• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    திங்கள், 9 ஜூன், 2025

    திராவிட இலக்கிய கர்த்தாக்களில் பாரதிதாசன்





    தமிழர்க்குத் தொண்டு செய்யும் தமிழ னுக்குத் 

    தடைசெய்யும் நெடுங்குன்றும் தூளாய்ப் போகும் 

    தமிழுக்குத் தொண்டுசெய்வோன் சாவதில்லை

    தமிழ்த் தொண்டன் பாரதிதாசன் செத்த துண்டோ


    என்னும் பாரதிதாசன் வரிகளை உங்கள் முன் வைத்து முத்தரசி கலை இலக்கியப் பன்னாட்டுத் தமிழ் ஆய்விதழும் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியும் இணைந்து நடத்துகின்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்ற ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் இங்கு உரையாற்ற வந்திருக்கின்ற திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர், கி.கல்யாணசுந்தரம் அவர்களுக்கும், இங்கு இணைந்திருக்கின்ற உங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். அத்துடன் என்னை இந்த நிகழ்விலே பேச அழைத்த தங்கமாரி அவர்களுக்கும் நன்றியும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.


    திராவிட இலக்கிய கர்த்தாக்களினால் படைக்கப்பட்ட இலக்கியங்களே திராவிட இலக்கியங்கள். இங்கு திராவிடம் என்றால் என்ன? திராவிடர் என்பவர்கள் யார்? என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். 


    ஆய்வாளர் சமரன் நாகன் அவர்களின் ஆய்வின்படி 'திருவிடர்கள்' அதாவது திரு இடத்தில் வசிப்பவர்கள் என்கின்ற ஒரு கருத்தைச் சொல்லுகின்றார். உதாரணமாக திருத்தணி, திருஅண்ணாமலை, திருப்பரங்குன்றம், திருஅனந்தபுரம், திருப்பதி இவ்வாறு தமிழர்களின் மிகச் சிறந்த ஊர்கள், இடங்களின் பெயர்களுக்கு முன்பு திரு என்பதை சேர்ப்பது வழக்கம். ஏன் மதிப்புறு பேரறிஞர்களுக்கும் திரு என்னும் அடைமொழி வைப்பது வழக்கமே. உதாரணமாகத் திருவள்ளுவரை நாம் கூறக்கூடியதாக இருக்கிறது. அதேபோல் திரு, திருமதி போடுகின்ற வழக்கம் எல்லாம் இருக்கிறது. ஆனால், இது முழுக்க முழுக்க தமிழ்ச் சொல். ஆகவே தமிழ் அறிஞர்கள் வசித்த இடம் திருவிடம். அதனால், அவர்கள் திருவிடர்கள் என்று அழைக்கப்பட்டனர். திருவிடர்கள் திராவிடர்கள் என்று வந்தது என்று ஆய்வாளர் சமரன் நாகன் அவர்களின் ஆய்வினை ஊடகவியலாளர் கே. எம். விஸ்வநாத், அவர்கள் எடுத்துக் கூறுகின்றார. 


    இந்தத் திராவிடர்கள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியொன்றைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களாகக் காணப்படுகின்றார்கள். அப்படியானால், திராவிட மொழிகள் எவை? என்று அறியவேண்டியது அவசியம். திராவிட மொழிகளில் முக்கியமானவையாகக் கருதப்படுவன தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்பனவாகும். இவை தவிர இன்னும் பல திராவிட மொழிகள் தென்னிந்தியாவிலும், வேறு பல இடங்களிலும் பேசப்படுகின்றன. அவற்றிலே சில வடமொழிக் கலப்புடையனவாக இருக்கின்றன. கிட்டத்தட்ட 85 மொழிகள் திராவிட மொழிக் குடும்பத்தில் இருக்கின்றன என்று அறிஞர்கள் சான்று கூறுகின்றார்கள். ஆனால், தமிழ் மட்டுமே பெருமளவுக்குத் திராவிடச் சொற்களுடன் பேசப்படக்கூடிய மொழியாக இன்னும் இருந்து வருகிறது. 


    திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் (ஊழஅpயசயவiஎந பசயஅஅயச ழக வாந னுசயஎனையைn ழச ளுழரவா-ஐனெயைn கயஅடைல ழக டயபெரயபநள) என்ற பெயரிலே ராபர்ட் கால்டுவெல் (சுழடிநசவ ஊயடனறநடட) என்பவர் திராவிட மொழிகளைப் பற்றி ஆராய்ந்து 1856 இல் ஒரு நூலை எழுதினார்.  அதற்குப் பிறகுதான் திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். அதாவது இந்த நூல்த்தான் திராவிட மொழிகளை உலகத்தின் முக்கிய மொழிக் குடும்பங்களில் ஒன்றாக இனங்காட்டியது. 


    அடுத்து திராவிட மொழி இலக்கியகர்த்தாக்கள் யாரென்று பார்த்தால், தேவநேயப்பாவணர், பாரதிதாசன், சி.என்.அண்ணாத்துரை, எஸ்.எஸ். தென்னரசு, கருணாநிதி, இலக்குவனார், சாலை இளந்திரையன், சாமி சிதம்பரனார், விந்தன், மு.வரதராசனார், குலோத்துங்கன், புலவர் ஆ.பழனி, பெருஞ்சித்திரனார்,  போன்று பலர் காணப்படுகின்றார்கள்.   அதிலே 


    'அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு

    விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை

    அணைந்து கொள்! உன்னைச் சங்கமமாக்கு

    மானிட சமுத்திரம் நானென்று கூவு

    பிரிவிலை எங்கும் பேதமிலை'


    என்று விசாலப் பார்வையால் உலகத்தை நோக்கும் படிக் கூறிய பாரதிதாசன் அவர்களைப் பற்றியே இங்கு பேசலாம் என்றிருக்கின்றேன். 


    இந்தப் பாடலையே எடுத்துப் பாருங்கள். அறிவு என்பது விரிவுபட்டதாக இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும். வாசிப்புத் தான் சிறப்பு. நூல்கள் வாசிப்பதனால், எம்முடைய அறிவு வளரும். விரியும், அதுதான் அறிவை அகண்ட அறிவாக மாற்றும். அதற்குப் பாடசாலைக் கல்வி மாத்திரமல்ல. நூல்கள் பல கற்பதும் அறிவுக்கு விருந்தாகின்றது. பேரரிஞன் பிளேட்டோ படிக்காமல் இருப்பதைவிடப் பிறக்காமல் இருப்பது மேல் என்று கூறினார். அதனால் படிப்பு அவசியம். அந்தப் படிப்பினால், அறியாமை விலகும். அறியாமை என்பது வெட்கப்படவேண்டியதுதான். ஆனால் அறிந்து கொள்ள விருப்பமில்லாமல் இருப்பது அதைவிட வெட்கக்கேடு என்று பெஞ்சமின் பிராங்ளின் சொல்லியிருக்கின்றார். 


    அதோடு பல நூல்களைக் கற்கின்ற போது எமது சிந்தனை விரியும், எதற்கும் ஏன் என்ற கேள்வி கேட்கத் தூண்டும். அதுதான் வள்ளுவர் கூறியது போல் எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதை நாம் விளங்கிக் கொள்வோம். ஒரு நூலிலே ஒரு விடயத்தைச் சொன்னால், அதிலுள்ள ஒரு சந்தேகத்தைத் தீர்க்க அடுத்த நூலைத் தேடுவோம்.  இவ்வாறு தேடல் அதிகரிக்க அறிவும் விரிவாகும். உதாரணத்திற்கு நான் இன்று திராவிடம் என்று சொன்னால், அது என்ன? என்று தேட, அதன் பின் அதற்குரிய இலக்கியம் என்ன என்று தேட, அதன்பின் இலக்கியகரத்தாக்கள் என்று தேட ஒரு நூல் பல நூல்களை வாசிக்க உங்களைத் தூண்டும். அதனாலேயே இந்த வரிகளைப் பாரதிதாசன் எழுதினார். இப்போது யார் அந்த பாரதிதாசன் என்று பார்ப்போம்.


    பாண்டிச்சேரியிலே 29.04.1891 அன்று கனகசபை முதலியாருக்கும் இலக்குமி அம்மையாருக்கும் ஒரு பிள்ளை பிறந்தது. அந்தக் குழந்தை தனது எழுத்து வன்மையினாலும் புரட்சிப்போக்காலும், பொதுவுடமை கொள்கையினாலும் தமிழகத்தின் சிந்தனையை எதிர்காலத்தில் தூண்டச் செய்யும் என்பதைப் பிறந்தபோது யாருக்கும் புரியவில்லை. அந்தக் குழந்தையே சுப்புரெத்தினம் என்னும் இயற்பெயர் கொண்ட பாரதிதாசனாகும். 


    இவர் மகாகவி பாரதியார் மேல் பேரன்பு கொண்டு பாரதியார் பெயரைத் தன் பெயருடன் இணைத்துக் கொண்டார். சுப்புரெத்தினமாக இருந்த தன்னுடைய பெயரைப் பாரதிதாசனாக மாற்றினார். இவர் தமிழியக்கம், குடும்ப விளக்கு, இருண்ட வீடு, கண்ணகி புரட்சிக் காப்பியம், பாண்டியன் பரிசு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, மணிமேகலை வெண்பா, இசை அமுது, எதிர்பாராத முத்தம், பாரதிதாசன் கவிதைகள், புரட்சிக்கவி, தமிழச்சியின் கத்தி, காதல் நினைவுகள், சஞ்சீவி பர்வதத்ததின் சாரல், வீரத்தாய், சிறு காப்பியம், காதலா கடமையா, இரணியன் ஓர் இணையற்ற வீரன், பிசிராந்தையார் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என்னும் புனை பெயர்களில் தன்னுடைய படைப்புக்களை எழுதி வந்தார். இவருடைய பாடல்களிலே பொதுவுடமை, இன விடுதலை, திராவிட உணர்வு, மொழிப் பற்று, தமிழ் தேசியம், மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண் விடுதலை, சாதி மறுப்பு, போன்ற பண்புகளை அறியக்கூடியதாக இருக்கின்றது. அறிஞர் அண்ணாவினால் புரட்சிக்கவி என்னும் பாராட்டைப் பெற்று 25.000 ரூபாய் பரிசு பெற்றார். 1970 இல் இவருடைய பிசிராந்தையார் என்னும் நாடக நூல் சாகித்திய அகடமி பரிசு பெற்றது.


    இவர் 'எங்கெங்குக் காணினும் சக்தியடா' என்று ஆரம்பித்துப் பாடிய பாடல் பாரதியாரால் ஸ்ரீசுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது. 'எங்கெங்குக் காணினும் சக்தியடா என்று பாடிய பாரதிதாசனே பின் ஒருமுறை சுத்தானந்தபாரதியார் 'கடவுள் இல்லையென்று என்று சொன்னவன் யாரடா என் அப்பனை தில்லையில் வந்து பாரடா' என்று கூற 'சிற்றப்பலத்தானையும் சிதம்பரத்தானையும் பீரங்கி வைத்துப் பிளந்திடும் நாள் என்னாளோ' என்று சமயமறுப்புக் கொள்கையுடன் பாடியிருக்கின்றார். இதற்குக் காரணம் என்ன நூல்களைக் கற்று இவறறின் கருத்துக்களை ஆழமாகச் சிந்தித்த அறிவு விரிவுதான் இவ்வாறு கூறக் காரணமாக இருந்தது. 


    கேள்வி கேட்கக் கேட்ட தெளிவு பிறக்கும் என்னும் சிந்தனைப் போக்கை தெளிவுறுத்தும் வகையில் கேள்வியால் அகலும் மடைமைபோல் நள்ளிரவு மெதுவாய் நடந்து கொண்டிருந்தது என விடிபுனல் பற்றி அவர் விதந்துரைத்த வார்த்தையிலே தன் பகுத்தறிவு சிந்தனையை உலகத்தின் விடியலுக்காக அவர் விளக்கினார்.


    நான் ஏன் இந்த விடயங்களை உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றால், மாணவர்களாகிய நீங்கள் எமது தாய்மொழி மேல் பற்றுள்ளவர்களாக இருக்க வேண்டும். தமிழ்மொழி உலகத்தின் முதன்மொழி என்றும் அதன் சிறப்புப் பற்றியுமு; அந்நியநாட்டவர்கள் ஆராய்ந்து பேசியிருக்கின்றார்கள். அந்தத் தமிழ்மெரியத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் நாங்கள். அதனால், அதனை எந்த இடத்திலும் நாங்கள் விட்டுக் கொடுக்கக் கூடாது. நாம் அது மட்டுமல்லாமல் சிந்தனையில் தெளிவுடையவர்களாக இருக்க வேண்டும். ஏன் ஏன் என்று கேள்விகளைக் கேட்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். நான் எந்த அரங்கத்திலே பேசினாலும் நான் கூடக் கூட்டிக் கொண்டு வருபவர் சோக்கிரட்டீஸ். 


    இவர் யாரென்றால், 


    'யார் சொன்னார் எவர் சொன்னார் என்பதை விட்டுவிட்டு எவர் சொன்ன சொல்லையும் உனது சொந்த அறிவால் எண்ணிப்பார்' என்று சொன்ன ஒரு  கிரேக்கத் தத்துவஞானி. அதாவது சிந்திக்கச் சிந்திக்கக் கேள்வி பிறக்கும் கேள்வி பிறக்கப் பிறக்க அறிவு விரிவுபடும். 


