எழுதிய ‘கடையேனுக்கும் கடைத்தேற்றம்’’ என்ற நூலே மகாத்மாகாந்தியின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது என்பார்கள். ஒரு எழுத்தாளனின் கைமுனைப் பேனா, சமூகத்தை தலை நிமிர்த்தி நிறுத்த வேண்டும். அதைவிடுத்து எதிர்கால சமூகத்துக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தி அறிவை விடுத்து அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லலாமா?

     

    தோள்சீலைப் போராட்டங்களுக்குப் பின்புதான் பெண்கள் மார்புச் சீலையே போட்டார்கள். நங்கேலி என்னும் பெண் முலைவரிக்கு எதிராகத் தன்னுடைய மார்பகங்களையே வெட்டிக் கொடுத்து இறந்தாள். இவ்வாறாகப் போராடிப் பெற்ற எமது உரிமைகளின் மகத்துவத்தின் வரலாறு தெரியாமல் எழுத்திலும், உணர்விலும் விரசத்தைக் கொட்டுபவர்களுக்குப் பெண்கள் மலர்மாலை சூட்டிப் பாலாபிஷேகம் செய்வது வருந்தத்தக்கதே.

     

    தமிழ்மொழி தெய்வீகமொழி என்று போற்றப்படுகின்றது. கற்புடைய கண்ணகியைத் தெய்வமாகப் போற்றிய மொழி, காரைக்காலம்மையார் புராணத்தின் மகத்துவம் உணர்த்திய மொழி, வள்ளுவப் பெருந்தகையின் உலகத்துக்கே வாழ்விலக்கியம் கூறும் திருக்குறள் தோன்றிய மொழி. அதிலும் காமத்துப்பால் நாகரிகமாகக் கற்பிக்கப்பட்டுள்ளது.  பல்லவர் காலப் பக்தி இலக்கியங்களின் பெருமையை இன்றும் போற்றுகின்றோம், சோழர்கால ஆட்சியில் மொழியும் மதமும் எவ்வாறு பாதுகாக்கப்பட்டது என்று அறிந்திருக்கின்றோம்.

     

    நாயக்கர் காலச் சிற்றிலக்கியங்களின் பெருமையைக் கற்றிருக்கின்றோம், ஐரோப்பியர் காலத்திலே மேலைத் தேயத்தவர்கள் எம்மொழிக்கு எவ்வாறெல்லாம் சேவை செய்திருக்கின்றார்கள் என்று அறிகின்றோம். அவ்வாறாகப் போற்றிப் பாதுகாக்கும் எம்முடைய மொழியில் தற்காலத்தில் போற்றிப் பாதுகாக்கப்படும் பின் நவீனத்துவம் என்று படைக்கப்படும் சில இலக்கியங்கள் பின் நவீனத்துவம் பற்றிய சரியான புரிதல் இல்லாமலேயே வாசகர்களுக்குக் கற்பிக்கப்படுகின்றன என்று கருதுகிறேன்.

     

    எழுத்துக்கள் மந்திரம் மட்டுமல்ல, அது நல்ல வசியமுமாகும். எழுத்துச் சுதந்திரம் என்று காம இச்சைகளை ஏற்படுத்துகின்ற எழுத்துக்கள் வாசகர்களுக்கு அருவருப்பை ஏற்படுத்துவது மட்டுமல்ல அச்சத்தையும் ஏற்படுத்துகின்றன. வெளிப்படையாக எழுதுகின்றோம் என்று எழுதும் போது அவ் எழுத்துக்கள் காமசூத்திரம் ஒளிந்து இருப்பது போல் தேடிப் படிக்க வைக்காமல், பாரதியின் எழுத்துக்கள் போல பட்டி தொட்டி எங்கும் எழுத்துக்கள் பவனி வர எழுத வேண்டும்.

     

    தமிழ் இலக்கணத்தில் சொற்கள் வழங்கப்படும் முறையில் இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என இரண்டு வழக்குகள் பயன்படுத்தும் முறைகள் இருக்கின்றன. அதில் தகுதி வழக்கு என்பது நன்மக்களிடத்தில் சான்றோர் அவையிலே கூறத்தகாத சொற்களை மறைத்து வேறு சொற்களால் கூறுதல். உதாரணமாக மலம் கழுவி வருதல் என்பதைக் கால் கழுவி வருதல் என்பார்கள். செத்தாரைத் துஞ்சினார் என்றும், சுடுகாட்டை நன்காடு என்றும் சொல்வார்கள்.

     

    சிந்து பைரவி என்னும் திரைப்படம் இரண்டு சோடிச் செருப்புகளைக் காட்டி நாகரிமாக உடலுறவை வெளிப்படுத்தியது. இவ்வாறு எமது மொழி பேச்சிலும், எழுத்திலும், நடத்தையிலும் பண்பாட்டு நாகரீகத்தைப்  போதித்தது. ஆனால், தற்காலத்தில் தம்மை வேறுபடுத்திக் காட்டுவதற்காக ஒரு சமூகம் சில கட்டுப்பாடுகளை மீறிய எழுத்துக்களால் கைதட்டுப் பெறுகின்றது. படுக்கை அறைக்குக் கதவு தாழ்ப்பாள் இடப்பட்டுள்ளது. பள்ளியறை தேவை இல்லையென்றால் தாம் பெற்ற வயதான பிள்ளைகளும் அவர்களைப் பெற்றவர்களும் வரவேற்பறையில் மகிழ்ச்சியாகப் பள்ளி கொள்ளலாம்.

     ஆடை இல்லாத மனிதனும் அசிங்கம், எழுத்தும் அசிங்கம். எழுத்துகளுக்கும் ஆடை கட்ட வேண்டும்.


    இக்கட்டுரை 09.09.2025 வெற்றிமணி பத்திரிகையில் வெளிவந்தது .

     

     

    திங்கள், 11 ஆகஸ்ட், 2025

    ஊசி வாங்கக் காசு தா

     



     

    காற்றுப் போல் இலேசாகப் பறந்து கொண்டிருந்த என் மனம் இன்று மட்டும் ஏன் கனக்கிறது. கண்களை மூடித் தூங்க மனம் ஏன் மறுக்கிறது? என்னை விட்டு வேறு எங்கோ நான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேனா? துடித்துக் கொண்டிருக்கின்ற சில உயிர்களின் கைகள் என்னை நீட்டி அசைப்பது போல உணர்வுகள் எனக்குள் ஏன் ஏற்படுகின்றன? இவ்வாறு சிந்தனைகள் மனத்துக்குள் பூதாகரமாகத் தொடரப் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த நிலா தன் பாதங்களை நிலத்தில் பதிக்கின்றாள். பளிங்கு போல் இருக்கும் தன்னுடைய தரையின் சுத்தம் அவளை மேலும் சிந்தனைக்குள் தள்ளுகிறது. சிறிதளவு தூசி தரையில் கண்டாலும் துடைத்துக் கழுவி விட்டு சுத்தமான தரையில் கூடப் பாதணிகள் அணிந்து நடக்கின்ற தன்னுடய வாழ்க்கை முறையை நினைத்துப் பார்க்கின்றாள். அப்போது நிலா அந்தப் பெண்ணுக்காகப் பரிதாபப்படுகின்ற இந்தத் தருணங்கள் அவளை சாதாரணமான வாழ்க்கையை விட்டுத் திசை திருப்புகின்றது.

     

    நேற்று ஏன் நான் அங்கு போனேன்? அந்தத் தெரு இப்படித்தான் இருக்கும் என்று அறியாதவளாக இருந்திருக்கின்றேனே! பிரெங்பேர்ட் நகரம் ஜெர்மனியின் வடமேற்கு மாநிலத்தில் அமைந்திருந்தது. அந்த நகரத்தில் வாழந்து கொண்டிருக்கும் நிலா தன்னுடைய நண்பியைச் சந்திப்பதற்காக அவளுடைய வீட்டிற்குச் சென்றிருந்தாள். நண்பியுடன் நகரங்களைச் சுற்றி வலம் வந்தாள். அந்த நேரத்தில் அந்நகர புகையிரத நிலையத்தின் பக்கம் செல்ல வேண்டிய சூழ்நிலை  ஏற்பட்டது. ஆனால், அவள் பார்த்ததோ!!! வீதியெங்கும் பரந்து விரிந்து காணப்பட்ட மனிதர்கள் என்ற பெயரிலே நடமாடும் சொம்பிக்கள். சொம்பிக்கள் மனிதத் தசை தேடிக் கடித்துக் குதறும். ஆனால், இவர்களோ செயற்படாத மூளையுடன் நடப்பதற்குக் கூட வலு இழந்தவர்களாகக் கிடந்தார்கள். சிலர் தம்முடைய உடலிலே பாய்ச்சுவதற்கு ஊசி நிலத்திலே கிடக்காதா என்று தேடிக் கொண்டு திரிந்தார்கள். அவர்களுக்கு யாரைப் பற்றியும் கவலையில்லை, எலும்பும் தோலுமாகத் தெரிகின்ற தம்முடைய உடைலைப் பற்றிக் கவலையில்லை. தங்களுடைய ஆடை விலகியிருக்கின்றது. அந்தரங்கங்கள் தெரிகின்றன. எதைப்பற்றியும் அவர்களுக்குக் கவலையில்லை. இவர்களை நான் ஏன் கண்டேன்? ஏன் இந்த பிரபஞ்சம் என்னை அங்கே அழைத்துக் கொண்டு போனது? சிந்தனைக்கு முடிச்சுப் போட்டு சிரசின் ஓரம் உட்கார வைத்தாள்.

