• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    திங்கள், 3 ஜூன், 2013

    ஜேர்மனிய கல்விமுறை

        

    கல்வி என்பது அனைத்து நாடுகளிலும் சகலருக்கும் ஊட்டப்படும் அறிவு ஊக்குவிப்பு உணவே. அதனை உலகநாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான கல்வித்திட்டங்களை உருவாக்கி அதற்கமைய அறிவைப்  போதிக்கின்றன. ஜேர்மனியநாடு அறிவென்னும் அங்குசத்தை மக்களுக்கு விதைப்பதற்கான கல்விமுறையினை வகுத்திருக்கும் பாங்கினை இக்கட்டுரையிலே நோக்குவோம்.

              இங்கு ஒரு குழந்தை 2 வயது வரும்போது மழலைகள் பாடசாலைக்குச் (Kindergarten) செல்வதற்கு ஆயத்தமாகிவிடும். பெற்றோர்கள் பிள்ளைகள் பிறந்தவுடன் பிள்ளைகள் பற்றிய விபரத்தை இளையோருக்கான நிறுவனத்தில் (
    Jugendamt) பதிவுசெய்து விடுவார்கள். அந்நிறுவனம் பிள்ளை இப்பாடசாலைக்குச் செல்வதற்கான வயது வரும்போது, அவரவர் வீட்டிற்கு அருகாமையிலுள்ள மழலைகள் பாடசாலைகளைப் பெற்றோருக்கு அறிமுகப்படுத்தும். அப்போது பெற்றோர் தமது பிள்ளைக்குச் சௌகர்யமான மழலைகள் பாடசாலையைத் தெரிவு செய்வார்கள். அங்கு பிள்ளையைப் பதிவு செய்து அனுப்புவார்கள்.

             இங்கு 2 வயதிலிருந்து 6 வயது வரை பிள்ளையானது பிற பிள்ளைகளுடன் இணைந்து கல்வியைத் தொடர்வதற்காகவும் ஆளுமையுள்ள ஒரு பிள்ளையாக வளர்வதற்குமான பயிற்சியளிக்கப்படும். இப்பயிற்சியில் விளையாட்டுக்கள், மைதானத்தினுள்ளும் வகுப்பறையினுள்ளுமென நடைபெறுகின்றன. அத்துடன் பிள்ளைகள் மனநிலையைப் புரிந்து கொள்ளும் வகையில் படம் வரைதல், நிறந்தீட்டுதல் போன்ற கலைப்படைப்புக்களும் கற்றுத் தரப்படும். சுதந்திரமாகத் தொழிற்பட்டு கற்றல் விளையாட்டுடன் நடைபெறுவதனால், இம்மழலைகள் பாடசாலைக்குச் செல்வதற்குப் பிள்ளைகள் தயங்குவதில்லை. இங்கு அதிகார அடக்குமுறையில்லை. எழுத்து வாசிப்புக் கற்பித்தல் இல்லை. பிள்ளைகளை அருகில் இருத்தி கதைகள் வாசிப்பதும், பாடல்கள் சொல்லிக் கொடுப்பதும், நடனத்துடன் இணைந்த பாடல்கள் பழக்குவதுமான நடைமுறைகள் காணப்படுவதனால், இம்முறையானது பிள்ளைகளைக் கவர்கின்றது. இங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் அரவணைப்பில் உணவு உண்ணும் முறை, பற்துலக்கும் முறை, தொடர்புடைய பிள்ளைகளுடன் உரையாடும் முறை போன்றவை சிறப்பாக பயிற்றுவிக்கப்படும். அதாவது பிள்ளைகள் கல்வியில் அடியெடுத்து வைப்பதற்கான ஆயத்தம் இங்கு சரியான முறையில் வழங்கப்படும்.

               இதன் பின் கோடை விடுமுறை முடிந்து (கிட்டத்தட்ட புரட்டாதிமாதம்) புதிய கல்வி ஆண்டு ஆரம்பிக்கும் போது பிள்ளை 6 வயதாகியிருக்கும் பட்சத்தில் அப்பிள்ளை ஆரம்பக் கல்வி தொடர்வதற்கு ஆயத்தமாகும். இப்போதும் இளையோர் நிறுவனம் (
    Jugendamt) இவர்களுக்கான பாடசாலைகளை அறிமுகப்படுத்தும். பெற்றோரும் தமது வீட்டிற்கு அருகாமையிலுள்ள பாடசாலைகளில் தமது பிள்ளையைப் பதிவு செய்து வைப்பார்கள். அதில் ஒன்றில் இடம் கிடைக்கும் பட்சத்தில்; பிள்ளை அடிப்படைக்கல்வியைத் தொடர அநுமதி கிடைக்கும்.

