• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வியாழன், 7 மார்ச், 2019

    பெண் உளவியலும் வெள்ளிவீதியார் பாடல்களும்



    பெண்களின் உளவியல் பற்றிப் பேசும் உரிமை பெண்களுக்கே உண்டு. அவள் உள் உணர்வுகளும், தெளிவடையாது மனதுக்குள் தோன்றுகின்ற தவிப்புக்களும், வெளியே சொல்ல முடியாது சமூகத்தின் கண்களுக்கு திரையிடத் துடிக்கும் துடிப்புக்களும், அவளை அவளாக வாழமுடியாது செய்து விடுகின்றன. பெண் என்பவள் தன்னுடைய மனதை மையமாக வைத்து ஆராய வேண்டியது அவசியமாகின்றது. மொத்தத்தில் தம்முடைய மனதைக் கொன்றுவிட்டே பல பெண்கள் தம்முடைய வாழ்க்கைக்குப் பாதை போட்டிருக்கின்றார்கள்.

                       மூச்சுவிடத் தெரியாது ஒரு குழந்தை பிறக்கும்போது டாக்டர் பிறந்த குழந்தையை தலைகீழாகப் பிடித்து முதுகிலே தட்டி மூச்சுவிடச் செய்கின்ற போது முதல் முறையாக மூச்சுவிட்டாலேயே உலகத்தில் வாழலாம் என்று அக்குழந்தை ஆழ்மனதிலே பதிக்கின்றபோது, அக் குழந்தை நினைக்காமலே நித்திரையில் கூட மூச்சுவிடுகின்ற தன்மையைப் பெறுகின்றது. இது போன்றுதான் சிறுவயதிலே ஆழ்மனதிலே பதியப்படுகின்ற பதிவுகள் மனிதனை முழுவதுமாக ஆட்டிப்படைக்கின்றன. ஆண்களின் உளவியலின் படி தமக்கு ஏற்படுகின்ற கருப்பை இழப்புப் பொறாமை, மார்பக இழப்புப் பொறாமை, தாய்மை இழப்புப் பொறாமை, போன்ற பொறாமைகளால் பெண்களை அடக்கி வைக்க முற்படுகின்றனர். குழந்தைகளைப் பெறுதல், அதற்குத் தம்மைத் தயார்படுத்தல், குழந்தைக்குப் பாலூட்டுதல் போன்ற முயற்சிகளைத் தம்மால் செய்ய முடியாத இயலாமையின் வெளிப்பாடாகப் பெண்களை அடக்கி ஆள முற்படுகின்றனர் என்பது உளவியல் உண்மையாகப்படுகின்றது.

                 உயிர்ப்படைப்பாக்கங்களின் முயற்சியில் ஈடுபடும் பெண்களுக்கு இலக்கியப்படைப்பாக்க முயற்சிக்கு வழியில்லாமல் போகிறது. ஆயினும் அவற்றையும் மீறி எழுதுகின்ற பெண்கள் தம்முடைய பெண்ணியல் சார்ந்த பிரச்சினைகளை எழுதுவதற்குத் தயங்குகின்றார்கள் என்றே சொல்ல வேண்டும். பெண் சுதந்திரம் என்ற போர்வையில் தம்முடைய எழுத்துக்கு முலாம் பூசுகின்றார்கள்.

    பொதுவாக சங்ககாலத்துப் பெண்புலவர்களில் 32 பெண்பாற்புலவர்களே சங்கப் பாடல்களில் எமக்கு இனங்காட்டப்படுகின்றார்கள். அவர்களில் உயிர்களைப் படைக்க முடியாத அதிகமான பெண்களே அதிகமான பாடல்கள் புனைந்திருப்பது அறியக் கூடியதாக உள்ளது. அவர்கள் காரைக்கால் அம்மையார், ஆண்டாள், ஒளவையார், நக்கண்ணையார், ஆதிமந்தியார், வெள்ளிவீதியார் போன்றோர் ஆவார்கள். இவர்களில் அகப்பாடல்களை மட்டுமே பாடிய வெள்ளிவீதியார் பாடல்கள் பெண் உளவியல் சம்பந்தமாக சிந்தனையைத் தூண்டுவனவாகக் காணப்படுகின்றன. இவர் பாடல்களில் வெண்மை என்னும் சொல் அதிகமாக இடம்பெற்றதனால் வெள்ளிவீதியார் என்னும் பெயர் இவருக்கு வரக் காரணமாக இருந்தாலும் ஆடைமலறயல  என்று சொல்லப்படுகின்ற பால்வீதியைக் குறிப்பதுவாகவும் எடுத்துக்கொள்ளலாம். நாம் காணும் விஞ்ஞான உலகத்தை சங்ககாலத்திலேயே கண்டுதேறிய மக்கள் இவருக்கு இப்பெயரைச் சூட்டியிருக்கலாம். இதேவேளை வெள்ளி என்பது வானத்திலிருக்கின்றது. வீதி என்பது நிலத்தில் இருக்கின்றது. இவை இரண்டும் சேராதது போல் இவருடைய காதல் நிறைவேறாத காதலால் இவ்வாறு அழைக்கப்பட்டார் என்று கூறுவாரும் உண்டு. இவர் பாடல்கள் கற்புநிலை அற்று காமம் நிறைந்த பாடல்களாகவே காணப்படுகின்றன.

               இப்பாடல்களில் வெள்ளிவீதியார் பாடல்கள் நிறைவேறாக் காதலினால், தன்னை விட்டுப்பிரிந்து சென்று எவ்வித தொடர்பும் இல்லாத தன் தலைவனை நினைத்துப் பாடும் அகத்திணைக்குரிய பாடல்களே முழுவதுமாக இருக்கின்றன. காதல் தோல்வியைச் சந்தித்த இவர் பாடல்கள் பெண் உளவியலின்படி சிந்திக்கத்தக்கனவாக இருக்கின்றன என்பதை முனைவர் மு.பழனியப்பன் சுட்டிக்காட்டியுள்ளார். வெள்ளிவீதியாரைத் தன் காதலன் ஏன் விட்டுப்பிரிந்தான் என்பது கேள்விக்குறி. வெள்ளிவீதியாரிடம் இருக்கும் உயிர்ப்படைப்பாக்கத் திறன், இலக்கியப்படைப்பாக்க இயல்பு தலைவனுக்கு அச்சத்தையும் இவள் எனக்கு அடங்கி நடப்பாளா என்னும் பயத்தையும் ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்று சான்றுகள் காட்டி விளக்குகின்றார். இது இன்றும் இயல்பாகவே ஒரு ஆணிடம் உள்ள அச்ச உணர்வாகக் காணப்படுகின்றது.