     

    எழுந்து உடை மாற்றினாள். வயிற்றுக்குள் ஏதாவது போடுவதற்குக் கூட அவள் மனம் இடம் தரவில்லை.

     

    “அம்மா போயிட்டு வாறன்”

     

    'எங்க எங்க போறாய். இன்றைக்கு வேல இல்லையே மகள்... மகள்.... ' தாயின் கேள்விகளுக்கு நின்று நிதானமாகப் பதில் சொல்ல அவளுக்கு அவகாசம் இல்லை.

     

    'கொஞ்சம் பொறுங்கள் அம்மா இப்ப வந்திடுவன். ஹில்டா வரட்டாம். ஓ.பி க்கடைக்குள்ள நிற்கிறாள்'

     

    'ஒன்டும் வாய்க்குள்ள போடாமல் போகிறாய்.... எத்தனை தரம் சொல்றது. குடலுக்குள்ள அசிட் அரிச்சதுக்குப் பிறகு தான் அம்மா என்டு ஓடி வருவா... நேரத்துக்கு வந்துடுடா....'

     

    தாயிடம் உண்மையைச் சொல்லும் சக்தி அவளுக்கு இல்லை. அவளுக்குப் புரிய வைக்கும் சக்தி கூட அவளுக்குத் இல்லை. நிலாவின் தாயைப் பொறுத்த வரையில் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்ட பைத்தியங்கள். போதைக்கு அடிமையானவர்கள் பொல்லாதவர்கள். அவர்கள் பக்கம் போனாலே கற்புப் பறி போய்விடும். இவைதான் பத்மாவுக்கோ அவளுடைய வயதில் வாழுகின்ற சந்ததியினருக்கோ இருக்கின்ற எண்ணப் போக்கு.

     

    நிலாவின் அம்மாவுக்கு தன்னுடைய கவலை. நிலாவுக்கோ வேறு கவலை. சமையலறை, குடும்பம், குழந்தை, பேரக்குழந்தை என்று தொடருகின்ற பெண்களுக்கு மத்தியில் நிலாவின் அம்மாவோ உலகத்தைத் தன்னுடைய மகளுக்கு அழகாகச் சொல்லிக் கொடுத்திருந்தாள். பிறரை நேசிக்கக் கற்றுக் கொடுத்திருந்தாள். இந்த பூமியைத் தாண்டி சிந்திக்கவும், எதிரே நிற்பவர் சூழ்நிலையைச் சிந்தித்துச் செயலாற்றவும் கற்றுக் கொடுத்திருந்தாள். ஆனால், அதுவே இன்று நிலா நிஜங்களின் தன்மையைச் சீர்தூக்கிப் பார்க்கும் நிலைமைக்கு அவளை உட்படுத்தியிருந்தது.

     

    என்ன இவள் இப்படி இருக்கின்றாள். வயதாகியும் கல்யாணப் பேச்சை எடுக்கவே விடுகின்றாள் இல்லை. இப்படியே போனால், இவளுடைய எதிர்காலம் என்னவாவது என்பது தாயுடைய கவலை. காதலிக்கப் பிடிக்கவில்லை. கல்யாண வலையில் விழப் பிடிக்கவில்லை. கட்டுக்கோப்புக்குள் பதுங்கியிருக்கப் பிடிக்கவில்லை. அவளுக்குப்  பிடித்ததெல்லாம் சுதந்திரம், வாழ்க்கைச் சுதந்திரம். மூளைச் சுதந்திரம். மூளை சிந்திக்கச் சுதந்திரமாக விட வேண்டும். வாழும் வாழ்க்கைக் காலம் முழுவதும் உலகத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். இறந்தபின் என்ன ஆவது என்பது எல்லாம் அவளுடைய கவலை இல்லை. இறக்கும் வரை அறிவைத் தேட வேண்டும் என்பது அவளுடைய வேதாந்தம்.

     

    வாகனத்துச் சாவியைத் திருகுகின்றாள். அது குடியிருப்புப் பகுதியில் 30 வேகக்கட்டுப்பாட்டுக்குள் கிளம்புகின்றது. ஆனால், எண்ணமோ 120 வேகத்தைத் தாண்டுகின்றது. நேரடியாக குடியிருப்புப் பகுதியைத் தாண்டுகின்றாள். அவளைக் கேட்காமலே அவளுடைய மூளை அவளை இரயில் நிலையத்துக்கு அண்மையில் உள்ள புகையிரத நிலையத் தரிப்பிடத்தை அணுகுகின்றது. நிதானமாக வாகனத்தை நிறுத்துகின்றாள். வாகனம் அமைதி காண அவளுடைய பாதங்கள் வேகமாகின்றன. அதே இடம், அதே மனிதர்கள். பற்கள் எல்லாம் நிறம் மாறி அரைவாசியாகக் குறைந்து சீக்கெடுக்காத கேசத்திலே புழுதிப்படையலை எண்ணெயாகத் தடவி மேலாடை சரிய கீழாடை தரைபார்த்துக் கிடக்க ஆழமாகப் புகையை இழுத்தபடி ஒரு பெண் அமர்ந்திருக்கின்றாள்.

     

    அவள் மடியிலே தலை வைத்து அந்த அழகான பெண். அந்த நேரத்தில் அவளை அரவணைக்கும் தாய் அவளே. யாருக்கோ பிறந்து யார் மடியிலோ தவழ்ந்து இன்று அந்நியமான பெண்ணின் அணைப்பிலே அவளுடைய மடியிலே முழங்காலை மடித்து முகம் புதைத்துச் சுருண்டு கிடக்கின்றாள். கத்தியைக் கூராக்கி வைத்தாற் போல் கூர்மையான மூக்கு. காது வரை நீண்டிருக்கும் கண்கள். அதற்குள் இருக்கும் கவர்ச்சியில் யாவரும் அடிமையாவார்கள். அதுதான் அவளுடைய நகர் ஓரத்து வாழ்க்கைக்கு காரணமாக இருக்கலாம். அழகானவள்தான் ஆனாலும் ஆடி ஓய்ந்த தேகம் போல் களைத்துத் துவண்ட துணிபோல சோர்ந்து கிடக்கின்றாளே. எங்கே கண்விழித்தால், புகையின் போர்வைக்குள் போய்விடுவாளோ என்று நினைத்து அவர்கள் இருவருக்கும் அருகே இருந்த ஒரு கல்லின் மேல் அமர்ந்தாள் நிலா.

     

    ஏனிந்த வீதியை அரசாங்கமோ, சமூக நிறுவனங்களோ கவனிப்பதில்லை. இவர்கள் இப்படி வாழ்வதனால், நாட்டுக்கே கெட்ட பெயர் என்று அவர்கள் கருதுவதில்லையா? இல்லை இவர்கள் இப்படி வாழ்ந்தாலேயே தாம் வருமானம் பெறலாம் என்று நினைக்கின்றார்களா? இல்லையென்றால், இவர்களை மாற்றவே முடியாது என்று நினைக்கின்றார்களா? எவ்வாறான காரணம் இருந்தாலும் இந்தப் பூமிப்பரப்பிலே வாழ வந்த உயிர்கள் அல்லவா? இவ்வாறு வாழாமல் வாழுகின்றார்களே! இவ்வாறான சிந்தனைகள் மூளையை அரித்தெடுக்க அவளைப் பார்க்கின்றாள்.

     

    நிலா அருகிலே வந்து இருக்கின்றாள் என்ற அக்கறையோ அவதானமோ அவர்களுக்கு இருந்ததில்லை. நிலாவின் அசைவிலே கண்விழித்த அந்த அழகி. அருகே இருந்த ஊசியைத் தடவி எடுக்கின்றாள். உதவிக்கு இருந்த அந்த வயதானவளோ தன்னிடமிருந்த ஏதோ ஒரு தூளைக் கொட்டுகின்றாள். அதனை லைற்றர் உதவியுடன் எரிக்கின்றாள். எரிந்த தூளை ஊசி மூலம் உள்ளெடுத்து காற்சட்டையைக் கீழே இறக்கிவிட்டுத் தொடையிலே செலுத்துகின்றாள். மீண்டும் கண்கள் சொருகக் மடியிலே விழுகின்றாள்.

