ஆழையாற்றில் அறிவுத் திருக்கோயில் ஆற்றி
அகிலமெங்கும அமைதிக்காய் அறிவுரையாற்றி
ஆழ்ந்த ஞானத்தில் அறிவியல் போதித்து
அறிவே தெய்வமென்று அகத்தினில் காட்டி
அன்னையைத் தந்தையை ஆசானை ஆழ்மனதில் புதைத்து
மனவளங்காக்க உடல் வளங்காக்க
உயிர் வளங்காக்க உன்னத பயிற்சிகள் தந்து
ஆழ்தவத்தின் மேன்மையை அறியச் செய்த
ஆசான் வேதாத்திரி மகரிஸியின்
பாதங்களைப் பணிகின்றேன்.
என்னைச் செதுக்கிய மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் எடுத்துரைத்த அறுகுணசீரமைப்புப் பற்றி எனக்குள் தோன்றுகின்ற உணர்வுகளை உங்கள் முன் வைக்க இந்த மணித்துளிகள் என் கூடவே இருந்து எனக்கு அவர் துணைவர வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை எனக்கு வழங்கி என்னை பிரம்மஞானம் வரை கொண்டு வந்து என் ஆன்மீகச் சந்தேகங்களை அவ்வப்போது தீர்த்து வைக்கும் என்னுடைய குரு கோபால்ஜி அவர்களுக்கு முதல் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். என்னுடைய உரையைச செவிவழி நுழைத்து மனம் வழி நிறுத்தி ஆராய்ந்து இவற்றைச் செம்மைப்படுத்தி ஏற்றுக்கொள்ளக் கூடிய மனவளக்கலை அன்பர்கள் அனைவருக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
வினைப்பதிவாம் சுமையை விடுத்துத் தூய்மை பெறவே
நினைவாய் உடலெடுத்தேன் நிலம்மீது விழுந்த பின்னே
எனை மறந்தேன் என்றன் வினை மறந்தேன் இறைவா
எனை மறந்தேன் ஆனால் நீ உள் நிறைந்திருந்து எனைமீட்டு
என்னும் வேதாத்திரி மகரிஸியின் வரிகளுடன் உரையைத் தொடங்குகின்றேன்.
அறுகுணங்கள் எவை? அவை ஏற்படக் காரணங்கள் என்ன, அறுகுண சீரமைப்பு என்றால் என்ன?அவற்றை எப்படி சீரமைக்கலாம் என்பவற்றை நாம் இப்போது பார்க்கப் போகின்றோம்.
எங்களிடம் இருக்கும் ஆறு குணங்களைச் சீரமைத்தால் நாம் மட்டுமல்ல நாம் வாழுகின்ற நாடும் சீராகும். ஏனென்றால், நாட்டைக் கெடுக்க யாரும் வானத்தில் இருந்து குதிக்கப் போவதில்லை. நாம் ஒவ்வொருவருமே ஒரு நாட்டின் பிரஜைகள். உன்னைத் திருத்து உலகம் திருந்தும் என்று சொல்வார்கள் இல்லையா? நீங்கள் பிறரைச் சுட்டிக்காட்டும் போது உங்களுடைய மற்றைய 4 விரல்களும் உங்களைத்தான் சுட்டிக்காட்டும் எனவே எமக்குள்ளே இருக்கின்ற குறைகளை நாம் நீக்கினால், துன்பம் என்பது எவருக்கும் ஏற்படாது. வாழ்க்கை இன்பமாகவே அனைவருக்கும் அமையும். ஆனால், எம்மை நாம் எப்படி சீரமைப்பது என்பதை மகரிஷி ஆராய்ந்து சொல்லுகின்றார்.
எல்லா உயிர்களிடமும் இறைவனுடைய பேராற்றல்தான் இருக்கின்றது என்பதை இந்த மனவளக்கலையைக் கற்பதன் மூலம் அறிந்திருக்கின்றீர்கள். இதிலே எந்தவித மாற்றுக் கருத்துக்களும் இல்லை. காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாரதியார் கூடப் பாடியிருக்கின்றார். இவ்வாறு இறைவனுடைய ஆற்றலை மூலாதாரத்தில் கொண்ட மனிதர்களுக்கு எவ்வாறு குணங்களில் பேதங்களும் தீய சிந்தனைகளும் வருகின்றன என்பதைச் சிந்தித்துப் பார்த்தால்
இந்தப் பிரபஞ்சத்தில் பருப்பொருள் தோன்றி 1350 கோடி வருடங்கள் ஆகிவிட்டது. நாம் வாழுகின்ற பூமி தோன்றி 450 கோடி வருடங்களாகி விட்டன. 380 கோடி ஆண்டுகளுக்கு முன் உயிரினங்கள் தோன்றுகின்றன. அதன்பின் 60 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஹோமோ பேரினத்திற்கும் சிம்பன்சிகளுக்கும் பொதுவான மூதாதையர் தோன்றுகின்றார்கள். 25 இலட்சம் ஆண்டுகளில் இருந்து மனிதனின் வளர்ச்சி அறிவுப் புரட்சி, வேளாண்புரட்சி, அறிவியல் புரட்சி எனறு வளர்ந்து கொண்டு செல்கின்றது. எப்போதிலிருந்து மனிதன் தேடலில் இறங்கினானோ அன்றிலிருந்தே அவனிடம் போட்டிகளும் பொறாமைகளும் சேர்ந்தே வளரத் தொடங்கிவிட்டது. இறைதன்மை நீங்கி வாழ்க்கை வளர்ச்சியின் போது சந்தர்ப்பம் சூழ்நிலை காரணமாக வினைப்பதிவுகள் வந்து சேர்ந்துவிடுகின்றன. இது தவிர்க்க முடியாதது என்பது உண்மையே.