    எமது தமிழ்மொழியைப் பற்றிப் பாரதிதாசன் கூறுகின்றபோது


    'தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்

    தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்' என்று


    மொழிமேல் பற்றுக்கொண்டு பாடியிருக்கின்றார். இந்த மொழியுணர்வு பாடல்களைப் போலவே காதலுணர்வுப் பாடல்களையும் திராவிட இனத்தின் மேல்  அவர் கொண்ட பக்தியை வெளிப்படுத்தும் பாடல்களையும் பாடியிருக்கின்றார். தான் ஒரு திராவிடன் என்பதில் அவருக்குப் பெரிய பெருமை இருந்திருக்கிறது. அதனால்தான் என்னவோ


    இனப்பெயர் ஏன் என்று கேட்டால் 

    மனத்தில் எனக்குச் சொல்லொணா மகிழ்ச்சியாம்

    நான் தான் திராவிடன் என்று நவில்கையிலே 

    தேன்தான் நாவெல்லாம் வான்தான் என்புகழ் 


    என்று பெருமைப்படுகின்றார். தன்னுடைய இனத்தைப் பற்றிச் சொல்லும் போது

    சீர்த்தியால், அறத்தால், செழுமையால், வையப் போர்த்திறத்தால், இயற்கை புனைந்த ஓருயிர் நான். என்னுடைய உயிர் இனம் திராவிடம் என்று சொல்வது மகிழ்ச்சிதான், பெருமைதான். ஆனாலும் அதைவிட ஒரு விடயத்தில் எனக்கு மகிழ்ச்சி இருக்கிறது என்று கூறி என்ன சொல்கிறார் என்றால், நான் ஆரியன் அல்லேன் என்னும் போதில் எத்தனை மகிழ்ச்சி! எத்தனை மகிழ்ச்சி. அதனாலே, உன்னுடைய இனப்பெயர் என்ன என்ன என்று கேட்கக் கேட்க அதனால் எனக்கு மீண்டும் மீண்டும் இன்பம் விழைவதாம். என்கிறார். ஆரியன் என்னும் சொல்லிலே அவருக்கு எப்படி வெறுப்பு இருந்திருக்கிறது பாருங்களேன்.


    அவர் நேசிக்கின்ற திராவிடர்களுடைய கடமைகளாக அவர் சொல்வது


    மண்வீட்டைத் திறப்பாய் - சாதி 

    மதக்கத வுடைத்தே 


    என சாதி மதக் கொள்கையை விடச்சொல்கிறார். அத்தோடு 

    புனைசுருட் டுக்குப்பை அன்றோ – பழம்

    புராணவழக்கங்கள்   யாவும்?

    இனிமேலும் விட்டு வைக்காதே 


    என்கிறார். இந்தப் புராணக் குப்பைக்கு உதாரணமாக இரண்டு கதைகளை உங்களுக்குச் சொல்லுகின்றேன். அடியாருக்கு பிள்ளைக்கறி சமைத்த கதை ஒன்று அடுத்தது விநாயகக் கடவுளுக்கு யானைத் தலை வந்த கதை. முதலாவதாக பிள்ளைக்கறி சமைத்த கதையை எடுத்துப் பார்த்தால், சிறுத்தொண்டர் என்னும் ஒரு சிவ பக்தருக்கு ஒரே ஒரு பிள்ளையாகிய சீராளன் என்னும் ஒரு மகன் இருந்தான். ஒருநாள் சிவபெருமான் சிவதொண்டர் வடிவத்திலே சிறுத்தொண்டர் வீட்டிற்கு வந்து எனக்கு ஒரு பிள்ளை இருக்கும் வீட்டிலுள்ள பிள்ளையைக் கறி சமைத்துத் தர வேண்டும். அந்தப்பிள்ளையை அம்மா பிடித்திருக்க அப்பா அரிந்து தர வேண்டும் என்று கேட்டாராம். உடனே சிறுத் தொண்டரும் தன்னுடைய மகனைச் சமைத்து சிவஅடியாராக வந்திருந்த சிவபெருமானுக்கு உணவாகப் படைத்தாராம். சிவபெருமானும் உன்னுடைய பிள்ளையைக் கூப்பிடு அவனுடனேயே உணவருந்த வேண்டும் என்று சொன்னாராம். உடனே சிறுத்தொண்டர் சீராளன் என்று தன்னுடைய மகனை அழைக்க அவனும் அங்கே ஓடி வந்தானாம். இந்தக் கதையை உள்வாங்குங்கள். 


    இதேபோல் அடுத்த கதையாக ஏன் விநாயனருக்கு யானைத்தலை இருக்கின்றது என்று பார்ப்போம். பிள்ளையாரைக் காவலுக்கு வைத்து விட்டு பார்வதியாகிய அம்மா நீராடச் சென்றாராம். யாராவது இந்தப் பக்கம் வந்தால், விடாதே என்று சொல்லிவிட்டுப் போனாராம். இந்த நேரத்திலே சிவபெருமான் அந்தப் பக்கம் வந்து பார்வதியைப் பார்க்கப் போக பிள்ளையார் தடுத்தாராம். அதைக்கேளாமல் சிவபெருமான் மீண்டும் போக பிள்ளையார் விடவில்லையாம். அதனால், கோபம்கொண்ட சிவபெருமானும் தன்னுடைய சூலாயுமதத்தால் பிள்ளையாருடைய தலையைச் சீவினாராம். தலையறுந்து கிடக்கும் தன்னுடைய பிள்ளையைக்க ண்டு உமாதேவியார் அழுதபோது. நீ கவலைப்படாதே நம்முடைய மகனுக்குத் தலையைப் பொருத்தி விடலாம் என்று சொல்லி அங்கு வந்த தேவகணங்களிடம் யாராவது வடக்கே பார்த்துக் கொண்டு தூங்கினால், அவருடைய தலையை வெட்டிக் கொண்டு வாருங்கள் என்று சொன்னாராம். அவர்களுக்கு முதலில் அகப்பட்டது யானைதானாம். அதனால், அதனுடைய தலையை வெட்டினார்களாம். பாவம் அந்த யானை. அவர்கள் கொண்டு வந்த யானைத தலையைத் தன்னுடைய மகனுக்குப் பொருத்தினாராம். இதற்கு ஏன் யானையை வெட்டித் தலையைப் பொருத்த வேண்டும். தன்னுடைய மகனுடைய தலையையே ஒட்டியிருக்கலாமே. இவை போன்ற கதைகளைததான் புனை சுரட்டுக் குப்பைகள் என்று பாரதிதாசன் சொல்லுகின்றார். 


    திராவிடர் கடமை போல திராவிடர் ஒழுக்கங்கள் என்னவென்றும் பாடல் பாடியிருக்கிறார்.

     

    திராவிடர்களுடைய ஒழுக்கம் பற்றிக் கூறும்போது 

     

    திரும்பும் பக்கமெலாம் பெருமக்கள் தேவை யுணர்ந்திடடா!

    தீயபொ றாமையையும் - உடைமையிற் செல்லும் அவாவினையும் 

    காயும் சினத்தினையும் - பிறர் உளம் கன்ற உரைப்பதையும்( தீயினால் சுடு;டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு)

    ஆயின் அகற்றிடுவாய் - உளத்தினில்

    அறம் பிறக்குமடா! 


    தூய அறவுளத்தால் - செயலினில் தொண்டு பிறக்குமடா!

    ஏயும் நற்றொண்டாலே - பெரியதோர் இன்பம் பிறக்குமடா! 

    தீயும் குளிருமடா - உனையண்டும் நோயும் பறக்குமடா!

    வாயில் திறக்குமடா! - புதியதோர் வழி பிறக்குமடாஇ


    திராவிடர் புரட்சித் திருமணம் பற்றிக் கூறும்போது


    (திராவிடர் புரட்சித் திருமணம் இந்நாளில் முன்னாளிற் போலின்றிப் பெருமக்களால் மிகுதியும்

    மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

     தம் ஊரில் உள்ளவர்களைக் கொண்டே நடத்திக் கொள்வதால் செலவு குறையும்; தலைவர்கட்கும் தொல்லை இராது.) 

    1. அழைப்பிதழால் அல்லது வேண்டுகோளால் மணவீட்டில் குழுமியோர் அவையத்தார் ஆவார்.

    2. இசை: திராவிடர் நாட்டுப் பண்.

    3. மணமக்கள் அவைக்கு வருதல்.

    4. முன்மொழிவோர் அவையில் எழுந்துஇ 'அவைத் தலைமை தாங்கி இத் திருமணத்தை முடித்துத் தரும்படி இன்னாரை வேண்டிக் கொள்கிறேன்' என்று முன் மொழிதல்.

    5. அவையத்தாரின் சார்பில் ஒருவர்இ 'அதை நாங்கள் ஆதரிக்கிறோம்' என்று வழி மொழிதல்.

    6. முன் மொழிந்தார்இ வழி மொழிந்தார் அவைத் தலைவரை அழைத்து வருவார்கள். 

    7. அவைத் தலைவர் முன்னுரை.

    8. திருமணம் நடத்தல்: மணப்பெண் 'இன்னாரை நான் என் வாழ்க்கைத் துணைவராகக் கொண்டு வாழ்க்கை நடத்த ஒப்புகிறேன்' என்று சொல்ல மணமகனும் அவ்வாறு அப்படியே சொல்ல இருவரும் மாலை மாற்றுவார்கள்  கணையாழி மாற்றுவார்கள்.

    'வாழ்க' என முழங்குவார்கள் அதன்பின் தலைவர்இ அறிஞர்கள்  மணமக்களை வாழ்த்துவார்கள் 

    வந்திருப்பவர்களுக்கு வெற்றிலை பாக்கு முதலியவை வழங்குதல்.

    இந்த நடைமுறைக்கு முதல் நாளே நீதிமன்றத்தில் மணமகன் மணமகள் மணப்பதிவு செய்து கொள்வதுண்டு. பிறகும் பதிவு அறிவிப்புச் செய்து கொள்ளலாம்.


    பெண்களைப் பற்றிக் கூறுகின்ற எழுதுகின்ற போது பெர்னாட்ஷா கூறிய மொழி, கைம்மைப்பழி. கைம்மைக் கொடுமை. அதாவது கணவனை இழந்தவள்.  மூடத்திருமணம் அதாவது மணமகளுக்குப் பொருந்தாத திருமணம், எழுச்சியுற்ற பெண்கள். குழந்தை மணத்தின் கொடுமை. அதாவது குழந்தை மணத்தின் கொடுமை என்றால், சிறுவயதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்து கொடுக்கும் வழக்கம் அக்காலத்திலே இருந்திருக்கின்றது. உதாரணமாக பாரதியாருக்குத் திருமணம் நடக்கும் போது பாரதியாரின் மனைவி செல்லம்மாளுக்கு 7 வயதும் பாரதியாருக்கு 14 வயதுமாக இருந்திருக்கிறது. இது இப்போது சட்டப்படி குற்றம். இதை அன்று பாரதிதாசன் பாடியிருக்கிறார். பெண்ணுக்கு நீதி, கைம்பெண் நிலை, கைம்மைத் துயர், கைம்மை நீக்கம், இவ்வாறு உலகத்தைத் தன்னுடைய பாட்டுத் திறத்தாலே பாலித்திருக்கின்றார். பாலி;திருக்கின்றார் என்றால், பாதுகாத்திருக்கின்றார்.


    இதேபோலக் காதல் உணர்வுப் பாடல்களையும்  பாரதிதாசன் அதிகமாகப் பாடியுள்ளார்.


    'கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

    என்ன பயனும் இல'


    என்னும் வள்ளுவர் வரிகளுக்கொப்ப சஞ்சீவிபர்வதத்தின் சாரல் என்னும் கவிதையிலே 'கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்' என்று காதலியின் பார்வைக்கு இருக்கும் மகத்துவத்தைக் காண்கின்றார்.


    காதலிலும் பொதுவுடைமைப் புரட்சிப் போக்கைக் கொண்டு வந்தவரே பாரதிதாசன். தனது பாடல்களில் ஏழை மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். ஏழைத்தொழிலாளியின் மனைவி, மாட்டுவண்டிக்காரன் மனைவி போன்று சாதாரண பெண்களின் வாய்மொழிப் பாடல்களாக அமைவதுடன் பொதுவாக பழந்தமிழ் பாடல்களில் வரும் காதலியர் தம் காதல் உணர்வுகளைத் தமது காதலனிடம் வெளிப்படையாகக் கூறமாட்டார்கள். ஆனால் பாரதிதாசன் பெண்டீர் புரட்சிப் பெண்டீராகத் தம் காதல் உணர்வுகளைக் காதலனிடம் வெளிப்படையாக கூறவல்லவர்களாகவே படைக்கப்படுகின்றார்கள்.


    எதிர்பாராத முத்தம் என்னும் நூலிலே ஒரு பெண்ணின் வருகையை வர்ணிக்கும் வரிகளில் எம் கண்முன்னே ஒரு பெண்ணை கொண்டு வந்து நிறுத்துகின்றார்.


    நீலப் பூவிழி நிலத்தை நோக்கக்

    கோலச் சிற்றிடை கொடிபோல் துவளச்

    செப்புக் குடத்தில் இடதுகை சேர்த்தும்

    அப்படி இப்படி வலதுகை யசைத்தும்

    புறப்பட்ட மங்கைதான் பூங்கோதை என்பவள்.