     

    நிலா அவளை மடியிலே கிடத்திய அந்தப் பெண்ணிடம் ஹலோ என்று பேச்சைக் கொடுத்தாள். அவளும் பதிலுக்கு எந்தவித சலனமும் இல்லாமல் ஹலோ பேற்ரா என்று தன்னுடைய பெயருடன் இணைத்தே வணக்கத்தைத் தெரிவித்த அவளுடைய தெளிவான பேச்சைக் கேட்டு வியப்படைந்த நிலா ஏற்கனவே இவர்கள் இருவருக்கும் வாங்கிக் கொண்டு வந்த உணவுப் பொட்டலங்கள், உடைகள், படுக்கை விரிப்புக்கள் என்று வாங்கிக் கொண்டு வந்த அத்தனை பொருட்களையும் அந்தப் பெண்ணிடம் நீட்டினாள். எந்தவித மறு பேச்சும் இல்லாமல் அதனை வாங்கிக் கொண்டாள்.

     

    அதற்குள் இருக்கின்ற பொருட்களை விளக்கினாள் நிலா. சஞ்சலம் எதுவும் இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்து விட்டு நன்றி என்றாள்.

     

    இத்தனை பேர் உலகத்தை மறந்திருக்கின்ற இந்த வீதியிலே இவர்களிடம் மட்டும் நிலாவுக்கு ஏன் அக்கறை? இந்த பிரபஞ்சம் தன்னை இவர்களுக்காகவே அனுப்பியதாக அவள் உணர்ந்தாள். இப்படித்தான் இவர்களுக்கு பிரபஞ்சம் உதவி வழங்குகின்றதோ!

     

    “பேற்ரா! யார் இவள்? உனக்கு இவளைப் பற்றி ஏதாவது தெரியுமா? நான் உங்களிடம் அன்பை மட்டுமே செலுத்த விரும்புகின்றேன். உன்னோடு உரையாட வேண்டும் போல் இருக்கிறது. என்னால் உறங்க முடியவில்லை. உங்களுக்கு என்ன தேவையோ எல்லாவற்றையும் நான் தருகின்றேன்' என்றாள்.

     

    உடனே அவளும் “காசு தா. நான் ஊசி வாங்க வேண்டும்” என்று இறுக்கமாகக் கூறினாள்.

     

    தன்னையறியாமல் இரண்டு கண்களிலும் இருந்து வடிந்த கண்ணீரைக் கைகளால் துடைத்தெடுத்த நிலா தன்னுடைய கைப்பைக்குள் இருந்து 50 ஒயிரோக்களை நீட்டினாள். கையிலே பணத்தை வாங்கிய பேற்ரா ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்து உனக்கு என்ன வேண்டும் என்றாள்.

     

    “நீ போகலாம்”  என்று விறைப்பாகச் சொன்னாள்.

     

    மீண்டும் நிலா விடுவதாக இல்லை

     

    “உன்னுடைய மடியிலே கிடக்கின்ற இந்தப் பெண் உன்னுடைய மகளா?

     

    வெடித்த சிரிப்பு அருகிலிருந்தவர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது. சிறிது நேரம் தொடர்ந்து சிரித்தாள்.

     

    “என்னுடைய மகள் எங்கே என்று தெரியாது. நான் என்னுடைய மகளுக்குப் பாரம். அதனால், இவளை மகளாக வைத்திருக்கின்றேன். இவள்தான் இப்போது மகள். பாசம் வைக்க மட்டுமே எனக்குத் தெரியும். இந்த ஊசி மட்டுமே எனக்குச் சொர்க்கம்”

     

    வயிற்றிலே சுமந்து பெற்றால்தான் பிள்ளையா? இந்த உலகத்திலே எல்லோரும் சொந்தங்கள் தானே. எந்தவித இரத்த சொந்தமும் இல்லாத நிலா உணவுப் பண்டங்களுடன் இவர்களின் அருகே இருக்க முடியும் என்றால், பேற்ராவுக்கு ஏன் இந்தப் பெண் மகளாக இருக்க முடியாது.

     

    அந்தப் பெண்ணின் தலையைத் தடவியபடி தானாகப் பேசத் தொடங்கினாள்.

     

    வாழ்க்கை மனிதர்களுக்குத் தவறு செய்யாமல் தண்டனை மட்டுமே கொடுக்குமா? பிஞ்சு மனத்திலே நஞ்சை அள்ளிக் கொட்டிய பெற்றோர்களின் கதையும், தொடர்ந்து அவளுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்வுகளும் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல் நிலாவின் காதுகளுக்குள் நுழைந்தது. வானத்திலேயிருந்து மழை மட்டும் வருவதில்லை. வெளிச்சமும் வரும். ஆனால் வெளிச்சத்துக்கு இடம் கொடுக்காத இந்த உலகத்து மக்களின் சுய உணர்வுகளுக்கு அப்பாவியாகும் பெண்கள் எத்தனை பேர். அவள் இங்கு வந்து கிடப்பது சரிதான். இதைவிட என்ன பாதுகாப்பை அவளால் பெற முடியும். உலகத்தை மறந்தாலேயே உணர்வுகளைக் கடந்தாலேயே அவளால் வாழ முடியும் இல்லையென்றால் என்றோ அவள் இந்த மண்ணுக்குள் உரமாகியிருப்பாள், புழுக்களுக்கும் பூச்சிகளுக்கும் உணவாகியிருப்பாள்.

     

    பேற்ரா பேசிக் கொண்டிருந்தாள். நிலா அந்த இடத்தை விட்டு படபடவென்று விரைவாக ஓடிச் சென்று தன்னுடைய வாகனத்துக்குள் பொத்தென்று இருந்தாள். கண்ணீரும் மூக்கும் சிந்திக் கொண்டே இருந்தன. கைக்குட்டைக் கடதாசி பக்கெட் காலியானது. 

     

    அவளுடைய பெயர் ஜேன். ஜேன் என்றவுடன் நிலாவுடைய நினைவுக்குள் வருவது ஸ்ரீபன் ஹாக்கிங்கின் மனைவி ஜேன் ஹாக்கிங்தான். அசையாத உடலுக்கும் அறிவான மூளைக்கும் அடைக்கலம் கொடுத்தவள். ஆனால், இந்த ஜேனோ மூளையை மயங்கச் செய்பவள். காமப் பிசாசின் அடங்காத ஆர்வத்தால், ஜேனை அவர்கள் பெற்றோர்கள் பெற்றுப் போட்டார்கள். பெற்றவர்கள் இருவரும் சண்டை சண்டை சண்டை. இருவரின் சண்டைக்குள்ளும் பிள்ளை அழிந்துவிடக் கூடாது என்று நினைத்த சமூகநல நிறுவனம் அப்பிள்ளையை இளைஞர் நல பாதுகாப்பு நிறுவனத்திடம் ஒப்படைத்தனர். அத்துடன் அப்பா, அம்மா என்னும் உறவு அவளுக்கு மறைந்து போனது. மறந்து போனது.

     

    இந்த இளைஞர் நல பாதுகாப்பு நிறுவனம் இவளை ஒரு குடும்பத்திடம் வளர்ப்பதற்காக அனுப்புகின்றார்கள். அப்போது ஜேன் சிறுமியாக இருந்தாள். அக்குடும்பத்து தலைவனாகிய ஆண் இவளை வேலைக்காரியை விட மோசமாக நடத்துகிறான். காலையில் கண் விழிப்பதில் இருந்து இரவு படுக்கைக்குப் போகும் வரை வேலை செய்து பிஞ்சுத் தேகம் வலியால் துடிக்கும். அங்கு தன்னால் வாழ முடியவில்லை என்று இளைஞர் நல நிலையத்திடம் முறையிடுகின்றாள்.

     

    அதன்பின் மீண்டும் வேறு ஒரு குடும்பத்திடம் ஒப்படைக்கப்படுகின்றாள். அங்கு இரவானால், அவளுடைய அறைக் கதவு திறக்கப்படும். உள்ளே நுழையும் அந்தக் குடும்பத்துத் தலைவன், பலாத்காரமாக வன்மையான உறவுக்கு அவளை உட்படுத்துவான். அரும்பிய தனங்கள் அவனுடைய முரட்டுக் கரங்களின் தாக்கத்தால் நாள் முழுவதும் வேதனையை அனுபவிக்கும். உடலின் ஒவ்வொரு அங்கங்களும் அவளுடைய கட்டுப்பாட்டை மீறி அவனால் அனுபவிக்கப்படும் போது ஏற்படும் போராட்டத்தால் உள் வெளிக் காயங்களுக்கு உட்படும். தன்னுடைய உடலிலே ஒரு அருவருப்பை உணருகின்றாள். உடல் முழுவதும் புழு நெளிவது போலவும், அரிப்பது போலவும் நரக வேதனையில் துடிப்பாள். தனியே கிடந்து அரிக்கின்ற உடலை நகங்களின் துணையால் உராய்ந்து எடுப்பாள். அப்போது அவளுக்குத் துணையாக அமைந்தது இந்த போதை.