       வெள்ளிவீதியார் பாடல்களில் பெண் உளவியல் எவ்வாறு எடுத்துக்காட்டப்படுகின்றது என்று நோக்கினால்,
     

    "கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
     நல்ஆன் தீம்பால் நிலத்து உக்காஆங்கு
     எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது
     பசலை உணீஇயர் வேண்டும்
     திதலை அல்குல் மாமைக் கவினே"

    இனிய சுவையுடைய பசுவின் பாலானது அதனுடைய கன்றாலும் அருகப்படாமல் பாத்திரத்திலும் கறக்கப்படாமல் நிலத்திலே சிந்துவதுபோல எனக்கும் பயனின்றி என் தலைவனுக்கும் உதவாமல் என் அழகு பசலை நோய் உண்ணும் நிலையைப் பெற்றுவிட்டதே என்று பாடுகின்றாள். பசலை நோய் எனப்படுவது தலைவனை பிரிந்து வாடும் தலைவிக்கு உடல் மெலிந்து, உடல் அழகு போய், முகப்பொலிவு இழந்து, கைகளில் அணிந்திருக்கும் வளையல்கள் கழன்று விழும் நிலை ஏற்படல். இதனை ஒரு பெண் ஆண் இல்லாமல் தனிமையில் பசலைநோய் வாய்ப்பட்டு நிற்கும் நிலையை வெள்ளிவீதியார் அழகாகப் பாடுகின்றார்.

    இடிக்கும் கேளிர்! நும் குறை ஆக
    நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன் தில்ல
    ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
    கையில் ஊமன் கண்ணில் காக்கும்
    வெண்ணெய் உணங்கல்போலப்
    பரந்தன்று இந்நோய் நோன்றுகொளற்க அரிதே

    என்னைப் பற்றித் தப்பாகக் கருதும் உறவினர்களே! ஞாயிறு கதிர் பரப்பும் வெப்பமாகிய பாறையிலே வைக்கப்பட்டிருக்கின்ற வெண்ணெய் கையிழந்த ஊமையால் காவல் காக்கப்படுகின்றது. அவ்வெண்ணெய் அவனால் அதனைக் கட்டுப்படுத்த முடியாது உருகி அழிவது போல காமநோய்  பரவிய எனது உடலில் உள்ள உயிரும் அழியப் போகிறது முடிந்தால், நீங்கள் என்னுடைய காதல் நோயைத் தடுத்து நிறுத்துங்கள் என்கின்றாள். இவ்வாறு தலைவனைப் பிரிந்து வாடுகின்ற ஒரு பெண் அவனுக்காகக் காத்திருந்து அவனைத் தேடிச் செல்லும் மன உறுதியையும் கொண்டிருக்கின்றாள் என்பதை

    நிலம் தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்
    விலங்கிரு முந்நீர் காலில் செல்லார்
    நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
    குடிமுறை குடிமுறை தேரின்

    கெடுநரும் உளரோ நம் காதலோரே

    என்னும் பாடலிலே தலைவன் நிலத்தை அகழ்ந்து அதனுள் புகுந்து செல்ல முடியாது. வானின் உயரே பறந்து செல்ல முடியாது. பெரிய கடலிலே காலால் நடந்து சென்றிருக்க முடியாது. எனவே ஒவ்வொரு நாடு தோறும், ஊர்தோறும், குடிதோறும், சென்று தேடினால், நிச்சயமாகக் கண்டுபிடித்து விடலாம் என்கிறார். இப்போதுள்ள முகநூல் இல்லாத சமயத்திலேயே ஒரு பெண் இவ்வாறு சிந்திக்கின்றாள் என்றால், அவள் காதலுக்காக எவ்வாறு மனவுறுதி பெற்றிருக்கின்றாள் என்பது அறியக்கூடியதாக இருக்கின்றது.

             பலகாலம் ஒரு பொருளை நினைத்து ஏங்குபவர்கள், கனவிலே அப்பொருள் கிடைத்துவிட்டதாக நினைத்து நிறைவு பெறுவதைக் குறிக்கும் பாடல்களும் வெள்ளிவீதியார் பாடல்களில் காணப்படுகின்றது.

             தொல்காப்பியப் பொருளதிகாரத்திலே மண்கலத்திலே நீருள்ளது என்பதை அதன் கசிவு காட்டுவது போல ஒரு பெண்  தன் வேட்கையை உணர்த்த வேண்டும் எனப்படுகிறது. இப்போது கூட ஒரு பெண் தன் உணர்வுகளை சமுகத்திடையே வெளிப்படையாகக் கூறத் தயங்கும் நிலை காணப்படுகின்றது. ஆனால், சங்க காலத்திலேயே வெளிப்படையாகத் தன் உணர்வுகளைப் பாடிய ஒரு முற்போக்குவாதியாகவே வெள்ளிவீதியாரை நான் காண்கின்றேன். 


    மார்ச் மாத வெற்றிமணி பத்திரிகைக்காகஎழுதப்பட்டது

    வெள்ளி, 1 மார்ச், 2019

    மின்னூல் (வெற்றிமணி மார்ச் பத்திரிக்கை )


    மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் மாத சிறப்பிதழாக வெளிவந்த வெற்றிமணி பத்திரிக்கை.



    ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

    காதல் சொல்ல வந்தாள்



    கனவுகளும் காட்சிகளும் தியான் உருவத்தைச் சுற்றி வலம் வர, சிக்கித் தவிக்கும் அவள் உணர்வுகளுக்குத் தாய் தினமும் கூறும் வார்த்தைகள் தடைவிதித்துக் கொண்டு இருந்தன. வாசுகி கட்டுப்பாடான பெண்தான் ஆனாலும், காதலுக்குக் கண் இல்லை என்பார்களே. எல்லோருக்கும் எல்லோரையும் பிடிக்காது. சிலருக்குச் சிலரைப் பிடிக்கும். அதுவே நிச்சயமாகும் போது இணைவதும் சில சமயங்களில் இணைய முடியாமல் போவதும் இயற்கை.