                அடிப்படைக்கல்வி வகுப்புத் தொடங்கி 4 ஆம் வகுப்பு வரை தொடரும். இக்காலப்பகுதி பிள்ளைக்கு 6 வயது தொடங்கி 10 வயதுவரையுள்ள காலப்பகுதியாகும். இப்பாடசாலையில் எழுத்து, வாசிப்பு, கணக்கு, சுயமாகக்கற்றல், இசை, இசைக்கருவி, விளையாட்டுக்கள், ஒற்றுமை, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு, சுயாதீனமாகத் தொழிற்படல், போன்றவை கற்பிக்கப்படும்.

                  மூன்றாவது கல்வியாண்டு சுற்றுலா மேற்கொள்ளப்படும். பெற்றோரை விட்டுப் பிள்ளைகள் தனிமையில் தமது தொழிற்பாடுகளை மேற்கொள்வதற்கான தைரியத்தை வளர்க்கும் நோக்கினையும், சக மாணவர்களுடன் நட்புர்pமையுடன் பழகும் பண்பினை வளர்க்கும் நோக்கினையும் கொண்டு இச்சுற்றுலா மேற்கொள்ளப்படும்.

                   இப்பாடசாலையில் முதன்முதலாக வெளிநாட்டு மொழி கற்பிக்கப்படும். பொதுவாக ஆங்கிலமொழி இப்பாடசாலையிலேயே ஆரம்பிக்கப்படுகின்றது.
                   
                    போக்குவரத்து நடைமுறைகள், மிதியுந்து சவாரிப் பயிற்சிகளும் இக்காலப்பகுதியிலேயே கற்பிக்கப்படுகின்றது.

                    ஒவ்வொருவருடமும் இரண்டு பரீட்சைச் சான்றிதழ்கள் வழங்கப்படும். இவற்றில் முதலாவது ஆண்டு புள்ளிகள் அற்று பிள்ளையின் வகுப்பு நடைமுறைகளை ஆசிரியர் எழுதிக் கொடுப்பார். அடுத்து வரும் ஒவ்வொரு வருடமும் அரையாண்டுச் சான்றிதழும் இறுதி ஆண்டுச் சான்றிதழும் வழங்கப்படும். இதற்காக இக்காலப்பகுதியில் இடையிடையே பரீட்சைகள் வைக்கப்பட்டு அப்புள்ளிகளைச் சேகரித்து, அப்புள்ளிகளின் அடிப்படையிலும், வகுப்பிலே ஆசிரியர் கற்பிக்கும் போது பிள்ளையின் இணைந்த செயற்பாடுகளையும் அதாவது வாய்மொழி பதிலிறுத்தலையும்  அவதானித்தும் சான்றிதழுக்கான புள்ளிகள் 
    1 (sehrgut), 2(gut), 3(befriedigend, 4 (ausreichend), 5(mangelhaft), 6(ungenügend) என எண்களிட்டு வழங்கப்படும். 1 அதிதிறமையையும் 6 போதாமையையும் எடுத்துக்காட்டுகின்றது. 1,2,3, புள்ளிகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ஏனையவை போதாமையைக் குறிக்கும்.
                 
                         4ஆம் ஆண்டு அரையாண்டு சான்றிதழின் அடிப்படையில் 5 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தெரிவுசெய்யப்படும். 4ஆவது வருட அரையாண்டு சான்றிதழின்போது வகுப்பாசிரியர் மாணவர்களின் பெற்றோரைத் தனிப்பட்ட முறையில் அழைத்து அவரவர் எப்பாடசாலைக்குப் பதிவு செய்வதற்கான தகுதியைப் பெற்றிருக்கின்றார்கள் என்பதை விளக்கிச் சொல்வார். அதன்படி பெற்றோர் பிள்ளைகளை  அடுத்துவரும் கல்வி ஆண்டுக்கான பாடசாலைகளைத் தெரிவு செய்வார்கள். அவை தொடர்முன்னணிப் பாடசாலை (weiterführendeschule) என்று அழைக்கப்படுகின்றன.

                  அவை
    Gymnasium, Realschule, Gesamtschule, Hauptschule  என நான்காகப் பிரிக்கப்படும்.

    அடுத்த அங்கத்தில் தொடரும்........

    2 கருத்துகள்:

    1. நல்லதொரு பாடசாலை... தொடருங்கள் தகவல்களை... அறிந்து கொள்கிறோம்... நன்றி...

      பதிலளிநீக்கு
    2. மிகவும் பயனுள்ள பதிவு. மேலும் விவரங்களை அறிய ஆவலுடன் காத்திருக்கின்றேன். நமது நாட்டிலும் இதுபோன்ற முறை வருமானால்...

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...