     

    போதையை உள்ளே செலுத்துகின்ற போது தனக்கு ஏற்பட்ட வலிகளும் உடல் உபாதைகளும் இல்லாது போவதை உணருகின்றாள். வயிற்றில் சுமந்தவள் அவளை வளர்க்கவில்லை. பொறுப்பான தந்தை அவளில் பாசத்தைக் காட்டவில்லை. அவளை வளர்க்கப் பொறுப்பெடுத்தவர்கள் எல்லோரும் அவளை சிதைத்து விடுகின்றார்கள். அவளுக்கு இந்த நினைவுகள் எல்லாம் மறைக்கப்பட வேண்டும் என்றால் எதை நாடுவாள். அப்போது தனக்குத் துணையான அந்த போதையை நாடினாள். போதையானது ஒருமுறை உள்ளே போனால், தவிப்புடன் மீண்டும் மீண்டும் உடல் அதைத்தான் தேடும். இதை ஆரம்பத்தில் உள்ளே எடுப்பவர்கள் உணர்வதில்லையே. பணத்துக்காக உயிர்களை நாசம் செய்கின்ற வியாபாரிகளை விட்டு வைக்கின்ற கடவுளையும், இவ்வாறான மக்களை ஏறெடுத்தும் பார்க்காத அரசாங்கத்தையும் எண்ணி நிலாவினுடைய மனம் முழுவதிலும் கோபக்கனல் தெறித்தது

     

    மழைநீரை துடைத்தெறியும் வாகனத்துத் துடைப்பம் போலக் கைவிரல்களால் முகத்தை அழுத்தித் துடைத்தாள். வேகப்பாதை தாண்டி சிற்றூந்து வீட்டின்முன் போய் நின்றது.

     

    “அம்மா பசிக்கிறது” என்றவளிடம்

     

    “எங்கே மகள் இவ்வளவு நேரமும் போனாய்? ஓ.பி கடைக்குள்ளா இவ்வளவு நேரமும் நின்றாய்?

     

    என்று பேசிய படியே சோற்றின் மேலே அவளுக்குப் பிடித்த பொரித்த கத்தரிக்காய்க் கறியுடன் பருப்பு வெள்ளைக் கறியை வைத்து அவளுக்குப் பிடிக்குமே என்று சுண்டங்காய் வத்தல் குழம்பையும் விட்டு நுண்ணலை அடுப்பிலே சூடாக்கிக் கொதிக்கக் கொதிக்க உணவை முன்னே கொண்டு வந்து வைத்தாள். கண்களில் இருந்து கண்ணீர் வடிய

     

    எனக்கு ஊட்டி விடுறீங்களா அம்மா? என்று நிலா வாஞ்சையுடன் அம்மாவைக் கேட்டாள்.

     

    ஏன்டா குஞ்சு அழுறாய்” என்று நிலாவை அணைத்த வண்ணம் நிலாவுக்குத் தாய் பத்மா உணவை ஊட்டிவிட்டாள்.

     

     

    -யாவும் கற்பனை அல்ல –

     

    கௌசி

    ஜெர்மனி

    09.11.2024

     

     

    திங்கள், 9 ஜூன், 2025

    திராவிட இலக்கிய கர்த்தாக்களில் பாரதிதாசன்





    தமிழர்க்குத் தொண்டு செய்யும் தமிழ னுக்குத் 

    தடைசெய்யும் நெடுங்குன்றும் தூளாய்ப் போகும் 

    தமிழுக்குத் தொண்டுசெய்வோன் சாவதில்லை

    தமிழ்த் தொண்டன் பாரதிதாசன் செத்த துண்டோ


    என்னும் பாரதிதாசன் வரிகளை உங்கள் முன் வைத்து முத்தரசி கலை இலக்கியப் பன்னாட்டுத் தமிழ் ஆய்விதழும் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியும் இணைந்து நடத்துகின்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்ற ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் இங்கு உரையாற்ற வந்திருக்கின்ற திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர், கி.கல்யாணசுந்தரம் அவர்களுக்கும், இங்கு இணைந்திருக்கின்ற உங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். அத்துடன் என்னை இந்த நிகழ்விலே பேச அழைத்த தங்கமாரி அவர்களுக்கும் நன்றியும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.


    திராவிட இலக்கிய கர்த்தாக்களினால் படைக்கப்பட்ட இலக்கியங்களே திராவிட இலக்கியங்கள். இங்கு திராவிடம் என்றால் என்ன? திராவிடர் என்பவர்கள் யார்? என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். 


    ஆய்வாளர் சமரன் நாகன் அவர்களின் ஆய்வின்படி 'திருவிடர்கள்' அதாவது திரு இடத்தில் வசிப்பவர்கள் என்கின்ற ஒரு கருத்தைச் சொல்லுகின்றார். உதாரணமாக திருத்தணி, திருஅண்ணாமலை, திருப்பரங்குன்றம், திருஅனந்தபுரம், திருப்பதி இவ்வாறு தமிழர்களின் மிகச் சிறந்த ஊர்கள், இடங்களின் பெயர்களுக்கு முன்பு திரு என்பதை சேர்ப்பது வழக்கம். ஏன் மதிப்புறு பேரறிஞர்களுக்கும் திரு என்னும் அடைமொழி வைப்பது வழக்கமே. உதாரணமாகத் திருவள்ளுவரை நாம் கூறக்கூடியதாக இருக்கிறது. அதேபோல் திரு, திருமதி போடுகின்ற வழக்கம் எல்லாம் இருக்கிறது. ஆனால், இது முழுக்க முழுக்க தமிழ்ச் சொல். ஆகவே தமிழ் அறிஞர்கள் வசித்த இடம் திருவிடம். அதனால், அவர்கள் திருவிடர்கள் என்று அழைக்கப்பட்டனர். திருவிடர்கள் திராவிடர்கள் என்று வந்தது என்று ஆய்வாளர் சமரன் நாகன் அவர்களின் ஆய்வினை ஊடகவியலாளர் கே. எம். விஸ்வநாத், அவர்கள் எடுத்துக் கூறுகின்றார. 


    இந்தத் திராவிடர்கள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியொன்றைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களாகக் காணப்படுகின்றார்கள். அப்படியானால், திராவிட மொழிகள் எவை? என்று அறியவேண்டியது அவசியம். திராவிட மொழிகளில் முக்கியமானவையாகக் கருதப்படுவன தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்பனவாகும். இவை தவிர இன்னும் பல திராவிட மொழிகள் தென்னிந்தியாவிலும், வேறு பல இடங்களிலும் பேசப்படுகின்றன. அவற்றிலே சில வடமொழிக் கலப்புடையனவாக இருக்கின்றன. கிட்டத்தட்ட 85 மொழிகள் திராவிட மொழிக் குடும்பத்தில் இருக்கின்றன என்று அறிஞர்கள் சான்று கூறுகின்றார்கள். ஆனால், தமிழ் மட்டுமே பெருமளவுக்குத் திராவிடச் சொற்களுடன் பேசப்படக்கூடிய மொழியாக இன்னும் இருந்து வருகிறது. 


    திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் (ஊழஅpயசயவiஎந பசயஅஅயச ழக வாந னுசயஎனையைn ழச ளுழரவா-ஐனெயைn கயஅடைல ழக டயபெரயபநள) என்ற பெயரிலே ராபர்ட் கால்டுவெல் (சுழடிநசவ ஊயடனறநடட) என்பவர் திராவிட மொழிகளைப் பற்றி ஆராய்ந்து 1856 இல் ஒரு நூலை எழுதினார்.  அதற்குப் பிறகுதான் திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். அதாவது இந்த நூல்த்தான் திராவிட மொழிகளை உலகத்தின் முக்கிய மொழிக் குடும்பங்களில் ஒன்றாக இனங்காட்டியது. 


    அடுத்து திராவிட மொழி இலக்கியகர்த்தாக்கள் யாரென்று பார்த்தால், தேவநேயப்பாவணர், பாரதிதாசன், சி.என்.அண்ணாத்துரை, எஸ்.எஸ். தென்னரசு, கருணாநிதி, இலக்குவனார், சாலை இளந்திரையன், சாமி சிதம்பரனார், விந்தன், மு.வரதராசனார், குலோத்துங்கன், புலவர் ஆ.பழனி, பெருஞ்சித்திரனார்,  போன்று பலர் காணப்படுகின்றார்கள்.   அதிலே 


    'அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு

    விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை

    அணைந்து கொள்! உன்னைச் சங்கமமாக்கு

    மானிட சமுத்திரம் நானென்று கூவு

    பிரிவிலை எங்கும் பேதமிலை'


    என்று விசாலப் பார்வையால் உலகத்தை நோக்கும் படிக் கூறிய பாரதிதாசன் அவர்களைப் பற்றியே இங்கு பேசலாம் என்றிருக்கின்றேன். 