    நிறப்பட்டாடை நெகிழ்ந்தது காற்றில்!

    பாதச் சிலம்பு பாடிற்று! நிலாமுகம்

    சீதளம் சிந்திற்றாம்! செவ்விதழ் மின்னிற்றாம்!

    பெண்ணழகி அன்னப் பேடுபோல் செல்கையில்,



    கீழுள்ள வரிகளில் காதலின் வர்ணனை அழகாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.



    பட்டாணி வண்ணப் புதுச்சேலை - அடி

    கட்டாணி முத்தே உன் கையாலே - எனைத்

    தொட்டாலும் இனிக்கும் பூஞ்சோலை – உடல்

    பட்டாலும் மணக்கும் அன்பாலே


    எட்டாத தூரம் இருந்தாலும் - உனை

    எட்டும் என் நெஞ்சம் மென்மேலும் - அது

    கட்டாயம் செய்திட வந்தாலும் - நீ

    ஒட்டாரம் செய்வதென் போங்காலம்


    ஆவணி வந்தது செந்தேனே – ஒரு

    தாவணி வாங்கி வந்தேனே -  எனைப்

    போவென்று சொன்னாய் நொந்தேனே – செத்துப்

    போகவும் மனம் நொந்தேனே


    காதலின் தவிப்பும் காதலி வார்த்தை கேட்டு வாழ்க்கை இழக்கவும் துணியும் ஆண்வர்க்கத்தை இங்கு எடுத்துக்காட்டியுள்ளார்.


    குடும்பவிளக்கு என்னும் அவரின் நூலைப் படிக்கும் போது ஒரு திரைப்படத்தைப் பார்த்த உணர்வு கண்முன்னே சித்திரிக்கப்பட்டிருந்தது. குடும்பவிளக்கு நாயகியின் கண்களை வர்ணிக்கும் போது


    தெளிவிலாக் கருக்கலில் ஒளிபடும் அவள்விழி

    குளத்து நீரில் குதிக்கும் கெண்டைமீன்!


    எனக் கண்களை கெண்டைமீனுக்கு ஒப்பிட்டுப் பாடுகின்றார்.


    இவ்வாறே பெண்களின் கண்களை வர்ணிக்கும் வண்ணக்களஞ்சியப்புலவர்


    பொருது வெண்பளிங்குத் தளத்தில் நின்றிடில்அத்

    தளம்குளிர் புனல்என நெடிய

    கருவிழிஇரண்டும் கயல்எனத் தோன்றக்

    கண்டுவந்து உடல் அசையாது

    விரிசிறை அசைத்துஅந்த ரத்தில்நின்று எழில்சேர்

    மீன்எறி பறவை வீழ்ந் திடுமே!


    மாடத்திலே நிற்கின்ற பெண்ணின் கண்கள் பளிங்குத் தரையிலே விம்பமாகத் தோன்றுகின்றன. அந்நிலப்பகுதி குளிர்புனல் என நினைத்து மீன்கொத்திப் பறவைகள் பறந்து வருகின்றன.  அந்தப் பெண்ணின் கண்கள் இரண்டும் கயல்மீன்கள் போல் காட்சியளிக்கின்றன. எனவே அப்பெண்ணின் கருவிழிகள் இரண்டையும் கயல் மீன்கள் என்று நினைத்து மீன்கொத்திப் பறவை கவ்விக் கொள்ள வந்து வீழ்கின்றது என்று அழகாகப் பாடுகின்றார்.


    மதுரையில் பிறந்த மீன்கொடியை உன் கண்களில் கண்டேனே

    போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை உன் புருவத்தில் கண்டேனே என்று வாலி பாடுகின்றார்.


    இதே கண்களை


    வள்ளுவர் 1093 ஆவது குறளிலே


    நோக்கினாள் நோக்கின் இறைஞ்சினாள் அஃதவள்

    யாப்பினுள் அட்டிய நீர்


    என்னும் வரிகளுக்கு சாலமன் பாப்பையா அவர்கள் நான் பார்க்காத போது என்னைப்பார்த்தாள். பார்த்து நாணத்தால் தலைகுனிந்தாள். இந்த செயல் எங்களுக்குள் காதல் பயிர் வளர அவள் ஊற்றிய நீராகும் என பொருள் கூறுகின்றார். 


    இதனையே பாரதிதாசன் காதல் குற்றவாளிகள் என்ற தலைப்பில் வெளிவந்த கவிதைகளிலே


    கூடத்திலே மனப் பாடத்திலே- விழி

    கூடிக் கிடந்திடும் ஆணழகை,

    ஓடைக் குளிர் மலர்ப் பார்வையினால்- அவள்

    உண்ணத் தலைப்படும் நேரத்திலே,

    பாடம் படித்து நிமிர்ந்த விழி- தனிற்

    பட்டுத் தெறித்தது மானின் விழி!

    ஆடை திருத்தி நின்றாள் அவள்தான் - இவன்

    ஆயிரம் ஏடு திருப்புகின்றான்


    என பாடியிருக்கின்றார்.


    'உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே விண்ணை நான்  பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே' என்று கவியரசு கண்ணதாசன் கூட அற்புதமாக எடுத்துக் காட்டியுள்ளார். இந்தக் கண்களுக்குக் கவிஞர்கள் எப்படி ஆலாபனை செய்திருக்கின்றார்கள். பாருங் கள்.


    பெண்மையின் பெருமையையும் உலகுக்கு உணர்த்துவதற்கு பாரதிதாசனின் குடும்பவிளக்கு ஒன்று போதும். பெண் வீட்டின் கண். அவள் உறவிலே விளங்கிடும் குடும்பம் என்னும் தத்துவத்தை அழகாகச் சித்திரித்திருக்கின்றார். காலை எழுகின்றாள். கோலமிட்டாள், கணவனைப் பிள்ளைகளைத் துயிலெழுப்புகின்றாள், காலையுணவு தயாரிக்கின்றாள். காதலின் மேன்மை உணவுப் பரிமாற்றத்தில் அறியக் கூடியதாக இருக்கின்றது. 


    செம்பு தவலை செழும்பொன் ஆக்கினாள்;

    பைம்புனல் தேக்கினாள், பற்ற வைத்த

    அடுப்பினில் விளைத்த அப்பம் அடுக்கிக்

    குடிக்க இனிய கொத்து மல்லிநீர்

    இறக்கிப் பாலொடு சர்க்கரை இட்டு

    நிறக்க அன்பு நிறையப் பிசைந்த

    முத்தான வாயால் முழுநிலா முகத்தாள்

    'அத்தான்' என்றனள் அழகியோன் வந்தான்


    இவ்வாறு பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்பிவிட்டு கணவனை வெற்றிலை கொடுத்து அனுப்பிவிட்டு உணவுண்ணச் செல்கின்றாள் இங்கு அவளின் காதலுள்ளம் தௌ;ளத்தெளிவாகப் புலப்டுகின்றது.


    உணவுண்ணச் சென்றாள், அப்பம்

    உண்டனள், சீனி யோடு

    தணல்நிற மாம் பழத்தில்

    தமிழ்நிகர் சுவையைக் கண்டாள்!

    மணவாளன் அருமை பற்றி

    மனம்ஒரு கேள்வி கேட்க,

    'இணையற்ற அவன் அன்புக்கு

    நிகராமோ இவைகள்' என்றாள்.



    வீட்டுவேலைகள், தையல்வேலைகள், மரச்சாமான்கள் பழுதுபார்த்தல், கொல்லூற்றுவேலை, மாமன்மாமி தேவைகளின் கவனிப்பு, பிள்ளைகளுக்கு, கணவனுக்கு எது பிடிக்கும் என தேடிச் சமைத்தல், உணவு பரிமாற்றம், கடைக்குச் சென்று கணக்கு வழக்குப் பார்த்தல், பிள்ளைகளைக் கடற்கரைக்கு செல்லல், பிள்ளைகளை அழைத்து வரல், பெற்றோர் பெருமை பிள்ளைகளுக்கு எடுத்துரைத்தல், பிள்ளைகளை உறங்கச் செய்து கணவன் கட்டிலண்டை வந்து பேசல், விருந்தினர் வரவேற்றல், இவ்வாறு நீண்டு கொண்டு செல்லும் குடும்பவிளக்கு நல்ல பல கருத்துக்களையும் இவற்றினூடு இடையிடையே தமிழின் பெருமை, பொதுவுடைமைக் கருத்துக்கள், போன்றவற்றையும் சுவையாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.


    முதுமையில் ஏற்படும் காதல் பற்றி சுவை மிகுந்த பாடல் குடும்பவிளக்கிலே வாசித்து இன்புறத்தக்கது. இளமையிலே காதல் வரும் எதுவரையில் கூட வரும் என்றால், முழுமை பெற்ற காதல் என்றால் முதுமை வரை ஓடி வரும் என்று கண்ணதாசன் கூறுவதுபோல் இங்கு இளமை வடிந்து விட்டதோற்றம் ஒட்டிய மேனியில் காமத்தின் கடைசிச் சொட்டுக் கூட இல்லாத வயது. ஆனால், உண்மை அன்பு மனைவியில் காணுகின்ற வயதில் எல்லையைத் தொடும் ஆண்மகன் அவள் அழகை இழந்து விட்டாலும் அவள் உயிரோடு இருக்கின்றாள் என்பதே எனக்குப் போதும் என்கின்றார்


    புதுமலர் அல்ல காய்ந்த

    புற்கட்டே அவள் உடம்பு!

    சதிராடும் நடையாள் அல்லள்

    தள்ளாடி விழும் மூதாட்டி

    மதியல்ல முகம் அவட்கு

    வறள்நிலம்! குழிகள் கண்கள்!

    எது எனக்கின்பம் நல்கும்?

    இருக்கின்றாள் என்ப தொன்றே!


    ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்று கண்ணதாசன் கூறியதுபோல் இந்த உலகத்தில் எல்லாம் ஒருநாள் ஓய்ந்து போகும் ஆனால், உங்கள் அன்பைச் சுமந்திருக்கும் மனம் மட்டும் ஓய்வதில்லை என முதுமை கண்ட கணவனில் கொண்ட காதலை மூதாட்டி உரைக்கும் போது


    அறம் செய்த கையும் ஓயும்!

    மக்களை அன்பால் தூக்கிப்

    புறம்போன காலும் ஓயும்!

    செந்தமிழ்ப் புலவர் சொல்லின்

    திறம் கேட்ட காதும் ஓயும்!

    செயல்கண்ட கண்ணும் ஓயும்!

    மறவரைச் சுமக்கும் என்றன்

    மன மட்டும் ஓய்தலில்லை


    என்று மூதாட்டி காதலை குடும்பவிளக்கிலே நாம் காணலாம்.


    காதலிலும் பொதுவுடமையைக் கருத்துக்களையும் புரட்சியையும் கையாண்டவர் பாரதிதாசன்.


    'சின்ன வயதினில் என்றனையோர் -- பெருஞ்

    சீமான் மணந்தனன் செத்துவிட்டான்! -- எனில்

    அன்னது நான் செய்த குற்றமன்று! -- நான்

    அமங்கலை' என்றுகண் ணீர்சொரிந்தாள்!


    'மணந்திட நெஞ்சில் வலிவுளதோ?' -- என்று

    வார்த்தை சொன்னாள்; குப்பன் யோசித்தனன்! -- தன்னை

    இணங்கென்று சொன்னது -- காதலுள்ளம் -- 'தள்'

    என்றன மூட வழக்க மெலாம் -- தலை

    வணங்கிய வண்ணம் தரையினிலே -- குப்பன்

    மாவிலை மெத்தையில் சாய்ந்துவிட்டான்! -- பின்

    கணம்ஒன்றிலே குப்பன் நெஞ்சினிலே -- சில

    கண்ணற்ற மூட உறவினரும்     


    வீதியிற் பற்பல வீணர்களும் வேறு

    விதியற்ற சிற்சில பண்டிதரும் -- வந்து

    சாதியி லுன்னை விலக்கிடுவோம் -- உன்

    தந்தையின் சொத்தையும் நீ இழப்பாய்! -- நம்

    ஆதி வழக்கத்தை மீறுகின்றாய்! -- தாலி

    அறுத்தவளை மணம் ஒப்புகின்றாய்! -- நல்ல

    கோதை யொருத்தியை யாம்பார்த்து -- மணம்

    கூட்டிவைப்போம் என்று சத்தமிட்டார்!


    கூடிய மட்டிலும் யோசித்தனன் -- குப்பன்

    குள்ளச் சமூகத்தின் கட்டுக்களை! -- முன்

    வாடிக் குனிந்த தலைநிமிர்ந்தான் -- அந்த

    வஞ்சியைப் பார்த்தனன் மீண்டும் அவன் -- ஆ!

    ஏடி வடிவத்தின் ஆதிக்கமே! -- மூடர்

    எதிர்ப்பில் வெளிப்படும் நமதுசக்தி! -- மற்றும்

    பேடி வழக்கங்கள், மூடத்தனம் -- இந்தப்

    பீடைகளே இங்குச் சாத்திரங்கள்!


