• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 8 மார்ச், 2024

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

     


    இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும், பொறுப்பாகவும் குழந்தைகளைப் பெற்று, வளர்த்து குடும்பத்தைப் பாராமரிக்கின்ற முக்கிய பொறுப்பு பெண்களிடம் ஒப்படைக்கப்படுகின்றது. அத்தனை பொறுப்புக்களையும் தலைமேற் கொண்டு செய்கின்ற போதும் இலக்கிய முயற்சிகளில் தம்மை இனங்காட்டிக் கொள்ளுகின்ற பெண்கள் இருக்கவே செய்கின்றார்கள். ஆனால், எத்தனை திறமைகள் இருந்தும் தம்மை குடும்பத்துக்காக மட்டுமே அர்ப்பணிக்கின்ற பெண்கள் அதிகமாக இருக்கின்றார்கள். இந்தக் காரணமே இலக்கிய முயற்சிகளில் பெண்களின் பங்களிப்புக் குறைவாகக் காணப்படுகின்றது.

    எமக்குக் கிடைக்கும் 2381 சங்கப்பாடல்களில்; 2279 பாடல்களில் மட்டுமே அவற்றைப் பாடிய புலவர்களின் பெயர்கள் தெரியவருகின்றன. அவர்கள் 475 பேர்கள் எனக் காணக்கிடக்கின்றது. இதிலே நச்சௌ;ளையார், நன்முல்லையார், ஆதி மந்தியார், நப்பசலையார், ஒக்கூர் மாசாத்தியார், காவற்பெண்டு, நக்கண்ணையார், நெட்டிமையார், நெடும்பல்லியத்தை, பொத்தியார், பேய்மகள், இளவெயினி, வருமுலையாரித்தி, வெண்ணிக்குயத்தியார், வெள்ளிவீதியார், பாரி மகளிர்கள், காமக்கண்ணியார், முடத்தாமக்கண்ணியார், பொன்முடியார், காக்கைப்பாடினியார்;, ஒளவையார் போன்ற 32 பெண்பால் புலவர்களே அறியக்கூடியதாக இருக்கின்றது. ஏன் இத்தனைபேர்தான் இருந்தார்களா? அல்லது மறைக்கப்பட்டார்களா? என்பது கேள்விக்குறி

    இன்றும் பெண்களை அடக்கி வைக்கின்ற நடைமுறை காணப்படுகின்றது. தம்முடைய சொல்லை மீறி நடக்கின்ற போது பேச்சால் கொல்வது(பெண்களில் கை வைத்தால் காவல்துறை கொண்டு போய்விடும்), அவளுடைய அறிவை துச்சமாக மதிப்பது போன்ற நடைமுறைகள் ஆண்களிடம் காணப்படுகின்றது. இவை அவர்களிடம் தம்முடைய பரம்பரை மரபணுக்கள் இன்றும் இருப்பதை அடையாளங்காட்டுவதாக அமைகின்றது.  இவை தற்போதும் நடைமுறை வாழ்க்கையில் பெண்களின் குற்றச்சாட்டுக்களாகக் காணப்படுகின்றன.


    இக்காலப்பகுதியிலும் ஒரு இலக்கிய விழாவாக இருந்தால் தம்முடைய மனைவிமாருடன் இலக்கிய நிகழ்வுகளுக்குச் சமூகமளிக்கும் ஆண்களைக் காண்பது அரிது. தம்முடைய மனைவிமாருக்கு இலக்கியத்தில் ஆர்வம் இல்லை என்று புறக்கணித்து அந்த ஆர்வத்தைத் தூண்டும் முன்னெடுப்புக்களை மேற்கொள்ள அவர்கள் முயல்வதில்லை. 

    இவை எல்லாவற்றுக்கும் தாய்வழி சமுதாயம் தந்தை வழி சமுதாயமாக மாறியதே காரணமாக இருக்க வேண்டும். கோடரியை ஆயதமாக வைத்திருக்கின்ற பரசுராமன் தன்னுடைய தந்தை ஆணையிடத் தாயைக் கொன்றிருக்கின்றான். இந்தக் கதை தந்தை வழி சமுதாயமாக மாறியபோதே தோன்;றியிருக்க வேண்டும். இதனாலேயே பெண்ணுக்குக் கற்பு போதிக்கப்பட்டது. 

    இலக்கியத் திறமையுள்ள பெண்களைத் தெய்வமாகப் பார்க்கின்ற தன்மையும் ஒருவகை அடக்குமறை என்றே சொல்ல வேண்டும். சிறந்த படைப்பாளியும் திறமையும் மிக்க காரைக்காலம்மையாரைத் தெய்வமாக காண்பதாக அவள் கால்களில் விழுந்து விடுகின்றான் பரமதத்தன். தான் விரும்பி வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து விடுகின்றான். காரைக்காலம்மையாரும் உனக்குப் பயன்படாத உடல் எனக்குத் தேவையில்லை என்று உணவை ஒறுத்து எலும்பு உடம்பு வேண்டிப் பெறுகின்றாள். சிலம்பு உடைத்து கணவனை நிரபராதி என்று நிறுவிய கண்ணகியைக் கூட வந்தவர்கள் நாட்டைத் தீக்கு இரையாக்கி கண்ணகியைக் கடவுளாக்கி விடுகின்றனர். இதனால், கண்ணகி வீரப் பெண்கள் அமைப்பு ஏற்படுத்த முடியாதவளாகி விடுகின்றாள். 

    கணவன் தாலி என்னும் வேலி போட்டு மனைவியைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைக்கின்றான். தாலி என்பது நிமிர்ந்து வரும் ஆடவன் இவள் திருமணம் ஆனவள் என்று அடையாளங்காட்டுவதாக காரணம் காட்டுகின்றான். சில பெண்கள் என்ஸ் ரே எடுக்கின்ற போது கூடத் தாலியைக் கழட்டத் தயங்குகின்றார்கள். அவர்கள் தம்முடைய கணவனுக்கு ஏதாவது அபரிவிதமாக நடந்துவிடும் என்ற மூடநம்பிக்கையை வைத்திருக்கின்றார்கள். பெண்கள் கழுத்தில் அணியும் தாலி என்னும் அணிகலன் சங்ககாலத்தில் இருந்ததில்லை. 10 ஆம் நூற்றாண்டின் பின்புதான் அது வழக்கத்துக்கு வந்தது. அப்படியானால், அதற்கு முன் பிறந்த பெண்களுக்கு இந்தப் பயம் இருந்திருக்குமா? 

    நாம் இப்போது மேற்கொள்ளுகின்ற பண்பாட்டு அம்சங்கள் எமக்குரியவை அல்ல என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். உணவு தொடங்கி உடை, வீடு, விழாக்கள் அனைத்துமே அந்நியரின் படையெடுப்புக்களினாலும் மக்களின் மாற்றங்களினாலும் தமிழர்கள் மத்தியில் வந்து சேர்ந்தவையே. தற்போது பெண்கள் அணியும் புடைவை கூட தெலுங்கு பேசுகின்ற மக்களால் வந்ததே. சிலப்பதிகாரத்துக்கு முந்திய தமிழ் பெண்கள் மார்புக்கச்சை கூட அணிந்ததுக்கான சான்றுகள் கிடைக்கவில்லை. கி.பி 9 ஆம் நூற்றாண்டின் பின்பே மார்புக்கச்சை அணிந்தார்கள். தெலுங்கு மக்களாலேயே இரவுக்கை அணியும் வழக்கம் வந்தது எனத் தன்னுடைய ஆய்வின் மூலமாக தொ.பரமசிவன் எடுது;துரைக்கின்றார். எனவே பண்பாடு கலாசாரம் என்று பெண்களின் ஆளுமைக்கு விலங்கு போட முடியாது. 

    நளாயினி தன்னுடைய குஷ்டரோகியான தன்னுடைய கணவனைத் தாசியின் வீட்டுக்குக் கூடையிலே சுமந்து செல்கின்றாள். தீக்குளிக்க வைத்துக் காட்டில் விட்டுத் துன்புறுத்தப்பட்ட சீதை, கோவலனால், தவிக்கவிடப்பட்ட கண்ணகி, மாதவி, இவ்வாறான இலக்கியங்களை கற்பித்த காரணத்தால், பிற்குறிப்பிடப்பட்டுள்ள சிறப்புமிக்க பெண் இலக்கிய ஆளுமைகளின் படைப்பாற்றலை இன்று இழந்து நி;ற்கின்றோம்.


    "கெடுக சிந்தை கடிது இவள் துணிவே மூதின் மகளிர் ஆதல் தகும்"என்று பாடும் ஒக்கூர் மாசாத்தியார் 

    "பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆதலின்

    செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சியோடு

    உயவொடு வருந்தும் மன்னே! இனியே

    புகர்நிறம் கொண்ட களிறு அட்டுஆனான்

    முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே

    உன்னிலன் என்னும் புண்ஒன்று அம்பு

    மானுளை அன்ன குடுமித்

    தோல்மிசைக் கிடந்த புலஅண லோனே"

    குழந்தைப் பருவத்திலே பால் உண்ணாமல் இருக்க கோபம் கெண்டவளைப் போலச் சிறுகோலை எடுத்தால் பயந்து உணவு உடனே உண்ணுகின்ற தன்மையையுடையவனே இன்று களிறுகளைக் கொன்றும் தளராது, அந்தப் போரிலே மார்பகத்து அம்புபட்டுக் கேடகத்தின்மேல் வீழ்ந்து கிடந்தவனை எடுத்து, 'ஐயோ! மார்பில் அம்பு தைத்துளதே? என வருந்தினேன். அவனோ, அதை நான் அறியவில்லையே! என்றான். உரவோர் மகன் அன்றோ அவன்! என்று பாடிய பொன்முடியார் பாடலைப் போலும் சங்க காலத்திலே ஆளுமையும், படைப்புத் திறனும், வீரமும்  பெண்கள் பெற்றிருந்த பண்பாடு மாற்றம் கண்டது. 

    இன்று மீண்டும் பெண்களின் படைப்பாற்றல் அதிகரிக்கும் தன்மை காணப்பட்டாலும் திறமைமிக்க இலக்கியகர்த்தாக்கள் அகப்பையை எறிந்து விட்டு கணினியைத் திறக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்களைப் போதிக்கும் நாடகக் குகைக்குள் இருந்து வெளிவந்து நன்னெறி இலக்கியங்கள் படைக்க வேண்டும். 

    வெற்றிமணி பத்திரிகையில் 2024 மார்ச் மாதக் கட்டுரை 

    உரங்கொண்ட மங்கையர்க்கு மகளிர்தின வாழ்த்துகள்  


    வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

    Neuralink Ni




    Brain computer interface research or brain machine interfaces



     மனிதனின் இதயத்தில் கை வைத்தாகள். இதய மாற்று சத்திரசிகிச்சை, கல்லீரல், சிறுநீரகம், என்று ஒவ்வொரு உறுப்பாகக் கை வைத்து வெற்றியும் கண்டுள்ளார்கள், இப்போது மனிதனின் மூளையில் கை  வைக்கப்பட்டுள்ளது. 

    மனிதனின் உடலை இயக்குவது மூளை. மூளையிலுள்ள நியூரன்ஸ் உயிரணுக்கள் மூலமாக சிக்னல் அனுப்பப்பட்டு உடலுக்குத் தேவையானவற்றை இந்த மூளை செய்கின்றது. அதுதான் மூளை தான் எங்களுடைய Head of the Department. 10 எங்களுடைய மூளையில் 10 ஆயிரம் கோடி நியூரன்ஸ்கள் இருக்கின்றன. நியூரன்ஸ் சிக்னல் அனுப்புவதற்கு 20 வார்ட்  மின்சாரம் இருந்தால் போதும்.


    இப்போது இந்த நியூரன்களைத் தம்முடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஒரு chip மூளையிலே பொருத்துகின்றார்கள். இதன் மூலமாக நியூரன்கள் பயிற்சி பண்ணாமல் இலகுவாக மேலதிகமாக வேலை செய்ய வைக்கிறார்கள்

    மூளையில் இருந்து வருகின்ற signal computer க்கு அனுப்பி மற்ற மூளையை control பண்ண முடியும் இதனால்

    நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்

    ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்

    மனச்சிதைவால் பாதிக்கப்பட்டவர்கள்.

    பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.

    அல்ஸ்கைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.

     இந்த சத்திரசிகிச்சையின் மூலம் சுகமடைவார்கள்,

    எலன் மாஸ்க் தான் இதனை ஆரம்பித்தவர் 2016 இல் இந்த பரிசோதனை கலிபோர்னியாவில் Neuralink என்ற நிறுவனத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 

    முதலில் பன்றியில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  இதற்கு Gertrud செயற்பாடு எனப் பெயர் வைத்தார்கள். அதன் பின் 2021 இல் குரங்கில் செய்துபார்த்து 90 வீதம் வெற்றி கண்டார்கள். இப்போது மனிதர்களில் இந்த சிப் பொறுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு 28 ஆம் திகதி ஜனவரி மாதம் ஒரு மனிதனில் பொருத்தி இருக்கின்றார்கள். இதுவரை எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை.