    இந்தப் பாடலையே எடுத்துப் பாருங்கள். அறிவு என்பது விரிவுபட்டதாக இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும். வாசிப்புத் தான் சிறப்பு. நூல்கள் வாசிப்பதனால், எம்முடைய அறிவு வளரும். விரியும், அதுதான் அறிவை அகண்ட அறிவாக மாற்றும். அதற்குப் பாடசாலைக் கல்வி மாத்திரமல்ல. நூல்கள் பல கற்பதும் அறிவுக்கு விருந்தாகின்றது. பேரரிஞன் பிளேட்டோ படிக்காமல் இருப்பதைவிடப் பிறக்காமல் இருப்பது மேல் என்று கூறினார். அதனால் படிப்பு அவசியம். அந்தப் படிப்பினால், அறியாமை விலகும். அறியாமை என்பது வெட்கப்படவேண்டியதுதான். ஆனால் அறிந்து கொள்ள விருப்பமில்லாமல் இருப்பது அதைவிட வெட்கக்கேடு என்று பெஞ்சமின் பிராங்ளின் சொல்லியிருக்கின்றார். 


    அதோடு பல நூல்களைக் கற்கின்ற போது எமது சிந்தனை விரியும், எதற்கும் ஏன் என்ற கேள்வி கேட்கத் தூண்டும். அதுதான் வள்ளுவர் கூறியது போல் எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதை நாம் விளங்கிக் கொள்வோம். ஒரு நூலிலே ஒரு விடயத்தைச் சொன்னால், அதிலுள்ள ஒரு சந்தேகத்தைத் தீர்க்க அடுத்த நூலைத் தேடுவோம்.  இவ்வாறு தேடல் அதிகரிக்க அறிவும் விரிவாகும். உதாரணத்திற்கு நான் இன்று திராவிடம் என்று சொன்னால், அது என்ன? என்று தேட, அதன் பின் அதற்குரிய இலக்கியம் என்ன என்று தேட, அதன்பின் இலக்கியகரத்தாக்கள் என்று தேட ஒரு நூல் பல நூல்களை வாசிக்க உங்களைத் தூண்டும். அதனாலேயே இந்த வரிகளைப் பாரதிதாசன் எழுதினார். இப்போது யார் அந்த பாரதிதாசன் என்று பார்ப்போம்.


    பாண்டிச்சேரியிலே 29.04.1891 அன்று கனகசபை முதலியாருக்கும் இலக்குமி அம்மையாருக்கும் ஒரு பிள்ளை பிறந்தது. அந்தக் குழந்தை தனது எழுத்து வன்மையினாலும் புரட்சிப்போக்காலும், பொதுவுடமை கொள்கையினாலும் தமிழகத்தின் சிந்தனையை எதிர்காலத்தில் தூண்டச் செய்யும் என்பதைப் பிறந்தபோது யாருக்கும் புரியவில்லை. அந்தக் குழந்தையே சுப்புரெத்தினம் என்னும் இயற்பெயர் கொண்ட பாரதிதாசனாகும். 


    இவர் மகாகவி பாரதியார் மேல் பேரன்பு கொண்டு பாரதியார் பெயரைத் தன் பெயருடன் இணைத்துக் கொண்டார். சுப்புரெத்தினமாக இருந்த தன்னுடைய பெயரைப் பாரதிதாசனாக மாற்றினார். இவர் தமிழியக்கம், குடும்ப விளக்கு, இருண்ட வீடு, கண்ணகி புரட்சிக் காப்பியம், பாண்டியன் பரிசு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, மணிமேகலை வெண்பா, இசை அமுது, எதிர்பாராத முத்தம், பாரதிதாசன் கவிதைகள், புரட்சிக்கவி, தமிழச்சியின் கத்தி, காதல் நினைவுகள், சஞ்சீவி பர்வதத்ததின் சாரல், வீரத்தாய், சிறு காப்பியம், காதலா கடமையா, இரணியன் ஓர் இணையற்ற வீரன், பிசிராந்தையார் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என்னும் புனை பெயர்களில் தன்னுடைய படைப்புக்களை எழுதி வந்தார். இவருடைய பாடல்களிலே பொதுவுடமை, இன விடுதலை, திராவிட உணர்வு, மொழிப் பற்று, தமிழ் தேசியம், மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண் விடுதலை, சாதி மறுப்பு, போன்ற பண்புகளை அறியக்கூடியதாக இருக்கின்றது. அறிஞர் அண்ணாவினால் புரட்சிக்கவி என்னும் பாராட்டைப் பெற்று 25.000 ரூபாய் பரிசு பெற்றார். 1970 இல் இவருடைய பிசிராந்தையார் என்னும் நாடக நூல் சாகித்திய அகடமி பரிசு பெற்றது.


    இவர் 'எங்கெங்குக் காணினும் சக்தியடா' என்று ஆரம்பித்துப் பாடிய பாடல் பாரதியாரால் ஸ்ரீசுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது. 'எங்கெங்குக் காணினும் சக்தியடா என்று பாடிய பாரதிதாசனே பின் ஒருமுறை சுத்தானந்தபாரதியார் 'கடவுள் இல்லையென்று என்று சொன்னவன் யாரடா என் அப்பனை தில்லையில் வந்து பாரடா' என்று கூற 'சிற்றப்பலத்தானையும் சிதம்பரத்தானையும் பீரங்கி வைத்துப் பிளந்திடும் நாள் என்னாளோ' என்று சமயமறுப்புக் கொள்கையுடன் பாடியிருக்கின்றார். இதற்குக் காரணம் என்ன நூல்களைக் கற்று இவறறின் கருத்துக்களை ஆழமாகச் சிந்தித்த அறிவு விரிவுதான் இவ்வாறு கூறக் காரணமாக இருந்தது. 


    கேள்வி கேட்கக் கேட்ட தெளிவு பிறக்கும் என்னும் சிந்தனைப் போக்கை தெளிவுறுத்தும் வகையில் கேள்வியால் அகலும் மடைமைபோல் நள்ளிரவு மெதுவாய் நடந்து கொண்டிருந்தது என விடிபுனல் பற்றி அவர் விதந்துரைத்த வார்த்தையிலே தன் பகுத்தறிவு சிந்தனையை உலகத்தின் விடியலுக்காக அவர் விளக்கினார்.


    நான் ஏன் இந்த விடயங்களை உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றால், மாணவர்களாகிய நீங்கள் எமது தாய்மொழி மேல் பற்றுள்ளவர்களாக இருக்க வேண்டும். தமிழ்மொழி உலகத்தின் முதன்மொழி என்றும் அதன் சிறப்புப் பற்றியுமு; அந்நியநாட்டவர்கள் ஆராய்ந்து பேசியிருக்கின்றார்கள். அந்தத் தமிழ்மெரியத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் நாங்கள். அதனால், அதனை எந்த இடத்திலும் நாங்கள் விட்டுக் கொடுக்கக் கூடாது. நாம் அது மட்டுமல்லாமல் சிந்தனையில் தெளிவுடையவர்களாக இருக்க வேண்டும். ஏன் ஏன் என்று கேள்விகளைக் கேட்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். நான் எந்த அரங்கத்திலே பேசினாலும் நான் கூடக் கூட்டிக் கொண்டு வருபவர் சோக்கிரட்டீஸ். 


    இவர் யாரென்றால், 


    'யார் சொன்னார் எவர் சொன்னார் என்பதை விட்டுவிட்டு எவர் சொன்ன சொல்லையும் உனது சொந்த அறிவால் எண்ணிப்பார்' என்று சொன்ன ஒரு  கிரேக்கத் தத்துவஞானி. அதாவது சிந்திக்கச் சிந்திக்கக் கேள்வி பிறக்கும் கேள்வி பிறக்கப் பிறக்க அறிவு விரிவுபடும். 


    எமது தமிழ்மொழியைப் பற்றிப் பாரதிதாசன் கூறுகின்றபோது


    'தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்

    தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்' என்று


    மொழிமேல் பற்றுக்கொண்டு பாடியிருக்கின்றார். இந்த மொழியுணர்வு பாடல்களைப் போலவே காதலுணர்வுப் பாடல்களையும் திராவிட இனத்தின் மேல்  அவர் கொண்ட பக்தியை வெளிப்படுத்தும் பாடல்களையும் பாடியிருக்கின்றார். தான் ஒரு திராவிடன் என்பதில் அவருக்குப் பெரிய பெருமை இருந்திருக்கிறது. அதனால்தான் என்னவோ


    இனப்பெயர் ஏன் என்று கேட்டால் 

    மனத்தில் எனக்குச் சொல்லொணா மகிழ்ச்சியாம்

    நான் தான் திராவிடன் என்று நவில்கையிலே 

    தேன்தான் நாவெல்லாம் வான்தான் என்புகழ் 


    என்று பெருமைப்படுகின்றார். தன்னுடைய இனத்தைப் பற்றிச் சொல்லும் போது

    சீர்த்தியால், அறத்தால், செழுமையால், வையப் போர்த்திறத்தால், இயற்கை புனைந்த ஓருயிர் நான். என்னுடைய உயிர் இனம் திராவிடம் என்று சொல்வது மகிழ்ச்சிதான், பெருமைதான். ஆனாலும் அதைவிட ஒரு விடயத்தில் எனக்கு மகிழ்ச்சி இருக்கிறது என்று கூறி என்ன சொல்கிறார் என்றால், நான் ஆரியன் அல்லேன் என்னும் போதில் எத்தனை மகிழ்ச்சி! எத்தனை மகிழ்ச்சி. அதனாலே, உன்னுடைய இனப்பெயர் என்ன என்ன என்று கேட்கக் கேட்க அதனால் எனக்கு மீண்டும் மீண்டும் இன்பம் விழைவதாம். என்கிறார். ஆரியன் என்னும் சொல்லிலே அவருக்கு எப்படி வெறுப்பு இருந்திருக்கிறது பாருங்களேன்.