    காதல் அடைதல் உயிரியற்கை! -- அது

    கட்டில் அகப்படும் தன்மையதோ? -- அடி

    சாதல் அடைவதும் காதலிலே -- ஒரு

    தடங்கல் அடைவதும் ஒன்றுகண்டாய்! -- இனி

    நீதடு மாற்றம் அகற்றிவிடு! -- கை

    நீட்டடி! சத்தியம்! நான்மணப்பேன்! -- அடி

    கோதை தொடங்கடி! என்று சொன்னான் -- இன்பம்

    கொள்ளை! கொள்ளை!! கொள்ளை!!! மாந்தோப்பில்!


    என மூடக் கொள்கையை உடைத்தெறிந்து தன் எண்ணச் சுதந்திரத்தை எழுத்தில்  வடிக்கும் திறம்பெற்றவர் பாரதிதாசன்.


    இவ்வாறு அற்புதமான கவிதைகளை பாரதிதாசன் எமக்களித்து 21. 04. 1964 ஆம் ஆண்டு எம்மை விட்டுப் பிரிந்து சென்றார்.


    கவிஞர் ஹீட்ஸ் வாழ்ந்த காலங்கள் -    22 வயதுவரை

    ஷெல்லி  வாழ்ந்த காலங்கள்     -             26 வயதுவரை

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்   -  29 வயதுவரை

    பாரதியார்                   -                                    39 வயதுவரை

    பாரதிதாசன்                  -                                 73 வயதுவரை


    மரத்தடியில் மறைந்திருந்து வாலியினைக் கொன்ற 

    மட்டமுறு கருத்துக்கள் இப்போது வேண்டாம்

    உரத்தினிலே குண்டுபோகும் வேளையிலும் மக்கள்

    உயிர்காக்கும் மனப்பான்மை உண்டாக்க வேண்டும் 


    ஈழத்தரசி சஞ்சிகைக்காக எழுதியது 


    சனி, 3 மே, 2025

    ரசவாதி நூல் அனுபவம்



    நூல்: ரசவாதி

    ஆசிரியர் பாலோ கொயலோ
    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

    இந்த நூலின் ஆசிரியர் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர்.

    உங்கள் கனவுகளை பின்தொடர்ந்து செல்வதைப் பற்றிய ஒரு கற்பனை கதை.
    16 வயது வரை ஒரு கிறிஸ்தவ பாதிரியாராக ஆவதற்கு பயிற்சி அளித்த ஒரு பயிற்சி பள்ளிக்குச் சென்றிருந்த சான்டியாக்கோ இன்னும் இளைஞன்   செம்மறியாடு மேய்ப்பவனாக பல இடங்களுக்குச் சென்று உலகத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு ஆசைப்பட்டு புறப்படுகின்றான். செல்லுகின்ற பாதையிலே தான் செம்மறியாடுகளை மேய விட்டுத் தான் வாசிக்கின்ற புத்தகத்தை தலையின் கீழே வைத்து அவன் தூங்குவான். தன்னுடைய புத்தகங்களில் தனக்கு மிகவும் பிடித்தமான சில பகுதிகளை அவன் செம்மறி ஆடுகளுக்கு படித்துக் காட்டுவான். புல்வெளிகளில் ஆடுமேய்க்கும் ஒரு இடையனின் தனிமையையும் மகிழ்ச்சியையும் பற்றி அவன் அவற்றிடம் கூறுவான். அவன் கண்ட ஒரு  கனவை நோக்கி பிரயாணம் செய்கின்றான். இடையிலே சலேம் நகரின் அரசனை, ஆங்கிலேயரை, ஒரு ரசவாதியை, ஒரு அரசனை, ஒரு முதியவரை, ஒரு படிகக்கல் விற்பனையாளர்,  இரண்டு பெண்களை, பாலைவனத்து மக்களைஎன்று சந்தித்து அவர்கள் பற்றியே விடயங்களை அறிகிறான் அவர்களைப் பற்றி எல்லாம் மிக அழகாக இந்த புத்தகத்தில் எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றது. இறுதியில் அவன் தேடிச்சென்ற புதையலைக் கண்டுபிடிப்பதாகக் கதையை ஆசிரியர் முடித்திருக்கின்றார்.

    இந்த நூலில் பல விடயங்களை கேட்டுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. ஈயத்தை எப்படி தங்கமாக மாற்றுகிறார்கள் என்னும் ரசவாத வித்தையையும் பிரபஞ்சம் பற்றிய பல அற்புதமான தகவல்களையும் நெல் காலத்தில் மீது ஒருமித்த கவனம் செலுத்தினால் , அதை மேம்படுத்த முடியும்.  நிகழ்காலத்தை மேம்படுத்தினால் பின்னால் வருகின்ற விஷயங்களும் சிறப்பானவையாக இருக்கும்.

    உண்மையில் ஒன்றை ஆழமாக விரும்பினால், அதை அடைவதற்கு ஒட்டுமொத்த பிரபஞ்சமும் எப்போதும் சாதகமான காய்களை நகர்த்திக் கொண்டே இருக்கும்

    இந்த பூமியிலே இருக்கின்ற எல்லாமே தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். ஏனென்றால் இந்த பூமி ஜீவன் உள்ள ஒன்று அதற்கு ஒரு ஆன்மா இருக்கிறது நாம் அந்த ஆன்மாவின் ஒரு பகுதி எனவே அது நமக்கு சாதகமாக செயல்பட்டுக் கொண்டிருப்பதை நாம் அரிதாகவே உணர்கிறோம்.

    மணல் துகள்களில் ஒரே ஒரு துவடை எடுத்து ஆய்வு செய்தால் போதும் படைப்பின் அதிசயங்கள். அனைத்தையும் அதிலே காணலாம்

    நீங்கள் சொல்வதை வாழ்க்கை உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருக்க கூடும்
    இந்தப் பூமியில் உள்ள ஒவ்வொரு நபரும் அவர் செய்யும் வேலை எதுவாக இருந்தாலும் சரி இவ்வுலக வரலாற்றில் அவர் ஒரு மைய பாத்திரம் வகிக்கின்றார். வழக்கமாக அவர் அதை அறிந்திருப்பதில்லை
    தங்கள் கனவைப் பின் தொடர்ந்து செல்லுகிறவர்களுக்கு வாழ்க்கை தாராளமாக அள்ளி வழங்குகிறது.
    தினமும் ஒரே மாதிரியான விஷயங்களை தான் மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை என்று அர்த்தம் சாகச முயற்சிகளில் இறங்கும் போது தான் நீங்கள் உயிர்த்துடிப்போடு இருக்கிறீர்கள்

    பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமே பரிணாம வளர்ச்சி அடைந்தது தான் அறிவார்ந்த மனிதர்களைப் பொறுத்தவரை தங்கம் என்பது ஒரு மிக அதிகமாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ள ஒரு உலோகம் மட்டுமே.

    ஒவ்வொரு புத்தகங்களும் மனதுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.  இந்த புத்தகம் உன் இதயம் சொல்வதை நீ கேள், உன் நோக்கத்தை உன் கனவை நினைத்து நீ பயணம் செய்தால் ஒருமித்த சிந்தனை அதிலேயே வைத்து உன் பயணத்தை தொடர்ந்து செல் என்னும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

    இதயம் என்பது மூளை. எனவே அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் எனக்கு இந்த நூல் மனத்துக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது

    திங்கள், 28 ஏப்ரல், 2025

    யாத்வஷேம் நூல் விமர்சனம்

     


    ஒரு புத்தகம் படிக்கும் போது கலாசாரம், மொழி, வரலாறு, மனித உணர்வுகள் போன்றவற்றை வெகுவாக நாம் கற்றுக் கொள்ளலாம். அதற்கு உதாரணமாக திகழ்கின்ற புத்தகம் தான் யாத்வஷேம். இந்த நூலை நேமிசந்த்ரா என்னும் கன்னட எழுத்தாளர் எழுதியுள்ளார். இதனைத் தமிழில் கே. நல்லதம்பி அவர்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். 2022 ஆம் ஆண்டு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது இந்த நூலுக்கு கிடைத்திருக்கின்றது.

    இந்த நூலின் பெயர் யாத் வஷேம் என்பது மரணம் அடைந்த ஆறு மில்லியன் யூதர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்ற இடம் வாலன் பேர்க் என்பவர் தான் இதனை அமைத்திருந்த

    இது ஹிட்லருடைய யுத்த காலத்தில் ஜெர்மனி பெர்லினில் இருந்து தப்பித் தன்னுடைய தந்தையுடன் வந்த ஒரு பத்து வயது சிறுமி  ஹ்யானா கூறுகின்ற கதை.  வந்த ஒரு வருடத்தில் தந்தை இறந்து விடுகின்றார். தனித்து நின்ற பிள்ளையை கன்னட மொழி பேசுகின்ற ஒரு குடும்பம் எடுத்து வளர்க்கின்றது. அந்தக் குடும்பத்திலேயே இருக்கின்ற விவேக்கை ஹ்யானா திருமணம் செய்கின்றாள். திருமணமாகி குழந்தை பெற்றெடுக்கின்றாள். தமிழ் பெண்ணாகவே அனிதா என்ற பெயருடன் அவர்களுடன் வாழுகின்றாள். அவளுடைய எழுபதாவது வயதில் மகன் பல வருடங்களாக கனவு சுமந்த அனிதாவை அவருடைய அம்மாவையும் சகோதரர்களையும் தேடிச் செல்ல விமான டிக்கெட் எடுத்துக் கொடுக்கின்றான். தனது மனைவியின் சுமையை இறக்கி வைப்பதற்காக விவேக் ஹ்யானாவை அழைத்துக் கொண்டு இஸ்ரேல், அமெரிக்கா, ஜெர்மனி, ஆம்ஸ்ரடாம், என்று தேடுகின்றான். தன்னுடைய தாய் சகோதரர்களை அவள் கண்டுபிடிக்கின்றாளா என்பது தான் இந்த கதையின் முடிவு. இதை அறிவதற்கு நிச்சயமாக நீங்கள் இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும். ஒவ்வொரு இடமாக அவள் செய்கின்ற போது அந்த இடத்தில் நடந்த சம்பவங்கள் காட்சிகள் மனதை உருக்குகின்ற சம்பவங்கள் அனைத்தையுமே வாசிக்கக் கூடியதாக இருக்கும். ஜெர்மனியில் யூதர்கள் பற்றிய எத்தனையோ திரைப்படங்களை தொலைக்காட்சியில் நான் பார்த்திருக்கின்றேன் ஆனால் இந்த புத்தகத்தை வாசிக்கின்ற போது நெஞ்சுக்குள்ளே ஏதோ ஒரு அழுத்தத்தை இந்த புத்தகம் ஏற்படுத்துகின்றது.

     

    ஜூதர்கள் பாதிக்கப்பட்டார்கள் யூதர்களால் பாலஸ்தீனர் மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று இறுதி பகுதியில் அனிதா என்ற கதாபாத்திரம் சொல்லுகின்ற போருக்கு எதிரான நியாய தீர்ப்புகள் மிக சிறப்பாக அறிவுறுத்தலாக அமைந்திருக்கின்றன.

     

    இறுதிப் பகுதியில் அவசியம் இல்லாத யுத்தத்தையும் மனிதநேயமற்ற கொலையையும் கண்டிக்கும் வண்ணமாக இக்கதையின் நாயகி ஹ்யானா பேசுவதாக கதை முடிந்திருக்கின்றது.

     

     

    இப்போது இஸ்ரேல் வந்திருக்கின்றாள். இஸ்ரேல் என்றால் 3000 ஆண்டுகள். பழமையான வரலாறு இருக்கின்றது. வெற்றி கொண்ட அரசன் என்பதுதான் அதன் பொருள். ஹீப்ரோ மொழியில் பாலஸ்தீனம் என்றால் பாலஸ்தீனர்களின் பெருமை என்று பொருள்.

    யூத மதத்தவர்களுடைய மொழியையும் பழக்கவழக்கங்களையும் இந்த நூலிலே நாம் கற்றுக் கொள்ளலாம் அவர்களுடைய சபாத் என்னும் சனிக்கிழமை விரதம் பார்த் மிஸ்வாக் என்னும் பூப்புனித நீராட்டு விழா போன்ற பல விடயங்களை நாம் கற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. அவர்களுடைய உடலை எப்படி புதைக்கின்றார்கள்? 60 லட்சம் யூதர்களும் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள்.