    தியான் என்னைக் காண்பான். என்னிடம் ஒரு வார்த்தை பேசுவான் என மனதுக்குள் ஒரு ஆசைக் கோட்டையையே கட்டி வைத்திருந்தாள். அவனைக் காணும் போதெல்லாம் என் காதலைச் சொல்லிவிடலாமா! இல்லை இது பெண்மைக்கு இழுக்கா? என் காதல் என் தாயின் வேண்டுகோளுக்கு அவமதிப்பாகி விடுமா? மனதுக்குள் பெரிய போராட்டமே நடத்திக் கொண்டிருந்தாள், வாசுகி.

    அன்று திங்கள் மெல்லிய பனி மூட்டம் ஒருவரை ஒருவர் மறைக்கும் வண்ணம் தென்பட்டது. இருள் விலகிக் கொண்டிருக்கும் காலைப்பொழுது பஸ் தரிப்பில் பல்கலைக்கழகம் செல்வதற்காக வாசுகி காத்துக் கொண்டிருந்தாள். அருகே அழகான கம்பீரமான ஒரு ஆண்மகன். தன்னைக் கேட்காமல் தன் கண்கள் விலகி அவனை நோட்டமிட்டது.
     
    "வாசுகி!  அவன் அழைத்தான். திரும்பிப் பார்த்தாள்.

    “என்ன தெரியாதது போல் நிற்கிறாய்….”

     “ஓ அரவிந்த். எப்படி இருக்கிறீங்க? யாரோ Handsome Boy நிற்கிறார் என்று நினைத்துக்   கவனிக்கவில்லை"

    “Handsome  என்று சொன்னால் சரியா? அப்படி முழுமையாக நினைப்பது போல் தெரியவில்லையே. உன்னிடம் எத்தனை தடவை என் மனதிலுள்ளதை எடுத்துச்   சொல்லிவிட்டேன். நீதான் என்னை அலட்சியம் செய்கின்றாய். எனக்குப் பிடித்த உன்னுடைய பதிலுக்காக நான் காத்திருக்கின்றேன்”

    “பஸ் வந்திட்டு அரவிந்த். நான் பிறகு பேசுகிறேன். என் பதிலில் எந்தவித மாற்றமுமில்லை. என்னைக் கொன்று விட்டு எப்படி நான் உன்னோடு வாழ்வது. கற்பு என்பது மனதோடு சம்பந்தப்பட்டது என்று நான் பல தடவை உனக்குச் சொல்லியிருக்கிறேன். நீ எனக்கு நல்ல நண்பண்டா. காதலனாக என் மனம் வேறு ஒருவனுடன்தான் சல்லாபிக்கின்றது. பிறகு பேசுவோம்” என்றபடி பஸ்ஸுக்குள் வாசுகி ஏறினாள்.

    அரவிந்த் பல வருடங்களாக வாசுகிதான் தன் மனைவியாக வரவேண்டும் என்று அவள் பதிலுக்காக ஏங்கி நிற்கும் ஒருவன். வாசுகி குடும்பமும் அரவிந்த் குடும்பமும் நல்ல நண்பர்கள். அரவிந்த் மனதில் ஏதோ வகையில் வாசுகி புகுந்துவிட்டாள் என்பதா, புகுத்தி  விட்டான் என்பதா! தன் உள்ளக் காதலின் உருவத்தை எத்தனையோ முறை வாசுகியிடம் படம் போட்டுக் காட்டிவிட்டான்.

    ஆனால், வாசுகியோ ஒருவனைத் தன் மனம் பச்சை குத்திவிட்டது. அதை கிழித்தெடுத்து வேறு ஒருவனைப் பதித்து வைக்க எப்படி முடியும் என்று மறுப்புத் தெரிவித்துக் கொண்டாள்.
     
    மனதில் நிறைந்திருப்பவனிடம் தன் காதலைச் சொல்லும் தைரியமும் அவளிடம் இல்லை.

    மனதில் ஒருவன் இருக்க மற்றவனைக் கைப்பிடிக்கும் வேடதாரியும் அவள் இல்லை.

    இரு மனங்கள் காதலுக்காக ஏங்குகின்றன. ஆனால், யாருக்கு யாரென்று எழுதி வைப்பது ஏதோ ஒரு சக்தி என்பதை உணராதவர்கள் இல்லை அவர்கள்.

    அடிக்கடி சந்திப்புக்களும் பேச்சுக்களும் தொடர்ந்தாலும் ஆணித்தரமான உள்ளத்து வேட்கை மாறியதாக இல்லை.

    காலத்தின் போக்கில் வயது காத்திருக்காது அல்லவா. பெற்றோருக்கு எப்போதும் பெண்பிள்ளைகள் பாரமே. அது எந்த நாடாக இருந்தாலும் பிள்ளைகளைத்தாமே தாங்கி நிற்பதுபோல் தமக்குள்ளேயே ஒரு மனக்கோட்டை கட்டி வைத்துக் கொள்வார்கள். அவ்வாறே வாசுகி பெற்றோரும் அவளுக்கு வரன் பார்க்கத் தொடங்கினார்கள்.

    ஐரோப்பிய வாழ்வில் தானாகவே தன் துணையைத் தேடும் சுதந்திரம் இருந்தும் பெற்றோர் ஆச்சார, அநுஸ்டானங்களுக்குக் கட்டுப்பட்டு மனதின் போக்கைக் கூடக் கட்டுப்படுத்தி வாழ்பவள் அல்லவா வாசுகி.

    பெற்றோர் திருமணத்திற்காக அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டனர். ஆனால், வாசுகிக்கோ சிறுவயதிலிருந்து பெற்றோர் ஊட்டி வளர்த்த கற்பென்னும் தியரி மனதுக்குள் ஆட்டம் போட்டுக் கொண்டே இருந்தது.

    மனதால் ஒரு பெண் ஒரு ஆணை நினைத்துவிட்டால், அன்றிலிருந்து அவன் அவளுக்குக் கணவனாகின்றாள். இதுவே அவள் சிறுவயதிலிருந்து மனதுக்குள் போட்டு வைத்திருக்கும் விரதம். இந்த விரதத்திலிருந்து அவளால் மீளமுடியவில்லை. ஆழமான உள்ளப் பதிவு என்றுமே அழியப் போவதில்லை அல்லவா.

    என்ன செய்வது? பெற்றோரை எதிர்க்க அவளால் முடியவில்லை. அதேவேளை முன்பின் தெரியாத ஒருவனுடன் வாழவும் முடியவில்லை. தன்னைப் பற்றி துளியளவும் சிந்திக்காத தன் மனதுக்குள் மாயமாய் மறைந்திருக்கும் வேணுவையும் நிச்சயிக்க வாசுகியால் முடியவில்லை.