    அவர் நேசிக்கின்ற திராவிடர்களுடைய கடமைகளாக அவர் சொல்வது


    மண்வீட்டைத் திறப்பாய் - சாதி 

    மதக்கத வுடைத்தே 


    என சாதி மதக் கொள்கையை விடச்சொல்கிறார். அத்தோடு 

    புனைசுருட் டுக்குப்பை அன்றோ – பழம்

    புராணவழக்கங்கள்   யாவும்?

    இனிமேலும் விட்டு வைக்காதே 


    என்கிறார். இந்தப் புராணக் குப்பைக்கு உதாரணமாக இரண்டு கதைகளை உங்களுக்குச் சொல்லுகின்றேன். அடியாருக்கு பிள்ளைக்கறி சமைத்த கதை ஒன்று அடுத்தது விநாயகக் கடவுளுக்கு யானைத் தலை வந்த கதை. முதலாவதாக பிள்ளைக்கறி சமைத்த கதையை எடுத்துப் பார்த்தால், சிறுத்தொண்டர் என்னும் ஒரு சிவ பக்தருக்கு ஒரே ஒரு பிள்ளையாகிய சீராளன் என்னும் ஒரு மகன் இருந்தான். ஒருநாள் சிவபெருமான் சிவதொண்டர் வடிவத்திலே சிறுத்தொண்டர் வீட்டிற்கு வந்து எனக்கு ஒரு பிள்ளை இருக்கும் வீட்டிலுள்ள பிள்ளையைக் கறி சமைத்துத் தர வேண்டும். அந்தப்பிள்ளையை அம்மா பிடித்திருக்க அப்பா அரிந்து தர வேண்டும் என்று கேட்டாராம். உடனே சிறுத் தொண்டரும் தன்னுடைய மகனைச் சமைத்து சிவஅடியாராக வந்திருந்த சிவபெருமானுக்கு உணவாகப் படைத்தாராம். சிவபெருமானும் உன்னுடைய பிள்ளையைக் கூப்பிடு அவனுடனேயே உணவருந்த வேண்டும் என்று சொன்னாராம். உடனே சிறுத்தொண்டர் சீராளன் என்று தன்னுடைய மகனை அழைக்க அவனும் அங்கே ஓடி வந்தானாம். இந்தக் கதையை உள்வாங்குங்கள். 


    இதேபோல் அடுத்த கதையாக ஏன் விநாயனருக்கு யானைத்தலை இருக்கின்றது என்று பார்ப்போம். பிள்ளையாரைக் காவலுக்கு வைத்து விட்டு பார்வதியாகிய அம்மா நீராடச் சென்றாராம். யாராவது இந்தப் பக்கம் வந்தால், விடாதே என்று சொல்லிவிட்டுப் போனாராம். இந்த நேரத்திலே சிவபெருமான் அந்தப் பக்கம் வந்து பார்வதியைப் பார்க்கப் போக பிள்ளையார் தடுத்தாராம். அதைக்கேளாமல் சிவபெருமான் மீண்டும் போக பிள்ளையார் விடவில்லையாம். அதனால், கோபம்கொண்ட சிவபெருமானும் தன்னுடைய சூலாயுமதத்தால் பிள்ளையாருடைய தலையைச் சீவினாராம். தலையறுந்து கிடக்கும் தன்னுடைய பிள்ளையைக்க ண்டு உமாதேவியார் அழுதபோது. நீ கவலைப்படாதே நம்முடைய மகனுக்குத் தலையைப் பொருத்தி விடலாம் என்று சொல்லி அங்கு வந்த தேவகணங்களிடம் யாராவது வடக்கே பார்த்துக் கொண்டு தூங்கினால், அவருடைய தலையை வெட்டிக் கொண்டு வாருங்கள் என்று சொன்னாராம். அவர்களுக்கு முதலில் அகப்பட்டது யானைதானாம். அதனால், அதனுடைய தலையை வெட்டினார்களாம். பாவம் அந்த யானை. அவர்கள் கொண்டு வந்த யானைத தலையைத் தன்னுடைய மகனுக்குப் பொருத்தினாராம். இதற்கு ஏன் யானையை வெட்டித் தலையைப் பொருத்த வேண்டும். தன்னுடைய மகனுடைய தலையையே ஒட்டியிருக்கலாமே. இவை போன்ற கதைகளைததான் புனை சுரட்டுக் குப்பைகள் என்று பாரதிதாசன் சொல்லுகின்றார். 


    திராவிடர் கடமை போல திராவிடர் ஒழுக்கங்கள் என்னவென்றும் பாடல் பாடியிருக்கிறார்.

     

    திராவிடர்களுடைய ஒழுக்கம் பற்றிக் கூறும்போது 

     

    திரும்பும் பக்கமெலாம் பெருமக்கள் தேவை யுணர்ந்திடடா!

    தீயபொ றாமையையும் - உடைமையிற் செல்லும் அவாவினையும் 

    காயும் சினத்தினையும் - பிறர் உளம் கன்ற உரைப்பதையும்( தீயினால் சுடு;டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு)

    ஆயின் அகற்றிடுவாய் - உளத்தினில்

    அறம் பிறக்குமடா! 


    தூய அறவுளத்தால் - செயலினில் தொண்டு பிறக்குமடா!

    ஏயும் நற்றொண்டாலே - பெரியதோர் இன்பம் பிறக்குமடா! 

    தீயும் குளிருமடா - உனையண்டும் நோயும் பறக்குமடா!

    வாயில் திறக்குமடா! - புதியதோர் வழி பிறக்குமடாஇ


    திராவிடர் புரட்சித் திருமணம் பற்றிக் கூறும்போது


    (திராவிடர் புரட்சித் திருமணம் இந்நாளில் முன்னாளிற் போலின்றிப் பெருமக்களால் மிகுதியும்

    மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

     தம் ஊரில் உள்ளவர்களைக் கொண்டே நடத்திக் கொள்வதால் செலவு குறையும்; தலைவர்கட்கும் தொல்லை இராது.) 

    1. அழைப்பிதழால் அல்லது வேண்டுகோளால் மணவீட்டில் குழுமியோர் அவையத்தார் ஆவார்.

    2. இசை: திராவிடர் நாட்டுப் பண்.

    3. மணமக்கள் அவைக்கு வருதல்.

    4. முன்மொழிவோர் அவையில் எழுந்துஇ 'அவைத் தலைமை தாங்கி இத் திருமணத்தை முடித்துத் தரும்படி இன்னாரை வேண்டிக் கொள்கிறேன்' என்று முன் மொழிதல்.

    5. அவையத்தாரின் சார்பில் ஒருவர்இ 'அதை நாங்கள் ஆதரிக்கிறோம்' என்று வழி மொழிதல்.

    6. முன் மொழிந்தார்இ வழி மொழிந்தார் அவைத் தலைவரை அழைத்து வருவார்கள். 

    7. அவைத் தலைவர் முன்னுரை.

    8. திருமணம் நடத்தல்: மணப்பெண் 'இன்னாரை நான் என் வாழ்க்கைத் துணைவராகக் கொண்டு வாழ்க்கை நடத்த ஒப்புகிறேன்' என்று சொல்ல மணமகனும் அவ்வாறு அப்படியே சொல்ல இருவரும் மாலை மாற்றுவார்கள்  கணையாழி மாற்றுவார்கள்.

    'வாழ்க' என முழங்குவார்கள் அதன்பின் தலைவர்இ அறிஞர்கள்  மணமக்களை வாழ்த்துவார்கள் 

    வந்திருப்பவர்களுக்கு வெற்றிலை பாக்கு முதலியவை வழங்குதல்.

    இந்த நடைமுறைக்கு முதல் நாளே நீதிமன்றத்தில் மணமகன் மணமகள் மணப்பதிவு செய்து கொள்வதுண்டு. பிறகும் பதிவு அறிவிப்புச் செய்து கொள்ளலாம்.


    பெண்களைப் பற்றிக் கூறுகின்ற எழுதுகின்ற போது பெர்னாட்ஷா கூறிய மொழி, கைம்மைப்பழி. கைம்மைக் கொடுமை. அதாவது கணவனை இழந்தவள்.  மூடத்திருமணம் அதாவது மணமகளுக்குப் பொருந்தாத திருமணம், எழுச்சியுற்ற பெண்கள். குழந்தை மணத்தின் கொடுமை. அதாவது குழந்தை மணத்தின் கொடுமை என்றால், சிறுவயதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்து கொடுக்கும் வழக்கம் அக்காலத்திலே இருந்திருக்கின்றது. உதாரணமாக பாரதியாருக்குத் திருமணம் நடக்கும் போது பாரதியாரின் மனைவி செல்லம்மாளுக்கு 7 வயதும் பாரதியாருக்கு 14 வயதுமாக இருந்திருக்கிறது. இது இப்போது சட்டப்படி குற்றம். இதை அன்று பாரதிதாசன் பாடியிருக்கிறார். பெண்ணுக்கு நீதி, கைம்பெண் நிலை, கைம்மைத் துயர், கைம்மை நீக்கம், இவ்வாறு உலகத்தைத் தன்னுடைய பாட்டுத் திறத்தாலே பாலித்திருக்கின்றார். பாலி;திருக்கின்றார் என்றால், பாதுகாத்திருக்கின்றார்.


