• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    திங்கள், 14 அக்டோபர், 2019

    அசட்டு மாப்பிள்ளை நாடக நூல் பற்றிய ஒரு கண்ணோட்டம்




    நாடக இலக்கியங்கள் அருகிப் போன இக்கால கட்டத்திலே வரணியூரானின் அசட்டு மாப்பிள்ளை என்னும் நாடக நூல் எனக்குக் கிடைத்தது. இந்த நூலைத் தில்லை நூலகம் வெளயீடு செய்து வைத்துள்ளது. 1975 ஆம் ஆண்டு மேடையேற்றப்பட்டு அந்த ஆண்டே நூலாகவும் வெளிவந்துள்ளது, 44 ஆண்டு காலப்பகுதி கடந்த நிலையிலும் சமூகத்திற்கு இக்கருத்துக்கள் தேவைப்படுகின்றது என்று நினைக்கும் போது மனிதன் இலத்திரனியலில் வளர்ந்துள்ளதுள்ள அளவிற்கு மனிதப்பண்பில் வளரவில்லை என்றே தோன்றுகின்றது. 1994 இல் இரண்டாவது பதிப்பு வெளிவந்தது. 

    ஒரு இலக்கியம் என்ன வடிமாக இருந்தாலும் சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்களை வித்திட்டுப் போக வேண்டும் என்பது என்னுடைய ஆழமான கருத்தாக இருக்கின்றது. அந்த வகையில் இந்த நூல் முழு திருப்தியைத் தந்திருக்கின்றது. 9 கதாபாத்திரங்கள் இந்நாடகத்தில் வலம் வருகின்றார்கள். திருக்குறள் சிறந்தது என்று கூறினால் மட்டும் போதாது. அதன் கருத்துக்களைப் பரப்புவதற்கு பொருத்தமான இடங்களில்  பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த நாடக ஆசிரியர் இந்நாடகத்தின் மூலம் வலியுறுத்தியுள்ளார். ஆங்கிலம் என்பது தேவைப்படும் மொழி. ஆனாலும் தேவையற்ற பொழுதுகளில் அதனை பயன்னடுத்த வேண்டிய அவசியமில்லை என்பதை ஆசிரியர் நிரூபித்துக் காட்டியுள்ளார். பண்டிதர் கதாபாத்திரம் என்பது ஒரு ஆசிரியர் பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியராக மாத்திரம் இருக்க வேண்டியது அவசியமில்லை. ஒரு மாணவனைச் சரியான முறையில் வாழ்க்கையில் வழி நடத்தக் கூடிய பண்புகளைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்பதை பண்டிதர் கதாபாத்திரம் மூலம் வரணியூரான் அவர்கள் வலியுறுத்தியிருக்கின்றார்.

    பாத்திரப் படைப்புக்கள் கச்சிதமாக அமைந்திருக்கின்றன. அசட்டு மாப்பிள்ளையானவர் அறிவாளி என்பதை மாமனார் பார்த்த மாத்திரத்தில் புரிந்து கொள்வது சிறப்பாக இருக்கின்றது. பொதுவாகவே சமூக சீர்திருத்தவாதி வெகுசன விரோதி என்றே உலகத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. இதனாலேலே சோக்கிரட்டீஸ் சிறையில் அடைக்கப்பட்டார். எம்மிடையே நியாயத்தை எடுத்துச் சொல்பவர்கள் சபைக்கு உதவாதவர்கள் என்று கருதுகின்ற இக்கால கட்டத்தில் இந்நாடக ஆசிரியர் அழகாக நாடகத்தை நகர்த்திச் சென்றிருக்கின்றார். 

    அசடாக இருந்தாலும் அறிவாளி. ஒரு திருமணத்திற்கு அழகு மட்டும் தேவையில்லை. அசடாக இருந்தாலும் வாழ்க்கையை நேர்மையான வழியில் சமூகத்திற்கு நன்மை பயக்க வாழ்பவனே சிறந்த மாப்பிள்ளை என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். சீதனம் என்பது உழைத்துச் சம்பாதிக்கத் துணிவில்லாதவனே பெற்றுக் கொள்வது எனபதை அசட்டு மாப்பிள்ளை வாயிலாக உலகத்திற்கு ஆசிரியர் உணர்த்தியுள்ளார். பணமுள்ள பாக்கியவான்கள் திருமணம் ஆகாத கன்னிப் பெண்களுக்கு புனர்வாழ்வு நிலையம் ஆரம்பித்துக் கொடுக்கலாம் என்றும் சிந்திக்க வைத்துள்ளார். 

    ஒரு நாடகம் ஒரு திரைப்படம் போல் தாக்கத்தை ஏற்படுத்தியதை நான் உணர்ந்தேன். வரிக்கு வரி அற்புதமான சிந்தனைகள் திருக்குறள் ஊடாக இழையோடிக் காணப்பட்டன. 

    காலம் கடந்தாலும் நல்ல சிந்தனைகள் வாசகரால் வரவேற்கப்படும் என்பதற்கு இந்நூல் ஒரு எடுத்துக்காட்டு. நாடக ஆசிரியருக்கு வாழ்த்துகள். இந்நூலை மறுபதிப்புச் செய்த உடுவை எஸ். தில்லைநடராசா அவர்களுக்கு மிக்க நன்றி.

    1 கருத்து:

    1. திருக்குறள் கருத்துக்களைப் பரப்புவதற்கு பொருத்தமான இடங்களில் பயன்படுத்த வேண்டும், எனும் நாடக ஆசிரியர் அவர்களுக்கும், தங்களின் ஆழமான கருத்துக்கள் தொடரவும் வாழ்த்துகள்...

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...