    இது எப்படி என்றால் ஒரு சிறிய நாணயம் போன்ற ஒரு சாதனம் இருக்கும் அதிலே நியூரோன்களைப்போல மெல்லிய வயர்கள் இருக்கும். இவை பொலி மேட் என்ற பொருளால் செய்யப்பட்டு  இருக்கும்.  மண்டையிலே ஒரு சிறிய துவாரம் போட்டு அதற்குள் இந்த சிப்பை  மூளையிலே பொருத்தி விட்டு மூடி விடுவார்கள். இந்த சத்திரசிகிச்சை 30 நிமிடங்களில் முடிந்துவிடும். இரத்தக் கசிவு பெரிதாக இல்லை. மயக்கம் மருந்து தேவை இல்லை. வலி இருக்காது

     


    மூளையிலுள்ள date க்கள் computer உடன்  transfer பண்ணப்பட்டு

    ஒரே நேரத்தில் 1024 கம்ப்யூட்டர்களுடன் இந்த சிப்ஸை இணைக்கலாம்

    இந்தச் சிப்புக்கான பேட்டரி 24 மணி நேரங்கள் தொழிற்படும். இதற்குரிய battery சார்ஜ் பண்ணக்கூடியது. wireless charge . மூளைக்கு உடலுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை ஏனென்றால் மூளையை விட எட்டு மடங்கு சிறிய சென்சார் இருப்பதனால்  மூளைக்கோ எந்த வித உறுப்புகளுக்கோ பாதிப்பு இல்லை

    கணினி போன்ற  எலக்ட்ரானிக் பொருட்களுடன் இணைக்கலாம். அப்படி இணைக்கும் போது உங்களுடைய மூளை என்ன செய்ய நினைக்கிறதோ அதை உடனே கண்டு பிடித்து விடலாம்.

     மனதை அறியும் கருவி இருந்தால் என்று கட்டுரை எழுதினேன். இப்போது வந்து விட்டது. நீங்கள் நினைப்பதை அறிந்து விடலாம்.

     

     

     

     

     

     

     

    செவ்வாய், 16 ஜனவரி, 2024

    மனமும் மௌனமும்.




    மனமும் மௌனமும்.


    புதிய ஆண்டில் புதிய சிந்தனை. 


    இந்த உலகம் சுமார் 1350 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி தோன்றியது. அதன் பின் 380 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியின் சில மூலக்கூறுகள் சேர்ந்து உயிரினங்கள் தோன்றின. 60 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஹோமோ பேரினத்திற்கும் சிம்பன்சிகளுக்கும் பொதுவான மூதாதையர் தோன்றினர். 25 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஹோமோ பேரினம் தோன்றுகிறது. முதன்முதலாகக் கருவிகள் உருவாக்கப்படுகின்றன. சுமார் 20 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஹோமோ பேரினம் ஆபிரிக்காவில் இருந்து யுரேசியாவுக்குப் பரவுகிறது. பல்வேறு மனித இனங்கள் தோன்றுகின்றன. 5 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நியான்டர்தால் இனம் ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் தோன்றுகின்றார்கள். 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஹோமோ சேப்பியன் இனம் கிழக்கு ஆபிரிக்காவில் தோன்றுகிறது. முன் 70,000 ஆண்டுகளுக்கு முன் அறிவுப்புரட்சி எழுகிறது. ஆபிரிக்காவில் இருந்து வெளியேறுகின்றார்கள். 45,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அவுஸ்திரேலியாவில் குடியேறுகின்றார்கள். விலங்கினங்கள் அழிகின்றன. 30,000 ஆண்டுகளுக்கு முன் நியான்டர்தால் இனம் முற்றாக அழிகின்றன. 16,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் குடியேறுகின்றார்கள். அங்குள்ள பூதாகரமான விலங்குகள் அழிகின்றன. 12,000 ஆண்டுகளுக்கு முன் வேளாண்மை, உணவு பயிரிடுதல், விலங்குகள் பழக்கப்படுதல், நிரந்தர குடியேற்றம்; ஆரம்பித்து 5,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மன்னராட்சி, பேச்சுமொழி, எழுத்து வடிவம், பல கடவுள் கொள்கை, மதங்கள் எல்லாம் தொடங்குகின்றன. 4250 ஆண்டுகளுக்கு முன் வரலாற்றின் முதல் பேரரசான சார்க்கானின் அக்கேடிய பேரரசு முதல் தோன்றுகிறது. அதன்பின் 2,500 வருடங்களுக்கு முன் பாரசீகப் பேரரசு, புத்தமதம் தோன்றுகிறது. என்னும் தரவுகளை  மனிதகுல வரலாற்றாசிரியர் யுவால் நோவா ஹராரி அவர்கள் எடுத்துக் கூறுகின்றார். 

    இவ்வாறு ஆண்டுகள் கடந்து மெல்ல மெல்ல வளர்ச்சி பெற்று வந்த மனித இனம். இந்த இனம் இன்று 2024 இல் காலடி எடுத்து வைத்திருக்கிறது. ஆண்டுகளின் வளர்ச்சி மனித மனங்களின் வளர்ச்சியுடன் இணைந்தே பயணிக்கின்றது. கண்டு பிடிப்புக்களும் கண்டம் விட்டுக் கண்டம் தாண்ட அபரிமிதமான தொடர்புகளும், உலகத்தின் எல்லையைத் தாண்டி கிரகங்களுக்கு பயணம்செய்து வரும் விஞ்ஞான வளர்ச்சியும் தோன்றிய இடத்தை நோக்கிய பார்வையைச் செலுத்துகின்றது. இது ஆய்வுலகம், விஞ்ஞான உலகம். இதைத்தண்டி இன்னும் ஒரு உலகம் உதயமாகி இதயங்களின் வேர்களை அசைக்கின்ற உலகமும் தோன்றியுள்ளது. அதுவே இன்றைய புகழை நோக்கிய பயணம்.

    இன்றைய புகழை நோக்கிய பயணத்தின் வண்டிச் சில்லில் நசுக்கப்படும் மனங்கள் ஏராளம். ஏமாற்றங்கள் ஏராளம், துரோகங்கள் கணக்கில்லை, அவமரியாதைகள் அதிகம், நன்றியை விஞ்சும் நன்றிமறத்தல்களின் சிறப்பு, திறமைகள் திட்டமிட்டு மறைக்கப்படல்; திட்டமிட்டுப் பழிவாங்குதல், இயலாமையை மறைக்க கொள்கை வாதங்கள்ளூ உதவிகள் செய்வாரை வெளிப்படுத்த அஞ்சுதல், புகழுள்ளாரில் உரிமை கோரல், மற்றவரை அடித்து விழுத்தி ஏறி நிற்றல் என்று மனித மனங்களின் போக்கிலே அழுக்குகள் வண்டில் வண்டிலாக ஏற்றிக் கொள்ளப்படுகின்றன. டிஜிட்டல் உலகிலே பொருத்தம் இல்லாத பட்டங்களும், விருதுகள் மலிந்து கிடக்கின்றன. உண்மைகளை வாய் திறந்து பேச மனமிருந்தும் மௌனமாகும் மனிதர்கள் இன்று நடமாடும் இயந்திரங்களாகி விட்டார்கள். 

    இவ்வாறு தொடரும் போக்கு ஒருபுறம். இவை எல்லாவற்றையும் மிஞ்சி 2024 இல் செயற்கை நுண்ணறிவைத் தாண்டி மனித மனம் தாவுகிறது. மனித மூளைக்கு முக்கியத்துவம் குறைந்து செயற்கை மூளையின் ஆற்றலில் நம்பிக்கை வலுவடைகிறது. 

    போராட்டக் குணம், விட்டுக்கொடுப்புக்களையும், ஒற்றுமையையும், அன்பு பாசங்களையும் அடித்து விழுத்தி விட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறது. நான், எனது, எனக்கு மட்டும் என்ற பண்புகள் மேலோங்கியதால், நாடுகளில் இனங்களுக்குப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. நாடு விட்டு நாடு தாவி மக்கள் தூரத்து வெளிச்சத்தைத் தேடுகின்றார்கள். நிலவுலகுக்கோர் ஆட்சி, போரில்லாத நல்லுலகம், நேர்மையான நீதிமுறை போன்ற 14 தத்துவங்கள் அடங்கிய வேதாத்திரியம் தந்த வேதாத்திரி மகரிசியின் ஆசை நிராசையாக இன்று தத்தளிக்கிறது. உலகமே போரச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. 

    ஆண், பெண், என்பதை விட வேறு ஒரு இனம் வெளிப்படையாக விளம்பரங்களில் இடம்பிடிக்கின்றது. சட்டரீதியான ஓர் பாலினத் திருமணங்கள் நடைமுறையை அழகுபடுத்துகின்றன. இதை ஏற்றுக் கொள்பவர்கள் சமூகத்திலே அதிகரித்து விட்டனர். 

    ஒப்பனையும், அரிதாரமும் சொற்களில் மட்டுமல்ல அழகிலும் ஆட்சி செலுத்துகிறது. பெண்களின் அலங்காரம் வங்கிக் கணக்கில் கடன் தொகையை மேலோக்கிய அட்டவணைக்கு உயர்த்துகிறது. வீட்டில் இருக்கும் பெண்ணை வெளியில் அடையாளம் காண முடியவில்லை. பெண்கள் ஒப்பனை செய்வது ஒன்றும் புதிதல்ல. ஆனால், செயற்கை அரிதாரங்கள் அதிகரித்துவிட்டன. பிறக்கும் போது இருந்த உடல் உறுப்புக்கள் விருப்பம் போல மாற்றப்படல் இலகுவாகிவிட்டன. ஆடவர் மட்டும் விதிவிலக்கில்லை.  ஆடவர்க்கான ஒப்பனையைச் செய்பவர் "கோலவித்தகர்" என சங்க காலத்திலேயே அழைத்திருக்கின்றார்கள்.

    சங்ககாலத்திலே பெண்களின் அலங்காரங்களில் முக அலங்காரம் செய்யும் போது கண், காது, மூக்கு, புருவம், நெற்றி, உதடு கவனிக்கப்படுகின்றன. அப்படியானால், முகமே மனிதனினை அடையாளப்படுத்துகிறது. அதுவே அலங்காரத்தால் மெருகேற்றப்படுகிறது. 

    "உண்கண் பசப்பது எவன்கொல்

    மடவரல் உண்கண், வாள்நுதல் விறலி" 

    என்று சீதையின் கண்களுக்கு மைதீட்டியதை கம்பர் எடுத்துக்காட்டியுள்ளார். உண்கண் என்றால், மைதீட்டிய கண்கள். 

    அஞ்சனத்தை எடுத்து ஒரு சிறிய கோலினால், பெண்கள் கணிகளுக்குப் பூசுவார்கள். பாதங்களுக்குச் செம்பஞ்சுக் குழம்பு பூசினார்கள். தோள்களிலும் தனங்களிலும் தொய்யில் எழுதினார்கள். சந்தனக்கட்டையைத் தேய்த்து அதனோடு பச்சைக் கற்பூரத்தைக் குழைத்து மார்பிலும் தோளிலும் அழகான படங்களை வரைந்தார்கள். மஞ்சள் பூசும் வழக்கமும் மங்கையர்களுக்கு இருந்திருக்கின்றது. முக்கூடற்பள்ளிலே 

    "இல்லறத் திற்கி யைவன ஈட்டுவார் 

    அல்ல செய்தே அறிதின் அழித்திடார்

    புல்லி காதலர் ஆயள் பொலிவுற

    மல்லல் ஓங்கணி மஞசள் அணிவராள்"

    என்று மஞ்சள் பூசியமையை எடுத்துக்காட்டுகிறது. 

    "குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும் 

    மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து

    நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்

    கல்வி அழகே அழகு"

    என்று நாலடியாரும் மஞ்சள் பூசியமையை எடுத்துக் காட்டியிருக்கின்றார்கள்.

    அதுபோல தற்காலத்தில் கிறீம் பூசுவுது போல அக்காலத்தில் நறுமண பொருள்களைக் கலந்து செய்து பூசினார்கள். 

    "ஒருபகல் பூசின் ஓராண்டு ஒழிவின்றி விடாது நாறும்

    பெரியவர் கேண்மை போலும் பெறற்கரும் வாச வெண்ணெய்"

     என்று சீவகசிந்தாமணி எடுத்துக் காட்டுகின்றது.

    இவ்வாறு ஒப்பனை அழகு பெண்களின் அழகுக்கு மேலும் அழகு சேர்த்தது. ஆனால், இன்று பெண்களின் தோல்களின் இயற்கை அழகைச் சீரழிக்கும் அரிதாரங்கள் அதகரித்து விட்டன. 2024 இல் முகத்தின் மேலே சிலிக்கோன் முகம் பொருத்தும் காலமும் வரலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. 

    இவை அத்தனையையும் பார்த்து மௌனமாக நகரவேண்டிய காலமே மனத்தின் மௌனமான காலம்

    தை மாதம் வெற்றி மணி பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை  

    உசாத்துணை கட்டுரை

    https://www.tamildigitallibrary.in





    வெள்ளி, 24 நவம்பர், 2023

    LGBTQ


    கட்டுப்பாடு, விட்டுக் கொடுப்பு இவற்றை ஒட்டியே மனித வாழ்க்கை குடும்பம் என்ற அமைப்புடன் ஓடிக்கொண்டிருக்கின்றது. இவற்றை மனதில் கொள்ளாத உணர்வுகளே இன்று பேசுபொருளாக இருக்கின்றன. ஆண்பால், பெண்பால், பலர்பால் என்ற உயர்திணைப் பாலினம். இப்போது பாலினமே இல்லை. மனிதர் என்ற இனம் மட்டுமே உள்ளது என கொண்டாடப்படுகின்றது. உறுப்புக்களை மட்டும் வைத்துக்கொண்டு ஆண், பெண் என்று பிரிக்கக் கூடாது என்பதே அவர்கள் வாதமாக இருக்கிறது. இங்கு ஒருமுறை என்ற வார்த்தை இந்த வாழ்க்கை என்பதற்குள் அடங்கி விடுகிறது. எம்முடைய மனத்துக்கு எது சரி, எது தோன்றுகிறதோ அதன்படி வாழ்வோம் என்று வாழுகின்ற பண்பு தற்கால இளம் தலைமுறையினரிடம் தோன்றியுள்ளது. சட்டம் போட்டுக் கட்டுப்படுத்தி வைக்கின்ற போது ஒரு பலூனை ஒரு பக்கம் அழுத்துகின்ற போது மறுபக்கம் அது தள்ளிக் கொண்டு வரும். அதுபோலத்தான் ஒரு பக்கம் கட்டுப்படுத்துகின்ற போது அது மறுபக்கம் வேறுவிதமான குற்றங்களாக மாறுகின்றன. 