ஒரு மனிதன் தன்னோடு கொண்டு செல்வது அவன் செய்த வினைகள்தான். பல பிறவிகளில் தொடராக தனக்கும் தன் மூலம் பிறக்கின்ற குழந்தைகளுக்கும் வித்திலே கர்மம் பதிவாகி இருக்கின்றது. இது சஞ்சிதா கர்மம் என்று சொல்லப்படுகின்றது. அடுத்தது பிராரத்துவ கர்மம். இது நாங்கள் இப்பிறவியில் செய்த செயல்களின் விளைவு, அது மூளையிலே பதிந்து மீண்டும் மீண்டும் நினைவூட்டிச் செயலாக மாற்றும். அடுத்த ஆகாமிய கர்மம் என்பதுதான் புறமன இயக்கம் பதிவுகளாக புலன்களில் அமர்ந்து கொண்டு. ஆசை வயப்பட்டுச் செய்யப்படும் செயல்களின் விளைவு ஆகும். அதாவது எங்களுடைய கண், காது, மூக்கு, நாக்கு, மற்றும் தோல் ஆகிய உடல் உறுப்புக்களின் (ஞானேந்திரியங்கள்)மற்றும் வாக்கு, கைகள், கால்கள், உடற்கழிவுகளை வெளியே தள்ளும் உறுப்புகள் (குதம் மற்றும் சிறுநீர் குழாய்), மற்றும் பிறப்புறுப்புக்கள் ஆகிய ஐந்தும் (கர்மேந்திரியங்களில்) பதிவாகி திரும்பவும் உயிருக்கு ஊக்க மூட்டி மனம்,மொழி, செயல் மற்றும் ஆற்றல்களாக செயல்படுத்தும் விதியே ஆகாமிய கர்மம் ஆகும். இவையெல்லாம் சேர்ந்து ஒரு மனிதனுடைய குணநலன்கள் அமைகின்றன.
இவை எப்படி மனிதனில் ஆதிக்கம் செலுத்துகின்றது என்றால், அவனுடைய குணங்கள் மூலமே அவனை அடையாளப்படுத்துகின்றது. அந்த குணங்களிலே நாங்கள் சீரமைக்க வேண்டிய ஆறுகுணங்களைச் சீராக்கிவிட்டால் கர்மங்களைச் சீராக்கி விடலாம்.
முதலிலே அந்த ஆறுகுணங்களும் யாவை என்பதைப் பார்ப்போம். ஆறு குணங்களும் ஆறுவகை மனோ நிலைகள். இவை பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு-தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்று சொல்லப்படுகின்றது. இந்தக் குணங்கள் என்னிடம் இருக்கின்றது என்பதை நான் எப்படிக் கண்டுபிடிப்பது. முதலில் உங்களை நீங்கள் ஆராய வேண்டும். அதற்காகவே எண்ணம் ஆராய்தல் என்பதை மகரஷி சொல்கின்றார்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்
எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள். எண்ணத்தை ஒட்டியே மனத்தின் தரம் அமையும். எனவே மனத்தின் தரத்தை ஒட்டித்தான் மனிதனின் தரமும் அமையும். ஆகவே எண்ணத்தின் தரத்தை உயர்த்தினால், மனிதனின் தரமும் உயரும். மனத்தை அடக்க நினைத்தால் அது அலையும். அதனை அறிய நினைத்தால் அது அடங்கும். அதனாலேயே மனத்தை ஆராய வேண்டும். எண்ணம் ஏற்படுவதற்குக் காரணம் என்ன என்று பார்க்க வேண்டும். தேவையால் வரும், பழக்கத்தால் வரும், சூழ்நிலையால் வரும், பிறர் மனத் தூண்டலால் வரும், கருவமைப்பால் வரும். எனவே இவ்வாறு வருகின்ற எண்ணங்களை ஆராய வேண்டும்.
ஒவ்வொரு எண்ணத்தையும் எடுத்துக் கொண்டு தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, மனதிற்கோ நன்மை தருமா அல்லது தீமை தருமா என்று ஆராய வேண்டும். நன்மை தருமெனில் அதை நிறைவேற்றுவதற்கு வசதி, வாய்ப்பு இருக்கிறதா என்று ஆராய்ந்து திட்டமிட்டுச் செயல்படுத்த வேண்டும்.
தீமை தருவதாக இருந்தால், 'இந்த எண்ணம் எழாமல் விழிப்போடு இருப்பேன்' என்று சங்கல்பம் செய்ய வேண்டும்.
அந்தத் தீய எண்ணத்திற்குப் பதிலாக அந்த இடத்திற்குப் பொருந்தக் கூடிய நல்ல எண்ணத்தைப் பாவனை செய்து மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். தீய எண்ணம் வேண்டாம் என்ற சங்கல்பமும், அதற்குப் பதிலாக நாம் எண்ணும் நல்ல எண்ணமும் திரும்பத் திரும்ப அழுத்தம் பெறும்போது தீய எண்ணம் மறைந்து நல்ல எண்ணமே நமது குணமாக மாறிவிடும்.