    யாரென்று அறியாது என்றுமே பழகிப் பார்க்காத பெற்றோர் பேசும் பையனுக்குத் தன்னைத் தாரை வார்க்க வாசுகி மனம் ஒப்பவில்லை. சிந்தனையில் அவள் இடது பக்க மூளை தொழிற்படத் தொடங்கியது. முடிவுகளை எடுக்கவோ தீர்மானிக்கவோ ஆண்டவனை விட தன் மூளையைத்தானே அவள் நம்பியிருக்கின்றாள்.

    தெரியாத ஒருவனுக்குத் தலையை நீட்டிவிட்டு அவன் எப்படி என்று தெரிந்து கொள்ள வருடக்கணக்கில் முயன்று, முடிவில் தனக்கேற்றவன் அவனே என்று முடிவாகும் போது காலம் கடந்துவிடும், இல்லை அவனுடன் வாழமுடியாது என்னும் போது விவாகரத்தில் வந்து முடியும். அந்த வேளையிலும் பாதிப்பு என்னவோ பெண்ணுக்குத்தானே. சரியான நேரத்தில் சரியாக சிந்தித்து எடுக்கும் முடிவுதான் நிலைக்கும்.

    நீ நேசிக்கும் ஒருவனைவிட உன்னை நேசிக்கும் ஒருவனே உனக்குத் தேவையானவன் என்னும் முடிவை அவளுடைய மூளை கொடுத்தது. தீர்மானித்து விட்டாள் வாசுகி. தன் எதிர்காலத்தைச் சிறப்பான முறையில் கொண்டு செல்வதற்குத் தனக்கு ஏற்றவன் அரவிந்த் தான் என்று மனம் இட்ட கட்டளையை தலைமேற் கொண்டாள். தலைசீவிச் சிங்காரித்துக் கொண்டாள். அரவிந்த எப்போதும் தன்னிடம் சொல்லும் அந்த மஞ்சள் கலர் புடவையை உடம்பில் சுற்றிக் கொண்டாள். நேர் வகிடு எடுத்து நெற்றியில் அழகான ஸ்ரிக்கர் பொட்டு வைத்தாள். தான் வாசம் செய்யவிருக்கும் கோயிலுக்குப் போவதற்குத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டாள். தாயிடம் அரவிந்த் வீட்டிற்குப் போவதாகச் சொன்னாள்.

    “இன்றைக்கு ஆட்கள் வருகின்றார்கள். நேரத்திற்கு வந்துவிடு“ என்று சொல்லிய தாயின் பேச்சுக்கள் அவள் காதில் விழவில்லை. இன்று தீர்க்கமாக அவளுடைய மனம் முடிவை எடுத்திருந்தது. இன்று எப்படியும் அரவிந்த் உடன் பேசிவிட வேண்டும். அவனுடைய பலநாள் கேள்விக்கு இன்று அவனுடைய நிறைவான பதிலைச் சொல்ல வேண்டும். இருவரும் இணைந்து பறக்கப் போகும் திருமண மஞ்சத்தை அவனிடம் சொல்லி மகிழவேண்டும் என மகிழ்ச்சி வெள்ளத்தில் மனம் சிறகடித்தது. அரவிந்த வீட்டை அடைந்தாள். வாசல் அழைப்புமணியை அழுத்தினாள்.

    உள்ளே பலருடைய பேச்சுச் சத்தம் கேட்டது, யாரோ விருந்தினர்கள் வந்திருக்கின்றார்கள். என்று நினைத்தபடி நின்றிருந்தாள். அரவிந்த் இனுடைய தங்கையே கதவைத் திறந்தாள். நேரே இருந்த ஹோலில் தட்டம் மாற்றப்படுகின்றது. ஏதோ சுபகாரியம் என்பதை நடைமுறைகள் காட்டிக் கொடுத்தன. அரவிந்த்  தங்கை ராணி வாசுகியைக் கண்டாள்.

    “வாசுகி What a Surprise  சரியான நேரத்துக்கு வந்திருக்கிறாய். அண்ணனுக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது. நீ இல்லாமல் எப்படி? கடவுளே உன்னை இங்கே அனுப்பியிருக்கிறார். வா… வா…. . 

    வாசுகி அறையை நோக்கி நடக்கிறாள். தவிடு பொடியாகிச் சிதைந்து கிடக்கும் தன் நம்பிக்கையை மனதுக்குள் அஸ்தமனமாக்கி விட்டாள். ஏதோ சொல்ல வந்த வாசுகி. அரவிந்தன் எதிர்கால வாழ்க்கைக்கு தன் வாயால் மட்டும் வாழ்த்துச் சொல்லுகிறாள்.


    திங்கள், 18 பிப்ரவரி, 2019

    முக்கோண முக்குளிப்பு மின்னூல்

    எனது மின்னூல்.

    2016 ஆம் ஆண்டு ஜேர்மனி எழுத்தாளர் சங்கத்தால் வெளியீடு செய்யப்பட்ட என்னுடைய இந்நூலில்  மூன்று வகையான பிரிவுகளில் கட்டுரைகளை எழுதியுள்ளேன்.  நூல் வடிவில் என்னிடமுள்ள பதிவுகளை  வாசகர்கள்  அனைவரும் வாசித்துப் பயன்பட வேண்டும் என்னும் நோக்கத்துடன் மின்னூலாக வெளியீடு செய்கின்றேன். வாசித்து உங்கள் பின்னூட்டங்களைத் தாருங்கள் என்று கேட்டுக் கொள்ளுகின்றேன். இந்நூல் நீங்கள் பக்கம் பக்கமாக பிரித்துப் படிக்கக் கூடியதாக இருக்கிறது

    http://online.fliphtml5.com/djvlz/euiq/#p=5


    எனது மின்னூலைப் பிறிதொரு பக்கத்தில் பார்க்க
    http://online.fliphtml5.com/djvlz/euiq/

    சனி, 2 பிப்ரவரி, 2019

    காதல்


    காதலர் தினம் பெப்ரவரி 14ம் திகதி கொண்டாடப்படுவதன் காரணம் பற்றி சென்ற ஆண்டு கட்டுரையில் நான் விளக்கியிருக்கின்றேன். ஆனால், இந்த காதலர் தினம் கொண்டாடப்படுதல் அவசியமா? என்ற கேள்வியுடன் பல நாடுகள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றார்கள். வியாபார நோக்கத்துடன் காதலர் தினத்தை விலையுயர்ந்த ஒரு விழாவாக மாற்றிவிடுகின்றார்கள் என்றும் இவ்விழா கலாசாரத்தை சீர்குலைக்கின்றது என்றும் பலவாறான எதிர்ப்புகள் நிலவுகின்றன. இந்நிலையில் காதலர் தினத்தின் முக்கியத்துவம் பற்றி சிறிது மனம் பதிப்போம்.
     