    ஒரு திருமண பந்தத்தின் சிறப்பு ஒரு உயிரை உலகத்திற்கு உருவாக்குதல். ஆணும் பெண்ணும் சேர்ந்து அற்புதமாக ஒரு குழந்தையை உலகத்திற்குக் கொண்டுவருகின்றார்கள். இது இயற்கையும் கூட. இந்த இயற்கையின் மூலமே இனவிருத்தி நடைபெற வேண்டும் என்பது நியதி. ஆனால், தற்காலத்தில் இனம் என்பதிலேயே பேதம் காணப்படுகின்றது. இயற்கையிலேயே இத்தனை காலமும் இருந்த திருமண நடைமுறைகளுடன் வாழுகின்றவர்கள் அப்படியே வாழட்டும். நாம் வேற மாதிரி என்பவர்கள் என்பவர்கள் யார்? 

    உலகத்தில் 20 வீதமானவர்கள் ஆணுக்குப் பெண் தன்மையும் பெண்ணுக்கு ஆண் தன்மையும் உள்ள மாறுபட்ட குணமுள்ளவர்களாகத்தான் பிறக்கின்றார்கள். இவ்வாறு  பிறப்பது இயற்கைக்கு மாறுபட்டதாக இருந்தாலும். இது இயற்கைதான் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. இந்த 20 ஐயும் தாண்டி வேறு விதமான குணாதிசயங்கள் உள்ள மனிதர்களும் உண்டு என்பதையே இக்கட்டுரை ஆராய்கின்றது. 

    இப்போது LGBTQ என்பதை அடிக்கடி நாங்கள் காதுகளால் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். ;. Rainbow society என்று ஒவ்வொரு நாடுகளிலும் ஒன்றுகூடலும் விழாக்களும் நடத்தப்படுகின்றன. இது இன்று நேற்று தோன்றியது என்று நாம் எண்ணி விடமுடியாது. இன்று ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் சட்டரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வெளிப்படையாக சமூக வலைத்தளங்களில் வெளியாகின்ற காரணத்தால், எல்லோராலும் நேரடியாக உலகத்தின் மூலைமுடுக்கெங்கும் அறியக்கூடியதாக இருப்பதனால் ; LGBTQ என்பது பலராலும் அறியக்கூடியதாக இருக்கின்றது. நான் இது பற்றிச் சரி, பிழை என்றெல்லாம் வாதிடும் நிலையில் இல்லை. 

    இயற்கையாக ஏற்படும் மனித உணர்வுகளை அடக்கி வைப்பதை விடுத்து அந்த உணர்வுகளுடனேயே மனிதர்களை வாழ விடுகின்ற போது அவன் வாழுகின்ற ஒரு வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைகின்றது. உலக உயிர்கள் அனைத்தும் காதல் அல்லது காமத்துக்குள்ளேதான் அடங்கிக் கிடக்கின்றன. காமம் இல்லாது குடும்பமும் இல்லை. உலக மக்களும் இல்லை. இந்தக் காமத்தை ஒரு வரையறைக்குள் கொண்டு வருவதற்காகவே திருமணம் என்ற நடைமுறை ஏற்படுத்தப்பட்டது. இதனை உடைத்தெறியும் இயக்கமாக இந்த; LGBTQ2s  உருவாகியுள்ளது. எல்லோரும் இந்த பாலின மாற்றத்துக்குள் உற்படுகின்றார்களா? என்றால், இல்லை. ஆண், பெண் என்னும் குடும்ப அமைப்புக்குள் தம்முடைய வாழ்க்கையைக் கொண்டு செல்கின்ற மனிதர்கள் இல்லாமல் இல்லை. 

    இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.


    L vd;why; Lesbian: 

    பெண்ணும் பெண்ணும் காதல் கொள்வது, காமம் கொள்வது Lesbian எனப்படுகின்றது. கி.மு 610 ஆம் ஆண்டு பிறந்து கி.மு. 580 ஆண்டு இறந்த சஃப்போ Sappho என்ற கிரேக்கப் பெண் கவிஞரே இந்தப் பெயர் வருவதற்குக் காரணமாவார். இவர் பிறந்த இடம் Lesbian  எனப்படும் ஒரு தீவு.  இவர் தன்னுடைய மன உணர்வுகளைக் கவிதைகளாக எழுதுவார். இவரைச் சுற்றிப் பெண்கள் கூட்டம் எப்போதும் இருந்தது. நண்பர்கள், குடும்பம் பற்றியே இவருடைய கவிதைகள் அமைந்திருந்தன. இக்கவிதைகளை ஆதாரமாகக் கொண்டு சாஃப்போ பெண்களுடன் ஓரினச் சேர்க்கை வாழ்வை அனுபவித்தவர் என்று பிற்காலத்து விமர்சகர்கள் எடுத்துக் கூறியிருக்கின்றார்கள். இவ்வாறு வாழ்கின்ற மக்கள் லெஸ்பியன் தீவுப் பெண்களைப் போன்றவர்கள் என்றும் கூறியதுடன் பெண்களே பெண்களை காம நோக்கத்துடன் அணுகினால், அவர்களை லெஸ்பியன் என்ற பெயரை வைத்து அழைக்கத் தொடங்கினார்கள். 


    லீனா மணிமேகலையின் எட்டாவது அகத்திணைக் கவிதைகளில் 

    அந்தரக் கன்னியின் குரலாக வரும் மின்னும் நாக்கு என்னும் இக்கவிதை 


    உப்பும் பனியும் மின்னும் நாக்கால்

    ஸாப்போவின் - கவிதையொன்றை

    உயிருந்தப் பாதையில் பாய்ச்சி

    என்னிலிருந்து

    சூறையாற்றைப் பிரித்தெடுக்கும் உனக்கு

    முப்பத்து மூன்று சிவந்த இதயங்களைப் பரிசாகத் தருகிறேன்

    என் ஆலிவ் இலை விரல் அழுத்தங்களில்

    தோல் வெள்ளியாய் காய்கிறது

    உதிரும் மயிரையெல்லாம் வேட்கையில்

    மிச்சமில்லாமல் தின்கிறேன்

    மன்மதனைப் பலியிட்ட நாளில்

    பறை முழங்குகிறது

    நீயும் ரதி நானும் ரதி



    கவிஞர் மாலினி ஜீவரெத்தினம் எழுதிய 


    பேரழகே அழைத்தாயே காதலினாலே திளைத்தேனே. 

    நிலைக்கண்ணாடி போல எனை முழுதாக்கிக் காட்டும். 

    அழகாக்கிடும் உயிர் நீதான்

    ஒரு தேவதையைப் போலே 

    உயிர் பத்தி எரியுதே பாதகத்தி உன்னால 

    இது தொலையாத உறவு என்று ஊர் சொல்லிப் போகும் 

    உன்னைத் தொடர்ந்தே வருவேனே கடல் தாண்டி வாடி 

    என் உடல் தீண்டிப் போடி 


    இதேபோல் மருதநில குறுந்தொகைப் பாடல் ஒன்றிலே 


    தச்சன் செய்த சிறுமா வையம்  

    ஊர்ந்தின் புறாஅ ராயினுங் கையின் 

    ஈர்த்தின் புறூஉ மிளையோர் 

    உற்றின் புNறெ மாயினு நற்றேர்ப் 

    பொய்கை யூரன் கேண்மை 

    செய்தின் புற்றனெஞ் செறிந்தன வளையே. 


    பெரியோர் இழுக்கின்ற பெரிய தேரை இளையோர் இழுத்து இன்பம் அனுபவிக்காது விடினும் அந்தத் தேரை நினைந்துச் செய்த சிறுதேரை இழுத்து, அப்பெரியவர்கள் அடையும் இன்பத்தைப் பெறுவதுபோல, பரத்தையர் பெறும் மெய்யுறு புணர்ச்சியைப் பெற்று இன்பமடையமாட்டோம் ஆனாலும், தலைவனை நினைந்து உள்ளத்தே நட்பைப் பெருக்குதலினால் அவர் பெற்ற இன்பத்தையே யாம் பெற்றேம் என்று கூறுகின்றார். இங்கு தலைவியும் தோழியும் அடையும் இன்பம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. 


    இவ்வாறு பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான காம உணர்வுகளை பெண்கள் கவிதைகளாக வடித்திருக்கின்றார்கள். 


    என்பது Gay:

    ஆணும் ஆணும் பாலியல் ரீதியாகத் தொடர்பு கொள்வதை புயல என்ற சொல்லால் அழைக்கின்றார்கள். 

    தாரகா முனிவர்களின் தவத்தை சோதிப்பதற்காக விஸ்ணு மோகினி உருவம் எடுத்ததாகவும் அந்த மோகினியை கண்டு சிவன் மோகித்த போது இருவருக்கும் பிறந்த குழந்தையே ஐயப்பன் என்றும் புராணக்கதை கூறுகிறது. கோயில் சிற்பங்களில் சிவனுடைய ஆண்குறியை விஸ்ணு பிடித்துக் கொண்டிருக்கின்ற சிற்பம் இருக்கின்றது. விஸ்ணு மோகினியாக மாறியது வுசயளெபநனெநச. மாறிய விஸ்ணுவும் சிவனும் கூடியது புயல. 


    சமூகரீதியாக வைஸ்ணவசமயத்தையும் சைவசமயத்தையும் ஒன்றாக்கவே இந்த சமய ஒருமைப் பாட்டை எடுத்துக்காட்டவே இவ்வாறான புராணக்கதைகள் உருவாகியிருக்கலாம். இவை என்னுடைய ஆராய்ச்சியிலே இந்து மதமும் வைணவ மதமும் ஒன்றாக வேண்டும். இந்துமதமாக வடிவெடுக்க வேண்டும். என்பதற்காக உருவாகிய கதையாக இருக்கலாம். ஆனாலும் ஐயப்பன் சுவாமி உருவாகிய கதை டுபுடீவுஞ க்குள் அடங்குகின்றது. 


      என்பது Beisexual:

    இவர்களுக்கு ஆண், பெண் என்ற இருபாலினத்தினரின் மேலும் கவர்ச்சி ஏற்படும். ஆணைக் கண்டாலும் பாலுணர்வு மேலெழும் பெண்ணைக் கண்டாலும் பாலுணர்வு ஏற்படும். ஆனால், இது எல்லோரின் மேலும் ஏற்படும் என்று சொல்ல முடியாது. யாரில் பாலினக் கவர்ச்சி ஏற்படுகின்றதோ அதன்படி அவர்கள் தம்முடைய விருப்பத்தை நிறைவு செய்வார்கள். 


     

    T vd;gJ Transgnder

    இவர்கள் பிறக்கும் போது ஆணாகவோ பெண்ணாகவோ பிறக்கின்றார்கள். ஆனால், காலப்போக்கில் இவர்களுக்கு உடலிலுள்ள ஹோர்மோன் இயற்கையாகவே மாற்றத்தையடைந்து பாலின மாற்றம் ஏற்படுகின்றது. ஆணாக இருப்பவர்கள் உறுப்புக்களால் ஆணாக இருந்தாலும் தம்முடைய உள் உணர்வுகளிலே தம்மைப் பெண்ணாகவே நினைக்கின்றார்கள். அதேபோல் உடல் உறுப்புக்களால் பெண்ணாக இருப்பவர்களும் மன உணர்வுகளால் ஆணாகவே தம்மைக் கருதுகின்றார்கள். அவர்களுடைய நடையுடை பாவனை மாற்றுப் பாலினமாக இருக்கின்றது. இவர்களை திருநங்கை, திருநம்பி என்று அழைப்பார்கள். 


    Queer

    ஆணும் பெண்ணும் திருமணம் செய்து வாழும் வாழ்க்கையை நாம்  Normal என்று கருதுகின்றோம். ஆனால் இப்போது Normal   என்பதே கிடையாது. எதை நாம் Normal என்று சொல்ல முடியும். ஆண் ஆண் போலே இருத்தல். பெண் பெண் போலே இருத்தல் என்று சொல்வது போலே நான் இல்லை என்பவர்களே Queer என்பவர்கள்.

    இதைவிட Questioning, Intersex, Assexual, Aromantic, Pansexual, Non-Binary or Envy, Genderfluid, Genderqueer, Agender, Stud, Muke, MaHu,Hetarosexism, Cisgender போன்ற பிரிவுகளும் இருக்கின்றன. 

    Aromantic என்பவர்களுக்கு எதிலும் நாட்டம் இருப்பதில்லை. காமமோ, காதலோ எதிலுமே ஈடுபாடு இருப்பதில்லை. இவர்கள் எல்லோருடனும் நண்பர்களாக இருக்கவே விரும்புவார்கள். ஆணாதிக்கத்தால் அடக்கப்படும் பெண்கள் இதை உடைத்து வெளிவர நினைக்கும் போது தம்மை Aromantic  ஆக இனம் காட்டுகின்றார்கள். 

    தொல்காப்பியம் பெருந்திணைக்குக் குறிப்பிடும் நான்கு பண்புகளில் தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறன் என்பதை மட்டும் உரை பிரதிகளை மறுதலித்துவிட்டு வாசித்தால் அவை அங்கீகரிக்கப்பட்ட Heterosexual  தன்மையைக் கடந்து வேறு பல காதல் வகை மாதிரிகளைப் பேசுவதற்கான திறப்பு கொண்டிருப்பதை உணர முடியும் என கவிஞர் மனோ மோகன் குறிப்பிடுகின்றார். 

    ஆண்கள் விடுதிகளும், பெண்கள் விடுதிகளும், பிரமச்சாரிகளும், இவ்வாறான பிரச்சினைக்குள் அகப்படுவதை அறியக்கூடியதாக இருக்கின்றது.