    பிராமணர்கள் பிராமணர்கள் அல்லாதவர்களில் உள்ள பிராமணர்கள் அதாவது குஞ்சுடிகர்கள், அவர்களுடைய பழக்கவழக்கங்கள் பிராமணர்களுடைய பழக்க வழக்கங்கள், பெங்களூர் கோரிப்பாளையத்தில் காணப்படும் யூதர்களுடைய சமாதிகள் புனித டோராவின் சொல்லப்பட்டிருப்பவை ஆபிரகாமின் பிள்ளைகள் பெற்ற விபரம், ஹீப்ரு மொழி சொற்கள்விஷவாயு, டி கம்ப்ரஷன் அறை, Dachau Staft in München. Holocaust Museum I Washington, அழுகைச் சுவர், ஜெருசலேம் பற்றிய விளக்கங்கள்

    சில புத்தகங்கள் இதுவரை நீங்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளுக்கு ஒரு தீர்ப்பாக அமைவதை நீங்கள் அறியக்கூடியதாக இருக்கும் உங்களுக்கு தீர்ப்பை நீங்களே வழங்குவீர்கள். உன்னையே இந்த புத்தகத்தை வாசித்த போது என்னுடைய பல அறியாமைகள் நீங்கின. ஒரு நூலுக்காக இந்த எழுத்தாளர் சேகரித்த அனுபவங்களையும் அறிவையும் எம் போன்ற வாசகர்களுக்கு பயன்படுத்தியமைக்கு அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் இது ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம்

    செவ்வாய், 22 ஏப்ரல், 2025

    தீ

     


    விடைபெறத் துடிக்கும் எண்ணங்களை வரிகளில் கொண்டுவர எத்தனிக்கும் போது முன்னே விரியும் பக்கங்களில் தீ கண்முன்னே எரிகிறது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், என்னும் ஐம்பூதங்களை வென்று நிற்க முடிந்தவர்கள் இந்த உணகில் யாருமில்லை. காட்டுத்தீ, நாட்டுத்தீ, மதத்தீ, பொறாமை என்னும் மனத்தீ எனத் தீ பல பக்கங்களைத் திருப்புகின்றது. காமத்தைக் கூடத் தீயாக காமத்தீயாகத்தான் புலவர்கள் கவிபுனைந்தார்கள். மறுவாசிப்பிலே தீ பல கதைகள் சொல்லும். ஒரு நாட்டை அழிக்க மன்னர்களும் மூதாதையரும் தீயைத் தானே பயன்படுத்தியிருக்கின்றார்கள். 

    தீ என்பது மனித வரலாற்றில், மனித நாகரீகத்தின் ஆரம்பம். அறிவுப் புரட்சியின் துவக்கப்புள்ளி. 3 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஹோமோ எரெக்டஸ் இனத்தவரும், நியான்டர்தால் மனிதர்களும், ஹோமோ சேப்பியன்ஸின் மூதாதையரும் நெருப்பைப் பயன்படுத்தினர். தீயின் சக்தியை மனித உடலின் வடிவமோ, அமைப்போ, வலிமையோ மட்டுப்படுத்துவதில்லை. ஒரேஒரு பெண்ணால் ஒரு தீக்கல்லையோ அல்லது ஒரு தீப்பந்தத்தையோ கொண்டு ஓர் ஒட்டுமொத்தக் காட்டையும் ஒரு சில மணிநேரத்தில் எரித்து சாம்பலாக்கிவிட முடியும். குளிர்காய, சிங்கங்களை எதிர்க்கும் ஆயுதமாக, சேகரித்த கொட்டைகளை, கிழங்குகளைக் கொன்ற விலங்குகளைச் சுட்டுச் சாப்பிட என்று பயன்படுத்தப்பட்டது. சமைத்தல் முறை உருவானது. உணவில் இருந்த கிருமிகளையும் ஒட்டுண்ணிகளையும் தீ கொன்றது. சமையல் முறை கண்டுபிடித்ததற்கும், மக்களுடைய குடல் பாதையின் நீளம் குறைந்ததற்கும், மனித மூளை வளர்ந்ததற்கும் இடையே நேரடித் தொடர்பு இருந்ததாக அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

    இன்று உலக மக்கள் நாவில் நின்று நடனமாடுவது கலிஃபோர்னியா மாநிலத்தில் அமைந்துள்ள லாஸ் ஆஞ்சல்ஸ் நகரில் பற்றி எரிகின்ற தீ. உலகின் சினிமா தொழில்நுட்ப, கலாச்சாரம் மற்றும் வணிகத்தின் மையமாக விளங்குகிற லாஸ் ஆஞ்சல்ஸ் க்குத் தீ வைத்தவர் யார்? காட்டுத் தீ நாட்டுத் தீயாக மாறியதா. 

    அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை 

    அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

    வெந்து தணிந்தது காடு – தழல்

    வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

    தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் 


    என்று எண்ணத்தில் தோன்றுகின்ற சிறுபொறியை சிறுமை என்கின்ற மரப்பொந்தில் பாரதி இடுகிறார். அந்த சிறுபொறியால், சிறுமைகள் அழிந்தது. அச்சம், மடமை, துன்பம், பொய் ஆகிய தீமைகள் அனைத்தும் மனமென்னும் காட்டிலே அழிகின்றன என்று ஆனந்தக் கூத்தாடுகின்றார். பாரதி எழுதிய எண்ணத்தீ, மனக்காட்டுத்தீயாக மாறியது. 

    ஆனால், 2025 இல்  அழகிய வெப்பமான காலநிலை மற்றும் இயற்கைப் புகழ்பெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட தீயானது, பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் சமூக அமைப்புகளைப் பெருமளவில் பாதித்துள்ளது. இதுவரை 25 பேர் இறந்திருக்கின்றார்கள். 1.80.000 பேர் தமது உடைமைகளை இழந்து வெளியேறியிருக்கின்றார்கள். ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் அழிந்து தரைமட்டமாகியுள்ளன. இங்கு கடந்த சில ஆண்டுகளாக நிலவும் நீண்ட கால வறண்ட காலநிலை, அதிகமான காற்றின் வேகம் மற்றும் வட்டாரத்தில் ஏற்படும் மின்னழுத்தம் ஆகியவையே தீவிரமான தீப்பற்றல்களை உண்டாக்கியுள்ளது. லாஸ் ஆஞ்சல்ஸ் நகரத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு முகாம்களில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தீப்பற்றலுக்கு முன்னதாக, அரசு பொதுமக்களுக்கு எச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வழங்கியிருந்தாலும், சூழ்நிலை மிகவும் தீவிரமானதால் தீயணைப்பில் சிரமம் ஏற்பட்டது. தீயணைப்பு முறைமைகள் சிறந்த போதிலும், தீயின்மை மற்றும் நிலையான காற்று வேகங்களால் தீப்பற்றல் பெரிதும் பரவியது. 

    வேள்வி என்னும் பெயரில் திராவிடர்களை அழிக்க வனங்களை இராமன் எரித்தான் அதனாலேயே சூர்ப்பனகை கொதித்தெழுந்தாள் என்று இராமாயண மறுவாசிப்பு செய்யப்படுகின்றது. இலங்கை மண்ணை அனுமானுடைய நெருப்பூட்டிய வால் எரித்ததே. 

    முன்னை இட்ட தீ முப்புரத்திலே

    பின்னை இட்ட தீ தென் இலங்கையில்

    அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே

    யானும் இட்ட தீ மூள்க மூள்கவே 

    முன்னொருகால் சிவன் இட்ட தீ முப்புரத்திலே. பின்னர் அனுமான் இட்ட தீ தென் இலங்கையில். அன்னை இட்ட தீ என் அடிவயிற்றில். யானும் என் அன்னைக்கு இட்ட தீ மூண்டு எரியட்டும் என்று இலங்கையில் எரிந்த தீயை எடுத்துரைத்துத் தாய்க்குத் தீ வைத்த பட்டினத்தார் பாடினார். இன்று நாட்டுத்தீயாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் எரிகிறது.

    தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே 

    நாவினால் சுட்ட வடு 

    என்று நாவினால் சுட்ட திருவள்ளுவர் வரிக்கு ஒப்பாகக் கண்ணகி நாவினால் சுட்ட தீ பாண்டியன் அவையிலே பாண்டியன் உயிரைக் கொன்றது. பாண்டிமாதேவியும் இணைந்தே கொல்லப்பட்டார். 

    சிவனுடைய கண்களுக்கு மட்டுமே எரிக்கும் ஆற்றல் உண்டு என்பதல்ல மனிதர்களுக்கும் உண்டு என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைவது  கண்ணகி பாண்டிய மன்னன் உயிர் நீத்த பின் "பார்ப்பா ரறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்

    மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத்

    தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று"

    நாட்டுத்தீயைப் பரவச்செய்தமை. 

    யூதருக்கு எதிரான ஹிட்லர் வன்மத்தின் உச்சக்கட்டத் தீ யூதர்களின் நூலகத்தை எரித்தது மட்டமல்ல, தமிழர்களின் அறிவை அழிக்க யாழ் நூலகத்தையும் தீ குறி பார்த்தது. 

    பட்டப்பகலிலே மனிதர்கள் பார்த்திருக்க கணவனை இழந்த பெண்கள் தீக்குளித்தார்களே. அதற்கும் இந்தத்தீ காரணமாகியதே. தன்னுடைய கற்பை நிரூபிக்கச் சீதையும் தீக்குள் இறங்கினாள். அன்றும் தீ காரணமாகியது. ஒடுக்கப்பட்ட மனிதர்களைத் தீக்குள் தள்ளியதற்கு நந்தனார் சாட்சி அல்லவா.


    இத்தனை அவலத்தின் மத்தியிலும் உயிரின் ஆதாரம் காமத்தைத் தீயாகக் காட்டினார்கள் புலவர்கள் 


    செந்தமிழை சாறாய்ப் பிழிந்து செழுந் 

    சீதச் சந்தனமென்று  யாரோ தடவினார் 

    பைந்தமிழை ஆய்கின்ற கோன் நந்தி 

    ஆகம் தழுவாமல் வேகின்ற பாவியான் 

    என்று  நந்திவர்மனில் காமமுற்ற பெண் நந்திவர்மனின் உடலைத் தழுவாமல் உடலெல்லாம் தீயால் வேகுகின்றது என்று பாடுவதாக நந்திக்கலம்பகத்திலே உள்ளது.

    காமத்தீ பற்றித் "தீப்பிடிக்கத் தீப்பிடிக்க முத்தம் கொடுடா’’ என சினிமாவிலே பாடல்வரிகள் காமம் தீக்கொப்பானது என்பதை எடுத்துக்காட்டுகின்றது. எந்தத் தீயையும் அணைக்க  தீயணைப்புப் படை அவசியம். அந்தப் பணியை லோஸ் ஏஞ்சல் தீயணைப்புப் படையினர் செய்து கொண்டிருக்கின்றார்கள். 

    "தீயே நின்னைப் போல எமதறிவு கனலுக" என்று கூறிய பாரதியைப் போல அறிவுத் தீயை அனைவரும் வரவேற்போம்.  




     

     

     


    சனி, 12 ஏப்ரல், 2025

    வேதாத்திரி மகரிஷியின் பிரமஞான வகுப்புக்கு அறுகுணசீரமைப்பு உரை

     



    ஆழையாற்றில் அறிவுத் திருக்கோயில் ஆற்றி

    அகிலமெங்கும அமைதிக்காய் அறிவுரையாற்றி

    ஆழ்ந்த ஞானத்தில் அறிவியல் போதித்து

    அறிவே தெய்வமென்று அகத்தினில் காட்டி 

    அன்னையைத் தந்தையை ஆசானை ஆழ்மனதில் புதைத்து

    மனவளங்காக்க உடல் வளங்காக்க

    உயிர் வளங்காக்க உன்னத பயிற்சிகள் தந்து

    ஆழ்தவத்தின் மேன்மையை அறியச் செய்த 

    ஆசான் வேதாத்திரி மகரிஸியின் 

    பாதங்களைப் பணிகின்றேன்.


    என்னைச் செதுக்கிய மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் எடுத்துரைத்த அறுகுணசீரமைப்புப் பற்றி எனக்குள் தோன்றுகின்ற உணர்வுகளை உங்கள் முன் வைக்க இந்த மணித்துளிகள் என் கூடவே இருந்து எனக்கு அவர் துணைவர வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை எனக்கு வழங்கி என்னை பிரம்மஞானம் வரை கொண்டு வந்து என் ஆன்மீகச் சந்தேகங்களை அவ்வப்போது தீர்த்து வைக்கும் என்னுடைய குரு கோபால்ஜி அவர்களுக்கு முதல் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். என்னுடைய உரையைச செவிவழி நுழைத்து மனம் வழி நிறுத்தி ஆராய்ந்து இவற்றைச் செம்மைப்படுத்தி ஏற்றுக்கொள்ளக் கூடிய மனவளக்கலை அன்பர்கள் அனைவருக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். 


    வினைப்பதிவாம் சுமையை விடுத்துத் தூய்மை பெறவே

    நினைவாய் உடலெடுத்தேன் நிலம்மீது விழுந்த பின்னே

    எனை மறந்தேன் என்றன்  வினை மறந்தேன் இறைவா

    எனை மறந்தேன் ஆனால் நீ உள் நிறைந்திருந்து எனைமீட்டு 


    என்னும் வேதாத்திரி மகரிஸியின் வரிகளுடன் உரையைத் தொடங்குகின்றேன். 


    அறுகுணங்கள் எவை? அவை ஏற்படக் காரணங்கள் என்ன, அறுகுண சீரமைப்பு என்றால் என்ன?அவற்றை எப்படி சீரமைக்கலாம் என்பவற்றை நாம் இப்போது பார்க்கப் போகின்றோம். 


    எங்களிடம் இருக்கும் ஆறு குணங்களைச் சீரமைத்தால் நாம் மட்டுமல்ல நாம் வாழுகின்ற நாடும் சீராகும். ஏனென்றால், நாட்டைக் கெடுக்க யாரும் வானத்தில் இருந்து குதிக்கப் போவதில்லை. நாம் ஒவ்வொருவருமே ஒரு நாட்டின் பிரஜைகள். உன்னைத் திருத்து உலகம் திருந்தும் என்று சொல்வார்கள் இல்லையா? நீங்கள் பிறரைச் சுட்டிக்காட்டும் போது உங்களுடைய மற்றைய 4 விரல்களும் உங்களைத்தான் சுட்டிக்காட்டும் எனவே எமக்குள்ளே இருக்கின்ற குறைகளை நாம் நீக்கினால், துன்பம் என்பது எவருக்கும் ஏற்படாது. வாழ்க்கை இன்பமாகவே அனைவருக்கும் அமையும். ஆனால், எம்மை நாம் எப்படி சீரமைப்பது என்பதை மகரிஷி ஆராய்ந்து சொல்லுகின்றார். 