             காதல் என்பது உலகத்து உயிர்கள் அத்தனையையும் தன் பிடிக்குள் அடக்கியுள்ளது. உடற்பசி, உள்ளப்பசி, உயிர்ப்பசி, பிறவிப்பசியே காதல் என்பர். அஃறிணைக்காதல் கல்லாக்காமம், இயற்கையின்வீறு. மனிதர்களிடத்தில் தோன்றும் காதல் நினைவில் இனித்து, அறிவில் விளங்கி, கல்வியில் வளர்வது என்று வ.சு.ப. மாணிக்கனார் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். சங்கநூல்கள் எட்டுத்தொகை பத்துப்பாட்டு மொத்தம் 2381 பாடல்கள். இதில் 1862 பாடல்கள் அகத்திணையையே குறிக்கின்றன. இவ் அகத்திணை வயப்பட்ட காதலை தொல்காப்பியர் களவியல், கற்பியல் என அகத்திணை பற்றிய செய்திகளை இரண்டாகப் பிரிக்கின்றார்.
     
             புலவனுக்கு மதம் எனப்படுவது ஆண் பெண் காதலே. அக்காதல் இலக்கியத்தின் வற்றாத ஊற்றிடங்களுள் ஒன்று. கவிதை எண்ணத்தை உருவாக்கும் சார்புகளுள் ஒன்று. இயற்கை இன்பத்தின்பால் உலகை ஆட்டிப்படைக்கும் காதல் இன்பத்தைக் களிப்பான நாளாகக் கொண்டு விழா எடுப்பதில் தவறில்லை என்றே நினைக்கின்றேன்.
     
              ஆண் பெண் இருபாலாரிடையே வெளிப்படும் காமத்தோடு கூடிய காதல் சங்கம் தொட்டு இன்று வரை பாடல்களின் மூலம் அழகாக எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றது. காமம் கடந்த காதல், காமத்தோடு கூடிய காதல் என்னும் போது இயற்கையைக் காதலித்தல், செய்யும் தொழிலைக் காதலித்தல், கற்கும் கல்வியைக் காதலித்தல், தன்னைத்தான் காதலித்தல், வயதான தம்பதியினரின் உச்சம்தொட்ட அன்பின் வெளிப்பாடு என காமம் கடந்த காதல் வெளிப்படுகின்றது. தெய்வீகக் காதல் ஆண்டாள் பாடல்களில் அழகாக எடுத்துக்காட்டப்பட்டு இருக்கின்றது. ஆயினும் அவற்றிலும் கூட காமம் வெளிப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
     

    ''குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
    மெத்தென்ற பஞ்ச  சயனத்தின்  மேலேறி 

    கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் 
    வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய்திறவாய்!''

    என்று திருமாலை நினைத்து ஆண்டாள் பாடுவதாக இப்பாடல் திருப்பாவையில் வந்திருக்கின்றது. திருமணத்தை மறுக்கப்பட்ட பெண்களின் குறியீடாகவே பெரியாழ்வாரின் கற்பனைப் பாத்திரப் படைப்பே ஆண்டாளாக இருக்கலாம் என்பது ஆராய்வுக்குறிப்பு. ஆயினும் ஆண்டாள் பாடல்கள் தெய்வீகக் காதலைப் புலப்படுத்தியிருப்பது காணக்கூடியதாக இருக்கின்றது. காதல் அடைதல் இயற்கை. அது கட்டில் அகப்படும் தன்மையதோ என்று பாரதிதாசன் எடுத்துரைக்க, காமம் என்ற சொல் காதலுக்கு பயன்படுத்தப்படுவது அறியக்கிடக்கின்றது.

    “காமங் காம மென்ப காமம்
     அணங்கும் பிணியு மன்றே நினைப்பின்
     முதைச்சுவற் கலித்த முற்றா விளம்புல்
     மூதா தைவந் தாங்கு
     விருந்தே காமம் பெருந்தோ ளோயே”

    அக்காமம் என்பது, வருத்தமும் நோயும் அன்று. மேட்டு நிலத்தில் தழைத்த, முதிராத இளைய புல்லை,  முதிய பசு, நாவால் தடவி இன்புற்றாற்போல நினைக்குங் காலத்தில் அக்காமம் புதிய இன்பத்தை யுடையதாகும் எனக் காமமாவது எமது அறிவு நிலைக்கு உட்பட்டது என குறுந்தொகையில் கூறப்பட்டுள்ளது.
     
      வெகுளிப்பெண் படத்தில் கண்ணதாசன் ''காதலாலே போதை வந்தது, காதலால் கவிதை வந்தது, ஆதலாலே காதல் செய்வது, ஆணும் பெண்ணும் ஆசை கொள்வது'' என்று எழுதியிருக்கின்றார். வைரமுத்து ''உலகமெல்லாம் ஒரு சொல். ஒரு சொல்லில் உலகம். காதல் கற்காலம் தொடங்கி இன்ரநெற் வரையில் அன்றும் இன்றும் என்றென்று காதல், காதலித்துப் பார் உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும், வயிற்றுக்கும் தொண்டைக்குமாய் உருவமில்லா உருண்டையொன்று உருளக் காண்பாய்... காதலின் திரைச்சீலையைக் காமம் கிழிக்கும்... செத்துக் கொண்டே வாழவும் முடியுமே... அதற்காக வேணும்... காதலித்துப் பார்! என்றார்.

    காதல் பற்றி மகாகாவி பாரதியார் சொல்கின்றபோது தனது குயில்பாட்டிலே
     
    “காதல் காதல் காதல்
    காதல் காதல்போயிற் காதல்போயிற்
    சாதல் சாதல் சாதல்” என்றார்.