இவ்வாறுதான் எண்ணத்தை ஆராய்ந்து திருத்திக் கொள்ள வேண்டும். எனவே எண்ணத்தில் எழுகின்ற திருத்த வேண்டிய 6 குணங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
1. பேராசை:
முதலாவது ஆசை தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. ஆசை இல்லாத மனிதன் உலகத்தில் இல்லை. மண் ஆசை, பொன் ஆசை, பெண் ஆசை என்று சொல்வார்கள். அது பேராசையாக மாறுகின்ற போதுதான் பிரச்சினையே ஆரம்பிக்கின்றது. பேராசை நிறைவேறாத போது சினம் வரும். மண்ணைப் பிடிக்க இப்போது என்னவெல்லாம் உலகநாடுகளில் நடப்பதை நீங்கள் அறியாமல் இல்லை. தேவைக்கேற்ப ஆசைப்பட வேண்டும். உதாரணமாக எனக்கு தியானம் செய்வது ஆசை. அதைப் பேராசையாக்கி நாள் முழுவதும் தியானத்தில் இருந்தேனென்றால், என்னுடைய குடும்பம் என்னவாவது இப்போது என்னுடைய பேராசை என்னை மேலும் பாவத்திற்கு உள்ளாக்கி விடும்.
ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
ஆசைப் படப்பட ஆய் வருந்த துன்பங்கள்
ஆசை விட விட வானந்தம் ஆமே என்று திருமூலர்
சொல்லுகின்றார்.
ஆசை அதிகமானால், பேராசை ஏற ;படும ;. ஆசை காரணமாக அனைத்தும் வேண்டும் என்று நினைத்து பிறருக்குக் கொடுக்காமல் தானே அனுபவித்தல் கடும் பற்று. ஆசைப்படுவது கிடைக்காத போது சினம். ஆசை மூலம் பொருள் புகழ் செல்வாக்கு போன்றவற்றைப் பெற்று அதன் மூலம் மற்றவர்களை உயர்வு தாழ்வாக எண்ணுதல். கோபம் ஏற்படும் போது ஏற்படும் வெறுப்பு வஞ்சினம். எனவே ஆரம்பம் ஆசை அதிலிருந்து சங்கிலித் தொடர் போல ஒவ்வொரு மனநிலைகளும் மனிதனுக்கு ஏற்படும்.
எனவே பேராசையை சீரமைக்க வேண்டும். ஆசை ஏற்படுவதற்குக் காரணம் என்ன? பேராசை எப்படி ஏற்படுகிறது. அழகான வைர மூக்குத்தி எனக்கு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த மூக்குத்தி அழகாக இருக்கிறதே அதைப் போலவே இன்னும் ஒன்று கொஞ்சம் சின்னக் கல் வைத்ததாக இருக்கிறது. அப்போது ஆசை அடுத்ததுக்கு மாறும். இப்படி ஒவ்வொன்றாக ஆசை பெருத்துக் கொண்டே போகும். இதனால், எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அந்தப் பணம் வாழுவதற்குப் போதாததாக இருப்பது நிச்சயம். இனால், தற்கொலை, குடும்பத்தில் பிரச்சினை, கணவனை எதிர்த்துப் பேச வேண்டிவரு என்று இழப்புகள் அதிகரிக்கும். மனிதன் உயிர் வாழ்தற்கு அத்தியாவசிய தேவையாக இருப்பது உணவு, உடை, உறையுள் இவை தவிர சமூகத்திலே வாழ்வதற்கு முக்கிய தேவையாக பணம் அவசியம். அந்தப் பணம் அளவுக்கு அதிகமாக இருந்தால், எதைச் செய்வதென்று அறியாமல் அந்தப் பணத்தின் மூலம் தகாத காரியங்களில் ஈடுபட வேண்டி வரும். பணம் பெருகப் பெருக மேலும் மேலும் பணத்தைச் சேர்க்க வேண்டும் என்ற பேராசை தோன்றும். இது தீய பழக்கவழக்கங்களுக்கு இட்டுச்; செல்லும். தகாத வழிகளில் எல்லாம் பணத்தைச் சேர்க்க மனம் விரும்பும். தேவைக்கு ஒரு வாகனம் இருக்கலாம். அந்த வாகனம் எம்முடைய வருமானத்துக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். ஆனால், கடன்பட்டு ரெஸ்லர் வாங்கி. அந்தக் கடனை அடைப்பதற்காக மேலும் மேலும் கடன்பட்டு குடும்பத்தில் பிரச்சினை வந்து இறுதியில் மனஅழுத்தத்தில் விழுவதுதான் முடிவாக இருக்கும். இதைவிட ஒரு வீடு வாழ்வதற்குப் போதுமானது. இல்லை வசதி இருக்கிறது என்று இன்னும் பல வீடுகள் வாங்குவது எதற்காக? இந்த பூமியே எங்களுக்குச்சொந்தமில்லை. என்றோ ஒருநாள் பூமியை விட்டுப் போகத்தான் போகின்றோம். இது நிச்சயம். எதற்காக தேவைக்கு அதிகமாக சொந்த வீடு என்று சொல்லி பெருமை பேசுகின்றோம். மாவீரன் அலெக்ஸாண்டர் தன்னுடைய மரண ஊர்வலத்தின் போது தன்னுடைய இரண்டு கைகளும் வெளியே தெரியும் வண்ணம் கொண்டு செல்லும்படிக் கூறினாராம். காரணம் எவ்வளவோ நாட்டைப் பிடித்துச்செல்வங்களைச் சேர்த்த அலெக்ஸாண்டர் இறுதியில் வெறுங்கையுடன்தான் போகின்றார் என்று மக்கள் அறிய வேண்டும் என்றாராம். தேவைக்கு அதிகமாக ஆசைப்பட்டு சேர்க்கின்ற எதுவுமே இறுதியில் எமக்குச் சொந்தமாவதில்லை
அதனால், ஆசை எழுகின்ற போதே இந்த ஆசையால் நல்லதா? தீயதா ஏற்படும் என்று முதலிலேயே சிந்தித்துப் பார்க்க வேண்டும். சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும். ஆசை அசியமா? அவசியம் இல்லையா? ஆசையை நிறைவேற்ற தேவையான உடல் மனம், பொருளாதார வலிமை உண்டா? இதனால் ஏற்படும் பின்விளைவுகள் நன்மையா? தீமையா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். போதும் என்ற மனமே பொன் செய்யும். எனவே பேராசையை நீக்குவதற்கு நிறை மனமே சிறந்தது. எனறு மகரிஷி சொல ;லுகிறார ;.