    இப்போது சிறுவயதிலேயே இதுபற்றிய வேறுபாட்டினைப் பாடசாலையில் கற்பிக்க வேண்டும் என்று கருதுகின்றார்கள். ஒரு தாயின் வயிற்றிலிருந்து ஒரு உருவம் பிறக்கின்றது. அது மனிதப் பிறப்பில் ஆணாகப் பெண்ணாகப் பெயர் பெறுகின்றது, ஆனால், இது ஆண் என்றும் பெண் என்றும் அடையாளம் கொடுத்தது மனிதனே என்பதும் உண்மை. வளர்ப்பில் வேறுபட்ட குணாதிசயங்களை ஊட்டி வளர்த்த போது அது பெண்ணென்றும் ஆணென்றும் தன்னை அடையாளப்படுத்துகின்றது. அதாவது, ஒரு பிள்ளை சிறுவயதாக இருக்கும் போதே பெண்பிள்ளைகளுக்கு ரோசா நிற ஆடைகளை அணியவைத்து, பொம்மைகளை விளையாடக் கொடுத்து பெண் என்பதை பெற்றோரே மனதில் பதிக்கின்றார்கள். ஆண்களுக்கு வாகன பொம்மைகளை விளையாடக் கொடுத்து நீல நிற ஆடைகளை அணியக் கொடுத்து அவர்களை ஆண் என்று அடையாளப்படுத்துகின்றார்கள். ஆனால், அந்தப் பிள்ளை ஓரளவு வயதாகும் போது. ஆண் உடைகளை அணிய ஆசைப்பட்டு அந்த ஆடைகளை அணிகின்ற பெண் பிள்ளைகளைப் பாடசாலைகளில் காணுகின்ற போது கேவலமாகப் பார்த்துக் கிண்டல் செய்கின்றது. அந்தப் பிள்ளைகளுக்கு இவ்வாறான பிள்ளைகளும் சமூகத்தில் இருக்கின்றார்கள் என்பதை கற்றுத் தர வேண்டிய அவசியம் ஆசிரியர்களுக்கு இருக்கின்றது. அதனாலேயே தனியாக அஞ்சி அஞ்சி வாழுகின்ற பிள்ளைகளை சுதந்திரமான பிள்ளைகளாக வாழ வைக்க முடியும். 

     ஒவ்வொரு ஆணுக்கும் சில பெண் தன்மைகள் இருப்பது இயற்கை அதுபோல், ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண் தன்மை இருப்பதும் இயற்கை. வேலைத்தளத்திலே பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண் தன்னை ஒரு ஆண்போல் நடையுடை பாவனையில் காட்டிக் கொள்ளுவாள். சில ஆண்கள் வெட்கப்படுவதிலும் சில நடவடிக்கையிலும் பெண்போல் நடந்து கொள்வான். இது எப்படி ஏற்படுகின்றது என்றால், இயற்கையில் தாய் தந்தையிடம் இருந்து 23 குரோமோசோம் சோடி சேர்கின்ற போது ஒரு குழந்தை உருவாகின்றது. தாயின்  xx என்னும் குரோமோசோம் தந்தையின் xஒல என்னும் குரொமோசோம் இணைந்து பிள்ளை வயிற்றில் உருவாகின்றது. இப்போது தாயிடமிருந்து x மட்டுமே வரும். தந்தையிடமிருந்து x  அல்லது y வரும். எனவே  முதலில் அம்மாவிடம் இருந்து வரும் குரோமோசோம் வேலை செய்ய ஆரம்பிக்கின்றது. எனவே 42 நாட்கள் பெண்ணுக்குரிய உறுப்புகள் தோன்றுகின்றன. சூலகங்கள் கூடத் தோன்றி பின் வேறாகின்றது. பின்னரே ஆணாயின் ஆண்களின் உடல் உறுப்புக்களாக மாறுகின்றன. எனவே ஆரம்பத்தில் எல்லோரும் பெண்களாகவே உருவெடுக்கின்றார்கள் என்பது விஞ்ஞான ரீதியில் அறியப்பட்ட உண்மையாகும்.


           இவ்வாறு இயல்பாகவே பெண் தன்மையைப் பெற்ற ஒரு ஆண் தன் நிலைமையை வெளியில் சொல்ல முடியாது வேதனையை அனுபவிக்கும் நிலமையும் முடியாத பட்சத்தில் தற்கொலை செய்து கொள்ளுகின்ற நிiலைமையும் பண்பாட்டுப் போர்வைக்குள் கிடக்கும் மனிதர்களுக்கு  பெரும் சவாலாக அமைகின்றன. இயற்கையை மீற முடியாது என்று சொல்லும் எம்மவர்கள் இவ்வாறான மனிதர்களை கண்டிப்பதும் அவர்களின் மனவேதனையை மேலும் தூண்டும் விதமாக வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்வதும் தவிர்க்கப்பட வேண்டியது அவசியமாகும். ஒவ்வொரு மனிதர்களும் தமக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் அல்லது தமது பிள்ளைகள் இவ்வாறான ஹோமோன்களின் மாற்றத்திற்கு ஆளாக்கப்பட்டிருந்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    மகாபாரத யுத்த காலத்தில் யுத்தத்தில் பங்கெடுப்பதற்காக இலங்கையிலிருந்து சென்ற மகாவீரன் அறவான் என்பவன் தன் வில்வித்தைச் சிறப்பை கிருஸ்ணரிடம்  காட்டியபோது அவனது திறமையை உணர்ந்த கிருஸ்ணர் தனது சூழ்ச்சியைப் பயன்படுத்தி அறவானிடம் ஒரு கோரிக்கை வைக்கின்றார். உன்னுடைய இந்த அம்பைப் பயன்படுத்த முன் உன்னை நீயே கொல் என்று கூறுகின்றார். அதற்கு இறப்பதற்கு முன் எனக்குத் திருமணம் செய்யும் ஆசை இருக்கின்றது என்று அறவான் கேட்கின்றான். அதற்கு கிருஸ்ணர் மோகினி என்னும் பெண்ணாக மாறி அறவானைத் திருமணம் செய்கின்றார். இது மகாபாரத கதையில் இடம்பெற்ற ஒரு நிகழ்வு. இங்கு கிருஸ்ணர் பெண்ணாக மாறுகின்றார். இது ஒரு ஆண் பெண்ணாகத் தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மைக்குள் அடங்குகின்றது. இதுபோல் புராணக் கதைகளிலும் அறிந்திருக்கின்றோம். ஆகவே ஒரு ஆண் ஆணையே விரும்புவதும், ஆண் தனது உடல் உறுப்புக்களை மாற்றி பெண்ணாக மாறுவதும் தற்போது வெளிப்படையாக நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.

      எனவே இயற்கையை மீற முடியாது. அதற்கு இடம் கொடுத்தலாகாது என்பவர்கள் காலம் காலமாகக் கட்டிக்காத்து வந்த தமது பழக்கவழக்கங்களையே காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்வதைக் கண்கூடாகக் காண்கின்றோம். இயற்கையாகத் தோன்றுகின்ற நரையை மறைத்து 'டை' போடுகின்றோம். இயற்கை நகத்திற்கு சாயம் பூசுகின்றோம். காதலுக்கு மறுப்புத் தெரிவித்து கடுமையாகக் கண்டித்த நாம், இப்போது காதல் திருமணத்தை ஏற்றுக் கொள்ளுகின்றோம். சாதிக்கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்த நாம், அதை மீறிப் சாதி, மத, இன பேதமின்றி பயணிக்கின்றோம். இவ்வாறு மாற்றத்திற்கு உள்ளான நாம், இயற்கையாகவே ஒரு மனிதனின் உடல்மாற்றத்தைக் கேவலமாக கருதுவது எந்தவிதத்தில் நியாயமாகின்றது.

    வேறு உணர்வுகள் உள்ள இரு மனிதர்களை நாம் கட்டுப்படுத்தி இணைத்து வைக்கின்ற போதுதான் விருப்பமில்லாது எப்படியோ வாழ்கின்றோம் என்கின்றார்கள்.  இவர்கள் ஒன்றாக வாழ்கின்றார்கள். ஒன்றாகவா வாழ்கின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது. அதுபோல் பல விவாகரத்துக்களும் நடைபெறுகின்றன. அதைவிட அவர்களின் மனதுக்கு ஏற்ப வாழ்ந்தார்களேயானால் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமையும். 

    மனித உணர்வுகளை ஏற்றுக் கொள்ள முடியாது போகின்ற போது என்னால், என்னுடைய பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவில்லை பெற்றோர்களும் உதவி செய்கின்றார்கள் இல்லை என்று நினைக்கும் ஒரு பிள்ளைக்கு உணர்ச்சிக் கட்டுப்பாட்டுப் பிரச்சினை ஏற்படுகின்றது. தம்மைத் தாமே வருத்தி கைகளிலே பிளேட்டினால் கீறித் தம்மைக் காயப்படுத்துகின்றனர். உணர்வுகள் கட்டுப்படுத்தி முறையான குடும்ப வாழ்க்கைக்குள் நுழைபவர்களாலேயே விவாகரத்துக்களும், தற்கொலைகளும் அதிகரிக்கின்றன.

    நாம் ஆண் பெண் என்று புறக்கண்ணால் காண்கின்ற மனிதர்களுக்குள் எத்தனையோ மாறுபாடுகள் இருக்கின்றன என்பதை எம்மால் மேலோட்டமாக அறிய முடியாமல் இருக்கின்றது. கடவுள் தந்த உணர்வுகளை மாற்றுவது தப்புத்தானே என்கின்றார்கள். அது கொலைக்குச் சமம் அல்லவா. இது எனக்கு செட் ஆகின்றது. அதை மாற்றுவது கொலையை விட துரோகமானது என்கின்றார்கள். அதனால் இன்று நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய அவசியத்துக்குள் ஆளாகி இருக்கின்றோம். 


    வியாழன், 10 ஆகஸ்ட், 2023

    அப்துல் கலாம் வாழ்வில் 100 அரிய நிகழ்ச்சிகள் நூல்


    "தூங்கி எழுந்தால் பூமி உனக்குப் படுக்கை ஆகிறது. எழுந்து நடந்தால் அதுவே உனக்குப் பாதையாகிறது" - டாக்டர் அப்துல் கலாம்  

    எவருமே வெறுக்காமல் எல்லோருமே விரும்பிய ஏவுகணைகளை விட மாணவர்களின் வினாக்களுக்கு விடை தருவதை பெருமையாக நினைத்த டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் பற்றிய அப்துல் கலாம் வாழ்வில் 100 அரிய நிகழ்ச்சிகள் என்ற புத்தகம் பற்றிய என்னுடைய பார்வை.

    இந்த நூலை குடந்தை பாலு அவர்கள் எழுதியிருக்கின்றார். இதை வாசித்த போது அப்துல்கலாம் அவர்கள் மேல் எனக்கு இருந்த மதிப்பு இன்னும் ஒரு படி மேல் உயர்ந்தது. இப்படியும் ஒருவர் வாழ்ந்திருக்கின்றார் என்று பெருமையாக அவரைப் பற்றி நினைத்தேன். 15.10. 1931 ஆம் ஆண்டு இராமேஸ்வரத்தில் ஒரு சின்னஞ் சிறிய கிராமத்தில் வறுமைக் கோட்டில் பிறக்கின்றார். 27. 7. 2015 ல் I.A.M மாணவர்களிடம் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது மாரடைப்பால் இறக்கின்றார். 

    இதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நடைபெற்ற சில சம்பவங்களை ஆசிரியர் குடந்தை  பாலு அவர்கள் தொகுத்திருக்கின்றார். அவருடைய இந்த நூல் உலகத்துக்கு இவர் ஆற்றிய சிறந்த பணி என்றே கருதுகின்றேன். அவர் எடுத்துக் காட்டியதில் சிலவற்றையே நான் கொண்டுவருகின்றேன்.

    டாக்டர் அப்துல் கலாமிடம் ஒரு நல்ல ஆசிரியருக்கு என்ன தகுதி வேண்டும் என்று ஒரு மாணவன்  கேட்டபோது அவர் ஆசிரியர் பணியை விருப்பத்துடன் செய்ய வேண்டும் வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் அத்துடன் ஆசிரியர் புனிதமான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்றாராம். 

    கல்புத்தூர் என்ற சிற்றூரில் இருந்த  சுடர்க்கொடி என்ற ஒரு மாணவி டாக்டர் அப்துல் கலாமிடம் விஞ்ஞானி தமிழன் மனிதன் இந்தியன் இவர்களை நீங்கள் வரிசைப்படுத்துங்கள் என்று கேட்டாளாம். அதற்கு அப்துல் கலாமும் மனிதனுக்குள் மற்ற மூவரும் அடங்கி இருக்கிறார்கள் என்று ஒரு நுட்பமான பதிலை கூறினாராம். 

    டாக்டர் அப்துல் கலாம் ஐந்தாம் வகுப்பு ராமேஸ்வரம் தொடக்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது அந்த கால வழக்கத்தின்படி தலையிலே தொப்பி அணிந்திருந்தாராம். அவருக்குப் பக்கத்திலே பூணூலும் குடுமியுமாக அவருடைய நண்பன் ராமநாத சாஸ்திரி என்ற பிராமணர் சிறுவனும் அமர்ந்திருந்தானாம்.  இவர்களுடைய வகுப்பிற்கு வந்த ஆசிரியர் கலாமை பார்த்து கடைசி வரிசையில் போய் இருக்கச் சொன்னாராம். இதை தந்தையிடம் சென்று ராமநாத சாஸ்திரி அவர்கள் கவலையுடன் முறையிட்டாராம்.

    இதைக் கேட்ட அவனுடைய தந்தை லட்சுமணனை சாஸ்திரிக்கு அடக்க முடியாத கோபம் வந்து குழந்தைகள் கள்ளம் கபடம் இல்லாதவர்கள் அவர்கள் மனம் பரிசுத்தமானவை அவற்றில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் போன்ற நச்சு கருத்துக்களை புகுத்த கூடாது இறைவன் என்பவன் ஒருவனே சம்பிரதாயங்கள் தான் வேறு வேறு ஆனது என்று அறிவுரை கூறினாராம் இதுதான் கலாமுடைய வாழ்க்கையில் ஆழ்மனதில் பதிந்து எல்லா மதத்தினரையும் மதிக்க கூடிய பக்குவத்தைக் கொடுத்தது என்று அவர் கூறுகின்றார்.