    இதேபோலக் காதல் உணர்வுப் பாடல்களையும்  பாரதிதாசன் அதிகமாகப் பாடியுள்ளார்.


    'கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

    என்ன பயனும் இல'


    என்னும் வள்ளுவர் வரிகளுக்கொப்ப சஞ்சீவிபர்வதத்தின் சாரல் என்னும் கவிதையிலே 'கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்' என்று காதலியின் பார்வைக்கு இருக்கும் மகத்துவத்தைக் காண்கின்றார்.


    காதலிலும் பொதுவுடைமைப் புரட்சிப் போக்கைக் கொண்டு வந்தவரே பாரதிதாசன். தனது பாடல்களில் ஏழை மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். ஏழைத்தொழிலாளியின் மனைவி, மாட்டுவண்டிக்காரன் மனைவி போன்று சாதாரண பெண்களின் வாய்மொழிப் பாடல்களாக அமைவதுடன் பொதுவாக பழந்தமிழ் பாடல்களில் வரும் காதலியர் தம் காதல் உணர்வுகளைத் தமது காதலனிடம் வெளிப்படையாகக் கூறமாட்டார்கள். ஆனால் பாரதிதாசன் பெண்டீர் புரட்சிப் பெண்டீராகத் தம் காதல் உணர்வுகளைக் காதலனிடம் வெளிப்படையாக கூறவல்லவர்களாகவே படைக்கப்படுகின்றார்கள்.


    எதிர்பாராத முத்தம் என்னும் நூலிலே ஒரு பெண்ணின் வருகையை வர்ணிக்கும் வரிகளில் எம் கண்முன்னே ஒரு பெண்ணை கொண்டு வந்து நிறுத்துகின்றார்.


    நீலப் பூவிழி நிலத்தை நோக்கக்

    கோலச் சிற்றிடை கொடிபோல் துவளச்

    செப்புக் குடத்தில் இடதுகை சேர்த்தும்

    அப்படி இப்படி வலதுகை யசைத்தும்

    புறப்பட்ட மங்கைதான் பூங்கோதை என்பவள்.

    நிறப்பட்டாடை நெகிழ்ந்தது காற்றில்!

    பாதச் சிலம்பு பாடிற்று! நிலாமுகம்

    சீதளம் சிந்திற்றாம்! செவ்விதழ் மின்னிற்றாம்!

    பெண்ணழகி அன்னப் பேடுபோல் செல்கையில்,



    கீழுள்ள வரிகளில் காதலின் வர்ணனை அழகாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.



    பட்டாணி வண்ணப் புதுச்சேலை - அடி

    கட்டாணி முத்தே உன் கையாலே - எனைத்

    தொட்டாலும் இனிக்கும் பூஞ்சோலை – உடல்

    பட்டாலும் மணக்கும் அன்பாலே


    எட்டாத தூரம் இருந்தாலும் - உனை

    எட்டும் என் நெஞ்சம் மென்மேலும் - அது

    கட்டாயம் செய்திட வந்தாலும் - நீ

    ஒட்டாரம் செய்வதென் போங்காலம்


    ஆவணி வந்தது செந்தேனே – ஒரு

    தாவணி வாங்கி வந்தேனே -  எனைப்

    போவென்று சொன்னாய் நொந்தேனே – செத்துப்

    போகவும் மனம் நொந்தேனே


    காதலின் தவிப்பும் காதலி வார்த்தை கேட்டு வாழ்க்கை இழக்கவும் துணியும் ஆண்வர்க்கத்தை இங்கு எடுத்துக்காட்டியுள்ளார்.


    குடும்பவிளக்கு என்னும் அவரின் நூலைப் படிக்கும் போது ஒரு திரைப்படத்தைப் பார்த்த உணர்வு கண்முன்னே சித்திரிக்கப்பட்டிருந்தது. குடும்பவிளக்கு நாயகியின் கண்களை வர்ணிக்கும் போது


    தெளிவிலாக் கருக்கலில் ஒளிபடும் அவள்விழி

    குளத்து நீரில் குதிக்கும் கெண்டைமீன்!


    எனக் கண்களை கெண்டைமீனுக்கு ஒப்பிட்டுப் பாடுகின்றார்.


    இவ்வாறே பெண்களின் கண்களை வர்ணிக்கும் வண்ணக்களஞ்சியப்புலவர்


    பொருது வெண்பளிங்குத் தளத்தில் நின்றிடில்அத்

    தளம்குளிர் புனல்என நெடிய

    கருவிழிஇரண்டும் கயல்எனத் தோன்றக்

    கண்டுவந்து உடல் அசையாது

    விரிசிறை அசைத்துஅந்த ரத்தில்நின்று எழில்சேர்

    மீன்எறி பறவை வீழ்ந் திடுமே!


    மாடத்திலே நிற்கின்ற பெண்ணின் கண்கள் பளிங்குத் தரையிலே விம்பமாகத் தோன்றுகின்றன. அந்நிலப்பகுதி குளிர்புனல் என நினைத்து மீன்கொத்திப் பறவைகள் பறந்து வருகின்றன.  அந்தப் பெண்ணின் கண்கள் இரண்டும் கயல்மீன்கள் போல் காட்சியளிக்கின்றன. எனவே அப்பெண்ணின் கருவிழிகள் இரண்டையும் கயல் மீன்கள் என்று நினைத்து மீன்கொத்திப் பறவை கவ்விக் கொள்ள வந்து வீழ்கின்றது என்று அழகாகப் பாடுகின்றார்.


    மதுரையில் பிறந்த மீன்கொடியை உன் கண்களில் கண்டேனே

    போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை உன் புருவத்தில் கண்டேனே என்று வாலி பாடுகின்றார்.


    இதே கண்களை


    வள்ளுவர் 1093 ஆவது குறளிலே


    நோக்கினாள் நோக்கின் இறைஞ்சினாள் அஃதவள்

    யாப்பினுள் அட்டிய நீர்


    என்னும் வரிகளுக்கு சாலமன் பாப்பையா அவர்கள் நான் பார்க்காத போது என்னைப்பார்த்தாள். பார்த்து நாணத்தால் தலைகுனிந்தாள். இந்த செயல் எங்களுக்குள் காதல் பயிர் வளர அவள் ஊற்றிய நீராகும் என பொருள் கூறுகின்றார். 


    இதனையே பாரதிதாசன் காதல் குற்றவாளிகள் என்ற தலைப்பில் வெளிவந்த கவிதைகளிலே


    கூடத்திலே மனப் பாடத்திலே- விழி

    கூடிக் கிடந்திடும் ஆணழகை,

    ஓடைக் குளிர் மலர்ப் பார்வையினால்- அவள்

    உண்ணத் தலைப்படும் நேரத்திலே,

    பாடம் படித்து நிமிர்ந்த விழி- தனிற்

    பட்டுத் தெறித்தது மானின் விழி!

    ஆடை திருத்தி நின்றாள் அவள்தான் - இவன்

    ஆயிரம் ஏடு திருப்புகின்றான்


    என பாடியிருக்கின்றார்.


    'உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே விண்ணை நான்  பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே' என்று கவியரசு கண்ணதாசன் கூட அற்புதமாக எடுத்துக் காட்டியுள்ளார். இந்தக் கண்களுக்குக் கவிஞர்கள் எப்படி ஆலாபனை செய்திருக்கின்றார்கள். பாருங் கள்.


    பெண்மையின் பெருமையையும் உலகுக்கு உணர்த்துவதற்கு பாரதிதாசனின் குடும்பவிளக்கு ஒன்று போதும். பெண் வீட்டின் கண். அவள் உறவிலே விளங்கிடும் குடும்பம் என்னும் தத்துவத்தை அழகாகச் சித்திரித்திருக்கின்றார். காலை எழுகின்றாள். கோலமிட்டாள், கணவனைப் பிள்ளைகளைத் துயிலெழுப்புகின்றாள், காலையுணவு தயாரிக்கின்றாள். காதலின் மேன்மை உணவுப் பரிமாற்றத்தில் அறியக் கூடியதாக இருக்கின்றது. 