2. கடும்பற்று:
உறவிலேயோ பொருளிலேயோ அளவுகடந்த பற்று வைத்தால் அதுதான் கடும்பற்று. ஒரு நாட்டில் கடும்பற்று வைத்த ஹிட்லரால் ஜெர்மனிக்கு நடந்த கதை எல்லோருக்கும் தெரிந்ததுதானே. 60 இலட்சம் யூதர்களைக் கொன்று குவித்தார். இறுதியில் வாழ்ந்தாரா? அவருடைய இராணுவ வீரர்கள் இரஷ்ய நாட்டுக் காலநிலைக்குப் பழக்கப்படவில்லை. தற்கொலை செய்து கொண்டார். கடும்பற்று அழிவைத்தான் கொண்டுவரும். இவ்வாறான கடும்பற்றை நீக்க சீரமைக்க என்ன செய்ய வேண்டும். அதனை ஈகையாக மாற்ற வேண்டும் என்று மகரிஷி சொல்லுகின்றார். இல்லாதவர்களுக்குக் கொடுங்கள் என்கின்றார். கடும்பற்றை விடுங்கள் என்கிறார். தாய் தன்னுடைய மகன்மேல் அளவுகடந்த பற்று வைத்தால் மருமகள் நிலைமையை நினைத்துப் பாருங்கள். என்னுடைய மகன். நான்தான் சொந்தம் கொண்டாடுவேன் என்று சொல்ல முடியுமா? இந்தப் பற்றாலே ஜெர்மனியிலே எத்தனையோ குடும்பங்கள் விவாகரத்துச் செய்திருக்கின்றன. என்ன செய்ய வேண்டும் கடும்பற்றை விட்டுவிட வேண்டும். தன்னுடைய மகனை மருமகளுக்குத் தாரைவார்த்துக் கொடுக்க வேண்டும். தன்னுடைய பணி முடிந்தது. அதைச் செய்வதற்கு வேறு ஒருத்தி வந்துவிட்டாள் என்ற எண்ணம் ஏற்பட வேண்டும். அதேபோல் மகனும் தாயில் கொண்டிருக்கின்ற கடும்பற்றைத் தன்னுடைய மனைவிக்கு ஈகை செய்ய வேண்டும். எனவே கடும்பற்றை ஈகையாகவே சீரமைக்க வேண்டும். இந்தப் பற்று இறை உணர்வுக்குத் தடையாகவே அமையும். தொடர்பு கொண்டுள்ள பொருட்களிடம் உணர்ச்சிவயமான பற்றுக் கூடாது.
3. சினம்:
கோபம் என்பது ஒரு தற்கொலை. கோபக்கனல் என்பார்கள். கோபப்படும்போது இரத்த அழுத்தம் கூடுகிறது. உடல் வெப்பமாகிறது.
'தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.'
என்று வள்ளுவர கூறுகின்றார்.
துன்பம் வராமல் தன்னைத்தானே காக்கவேண்டுமாயின், சினம் வராமல் காத்துக் கொள்க. சினத்தை அடக்காவிடில் அது தன்னையே அழித்துவிடும். அதற்கு என்ன செய்ய வேண்டும்.
தன்னைத்தான் காதலனாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினையின் பால்
வேதாத்திரி மகரிஷி அவர்கள், சினத்தைப்பற்றி கூறும்பொழுது, சினம் எழுந்தால் உடலையும், மனத்தையும் கெடுக்கிறது. அது பிறர் உள்ளத்தையும் புண்படுத்துகிறது. தன்னையும் கெடுத்துப் பிறரையும் கெடுத்து, தற்காலத்திலும், துன்பம் உண்டாக்கிப் பின்னரும் துன்பத்தை நீட்டிக்கச் செய்யும் ஓர் உணர்ச்சி வயப்பட்ட பகை உணர்வு சினமாகும் என்கிறார்.
'சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமாப் புணையைச் சுடும்.' - குறள்.