    அப்துல் கலாமுடன் இணைந்து பேராசிரியர் அருண் திவாரி சில நூல்களை எழுதி இருக்கிறார். அவர் கலாமிடம் ஐயா உங்களுடைய வாழ்க்கையைப் பற்றி சுருக்கமாகச் சில வரிகள் கூறுங்கள் என்று கேட்ட போது

    அன்பைக் கொட்டி

    வளர்க்கப்பட்ட ஒரு குழந்தை

    வளர்ந்ததும் போராட்டம் மேலும் போராட்டம்

    துன்பத்தை வெளிப்படுத்தும் கண்ணீர்

    பின் ஆனந்தக் கண்ணீர்

    இறுதியில்

    எழில் நிலவின்

    உதயம் காண்பது போன்ற நிறைவு

    என்றாராம் .


    போலியோவால்  பாதிக்கப்பட்டு 3, 4 கிலோ எடையுள்ள செயற்கைக்கால் அணிந்த குழந்தைகள் நடப்பதற்குக் கடினப்படுவதைக் கண்டு ஏவுகணைக்குப் பயன்படுத்தும் பொருள்களைக் கொண்டு ஃப்ளோர் ரியாக்ஷன் ஆர்தொஸிஸ் என்ற எடை குறைவான 300 400 கிராம்கள் மட்டுமேயுள்ள செயற்கைக் கால்களைத்  தயாரித்தார். அதனை அணிந்த குழந்தைகள் மகிழ்ந்ததைக் கண்ட அவர்  அணு  சோதனையிட்டது ஏவுகணை செலுத்தியது என இவற்றை விட இந்த செயற்கை கால் கண்டுபிடிப்பைத் தான்  நான் பெருமையாக நினைக்கிறேன் என்று கூறி மகிழ்ந்தார் 

    திருச்சி பீமநகர் எஸ் டி ஏ மெட்ரிகுலேஷன் பள்ளி  முதலாம் வகுப்பு மாணவன் உங்களின் சிரிப்பு, புத்திசாலித்தனம்,  சுறுசுறுப்பு இவை எனக்கு மிகவும் பிடிக்கும். எதிர்காலத்தில் உங்களைப் போலவே நானும் அறிவு ஜீவியாக வேண்டும். அதுவே என் லட்சியம் என்று   ஒரு கடிதம் எழுதி அனுப்பினானாம். அதற்கு டாக்டர் அப்துல் கலாமும் 

     

    அன்புள்ள சமீர்!  கற்பது படைப்பு திறனைத் தரும் படைப்புத்திறன் சிந்தனைக்கு வழிகாட்டும். சிந்தனை அறிவைத்தரும். அறிவு உங்களை உயர்ந்த மனிதனாக்கும் என்று பதில் எழுதி அனுப்பினார்

     இருண்ட கண்டம் என்று அழைக்கப்பட்ட ஆப்பிரிக்காவுக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றச் செல்ல வேண்டி இருந்தது. உரையாற்றுவதற்கு முந்தைய தினம் இரண்டு மணிக்கு தன்னுடைய ஆலோசகர் பொன்ராஜ் என்பவரை எழுப்பி உடனடியாக நான் பிரதமர் மன்மோகன் சிங் இடம் பேசுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றாராம். பொன்ராஜும் அதற்குரிய ஏற்பாடுகளை செய்கிறார் கலாம் தொலைபேசியில் பேசுகின்றார் என்ற திட்டம் ஒன்றை தயாரிக்கிறேன் அதன் மூலமாக கல்வி சுகாதாரம் மின் ஆளுமை போன்ற துறைகளில் ஆப்பிரிக்காவில் வளர்வதற்கு அந்த நாட்டை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வலுப்படுத்த வேண்டும் இந்த திட்டத்திற்கு இந்தியா ஒரு சகோதர நாடாக இருந்து உதவ வேண்டும் என்று கோரிக்கையை வைக்கிறார் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்க இந்த திட்டத்திற்கு இந்தியா 600 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று கலாம் சொன்னாராம்.  மறுநாள் ஆப்பிரிக்கா நாடாளுமன்றத்தில் கலாம் இதனை அறிவித்து ஆப்பிரிக்க மக்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் அதன் பின் அவருடைய திட்டம் செயல்முறை படுத்தப்பட்டது.  இருண்ட கண்டம் என்று பெயர் பெற்ற ஆப்பிரிக்காவுக்குத் தான் அறிவியல் முயற்சியைக் கொண்டு ஒளி தர எடுத்துக் கொண்ட கலாமின் முயற்சி அந்த நாட்டின் பொன்னேடுகளில் மின்னிக் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு மற்றவர்களைப் பற்றிய சிந்தனை மட்டுமே தன்னுடைய நோக்கமாகக் கொண்டிருந்த கலாம் அவர்களுக்குத் தனக்கென்று சொந்தமாக வீடு கிடையாது, சொத்து, சுகம் ,வாங்கி சேமிப்பு என்று எதுவும் கிடையாது.  குடும்பம்,  குழந்தைகள் என்று யாரும் இல்லை ஆனால் அவருக்கு எல்லாமே இருந்தது. அவரை நேசிக்க பல கோடி இதயங்கள் இருந்தன இந்தியாவில் ஒவ்வொரு வீடும் அவரது வீடாக இருந்தது

     குடியரசுத்தலைவர் பதவியில் நிறைவான பணியாற்றி புது டில்லியில் இருந்து புறப்பட்ட போது அவர் கையில் இரண்டு சிறு பெட்டிகள் ஒரு பை முழுக்கத் தன்னுடைய சொந்தப் புத்தகங்கள் மட்டுமே கொண்டு வெளியேறுகின்றார். பலர் அவருக்கு பரிசுப்பொருள்கள் கொடுத்த போது என்னுடைய தந்தை ஒருபோதும் பரிசுப் பொருள்களை வாங்காதே என்று அறிவுரை கூறினார் என்று எதனையும் வாங்காது செல்கின்றார்

    இவ்வாறு இந்த நூல் முழுவதும் டாக்டர் அப்துல் கலாம் என்ற உயரிய மனிதன் பற்றிய சிறப்பான பல நிகழ்ச்சிகள் கொட்டி கிடக்கின்றன. ஆசிரியருக்கு நன்றி

     


    செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

    எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

    எது நடந்ததோ,அது நன்றாகவே நடந்தது .

    எது நடக்கிறதோ,அது நன்றாகவே நடக்கிறது .

    எது நடக்க இருக்கிறதோ 

    அதுவும் நன்றாகவே நடக்கும்.

    உன்னுடையதை எதை இழந்தாய்?

    எதற்காக நீ அழுகிறாய்?

    எதை நீ கொண்டு வந்தாய்? அதை நீ இழப்பதற்கு

    எதை நீ படைத்திருந்தாய்?அது வீணாவதற்கு 

    எதை நீ எடுத்துக்கொண்டாயோ,

    அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது .

    எதை கொடுத்தாயோ

    அது இங்கேயே கொடுக்கப்பட்டது .

    எது இன்று உன்னுடையதோ

    அது நாளை அடுத்தவருடையது ஆகிவிடும்,

    மறு நாள் அது வேறொருவருடயதாகின்றது.

    இந்த மாற்றம் உலக நியதியாகும்.


    இது யோகநூல் பகவத்கீதையின் கீதாசாரம். இது எவ்வளவு பெரிய உண்மை. இது புரிந்தும் புரியாமலேயே மனிதர்கள் அலட்டிக் கொள்ளுகின்றார்கள். இந்த கீதாசாரத்தை வைத்துக் கொண்டே இன்றைய இந்தியப் பாடகர்களின் வருகையைப் பற்றிச் சற்றுச் சிந்திப்போம். 

    அறிவே தெய்வம் என்றார் தாயுமானவர். அந்த அறிவு சிந்தனைத் திறன்மிக்கதாகவும், காலத்துக்கேற்ப பட்டைதீட்டப்பட்டதாகவும், ஊரோடு ஒத்து வாழக்கூடியதாகவும் இருந்தாலேயே எமது வாழ்க்கைப் பண்பாடானது பண்பட்ட பண்பாடாக அமையும். சிந்தனையில் மாற்றம் கொண்டுவந்தால் மாத்திரமே கால ஓட்டத்திற்கேற்ப  எம்மை ஈடுகொடுக்க முடியும். இந்தப்பண்பாட்டுக்கும் கீதையின் சாரத்துக்கும் இந்தியக் கலைஞர்களின் வருகைக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்று நோக்குவோம்.

    ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமல்ல ஆசிய நாடுகளுக்கும் இந்தியக் கலைஞர்களின் குறிப்பாகப் பாடகர்களின் படையெடுப்பு அதிகரித்துள்ளது. இதுதான் தற்காலத்தில் Trend.. விளம்பரக் கவர்;ச்சியும், நாங்களும் போனோம் என்னும் பெருமையும், Instagram, Facebook, WhatsApp போன்ற இணையத்தளங்களில் பதிவிட்டு நாங்கள் இசையை மிதமாக விரும்புகின்றோமோ இல்லை இசைக்காகக் கூடுகின்ற கூட்டங்களை விரும்புகின்றோமோ என்பதை வெளிப்படுத்தப் பதிவிடுவதும், நடைமுறையாக உள்ளது என்பாரும் உண்டு. ஆனால், இது பற்றி யாரும் விமர்சிக்க முடியாது.  இதுதான் தொழில்நுட்பம் எமக்குத் தந்திருக்கும் வாய்ப்பு. இதற்குள் இருக்கும் சூக்குமத்தை, நன்மையை மட்டுமே சீர்தூக்கிப் பார்ப்போம். 

    புலம்பெயர்ந்து மக்கள் அடுத்த தலைமுறை கண்டுவிட்டனர். தமது வாரிசுகள் வளர்ந்து நிமிர்ந்து தத்தம் உழைப்பில் உயர்ந்து நிற்கின்றனர். இவர்களுக்குத் தேவையான பொழுதுபோக்கு அம்சம் எங்கே கிடைக்கப் போகின்றது. ஆடலாம், பாடலாம், ஆனந்தக் கூத்தாடலாம் என்றால், யார்தான் தயங்கப் போகின்றார்கள். எமது தலைமுறையானது தமது சமூகத்தை ஒன்று கூட்டுவதற்காக  விழாக்களையும் பண்டிகைகளையும், கோயில் திருவிழாக்களையும் நடத்தியிருக்கின்றது. மக்களுடைய சோர்வுகளைப் போக்கி அவர்களுக்குப் புத்துணர்ச்சியை ஏற்படுத்துவன விழாக்கள். கோயில் திருவிழாக்களில் தம்முடைய இன மக்கள் ஒன்று கூடித் தேர் இழுப்பது ஒரு காரணமாக இருந்தது. ஆனால், இங்கு எத்தனை தேர்கள் மனதால் இழுக்கப்பட்டன என்பது அறியாதவர்கள் இல்லை. செவ்வாய்க் கிழமை தோறும் துர்க்கை அம்மனுக்கு கன்னிகள் விரதம் இருந்து காளைகளைத் திருமணம் செய்த நிகழ்ச்சிகள் எம் மனக்கண்ணில் வந்து போகின்றன. ஆணென்று இருந்தால், பெண்ணென்று இருந்தால், காதல் என்பது கட்டாயம். அக்காதல் chemistry  யானது கண்டாலும், காணும் சந்தர்ப்பத்தைப் பெற்றாலும், ஏதோ ஒரு ஈர்ப்பைப் பெற்றாலுமே ஏற்படும் அல்லவா! இதற்கு இவ்வாறான இசை நிகழ்ச்சிகள் கைகொடுக்கின்றன. 

    "கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் 

    மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்' - (பாரதிதாசன்)

    இந்த 250 ஒயிரோக்கள் ஆண்களுக்குப் பெரும் பணமா?

    இந்தப் பிள்ளைகளுக்கு எம்மால் வரன் தேட முடியாது. இப்பிள்ளைகள் சொல்லுகின்ற காரணங்களைப் பட்டியலிட்டால், எந்த உலகத்தில் இருந்து நாம் மாப்பிள்ளை, மணமகள் கொண்டு வரமுடியும். நீங்களா கொண்டு வந்தால், நாங்கள் தலையாட்டுகின்றோம் என்னும் நிலைமைக்கு எமது தலைமுறை வந்துவிட்டது.சிறிது சிறிதாகப்; பெருகி இருக்கும் இந்த இளந்தலைமுறையினரைக் கொண்டு அடுத்த தலைமுறையை விரிவு படுத்த வேண்டுமென்றால், இவ்வாறான சந்திப்புக்கள் அவசியமாகின்றன. 

    அன்றையநாள் தாயகத்தில் கோயில் திருவிழா வரப் போகின்றது என்றால், ஆண்களும் பெண்களும் அதற்காகவே புதிய ஆடைகள் தைப்பதும், அலங்காரங்கள் செய்வதும் வழக்கம். தலைநிறையப் பூச்சூடி, தாவணி பாவாடை போட்டு, கைநிறைய வளையல்கள் அணிந்து தம்மை அழகாக அலங்கரித்துக் கொண்டு பெண்களும், அதேபோல் பட்டு வேட்டியுடன் மார்பிலே தங்கச் சங்கிலி தாளமிட மேலங்கி அணியாது  ஆண்களும் சென்ற  இறுதிநாள் திருவிழா, தீர்த்தம், அல்லது தீமிதிப்புச் சடங்கு வயதுக் கவர்ச்சிக்குக் களமாக அமைந்திருந்தன. திருவிழாக் கடைகளில் எத்தனை கண்கள் மோதின. எத்தனை இதயங்கள் பரிமாறின என்பதை எண்ணிக்கையில் அடக்க முடியாது. 