    எல்லா உயிர்களிடமும் இறைவனுடைய பேராற்றல்தான் இருக்கின்றது என்பதை இந்த மனவளக்கலையைக் கற்பதன் மூலம் அறிந்திருக்கின்றீர்கள். இதிலே எந்தவித மாற்றுக் கருத்துக்களும் இல்லை. காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாரதியார் கூடப் பாடியிருக்கின்றார். இவ்வாறு இறைவனுடைய ஆற்றலை மூலாதாரத்தில் கொண்ட மனிதர்களுக்கு எவ்வாறு குணங்களில் பேதங்களும் தீய சிந்தனைகளும் வருகின்றன என்பதைச் சிந்தித்துப் பார்த்தால் 

     

    இந்தப் பிரபஞ்சத்தில் பருப்பொருள் தோன்றி 1350 கோடி வருடங்கள் ஆகிவிட்டது. நாம் வாழுகின்ற பூமி தோன்றி 450 கோடி வருடங்களாகி விட்டன. 380 கோடி ஆண்டுகளுக்கு முன் உயிரினங்கள் தோன்றுகின்றன. அதன்பின் 60 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஹோமோ பேரினத்திற்கும் சிம்பன்சிகளுக்கும் பொதுவான மூதாதையர் தோன்றுகின்றார்கள். 25 இலட்சம் ஆண்டுகளில் இருந்து மனிதனின் வளர்ச்சி அறிவுப் புரட்சி, வேளாண்புரட்சி, அறிவியல் புரட்சி எனறு வளர்ந்து கொண்டு செல்கின்றது. எப்போதிலிருந்து மனிதன் தேடலில் இறங்கினானோ அன்றிலிருந்தே அவனிடம் போட்டிகளும் பொறாமைகளும் சேர்ந்தே வளரத் தொடங்கிவிட்டது. இறைதன்மை நீங்கி வாழ்க்கை வளர்ச்சியின் போது சந்தர்ப்பம் சூழ்நிலை காரணமாக வினைப்பதிவுகள் வந்து சேர்ந்துவிடுகின்றன. இது தவிர்க்க முடியாதது என்பது உண்மையே. 


    ஒரு மனிதன் தன்னோடு கொண்டு செல்வது அவன் செய்த வினைகள்தான். பல பிறவிகளில் தொடராக தனக்கும் தன் மூலம் பிறக்கின்ற குழந்தைகளுக்கும் வித்திலே கர்மம் பதிவாகி இருக்கின்றது. இது சஞ்சிதா கர்மம் என்று சொல்லப்படுகின்றது. அடுத்தது பிராரத்துவ கர்மம். இது நாங்கள் இப்பிறவியில் செய்த செயல்களின் விளைவு, அது மூளையிலே பதிந்து மீண்டும் மீண்டும் நினைவூட்டிச் செயலாக மாற்றும். அடுத்த ஆகாமிய கர்மம் என்பதுதான் புறமன இயக்கம் பதிவுகளாக புலன்களில் அமர்ந்து கொண்டு. ஆசை வயப்பட்டுச் செய்யப்படும் செயல்களின் விளைவு ஆகும். அதாவது எங்களுடைய கண், காது, மூக்கு, நாக்கு, மற்றும் தோல் ஆகிய உடல் உறுப்புக்களின் (ஞானேந்திரியங்கள்)மற்றும் வாக்கு, கைகள், கால்கள், உடற்கழிவுகளை வெளியே தள்ளும் உறுப்புகள் (குதம் மற்றும் சிறுநீர் குழாய்), மற்றும் பிறப்புறுப்புக்கள் ஆகிய ஐந்தும் (கர்மேந்திரியங்களில்) பதிவாகி திரும்பவும் உயிருக்கு ஊக்க மூட்டி மனம்,மொழி, செயல் மற்றும் ஆற்றல்களாக செயல்படுத்தும் விதியே ஆகாமிய கர்மம் ஆகும். இவையெல்லாம் சேர்ந்து ஒரு மனிதனுடைய குணநலன்கள் அமைகின்றன. 


    இவை எப்படி மனிதனில் ஆதிக்கம் செலுத்துகின்றது என்றால், அவனுடைய குணங்கள் மூலமே அவனை அடையாளப்படுத்துகின்றது. அந்த குணங்களிலே நாங்கள் சீரமைக்க வேண்டிய ஆறுகுணங்களைச் சீராக்கிவிட்டால் கர்மங்களைச் சீராக்கி விடலாம். 


    முதலிலே அந்த ஆறுகுணங்களும் யாவை என்பதைப் பார்ப்போம். ஆறு குணங்களும் ஆறுவகை மனோ நிலைகள். இவை பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு-தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்று சொல்லப்படுகின்றது. இந்தக் குணங்கள் என்னிடம் இருக்கின்றது என்பதை நான் எப்படிக் கண்டுபிடிப்பது. முதலில் உங்களை நீங்கள் ஆராய வேண்டும். அதற்காகவே எண்ணம் ஆராய்தல் என்பதை மகரஷி சொல்கின்றார். 


    எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் 

    திண்ணிய ராகப் பெறின் 


    எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள். எண்ணத்தை ஒட்டியே மனத்தின் தரம் அமையும். எனவே மனத்தின் தரத்தை ஒட்டித்தான் மனிதனின் தரமும் அமையும். ஆகவே எண்ணத்தின் தரத்தை உயர்த்தினால், மனிதனின் தரமும் உயரும். மனத்தை அடக்க நினைத்தால் அது அலையும். அதனை அறிய நினைத்தால் அது அடங்கும். அதனாலேயே மனத்தை ஆராய வேண்டும். எண்ணம் ஏற்படுவதற்குக் காரணம் என்ன என்று பார்க்க வேண்டும். தேவையால் வரும், பழக்கத்தால் வரும், சூழ்நிலையால் வரும், பிறர் மனத் தூண்டலால் வரும், கருவமைப்பால் வரும். எனவே இவ்வாறு வருகின்ற எண்ணங்களை ஆராய வேண்டும்.

     

    ஒவ்வொரு எண்ணத்தையும் எடுத்துக் கொண்டு தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, மனதிற்கோ நன்மை தருமா அல்லது தீமை தருமா என்று ஆராய வேண்டும். நன்மை தருமெனில் அதை நிறைவேற்றுவதற்கு வசதி, வாய்ப்பு இருக்கிறதா என்று ஆராய்ந்து திட்டமிட்டுச் செயல்படுத்த வேண்டும்.


    தீமை தருவதாக இருந்தால், 'இந்த எண்ணம் எழாமல் விழிப்போடு இருப்பேன்' என்று சங்கல்பம் செய்ய வேண்டும்.


    அந்தத் தீய எண்ணத்திற்குப் பதிலாக அந்த இடத்திற்குப் பொருந்தக் கூடிய நல்ல எண்ணத்தைப் பாவனை செய்து மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். தீய எண்ணம் வேண்டாம் என்ற சங்கல்பமும், அதற்குப் பதிலாக நாம் எண்ணும் நல்ல எண்ணமும் திரும்பத் திரும்ப அழுத்தம் பெறும்போது தீய எண்ணம் மறைந்து நல்ல எண்ணமே நமது குணமாக மாறிவிடும்.


    இவ்வாறுதான் எண்ணத்தை ஆராய்ந்து திருத்திக் கொள்ள வேண்டும். எனவே எண்ணத்தில் எழுகின்ற திருத்த வேண்டிய 6 குணங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். 


    1. பேராசை: 


    முதலாவது ஆசை தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. ஆசை இல்லாத மனிதன் உலகத்தில் இல்லை. மண் ஆசை, பொன் ஆசை, பெண் ஆசை என்று சொல்வார்கள். அது பேராசையாக மாறுகின்ற போதுதான் பிரச்சினையே ஆரம்பிக்கின்றது. பேராசை நிறைவேறாத போது சினம் வரும். மண்ணைப் பிடிக்க இப்போது என்னவெல்லாம் உலகநாடுகளில் நடப்பதை நீங்கள் அறியாமல் இல்லை. தேவைக்கேற்ப ஆசைப்பட வேண்டும். உதாரணமாக எனக்கு தியானம் செய்வது ஆசை. அதைப் பேராசையாக்கி நாள் முழுவதும் தியானத்தில் இருந்தேனென்றால், என்னுடைய குடும்பம் என்னவாவது இப்போது என்னுடைய பேராசை என்னை மேலும் பாவத்திற்கு உள்ளாக்கி விடும். 


    ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்

    ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்

    ஆசைப் படப்பட ஆய் வருந்த துன்பங்கள்

    ஆசை விட விட வானந்தம் ஆமே என்று திருமூலர் 


    சொல்லுகின்றார்.


    ஆசை அதிகமானால், பேராசை ஏற ;படும ;.  ஆசை காரணமாக அனைத்தும் வேண்டும் என்று நினைத்து பிறருக்குக் கொடுக்காமல் தானே அனுபவித்தல் கடும் பற்று. ஆசைப்படுவது கிடைக்காத போது சினம். ஆசை மூலம் பொருள் புகழ் செல்வாக்கு போன்றவற்றைப் பெற்று அதன் மூலம் மற்றவர்களை உயர்வு தாழ்வாக எண்ணுதல். கோபம் ஏற்படும் போது ஏற்படும் வெறுப்பு வஞ்சினம். எனவே ஆரம்பம் ஆசை அதிலிருந்து சங்கிலித் தொடர் போல ஒவ்வொரு மனநிலைகளும் மனிதனுக்கு ஏற்படும்.


    எனவே பேராசையை சீரமைக்க வேண்டும். ஆசை ஏற்படுவதற்குக் காரணம் என்ன? பேராசை எப்படி ஏற்படுகிறது. அழகான வைர மூக்குத்தி எனக்கு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த மூக்குத்தி அழகாக இருக்கிறதே அதைப் போலவே இன்னும் ஒன்று கொஞ்சம் சின்னக் கல் வைத்ததாக இருக்கிறது. அப்போது ஆசை அடுத்ததுக்கு மாறும். இப்படி ஒவ்வொன்றாக ஆசை பெருத்துக் கொண்டே போகும். இதனால், எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அந்தப் பணம் வாழுவதற்குப் போதாததாக இருப்பது நிச்சயம். இனால், தற்கொலை, குடும்பத்தில் பிரச்சினை, கணவனை எதிர்த்துப் பேச வேண்டிவரு என்று இழப்புகள் அதிகரிக்கும். மனிதன் உயிர் வாழ்தற்கு அத்தியாவசிய தேவையாக இருப்பது உணவு, உடை, உறையுள் இவை தவிர சமூகத்திலே வாழ்வதற்கு முக்கிய தேவையாக பணம் அவசியம். அந்தப் பணம் அளவுக்கு அதிகமாக இருந்தால், எதைச் செய்வதென்று அறியாமல் அந்தப் பணத்தின் மூலம் தகாத காரியங்களில் ஈடுபட வேண்டி வரும். பணம் பெருகப் பெருக மேலும் மேலும் பணத்தைச் சேர்க்க வேண்டும் என்ற பேராசை தோன்றும். இது தீய பழக்கவழக்கங்களுக்கு இட்டுச்; செல்லும். தகாத வழிகளில் எல்லாம் பணத்தைச் சேர்க்க மனம் விரும்பும். தேவைக்கு ஒரு வாகனம் இருக்கலாம். அந்த வாகனம் எம்முடைய வருமானத்துக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். ஆனால், கடன்பட்டு ரெஸ்லர் வாங்கி. அந்தக் கடனை அடைப்பதற்காக மேலும் மேலும் கடன்பட்டு குடும்பத்தில் பிரச்சினை வந்து இறுதியில் மனஅழுத்தத்தில் விழுவதுதான் முடிவாக இருக்கும். இதைவிட ஒரு வீடு வாழ்வதற்குப் போதுமானது. இல்லை வசதி இருக்கிறது என்று இன்னும் பல வீடுகள் வாங்குவது எதற்காக? இந்த பூமியே எங்களுக்குச்சொந்தமில்லை. என்றோ ஒருநாள் பூமியை விட்டுப் போகத்தான் போகின்றோம். இது நிச்சயம். எதற்காக தேவைக்கு அதிகமாக சொந்த வீடு என்று சொல்லி பெருமை பேசுகின்றோம். மாவீரன் அலெக்ஸாண்டர் தன்னுடைய மரண ஊர்வலத்தின் போது தன்னுடைய இரண்டு கைகளும் வெளியே தெரியும் வண்ணம் கொண்டு செல்லும்படிக் கூறினாராம். காரணம் எவ்வளவோ நாட்டைப் பிடித்துச்செல்வங்களைச் சேர்த்த அலெக்ஸாண்டர் இறுதியில் வெறுங்கையுடன்தான் போகின்றார் என்று மக்கள் அறிய வேண்டும் என்றாராம். தேவைக்கு அதிகமாக ஆசைப்பட்டு சேர்க்கின்ற எதுவுமே இறுதியில் எமக்குச் சொந்தமாவதில்லை

    அதனால், ஆசை எழுகின்ற போதே இந்த ஆசையால் நல்லதா? தீயதா ஏற்படும் என்று முதலிலேயே சிந்தித்துப் பார்க்க வேண்டும். சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும். ஆசை அசியமா? அவசியம் இல்லையா? ஆசையை நிறைவேற்ற தேவையான உடல் மனம், பொருளாதார வலிமை உண்டா? இதனால் ஏற்படும் பின்விளைவுகள் நன்மையா? தீமையா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். போதும் என்ற மனமே பொன் செய்யும். எனவே பேராசையை நீக்குவதற்கு நிறை மனமே சிறந்தது. எனறு மகரிஷி சொல ;லுகிறார ;. 