சினம் என்று சொல்லப்படும் நெருப்பு ஒருவனை அழிப்பதோடு, அவனுக்குத் தெப்பமாக உதவும் உறவினரையும் அழித்துவிடும்.
வேதாத்திரி மகரிஷி சினத்தினால் வரும் கேட்டினைப்பற்றி சொல்லும்போது,
'பிளவுசெய் சினம், குருதி அழுத்தம், மார் நோய்,
பித்து, புண், கண் நோய்கள், தாது மூளை
வளமழிவு செய்யும்.' என்று ஞானக்களஞ்சியம் நூலிலே சொல்கிறார்.
சினம் கொள்ளல் தற்கொலைக்கு ஒப்பாகும் என்றால் அது மிகையாகாது. சினம் கொள்ளல் ஒரு பழக்கமாகவேகூட மாறிப்போகும். முதலில் ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு சினம் வந்தாலும், பிறகு பழக்கத்தின் விளைவாக காரணம் இல்லாமலேகூடச் சினம் வரும். சினம் தணிந்தபின் சினத்தின் விளைவை எண்ணி வருந்தினாலும், பிறகு அந்தச் சினம் வரும்போது அதனின்றும் தப்ப முடியாது. சினம் வரும்போது முகம் விகாரமடைகிறது. கோபம் வரும்போது முக அழகு கெடுவது மட்டுமன்று, உடல் நடுங்கும், கண்கள் சிவக்கும், நாக்குழறும், மனம் தடுமாறும், உயிராற்றல் அதிகமாக வெளியேறுகிறது, நரம்புகள் படபடப்பு ஏற்பட்டு பலவீனம் அடைகின்றன, இன்னது செய்கிறோம், இன்னது பேசுகிறோம் என்று தெரியாது. சினம் தணிந்த பிறகும்கூட முன் நடந்ததை எண்ணிப் பார்க்க வராது.
எந்த இடத்தில் சினம் வந்தால் அது பலிக்குமோ அந்த இடத்தில் அதைக் காப்பவனே சினத்தை அடக்கியவன். பலிக்காத இடத்தில் அடக்கினால் என்ன? அடக்காவிடில்தான் என்ன? ஒரு கணவன் இன்ரவியூக்குப் போவதற்கு ஆயத்தமாகின்றான். அழகான வெள்ளை சேர்ட் அணிந்திருக்கின்றான். அவனுடைய மனைவி அவசரத்தில் வருகின்ற போது கையில் கொண்டு வந்த தேநீரை அவனில் ஊற்றி விடுகின்றாள். சேர்ட் தேநீரால் நனைந்து விட்டது. இப்போது என்ன நடக்கும். அந்த நேரத்தில் அவள் வேண்டுமென்று செய்யவில்லை. தெரியாமல் நடந்துவிட்டது என்று பொறுமை காப்பவன்தான் சினத்தை அடக்குபவன். அதைவிடுத்து அவள் வேண்டுமென்றே செய்தவள் என்பது போல தாம் தூம் என்று குதித்து தன்னுடைய இன்ரவியூவையே நாசம் செய்பவன் மனைவி அல்ல. அந்த சினம் கொள்ளும் கணவனே.
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி சினமும் அச்சமும் வாழ்வை சீர்குலைக்கும் என்பதனை
ஒரு கவியில் இயம்புகின்றார்.
சினம் அச்சம் ஒழிய சிந்தனையை ஏற்றி
சிவன் சீவன் நிலைகளை நன்குணர வேண்டும்.' - ஞானக்களஞ்சியம் 1430
சினம் கவலை எனும் இரண்டும் மனிதர் வாழ்வைச்
சீரழிக்கும் நச்சாகும் உணர்ந்து கொள்வீர்.
மன வலிவும் உடல் வலிவும் முயற்சி மற்றும்
மதி நுட்பம் ஆராய்ச்சி குலைந்து போகும்.
தினம் சிறிது நேரம் இதற்கென ஒதுக்கி
சிந்தித்துச் சீர் திருத்த இவ்விரண்டு
இனமும் இனி என்னிடத்து எழாமல் காப்பேன்.
என்று பல முறை கூறு வெற்றிகிட்டும்.' என்கிறார்.
கோபத்தினால் மன அலைச்சுழல் இயக்க வேகம் வினாடிக்கு 14 சுற்றுக்கு மேல் 25 சுற்று, 30 சுற்று என்று உயரும்போது உடலிலிருந்து உயிராற்றல் அதிகமாக வெளியேறும். இவ்வாறு மன அலைச்சுழல் வேகம் வினாடிக்கு 40 சுற்று என்ற அளவினை நெருங்கும்போதுஉயிரின் அபரிமிதமான வெளியேற்றத்தினால், உயிரின் ஆற்றலின் அளவும் செறிவும் குறைந்து போக மரணம் சம்பவிக்கிறது என்கிறார் வேதாத்திரி மகரிஷி.
தனக்கும் பிறர்க்கும் தீங்கு தருகின்ற இந்தச் சினத்தை ஒழித்தேயாக வேண்டுமென்று முடிவுகட்ட வேண்டும். அந்த முடிவைப் பலமுறை எண்ணி அழுத்தமாக மனத்திலே பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும், சினம் கொண்டவரிடையே பொறுமை காத்தல் வேண்டும். நம்மிடம் சினம்கொள்ளக் காரணமாக இருந்தவரிடம் இன்னும் ஒருபடி மேலே சென்று அவரே நாணும்படி மன்னித்து நன்மையே செய்துவிட வேண்டும்.