    பழந்தமிழ் இலக்கியங்களும் விழாக்களும் ஆண், பெண் உறவு கலத்தலும் பற்றி எடுத்துக் காட்டுகின்றன. சங்க இலக்கியத்திலே தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்; காவிரிப் பூம்பட்டினத்தை விழாக்கோலங் கொள்ளச் செய்து காதல் விழா நகரமாக மாற்றி, காதல் திருவிழாவைக் கொண்டாடியுள்ளான் என்று கூறப்பட்டுள்ளது. இவ்விழா காமதேவனுக்காக திங்கள் விழாவாக இருபத்தெட்டு நாட்கள் கொண்டாடப்பட்டது. கரிகால் வளவன் மகள் ஆட்டனந்தியும், ஆதிமந்தி என்னும் சேரனும் காதல் கொண்டு, இருவரும் காவிரிப்பூம் பட்டினத்தில் காதல் திருவிழாவின் போது புனலாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது, ஆதிமந்தியைக் காவிரி ஆற்றுநீர் அடித்துச் செல்லவே ஆதிமந்தியைத் தேடி ஆட்டனந்தி காவிரி நதிக்கரை வழியாகச் செல்கின்றாள் இப்போது அங்கே காமனுக்கு வில்விழா நடந்து கொண்டிருந்ததாக ஆதிமந்தி தன் பாடலில் குறிப்பிடுகின்றாள். 

    காமவேள் விழாவின்போது காதலர்கள் களித்து விளையாடுவதை

    "மல்கிய குருத்தியுள் மகிழ்துணைப் புணர்ந்தவர்

    வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுதன்றோ' என்றும் 

    "காமவேள் விழாவயின் கலங்குவள் பெரிதென

    ஏமுறு கடுந்திண்டேர் கடவி

    நாம் அமர் காதலர் துணைதந்தார் விரைந்தே' 

    என ஊரில் காமவேள் விழா நடப்பதைக் கண்டால் தலைவி கலங்குவாள் எனக் கருதிய தலைவன் திண்டேரேறி வந்தாகத் தோழி குறிப்பிடுவதாகவும் 

    காமவேள் விழாவின்போது கணவனைப் பிரிந்த மகளிர் வருந்துவர். சில ஆடவர்கள் பரத்தையருடன் கூடியாடுவர்.

    "உறலியாம் ஒளிவாட உயர்ந்தவன் விழவினுள்

    விறலிழை யாவரோடு விளையாடுவான் மன்றே' எனவும்  

    கலித்தொகையில் இக்காதல் விழா பற்றி எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

    எனவே நாம் காதல் விழாக்கள் நடத்திய மக்கள் ஜெர்மனியர் போல் Love Parade நடத்த முடியாது. இவ்வாறான நிகழ்ச்சிகள் நடப்பதைக் கண்டு மனம் விரும்புவோம். எமது இளையவர்களும்  இப்போது போல் சிகையலங்கார நிலையம் சென்று சிகையை அலங்கரித்து அழகான ஆடைகள் புதிதாக கொள்வனவு செய்து கண்கவரும் இளையோராக களித்திருக்க இசைநிகழ்ச்சிகளுக்குச் சென்று வரட்டும். வியாபார ஸ்தாபனங்களும் பொலிவடையட்டும். இப்போது மீட்டுவோம் 

    "எது நடந்ததோ நன்றாகவே நடந்தது. எது நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும்' இதேபோல் கீதாசாரம் முழுவதையும் பார்ப்போம். இந்த மாற்றம் உலக நியதியாகும். 10 விரல்களை நம்பிப் புலம்பெயர்ந்தோம். இங்கு உழைத்தோம், இங்கு செலவு செய்கின்றோம். இன்று நாம் வாழும் பூமியில் நாளை நாம் இல்லை. அது வேறு யாருடையதாகிவிடுகிறது. 

    பாடகர்களுக்கு அள்ளிக் கொடுப்பது. இந்தியக்காரன் அள்ளிக்கொண்டு போகின்றான் என்னும் போது எம்முடைய இயலாமையையே இங்கு வெளிப்படுத்தப்படுகின்றது. அவரவர் திறமையைத்தானே நாம் தேடுகின்றோம். நாம் ஏன் அதைவிடத் திறமையை வளர்த்துக் கொள்ளக் கூடாது. அதற்கு முனைந்து நிற்போம். அப்போது எம்மைத்தேடி வேற்றுநாட்டினர் வருவார்கள். அள்ள அள்ள ஊற்றெடுக்கும் கிணறு. போற்றப் போற்ற ஏற்றம்பெறும் வாழ்வு. 



    புதன், 26 ஜூலை, 2023

    மௌனம் கலைகிறது





    மருத்துவமனைக் கட்டிலில் உறவுகள்; சுற்றவர நிற்கின்றனர். உழைப்பு உழைப்பு என்று பம்பரமாய்ச் சுற்றி வந்த கால்கள் படுக்கையில் விழுந்து நான்கு மாதங்களாகிவிட்டன. 56 வயதான பிரேம் ஒட்சிசன் வயருக்குள் அடிமையாகி விட்டான். புகைக்கும் மதுவுக்கும் அடிமையானவர்கள் மத்தியில் செயற்கை ஒட்சிசனுக்கு அவனுடைய மூளை அடிமையாகிவிட்டது. சிறிது சிறிதாகத் தொடங்கிய வியாதி ஒவ்வொரு உறுப்புகளுக்குள்ளும் பாதிப்பைத் தந்து கொண்டிருக்கின்றது. உடலிலே இதுதான் முக்கிய உறுப்பு என்று இருக்கிறதா? ஒவ்வொன்றும் ஒவ்வொன்றுக்கு முக்கியமாகப்படுகிறது. உறுப்புக்களை ஒன்றாய்ச் சேர்த்து இயங்க வைக்க ஒட்சிசன் என்னும் முக்கிய காரணி போதுமான அளவில் இருக்க வேண்டுமே. பிரேம் அருகே அவனுடைய கட்டிலின் அருகாமையில் அமர்ந்திருக்கிறாள் சுருதி. வீட்டுக் கூரையில் மழை ஓய்ந்து துளி துளியாகக் கொட்டுவதுபோல் சுருதி கண்களில் இருந்து கண்ணீர் கொட்டுகின்து. 

    "அழுது அழுது நீயும் உடம்பைக் கெடுக்கப் போகின்றாயா? ஆவதைப் பார். நானில்லாத உலகத்தில் வாழப் பழகிக் கொள்'' பிரேமுடைய வார்த்தைகள் கேட்ட மாத்திரத்தில் சுருதி மனத்தை யாரோ பிய்த்து எடுப்பதுபோல் உணர்கின்றாள். அன்று அவள் வேலை நிமித்தம் வேறு ஒரு இடத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இந்தது. 3 நாட்கள் கருத்தரங்கு. விடுதியில் தங்க வேண்டும். பிரேமிடமிருந்து தன்னைப் பிய்த்துக் கொண்டு போக வேண்டிய சூழ்நிலை. அன்றும் பிரேம் சொன்னான்.

    "நானில்லாத உலகத்தில் வாழப் பழகிக் கொள்'' அப்போது அவன் வாயைத் தன்னுடைய கைகளால் பொத்தினாள். ஷஷஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும். வாயில் இருந்து வருகின்ற சொற்களுக்கு எவ்வளவு வலிமை இருக்கின்றது என்று தெரியுமா? இப்பிடிச் சொன்னால் நான் போக மாட்டேன்|| என்று சொல்லி அவள் ஆர்ப்பாட்டம் பண்ணியதை இன்று நினைத்துப் பார்க்கிறாள். இருவருடைய வாழ்க்கையிலே தம்முடைய அன்பைக் கூறுபோட ஒரு குழந்தை என்னும் பந்தம்கூட இருந்ததில்லை. பணத்தோடு பண்பும் பரிவும் அன்பும் ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொள்ளும் வகையிலே சிறப்பாகவே கிடைத்திருந்தது. இந்த நாட்டில் இருவருக்கும் உறவினருக்குத்தான் பஞ்சம் நட்புக்குக் குறைவேயில்லை. உனக்கு நான் எனக்கு நீ என்னும் அற்புத பந்தத்தை இந்த உறவு கொடுத்தது. பூமிக்குள் விழுந்துவிட்டால் என்றோ ஒரு நாள் வெளியே வரத்தானே வேண்டும். ஆளுக்காள் தேதியில் மாற்றம் இருக்கும். ஆனால் அனைவரும் பூமிக்கு விடை கொடுக்க வேண்டியவர்களே. கைகளில் தாங்கிய சுருதியை டப்பென்று கீழே போடுவது என்றால், இலகுவான காரியமா? ஆனால், அவளை அவன் போட்டுத்தான் ஆக வேண்டும். நீண்ட நாளைக்கு இந்த செயற்கைச் சுவாசம் கொடுக்க முடியாது சுருதி. செயற்கை சுவாசத்தை அகற்றுவதற்கு உங்களுடைய ஒப்பிதல் தேவை. உறவினர்களுக்கு சொல்லி அனுப்புங்கள் என்று வைத்திய சாலையில் சொல்லிவிட்டார்கள். அவருடைய உறுப்புக்கள் விடைபெறத் துடிப்பதையும் அவை அழுகின்ற காட்சியையும் மருத்துவர்கள் அவதானிக்கின்றார்கள் போலும். சுவிஸ், கனடா, இங்கிலாந்து, பரிஸ், இலங்கை, ஜெர்மனி என்று எல்லோரும் வந்தாயிற்று. அண்ணன்மார், தங்கை, மாமன் என்று சுற்றி வர கண்ணீர் மல்க நிற்கின்றனர். 

    பியாற்றா மட்டுமே அங்கு பம்பரமாய்ச் சுழலுகின்றாள். அவளுடைய கண்களும் பனித்துப் போய்த்தான் இருக்கின்றன. இருவருக்கும் உறவில்லாச் சொந்தமாக இருந்தவள் அவள்தான். நாள்தோறும் வீட்டுக்கு வந்து அனைத்து பணிவிடைகளும் பார்க்கின்ற போலந்து இனத்தவள். வீட்டிற்கு வேலைக்காரி. ஆனால் இருவருக்கும் அன்புத் தோழி. அவளுடைய வேலை முடித்து வீட்டிற்குப் போகும் முன்பு பிரேம், சுருதி இருவரும் வேலைத் தளத்திலிருந்து வீட்டுக்கு வந்துவிடுவார்கள். மூவரும் ஒன்றாக அமர்ந்திருந்து பலதும் பத்தும் பேசிக் கொண்டே காபி அருந்துவார்கள். அன்பும் பணமும் ஒரு இடத்தில் கிடைப்பதாக இருந்தால், யார்தான் மனத்தை தாரை வார்க்காமல் இருப்பார்கள். பியாற்றா தயாரித்து வைத்த இரவுணவை இருவரும் உண்பார்கள். ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே அவளுக்கு தன்னுடைய வீட்டில் நிற்பதற்காக விடுமுறை கொடுத்திருந்தார்கள். சனிக்கிழமை சுருதியும் பியாற்றாவும் சேர்ந்து இலங்கை உணவு சமைத்து உண்பார்கள். இத்தனை உறவுகள் பிரேமுக்கும் சுருதிக்கும் இருப்பதை இன்று தான் பியாற்றா காணுகின்றாள். கடைசி காலத்தில்தான் உறவுகள் வரும் என்பது புலம்பெயர்ந்த மக்களுக்கு ஒன்றும் புதிய வாசகம் இல்லை. இன்றாவது புலனம் உறவைத் தக்க வைத்துக் கொள்ளத் துணையாக இருக்கிறது. எல்லோருக்கும் காபி பரிமாறுகிறாள். ஆனால், சுருதி உணவு உண்டு மூன்று நாட்களாகி விட்டது. வாயில் நீர் படுவதற்கு பியாற்றாவே வர வேண்டும். மரத்துப் போன அவள் உணர்வுகளுக்கு ஆதரவு நீரும் அவளே பாய்ச்ச வேண்டும். காபியைக் கையில் கொடுத்துவிட்டு அருகே அமருகின்றாள்.

     பியற்றா! என்று அழைக்கும் பிரேமை நிமிர்ந்து பியாற்றா பார்க்கிறாள். 

    "நீ சுருதியுடன் எப்போதும் கூட இருப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பியாற்றா இருப்பியா.. .. .. ? 

     என்று பிரேம் கேட்ட போது அவனுடைய கைகளைப் பிடித்து மௌனமாய் கலங்குகின்றாள். திடீரென்று நீண்ட காலத்தின் பின் குடும்பப் பிரச்சினையால் பிரிந்து போன சுருதியினுடைய அண்ணன் குடும்பம் உள்ளே நுழைகின்றார்கள். 

    "என்ன இது சுருதி! வராதவர்கள் எல்லாம் வருகிறார்கள். ஒட்சிசன் வயரை எனக்குக் கழட்டிவிடப் போகிறார்களோ? என்று பிரேம் கேட்ட போது 

    "அவர்கள் உங்களைப் பார்க்க வரவேண்டும் என்று சொன்னார்கள் அதுதான் வரச் சொன்னேன்'' என்று சுருதி சமாளித்தாள். 

    "பார் சுருதி எங்களுக்கு எவ்வளவு சொந்தக்காரர்கள். இவ்வளவு பேர் இருந்தும் நாங்கள் தனிமையாகத்தானே இருந்திருக்கிறோம். நீ எத்தனை தடவை சொல்லியிருக்கிறாய். யாரை நம்பி இந்தப்பூமியில் பிறந்தோம். வாழ்ந்து காட்டவில்லையா? என்று அதுபோலத்தான் நீ நல்லா இருப்பாய். உனக்குத் தைரியத்தை நிறையவே நான் தந்திருக்கிறேன். அருகே வந்தவர்கள் பிரேமுடைய கைகளைப் பிடித்து எப்படி இருக்கிறீர்கள்? என்று கேடட போது

    "பார்க்கிறீர்கள் தானே ஏதோ உயிரோடு இருக்கிறேன். மருத்துவம் என்னை உயிரோடு வைத்திருக்கிறது'' என்கிறான். 