    இவ்வாறான காதல் ஆண்பெண் இருபாலாரிடையே தோன்றும் போது செம்மண்ணில் மழைநீர் சேர்கின்றபோது, அந்நீரும் செந்நீராவது போல் இரண்டறக்கலக்கும் எனக் குறுந்தொகையில்
     
     “யாயும் ஞாயும் யாராகியரோ
     எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
     நீயும் யானும் எவ்வழி அறிதும்
     செம்புலப் பெயல் நீர்போல
     அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே”

    செம்புலப்பெயல் நீரார் பாடியிருக்கின்றார்.
    இதனையே பாரதியும் கண்ணம்மா என் காதலியில்
     
       “அன்னிய மாகநம்முள் எண்ணுவதில்லை - இரண்
        டாவியுமொன் றாகுமெனக் கொண்டதில்லையோ?  என்கிறார்.

    வேட்கை, ஒருதலை உள்ளுதல், மெலிதல், ஆக்கம், செப்பல்(தனக்குள் பேசிக்கொள்ளல்) நாணு வரை இறத்தல்(வெட்கம் இல்லாமல் போதல்) நோக்குவ எல்லாம் அவையே போறல், மறத்தல், மயக்கம், சாக்காடு (காதல் கைகூடாவிடத்து சாக நினைத்தல்) என தொல்காப்பியர் பொருளதிகாரத்திலே களவொழுக்கம் பற்றி அழகாக எடுத்துக்காட்டுகின்றார்.
     
              இவ்வாறான பண்புகளைக் கொண்ட காதலானது பெண்களிடத்து மென்மையானது, ஆண்களின் காதல் பாதுகாப்பானது. பெண்களின் காதல் அப்படியில்லை. எந்த நேரத்திலும் அழிந்து போகலாம் என்பதற்கு அத்தாட்சியாக குறிஞ்சிநிலத்துத் தோழி தன் வாயிலாக தலைவனுக்குப் புலப்படுத்துகின்றாள். 
     
    “வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
     சாரல் நாட செவ்வியை ஆகுமதி
     யாரஃ தறிந்திசி னோரே சாரல்
     சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
     உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே”
     
    அதாவது, வேரிலே பழுக்கின்ற பலாப்பழங்களையுடைய மலைச்சாரலையுடைய மன்னனே. இங்கே பெரிய பலாமரமொன்றின் சிறிய கொம்பில் சிறிய காம்பில் பெரிய பழம் தொங்குவதுபோல் தலைவியின் காமம் என்கிறாள்.
    இதனையே வள்ளுவரும், 
    ''மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
     செவ்வி தலைப்படு வார்''

    எல்லாவற்றிலும் மெல்லியதாகிய பூவைவிட காமம் மெல்லியது. அதன் உண்மையை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே எனக் கூறும் வள்ளுவரை நிலைநிறுத்தி, ஒருவனுக்கும் ஒருத்திக்கும் இடையே எழும் காதல் நிலத்தை விடப் பெரியது,  வானத்தை விட உயர்ந்தது, நீரை விட அளவற்றது எனக்கூறி இக்கட்டுரையை நிறைவு செய்கின்றேன்.
    இம்மாத வெற்றிமணியில் காதலர் தினத்துக்காக எழுதப்பட்டு வெளிவந்துள்ளது.


    ஞாயிறு, 13 ஜனவரி, 2019

    தைப்பொங்கல் நல் வாழ்த்துகள் 2019




    வார்த்தைக்குள் மனித நேயத்தை மறைத்து வைத்திருக்கும் சூத்திரம்.
    வழிதேடி பிரதியுபகாரம் வழங்கவே மனம் துடிக்க வைக்கும் மந்திரம்
    வாய்க்கால் தேடி  கலங்கமில்லா அன்பைக் காட்டத் துடிக்கும் சாகசம்
    மனிதனுக்கு மட்டுமன்றி மிருகங்களையும் ஆட்டிப் படைக்கும் தூண்டில்
    இந் நன்றியுணர்வே நாம் பொங்கும் பொங்கல்

    தீவினை அகன்றிட மனத் தூய்மைகள் விளங்கிடும் நாள் 
    போனவை போகட்டும் நல்லவை நிலைக்க வழிதேடிடும் நாள்
    சேர்த்துவைத்த குப்பைகளை தேதி சொல்லி அழித்திடும் நாள்  
    வாழ்வினில் சேர்த்த தீவினையாவையும் நன்மனங்கொண்டே அழித்திடும் நாள்
    நாம் காணும் போகிப்பொங்கல் நன்னாளே

    நாம் வாழக் காரணம் யாதென்று வாதிடத்தெரிந்த மனிதன்
    சீரோடும் சிறப்போடும் நோயின்றி வாழக் காரணம் யாதென்று
    சிந்திக்கத் தெரிந்து செயற்படத் துணிந்த சிந்தனை மனிதன்
    வயிற்றுப் பசித் தீர்க்கும் அடிப்படைக் காரணி யாதென்றறிந்து
    ஆய்வுக்கண் கொண்டு நன்றி தெரிவிக்கும் நன் நாளாம்
    நாம் காணும் தைப்பொங்கல்

    பிரளயத்தின் பிள்ளை பல பிள்ளைகளைப் பெற்றெடுத்த தாய்
    நாளும் பொழுதும் கண்வெட்டாமல் எம்மைப் பாதுகாக்கும் தாதி
    தான் மாய்ந்தால் உலகம் மாயும் என்னும் தத்துவத்தை
    உலகறியச் செய்து உலகை ஆளுகின்ற உலகரசன் ஆதவனை
    வருடம் ஒருமுறை வாயார வாழ்த்தி மனமாரப் போற்றும்
    பொங்கலே தைப்பொங்கல்

    நன்னிலம் கண்டு நானிலம் வாழ தன்னலங்கருதா உழவன்
    மண்மீது விதைத்து மழைமேகம் கண்டு பொன் பூச்சொரிந்து
    புதுநெல் காண விளைநிலத் தாயின் மடிமீது காளையை
    நடைபயில வைத்தான் காளை ஆண்டானின் சொற்கேட்டு
    சேற்றிலே புதைந்தது செந்நிலந் தன்னிலே நன்னிலம் தந்தது
    தொண்டுக்குப் பரிசாக சிங்காரித்த காளையைக் கொண்டாடும்
    நன்னாளாம் மாட்டுப் பொங்கல்

    வருடம் முழுதும் வளமாய் வாழ நாளும் பொழுதும்
    நலமே வாழ காலம்நேரம் கணக்கில் கொள்ளா துழைத்து
    ஓயாப் பணியை  ஒருவாராய் முடித்து ஓய்வாய் இருந்து
    உயர்வின் களிப்பை உறவினர் நண்பர் சுற்றங்கள் கண்டு
    போற்றிடும் நாளே காணும் பொங்கல்.