'சினத்தினால் திருத்தம் வரவே வராது.
சினத்தினால் ஏதாவது வரும் என்றால்
அங்கு வருத்தம் தான் வரும்'..
சினத்தைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்.
ஓய்வான ஒரு நாளில் அமைதியான நேரத்தை தேர்ந்து எடுத்து அதில் கால்மணி நேரம் தவமியற்ற வேண்டும். யார் மீது சினம் வருகிறதென்று ஒரு பட்டியல் தயாரிக்க வேண்டும். யார்யார் மீது அடிக்கடி கோபம் வருகிறதோ அவர்களை வரிசைப்படுத்தி எழுதிக்கொண்டு பார்ப்போமேயானால் பட்டியலில் முதலில் வரும் பெயர்கள் நெருங்கிய தொடர்புடையவர்களாக இருப்பார்கள். அதாவது வாழ்க்கைத் துணை, பிள்ளைகள், பெற்றோர், அலுவலக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், உடன் பிறந்தவர்கள், நண்பர்கள் போன்றோர் அந்த பட்டியலில் அடங்கும். பிறகு பட்டியலில் உள்ள ஒவ்வொருவராக எடுத்துக்கொண்டு அவருக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன? சினம் எழக் காரணம் என்ன? சினம் எழுதலில் எனது பங்கு என்ன? ஏதேனும் முன் அனுபவம் உள்ளதா? என ஆராய்ந்து 'இனி இவரிடம் சினம் கொள்ள மாட்டேன்' என்று சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும். மேலும் அவரை வாழ்க வளமுடன் என்று வாழ்த்த வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு நாளும் சினம் கொள்ளும் ஒவ்வொரு நபராக எடுத்துக்கொண்டு ஆராய்ந்து சங்கல்பம் ஏற்று வாழ்த்தும்போது சினத்தை எளிதாக வெல்ல முடியும் என தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி கொடுத்துள்ளார்கள். சினத்தைப் பொறுமையாக மாற்ற வேண்டும்.
4. உயர்வு தாழ்வு மனப்பாங்கு:
ஆசை, பொருள், புகழ், செல்வாக்கு இவற்றிலே மனத்தைச்செலுத்தி அதன் மூலம் மற்றவர்களை உயர்வாகவோ, தாழ்வாகவோ எண்ணுகின்ற மனப்பாங்கு மனிதர்களின் மனத்திலே அமைதியற்ற நிலையை உருவாக்கும். பெருக்கத்து வேண்டும் பணிவு என்பார்கள். நாம் எந்த அளவுக்கு கல்வி செல்வத்தால் உயருகின்றோமோ அந்த அளவுக்கு பணிவு எமக்கு ஏற்பட வேண்டும். கற்ற கல்வியும் தேடிய செல்வமும் எமக்கு ஒரு பொறுப்புணர்ச்சியை ஏற்படுத்தி விடுவதுடன், பக்குவத்தையும் கொண்டு வந்துவிட வேண்டும். அதன் மூலம் உயர்வு தாழ்வற்ற நிலையை எமது மனம் கடைப்பிடிக்கும். மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே என்று கணியன் பூங்குன்றனார் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று தொடங்கும் பாடலிலே கூறுகின்றார். பெரியோரை நாம் வியக்கும் போது அவர்களுடன் உறவினர்கள் போலப் பழக முடியாது. எல்லோரும் உறவினர்கள் என்று எண்ணுகின்ற போது நெருங்கிப் பழகக் கூடியதாக இருக்கும். கணவன் மனைவியிடையே ஏற்றத்தாழ்வு பார்க்கின்ற போது போட்டி மனப்பான்மை வந்துவிடும். நட்பு நிலைக்காது. ஒருவன் என்னை விட அவன் உயர்த்தி என்று பாரத்தால் அவனோடு போட்டி போடச் சொல்லும் மனம். பொறாமைப்பட வைக்கும். பொறுக்க முடியாத தன்மைதான் பொறாமை என்னைவிடத் தாழ்ந்தவன் என்று பார்க்கும் போது அடிமைப்படுத்த மனம் துணியும். பொறாமை என்பது தீயைப் போன்றது. மனத்தைக் கருக்கி விடும். என்னை விட அவன் உயர்வாக இருக்கின்றானே என்று நினைக்கின்ற போது வயிறு பற்றி எரியும். மனம் நிம்மதியடையாது. பொறாமை நல்லதை எண்ண மனம் விடாது. எனவே ஏற்றத்தாழ்வை சீரமைக்க வேண்டும் என்றால் மனத்திலே நேர்நிறையுணர்வை ஏற்படுத்த வேண்டும்
5. வஞ்சினம்:
கோபம் அல்லது சினம் வரும்போது ஏற்படும் வெறுப்பே வஞ்சினம். இப்போது திரைப்படங்களில் காட்டப்படுவது வஞ்சினம்தான். வச்சிச் செய்தல் என்பார்கள். மனைவியின் தம்பி ஒரு துரோகம் செய்து விடுகின்றான். அன்றிலிருந்து அவனை அழிப்பதற்கு துரியோதனன் திரௌபதி மேல் வச்சிச் செய்த வஞ்சினம்தானே இந்த மகாபாரத யுத்தத்தையே ஏற்படுத்தியது. துரியோதனன் விழுந்த போது அவள் சிரித்தாளாம். அதனால் அவளை மானபங்கப்படுத்த நினைத்தான். துகிலுரிந்தான். எத்தனை நடந்தது. பெரும் யுத்தமே நடந்து உயிர்கள் அழிந்தது. இதுதான் வஞ்சினத்தால் வருகின்ற இழப்பு. ஏதோ காரணத்தால் ஒருவரில் சினம் வருகின்றது. செய்யக் கூடாத ஒரு செயலை அவர் செய்து விட்டார். அவரைப் பழிவாங்கியே தீர வேண்டும் என்று காத்திருந்து பழி தீர்க்க நினைத்தலே வஞ்சினம். குடும்பங்களிலே இந்த நிலைமையைப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. வருடங்கணக்கிலே இந்த பகை வளர்ந்து போகின்ற நிலையை அறியக்கூடியதாக இருக்கின்றது. அறியாமையில் செய்து விட்டான், என்று மன்னிக்கின்ற பக்குவமே அந்த வஞ்சினத்துக்கான சீரமைப்பாக இருக்கும். சினத்தை மன்னிப்பாக மாற்றலாம்.