     சுருதிக்கு 35 வயதாக இருக்கும் போது அறுவைச் சிகிச்சை மூலம் அவளுடைய கர்ப்பப்பையை அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட போது பல விடயங்களை நினைத்து அவள் கலங்கிப் போகிறாள். அப்போது அவன் கூறிய வார்த்தைகள் அவளுக்கு ஆறுதல் அளித்தன. 

    "எப்படி சுருதி இருக்கிறாய்? என்று பிரேம் கேட்ட போது ஏதோ உயிரோடு இருக்கிறேன். என்று அவள் சொன்ன போது

     "அதுபோதாதா சுருதி. கருப்பை பிள்ளை உருவாக்கும் ஒரு இயந்திரம். அவ்வளவுதான். எனக்குத்தான் நீ நல்ல பிள்ளையாக இருக்கிறாயே. வேலையால் வந்தால் என்ன வாங்கி வந்தீர்கள் என்று கேட்கிறாய்? சிலவேளை அடம்பிடிக்கிறாய். அங்கே இங்கே கூட்டிப் போகச் சொல்லி கரைச்சல் தருகிறாய். என்று பிரேம் சொல்ல. அது இல்லை உங்களுக்கு வாரிசு .. .. .. என்று அவள் வாயெடுத்த போது 

    "கொஞ்சம் வாயை வைத்துக் கொண்டு இருக்கிறீயா? நாம் இருக்கும் வரைதான் அதெல்லாம். நாம் போய்விட்டால் இந்த உலகத்தில் நாம் ஒரு கழித்தல் கணக்கு. இதெல்லாம் உலகத்தில இருக்கும் வரைதான் போனாப்பிறகு ஒன்றுமே இல்லை. உடம்பு ஒரு கூடு. உயிர் எங்கேயோ எதுவாகவோ யாராகவோ.. .. .. இதெல்லாம் என்னிடம் சொல்லாதே. தைரியமாக குணமாகி வீட்டுக்கு வா என்று ஆறுதல் கூறினான். இன்று அவன் கூறியது போல் அவனுடைய இடம் வெற்றிடமாகப் போகப் போகிறது. இந்த உலகக் கணக்கிலே அவன் ஒரு கழித்தல் கணக்கு. மருத்துவர் வருகிறார். பிரேமுடைய காலன் வைத்தியர் வடிவில் உள் நுழைகிறார். பிரேமைச் சுற்றியுள்ள வயர்களைப் பார்க்கிறார். இதயத் துடிப்பைக் காட்டும் இயந்திரம் ஓடிக் கொண்டிருக்கின்றது. 

    "ஹலோ பிரேம். வீ கேட்ஸ் எப்படி இருக்கிறாய்'' என்று கேட்டபடி அவனைத் தடவுகின்றார். இது அவனுடைய வாழ்க்கையின் கடைசிக் கட்டம். இறப்பின் நேரம் யாருக்கும் தெரிவதில்லை. தெரியாமல் இருப்பதுதான் சிறப்பு. தெரிந்துவிட்டால் உலகத்தை விட்டுப் போக யாருமே விரும்ப மாட்டார்கள். புரியாத கவலை, தவிப்பு, ஏக்கம் எல்லாம் கூடவே வரும். பிரேம் விடயத்தில் பிறருக்கு இறுதி நாள் நிச்சயமாகத் தெரிந்து விட்டது. ஆனால் நேரம் தான் தெரியவில்லை. சுருதி மனதுக்குள் வேண்டாத தெய்வங்கள் எல்லாவற்றையும் இன்று வேண்டுகின்றாள். அதிசயம் நடக்காதா? மிராக்கில் என்று டொக்டர் சொல்ல மாட்டாரா என்ற தவிப்பு. இதே தவிப்பு பியாற்றாவிடமும் இருந்தது. ஏனென்றால், பிரேமுடைய நோய் இன்ப துன்பங்களுக்கும் நெருக்கமாக இருந்த உறவுகள் இவர்கள் இருவரும்தானே. டொக்டர் உள்ளே வந்ததில் இருந்து நெஞ்சுக்குள்ளே ஒரு பாறாங்கல்லால் அழுத்துவது போல ஒரு உணர்வு. இவ்வளவுதானா வாழ்க்கை! இதற்குத்தானா இத்தனை காலம் இவருடைய வாழ்க்கை எனக்குச் சொர்க்கத்தைக் காட்டிவிட்டுப் போகின்றது! இவரில்லாமல் எப்படி நான் வாழப் போகின்றேன். 

    சுருதியின் மனதிலும் ஒருவித வெறுமை. மருத்துவர் சுருதியைத் திரும்பிப் பார்க்கிறார். ருற் மியர் லைட் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்றபடி பிரேம் அறியாதபடி வயரைக் கழட்டுகின்றார். தன்னுடைய ஒரு நோயாளிக்கு நிரந்தர உறக்கத்தைக் கொடுத்து அவருடைய உயிரின் வலிக்கு விடுதலை கொடுத்த பெருமூச்சுடன் வெளியேறுகின்றார். இவை வைத்தியர் பணியின் கசப்பான பக்கங்கள். ஒருவிதத்தில் இதுவும் ஒரு கொலையாகவே இநதச் சமூகம் பார்க்கின்றது. அதனாலேயே கருணைக் கொலை என்று அற்புதமான பெயரில் கருணையைச் சேர்த்திருக்கின்றது. சுருதி கண்ணீரைத் தடுக்கத் தடுக்கப் பார்க்கின்றாள். அவள் கண்கள் அவளை மீறி கொந்தளிக்கின்றன. விழிநீர் தாரைதாரையாக வழிகின்றது. 

    சுருதியைப் பார்த்த பிரேம் ஏன் இப்படி அழுகின்றாய்? தடக்கித் தடக்கி வருகின்ற வார்த்தைகளை வெளிவிட்டபடி சுற்றியுள்ள அனைவரையும் பார்க்கின்றான். பேச்சு முதலில் தடைப்படுகின்றது. யாருடைய முகத்திலும் உணர்ச்சியில்லை. ஒரு மரணத்தின் ஒவ்வொரு நொடியையும் பார்த்துக் கொண்டிருக்கின்ற கல் நெஞ்சக்காரர்களாக எல்லோரும் இயலாமையின் விளிம்பிலே நிற்கின்றார்கள். இமைகள் மெல்ல மெல்லத் திரையிடப்படுகின்றன. அந்தப் பார்வைக்குள் இரு உருவங்கள் மட்டுமே இறுதி வரை உச்சியிருந்து உள்ளங்கால்கள் வரை பார்க்கப்பட்டு முடிக்கப்படுகின்றன. பிரேம் கண்களை முதலில் மூடுகின்றான். இதயத் துடிப்பு மெல்ல மெல்ல அடங்குகின்றது. மூச்சு தன் பயணத்தின் விசையை மெல்ல மெல்ல இழக்கிறது. இறுதியில் நின்று விடுகின்றது. ஓ... ... என்று பெரிய சத்தத்துடன் வெடிக்கிறது சுருதியினுடைய அழுகை. அவளை இறுக்கி அணைக்கிறாள் பியாற்றா. திறந்த வாயை அடித்து மூடுகின்றாள். அருகே வந்து அனைவரும் இறுதி அஞ்சலியைச் செலுத்துகின்றார்கள். சுருதியை அணைத்து அனுதாபம் தெரிவிக்கின்றார்கள். பிரேமினுடைய உடலை வைத்தியசாலை தொழிலாளிகள் கட்டிலுடன் எடுத்துச் செல்கின்றார்கள். 

    நடைப்பிணமான சுருதி மற்றவர்களுடன் விடைபெறுகின்றாள். ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்தின் முடிவுரையைக் கண்ட கனத்த மனத்துடன் உறவுகள் புடைசூழ பியாற்றாவின் அணைப்புடன் மருத்துவமனையை விட்டு சுருதி வெளியேறுகின்றாள். குறித்த நாளில் ஈமக்கிரியைகள் நடந்து முடிந்தன. அயல்நாட்டிலிருந்து வந்திருந்த உறவினர்கள் விடைபெற்றனர். பிரேம் இல்லாத வாழ்க்கைக்கு அவள் ஆயத்தமாக வேண்டும். இடமும் மனமும் மாற்றம் பெற வெண்டுமென்றால் எங்காவது வேறு நாட்டுக்குப் போக வேண்டும். அருகே இருக்கும் இங்கிலாந்து சிறப்பாக இருக்கும் என்று இருவரும் முடிவு எடுத்தனர். 

    மலிவான விமானச் சீட்டை இணையத்தளம் மூலம் பெற்றனர். British Airways  விமானம் புறப்படத் தயாராகியது. பியற்றாவும் சுருதியும் ஒரு சூட்கேசுடனேயே பயணத்தை ஆரம்பித்தனர். விமானத்தள கெடுபிடிகள் எல்லாம் முடித்து விமானத்தினுள் ஏறி இருக்கும் போது அப்பாடா என்றிருக்கும். 1 மணித்தியாலமே ஜேர்மனியில் இருந்து இங்கிலாந்து செல்வதற்கு நேரம் எடுக்கும். ஆயினும் சிற்றூண்டிப் பரிமாற்றம் எல்லாம் சிறப்பாகக் கிடைக்கும். இருவருக்கும் அருகருகே இருக்கைகள். அப்பாடா என்று கண்களை மூடினாள் சுருதி. விமானம் வானத்தில் மிதந்தது. பியாற்றா விமானப்பணிப்பெண் கொடுத்த  Sekt செக்ற்றை கையில் எடுத்தபடி சிந்தனையில் ஆழ்ந்து போனாள். பியாற்றா மெல்லிய நீண்ட உருவம். ஜெர்மனியரைப் போன்று எடுப்பான கத்தி மூக்கு, கண்களில் கவர்ச்சி இயற்கையாகவே படைக்கப்பட்டுள்ளது. எந்த முனிவனும் தடுமாறி விடும் அழகானது வஞ்சகமில்லாமல் அவளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. சத்தமில்லாது மெல்லிய குரலில் அவள் பேசுகின்ற போது காலை நேரப் பூங்குயிலின் பூபாளம் போல் இதமாக இருக்கும். இத்தனை அழகு அவளிடம் குடி கொண்டிருந்தாலும் ஒத்தையாய் யாருடைய துணைமின்றி போலந்து வறுமையின் காரணமாக ஜெர்மனிக்கு உழைப்புக்காகத் தஞ்சம் புகுந்தவள்தான். இப்போது சுருதி வீட்டில் முழுநேர உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைத்ததனால், அவள் பொழுது இந்த இரண்டு ஜீவன்களின் நன்மை தீமைகளுக்கு வளைந்து கொடுத்து வாழ்வதாக அமைந்து போனது. 

    பிறருக்காகவும் சின்ன புழு பூச்சிக்காகவும் தம்மை இழக்கின்ற வெள்ளையர்களின் நல்ல குணங்களுக்கு இந்த பியாற்றா ஒரு எடுத்துக்காட்டு. நல்ல நண்பியாகவும் நல்ல எஜமானியாகவும் இரு வேடம் எடுத்திருந்த பிரேம் சுருதி வாழ்க்கையில் பியாற்றா ஒரு பிரிய முடியாத நம்பிக்கை மிக்க தோழி. மெல்லக் கண்களைத் திறக்கின்றாள் சுருதி. 

    "Trinks du etwas? ஏதாவது குடிக்கிறீங்களா? Ja….. orangen saft besser. அவளுக்காக ஆரஞ்சு பழ ஜுஸ் விமானப்பணிப் பெண்ணிடம் வாங்கிக் கொடுக்கின்றாள். காற்றுப் போல உடம்பு இருக்கிறது இல்லையா பியாற்றா என்றபடி ஜுஸ் குடித்துப் பேசிக் கொண்டிருக்க விமானம் தளம் இறங்குகின்றது. அங்கிருந்து Beach Hotel க்கு பயணமானார்கள். இங்கிலாந்து வந்தடைந்து ஹொட்டல் அறைக்குள் நுழைகின்றார்கள். தனித்தனியாக இரண்டு படுக்கை அறைகள். தனிமை இருவருக்கும் தேவைப்பட்டது. மரணவீட்டுக்கு வந்தவர்கள் ஆறதலாக இருந்தாலும் அமைதியாக வாழ்க்கை நடத்திப் பழகிய அவர்களுக்கு இந்த அமைதி தேவைப்பட்டது. இலங்கையில் மரண வீடு என்றால், 30 நாட்கள் ஓயாத உறவினர்கள் கலகலப்பு இருக்கும். உறவை இழந்து துடிப்பவர்களுக்கு அதை நினைக்கவே இடம்தராது உறவினர்களின் ஒத்தாசை இருக்கும். ஆனால், புலம்பெயர்ந்த மண்ணில் ஆகக் கூடியது 5 நாட்கள் தான். பின் எல்லோரும் தம்முடைய இடங்களுக்குத் திரும்பிவிடுவார்கள். ஆனால், புலம்பெயர்ந்த மக்களுக்கு அதிகம் பேர் வீட்டில் இருப்பதுவும் பிடிக்காது. அமைதியைத்தான் நாடுவார்கள். பெற்ற பிள்ளைகளைக் கூடக் கூட வைத்திருக்காமல் தனிமையில் சுதந்திரம் தேவை என்று வாழுகின்ற வயதானவர்கள் வாழுகின்ற நாட்டின் வாடை தமிழர்களுக்கும் தொற்றிவிட்டது. அறைக்குள் சென்று உடை மாற்றி மதிய உணவுக்குப் போய்விட்டு கடற்கரை போவதுதான் அவர்களுடைய திட்டமாக இருந்தது. பியாற்றா தன்னுடைய அறைக்குள் சென்றாள். 