    அனைவருக்கும் 2019 தைத்திருநாள் நல்வாழ்த்துகள் 





    வெள்ளி, 4 ஜனவரி, 2019

    மனைவி வீட்டில் இல்லாத போது ……….





    தாரத்தைத் தாய் வீடு அனுப்பிவிட்டு ஆண்கள் தமது வீட்டில் செய்யும் சின்னவீட்டுச் சில்மிசங்கள் பற்றியும் எமது தாயக கலாசாரம் பேசும். கட்டியவள் அருகே இருக்க காதலிக்குக் கண்ணடிக்கும் செய்கை பற்றியும் எமது கலாச்சாரம் பேசும். ஆனால் இங்கே ஒரு தாரத்தை வைத்து சமாளிக்க முடியவில்லை. இதற்குள் இன்னொன்றை  கட்டி மாய்க்க முடியுமா! என்று புலம்பெயர்ந்து வாழும் சில ஆண்கள் நினைப்பது இன்றைய கலாசாரமாகிவிட்டது. அப்படி இருந்தும் எத்தனை வருஷம் தான் ஒரு முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது என்னும் சாட்டில் வேறுமுகம் தேடி தாரத்தையும் தன் பெயர் சொல்லப் பிறந்த வாரிசுகளையும் விட்டுப் போய் கடைசியில் அரசனை நம்பி புருஷனைக் கைவிடும் பெண்கள் நிலைபோல் போனவர்களது கலாசாரமும் புலம்பெயர் கலாசாரம் பேசும்.

            ஆனால் இங்கு எழுதப் போவதோ, எப்போது மனைவி பேரப்பிள்ளைகளைப் பராமரிக்க பிள்ளைகள் வீட்டிற்குப் போவாள் என்றும், மனைவி எப்போது நண்பிகளுடன் சுற்றுலா போவாள் என்றும் காத்திருந்து அப்பாடா என்னுடைய கிடப்பில் கிடக்கும் வேலைகளை எல்லாம் அவள் வருவதற்குள் முடித்துவிட வேண்டும் என்று ஆயத்தமாகும் கணவன்மார் நிலை பற்றியே பேசப் போகின்றேன். பிள்ளையார் பிடிக்க பூதம் வந்ததுபோல் எதுவோ நினைக்க எதுவோ நடப்பததான் நிலையாகிவிடுகிறது.

    மூக்குக் கண்ணாடியை மூக்கின் மேல் வைத்து விட்டு ''இஞ்சப்பா கண்ணாடிய எங்கேயோ வச்சிட்டன் கண்டீரே'' என்று கேட்கும் ஆண்களுக்கு ''மண்டு மண்டு இங்கே பாருங்கள் மூக்கின் மேல் இருப்பது என்ன? என்று சுட்டிக்காட்டும்  நிலை பற்றியும், வீட்டிற்கு வந்து Jacket   கழட்டும்போதே குளிரிலே கைகால்களெல்லாம் விறைக்கிறது கொஞ்சம் கோப்பி போட்டுத் தாருமப்பா என்று சொல்லும் கணவன்மார்களும், இஞ்ச பாருமப்பா வட்டுக் கத்தரிக்காய் T.T.S இலே வாங்கினேன். நல்லாப் பொரிச்சுக் குழம்பு வையுமேன். நன்றாக இருக்கும் என்னும் சுவைப்பிரியர்களும், இதிலே மடித்து வைத்த Shirt ஐக் காணோம் கண்டனீரே? என்று கேட்கும் கணவன்மார்களும் தன்னுடைய மனைவி  வீட்டில் இல்லை. வர நாளாகும் என்னும்போது என்ன என்ன சிக்கல்களை அனுபவிக்கின்றார்கள் என்று சிறிது, அலசுவோம்.

           பெண் இல்லாத வீடு, வாளியில்லாத கிணறு என்று பல்கேரியன் பழமொழி சொல்லுகிறது. அவள் இருந்தால் இந்த வேலைகள் செய்து முடிக்க முடியாது. இப்போதுதான் ஓய்வு என்று நினைக்கின்ற கணவன்மார்கள், அவள் இருக்கும் போது முடித்திருக்கலாம் என்று முடிவில் எண்ணுவதே உண்மை. தாயிலே கெட்டவள் இல்லை, சாவிலே நல்லது இல்லை என்று தாம் தாயாகும் போது நினைக்கும் பிள்ளைகள் தமது தாயைத் தாம் வாழுகின்ற நாட்டுக்குத் துணைக்கு அழைப்பதும் தமது பிள்ளைகளை வளர்த்தெடுக்கத் தாயின் துணையைத் தேடுவதும் இப்போது புலம்பெயர் கலாசாரமாகிறது.

             புலம்பெயர்வாழ்க்கையில் ஆரம்பத்தில் தனியே வாழ்ந்த ஆண்கள் திருமணத்தின் பின் கணவன் மனைவி என்று இருவராக வாழுகின்றார்கள். காலப்போக்கில் பிள்ளைகளைப் பெற்று பலராக வாழுகின்றார்கள். பின் படிக்க வைத்து வளர்த்தெடுக்க ஓயாது உழைத்து பிள்ளைகளுக்குத் திருமண வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்து மீண்டும் இருவராகின்றார்கள். அதன் பின் பேரப்பிள்ளைகளைப் பராமரிக்க மனைவி பிள்ளைகள் வீட்டிற்குச் சென்ற பின் ஆண்கள்; தொடங்கிய இடத்திற்கே வருகின்றார்கள். 

            புலம்பெயர்ந்து வந்தபோது வாழ்ந்த பிரமச்சரிய வாழ்வு மீண்டும் தொடங்குகின்றது. சமைக்கத் தெரியாத ஆண்கள் லழரவரடிந உதவியுடன் சமையல் கற்கின்றார்கள். இஸ்திரி போடாத ஆடையை என்றுமே அணியாத ஆண்கள் கசங்கிய ஆடையை துயஉமநவ இனுள் மறைத்து அணிந்து செல்கின்றார்கள். அடுப்பிலே கறியை வைத்துவிட்டு தமது கடமையைச் செய்யப்போய் கருகிய உணவைப் பார்த்து, என்னசெய்வது என்று பொறுமையுடன் மீண்டும் சமைக்கும் பெண் குணம் சிறிதும் இன்றி, சட்டியைத் தூக்கி எறிந்துவிட்டு Pizzeria நோக்கி நடையைக் கட்டுகின்றார்கள். பிரியாணி உணவெல்லாம் மறந்து பாணும் மாஜரினும் வாய்க்குப் பழகிப் போகிறது. ஸ்பெயின் நாட்டின் பழமொழி ஒன்று சொல்கிறது. ஒரு மனிதனுடைய நல்ல அதிர்ஷ்டமும் துரதிஷ்டமும் அவனுடைய மனைவியே. 