6. முறையற்ற பால் கவர்ச்சி:
முறையற்ற எண்ணத்தோடு மாறுபாலை நாடி வந்தால், அதுவே முறையற்ற பால் கவர்ச்சி. பால் கவர்ச்சி மனிதனுக்கு அவசியம். அபப்டித்தான் இயற்கை அமைந்திருக்கின்றது. சந்ததியை வளர்க்க அது அவசியம் தேவை. எமது நெருங்கிய உறவினர்களான சிம்பன்சிகள் மற்றும் பொனபோக்களிடம் தம்முடைய சநததியை வளர்க்க பல ஆண்களுடன் தொடர்பை வைத்திருக்கும். அதனால், அநதக் குழந்தைகளுக்குத் தந்தை யார் என்று தாய் சிம்பன்சிக்கே தெரியாது. இதுபோலவே நம்முடைய மூதாதையார் குழந்தைகளைப் பெற்று சந்ததி விருத்தி செய்தார்கள். இன்றைய மனிதக் கலாச்சாரங்கள் பலவற்றிலும் கூட்டுத் தந்தைமை முறை கடைபிடிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 'பாரி' இந்தியர்களிடையே இப்பழக்கம் நிலவுகிறது. ஒரு குழந்தை தனியொரு மனிதனின் விந்தணுவிலிருந்து பிறக்கவில்லை, மாறாக ஒரு பெண்ணின் கருப்பையில் சேகரிக்கப்பட்டுள்ள பல விந்தணுக்களிலிருந்து பிறக்கிறது என்று அப்படிப்பட்டச் சமுதாயங்கள் நம்புகின்றன. ஒரு நல்ல தாய், பல்வேறு ஆண்களுடன் உடலுறவு கொள்ளுவதில் தீவிரமாக இருப்பாள். குறிப்பாக, அவள் கருவுற்றிருக்கும்போது அவள் அதில் அதிகத் தீவிரமாக இருப்பாள். ஏனெனில், தன்னுடைய குழந்தை வெறுமனே ஒரு சிறந்த வேட்டையாடியின் பண்புநலன்களை மட்டுமல்லாமல், கதை சொல்லுவதில் திறமை பெற்ற ஒருவன், மிக வலிமையான மாவீரன் ஒருவன், மிகுந்த கரிசனம் கொண்ட ஒரு காதலன் ஆகியோரின் பண்புநலன்களையும் சுவீகரிக்க வேண்டும் என்று அவள் விரும்புவாள். அதோடு, இத்தனைப் பேரும் தன் குழந்தையை வளர்ப்பதில் பங்கு கொள்ள வேண்டும் என்றும் அவள் விரும்புகிறாள். கேட்பதற்கு இது அபத்தமானதாக இருந்தால், நவீனக் கருவியல் ஆய்வுகள் தோற்றுவிக்கப்படுவதற்கு முன்புவரை, குழந்தைகள் எப்போதும் ஒரே ஒரு தந்தையின் மூலமாக மட்டுமே பெற்றெடுக்கப்பட்டதற்கான வலிமையான சான்றுகள் எதுவும் மக்களிடம் இருக்கவில்லை. ஆனால், இதன்மூம் கிடைக்கின்ற தாய் சேய் நோய்கள், தாய், சிசு மரணங்கள், குடும்பப் பிரச்சினைகள் இவற்றை கவனத்தில் கொண்டு ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாசாரம் ஏற்படுத்தப்பட்டது. முறையற்ற பாலுணர்வு இவ்வாறானதாக மட்டுமன்றி வன்புறவாக இக்காலத்திலே பல்கிப் பெருகி இருக்கின்றது. பெண்ணுக்கோ ஆணுக்கோ பிடிக்காமல் வன்புணர்வில் ஈடுபடுதல் இதனை பத்திரிகைகின் மூலமாக நீங்கள் அறிந்து வருகின்றீர்கள்.
கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுமல்லால் ஆணுக்கும் பொது என்று
கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம். என்று பாரதி பாடினார்.