    சூட்கேசை வைத்துவிட்டு குளியலறைக்குள் சென்றாள். முன்னே இருந்த கண்ணாடியில் தன்னுடைய முகத்தை ஒரு தடவை பார்க்கிறாள். நிலைத்து நின்றன கண்கள். திரும்பி வந்து சூட்கேசைத் திறந்து அதனுள் இருந்த சிறிய கைப்பையைத் திறந்து அதற்குள் இருந்த பிரேமின் புகைப்படத்தை எடுக்கின்றாள். அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்து வெளியே வருகின்றது. முழுமையான டொய்ச் மொழியைக் கற்றுத் தந்த குடும்பத் தலைவன் அல்லவா! அதையும் மீறி 

    "பிரேம். ஏன் எங்களை விட்டுவிட்டுச் சென்றீர்கள். என் மனத்தின் வேதனைக் குரல் உங்களுக்குக் கேட்கிறதா? வேதனையை சொல்லி அழ சுருதிக்கு சாட்சி உண்டு. சொல்லாமல் அழத்தான் எனக்கு தகுதி உண்டு. நீங்கள் யார்? ஏன் எனக்குள் நுழைந்தீர்கள். எனக்குள் எஜமான் என்ற அனுபவத்தைப் புதைக்காமல் அன்புச் சுரங்கம் என்ற அனுபவத்தைக் கொடுத்துவிட்டு எங்கேயோ போய்விட்டீர்களே! ஒரு நாளே உங்களை அணைத்த எனக்கு இப்படித் தவிப்பு இருந்தால், உங்களுடனேயே வாழ்ந்து உங்களை இழந்த சுருதியின் நிலையை நினைத்துப் பார்க்கவே முடியாது இருக்கின்றதே. பரிசுத்தமான எங்களுடைய உறவு இருக்க எனக்குப் பரிசுத்தமான அன்பைத் தருகின்ற சுருதிக்கு நான் நயவஞ்சகியாக வேண்டுமா? கூடவே பயணம் செய்வோம் என்று நினைத்தேனே. என்னை இப்படித் தவிக்க விட்டுவிட்டுப் போய்விட்டீர்களே. உங்கள் இருவருடைய ஆழமான பாசத்தில் ஒரு அணு அளவைக் கூட இழக்க நான் தயாராகவில்லை. அதேவேளை எனக்குள்ளே புதைந்து போன உங்கள் காதலை மறைத்து வாழ என் மனமும் ஒத்துக் கொள்ளவில்லை. பிரேம்! நீங்கள் யார்? எனக்கு நீங்கள் எஜமானா? இல்லை என் உயிருக்குள் ஊசலாடும் உன்னத ஆத்மாவா? சத்தமாக அழுது அழுது தன்னுடைய மனத்துக்குள் விழுந்த பாறாங்கல்லைக் கரைக்க முயலுகின்றாள். மீண்டும் குளியலறைக்குள் போகின்றாள். கண்ணாடி முன்னே நின்று விம்மி விம்மி அழுகின்றாள். இவ்வாறு நேரத்தைக் கடந்ததும் போதே வெளியே போக வேண்டிய அவசியம் புரிகின்றது. வீங்கிய முகத்தை மறைக்க மேக்அப்பை அப்புகிறாள். ஆனால், அகத்தைக் காட்டும் கண்ணாடி அல்லவா முகம். சுருதி கதவைத் தட்டும்போது சுதாகரித்துக் கொண்டே கதவைத் திறக்கிறாள். 

    was ist los என்ன நடந்தது. சுருதியின் கேள்விக்கு ஒன்றுமில்ல. அம்மாக்குக் கொஞ்சம் சுகமில்லையாம். 

    "அப்பிடியென்றால், நீ போலந்துக்கு டிக்கட் புக் பண்ணிப் போ. நான் Urlaub  ஐ முடித்து விட்டு வருகின்றேன் என்றாள் சுருதி. nein  இல்லை இல்லை. நான் சமாளித்துக் கொள்ளுகிறேன். அம்மாவுடன் அடிக்கடி கதைக்கிறேன் என்றாள் பியாற்றா. காசு ஏதும் வேண்டுமென்றால், சொல்லு அனுப்புவம். இல்லை சுருதி நான் சமாளிக்கிறேன். நாங்கள் சாப்பிடப் போவோம். என்றபடி இருவரும் வெளியேறினார்கள். 

    "உண்மையாகவே பிரச்சினை இல்லையா பியற்றா. நான் இங்கு தனியாகச் சமாளிப்பேன்'' என்றாள் சுருதி. அப்படி பிரச்சினை என்றால் நான் சொல்வேன்தானே என்று பியாற்றா கூறியபடி உணவகம் சென்று இங்கிலாந்து ஸ்பெஷல் Fish and Chips சாப்பிட்டார்கள். பியாற்றா பன்றி இறைச்சிப் பிரியையாக இருந்தாலும் இங்கிலாந்து ஸ்பெஷலைச் சாப்பிட விரும்பினாள். அதன்பின் கடற்கரைக்குச் சென்றார்கள். கடற்கரை மணலிலே கால் புதைத்து இருவரும் அமர்ந்திருந்தார்கள். கடற்கரை மண்ணிலே காணப்படும் கற்களை எறிந்தபடி உரையாடல் நடைபெற்றது. பிரேமின் நிகழ்வுகளை இரை மீட்டிக் கொண்டிருந்தார்கள். வாலிப்பான உடற்கட்டும், ஜிம்முக்குப் போய்த் தன்னுடைய உடலிலே மிகுந்த அக்கறையையும் கொண்டிருந்த பிரேம் எப்படி இந்த நோய்க்கு ஆளாகி 56 வயதில் எங்களை விட்டுப் போனார் என்று பலவாறாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவனுடைய அன்பும் துடுதுடுப்பும் நகைச்சுவைப் பேச்சும் பிடித்துத்தான் இறைவன் தன்னுடன் வைத்திருக்க அழைத்துச் சென்றுவிட்டார் என்று பியாற்றா சொல்லியபடி ஐஸ் வாங்கி வரட்டுமா என்றாள். இந்தா எனக்கு Erdbeergeschmack ஸ்ரோபெர்ரி சுவையில் வாங்கி வா என்று பணத்தைக் கொடுத்தாள். எப்படியாவது அந்த இடத்தை விட்டு 2 நிமிடம் நகர வேண்டும் போல் இருந்த பியாற்றா விடைபெற்றாள்.

    வாங்கி வந்த ஐஸ்சை சுருதி கைகளுக்குள் புதைத்த போது அவளுடைய இதயம் உருகி கண்களினூடாகப் பனித்தது. என்ன நடந்தது பியாற்றா. உண்மையைச் சொல் வீட்டுக்குப் போக வேண்டுமென்றால், போ. என்று அவளை அணைத்தாள் சுருதி. திடீரென அவளுடைய கைகளைப் பிடித்த பியற்றா என்னை மன்னித்துவிடுங்கள் சுருதி. நான் இவ்வளவு காலமும் உங்களுக்கு ஒரு உண்மையை மறைத்து வந்தேன். ஆனால், உண்மையைச் சொல்லாமல் போலியாக இனியும் உங்களுடன் வாழ முடியாது. என்னை மன்னிப்பேன் என்று சொல்லுங்கள. அப்போதுதான் என்னால் சொல்ல முடியும் என்று அழுது புலம்பினாள். என்ன.. .. .. என்ன? என்னவாக இருந்தாலும் சொல்லு. பிரேம் போனதற்குப் பிறகு எனக்கு எந்தப் பிரச்சினையும் பெரிதாகப் படமாட்டாது என்றாள் சுருதி. பியாற்றா வாய் திறக்கிறாள். உங்கள் இருவரையும் என் கடவுள் போல நினைக்கிறேன். உங்களுக்குக் குழந்தை பிறக்காது என்று நீங்கள் சதா அழுது புலம்புவதும் பிரேம் ஆறுதல் கூறுவதும், தன்னுடைய மனத்துக்குள் தனக்கு ஒரு வாரிசு இல்லையே என்று மனத்தால் அழுவதையும் நான் உணர்ந்து கொண்டேன். உங்கள் இருவரையும் சிரிக்க வைக்க எனக்கு குழந்தை என்னும் ஒரு கலகலப்பான உயிர் தேவை என்று பட்டது. உண்மையிலேயே பிரேம் மூலமாக ஒரு பிள்ளையை உங்களுக்குப் பெற்றுத் தர வேண்டும் என்கின்ற எண்ணம் இருந்தது. அதேயளவுக்கு எனக்கு அளவுக்கு மீறிய ஆசிய நாட்டவர்களின் கட்டுடலிலும் ஆசை அதிகம் இருந்தது. ஆசிய நாட்டவர்களுடைய உடலின் நிறமும் தேகமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பிரேமின் கட்டுடலில் நான் இழந்து போன தருணங்கள் பல. கட்டுமஸ்தான அவருடைய உடலிலே பல தடவைகள் பதிந்து வந்த என்னுடைய பார்வை ஒரு தடவையாவது அவரை அணைக்க வேண்டும் என்று துடித்தது. இதிலே உங்களுக்கு வஞ்சிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குக் கடுகளவும் இருந்ததில்லை. ஆனால், பிள்ளையைப் பெற்றுத் தந்துவிட்டுத் தலைமறைவாகிவிட வேண்டும் என்றுதான் நினைத்தேன். நீங்கள் செமினார் போன சமயத்திலே ஒருநாள் பிரேமுடைய உடலை ஒரு தடவை வருடினேன். ஆச்சரியமாக இருந்தது. என்னை எப்படி நான் இழந்தேன். பிரேம் தன்னை மறக்க எப்படி நான் வசியம் செய்தேன் என்று சத்தியமாக எனக்குத் தெரியாது. ஆண்களின் பலவீனம் அடித்து உடைக்கப்படும் சந்தர்ப்பத்தை என்னால் உணர முடிந்தது. புதிதாகப் பூத்த மலராக நானும் வெட்கத்திலும் குற்ற உணர்விலும் உறைந்து போனவராக பிரேமும் தன்னைச் சுதாகரித்து எழுந்த போது அவரும் ஒரு சராசரி மனிதன் தானே. அவர் ஒன்றும் முனிவர் இல்லையே என்று அறிந்து கொண்டேன். என் வாழ்க்கையில் முதலும் கடைசியும் அந்தநாள்தான். பிரேமினுடைய உடல் என்னைத் தேடிய நாள் நான் பிரேமினுடைய உடலைத் தேடிய நாள். உடல் சுகம் இத்துடன் முடிந்தது என்று முடிவு எடுத்தேன். வெள்ளைக் காரர்கள் உடலுக்கு ஏங்குபவர்கள் என்பது எல்லோருடைய எண்ணமுமாக இருக்கின்றது. அப்படி இல்லை. என்னைப் போலும் எத்தனையோ பெண்கள் இருக்கின்றார்கள். சுருதி என்னுடைய மனப்பாரத்தை இறக்கி விட்டேன். பிரேம் இந்தப் பாரத்தை உன்னிடம் சொல்ல முடியாமல் எத்தனை நாட்கள் தவித்திருப்பார். உனக்குத் தெரியுமா சுருதி பிரேம் என்னையும் உண்மையாகக் காதலித்தார் என்கின்ற உண்மை. அன்பு என்பது ஒருவருக்கு மட்டும் சொந்தமாவதில்லை. அது பல வடிவங்கள் எடுக்கும். உன்னிலே வைத்திருக்கின்ற காதலுக்கு எந்த அளவுக்கு இறுக்கம் இருக்கின்றதோ. அதே அளவுக்கு இல்லாவிட்டாலும் என்னிலும் காதல் இருந்தது. இதை நான் அன்றைய நாள் உணர்ந்து கொண்டேன். ஆனால், இன்று நாம் இருவரும் ஒரு உண்மையான காதலை இழந்திருக்கின்றோம். உனக்கு ஆறுதல் சொல்ல என்னால் மட்டும்தான் முடியும். எனக்கு ஆறுதல் சொல்ல உன்னால் மட்டும்தான் முடியும். எங்கள் இவருடைய கவலையையும் பகிர்ந்து கொள்ள இன்றைய நாள் என்னுடைய மனம் திறந்ததாக எண்ணிக் கொள்ளுகிறேன் என்று அவள் சொல்லி முடித்தபோது அவளுடைய மூக்குச் சிந்திய பேப்பரும் கண்ணீர் சிந்திய பேப்பரும் அருகே நிரம்பிக் கிடந்தன. சுருதி சர்வசாதாரணமாக அவளை அணைத்துக் கொண்டாள். 

    "எத்தனை நாள் உன்னுடைய இந்தக் கவலையை நீ மனத்துக்குள் வைத்துப் புளுங்கியிருப்பாய். இன்று நீ வெளிப்படுத்தியதைப் புரிந்து கொள்ள முடியாத நான், ஒரு மனநலவைத்தியர் என்று சொல்வதற்குத் தகுதியில்லாதவள். பிரேமுடைய எண்ணங்களுடன் நான் வாழுகின்றேன். இன்று கூட அவரைத் தப்பானவர் என்று நினைக்க என்னுடைய மனம் ஒப்புக் கொள்ளவில்லை. அதேபோல் உன்னில் குற்றம் சொல்லி உன்னை ஒதுக்கி வைக்க எனக்கு அறுகதையில்லை. எங்களுடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டு நாம் வாழுவோம். ஓகே Sei glücklich.  immer mit der Ruhe மகிழ்ச்சியாக இரு. இலகுவாக இந்தப் பிரச்சினையை எடுத்து அமைதியாக இரு. என்று சுருதி சொன்னாள். இருவரும் இறுக்கமாகக் கட்டியணைத்தனர். பியாற்றாவினுடைய இதய பாரம் குறைந்தது. அழுத்தமான அந்த இருவருடைய அணைப்பிலும் அன்பு விஞ்சி நின்றது.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...