             சிறிது நாட்கள் பேரப்பிள்ளைகளை கவனிக்கச் செல்கின்ற மனைவி கணவனிடம் சொல்லுவாள், ''பூமரங்களுக்கு மறக்காமல் தண்ணீர் வார்த்துவிடுங்கள்'' என்று. ஆனால், அந்த மகானுக்கோ அந்த உயிர் இறப்பது பற்றி எந்தவித அக்கறையும் இல்லாமல், தொலைக்காட்சியில் பிரான்ஸ் இல் குண்டு வைத்துவிட்டார்கள், மிருகக்காட்சிச் சாலையில் குரங்கு இறந்துவிட்டது என்பதைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருப்பார். மரங்காய்ந்து சருகு விழத் தொடங்க, அடப்பாவி இவள் வரப்போறாளே என்ன செய்வது என்று நீரூற்றும் அளவு தெரியாது, தொட்டித் தண்ணியை தொகையாய் ஊற்றி, லமினாட் நிலமெல்லாம் வடிந்து, அது தன்னுடைய பிடிமானத்தை விட்டுக் கிளம்பத் தொடங்கி, அதற்கு கவனம் எடுத்துத் தன்னுடைய ஒரு நிமிட வேலையை ஒரு வார வேலையாக்கி விடுவார்.

          ''கழுவிப்போட்ட உடுப்பெல்லாம் காய்ந்தவுடன் எடுத்து மடித்து வைத்துவிடுங்கள். நான் வந்து இஸ்திரி போடுறன்'' என்று சொன்னால், உடுப்பு காய்ந்து வறண்டு தொங்கிக் கொண்டே கிடக்கும். வந்த மனைவி தோய்த்துக் கழுவிய உடுப்பைக் காயப் போடப் போகும்போதுதான் தெரியும். கன்றாவி மனிசன் அலுமாரி உடுப்பெல்லாம் வகைவகையாய்ப் போட்டு தோய்க்க வேண்டிய உடுப்புக்கள் போடும் பெட்டியை நிறைத்து வைத்த கெட்டித்தனம்.

          கண்ணுக்குக் குளிராக வீட்டை அழகு படுத்தி, அதற்குள் அலங்காரமாக இருப்பவளே பெண். ஆனால், இந்த அறிவு ஜீவிகளாகத் தம்மைக் கருதும் ஆண்கள், சுற்றிவரக் குப்பைகள் சுற்றியே இருந்தாலும் ஒழுங்குமாறிப் பொருட்கள் தடம் மாறிக் கிடந்தாலும், தன்னுடைய வேலை மட்டுமே முக்கியம் என்று இருந்துவிட்டு நாளைக்குப் பகல் 14.00 மணிக்கு மனைவி திரும்பி வரப்போகும் விமானம் தரை இறங்குகிறது என்றால், இந்த உத்தம புருஷன் கால்கள் தரையில் நிற்காது. Roborto வை மனசுக்குள் பூட்டிவிடுவார். மனைவி வரும் ஆனந்தம் அல்ல. அது ஆத்துக்காரி தரப்போகும் ஆலாபனத்திற்குப் பயந்த மனிசன் வீடு துப்பரவு, ஒழுங்குபடுத்தலில் காட்டும் கவனமேயாகும்.

           உலகத்துக்குப் புத்தி சொன்ன திருவள்ளுவரே மனைவி இல்லாவிட்டால் தன்னுடைய நிலை என்ன என்று மனைவிக்காகப் பாடிய வரிகளில்
     
    ''அடிசிற் கினியாளை அன்புடை யாளைப்
     படிசொற் பழிநாணு வாளை – அடிவருடிப்
     பின்துஞ்சி முன்னுணரும் பேதையை யான் பிரிந்தால்
     என்துஞ்சுங் கண்கள் எனக்கு''

    என்று பாடியிருக்கின்றார். மனைவி ஒரு வீணை அல்ல. வாசித்து முடித்த பிறகு அதைச் சுவரில் உங்கள் விருப்பப்படி சாய்த்து வைத்து விட முடியாது என்று ரஷ்யா பழமொழி சொல்வது போலவும் தன் மனைவியைக் கௌரவிக்காதவன் தன்னையே கேவலப்படுத்திக் கொள்ளுகின்றான் என்று ஸ்பெயின் நாடு சொல்வது போலவும் நாட்டின் உயர்வுக்கு வீட்டைக்காக்கும் பெண்களின்  நிர்வாகமும் முக்கியமானது. ஒரு வீடும், வீட்டு அங்கத்துவர்களும் சரியான முறையில் வழி நடத்தப்பட்டால் ஒரு நாடு சிறப்பான முறையில் இருக்கும். ''அபூர்வமான அழகு, அளப்பரிய பண்பு, அபரிமிதமான கருணை, ஆவேசம், அசட்டுத்தனம், அபாரமான ஞாபகசக்தி, அடங்காத ஆசை, அல்பசந்தோசம், அறிவாற்றல் போன்ற பல விஷயங்களின் அதிசயமான கலவை பெண்'' என்று  அரிஸ்டோட்டில் சொல்லுகின்றார். என்ன இது ஆண்களின் திண்டாட்டம் சொல்ல வந்து பெண்களைப் புகழ்ந்து கொட்டிவிட்டேன் என்று நினைக்காதீர்கள். ஆணும் பெண்ணும் இணைந்த இராச்சியமே குடும்பம். என்னுடைய இப்பதிவானது ஒரு கை இழந்தால் மறு கை தவிக்கும் தவிப்பின் நிலைமை. 




    எழுத்துகளுக்கும் ஆடை கட்ட வேண்டும்

      எழுத்துகளுக்கும் ஆடை கட்ட வேண்டும்   இலக்கியம் என்பது ஒரு சமூகம் வாழுகின்ற காலத்தைத் தெட்டத் தெளிவாக வேறு சமூகத்துக்கு , அடுத்த கால கட...