கணவன் மனைவி இருவரும் கற்பு நெறி காத்து ஒழுக்கத்தோடு இருக்கும் போது அந்த உறவு நிறைவானதாகவும் புனிதமாகவும் இருக்கும். சலனமற்ற உள்ளம் பெற்றிருப்பார்கள். இருவரும் பிணக்கு ஏற்படாமல் மகிழ்ச்சியாக இருப்பார்கள். 'கருவிலே திருவுடையார்' என்பதைப் போல அறிவும் ஆற்றலும் ஒரு சேர அமைந்த தெய்வீக குழந்தைகளைப் பெறலாம். அப்படியில்லாமல் இருவரில் ஒருவர் தவறு செய்தாலும் வாழ்க்கைத்துணையையும்இ குழந்தை பிறப்பிலேயும் பாதிப்பை ஏற்படுத்தும். கருத்தரித்தல் என்பது இருவரையும் பொறுத்தே அமைகின்றது. ஆகவே இளமைப் பருவம் என்பது வாழ்க்கையில் முக்கிய திருப்பத்தை உண்டாக்கக் கூடிய பருவம். அந்தப் பருவத்தில் தான் ஒருவருடைய வளர்ச்சியும் முன்னேற்றமும் அடங்கியுள்ளது. என மகரிஷி எடுத்துரைக்கின்றார். அதாவது முறையற்ற பாலுணர்வுக்கு தீர்வு கற்புநெறியே.
இந்த ஆறுவகை மனித மனோ நிலைகள் எழுச்சி பெறும்போது உடல்நோய் கூட ஏற்படும் என்று மகரிஷி கூறுகின்றார்
உளவியலை ஆராய்ந்தால் அறு குணங்கள்
உடலில் நோய்பல விளைத்தல் அறிந்து கொள்வோம்.
அளவிலா விருப்பு கடும்பற்றிரண்டும்
அல்லல் தரும் குன்ம நோய் உண்டுபண்ணும்;
பிளவு செய் சினம் குருதிஅழுத்தம், மார்நோய்
பித்து, புண், கண்நோய்கள், தாது, மூளை
வளமழிவு செய்யும்; மிகை மோகம் குட்ட
வகை கண்நோய்கள், நீரிழிவு செய்யும்; வஞ்சம்
உள அமைதி, உடல் வலுவு போக்கி மார்நோய்
உண்டாக்கும், தொடர்புநோய் பலவும் காட்டும்.'
என்கிறார். அதனால், அவற்றைச் சீரமைக்க வேண்டும் என்றால்,
விருப்பம் சினம் வஞ்சம் மதம் பால்கவர்ச்சி
விளைவறியா கடும்பற்று என்ற ஆறும்,
உருக் குலைந்து நிறைந்த மனம், சகிப்புத்தன்மை,
உளமார்ந்த மன்னிப்பு, மெய் உணர்வு,
கருத்துடைய கற்பு நெறி, ஈகை என்ற
களங்கமிலா நற்குணங்க ளாக மாற்றும்,
பொருத்தமுள உளப்பயிற்சி முறை பயின்று,
புகழ் இன்பம் அமைதி பெற வாரீர்! வாரீர்!
இவ்வாறு 6 குணங்களையும் சீர்ப்படுத்தவில்லையானால் 5 பழிச்செயல்கள் உண்டாகும். பொய், கொலை, களவு, சூது, விபச்சாரம் ஆகிய பஞ்சமாபாதங்கள் உருவாகும். இதனால், அவனுடைய வாழ்க்கை தனக்கும் பிறருக்கும் துன்பத்தையே விளைவிக்கும். அறுகுணங்களை சீரமைத்து வாழ்ந்தால், வாழ்க்கையில் நீண்டகால வினைப்பதிவுகள் நீங்கும், இறையுணர்வும் தவம் செய்வதில் ஒரு விருப்பும் ஏற்படும். தூய்மை அடைவான். தனக்கும் பிறர்க்கும், தற்காலத்திலும், பிற்காலத்திலும், அறிவிக்கும், உடல் உணர்ச்சிக்கும் வருத்தம் எழாத அளவிலும், முறையிலும் செயலாற்றி இன்பமாக வாழலாம்.
எனவே மனதிலே பொருள்களில் பற்று, மக்களில் பாசம் உணர்ச்சிவசப்பட்ட எண்ணங்கள் செயல்கள் இவையெல்லாம் முன்னிலையில் இருக்கும். இந்தக் கருமைய ஆற்றலில் ஒரு பகுதியை மேலே அமைந்திருக்கின்ற ஆக்கினை துரியம் ஆகிய மையங்களுக்கு கொண்டு வந்தால், மனிதனிடம் இறையுணர்வும் உயிர் விளக்கமும் அறநெறி நின்று வாழும் தன்மையும் உண்டாகும். அதனால் இந்த அகத்தவ முறையைத் திறமையுள்ள ஒரு குருவின் மூலம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு இளம் வயதிலே கிடைத்தது என்று மகரிசி சொல்வது போல எனக்கு கொரொனா காலப்பகுதியில் கிடைத்தது. குரு கோபால்ஜி அவர்கள் அற்புதமாக ஆன்மீகக் கல்வியைப் போதித்தார்.
அந்த பாக்கியம் உங்களுக்கும் கிடைத்திருக்கின்றது. அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய ஆறு குணங்களை சீர்ப்படுத்தி வாழுங்கள் என்று கூறி சந்தர்ப்பத்துக்கு நன்றி பாராட்டி விடைபெறுகின்றேன். வாழ்க வளமுடன்