    2. கடும்பற்று: 

    உறவிலேயோ பொருளிலேயோ அளவுகடந்த பற்று வைத்தால் அதுதான் கடும்பற்று. ஒரு நாட்டில் கடும்பற்று வைத்த ஹிட்லரால் ஜெர்மனிக்கு நடந்த கதை எல்லோருக்கும் தெரிந்ததுதானே. 60 இலட்சம் யூதர்களைக் கொன்று குவித்தார். இறுதியில் வாழ்ந்தாரா? அவருடைய இராணுவ வீரர்கள் இரஷ்ய நாட்டுக் காலநிலைக்குப் பழக்கப்படவில்லை. தற்கொலை செய்து கொண்டார். கடும்பற்று அழிவைத்தான் கொண்டுவரும். இவ்வாறான கடும்பற்றை நீக்க சீரமைக்க என்ன செய்ய வேண்டும். அதனை ஈகையாக மாற்ற வேண்டும் என்று மகரிஷி சொல்லுகின்றார். இல்லாதவர்களுக்குக் கொடுங்கள் என்கின்றார். கடும்பற்றை விடுங்கள் என்கிறார். தாய் தன்னுடைய மகன்மேல் அளவுகடந்த பற்று  வைத்தால் மருமகள் நிலைமையை நினைத்துப் பாருங்கள். என்னுடைய மகன். நான்தான் சொந்தம் கொண்டாடுவேன் என்று சொல்ல முடியுமா? இந்தப் பற்றாலே ஜெர்மனியிலே எத்தனையோ குடும்பங்கள் விவாகரத்துச் செய்திருக்கின்றன. என்ன செய்ய வேண்டும் கடும்பற்றை விட்டுவிட வேண்டும். தன்னுடைய மகனை மருமகளுக்குத் தாரைவார்த்துக் கொடுக்க வேண்டும். தன்னுடைய பணி முடிந்தது. அதைச் செய்வதற்கு வேறு ஒருத்தி வந்துவிட்டாள் என்ற எண்ணம் ஏற்பட வேண்டும். அதேபோல் மகனும் தாயில் கொண்டிருக்கின்ற கடும்பற்றைத் தன்னுடைய மனைவிக்கு ஈகை செய்ய வேண்டும். எனவே கடும்பற்றை ஈகையாகவே சீரமைக்க வேண்டும். இந்தப் பற்று இறை உணர்வுக்குத் தடையாகவே அமையும். தொடர்பு கொண்டுள்ள பொருட்களிடம் உணர்ச்சிவயமான பற்றுக் கூடாது.

    3. சினம்:


    கோபம் என்பது ஒரு தற்கொலை. கோபக்கனல் என்பார்கள். கோபப்படும்போது இரத்த அழுத்தம் கூடுகிறது. உடல் வெப்பமாகிறது. 


    'தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

    தன்னையே கொல்லுஞ் சினம்.'


    என்று வள்ளுவர கூறுகின்றார்.

    துன்பம் வராமல் தன்னைத்தானே காக்கவேண்டுமாயின், சினம் வராமல் காத்துக் கொள்க. சினத்தை அடக்காவிடில் அது தன்னையே அழித்துவிடும். அதற்கு என்ன செய்ய வேண்டும். 


    தன்னைத்தான் காதலனாயின் எனைத்தொன்றும் 

    துன்னற்க தீவினையின் பால்


    வேதாத்திரி மகரிஷி அவர்கள், சினத்தைப்பற்றி கூறும்பொழுது, சினம் எழுந்தால் உடலையும், மனத்தையும் கெடுக்கிறது. அது பிறர் உள்ளத்தையும் புண்படுத்துகிறது. தன்னையும் கெடுத்துப் பிறரையும் கெடுத்து, தற்காலத்திலும், துன்பம் உண்டாக்கிப் பின்னரும் துன்பத்தை நீட்டிக்கச் செய்யும் ஓர் உணர்ச்சி வயப்பட்ட பகை உணர்வு சினமாகும் என்கிறார்.


    'சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்

    ஏமாப் புணையைச் சுடும்.' - குறள்.

    சினம் என்று சொல்லப்படும் நெருப்பு ஒருவனை அழிப்பதோடு, அவனுக்குத் தெப்பமாக உதவும் உறவினரையும் அழித்துவிடும்.


    வேதாத்திரி மகரிஷி சினத்தினால் வரும் கேட்டினைப்பற்றி சொல்லும்போது,

    'பிளவுசெய் சினம், குருதி அழுத்தம், மார் நோய்,

    பித்து, புண், கண் நோய்கள், தாது மூளை

    வளமழிவு செய்யும்.' என்று ஞானக்களஞ்சியம் நூலிலே சொல்கிறார். 


    சினம் கொள்ளல் தற்கொலைக்கு ஒப்பாகும் என்றால் அது மிகையாகாது. சினம் கொள்ளல் ஒரு பழக்கமாகவேகூட மாறிப்போகும். முதலில் ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு சினம் வந்தாலும், பிறகு பழக்கத்தின் விளைவாக காரணம் இல்லாமலேகூடச் சினம் வரும். சினம் தணிந்தபின் சினத்தின் விளைவை எண்ணி வருந்தினாலும், பிறகு அந்தச் சினம் வரும்போது அதனின்றும் தப்ப முடியாது. சினம் வரும்போது முகம் விகாரமடைகிறது. கோபம் வரும்போது முக அழகு கெடுவது மட்டுமன்று, உடல் நடுங்கும், கண்கள் சிவக்கும், நாக்குழறும், மனம் தடுமாறும், உயிராற்றல் அதிகமாக வெளியேறுகிறது, நரம்புகள் படபடப்பு ஏற்பட்டு பலவீனம் அடைகின்றன, இன்னது செய்கிறோம், இன்னது பேசுகிறோம் என்று தெரியாது. சினம் தணிந்த பிறகும்கூட முன் நடந்ததை எண்ணிப் பார்க்க வராது.


    எந்த இடத்தில் சினம் வந்தால் அது பலிக்குமோ அந்த இடத்தில் அதைக் காப்பவனே சினத்தை அடக்கியவன். பலிக்காத இடத்தில் அடக்கினால் என்ன? அடக்காவிடில்தான் என்ன? ஒரு கணவன் இன்ரவியூக்குப் போவதற்கு ஆயத்தமாகின்றான். அழகான வெள்ளை சேர்ட் அணிந்திருக்கின்றான். அவனுடைய மனைவி அவசரத்தில் வருகின்ற போது கையில் கொண்டு வந்த தேநீரை அவனில் ஊற்றி விடுகின்றாள். சேர்ட் தேநீரால் நனைந்து விட்டது. இப்போது என்ன நடக்கும். அந்த நேரத்தில் அவள் வேண்டுமென்று செய்யவில்லை. தெரியாமல் நடந்துவிட்டது என்று பொறுமை காப்பவன்தான் சினத்தை அடக்குபவன். அதைவிடுத்து அவள் வேண்டுமென்றே செய்தவள் என்பது போல தாம் தூம் என்று குதித்து தன்னுடைய இன்ரவியூவையே நாசம் செய்பவன் மனைவி அல்ல. அந்த சினம் கொள்ளும் கணவனே. 


    தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி சினமும் அச்சமும் வாழ்வை சீர்குலைக்கும் என்பதனை

    ஒரு கவியில் இயம்புகின்றார்.


    சினம் அச்சம் ஒழிய சிந்தனையை ஏற்றி

    சிவன் சீவன் நிலைகளை நன்குணர வேண்டும்.' - ஞானக்களஞ்சியம் 1430 


    சினம் கவலை எனும் இரண்டும் மனிதர் வாழ்வைச்

    சீரழிக்கும் நச்சாகும் உணர்ந்து கொள்வீர்.

    மன வலிவும் உடல் வலிவும் முயற்சி மற்றும்

    மதி நுட்பம் ஆராய்ச்சி குலைந்து போகும். 

    தினம் சிறிது நேரம் இதற்கென ஒதுக்கி 

    சிந்தித்துச் சீர் திருத்த இவ்விரண்டு

    இனமும் இனி என்னிடத்து எழாமல் காப்பேன்.

    என்று பல முறை கூறு வெற்றிகிட்டும்.'  என்கிறார். 


    கோபத்தினால் மன அலைச்சுழல் இயக்க வேகம் வினாடிக்கு 14 சுற்றுக்கு மேல் 25 சுற்று, 30 சுற்று என்று உயரும்போது உடலிலிருந்து உயிராற்றல் அதிகமாக வெளியேறும். இவ்வாறு மன அலைச்சுழல் வேகம் வினாடிக்கு 40 சுற்று என்ற அளவினை நெருங்கும்போதுஉயிரின் அபரிமிதமான வெளியேற்றத்தினால், உயிரின் ஆற்றலின் அளவும் செறிவும் குறைந்து போக மரணம் சம்பவிக்கிறது என்கிறார் வேதாத்திரி மகரிஷி.


    தனக்கும் பிறர்க்கும் தீங்கு தருகின்ற இந்தச் சினத்தை ஒழித்தேயாக வேண்டுமென்று முடிவுகட்ட வேண்டும். அந்த முடிவைப் பலமுறை எண்ணி அழுத்தமாக மனத்திலே பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும், சினம் கொண்டவரிடையே பொறுமை காத்தல் வேண்டும். நம்மிடம் சினம்கொள்ளக் காரணமாக இருந்தவரிடம் இன்னும் ஒருபடி மேலே சென்று அவரே நாணும்படி மன்னித்து நன்மையே செய்துவிட வேண்டும்.


    'சினத்தினால் திருத்தம் வரவே வராது.

    சினத்தினால் ஏதாவது வரும் என்றால்

    அங்கு வருத்தம் தான் வரும்'..


    சினத்தைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்.


    ஓய்வான ஒரு நாளில் அமைதியான நேரத்தை தேர்ந்து எடுத்து அதில் கால்மணி நேரம் தவமியற்ற வேண்டும். யார் மீது சினம் வருகிறதென்று ஒரு பட்டியல் தயாரிக்க வேண்டும். யார்யார் மீது அடிக்கடி கோபம் வருகிறதோ அவர்களை வரிசைப்படுத்தி எழுதிக்கொண்டு பார்ப்போமேயானால் பட்டியலில் முதலில் வரும் பெயர்கள் நெருங்கிய தொடர்புடையவர்களாக இருப்பார்கள். அதாவது வாழ்க்கைத் துணை, பிள்ளைகள், பெற்றோர், அலுவலக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், உடன் பிறந்தவர்கள், நண்பர்கள் போன்றோர் அந்த பட்டியலில் அடங்கும். பிறகு பட்டியலில் உள்ள ஒவ்வொருவராக எடுத்துக்கொண்டு அவருக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன? சினம் எழக் காரணம் என்ன? சினம் எழுதலில் எனது பங்கு என்ன? ஏதேனும் முன் அனுபவம் உள்ளதா? என ஆராய்ந்து 'இனி இவரிடம் சினம் கொள்ள மாட்டேன்' என்று சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும். மேலும் அவரை வாழ்க வளமுடன் என்று வாழ்த்த வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு நாளும் சினம் கொள்ளும் ஒவ்வொரு நபராக எடுத்துக்கொண்டு ஆராய்ந்து சங்கல்பம் ஏற்று வாழ்த்தும்போது சினத்தை எளிதாக வெல்ல முடியும் என தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி கொடுத்துள்ளார்கள். சினத்தைப் பொறுமையாக மாற்ற வேண்டும். 