    செம்பு தவலை செழும்பொன் ஆக்கினாள்;

    பைம்புனல் தேக்கினாள், பற்ற வைத்த

    அடுப்பினில் விளைத்த அப்பம் அடுக்கிக்

    குடிக்க இனிய கொத்து மல்லிநீர்

    இறக்கிப் பாலொடு சர்க்கரை இட்டு

    நிறக்க அன்பு நிறையப் பிசைந்த

    முத்தான வாயால் முழுநிலா முகத்தாள்

    'அத்தான்' என்றனள் அழகியோன் வந்தான்


    இவ்வாறு பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்பிவிட்டு கணவனை வெற்றிலை கொடுத்து அனுப்பிவிட்டு உணவுண்ணச் செல்கின்றாள் இங்கு அவளின் காதலுள்ளம் தௌ;ளத்தெளிவாகப் புலப்டுகின்றது.


    உணவுண்ணச் சென்றாள், அப்பம்

    உண்டனள், சீனி யோடு

    தணல்நிற மாம் பழத்தில்

    தமிழ்நிகர் சுவையைக் கண்டாள்!

    மணவாளன் அருமை பற்றி

    மனம்ஒரு கேள்வி கேட்க,

    'இணையற்ற அவன் அன்புக்கு

    நிகராமோ இவைகள்' என்றாள்.



    வீட்டுவேலைகள், தையல்வேலைகள், மரச்சாமான்கள் பழுதுபார்த்தல், கொல்லூற்றுவேலை, மாமன்மாமி தேவைகளின் கவனிப்பு, பிள்ளைகளுக்கு, கணவனுக்கு எது பிடிக்கும் என தேடிச் சமைத்தல், உணவு பரிமாற்றம், கடைக்குச் சென்று கணக்கு வழக்குப் பார்த்தல், பிள்ளைகளைக் கடற்கரைக்கு செல்லல், பிள்ளைகளை அழைத்து வரல், பெற்றோர் பெருமை பிள்ளைகளுக்கு எடுத்துரைத்தல், பிள்ளைகளை உறங்கச் செய்து கணவன் கட்டிலண்டை வந்து பேசல், விருந்தினர் வரவேற்றல், இவ்வாறு நீண்டு கொண்டு செல்லும் குடும்பவிளக்கு நல்ல பல கருத்துக்களையும் இவற்றினூடு இடையிடையே தமிழின் பெருமை, பொதுவுடைமைக் கருத்துக்கள், போன்றவற்றையும் சுவையாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.


    முதுமையில் ஏற்படும் காதல் பற்றி சுவை மிகுந்த பாடல் குடும்பவிளக்கிலே வாசித்து இன்புறத்தக்கது. இளமையிலே காதல் வரும் எதுவரையில் கூட வரும் என்றால், முழுமை பெற்ற காதல் என்றால் முதுமை வரை ஓடி வரும் என்று கண்ணதாசன் கூறுவதுபோல் இங்கு இளமை வடிந்து விட்டதோற்றம் ஒட்டிய மேனியில் காமத்தின் கடைசிச் சொட்டுக் கூட இல்லாத வயது. ஆனால், உண்மை அன்பு மனைவியில் காணுகின்ற வயதில் எல்லையைத் தொடும் ஆண்மகன் அவள் அழகை இழந்து விட்டாலும் அவள் உயிரோடு இருக்கின்றாள் என்பதே எனக்குப் போதும் என்கின்றார்


    புதுமலர் அல்ல காய்ந்த

    புற்கட்டே அவள் உடம்பு!

    சதிராடும் நடையாள் அல்லள்

    தள்ளாடி விழும் மூதாட்டி

    மதியல்ல முகம் அவட்கு

    வறள்நிலம்! குழிகள் கண்கள்!

    எது எனக்கின்பம் நல்கும்?

    இருக்கின்றாள் என்ப தொன்றே!


    ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்று கண்ணதாசன் கூறியதுபோல் இந்த உலகத்தில் எல்லாம் ஒருநாள் ஓய்ந்து போகும் ஆனால், உங்கள் அன்பைச் சுமந்திருக்கும் மனம் மட்டும் ஓய்வதில்லை என முதுமை கண்ட கணவனில் கொண்ட காதலை மூதாட்டி உரைக்கும் போது


    அறம் செய்த கையும் ஓயும்!

    மக்களை அன்பால் தூக்கிப்

    புறம்போன காலும் ஓயும்!

    செந்தமிழ்ப் புலவர் சொல்லின்

    திறம் கேட்ட காதும் ஓயும்!

    செயல்கண்ட கண்ணும் ஓயும்!

    மறவரைச் சுமக்கும் என்றன்

    மன மட்டும் ஓய்தலில்லை


    என்று மூதாட்டி காதலை குடும்பவிளக்கிலே நாம் காணலாம்.


    காதலிலும் பொதுவுடமையைக் கருத்துக்களையும் புரட்சியையும் கையாண்டவர் பாரதிதாசன்.


    'சின்ன வயதினில் என்றனையோர் -- பெருஞ்

    சீமான் மணந்தனன் செத்துவிட்டான்! -- எனில்

    அன்னது நான் செய்த குற்றமன்று! -- நான்

    அமங்கலை' என்றுகண் ணீர்சொரிந்தாள்!


    'மணந்திட நெஞ்சில் வலிவுளதோ?' -- என்று

    வார்த்தை சொன்னாள்; குப்பன் யோசித்தனன்! -- தன்னை

    இணங்கென்று சொன்னது -- காதலுள்ளம் -- 'தள்'

    என்றன மூட வழக்க மெலாம் -- தலை

    வணங்கிய வண்ணம் தரையினிலே -- குப்பன்

    மாவிலை மெத்தையில் சாய்ந்துவிட்டான்! -- பின்

    கணம்ஒன்றிலே குப்பன் நெஞ்சினிலே -- சில

    கண்ணற்ற மூட உறவினரும்     


    வீதியிற் பற்பல வீணர்களும் வேறு

    விதியற்ற சிற்சில பண்டிதரும் -- வந்து

    சாதியி லுன்னை விலக்கிடுவோம் -- உன்

    தந்தையின் சொத்தையும் நீ இழப்பாய்! -- நம்

    ஆதி வழக்கத்தை மீறுகின்றாய்! -- தாலி

    அறுத்தவளை மணம் ஒப்புகின்றாய்! -- நல்ல

    கோதை யொருத்தியை யாம்பார்த்து -- மணம்

    கூட்டிவைப்போம் என்று சத்தமிட்டார்!


    கூடிய மட்டிலும் யோசித்தனன் -- குப்பன்

    குள்ளச் சமூகத்தின் கட்டுக்களை! -- முன்

    வாடிக் குனிந்த தலைநிமிர்ந்தான் -- அந்த

    வஞ்சியைப் பார்த்தனன் மீண்டும் அவன் -- ஆ!

    ஏடி வடிவத்தின் ஆதிக்கமே! -- மூடர்

    எதிர்ப்பில் வெளிப்படும் நமதுசக்தி! -- மற்றும்

    பேடி வழக்கங்கள், மூடத்தனம் -- இந்தப்

    பீடைகளே இங்குச் சாத்திரங்கள்!


    காதல் அடைதல் உயிரியற்கை! -- அது

    கட்டில் அகப்படும் தன்மையதோ? -- அடி

    சாதல் அடைவதும் காதலிலே -- ஒரு

    தடங்கல் அடைவதும் ஒன்றுகண்டாய்! -- இனி

    நீதடு மாற்றம் அகற்றிவிடு! -- கை

    நீட்டடி! சத்தியம்! நான்மணப்பேன்! -- அடி

    கோதை தொடங்கடி! என்று சொன்னான் -- இன்பம்

    கொள்ளை! கொள்ளை!! கொள்ளை!!! மாந்தோப்பில்!


    என மூடக் கொள்கையை உடைத்தெறிந்து தன் எண்ணச் சுதந்திரத்தை எழுத்தில்  வடிக்கும் திறம்பெற்றவர் பாரதிதாசன்.


    இவ்வாறு அற்புதமான கவிதைகளை பாரதிதாசன் எமக்களித்து 21. 04. 1964 ஆம் ஆண்டு எம்மை விட்டுப் பிரிந்து சென்றார்.


    கவிஞர் ஹீட்ஸ் வாழ்ந்த காலங்கள் -    22 வயதுவரை

    ஷெல்லி  வாழ்ந்த காலங்கள்     -             26 வயதுவரை

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்   -  29 வயதுவரை

    பாரதியார்                   -                                    39 வயதுவரை

    பாரதிதாசன்                  -                                 73 வயதுவரை


    மரத்தடியில் மறைந்திருந்து வாலியினைக் கொன்ற 

    மட்டமுறு கருத்துக்கள் இப்போது வேண்டாம்

    உரத்தினிலே குண்டுபோகும் வேளையிலும் மக்கள்

    உயிர்காக்கும் மனப்பான்மை உண்டாக்க வேண்டும் 


    ஈழத்தரசி சஞ்சிகைக்காக எழுதியது 


    எழுத்துகளுக்கும் ஆடை கட்ட வேண்டும்

      எழுத்துகளுக்கும் ஆடை கட்ட வேண்டும்   இலக்கியம் என்பது ஒரு சமூகம் வாழுகின்ற காலத்தைத் தெட்டத் தெளிவாக வேறு சமூகத்துக்கு , அடுத்த கால கட...