    4. உயர்வு தாழ்வு மனப்பாங்கு: 


    ஆசை, பொருள், புகழ், செல்வாக்கு இவற்றிலே மனத்தைச்செலுத்தி அதன் மூலம் மற்றவர்களை உயர்வாகவோ, தாழ்வாகவோ எண்ணுகின்ற மனப்பாங்கு மனிதர்களின் மனத்திலே அமைதியற்ற நிலையை உருவாக்கும். பெருக்கத்து வேண்டும் பணிவு என்பார்கள். நாம் எந்த அளவுக்கு கல்வி செல்வத்தால் உயருகின்றோமோ அந்த அளவுக்கு பணிவு எமக்கு ஏற்பட வேண்டும். கற்ற கல்வியும் தேடிய செல்வமும் எமக்கு ஒரு பொறுப்புணர்ச்சியை ஏற்படுத்தி விடுவதுடன், பக்குவத்தையும் கொண்டு வந்துவிட வேண்டும். அதன் மூலம் உயர்வு தாழ்வற்ற நிலையை எமது மனம் கடைப்பிடிக்கும். மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே என்று கணியன் பூங்குன்றனார் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று தொடங்கும் பாடலிலே கூறுகின்றார். பெரியோரை நாம் வியக்கும் போது அவர்களுடன் உறவினர்கள் போலப் பழக முடியாது.  எல்லோரும் உறவினர்கள் என்று எண்ணுகின்ற போது நெருங்கிப் பழகக் கூடியதாக இருக்கும். கணவன் மனைவியிடையே ஏற்றத்தாழ்வு பார்க்கின்ற போது போட்டி மனப்பான்மை வந்துவிடும். நட்பு  நிலைக்காது. ஒருவன் என்னை விட அவன் உயர்த்தி என்று பாரத்தால் அவனோடு போட்டி போடச் சொல்லும் மனம். பொறாமைப்பட வைக்கும். பொறுக்க முடியாத தன்மைதான் பொறாமை என்னைவிடத் தாழ்ந்தவன் என்று பார்க்கும் போது அடிமைப்படுத்த மனம் துணியும். பொறாமை என்பது தீயைப் போன்றது. மனத்தைக் கருக்கி விடும். என்னை விட அவன் உயர்வாக இருக்கின்றானே என்று நினைக்கின்ற போது வயிறு பற்றி எரியும். மனம் நிம்மதியடையாது. பொறாமை நல்லதை எண்ண மனம் விடாது. எனவே ஏற்றத்தாழ்வை சீரமைக்க வேண்டும் என்றால் மனத்திலே  நேர்நிறையுணர்வை ஏற்படுத்த வேண்டும்


    5. வஞ்சினம்: 


    கோபம் அல்லது சினம் வரும்போது ஏற்படும் வெறுப்பே வஞ்சினம். இப்போது திரைப்படங்களில் காட்டப்படுவது வஞ்சினம்தான். வச்சிச் செய்தல் என்பார்கள். மனைவியின் தம்பி ஒரு துரோகம் செய்து விடுகின்றான். அன்றிலிருந்து அவனை அழிப்பதற்கு துரியோதனன் திரௌபதி மேல் வச்சிச் செய்த வஞ்சினம்தானே இந்த மகாபாரத யுத்தத்தையே ஏற்படுத்தியது. துரியோதனன் விழுந்த போது அவள் சிரித்தாளாம். அதனால் அவளை மானபங்கப்படுத்த நினைத்தான். துகிலுரிந்தான். எத்தனை நடந்தது. பெரும் யுத்தமே நடந்து உயிர்கள் அழிந்தது. இதுதான் வஞ்சினத்தால் வருகின்ற இழப்பு.  ஏதோ காரணத்தால் ஒருவரில் சினம் வருகின்றது. செய்யக் கூடாத ஒரு செயலை அவர் செய்து விட்டார். அவரைப் பழிவாங்கியே தீர வேண்டும் என்று காத்திருந்து பழி தீர்க்க நினைத்தலே வஞ்சினம். குடும்பங்களிலே இந்த நிலைமையைப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. வருடங்கணக்கிலே இந்த பகை வளர்ந்து போகின்ற நிலையை அறியக்கூடியதாக இருக்கின்றது. அறியாமையில் செய்து விட்டான், என்று மன்னிக்கின்ற பக்குவமே அந்த வஞ்சினத்துக்கான சீரமைப்பாக இருக்கும். சினத்தை மன்னிப்பாக மாற்றலாம். 



    6. முறையற்ற பால் கவர்ச்சி: 

    முறையற்ற எண்ணத்தோடு மாறுபாலை நாடி வந்தால், அதுவே முறையற்ற பால் கவர்ச்சி. பால் கவர்ச்சி மனிதனுக்கு அவசியம். அபப்டித்தான் இயற்கை அமைந்திருக்கின்றது. சந்ததியை வளர்க்க அது அவசியம் தேவை. எமது நெருங்கிய உறவினர்களான சிம்பன்சிகள் மற்றும் பொனபோக்களிடம் தம்முடைய சநததியை வளர்க்க பல ஆண்களுடன் தொடர்பை வைத்திருக்கும். அதனால், அநதக் குழந்தைகளுக்குத் தந்தை யார் என்று தாய் சிம்பன்சிக்கே தெரியாது. இதுபோலவே நம்முடைய மூதாதையார் குழந்தைகளைப் பெற்று சந்ததி விருத்தி செய்தார்கள். இன்றைய மனிதக் கலாச்சாரங்கள் பலவற்றிலும் கூட்டுத் தந்தைமை முறை கடைபிடிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 'பாரி' இந்தியர்களிடையே இப்பழக்கம் நிலவுகிறது. ஒரு குழந்தை தனியொரு மனிதனின் விந்தணுவிலிருந்து பிறக்கவில்லை, மாறாக ஒரு பெண்ணின் கருப்பையில் சேகரிக்கப்பட்டுள்ள பல விந்தணுக்களிலிருந்து பிறக்கிறது என்று அப்படிப்பட்டச் சமுதாயங்கள் நம்புகின்றன. ஒரு நல்ல தாய், பல்வேறு ஆண்களுடன் உடலுறவு கொள்ளுவதில் தீவிரமாக இருப்பாள். குறிப்பாக, அவள் கருவுற்றிருக்கும்போது அவள் அதில் அதிகத் தீவிரமாக இருப்பாள். ஏனெனில், தன்னுடைய குழந்தை வெறுமனே ஒரு சிறந்த வேட்டையாடியின் பண்புநலன்களை மட்டுமல்லாமல், கதை சொல்லுவதில் திறமை பெற்ற ஒருவன், மிக வலிமையான மாவீரன் ஒருவன், மிகுந்த கரிசனம் கொண்ட ஒரு காதலன் ஆகியோரின் பண்புநலன்களையும் சுவீகரிக்க வேண்டும் என்று அவள் விரும்புவாள். அதோடு, இத்தனைப் பேரும் தன் குழந்தையை வளர்ப்பதில் பங்கு கொள்ள வேண்டும் என்றும் அவள் விரும்புகிறாள். கேட்பதற்கு இது அபத்தமானதாக இருந்தால், நவீனக் கருவியல் ஆய்வுகள் தோற்றுவிக்கப்படுவதற்கு முன்புவரை, குழந்தைகள் எப்போதும் ஒரே ஒரு தந்தையின் மூலமாக மட்டுமே பெற்றெடுக்கப்பட்டதற்கான வலிமையான சான்றுகள் எதுவும் மக்களிடம் இருக்கவில்லை. ஆனால், இதன்மூம் கிடைக்கின்ற தாய் சேய் நோய்கள், தாய், சிசு மரணங்கள், குடும்பப் பிரச்சினைகள் இவற்றை  கவனத்தில் கொண்டு ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாசாரம் ஏற்படுத்தப்பட்டது. முறையற்ற பாலுணர்வு இவ்வாறானதாக மட்டுமன்றி வன்புறவாக இக்காலத்திலே பல்கிப் பெருகி இருக்கின்றது. பெண்ணுக்கோ ஆணுக்கோ பிடிக்காமல் வன்புணர்வில் ஈடுபடுதல் இதனை பத்திரிகைகின் மூலமாக நீங்கள் அறிந்து வருகின்றீர்கள். 


    கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுமல்லால் ஆணுக்கும் பொது என்று 


    கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அஃது  பொதுவில் வைப்போம். என்று பாரதி பாடினார். 


    கணவன் மனைவி இருவரும் கற்பு நெறி காத்து ஒழுக்கத்தோடு இருக்கும் போது அந்த உறவு நிறைவானதாகவும் புனிதமாகவும் இருக்கும். சலனமற்ற உள்ளம் பெற்றிருப்பார்கள். இருவரும் பிணக்கு ஏற்படாமல் மகிழ்ச்சியாக இருப்பார்கள். 'கருவிலே திருவுடையார்' என்பதைப் போல அறிவும் ஆற்றலும் ஒரு சேர அமைந்த தெய்வீக குழந்தைகளைப் பெறலாம். அப்படியில்லாமல் இருவரில் ஒருவர் தவறு செய்தாலும் வாழ்க்கைத்துணையையும்இ குழந்தை பிறப்பிலேயும் பாதிப்பை ஏற்படுத்தும். கருத்தரித்தல் என்பது இருவரையும் பொறுத்தே அமைகின்றது. ஆகவே இளமைப் பருவம் என்பது வாழ்க்கையில் முக்கிய திருப்பத்தை உண்டாக்கக் கூடிய பருவம். அந்தப் பருவத்தில் தான் ஒருவருடைய வளர்ச்சியும் முன்னேற்றமும் அடங்கியுள்ளது. என மகரிஷி எடுத்துரைக்கின்றார். அதாவது முறையற்ற பாலுணர்வுக்கு தீர்வு கற்புநெறியே. 



    இந்த ஆறுவகை மனித மனோ நிலைகள் எழுச்சி பெறும்போது உடல்நோய் கூட ஏற்படும் என்று மகரிஷி கூறுகின்றார்


    உளவியலை ஆராய்ந்தால் அறு குணங்கள்

    உடலில் நோய்பல விளைத்தல் அறிந்து கொள்வோம்.

    அளவிலா விருப்பு கடும்பற்றிரண்டும்

    அல்லல் தரும் குன்ம நோய் உண்டுபண்ணும்;

    பிளவு செய் சினம் குருதிஅழுத்தம், மார்நோய்

    பித்து, புண், கண்நோய்கள், தாது, மூளை

    வளமழிவு செய்யும்; மிகை மோகம் குட்ட

    வகை கண்நோய்கள், நீரிழிவு செய்யும்; வஞ்சம்

    உள அமைதி, உடல் வலுவு போக்கி மார்நோய்

    உண்டாக்கும், தொடர்புநோய் பலவும் காட்டும்.'


    என்கிறார். அதனால், அவற்றைச் சீரமைக்க வேண்டும் என்றால், 


    விருப்பம் சினம் வஞ்சம் மதம் பால்கவர்ச்சி

    விளைவறியா கடும்பற்று என்ற ஆறும், 

    உருக் குலைந்து நிறைந்த மனம், சகிப்புத்தன்மை, 

    உளமார்ந்த மன்னிப்பு, மெய் உணர்வு, 

    கருத்துடைய கற்பு நெறி, ஈகை என்ற

    களங்கமிலா நற்குணங்க ளாக மாற்றும், 

    பொருத்தமுள உளப்பயிற்சி முறை பயின்று,

    புகழ் இன்பம் அமைதி பெற வாரீர்! வாரீர்!


    இவ்வாறு 6 குணங்களையும் சீர்ப்படுத்தவில்லையானால் 5 பழிச்செயல்கள் உண்டாகும். பொய், கொலை, களவு, சூது, விபச்சாரம் ஆகிய பஞ்சமாபாதங்கள் உருவாகும். இதனால், அவனுடைய வாழ்க்கை தனக்கும் பிறருக்கும் துன்பத்தையே விளைவிக்கும். அறுகுணங்களை சீரமைத்து வாழ்ந்தால், வாழ்க்கையில் நீண்டகால வினைப்பதிவுகள் நீங்கும், இறையுணர்வும் தவம் செய்வதில் ஒரு விருப்பும் ஏற்படும். தூய்மை அடைவான். தனக்கும் பிறர்க்கும், தற்காலத்திலும், பிற்காலத்திலும், அறிவிக்கும், உடல் உணர்ச்சிக்கும் வருத்தம் எழாத அளவிலும், முறையிலும் செயலாற்றி இன்பமாக வாழலாம்.


    எனவே மனதிலே பொருள்களில் பற்று, மக்களில் பாசம் உணர்ச்சிவசப்பட்ட எண்ணங்கள் செயல்கள் இவையெல்லாம் முன்னிலையில் இருக்கும். இந்தக் கருமைய ஆற்றலில் ஒரு பகுதியை மேலே அமைந்திருக்கின்ற ஆக்கினை துரியம் ஆகிய மையங்களுக்கு கொண்டு வந்தால், மனிதனிடம் இறையுணர்வும் உயிர் விளக்கமும் அறநெறி நின்று வாழும் தன்மையும் உண்டாகும். அதனால் இந்த அகத்தவ முறையைத் திறமையுள்ள ஒரு குருவின் மூலம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு இளம் வயதிலே கிடைத்தது என்று மகரிசி சொல்வது போல எனக்கு கொரொனா காலப்பகுதியில் கிடைத்தது. குரு கோபால்ஜி அவர்கள் அற்புதமாக ஆன்மீகக் கல்வியைப் போதித்தார். 


    அந்த பாக்கியம் உங்களுக்கும் கிடைத்திருக்கின்றது. அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய ஆறு குணங்களை சீர்ப்படுத்தி வாழுங்கள் என்று கூறி சந்தர்ப்பத்துக்கு நன்றி பாராட்டி விடைபெறுகின்றேன். வாழ்க வளமுடன் 



    சனி, 8 மார்ச், 2025

    மகளிர் தின வாழ்த்து - 2025




     

    பின்பற்றுபவர்கள்

    https://www.youtube.com/channel/UCk40-xH1isQA-OfqsBx4aKA?view_as=subscriber

    எனது நூல்

    ebook

    ebook
    மின்னூல்

    Versatile Blogger Award

    Versatile Blogger Award

    Fabulous Blog Ribbon Award

    Fabulous Blog  Ribbon Award

    திரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு

    திரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு

    தமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு

    தமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான    முதல்பரிசு

    ஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்

    ஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை  கவிதை போட்டிக்கான இரண்டு  முதல்பரிசுகள்
    Das Wetter in Solingen